Monday, December 20, 2010

கனவு தேசம்.

அன்று சனிக்கிழமை. மாலை நேரம். பக்கத்து வீட்டில் குடியிருக்கும் என் அன்புத் தோழி மித்ராவை வீட்டின் வெளியே தோட்டத்தில் காண முடிந்தது. வார இறுதி நாட்களில் மட்டும்தான் அவளைக் காண இயலும்.

“ மித்ரா, இந்த கோடை விடுமுறைக்கு எங்கே போகப் போகிறீர்கள்?”, என்று கேட்டபோது, என் குரலில் சற்றே பொறாமை தலை தூக்கியதை மறைக்க முடியவில்லை.

“ ஓ, அதைக் கேட்கிறாயா. இன்னும் இதுவரை முடிவு செய்யவில்லை. எனக்கும், சந்துருவிற்கும் [ கணவனை பெயர் சொல்லி அழைக்கும் உயர்ந்த நாகரீகம் !] எத்தனை நாட்கள் ஆபிஸில் லீவ் கிடைக்கப் போகிறது என்பதைப் பொறுத்துத்தான் முடிவு பண்ண வேண்டும் !”

“ ரித்திக்காவிற்கு அடுத்த வாரத்திலிருந்து லீவ் ஆரம்பித்துவிடும் இல்லையா ?” என்றேன்.

”ஆமாம், ஆனால் அவள் பள்ளியில் இந்த முறை அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்குக் கூட்டிச் செல்கிறார்கள். அவளும் செல்கிறாள்”.

“ சரி, சரி, இந்த முறை நீங்க இரண்டு பேரும் தனியா இரண்டாம் முறையா ஹனிமூன் போகப்போறீங்க”, என்றேன் பெருமூச்சுடன்.

அவள் ஒரு குறும்புப் பார்வையுடன், “அதற்கெல்லாம் வயசு தாண்டிவிட்டது. அதுமட்டுமில்லை, நாங்கள் இருவரும் ஓடி ஓடி அலுத்துப் போய்விட்டோம். ஒரு நாளாவது வீட்டில் அமைதியாக ஓய்வெடுத்தால் போதும் என்றிருக்கிறது”, என்று அலுத்துக் கொண்டாள்.

“என்னைப் போலவா? அந்த விஷப் பரீட்சையெல்லாம் வேண்டாம் மித்ரா, அது ரொம்ப சிரமமான காரியம்.நாள் முழுவதும் வீட்டிலேயே அடைந்துக் கிடப்பது சாமான்ய காரியமில்லை “, என்றேன்.

“சும்மா, விளையாட்டிற்குச் சொன்னேன். நாங்கள் இருவரும் வேலையை விடுவது பற்றி கனவிலும் நினைக்க முடியாது. எங்களுடைய செலவு அப்படி.குழந்தையையும் அப்படியே கேட்பதெல்லாம் கொடுத்து வளர்த்து விட்டோம். அதனால் இருவரும் சம்பாதிக்காவிட்டால் கட்டுபடியாகாது “, என்றாள்.

“சரி, அதைவிடு, இந்த முறை எங்கே போகப் போகிறீர்கள். நீங்கள் இன்னும் ஜெர்மனி போகவில்லை என்று நினைக்கிறேன். !’, விடாப்பிடியாக.

“இல்லையே, 2007 லேயே, ஜெர்மனி சென்று வந்துவிட்டோமே “.

“அப்போ ஸ்டேட்ஸ் போகப் போகிறீர்களோ?”,

‘இல்லம்மா’ என்ற போது அவளுடைய சலிப்பு அப்பட்டமாகத் தெரிந்தது.

“ வெளிப்படையா சொல்லனும்னா, நாங்க எங்க புரோகிராமை பற்றி வெளியே சொல்வதே இல்லை.காரணம், அத வாங்கிகிட்டு வா, இதை வாங்கிட்டு வா, என்று சொந்தக்காரர்களின் தொல்லைதான்”,

என் முக வாட்டத்தைக் கவனித்தவளாக, ‘நான் உன்னைப் பத்தி சொல்லவில்லை மாலா, தவறாக எடுத்துக் கொள்ளாதே’, என்றாள் ஆதரவாக என் கையைப் பற்றியபடியே.

‘ஒண்ணு மட்டும் என்னால இப்ப சொல்ல முடியும் மாலா, இந்து முறை சந்திரு என் சாய்ஸ்ஸீக்கே விட்டு விட்டார். நான் தான் முடிவு பண்ணப் போகிறேன் எங்கு செல்வதென்று ‘, என்றாள் பெருமை பொங்க.

‘ஆஹா, வெரி குட், எப்பவும் அவர்தான் முடிவு பண்ணுவார், இந்த முறை உன் சாய்ஸ், ஜமாய், மித்ரா. உன் கனவுத் தேசம் எதுன்னு எனக்கு மட்டும் சொல்லுவியா?”, என்றேன் ஆர்வத்துடன்.

‘கனவுத் தேசம்’ என்று திரும்பக் கூறிய மித்ரா, ஒரு கணம் கண்ணில் ஆர்வம் பொங்க, ஏக்கத்துடன், ‘கனவுத் தேசம்’ என்று திரும்பக் கூறினாள்.

அவள் கற்பனையை கலைக்கும் விதமாக, ‘உன் சான்ஸை முழுமையாக பயன்படுத்திக் கொள் மித்ரா. அவர் விருப்பத்தை உன் மேல் திணிப்பதை அனுமதிக்காதே’ என்று அறிவுறுத்தினேன்.

‘கட்டாயமாக, எப்படி இருந்தாலும் நான் முடிவு பண்ணியவுடன் முதலில் உன்னிடம் கூறுகிறேன்’ என்றாள் நம்பிக்கையாக.

நானும், ‘ஓகே, ஓகே, எப்பவும் போல இந்த முறையும் நாங்கள் எங்கேயும் போகவில்லை. நீ விரும்பினால், வழக்கம்போல சாவியை எங்களிடம் கொடுத்துச் செல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’, என்றேன் அக்கரையாக.

ஏக்கமான என்னுடைய இந்தப் பேச்சிற்கு காரணம் இல்லாமல் இல்லை. என் கணவர் பக்கத்திலிருக்கும் பழனி மலைக்கு கூட்டிச் செல்வதற்குக் கூட கணக்குப் பார்ப்பவர். அம்மா வீட்டைத் தவிர எந்த ஊருக்கும் போவது என்பது எனக்கு கனவில் மட்டும்தான். பாவம் அவர்தான் என்ன செய்வார், வியாபாரத்தில் முட்டி மோதி எவ்வளவுதான் உழைத்தாலும் சாண் ஏறினால், முழம் சறுக்குகிறது.நாம் பிறந்த நேரம் அப்படி! குழந்தைகள் படிப்புச் செலவு, கரண்ட் பில், போன் பில் என்று பட்ஜெட் போட்டு, போட்டு செலவு செய்ததால்தான், இந்த சிறிய வீடாவது கட்ட முடிந்தது. அதற்கே அந்த கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்..........

மித்ரா வீடு என்பதைவிட பங்களா என்றுதான் சொல்ல வேண்டும். 8000 சதுர அடியில், சுற்றி தோட்டம் மற்றும் போர்டிகோ என்று சகல வசதியும் கொண்ட அந்த பங்களாவின் பக்கத்தில் எங்களின் சாதாரண வீடு மட்டும்தான். 1 கிமீ தூரத்திற்கு வேறு காலனியோ, வீடோ எதுவும் கிடையாது. முள் காடும், காட்டுப் பூச்செடிகளும் நிறைந்த அந்த இடத்தில் எங்கள் இரண்டு வீடு மட்டும்தான்.

நான் எப்பொழுதுமே மித்ராவின் வாழ்க்கை முறையைப் பார்த்து பொறாமைப் படுவேன். மித்ராவின் கணவர் சந்திரு ஒரு பெரிய அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரி. ஒரு கணிணி வல்லுநர். மித்ராவும் அவருக்குச் சளைத்தவள் அல்ல. எலக்ட்ரானிக் பொறியியல் துறையில், ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் இருப்பவள். வீடு முழுக்க பல நாட்டுப் பொருட்கள் அலங்காரமாக வீற்றிருக்கும். தினந்தோறும் வீட்டில் மாலை நேரத்தில் நண்பர்கள், தொழில் முறை நபர்கள், உறவினர்கள் என்று இரவு வெகு நேரம் வரை வீட்டில் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது. இரவு வேகு நேரத்திற்குப் பிறகு தான் கார் கிளம்பும் ஓசையும் மகிழ்ச்சியான பிரிவு உபசார மொழிகளும் கேட்கும். வீடு அமைதியாக இருக்கிறதென்றால் அவர்கள் ஏதோ பார்ட்டிக்குச் சென்று விட்டார்கள் என்று அர்த்தம். அவர்கள் வீட்டில் இல்லாத நேரமெல்லாம் என் மனம் கிடந்து அடித்துக் கொள்ளும். ஐயோ, எத்தனை அழகான வீடும், தோட்டமும் அனுபவிப்பாரற்றுக் கிடக்கிறதே....என்று. அதுசரி வீட்டை தலையில் தூக்கிக் கொண்டா போக முடியும்?

மித்ரா சரியான புத்தகப் பிரியை. அவள் அறை முழுவதும் புத்தம் புதிய புத்தகங்கள் பல கேட்பாரற்றுக் கிடக்கும். சந்திருவோ பாட்டுப் பிரியர். சிடிக்கள், டிவிடிக்கள் என்று பிரிக்காமல் கூட இறைந்துக் கிடக்கும். இருவரும் என்றாவது ஒரு நாள் தங்களுக்கு இத்யெல்லாம் அனுபவிக்க நேரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் வீட்டில் போட்டிருக்கும் விலையுயர்ந்த சோபாக்கள் , கார்பெட்டுகள், ஓவியங்கள் போன்றவற்றை வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் அனுபவிக்கும் அளவிற்குக் கூட இவர்கள் அனுபவித்திருக்க வாய்ப்பில்லை. தோட்டத்திலிருக்கும் அந்த விளையாட்டு மைதானத்தையாவது, ரித்திகா தன் நண்பர்களுடன் விளையாட பயன்படுத்துவாள்.

ஆனால், தோட்டக்காரனால், ஒழுங்காகப் பராமரிக்கப்பட்டு அங்கு மணம் பரப்பிக் கொண்டிருக்கும் மனோரஞ்சித மரம், அழகழகான ரோஜா மற்றும் குரோடன்ஸ் செடிகள், மெத்தென்ற பச்சைக் கம்பளம் விரித்தது போன்ற அந்த புல்வெளிகள் இவையெல்லாம் கேட்பாரற்றுக் கிடப்பதைப் பார்க்க மனது சங்கடப்படத்தான் செய்கிறது.

மித்ரா குடும்பத்தின் பிசியான வாழ்க்கையில் ஓய்வு என்பது, இவர்கள் வெளிநாட்டிற்கு கோடை விடுமுறைக்குச் செல்வது மட்டும்தான். ஊரைச் சுற்றிவிட்டு அலுத்துப் போய் ஏகப்பட்ட புகைப்படங்கள் மற்றும் நினைவுப் பொருட்களுடன் திரும்பி வருவார்கள். நான் பலமுறை மித்ராவிடம் அவளுடைய இந்த அதிர்ஷ்டமான வாழ்க்கைப் பற்றி பெருமாயாகப் பேசும்போது அவளும், சந்திரு ஒரு சுற்றுலாப் பிரியர் என்று கூறுவாள்.

அன்று மாலை நான் என் கணவரிடம் புலம்பிக் கொண்டிருந்தேன். மித்ரா எங்கு போகப் போகிறாள் என்பதை இரகசியமாகவே வைத்திருக்கிறாள் என்று.

‘நீ ரொம்பவும் அவர்கள் விசயத்தில் மூக்கை நுழைக்கிறாய். இது நல்லதில்லை,’ என்றார் கோபமாக.

இந்த ஏரியாவில் என்னைத்தவிர அவளுக்கு வேறு நட்பும் கிடையாது, உதவுபவரும் கிடையாது என்று சொல்லும் போதே, இதைத் தொடருவதற்கு விரும்பாத என்னவர் ஒரு முறை என்னை ஏறிட்டுப் பார்த்துவிட்டு தினசரியில் தலையை நுழைத்துக் கொண்டார்.

பல வருடங்களாக கோபால்தான் அவர்கள் வீட்டையும், குழந்தையையும் கவனித்துக் கொள்கிறான்.

நான்கு நாட்கள் கழித்து மித்ராவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது மறக்காமல் திரும்பவும் அவளிடம் இது பற்றிக் கேட்டேன்.

அவளும், ஒரு வழியாக நாளை கிளம்புவதாக முடிவெடுத்து விட்டோம் , ஆனால் 15 நாள் ட்ரிப் தான் என்றாள்.

எந்த இடம் என்று கேட்க ஆரம்பிப்பதற்குள், மித்ரா ஆதரவாக என் தோளைப் பற்றி அதை மட்டும் கேட்க வேண்டாம் என்றும் தன் கணவரிடம் இந்த ரகசியத்தைக் காப்பற்றப் போவதாக சவால் விட்டிருப்பதையும் கூறினாள். 10,000 ரூபாய் பந்தயம் என்றாள் அவள்.

நானும் அவளிடம் மேற்கொண்டு அதைப் பற்றிக் கேட்காமல், அவளே பந்தயத்தில் செயிக்க வேண்டுமென வாழ்த்தினேன்.

மித்ராவும், “ரித்தி இன்று அந்தமான், கிளம்பி விட்டாள். அவள் வருவதற்கு 20நாட்கள் ஆகும். அதற்குள் நாங்கள் திரும்பி விடுவேம். கோபால் தன் கிராமத்திற்குப் போய்வர விரும்புகிறான். அவனும் நாளைக்குச் சென்றுவிட்டு நாங்கள் வருவதற்குள் திரும்பிவிடுவான் . உங்களிடம்தான் சாவியை கொடுத்துச் செல்லப் போகிறோம் என்றாள்.

நானும் ‘ஓ, யெஸ், கட்டாயம் பார்த்துக் கொள்கிறேன். கவலைப்படாமல் போய் வாருங்கள்’ என்றேன்.

அவளும் ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும் போதும் உங்களுக்குத்தான் தொந்திரவு கொடுக்கிறோம் என்று பார்மலாக சொன்னாள்.

நானும் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சமாதானம் சொல்லிவிட்டேன். அவளும் பந்தயத்தில் ஜெயித்த பணத்தில் நான் உனக்கு ஏதாவது நல்ல பரிசாக வாங்கி வருகிறேன் , என்றாள் சிரித்துக் கொண்டே.

அடுத்த நாள் சந்திரு கேட் மற்றும் வீட்டுக் கதவு ஆகிய 2 சாவிகளையும் கொண்டு வந்து கொடுத்துவிட்டுச் சென்றார்.நானும் அதை வாங்கி பத்திரமாக டிராயரில் போட்டு வைத்தேன்.

அடுத்த சில நாட்கள் அமைதியாகக் கழிந்தது. ஒரு நாள், மாலை என் கணவர் தன் அலுவலகத்திலிருந்து வரும் பொழுது, மித்ரா வீட்டு மாடி சன்னல் வழியாக பளிச்சென்ற ஒளி வீசியதாகக் கூறினார்.

இதைக் கேட்டவுடன், ஐயோ, ஒரு வேளை திருடனாக இருக்குமோ என்று மனது படப்படப்பானது. சென்ற முறை அவர்கள் மலேசியா சென்றிருந்தபோது கூட மாடியில் ஒரு பல்ப் எறிய விட்டுத்தான் சென்றார்கள். அது போல இந்த முறையும் செய்திருக்கலாம் என்றேன். அவரும் அப்படித்தான் இருக்கும் என்று சொல்லி விட்டுவிட்டார்.

அடுத்த ஆபிஸில் இருந்து வரும போதே மிகவும் பரபரப்பாக வந்தார். இன்று அவர்கள் வீட்டு மாடியில் லைட் எரியவில்லை என்றார் ஆச்சரியமாக. நேற்று எரிந்து கொண்டிருந்த லைட் இன்று எப்படி எரியாமல் இருக்கும் என்ற சந்தேகத்தையும் கிளப்பினார்.

உடனே என் மகன் அரவிந்த் ஒரு வேளை பல்ப் பியூஸ் போய் இருக்கலாம் என்றான்.

என் மகள் கீர்த்தியோ, ‘ அப்பா, நீங்க தெரு விளக்கு வெளிச்சம் அவர்கள் வீட்டு கண்ணாடியில் பட்ட பிரதிபிம்பத்தைத்தான் பார்த்திருப்பீர்கள். சரியாக கவனிக்காமல் சொல்லிவிட்டீர்கள்’, என்றாள்.

ஒரு வேளை தெருவில் கடந்து போகும் காரின் ஹெட்லைட் வெளிச்சம் கூட அதில் பட்டிருக்கலாம் என்று எண்ணிப் பார்த்தபோது அது சரியாக இருப்பது போல் தோன்றியது. எதற்கும் இருக்கட்டும் என்று அவர்கள் வீட்டு கேட் பூட்டு ஒழுங்காக பூட்டப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்த்து விட்டார் என்னவர். அடுத்த 2 நாட்கள் அமைதியாகக் கழிந்தது.

இருந்தாலும் என் கணவருக்கு மட்டும் மனதில் ஏதோ உறுத்தல் இருந்து கொண்டேயிருந்தது. எதற்கும் உள்ளே போய் ஒரு முறை சோதித்துப் பார்த்து விட்டு வந்து விடலாம் என்று கேட்க ஆரம்பித்தார். அவர்கள் வீடு முழுவதும் மிக உயர்ந்த பொருட்கள் நிறைய வைத்திருப்பதால், திருடன் வருவதற்கும் வாய்ப்புள்ளதே என்று சந்தேகம் வேறு கிளப்பி விட்டு விட்டார்.

ஐயோ திருடன் இருப்பது போல் இருந்தால் நாம் தனியாக செல்வது ஆபத்தாகுமே என்றேன் பதட்டத்துடன்.

அவரும், ‘ வேறென்ன செய்வது, நீதானே, நாங்கள் வீட்டைப் பார்த்துக் கொள்கிறோம் ‘ என்று ஒத்துக் கொண்டாய்”, என்றார்.

இருந்தாலும் அந்த இரவு வேளையில் போய் வீட்டை திறந்து பார்க்கும் அளவிற்கு தைரியம் வரவில்லை. திருடனாக இருந்தாலும் இந்நேரம் வேண்டுவதெல்லாம் எடுத்துக் கொண்டு கம்பி நீட்டியிருப்பான். எதுவாக இருந்தாலும், அடுத்த வீட்டுக்காரர் என்பதற்காக நம் உயிரை பணயம் வைத்து, இந்த இரவு நேரத்தில் போக வேண்டாம், காலையில் போய் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம்.

ஆனால் பிள்ளைகளோ, போலீசில் தகவல் கொடுத்துவிடலாம் என்று கட்டாயப் படுத்தினர்.

என் கணவரோ இது போல சின்ன சந்தேகங்களுக்கெல்லாம் போலீசை வரவழைக்க முடியாது. அவர்கள் தொந்தரவு பெரிதாகிவிடும் என்றார் யோசனையுடன்.

சரி, எது எப்படியோ நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து படுக்கச் சென்றோம். நிம்மதியான உறக்கம் இல்லைதான், ஆனாலும் வேறு வழி தெரியவில்லை.

அடுத்த நாள் அவர் அவசரமாக வெளியே கிளம்பியவுடன், நான் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு மித்ரா வீட்டிற்குச் சென்றேன். இரும்பு கேட் கிரீச் என்ற சத்தத்துடன் திறந்ததைத் தவிர வேறெந்த மாற்றமும் இல்லாமல் இயல்பாகவே இருந்தது.

அரவிந்த் காலிங் பெல்லை விடாமல் அடித்தான். உள்ளே பெல் அடிக்கும் சத்தம் வெளியே கேட்டது. கீர்த்தியோ, ஏண்டா திருடன் வந்து கதவைத் திறப்பானோ என்று கிண்டல் பண்ணிக் கொண்டிருந்தாள்.

அவனும், சீ, போடி, என்று அவள் சடையைப் பிடித்து இழுக்க இரண்டு பேரும் சண்டை போட ஆரம்பித்துவிட்டார்கள்.இருவரையும் மிரட்டி அடக்கி விட்டு, கதவை திறந்து உள்ளே போய் பார்ப்பதா வேண்டாமா என்று ஒரே குழப்பமாக இருந்தது. ஆனால் குழந்தைகள் ஏகமனதாக திறந்து பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தனர். பட்டபகலில் என்னதான் நடந்து விடப் போகிறது என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வீட்டைத் திறக்க முடிவெடுத்து விட்டோம்.

2, 3 நாட்களாக மழை பெய்து கொண்டிருந்ததனால், புல் வெளியில் நடக்கும் போதே சிலீரென குளிராக இருந்தது. நனைந்த மனோரஞ்சிதம் கபடமில்லாமல் மணம் பரப்பிக் கொண்டிருந்தது.

‘அட ஆண்ட்டி சேரை உள்ளே எடுத்து வைக்க மறந்துவிட்டார்கள் என்றாள் கீர்த்தி., அங்கிருந்த இரு பிரம்பு நாற்காலிகளைக் காட்டி. அவள் காட்டிய திசையில் நான் கண்ட காட்சி மேலும் அதிர்ச்சியைக் கூட்டியது. அங்கிருந்த டேபிளில் இரு காக்கைகள் எதையோ கொத்தித் தின்று கொண்டிருந்தது. யாரோ சமீபத்தில் அந்த டேபிளில் அமர்ந்து எதையோ சாப்பிட்டிருக்கிறார்கள் என்பதையே அது உறுதி செய்தது. மித்ரா குடும்பம் ஊருக்குச் சென்று வாரம் ஒன்றாகிறது. ஒரு வேளை திருடனின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் அச்சமூட்டியது. இனிமேல் அங்கிருப்பதோ, உள்ளே செல்வதோ சரியாக இருக்காது என்று திரும்பி போய் விடலாம், முதலில் போலீசுக்கு தகவல் சொல்லலாம் என்று கூறினேன்.

அரவிந்தோ வந்ததே வந்துவிட்டோம், கொஞ்ச நேரமாவது ஊஞ்சல் ஆடிவிட்டுத்தான் வருவேன் என்று அடம் பிடித்தான். அவனை வேண்டாம் போகலாம் என இழுத்து வருவதற்குள், கீர்த்தி ஓடிவந்து, வீட்டிற்குள் இருந்து அப்பம் வாசனை கமகமவென வருவதாகக் கூறினாள்.

‘ என்னடி சொல்கிறாய். பூட்டிய வீட்டிற்குள் இருந்து எப்படி அப்பம் வாசம் வரும், பக்கத்திலும் வீடு ஏதும் இல்லை ‘, என்றேன்.

அரவிந்தோ, திருடந்தான் உள்ளே அப்பம் சுட்டு சாப்பிடுகிறான் என்றான் கிண்டலாக.நானும், அப்பா கூட இல்லாமல் தனியாக இங்கே இருப்பது சரியல்ல என்று அவர்களை கிளம்பலாம் என்று கூப்பிட்டேன்.

அப்பம் வாசனை காற்றிலே மிதந்து வந்து என் மூக்கையும் நிறைத்தது. கீர்த்தி, அம்மா சன்னல் ஒன்று லேசாக திறந்திருக்கிறது நான் போய் அதன் வழியாக பார்க்கிறேன் என்று ஓடினாள், அம்மா வேண்டாம் என்று கத்துவதையும் பொருட்படுத்தாது, காம்பவுண்டு மேல் ஏற முயற்சித்தாள்.

எனக்கு பயத்தில் கை,கால் எல்லாம் வெடவெடத்தது. கொடியில் உலர்த்தப்பட்டிருந்த கருப்பு உள்பாவாடை மற்றும் தோட்டத்தில் இருந்த காலடித் தடங்கள் இவையனைத்தும் மேலும் அச்சத்தை உண்டாக்கியது.

கீர்த்தி, வந்துவிடு போயிடலாம், என்றேன் ஈனஸ்வரத்தில்.

சுவர் மிகவும் உயரமாக இருந்ததால் எனக்கு ஏறுவது சிரமம் என்று முன்னால் சென்று கதவைத் திறக்கலாம் என்று ஓடினேன். கீர்த்தியை தனியாக உள்ளே செல்லவிடுவதைவிட எது நடந்தாலும் பரவாயில்லை என வீட்டைத் திறந்துவிடுவது என்ற முடிவிற்கே வந்துவிட்டேன்.

அரவிந்த் அம்மா என்று ஓடி வரவும், இரு பார்க்கலாம் என, கதவின் துவாரத்தில் சாவியை நுழைப்பதற்காக முயன்ற போது, அடுத்த அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. ஆம் கதவு உட்புறமாக தாள் திறக்கப்பட்டு படாரென திறந்தது...........

ஒரு குரல், ‘ஹலோ மாலா, இன்ப அதிர்ச்சியாக இருக்கிறதே, வா உள்ளே ‘ என்றது.

அங்கே, மித்ரா, ஒரு வெளுத்துப் போன நைட்டியுடன், மேக் அப் இல்லாத எளிய தோற்றத்துடன் நின்று கொண்டிருந்தாள். அவள் பின்னே, பர்மூடாசுடன், ஷேவிங் செய்யாத முகத்துடன், அவள் கணவன் சந்திரு. அவர்கள் இருவரையும் ஆச்சரியமாக கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறாள் கீர்த்தி.

ஒரு வினாடி என் கண்களையே நம்ப முடியாதவளாக பின்னால் நகர யத்தனித்த போது, மித்ரா ஆதரவுடன் என் கைகளைப் பற்றி உள்ளே அழைத்துச் சென்றாள்.

சந்திரு, ’மேடம் உங்களுக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும் என்பது புரிகிறது. உள்ளே வந்து உட்காருங்கள் முதலில்’ , என்றான்.

மித்ரா, என்னை அணைத்தபடி ‘ சாரி மாலா, இதுதான் என்னுடைய விருப்பமான கனவு தேசம் , அமைதியான விடுமுறை’ என்றாள்.

‘அட, என்ன சொல்கிறாய், நீங்கள் எங்கேயுமே போகவே இல்லையா?’ என்றேன் மேலும் ஆச்சரியமாக.

‘ஆமாம், 10 நாட்களாக இதே வீட்டிற்குள், நிம்மதியாக அமைதியாக விடுமுறையை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நினைத்ததை உடுத்திக் கொண்டு, விரும்பிய பாட்டை கேட்டுக் கொண்டு, ஆசைப்பட்டதெல்லாம் சமைத்து சாப்பிட்டுக் கொண்டு, நிறைய புத்தகம் படித்துக் கொண்டு, வாவ்........ரியலி ஃபெண்டாஸ்டிக் ஹாலிடே ‘! என்றாள் சிலிர்த்துக் கொண்டே.

ஓ, இன்றைய ஸ்பெசல் அப்பமா என்றேன் சிரித்துக் கொண்டே....

‘ஆம், 15 நாட்களுக்குத் தேவையான பழங்கள், காய்கறிகள், இன்ஸ்டண்ட் ஐட்டம்ஸ் எல்லாம் வாங்கி வைத்துக் கொண்டோம். எங்கள் வீட்டின் மொத்த சந்தோசமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.’ என்றான் சந்திரு.

மித்ரா முகத்தில் முன்னெப்போதும் இல்லாத வெட்கம் கலந்த அந்த மகிழ்ச்சி மிகவும் புதுமையாக இருந்தது.

‘ எங்களுடைய தேனீ போன்ற வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் பலவகையில் தொலைத்திருக்கிறோம்’, என்றாள் நீண்ட பெருமூச்சுடன்.

‘ ஆனால் எங்களுடைய உண்மையான சந்தோசத்தையும், புரிதலையும் எங்களுடைய இந்த வீட்டுச் சொர்கத்திலேயே கண்டுபிடித்து விட்டோம்’ என்று சந்திரு ஏக்கம் கலந்த பெருமூச்சுடன் கூறினான்...........

அதிக நேரம் அங்கிருந்து அவர்களின் நிம்மதியை கெடுக்க விரும்பாமல் குழந்தைகளை கூட்டிக் கொண்டு கிளம்பப் போனேன். மித்ரா அதற்குள் சுடச்சுட அப்பத்துடன் வந்தாள். அதையும் சாப்பிட்டுவிட்டு, மகிழ்ச்சியாகக் கிளம்பினோம், இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற முடிவுடன்.......

--

Friday, December 17, 2010

ஆலகாலமும் அமுதாகும் ! - பகுதி - 4



சண்டீஸ்வரர் வழிபாடு

பொன்னக் கடுக்கை முடிவேய்ந்த
புனிதற்கு அமைக்கும் பொருள் அன்றி
மின்னும் கலன்ஆடைகள் பிறவும்
வேறுதமக்கு என்று அமையாமே
மன்னாந் தலைவன் பூசனையின்
மல்கும் பயனை அடியார்கள்
துன்னும்படி பூசனை கொள்ளும்
தூயோன் அடித்தா மரைதொழுவாம்.


நலம் தரும் நந்தி

கந்தனின் தந்தையைத்தான் கவணமாய் சுமந்துசெல்வாய்
நந்தனார் வணங்குதற்கு நடையினில் விலகி நின்றாய்
அந்தமாய் ஆதியாகி அகிலத்தை காக்க வந்தாய்
நந்தியே உனைத் துதித்தேன் நாடி வந்து எம்மைக் காப்பாய்
ஒன்பது கோள்:களுக்கும் உயரிய பலன் கொடுப்பாய்
பொன் பொருள் குவிய வைப்பாய் புகழையும் வளர்த்து வைப்பாய்
சிந்தனை வளங்கொடுப்பாய் சிகரத்தில் தூக்கி வைப்பாய்
நந்தியே உனைத்துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்
மாலைகள் ஏற்க வைப்பாய் மழலைகள் பிறக்க வைப்பாய்
வேலைகள் கிடைக்க வைப்பாய் விதியையும் மாற்றி வைப்பாய்
சோலையின் வண்ணப் பூவை சூடிடும் நந்தி தேவா
நந்தியே உனைத்துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்
தஞ்சையில் பெரியநந்தி தளிருடன் வெண்ணெய் சாத்தி
அஞ்சாத வேந்தன் நந்தி அழகிய நெகமம் நந்தி
குஞ்சர முகத்தான் தந்தை குந்திடும் ரிஷப நந்தி
தஞ்சடனாய் உனையடைந்தேன் தயங்காது எம்மைக் காப்பாய்.


பஞ்ச புராணம்

இடரினுந் தளிரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனி லமுதொடு கலந்த நஞ்சை
மிடறினி லடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளுமா
றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவாஉன தின்னருளாவடுதுறை அரனே --- தேவாரம்


சிவபுராணம்



நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம்குவிவார் உன்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க
ஈசன்னடிபோற்றி எந்தை அடி போற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணந்தன்னை
முந்தை வினைமுழுவதும் ஓய உரைப்பன்யான்
கண்னுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறைந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகிமுனிவராய்த் தேவராய்ச்
செல்லா அநின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
வெய்யாய் தணியாய் இயமான நாம் விமலா
பொய்யாயின எல்லாம் போயகல வந்தருளி
மெஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பருக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் என்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்
புறந்தோல் போர்த்தெங்கும் புழுஅழுக்குமூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
வலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்து அன்பாகிக் கசிந்துள் உருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள்காட்டி
நாயிற் கடையாய் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவானதத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தே ஆர் அமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியன்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கும் அன்பனே யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணிக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியெ
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்
ஊற்றானே உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப
ஆற்றேன் என் ஐயா அரனேஓ என்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுற் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.


திருச்சிற்றம்பலம்

வாழ்த்து

வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி
விளங்குக உலகம் எல்லாம்.


ஆலய தரிசன விதி முறைகள் :


1. குளித்து தூய ஆடை அணிந்து ஆலய தரிசனத்திற்குச் செல்ல வேண்டும்.

2. ஆலயத்திற்குள் செல்லும் முன் கோவிலின் கோபுரத்தைப் பார்த்து வணங்க வேண்டும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பர் பெரியோர்.

3. மகாசிவநாமமாகிய, “ஓம் சிவாய நம “ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை மனதினுள் செபித்துக் கொண்டே கொடிமரத்தைப் பார்த்து வணங்க வேண்டும்.

4. பின்பு விநாயகப் பெருமானை தோப்புக்கரணம் இட்டு வணங்க வேண்டும். இதுவும் ஒரு வகை யோகப் பயிற்சியுமாகும்.

5. ஈச்சுவரரை தரிசிக்கும் முன்னர் நந்திதேவரை வணங்கி ஆசி பெற்று உள்ளே செல்ல வேண்டும்.

6. பின்பு ஈச்சுவரரின் காவல் தெய்வங்களாகிய துவாரபாலகர்களிடம் அனுமதி பெற்று ஈச்சுவரனை வணங்க வேண்டும்.

7. எம்பெருமானை வணங்கி மும்முறை வலம் வர வேண்டும்.

8. வலம் வரும் போது குருவாகிய தட்சிணாமூர்த்தி சுவாமிமுன் நின்று கண்களை திறந்து அவரைப் பார்த்து வணங்க வேண்டும்.

9. அடுத்து வள்ளி தெய்வானை சமேதரராயக் காட்சியளிக்கும் முருகப் பெருமானை தரிசிக்க வேண்டும்.

10 . சண்டிகேசுவரர் சன்னதிக்குச் சென்று, அவரிடம் ஆசி பெற வேண்டும்.
எக்காரணம் கொண்டும், தியானத்தில் ஈடுபட்டிருக்கும் சண்டிகேசுவரர் சந்நிதியில் கைதட்டியோ, ஒலி எழுப்பியோ இடையூறு செய்தல் ஆகாது.


தீபம் ஏற்றும் முறை :


வேப்பெண்ணெய், நெய், இலுப்பெண்ணெய் மூன்றும் கலந்து தீபமிடுவதால் செல்வம் உண்டாகும். இது மேலும் தெய்வத்திற்கு மிகவும் உகந்ததாகும்.
மருத்துவ குணம் நிறைந்த இம்மூன்று எண்னெய் கொண்டு தீபம் ஏற்றுதல் சுற்றுச் சூழல் மற்றும் உடல் நலம், மன நலம் இவையனைத்திற்கும் சுகம் விளைவிக்கக் கூடியதாகும்.

நெய், விளக்கெண்னெய், இலுப்பெண்ணெய், வேப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய இந்த ஐந்து எண்ணெய்களையும் எவர் ஒருவர் கலந்து ஊற்றி ஒரு மண்டலம் பூசை செய்கின்றனரோ அவருக்கு தேவியின் அருள் மந்திரசக்தி உண்டாகும்.


தீபம் ஏற்றும் திசைகளின் பயன்கள் :


கிழக்கு : இத்திசையில் தீபம் ஏற்றி வழிபட துன்பம் ஒழியும். கிரகக் கோளாறுகள் நீங்கும்.

மேற்கு : இந்நிலையில் தீபமேற்றி வழிபட கடன் தொல்லை, சனிப்பீடை, கிரகதோசங்கள், சல்லியதோசம், பங்காளிப் பகை இவை நீங்கும்.

வடக்கு : இத்திசையில் தீபம் ஏற்றி வழிபட திரண்ட செல்வம், மங்களம், திருமணத்தடை, கல்வித்தடை இவையனைத்தும் நீங்கி, சர்வ மங்களம் உண்டாகும்.

தெற்கு : இத்திசையில் தீபம் ஏற்றக் கூடாது. இது பெரும்பாலும் அபசகுனமாகும்.

திரி ஏற்றும் முகப்பக்கம் :

ஒரு முகம் ஏற்றுவது - மத்திமம்.

இரண்டு முகம் ஏற்றுவது - குடும்ப ஒற்றுமையைப் பெருக்கும்.

மூன்று முகம் ஏற்றுவது - புத்திரசுகம்.

நான்கு முகம் ஏற்றுவது - பசு பரி இனத்தைத் தரும்

ஐந்து முகம் ஏற்றுவது - செல்வத்தைப் பெருக்கும்.



திரி தரும் பலன்கள் :

பஞ்சுதிரி : குடும்பத்தில் மங்களம் நிலைக்கும்.

தாமரைத் தண்டு திரி : முன் வினைப்பாவம் நீங்கி, செல்வம் நிலைக்கும்.

வாழைத்தண்டு திரி : மக்கட் செல்வம் உண்டாகும். தெய்வக் குற்றம் நீங்கி மன அமைதி ஏற்படும்.

வெள்ளை எருக்கன் பட்டைத் திரி : பெருத்த செல்வம் சேரும்

புது மஞ்சள் துணித் திரி : திருமணத்தடை நீங்கும், மலட்டுத் தன்மை நீங்கும்.

புது வெள்ளைத் துணித் திரி : தரித்திரம் நிவாரணமாகி, குடும்பத்தில் சுபிட்சம் நிலவும்.


இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே.


அம்மை துதி :

எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும்
உண்மையாவது பூசனை என உரைத்தருள
அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்
பெண்ணின் நல்லவளாயின பெருந்தவக் கொழுந்து.

முருகப் பெருமான் துதி:

கொன்றை வேணியார் தாமும் பாகங் கொண்ட குலக்கொடியும்
வென்றி நெடுவேல் மைந்தரும் தம் விரைப்பூங்கமலச் சேவடிக்கீழ்
நின்ற தொண்டர் மனைவியார் நீடு மகனார் தாதியார்
என்றும் பிரியாதே இறைஞ்சி இருக்க உடன்கொண்டு ஏகினார்.



அம்பலவாணன் துதி :

உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்து என் உளம்மன்னிக்
கருத்து இருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட
திருத்துருத்தி மேயானைத் தித்திக்கும் சிவபதத்தை
அருத்ததியினால் நாயடியேன் அணிகொள் தில்லை கண்டேனே.


குறிப்பு :

வழிபாட்டின் தொடக்கத்திலும் நிறைவிலும் “திருச்சிற்றம்பலம்” என்று சொல்லி மகுடம் சொல்வது நலமாம்.


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண்ணுருவானாய் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி! போற்றி !!

திருச்சிற்றம்பலம்.


நிறைவடைந்தது.





Thursday, December 16, 2010

ஆலகாலமும் அமுதாகும் ! - பகுதி - 3.





பிரதோச விரதம்

பிரதோச விரதம், வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும், திரயோதசி திதி அன்று நீராடி மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும்.சுவாமிக்கும், அம்பிகைக்கும் அபிசேக ஆராதனைகள் செய்ய வேண்டும். அல்லது சிவன் கோவிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிசேக ஆராதனைகள் பிரதோச காலத்தில் நடக்கும். அதில் கலந்து கொண்டு அருள் பெறலாம். பிரதோச பூசையன்று முதலில் நந்தி தேவருக்கு பூசை நடைபெறும். சிவபெருமான் பிரதோச காலத்தில் நந்திதேவரின் இரு கொம்புகளுக்கு இடையே உயிர்கள் உய்யும் பொருட்டுத் திருநடனம் புரிந்தார்.

இப்பிரதோச வேளையில் பூலோகம் மட்டுமல்லாமல், ஈரேழுலகத்தில் வசிப்பவர்களும் வழிபாடு செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் பிரதோசத்தின் வழிபாட்டின் சிறப்பு அம்சமாகும். குறிப்பாக தேவர்கள் தாங்கள் பிரதோச வழிபாடு செய்வதோடு அவ்வழிபாடு செய்பவர்களுக்கும் தாங்களே முன்வந்து உதவுவதாக புராணங்கள் கூறுகின்றன.

திருவாரூரில் உள்ள சிவாலயத்தில்தான் முதன் முதலில் பிரதோச பூசை ஆரம்பித்துள்ளது. தேவலோகத்தைச் சேர்ந்த தேவேந்திரன் தான் முதன் முதலில் இப்பூசையை ஆரம்பித்து வைத்திருக்கிறார். பிரதோச தினத்தன்று நாள் முழுவதும் விரதம் இருந்து பிரதோச தரிசனம் முடிப்பது அதிக நற்பலனை அளிக்கவல்லது என்பது அனுபவத்தில் உணர்ந்த உண்மை. ‘பிர’ என்பதன் பொருள் பாவம், அந்த பாவத்தைப் போக்கும் தோசம் என்பது நேரம் என்பர் ஆன்றோர்.

பிரதோச காலத்தில் சிவபெருமான் அனைத்துப் பொருட்கள், அதாவது உயிருள்ள மற்றும் ஜடமான அனைத்துப் பொருள்களையும் தன்னுள்ளே அடக்கிக் கொள்கின்றார். அதனால் பிரதோச காலம் என்பது அகிலாண்ட நாயகனான பரமேச்வரனை தியானம் செய்வதற்கும் அந்த ஈச்வரனையே தம் வசப்படுத்திக் கொள்வதற்கும் உகந்த காலமாகும். பிரதோச வேளையில் ‘சிவாய நம’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிக்கும் போது உடல், மனம் இரண்டும் தூய்மை பெறுகிறது. அதனால் பல நன்மைகளும் விளைகின்றது. பிரதோச காலத்தில் சிவபுராணப் பாடலைப் பாடி வழிபடுதல் நலம்.

பிரதோச காலங்களில் ஐந்து வகையுண்டு.

1. நித்ய பிரதோசம் : தினந்தோறும் மாலை 4.30 மணி முதல் 5.00 மணி வரையுள்ள காலகட்டமே நித்ய பிரதோசம் எனப்படும்.

2. பஷ பிரதோசம் : வளர்பிறையில் [ சுக்லபட்சம்] சதுர்த்தி திதியில் மாலைக் காலமே பஷ பிரதோசம் எனப்படும்.

3. மாத பிரதோசம் : தேய்பிறையில்
[ கிருஷ்ணபட்சம்] திரயோதசி திதியில் வரும் பிரதோசமே மாத பிரதோசம் எனப்படும்.

4. மஹா பிரதோசம் : தேய்பிறையில் [கிருஷ்ணபட்சம்] திரயோதசி திதியில் சனிக்கிழமையில் வந்தால் அதுவே மிகச் சிறப்புடைய மஹாபிரதோசம் எனப்படும்.

5. பிரளய பிரதோசம் : பிரளய காலத்தில் இவ்வுலகின் அனைத்து சீவராசிகளும் சிவனிடம் ஒடுங்கும். அதுவே பிரளய பிரதோசமாகும்.

பிரதோச பூசை செய்தால் ஒருவருக்குக் கிட்டும் பலன்கள்.

1. துன்பம் நீங்கி இன்பம் எய்துவர்.

2. மலடு நீங்கி மகப்பேறு பெறுவர்.

3. கடன் நீங்கி தனம் பெறுவர்.

4. வறுமை ஒழிந்து செல்வம் சேரும்.

5. நோய் நீங்கி நலம் பெறுவர்.

6. அறியாமை நீங்கி ஞானம் பெறுவர்.

7. பாவம் தொலைந்து புண்ணியம் எய்துவர்.

8. பிறவி ஒழிந்து முக்தி எய்துவர்.


ஒரு வருட பலன் : சனிக்கிழமை தவிர மற்ற கிழமைகளில் வரும் பிரதோச தினத்தன்று பிரதோச வேளையாகிய மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் அன்று, முழுவதும் விரதம் இருந்து சிவாலயத்திற்குச் சென்று ஆலய வழிபாடு செய்தால் ஒருவருக்கு ஒரு வருடம் தினமும் கோவில்சென்று வழிபட்ட பலன் கிடைக்கும்.

மஹா பிதோசம் :

ஐந்து வருட பலன் : சனிக்கிழமை வரும் பிரதோச வேளையில் நாள் முழுவதும் விரதமிருந்து சிவாலயம் சென்று வழிபாடு செய்தால் ஐந்து வருடம் தினமும் தவறாது கோவிலுக்குச் சென்று வழிபடும் புண்ணியம் கிட்டும். பஞ்சமாபாபமும் விலகும் என்பர்.

பிரதோச காலத்தில் நந்தீஸ்வரர் பூசை.

1. ஒவ்வொரு பிரதோச வேளையிலும் சிவபெருமானை பூசிப்பதற்கு முன் நந்தியெம்பெருமானை பூசிப்பது நலமாகும்

2. பிரதோச வேளையில் நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையில் இறைவனை தரிசித்து வணங்கினால் கடன், வறுமை, நோய், பயம், மனகிலேசம், மரணவேதனைகள் நீங்குதல், புத்திர பாக்கியம் பெறுதல், காரியசித்தி பெறுதல் ஊக்கத்தை உண்டாக்குதல், சகல சௌபாக்கியங்களையும் பெறுதல் இவைகளுடன் கைலாயமும் அடைந்து இம்மை, மறுமையில் அனைத்து நன்மைகளையும் பெற்று பயனடைவர்.

3 . எனவே பிரதோச காலத்தில் நந்தியெம் பெருமானின் தரிசனமும் பூசையும் பெறும் பலனளிக்கக் கூடியதாகும்.

பிரதோச பூசையன்று முக்கிய அபிசேகப் பொருள்களும் அதன் பலனும்:

1. அபிசேக வேளையில் பால் கொடுத்தால் - நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்.

2. தயிர் கொடுத்தால் - பல வளமும் உண்டாகும்.

3. தேன் கொடுத்தால் - இனிய சாரீரம் கிட்டும்.

4. பழங்கள் கொடுத்தால் - விளைச்சல் பெருகும்.

5. பஞ்சாமிர்தம் கொடுத்தால் - செல்வச் செழிப்பு ஏற்படும்.

6. நெய் கொடுத்தால் முக்திப் பேறு கிடைக்கும்.

7. இளநீர் கொடுத்தால் - நன்மக்கட்பேறு கிட்டும்.

8. சர்க்கரை கொடுத்தால் - எதிர்ப்புகள் மறையும்.

9. எண்ணெய் தைலம் கொடுத்தால் - சுக வாழ்வு கிட்டும்.

10 சந்தனம் கொடுத்தால் - சிறப்பான சக்திகள் பெறலாம்.

11. மலர்கள் கொடுத்தால் - தெய்வ தரிசனம் கிட்டும்.

பிரதோச நாளன்று கூடியவரை விரதம் இருந்து வர வேண்டும். அன்றைய தினம் தரிசனம் முடிந்த பின்னர் பால், பழம் மட்டும் அருந்தி வெறுந்தரையில் படுத்து உறங்கினால் பிரதோசப் பலன் முழுமையாகக் கிட்டும்.

நந்தியெம் பெருமான் வழிபாடு.

ஐயிரு புராணநூல் அமலற்கு ஓதியும்
செய்யபன் மறைகளும் தெரிந்து மாயையான்
மெய்யறு சூள்புகல் வியாதன் ஈட்டிய
கையறு நந்திதன் கழல்கள் போற்றுவாம்.

நந்தீஸ்வரர் பெருமை

நந்தியெம் பெருமான் தன்னை
நாள்தோறும் வணங்குவோர்க்குப்
பக்தியால் ஞானம் சேரும்
பொலிவுறு செல்வம் கூடும்
குலமுறை தழைத்தே ஓங்கிக்
குன்றுபோல் செல்வம் சேரும்
சிந்தையில் அமைதி தோன்றும்
சிறப்புறு மக்கள் சேர்வர்
இந்திர போகம் கிட்டும்
இணையிலா வாழ்வு தானே
உளம்நிறை எண்ணம் கூடி
உயர்ந்திடும் வாழ்வு தானே.

தொடரும்.

Tuesday, December 14, 2010

ஆலகாலமும் அமுதாகும் ! - பகுதி - 2



விநாயகர் வழிபாடு

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகந்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே.

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானை
காதலால் கூப்புவர்தம் கை.

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.


பிரதோச வரலாறு :

உலகாளும் நாயகியான அன்னை பராசக்தி தன்னுடைய பீடத்தில் அமர்ந்திருக்குங்கால், தேவலோகக் கன்னிகையை நடனம் ஆடப் பணித்தார். அன்னையின் ஆவலைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, அக்கன்னிகை, அற்புதமாக நடனம் ஆடி அன்னையை உளம் குளிரச் செய்தாள். அன்னையும் உளம் குளிர்ந்து, அவள் நாட்டியத்தை மெச்சி, தன் கழுத்தில் அணிந்திருந்த மலர் மாலையை எடுத்து அவளுக்குப் பரிசாகக் கொடுத்தார். அக்கனிகையையும் பேரானந்தம் கொண்டு அம்மாலையுடன் செல்லும் வழியில் துர்வாச முனிவரைச் சந்திக்கிறார். அம்மாலையின் மகத்துவம் குறித்து முனிவரிடம் அப்பெண் கூறக் கேட்ட துர்வாசரும் மனம் மகிழ்ந்து அப்பெண்ணை வாழ்த்தினார். அப்பெண்ணும் அம்மாலை தன்னிடம் இருப்பதைவிட இம்மாமுனிவசம் இருப்பதுதான் சிறப்பாகும் என்றெண்ணி, அம்மாலையை முனிவர் வசம் ஒப்படைத்தார்.

துர்வாச முனிவரும் அம்மாலையை நேராக தேவலோகம் எடுத்துச் சென்று, தேவேந்திரனிடம் அம்மாலையின் மகத்துவம் பற்றி எடுத்துக் கூறி அதை அவருக்கே அளித்தார்.

தேவேந்திரனோ, அம்மாலையைத் தன் வஜ்ராயுதம் கொண்டு வாங்கி, அதனை அருகில் நின்று கொண்டிருந்த யானையிடம் கொடுக்கிறார். யானையோ அதன் மகத்துவம் உணராமல் கீழே போட்டு காலால் மிதித்து விடுகிறது. இதனைக் கண்ணுற்ற துர்வாச முனி கடுங்கோபம் கொண்டு, தேவேந்திரனையும், தேவலோகத்தை சேர்ந்த அனைவரையும் கடுமையாகச் சபித்து விட்டுச் சென்றார். அதன் காரணமாக தேவேந்திரனும் ஏனைய தேவலோகத்தாரும், சாப விமோசனம் பெற்று, நரை, மூப்பு, மரணம் போன்ற துன்பங்களிலிருந்து விடுபட்டு வாழும் ஆவல் கொண்டு நாரத முனியின் துணையுடன், பிரம்ம தேவனிடம் சென்று முறையிட்டனர்.

பிரம்ம தேவனும் அவர்களை, பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமனிடம் அழைத்துச் சென்று நடந்த விவரங்களைக் கூறி, பாபவிமோசனம் நாடினர்.

திருமால் தேவர்களிடம், அவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்து, அமிர்தம் எடுத்து உண்டால், அவர்களின் சாபம் நீங்கி, பாபவிமோசனம் பெற்று, அசுரர்களின் பிடியிலிருந்து விலகுவதோடு, மரணம் நீங்கி என்றும் இளமையான தோற்றம் பெறலாம் என்றுரைத்தார். நாரதரும், யார் யார் பாற்கடலைக் கடைதல் நலம்தரும் என்பதனையும் திருமாலிடமே கேட்க, அவரும், தேவர்களும் அசுரர்களும் சேர்ந்தே கடைதல் வேண்டும் என்றும், தேவர்கள் வால் பகுதியையும், அசுரர்கள் தலைப் பகுதியையும் பிடித்துக் கடைதல் வேண்டும் என்றருளினார்.

இந்திராதி தேவர்கள் திருப்பாற்கடலை அடைந்து மந்திரகிரி மலையை மத்தாகவும், வாசுகி என்ற அரவத்தை தாம்புக் கயிறாகவும் அமைத்து திருப்பாற்கடலைக் கடையும் சமயம், மந்திரகிரி மலை சாய்ந்து, கடலில் மூழ்கிப் போகும்போது தேவேந்திரன் திருமாலிடம் ஓடி முறையிடுகிறார். ஸ்ரீமந்நாராயணன் அவ்வேளையில், “கூர்ம அவதாரம் “ எடுத்து கடலுக்குள் சென்று, தன்னுடைய முதுகின்மேல் மந்திரகிரி மலையை தாங்கிப் பிடித்துக் கொள்கிறார். அந்த நாள் பத்தாவது திதியான தசமித் திதியாகும்.

பிறகு தொடர்ந்து தேவர்கள் திருப்பாற்கடலை கடைந்து வரும்போது, மறுநாள் 11 வது திதியான ஏகாதசித்திதியாகும். வாசுகி வலி யினால் ஏற்பட்ட துன்பம் தாளாமல் கடலில் நஞ்சை உமிழ்ந்தது. கடலிலும் நஞ்சு உண்டானது. கடலில் தோன்றிய ஆலமும், வாசுகி கக்கிய ஆலமும் ஒன்று சேர்ந்து “ஆலாலம்” ஆனது. கடல் முழுவதும் நஞ்சாய் ஆனது. வெண்ணிறமாக இருந்த விஷ்ணு மூர்த்தியும் கடும் நஞ்சினால், நீலநிறமானார். இதைக் கண்ணுற்ற வானவர்கள் அஞ்சி, நடுங்கினர். திரும்பவும் திருமாலின் பதம் நாடினர். திருமாலும், நான்முகனும் சேர்ந்து, தேவர்களை திருக்கைலாயம் செல்லும்படிக் கூறினர். அனைவரும் ஒன்று சேர்ந்து கைலாயம் விரைந்தனர்.

திருக்கையிலையில் சிவபெருமான் சந்நிதியில் நந்திதேவர் பொற்பிரம்பும், உடைவாளும் ஏந்தி, காவல் புரிந்து கொண்டிருந்தார். தேவர்கள் முதலில் நந்திதேவனை வணங்கி, திருப்பாற்கடலைக் கடையவேண்டிய காரணத்தையும், அதனால் நேர்ந்த இன்னல்கள் குறித்தும் விவரமாக நந்திதேவனிடம் கூறி, அந்த இன்னல் தீர்க்கும் பொருட்டேத் தாங்கள் அகிலாண்டகோடி நாயகனைக் காண வந்த சேதியும் கூறினர். நந்திதேவனும் இவர்களை வாயிலிலேயே நிறுத்திவிட்டு, சிவபெருமானிடம் சேதி சொல்லி, சர்வேஸ்வரனின் அழைப்பிற்குப் பிறகு தேவர்கள் , நவரத்தினமணி பீடத்தில் எழுந்தருளியுள்ள சிவ சக்தியைக் கண்டு, தங்கள் இன்னல்களைக் கூறித் தங்களைக் காப்பாற்ற வேண்டி இறைஞ்சினர்.

சிவபெருமானும் அனைத்து சீவராசிகளையும் காக்கும் பொருட்டு, அருகில் நின்றிருந்த தன் தொண்டனான சுந்ததரை திருநோக்கம் செய்து, “ சுந்தரா, அந்நஞ்சை, அவ்விடம் அகற்றி, இவ்விடம் கொண்டுவருவாயாக”, என்று பணித்தார். சுந்தரரும், மாலைப்பொழுதான காரணத்தினால், வானவர்கள் அணுக இயலாத அக்கொடிய விடத்தை நாவற்கனி போன்ற வடிவத்தில் திரட்டி, உருட்டிக் கொண்டுவந்து சிவபெருமானிடம் கொடுத்தார்.திரிசடைப்பெருமானோ, அக்கொடிய விடத்தை, அமரர்களான தேவர்கள் வாழும் பொருட்டு அமுதம் போல அதனை உண்டருளினார். அவ்விடம் உள்ளே சென்றால், உள் முகத்திலுள்ள ஆருயிர்கள் அழிந்துவிடுமே என்றும், உமிழ்ந்தாலோ வெளிமுகத்திலுள்ள ஆருயிர்கள் அழிந்துவிடுமாதலாலும், உண்ணாமலும், உமிழாமலும் கண்டத்தில் தரித்தருளினார்.

இக்காரணத்தினாலேயே எம்பெருமானின் செம்பொன்மேனியானது, கன்னங்கரிய மேனியானது. இக்காரணத்தினாலேயே ஐயனுக்கு, “மணிகண்டன்” மற்றும் “திருநீலகண்டர் “ என்றும் பெயர் ஏற்பட்டது. இது நிகழ்ந்தது, ஏகாதசி திதியன்று மாலைப் பொழுதாகும். சிவபெருமான் தேவர்களை நோக்கி மீண்டும் சென்று திருப்பாற்கடலைக் கடையும்படிப் பணித்தருளினார். அவ்வாறே, தேவர்களும், அசுரர்களும் சென்று திரும்பவும் திருப்பாற்கடலைக் கடைய முற்பட்டனர்.

தேவர்கள் கடையும் போது, அதிலிருந்து, இலட்சுமி ஐராவதம் என்ற வெண்யானை, காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துபமணி, சூடாமணி, உச்சைஸ்வரம் என்ற குதிரை முதலானவை ஒவ்வொன்றாக வரத் தொடங்கின. இலக்குமியைத் திருமால் எற்றருளினார். மற்றவற்றை தேவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

தேவர்கள் தொடர்ந்து திருப்பாற்கடலைக் கடைந்து கொண்டிருந்தனர். மறுநாள், துவாதசியன்று அதிகாலையில் அமிர்தம் தோன்றலாயிற்று ! தேவர்கள் அதனைப் பகிர்ந்து உண்டனர். அமிர்தம் உண்ட மகிழ்ச்சியில் ஆடியும், பாடியும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்து , இவற்றுக்குக் காரணமான ஈசனையே வணங்க மறந்து விட்டனர். பிறகு பிரம்மதேவர், தேவர்களின் தவறை உணரச் செய்து, அவர்களை சிவபெருமானிடம் சென்று பணிந்து தங்கள் குற்றத்தை மன்னித்தருளும்படி வேண்டச் செய்தார்.

பரம்பொருளான எம்பெருமான் மகிழ்ந்து தேவர்களுக்கு அருள்புரியத் திருவுளம் கொண்டு திருக்கயிலையில் அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிவரையிலான, பிரதோச வேளையில் தம் திருமுன் இருந்த ரிசப தேவரின் இரு கொம்புகளுக்கு இடையில் நின்று அம்பிகையைக் காண திருநடனம் செய்தருளினார்கள். தேவர்கள் அதைகண்டு பேரானந்தம் கொண்டு, சிவபெருமானை வணங்கினர். அதுமுதல், திரயோதசி திதியன்று மாலை நேரம் பிரதோச காலம் என்று வழங்கலாயிற்று. இது கார்த்திகை மாதம் சனிக் கிழமையன்று நடந்ததால் சனிப்பிரதோசமாகும். பிரதோசம் என்ற விரதம் சிவபெருமானுக்கு மட்டுமே உரியதாம். அனைத்து உலக ஜீவராசிகளும், தேவர்களும், விஷ்ணு, பிரம்மா என்று அனைவரும் ஒன்று சேர்ந்து விரதம் இருந்த நாள்தான் பிரதோச நாளாகும்.

பிரதோச விரதம் இருக்கும் முறை குறித்து இனிக் காணலாம்.

தொடரும்.

Sunday, December 12, 2010

ஆலகாலமும் அமுதாகும் !



ஆலகாலமும் அமுதாகும் !

பூமியர் கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல் மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி
வாழி திருநாவலூர் வந்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாத ஊரர் திருத்தாள் போற்றி.

நால்வர் பெருமக்கள் துதி.

இப்பூவுலகின்கண் வாழும் உயிரினங்களில் ஆறறிவுப் படைத்த மனித இனம் சாலச் சிறந்ததொரு படைப்பாகும்.ஆதி காலத்தில் வாழ்ந்த அருளாளர்கள், ஞானிகள் ஏனையோர், ஆலயங்களில் உருவத்திருமேனி, அருவுருவத் திருமேனிகளில் நீக்கமற எங்கும் நிறைந்துள்ள களங்கமற்ற பரம்பொருளாகிய சிவத்தை எழுந்தருளச் செய்து வழிபட்டு, நித்திய ஆனந்தம் பெற்றனர் என்றால் அது மிகையாகாது.

ஆதிகாலந்தொட்டே நாயன்மார்கள், சந்தானாச்சாரியார்கள் போன்றவர்கள் சைவத்தை ஒளியூட்டி பிரகாசிக்கச் செய்வதில் பெரும் பணியாற்றியுள்ளனர்.சைவாலயங்களின் வழிபாட்டில் பிரதோச கால வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும்.

மகாப் பிரதோசத்தின் மகிமை :

* சிவபெருமான் ஆலகால விடத்தை அருந்திய நேரம்தான் பிரதோச வழிபாடாக செயல்படுகிறது.

* ஒரு பிரதோசம் பார்ப்பது பதினைந்து நாட்கள் கோவிலுக்குச் சென்று வந்த பலனைக் கொடுக்கும்.

* பதினோரு பிரதோசம் பார்ப்பது ஒரு கும்பாபிசேகம் பார்த்த பலனைக் கொடுக்கும்.

* நூற்று இருபது பிரதோசம் பார்ப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது.

* சிவாலயங்களில் சிறப்பான வழிபாடு மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறும்.

* பிரதோச விரதம் கடைப்பிடிப்பவர்களுக்கு சகல செல்வங்களும் வந்து சேரும் என்பது திண்ணம்.

துன்பங்கள் [ விக்கினங்கள் ] அனைத்தையும் நிவர்த்தி செய்யும் என்பெருமான் விக்னேசுவரன் என்றும் அழைக்கப் பெறுகிறார்.இம்மையிலும், மறுமையிலும், அறிந்தும், அறியாமலும் செய்யும் பாபமாகிய தோசங்கள் அனைத்தையும் போக்கும் வழிபாட்டிற்கு பிரதோசகால வழிபாடு அதாவது பிரதோசம் எனப் பெயர் வழங்குகிறது.

கிறித்துவ மதங்களில், பாவ மன்னிப்பு என்று ஒரு முறை உண்டு.அம்முறையில், மத குருமார்களின் காதில் சென்று தான் செய்த பாவத்தைக் கூறி அதற்கு மன்னிப்பும் கேட்கப்படும். மத குருவும் ஆண்டவரிடம் அந்த பக்தரின் சார்பில் பாவ மன்னிப்புக் கோரி தூது செல்வதாக ஐதீகம்.

இது போலத்தான் நம் இந்து மதத்தில், சைவாகமத்தில், இந்த பிரதோசகால வழிபாடு அமைந்துள்ளது எனலாம்.

ப்ர - தோசம் - மிக்க தோசம், எனப் பொருள்.
அதாவது, போக்குதற்கு இயலாத எத்தகைய தோசமாக இருந்தாலும் அவை அனைத்தையும் நிவர்த்தி செய்யும் ஆற்றல் கொண்டதுதான் பிரதோச வழிபாடு.

பிரதோச காலத்தில் சிவபெருமான் நந்தியெம்பெருமான் விருப்பப்படி நர்த்தனக் காட்சி அளிக்கின்றார். நந்தியெம்பெருமானுக்கு அபிசேக ஆராதனை செய்து, விடையின் மேல் உலகையே ஆளுகின்ற சக்தியாகிய பராசக்தியுடன் சிவபெருமான் எழுந்தருளி அடியவருக்கு நித்தியானந்தம் அளிக்கின்றார்.

பிரதோச காலத்தில், விரதமிருந்து வழிபடும் அடியார்களுக்கு கடன், நோய், தரித்திரம், மனக்கவலை, மரணபயம், மன சோர்வு, கோபம், மோகம், பயம் போன்றவைகளால் வரும் தோசங்கள் அனைத்தும் அறவே நிவர்த்தி ஆகும் என உத்தரகாரணாகமம் இயம்புகின்றது.

பசுவின் திருமேனி, பிற உயிரினங்களின் சரீரங்களைக் காட்டிலும் பல்வகையிலும் மேன்மையுடையதாகும். இல்லத்தையும், மற்ற இடங்களையும், பசுவின் சாணம் மற்றும் கோமயம் கொண்டு சுத்தம் செய்வது வழக்கத்தில் உள்ளது. அக்காலந்தொட்டு, வீட்டு வாசலை அதி காலையில் பசுஞ்சாணம் கொண்டு மொழுகுவது இலட்சுமி கடாட்சம் அருள்வதாகவும் பெரியோர் கூறுவர்.

ஆகவே, தருமத்தின் சொரூபமாக விளங்கும் விடையின் மேல் ஏறி வலம் வருகின்றார் இறைவன், இப்பிரதோச காலத்தில்.

தேவர்கள் வாழும் பொருட்டு நஞ்சை உண்டு, கண்டத்தில் தாங்கி, நஞ்சுண்ட கண்டனாக அருள்பாலித்து, அமிர்தத்தை அவர்களுக்கு வழங்கிய காலம் இப்பிரதோச காலமாகும்.

இப்பிரதோச நாளில் வழிபடும் அன்பர்கள் வேண்டுவன அனைத்தையும் பெற்று மேன்மையான வாழ்வைப் பெறுவார்கள் என்பது அனுபவத்தில் உணர்ந்த மறுக்க இயலாத உண்மையாகும்.

தொடரும்.

பி.கு.: பிரதோச விரதம் என்ற விரதம் சிவபெருமானுக்கு மட்டுமே உரியது. அனைத்துலக ஜீவராசிகளும், தேவர்களும், விஷ்ணு, பிரம்மா என அனைவரும் ஒன்று கூடி விரதம் இருந்த நாள்தான் பிரதோச நாளாகும். பிரதோச வரலாறும், விரதம் இருக்க வேண்டிய முறை குறித்தும் தொடர்ந்து காணலாம்.

Wednesday, December 8, 2010

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - பாகம் - 7


சக்தி.

சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஒரு குமிழியாம்.
சக்தி பொய்கையில் ஞாயிறு ஒரு மலர்,
சக்தி அநந்தம், எல்லையற்றது, முடிவற்றது;
ஒன்றாக்குவது, பலவாக்குவது,
சக்தி குளிர் செய்வது, அனல் தருவது,
குதுகுதுப்புத் தருவது.
குதூகலந் தருவது, நோவு தீர்ப்பது,
இயல்பு தருவது, இயல்பு மாற்றுவது,
சக்தி ஊக்கந் தருவது,
சக்தி மகிழ்ச்சி தருவது....உவப்புந் தருவது.......

மகாகவி அன்றே பாடி வைத்துச் சென்றான், சக்தியின் சக்தியைப் பற்றி....

மனித உடலும், இயந்திரம் போலத்தான்,
ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு பாகம் மரை கழண்டு போகலாம், அதனை செப்பனிட்டு ஓடச் செய்வதிலேதான் ஒரு உரிமையாளனின் திறமை இருக்கிறது. அந்த வகையில் செப்பனிடும் போது அதனை ஏற்றுக் கொள்ள அடிப்படையாக உடலுக்குச் சக்தி தேவைப்படுகிறது. அந்த சக்தியைத் தான் நாம் இயற்கையின் வரப்பிரசாதம் என்கிறோம். காய்கறிகள், பழங்கள், கீரைகள், தானியங்கள் இப்படி எத்தனையோ இயற்கை வளங்கள் நம் உடலுக்குச் சக்தி சேர்க்கின்றன. அதனை நன்கு பக்குவமான முறையில் சுத்தம் செய்து சமைத்து, உண்ணும் பக்குவத்தில் தயாரிப்பதில் தான் இதன் வெற்றி அடங்கியுள்ளது.

இன்று அத்தகைய சக்தி கொடுக்கக்கூடிய
ஒரு சில பானங்கள் பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.அதிக பணிச்சுமை காரணமாகவோ, அதிக பயணம் காரணமாகவோ, உடல் சோர்வுறும் வேளையில்
இது போன்ற சக்தி பானங்களை பருகும் போது, வெகு விரைவிலேயே அந்த களைப்பு நீங்கி நம்மைப் புத்துணர்வு பெறச் செய்யும்.....

1. குளுகுளு ஆப்பிள் தேநீர்:

தேவையான பொருட்கள்:

1 கப் குளிர்ந்த தேநீர்
2 மேசைக் கரண்டி சக்கரை
1/2 கப் ஆப்பிள் ஜீஸ்
2 மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு
ஒரு சில ஆப்பிள் துண்டுகள்.

செய்முறை :

அப்பிள் ஜீஸில், எலுமிச்சை சாறை கலக்கவும்.
மிக்ஸியில், இந்த ஜீஸ், தேநீர், ஐஸ் கட்டிகள், மற்றும் சக்கரை சேர்த்து அடிக்கவும்.

ஆப்பிள் துண்டுகளுடன் சில்லென்று பரிமாறவும்.


* சிங்கப்பூர் சிலிர்ப்பு......

தேவையான பொருட்கள்:

2 கப் செர்ரி ஜீஸ்
2 மேசைக் கரண்டி எலுமிச்சை சாறு
1 பாட்டில் சோடா தண்ணீர்
2 துண்டுகள் எலுமிச்சை
4-6 செர்ரி
ஒரு கொத்து புதீனா இலை
அலங்கரிக்க சிறிது புதீனாவும், எலுமிச்சை துண்டமும்.

செய்முறை :

செர்ரி ஜீஸையும், எலுமிச்சை ஜீஸையும் கலக்கவும்.
பரிமாறுவதற்கு முன்பு சோடா தண்ணீரும் ஒரு சில புதீனா இ
லையும் சேர்த்து, சில்லென்று பரிமாறவும்.
செர்ரியும், எலுமிச்சை துண்டும் கொண்டு அலங்கரிக்கவும்.


3 காய்கனி கதம்ப ஜீஸ்:
தேவையான பொருட்கள் :

1 கப் பீட்ரூட் ஜீஸ்
1 கப் கேரட் ஜீஸ்
1 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
1/2 டீஸ்பூன் புதீனா இலைகள் [ பொடியாக நறுக்கியது ]
1 டீஸ்பூன் பிளாக் சால்ட்
1/2 டே.ஸ்பூன் ஆரஞ்சு சாறு[ ஸ்குவாஷ்}
1 பாட்டில் சோடா தண்ணீர்.

செய்முறை :

அனைத்து ஜீஸ் வகைகளையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பரிமாறும் போது புதீனா இலை, சோடா தண்ணீர் மற்றும் கறுப்பு உப்பு சேர்த்து, சில்லென்று பரிமாறவும்.

4. ஆறு காய்கறிகளின் காக்டெயில்.

தேவையான பொருட்கள் :

1 கப் வெள்ளரிக்காய் [ துறுவியது ]
1 கப் கேரட் [ துறுவியது ]
1 கப் லெட்டூஸ் அல்லது முட்டைகோஸ் [துறுவியது ]
1 கப் பாலக் அல்லது ஸ்பினேஸ்[ spinach ]
2 டீ.ஸ்பூன் கொத்தமல்லி இலை
3-4 புதீனா இலைகள்
சக்கரை தேவைக்கேற்ப.
உப்பு, மிளகு தூள், தூளாக்கிய ஐஸ்.

செய்முறை :

ஜீஸர் மூலமாக எல்லா கார்கறிகளிலிருந்தும் ஜீஸ் எடுத்துக் கொள்ளவும்.
தேவையான, சக்கரை, மிளகு தூள், தூள் உப்பு, சேர்த்து, ஐஸ் கட்டியுடன் பரிமாறவும்.

5. அன்னாசி மற்றும் தக்காளி பன்ச்!

தேவையான பொருட்கள்:

2 1/2 கப் தக்காளி சூப்
3 கப் அன்னாசி ஜீஸ்
1 கப் சக்கரை சிரப்
1 எலுமிச்சையின் சாறு
1/4 டீஸ்பூன் உப்பு
1/4 டீஸ்பூன் கறுப்பு மிளகு தூள்

செய்முறை :

தக்காளி சூப்பும் சக்கரை சிரப்பையும் கலக்கவும்.
நன்கு ஆறியவுடன் அதில் அன்னாசி ஜீஸ் மற்றும் எலுமிச்சை ஜீஸீம் சேர்த்து கலக்கவும்.
மிளகு தூளும், உப்பும் தூவி, எலுமிச்சை துண்டுகள் வைத்து அலங்கரித்து உடனே பரிமாறவும்.

Tuesday, December 7, 2010

வாங்க..வாங்க......பழகலாம்.......

வலைப்பதிவர்கள் சங்கமம் - 2010.

வருகின்ற டிசம்பர் 26ம் தேதி காலை 11.00 மணிக்கு உங்கள் அனைவரையும் ஈரோட்டில் சந்திக்க மிகுந்த ஆவலாய் இருக்கின்றோம். ஆம், தமிழ்ப் பதிவர்களுக்கான ஒட்டு மொத்த கூடுதலில் பதிவர்கள், வாசகர்கள் என அனைவரையும் ஒன்றாக சந்திக்க ஆவலாய் காத்திருக்கிறோம்..........
அனைவரும் தங்கள் நண்பர்கள் புடைசூழ, வருக, வருக என வரவேற்கிறோம்.
காலை தேநீர், மதிய உணவு, மாலை தேநீர் என செவிக்குணவுடன், வயிற்றுக்கும் ஈய்ந்து, எங்கள் கொங்கு மண்ணிற்கேயுரிய அன்பான உபசரிப்புடன், தங்களை உள்ளம் குளிரச் செய்யக் காத்திருக்கிறோம், நண்பர்களே...........
கட்டாயம் வாருங்கள்....பழகலாம்......தோழர்களே.....
எங்கள் படைத் தளபதிகளின் தொடர்பு எண்கள் கொண்டு, தங்களின் வருகையை உறுதி செய்யுங்கள் நண்பர்களே.........
முன்கூட்டியே தங்கள் வருகையை தெரியப்படுத்துவதன் மூலம் விழாவை மேலும் சிறக்கச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் தங்கள் தொடர்புக்காகக் காத்திருக்கிறோம்......
டிசம்பர் 26ம் நாளை நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் கொள்ளுமாறு, நாம் இவ்விழாவைச் சிறப்பாக நடத்த தங்களனைவரின் முழு ஆதரவையும் எதிர்நோக்கி இருக்கிறோம். வாருங்கள் தோழர்களே..........
நாள் : 26.12.2010 ஞாயிறு
நேரம் : காலை 11.00 மணி
இடம் : டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்
URC நகர், பெருந்துறை ரோடு, ஈரோடு

நிகழ்ச்சி முன்னோட்டம் .......

* பதிவர்கள் அறிமுகம்
* வலைப்பூக்கள் ஒரு மாற்று ஊடகம்
* சிறுகதைகளை உருவாக்குவோம்
* புகைப்படங்களில் நேர்த்தி
* நீங்களும் குறும்படம் எடுக்கலாம்
* உலகத்திரைப்படங்கள்
* வலைப்பக்கங்களை திறனுடன் பயன்படுத்துதல்
* பதிவர்கள் கலந்துரையாடல்

காலை 11 மணிக்கு தேநீரோடு ஆரம்பித்து, மதிய உணவு, மாலை தேநீர் என விடை கொடுக்க திட்டமிடுகிறோம்.

பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையத்திலிருந்து அரங்கிற்கு வந்து செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்ய எண்ணியுள்ளோம்

உங்கள் வருகையை உடனடியாக உறுதிப்படுத்துங்கள்
உங்கள் வருகையே நம் வெற்றி!
.
கதிர் 99653-90054
பாலாசி 90037-05598 கார்த்திக் 97881-33555
ஆரூரன் 98947-17185
வால்பையன் 99945-00540 ராஜாஜெய்சிங் 95785-88925 சங்கமேஸ் 98429-10707
ஜாபர் 98658-39393
நண்டு நொரண்டு 94861-35426




Sunday, December 5, 2010

செல்லம்மாவின் பாரதி.



சுட்டெரிக்கும் சூரியன்......அலைந்து திரிந்து, நிழலுக்காக ஏங்கித் திரிந்த வேளையில் விழுதுகள் வேறூன்றிய பரந்த, பசுமையான, பழமையான,ஆலமரம். பரந்தாமனை நேரில் தரிசித்த பரம பக்தனாக உள்ளம் குளிர அதன் தண்ணிழலை அணைத்துக் கொண்டேன்.

சில்லென்ற குளிர் கரம், குச்சியாக இருந்தாலும், உறுதியான கரம்.......என் தோளை வருடி, நலம் விசாரிக்க நானோ, யாராக இருக்கும் இம்மென்மலர் என சிந்திக்கும் முன்பே, முந்திக் கொண்டாள் அவள் தான் கவிக்குயில் பாரதியின் கண்ணம்மா என்கிற செல்லம்மா என்று!

அட எனதருமைத் தோழியே..........இன்றுதான் எனைக் காணும் மனது வந்ததா என்று பழங்கதையை அலச ஆரம்பித்தோம் இருவரும்.......

அவள் அன்று விட்ட செய்தியை தொடர ஆரம்பித்தாள் ஏக்கத்துடனே......

கவிக்குயில் பாரதி, தனதருமைக் கணவனின் பெருமை பேசுவதென்றால் அவளுக்கு சக்கரைப் பொங்கல் சாப்பிடுவது போல......

பாரதியின் பெண் விடுதலை கட்டுரையைச் சிலாகிக்க ஆரம்பித்துவிட்டாள்.

” சகோதரிகளே ! ஔவையார் பிறந்தது தமிழ்நாட்டில், மதுரை மீனாஷியும், அல்லி அரசாணியும், நேற்று மங்கம்மாளும் அரசு புரிந்த தமிழ்நாட்டிலே நம்முடைய நிலைமை தென்னாப்பிரிக்காவில் ஹிந்து தேசக் கூலிகளுடைய நிலைமையைக் காட்டிலும் கேடு கெட்டிருக்கிறதா? இல்லையா? உங்களுடைய அனுபவத்திலிருந்து நீங்களே யோசனை பண்ணிச் சொல்லுங்கள்.

சகோதரிகளே, நாம் விடுதலை பெறுவதற்கும் இதுவே உபாயம். நமக்கு அநீதி செய்யும் ஆண் மக்களுடனே நாம் அன்புத் தளைகளால் கட்டுண்டிருக்கிறோம். நமக்கு அவர்கள் அண்ணன் தம்பிகளாகவும், மாமன், மைத்துனராகவும்,தந்தை, பாட்டனாராகவும், கணவர் காதலராகவும் வாய்த்திருக்கின்றனர்.இவர்களே நமக்கு பகைவராகவும் மூண்டிருக்கையிலே இவர்களை எதிர்த்துப் போர் செய்ய வேண்டுமென்பதை நினைக்கும் போது, என்னுடைய மனம் குருஷேத்திரத்தில் போர் தொடங்கியபோது அர்ஜீனனுடைய மனது திகைத்தது போல திகைத்தது. ஆண் மக்களை நாம் ஆயுதங்களால் எதிர்த்தல் நினைக்கத்தகாத காரியம். அது பற்றியே ‘சாத்வீக எதிர்ப்பினால்’ இவர்களுக்கு நல்ல புத்தி வரும்படி செய்ய வேண்டுமென்று நான் சொல்லுகிறேன்.

“ அடிமைப்பட்டு வாழ மாட்டோம். சமத்துவமாக நடத்தினாலன்றி உங்களுடன் சேர்ந்திருக்க விரும்போம் என்று அவர்களிடம் வெளிப்படையாகவும், தெளிவாகவும் சொல்லிவிட்டு அதனின்றும் அவர்கள் கோபத்தால் நமக்கு விதிக்கக்கூடிய தண்டனைகளையெல்லாம் தெய்வத்தை நம்பி பல்லைக் கடித்துக் கொண்டு பொறுப்பதே உபாயம்.....”

செல்லம்மா, என்ன இன்று இப்படி இந்த தலைப்பை எடுத்துவிட்டாய் என்று கேட்பதற்குள் அடுத்து தன்னுடைய பாடலை எடுத்து விட்டாள்,


செல்லம்மாவின் பாரதி !

பாட்டுக்கொரு பாரதியென
பாரெல்லாம் போற்றியுனைப் பாராட்ட

எட்டயபுரத்து லட்சுமியின் செல்லமகன்
சுப்பையா எனும் பன்மொழி வித்தகராகி

எட்டையபுர மன்னனின் அவைதனில்
எட்டவொண்ணா சிம்மாசனத்தில் வீற்றிருக்க

சுதேசமித்திரனின் தலைவனுக்குத் துணையானாய்
சக்கரவர்த்தினிக்கே தலைவனாகவும் ஆனாய்!

தேசிய அரசியலிலும் ஆசானாய் நீயிருந்தாய்
சகோதரி நிவேதிதாவை ஞான ஆசானாகவும் கொண்டாய்

சுதேச கீதங்களை சுவையாக நீ யாத்தினாய்
‘இந்தியா’ எனும் இதழையும் சுவையாக்கினாய்!

பாலபாரதா எனும் ஆங்கில இதழை வெளியிட்டு
ஆங்கில மொழிப் புலமையையும் பறைசாற்றினாய்.

பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டென
அஞ்சலி செலுத்தினாய் அன்னை தமிழுக்கு

கீதையை மொழி மாற்றம் செய்தாய்
பாதையை செம்மையாக்கிக் கொள்ள

மகாத்மா காந்தி, அன்னி பெசண்ட் என
வரலாற்று நாயகர்களுடன் நல்லுறவு கொண்டாய்!

கனிவான என் காதல் மொழியையும்
கவிதையாக்கினாய் தேனூறும் கருத்தோடு.

எண்ணிலடங்கா சேவைகள் புரிந்தாய்
எண்ணெழுத்தைக் கண்ணாகக் கொண்டு.

கூட்டுப் பறவைகளின் பசியாற்றினாய் பரிவுடனே
குடும்பத் தலைவனாய் தவறவிட்ட கடமைகள்

பரிகாசப் பேச்சுடன் நம் சந்ததியினருக்கு
தவறான உதாரணமாகிவிட்டோமே கண்ணாளனே!!!



திடீரென உடல் சிலிர்க்க, வியர்வை ஆறாய்ப் பெருக, எங்கே இருக்கிறோம் என்று கண்ணை விரித்துப் பார்த்தால், மரத்தினடியில், சிலுசிலுவென தென்றல் வீச, கண்ணயர்ந்து விட்டேன் போல............

Wednesday, December 1, 2010

தியானம்............

விடியற்காலை....பிரம்ம முகூர்த்த வேளை. தியானத்திற்கான அருமையான நேரம். வஜ்ராசனத்தில் பயிற்சிகள் முடித்து, சுகாசனத்தில் ப்ரணாயாமம் ...........அடுத்து தியானம்.ஆழ்ந்த தியானத்தில் கிடைக்கும் ஒரு இன்பநிலை அது எப்பொழுதும் வாய்ப்பதில்லை. அதற்கெல்லாம் இமயமலைக்குத்தான் போக வேண்டுமோ என்னமோ....

கண்களை மூடி மனதை ஒரு நிலைப்படுத்த முயற்சிக்கலாமென்றா.....ல் “கர, கர,கர”..........மின் விசிறி சத்தம். சரி அதைக் கடக்க முயன்று கொஞ்சம் சிரமம்தான்....அதைக் கடந்தால் கூ......குகூ..........சின்னக் குயிலின் திருப்பள்ளியெழுச்சி. அடுத்து சில வினாடிகள்........’கொக்கரக்கோ’......முருகனின் கொடியிலிருக்கும், செஞ்சேவலின் சுப்ரபாதம் கடந்து, எங்கோ தொலைவில், மசூதியில் அல்லாஹூ..........அக்பர்....கடந்து, தெரு முனை பால் அங்காடியின் சலசலப்பு......இப்படி தெரு முனை வரை பயணித்த மனது வெட்ட வெளியை நோக்கி பயணிக்க ஆரம்பிக்க......

கொஞ்சமாவது மண்டையில மூளை இருக்கா....உனக்கு.......என் தர்ம பத்தினரின் [ தர்ம பத்தினிக்கு ஆண்பால் அதுதானேங்க...]புகழாரம். அவரோட ஒரு முக்கியமான ஆவணத்தில் லேசா ஈரக்கையை வைச்சுட்டேன்....அதுக்கு போய் மண்டை மூளையெல்லாம் ஆராய்ச்சி பண்ணது கொஞ்சம் ஓவர்தானே.......சே, இப்ப போய் இதை எதுக்கு நினைக்கனும், நமக்கு ஒரு சான்ஸ் கிடைக்காமயா போகும்.....அப்ப வச்சிக்கலாம்....

அடடா....காஸ் சிலிண்டர் காலியாகி 5 ,6 நாள் இருக்குமே......இன்னும் புக் பண்ணவேயில்லையே......திடீர்ன்னு டிமாண்ட் வந்தா என்ன பண்றது. முதல் வேலையா காலைல ஆபீஸ் திறந்தவுடன் காஸ் புக் பண்ணனும்......

சரி இனிமேல் எதையும் பற்றி நினைக்கக் கூடாது.......ஓம்.....ஓம்......ஓம்......

டிங்....டாங்க்........வாசலில் அழைப்பு மணி.

அம்மா....கீரை. அடக் கடவுளே, மணி ஆறாயிடுச்சா.....அவசர அவசரமாக அள்ளி சுருட்டிக் கொண்டு....பிறகென்ன அன்றைய கடமைகள் அழைக்க தியானம் அவ்வளவுதான்.

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் அதிர்ஷ்டம் ஒரு முறைதான் கதவைத் தட்டும் என்பார்கள். அப்படித்தான் அன்று என் வீட்டு கதவும் தட்டப்பட்டது. குருஜீக்காக பக்கத்து ஊரில் ஏற்பாடு பண்ணியிருந்த சத்சங்கம் முடிந்து, அந்த ஒரு நாள் அவர் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டவர் வீட்டில் திடீரென ஒரு அசம்பாவிதம் நடந்துவிட, அதன் காரணமாக அவரை அங்கு தங்கவைக்க முடியாத சூழலில் அருகில் இருந்த எங்கள் குடில் நினைவிற்கு வர குருஜியின் புண்ணிய பாதம் படும் பாக்கியம் எங்கள் வீட்டிற்கும் கிடைத்தது.

மிக எளிய மனிதரான அவரைப் பார்த்தால் பெரிய மடத்திற்கு அதிபதியான குருஜீயாக தெரிய மாட்டார். சாதாரண வெள்ளை ஆடை உடுத்தி நம்மில் ஒருவராகத் தான் இருப்பார். பார்வையில் ஒரு தீட்சண்யமும், கண்டவுடன் கையெடுத்துக் கும்பிடத் தோன்றும் தேஜஸ்ஸீம் இருக்கும். தேவையில்லாமல் ஒரு வார்த்தைக் கூடப் பேச மாட்டார். மிக எளிய உணவுப் பழக்கம் இப்படி நிறைய அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். எந்த முன்னேற்பாடும் இல்லாமல் அவர் திடீரென வந்ததால், பரபரப்பு ஏதும் இன்றி அமைதியாகவே இருந்தது வீடு.

அந்த நேரத்தில் தான், அடுத்த வீட்டில் குடியிருக்கும், அமுதவல்லி, கையில் ஏதோ கிண்ணத்தில் தூக்கிக் கொண்டு வந்தாள். அமுதவல்லி, குடும்பமே கோவில், கொண்டவனே தெய்வம் என்று வேறு எதிலும் நாட்டம் இல்லாத, சதா குடும்ப வேலையிலேயே மூழ்கிக் கிடப்பவள். வேலை முடிந்தால் நிம்மதியாக தொலைக்காட்சி முன்பு அமர்ந்து விடுவாள். ஜோக்காக இருந்தால் வாய் விட்டு சத்தமாகச் சிரிப்பாள். அதே போல் சோகமான காட்சியென்றாலும் ஐயோ என்று சத்தம் போட்டு அழுது விடுவாள். எதையும் மனதில் போட்டு பூட்டி வைக்கத் தெரியாத வெள்ளந்தியான பெண். பல நேரங்களில் அவளைப் பார்த்து பொறாமையாகக்கூட இருக்கும் எனக்கு. ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் அவர்கள் வீட்டில். குடிகாரக் கணவர் ஒரு புறம், உடல் நலம் குன்றி, படுத்த படுக்கையாகக் கிடக்கும் மாமியார் ஒரு புறம்..... பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இப்படி பம்பரமாக சுழலும் அமுதவல்லி ஒரு நாள் கூட வாக்கிங் என்றோ, உடற்பயிற்சி என்றோ, தியானம் என்றோ நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. ஆனால் ஒரு நாள் கூட தலைவலி, கால்வலி என்று புலம்பியதும் இல்லை........சலித்துக் கொண்டதும் இல்லை. எப்பவும் உற்சாகம்தான், சுறு சுறுப்பு தான்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் வாழும் அறையில் [ அதாங்க ‘லிவ்விங் ரூம்’] குருஜீ புத்தகம் படித்துக் கொண்டு உட்கார்ந்திருந்ததைப் பார்த்தவள் கொஞ்சமும் தயக்கமில்லாமல், அட ஐயா நீங்களா......

உங்களை பல முறை டிவீல பாத்திருக்கேனே.....நல்லா இருக்கீங்களா..... என்றாள்.
குருஜீயும் வெள்ளந்தியான அவளுடைய பேச்சைப் பார்த்து லேசாக புன்னகைத்து விட்டு திரும்பவும் புத்தகத்தில் ஆழ்ந்து விட்டார்.

ஆனால் அவளோ அவரை விட்ட பாடில்லை. ஐயா இந்த சொஜ்ஜி அப்பத்தை சாப்பிட்டுப் பாருங்க நல்லா இருக்கும் என்றாள். நான் சுத்தமாத்தான் பண்ணியிருக்கேன், என்றாள்.

அவரும் திரும்பவும் புன்னகைத்துவிட்டு, இல்லைம்மா, நான் எண்ணெய் பலகாரமெல்லாம் சாப்பிடுவதில்லை, எனக்கு ஒத்துக் கொள்ளாது என்றார்.

திரும்பவும் அவள் கட்டாயப்படுத்த முயற்சிக்க நான் தலையிட்டு, ஒருவாறு அவளை அனுப்பி வைத்தேன்.

சரிங்க ஐயா நான் போய் வாரேன், எங்க வீட்டிற்கும் ஒரு நடை வாங்க ஐயா, என்று கூறிவிட்டு சென்று விட்டாள்.

வெகு நாட்களாக எனக்கிருந்த சந்தேகம். எப்படி இவளால் மட்டும் இவ்வளவு எளிதாக வாழ்க்கையை ஓட்ட முடிகிறது. தன்னைச் சுற்றி நடக்கும் எதுவும் தன்னை பாதிக்காமல் ஒதுக்கி வைக்கும் கலையை எப்படிக் கற்றாள் இவள்..... இன்று குருஜியிடமே கேட்டு தெளிவு பெறும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி பூரித்துப் போனவள் கேட்கலாம் என்று வாயைத் திறப்பதற்கு முன் அவளுடைய எண்ண ஓட்டங்களைப் புரிந்து கொண்டவராக குருஜி சொன்ன ஓரிரு வார்த்தைகளில் அவளுக்கு தெளிவானது.......

அதாவது தூய்மையான சிந்தனையுடன், எல்லாவற்றிலும் 100 சதவிகித ஈடுபாடு. எந்த வேலை எடுத்தாலும் அதில் நூறு சதவிகித முழுமையான ஈடுபாடு கொண்டு செய்தாலே அதுதானே தியானம். எந்தச் செயலாக இருந்தாலும் மனம் ஒன்றி செயல்பட்டாலே போதும் என்று அவர் கூறிய பிரம்மோபதேசத்தை இன்றும் கடைப்பிடிக்கும் எனக்கு மன நிம்மதி நிறைந்திருப்பதும் மறுக்க முடியாத உண்மை!!



Tuesday, November 30, 2010

பிள்ளை மனம்..........

சசி.....என்ன நான் வந்தது கூட தெரியாம அப்படி என்ன யோசனை.......?

ம்ம்.....ஒண்ணும்மில்லீங்க.......

ஏதோ யோசனையுடனேயே எழுந்து சென்றவள், மணக்க மணக்க ஃபில்டர் காபியுடன் வந்தாள்.

நந்துவிற்கு புரிந்து விட்டது..... ஏதோ விசயம் இருக்கிறதென்று.

அது சரி, சசி உங்க அம்மா வீட்டுக்கு போனியே, அங்கே ஏதாவது பிரச்சனையா? உங்க அப்பா நல்லாத்தானே இருக்கார்?

அதெல்லாம் ஒண்ணுமில்ல......

அவள் ஒன்றுமில்லையென இழுக்கும் போதே ஏதோ இருப்பது தெரிந்தது. சரி அவளே சொல்லட்டும், பார்த்துக்கலாம், என்று கையில் பேப்பரை, எடுத்து காலையில் படிக்காமல் விட்ட மீதியைத் தொடரலாம் என்றால்,

வந்தவுடனே,பேப்பர்தானா......என்று முறைத்தாள்.

சரி என்ன பண்ணலாம் சொல்லு. உங்க அப்பாவிற்கு கண் ஆபரேசன் பண்ண வேண்டும் என்றார்களே, எப்ப பண்ணிக்கப் போறார் உங்கப்பா.....? என்றான் நந்து.

ஆமா. அதைக் கேட்கத்தான் நானும் போனேன். ஆனா எங்க அதப்பத்திப் பேச நேரம்?

ஏன் என்னாச்சு, என்றான் நந்து அக்கரையாக.

என்ன சொல்றது.... அக்கா வந்திருந்தா...நல்லாத்தான் எல்லோரும் பேசிக்கிட்டிருந்தோம். திடீர்ன்னு ஒன்னுமே இல்லாத ஒரு சாதாரண விசயத்திற்கு, வேணுமின்னே சண்டை போடுறா. எப்பவும் ரொம்ப நிதானமா யோசிச்சு எல்லா காரியமும் செய்யக் கூடியவ, இன்னைக்கு ஏன் அப்படி நடந்துக்கிட்டான்னே தெரியல.......

சந்திர சேகர், ஒரு மத்திய அரசு வங்கி ஊழியர். நடுத்தரக் குடும்பம். அப்பா இறந்தவுடன், குடும்பச் சுமை முழுவதும் தன் மேல் விழ, இரண்டு தங்கைகள் திருமணம், தம்பி படிப்பு, இப்படி எல்லா பொறுப்பையும் முடித்து விட்டு, முன் தலை பாதி வழுக்கையானவுடன், தாய்க்குப் பிறகு சமைத்துப் போட ஆள் வேண்டுமே என்ற கவலையில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த வேளையில், சொந்தத்தில் , தாய் தகப்பன் இல்லாத ஒரு பெண் இருப்பது உறவினர் மூலம் தெரிய வர அவன் அம்மா அந்தப் பெண்ணையே பேசி முடித்து வைத்தார்கள். கணவன் கேட்கும் கேள்விக்கு மட்டும்தான் பதில் சொல்லத் தெரியும். மற்றபடி தனக்கென எந்த ஆசாபாசமும் இல்லாத ஒரு ஜீவன். உடுத்திக் கொள்ளும் உடையிலிருந்து, உட்கொள்ளும் உணவு வரை எல்லாமே கணவரின் தேர்வுதான். சுயமாக சிந்திக்கவே தெரியாத , தனக்கென்று எந்த விருப்பு, வெறுப்புமே இல்லாத, குடும்பமே கோவில், கணவனே கண்கண்ட தெய்வம் என வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்.

அமைதியான நிம்மதியான வாழ்க்கை. பெரிய எதிர்பார்ப்பும் இல்லை. அதே சமயம் கடமையிலிருந்து எள்ளளவும் விலகியதுமில்லை. சொல்லிக் கொள்ளும்படி பெரிதான ஆடம்பரமான வாழ்க்கை இல்லாவிட்டாலும், அமைதியான, கடனில்லாத, திட்டமிட்ட வாழ்க்கை. இரண்டு பெண் குழந்தைகள். இருவரையும் பட்டப் படிப்பு படிக்க வைத்து தன் சக்திக்கு இயன்ற வரை சீர் செய்து, திருமணம் செய்து கொடுத்தாகி விட்டது.

மூத்தவள் திரிபுரசுந்தரி [ தன் தாய் இறந்த அதே நாளில் பிறந்ததால் தன் தாயின் பெயரையே சூட்டினார் ], ஒரு தனியார் தொழிற்சாலையில் ஃபிட்டராக பணிபுரியும் ஒழுக்கமான ஒரு பையனுக்குக் கட்டிக் கொடுத்தார். ஆனால், இன்று மாப்பிள்ளை தானும் வாழ்க்கையில் மேல்படிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவலில் அந்த வேலையை விட்டு விட்டு, தனியாக தொழில் தொடங்கி ஏதோ செய்து கொண்டிருக்கிறார்.

இளைய மகள் சசிகலாவின் கணவன் ஒரு அரசு வங்கி ஊழியன். தன் தந்தையைப் போலவே, கணவனும் திட்டமிட்ட வாழ்க்கை வாழுவதில் சசிக்கு ஏகப்பட்ட பெருமை. தந்தை பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும், உடல் ஆரோகியமாகத்தானே இருக்கிறது, இன்னும் கொஞ்ச காலம் உழைக்கலாமே என்ற எண்ணத்துடன், தன் நண்பரின் ஜவுளிக் கடையில் கணக்கெழுதும் பணியைச் செய்து கொண்டிருக்கிறார். தந்தை இன்னும் ஓடி ஓடி உழைப்பது மகள்களுக்கு வருத்தத்தைக் கொடுத்தாலும், அவரால் வீட்டில் முடங்கி உட்கார முடியாது என்பதை புரிந்து கொண்டதால் முடிந்த வரை செல்லட்டும் என்று பேசாமல் இருந்தனர் இரு மகள்களும். வங்கியில் இருந்து வந்த பிராவிடண்ட் ஃபண்ட் மற்றும் கிராஜீட்டி பணமெல்லாம் பத்திரமாக வங்கியில் இருந்தாலும், தந்தை உழைத்து சாப்பிடுவதைக் காண ஒரு வகையில் பெருமையாகத்தான் இருந்தது இருவருக்கும்.

தன் மீது உயிரையே வைத்திருக்கும் மகள்களைக் காண நிலை கொள்ளாத பெருமை தந்தைக்கு . வாரத்தில் ஒரு முறையாவது பிள்ளைகள் வந்து தன்னைப் பார்க்காவிட்டால் துடித்துப் போய்விடுவார் அவர்.

அப்படித்தான் அன்றும்பிள்ளைகள் இருவரும் வந்தவுடன், மனைவியைக் கூப்பிட்டு அவர்களுக்குப் பிடித்ததைச் சமைக்கச் சொல்லிவிட்டு, பேரக் குழந்தைகளுடன் விளையாடச் சென்றுவிட்டார். சமையல் முடிந்து குடும்பத்துடன் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு விட்டு, பொழுது சாயும் வேளை வந்ததால், இருவரும் வீட்டுக்குக் கிளம்பும் நேரம்தான், மூத்தவள், காரணமே இல்லாமல் வாக்குவாதம் செய்து சண்டையை வளர்த்து விட்டாள். தந்தை எவ்வளவு சொல்லியும் கேட்காமல், விர்ரென்று கோபத்துடன் தான் சென்றாள். பிறகு சசி தந்தையை சமாதானம் செய்துவிட்டு வந்தாலும், அவர் முகத்தில் தெரிந்த வருத்தம் சசியை என்னவோ செய்தது.அதுதான் அவள் முகத்தில் குழப்பமாகத் தெரிந்தது.

குழப்பம் தீராமல் தன்னால் நிம்மதியாக உறங்கக் கூட முடியாது என்று உணர்ந்த சசி கணவனை தொந்திரவு செய்து உடன் அழைத்துக் கொண்டு அக்காவின் வீட்டிற்குச் சென்றாள். அங்கு போனால் அவளோ சண்டை போட்ட சுவடே இல்லாமல் மிக இயல்பாக குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தவள், இவர்களைப் பார்த்தவுடன், இனிமையாக வரவேற்று உபசரித்தாள்.

சசிக்கு குழப்பம் இன்னும் அதிகமாகிவிட்டது, அப்பா அம்மாவிடம் அப்படி சண்டை போட்டுக் கொண்டு வந்தவளா இவள் என்று சந்தேகம் வர திரும்பவும் ஒரு முறை அந்தச் சூழலை நினைவிற்குக் கொண்டுவர முயற்சித்தாள் சசி. சசியின் முகத்தில் இருந்த குழப்பத்தைக் கண்டும் கணாமல் இருந்தாள் திரிபு. அவளே காரணம் சொல்லுவாள் என்று பொறுமையாக இருந்து சலித்துப் போய் வேறு வழியில்லாமல் அக்காவிடம் கேட்டே விட்டாள் சசி. சகலைகள் இருவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி பற்றி தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுதுதான் அக்கா தான் சண்டை போட்ட காரணத்தைச் சொல்லக் கேட்ட சசிக்கு அழுகை வெடித்துக் கொண்டு வந்துவிட்டது.

ஆமாம் சசி எல்லாம் அப்பா, அம்மாவின் நன்மைக்காகத்தான் நான் அப்படி சண்டை போட்டுக் கொண்டு வந்தேன், என்றாள் அவள்.

மேலும் குழம்பிப் போனாள் சசி, என்ன அப்பா,அம்மாவின் நன்மைக்காகவா..... என்றாள் தயக்கமாக.

ஆம், சசி, உனக்கே தெரியும், மாமா பிசினசை டெவலப் பண்ணப் போறேன்னு சொல்லிக்கிட்டே இருக்காருன்னு.

ஆமா, அதுக்கென்ன இப்ப....

அங்கதான் பிரச்சனையே. அவருக்கு அப்பாவோட பணத்தைக் கேட்கலாம்னு ஒரு நினைப்பு இருக்கு. அப்பா சும்மா தானே பேங்கில் போட்டு வைச்சிருக்கார். பேங்க் வட்டி கம்மியாத்தானே வருது, நாம் அதிகமா வட்டி தரலாம்னு சொல்லறாரு. கட்டாயமா அப்பா ஒரு காலும் மாப்பிள்ளைகிட்ட வட்டி வாங்க சம்மதிக்க மாட்டாரு. அவங்களுக்கு கடைசி காலத்திற்கு இந்தப் பணம் தான் ஆதரவே, பிசினஸ் எப்படி இருக்கும்னு சொல்ல முடியாது. இந்த பணம் அவங்களுக்கு உயிர் நீர் மாதிரி. அதை நாம் ஒரு நாளும் வாங்கக் கூடாது. கொஞ்ச நாள் நான் வராம இருந்தா ஒன்னும் தப்பில்ல. அதுக்குள்ள மாமா பணத்திற்கு வேற ஏற்பாடு பண்ணிடுவாரு. என்ன மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கும், வேற வழியில்ல, என்று சொல்லும் போதே அவள் குரல் கம்மி, அழுகை வருவது போல் ஆகிவிட்டாள்.

தன் தமக்கையின் நல்ல உள்ளம் புரிந்தவுடன், அவள் மேல் இருந்த பாசம் இரட்டிப்பாக, ஆதரவுடன் அவளை அணைத்துக் கொண்டாள் சசி............

Friday, November 26, 2010

இந்தியத் திரு நாட்டின் மறு மலர்ச்சியில் பெண்கள் - பாகம் - 8.............






திருமதி ருக்மணி தேவி அருண்டேல்.
[ 1904 - 1986 ]


சங்கத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் பிப்ரவரி மாதம் 29 ஆம் நாள், லீப் வருடம், 1904 ஆம் ஆண்டு, பௌர்ணமி தினத்தன்று, மகாமகத் திருவிழாவின் போது, தன் பெற்றோருக்கு எட்டாவது குழந்தையாக பிறந்தார் ருக்மணி தேவி. இவருடைய தந்தையார் நீலகண்ட சாஸ்திரிகள், சமஸ்கிருத பண்டிதர்கள் வழி வந்த ஐதீகமான பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். தாயார் சேஷம்மாள், சிறந்த இசைக்குடும்பத்தில் இருந்து வந்தவராவார்.


ருக்மணி தேவி இருபதாம் நூற்றாண்டில் நம் இந்தியத் திருநாட்டிற்குக் கிடைத்த ஒரு கலைப் பொக்கிஷம் எனலாம். அக்காலங்களில், கோவில் திருவிழாவில் நாட்டியம் ஒரு முக்கிய பங்கு வகித்து வந்தது. இறைவனுக்கு படைக்கப்படும் ஆராதனையாகவே கருதப்பட்டு வந்தது. இவருடைய இளவயது பருவத்திலேயே, இவருடைய தந்தை, மகாராஜாவிற்காக கோவிலில் நவராத்திரி விழாவில் நாட்டியம் ஏற்பாடு செய்யும் பணியில் இருந்தபோது, ருக்மணியும் உடன் இருந்ததால், நாட்டியத்தால் பெரிதும்கவரப்பட்டார். மிகுந்த தெய்வ பக்தி கொண்டவராகவும், மதுரை மீனாட்சியம்மன் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தார் ருக்மணி தேவி.

ருக்மணி தேவியின் தந்தை பொதுப்பணித் துறையில் பொறியாளராக பணிபுரிந்து வந்ததால் அவர்களின் குடும்பம் ஊர், ஊராக மாற்றலாகிக் கொண்டிருந்தலால் இவரால்,
நிலையான ஒரு பள்ளியில் படிக்க இயலாமல் போனது. ஆகவே வீட்டிலேயே ஆசிரியர் வைத்து இவருக்கு கற்பிக்கச் செய்தார்கள். ஸ்ரீராம் என்றொரு சகோதரரும் இவருக்கு உண்டு. அவர், கும்பகோணத்தில் உள்ள தங்கள் மாமா வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்தார். இவர்கள் இருவரையும் எந்த கட்டுப்பாடும் இன்றி சுதந்திரமாக வளர்த்தனர் பெற்றோர். குடும்ப பாரம்பரிய ஒழுக்கம் இயல்பாகவே இவர்களிடம் இருந்தது. இசை, வயலின் வாசிப்பது போன்ற கலைகளையும் கற்றுவித்தனர் பெற்றோர்.இவருடைய தந்தை ஓய்வு பெற்ற பின் இவர்கள் செங்கற்பட்டில் குடியேறினர்.

ருக்மணி தேவியின் தாயார் இசைக் குடும்பத்திலிருந்து வந்தவராவார். தியாகராஜ சுவாமிகள் இவர் வீட்டு திண்ணையில் அமர்ந்து இளைப்பாறுவாராம். பல பிரபல இசைக்கலைஞர்கள் இவர் தாயாரின் வீட்டிற்கு வருவதுண்டு. அருணாசலக் கவிராயர், மகா வைத்தியநாத ஐயர், மற்றும் பலரும் ருக்மணியின் தாயார் இல்லத்திற்கு வருவதுண்டு. தன்னுடைய மூன்றாவது வயதிலிருந்தே , நவராத்திரி விழாவின் போது, புதுக்கோட்டை சமஸ்தானத்தில் மணிக்கணக்காக இசை நிகழ்ச்சியில் அமர்ந்து விழா முடியும் வரை முழுவதுமாக கேட்டு பழகியவருக்கு, பிற்காலத்தில் இசையின் ஆர்வம் முளை விட்டதிலும் ஆச்சரியமில்லை.

ருக்மணியின் தந்தை, கர்னல் ஆல்காட் என்பவரால் ஈர்க்கப்பட்டு, 1906 இல், பிரம்மஞான சபையில் சேர்ந்தார். அடையாரில் இவர்கள் குடும்பம் குடியேறியதுடன், ருக்மணிதேவி, திருவல்லிக்கேணியில் பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்றார். பிரம்மஞான சபையின் அருகிலேயே புதிய இல்லமும் கட்டப்பட்டு, அதற்கு ‘ புத்த விலாஸ்’ என்று பெயரும் சூட்டப்பட்டது. பிரம்மஞான சபையைச் சார்ந்த எலியனார் எல்டர் என்பவரும் அவரது சகோதரி கதலின் என்பவரும் கிரேக்க நடனம் ஆடுவதை இரசித்த ருக்மணிதேவி தானும் அதில் பங்கு கொண்டார். 1918 இல் ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய ‘மாலினி’ என்ற நாடகம் மேடையேறிய போது, ருக்மணிதேவி கேதாரகௌளா ராகத்தில் ஒரு பாடல், இசைப் பாத்திரத்தில் பாடினார்.

1917 ஆம் ஆண்டில், ருக்மணிதேவி பெனாரஸ் சென்றபோது டாக்டர் அருண்டேல் என்பவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிரம்மஞான சபையின் தளபதியான அருண்டேல் அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராவர். பெனாரஸில் [காசி] மத்திய இந்துக் கல்லூரியில் சில காலம் தலைவராகவும் இருந்தார். பின்பு டாக்டர் அன்னி பெசண்ட் அவர்கள் நடத்தி வந்த ‘நியூ இந்தியா’ என்ற பத்திரிக்கையின் பொறுப்பாளராக பதவி வகித்தார். பலத்த எதிப்புக்கிடையில் அன்னிபெசண்டின் உறுதியான உதவியுடன் அருண்டேலை திருமணம் செய்து கொண்டார் ருக்மணிதேவி.

1924 ஆம் ஆண்டு கணவர் அருண்டேலுடன் லண்டனில் தங்கியிருந்த போது, ரஷ்ய நடனக்கலைஞர் பவ்லோவை கொலெண்ட் கார்டன்ஸில் சந்தித்தார். இவருடைய பாலே நடனக்கலைத் திறமை ருக்மணியை பெரிதும் கவர்ந்தது. பாவ்லோ, பாலே நடன அரங்கை விட்டு வெளியே வந்த போது ருக்மணிதேவி, அவருடைய நடனத்தில் மெய்மறந்து, அவரிடம் தன்னால் பாவ்லோவைப் போல ஒரு காலும் நடனமாட முடியாது என்று கூறினார். இதனைக் கேட்ட பாவ்லோ, ருக்மணியிடம், ‘நீங்கள் நடனமே ஆட வேண்டாம், மேடையில் நடந்து வலம் வந்தாலே போதும், மக்கள் உறுகிவிடுவார்கள்’, என்று கூறினார். பாவ்லோ ருக்மணிதேவிக்கு நாட்டியத்தின் மீது தீவிர ஆவலை தூண்டிவிட்டார். பாலே நடனமும் கற்றார்.

ருக்மணிதேவியின் உள்ளத்தில் பரதநாட்டியம் பூரணமாக கற்க என்ற எண்ணத்தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. முறைப்படி நடனம் கற்க வேண்டி முதலில் மைலாப்பூர் கௌரி அம்மாளிடமும், பின்பு பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடமும் நடனம் பயின்றார். தன்னுடைய 31 வயதில் நாட்டிய அரங்கேற்றமும் நடத்தினார். பிரம்மஞான சபையின் வைரவிழா நிகழ்ச்சியில் அரங்கேற்றிய நடனம் பரத நாட்டிய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. நாட்டியத்திற்கு பெரும் எதிர்ப்பு இருந்த அந்த கால கட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமியும் நடனத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.

இந்தச் சூழலில் ருக்மணி அருண்டேலின் நிகழ்ச்சிக்கு சி.பி.ராமசாமி ஐயர், சிவசாமி ஐயர் மற்றும் சீனிவாச சாஸ்திரி போன்றவர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். அன்னி பெசண்ட் அம்மையாரும், டாக்டர் அருண்டேலும் இந்தியாவின் அரசியல் சுதந்திரத்திற்காக பெரும் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் இந்தியா சிறிது சிறிதாக தன்னுடைய தனித்தன்மையை இழந்து கொண்டு வருவதாக உணர்ந்த ரேணுகா அருண்டேல், நமது நாட்டின் கலாச்சாரத்தை மறுமலர்ச்சியடையச் செய்வதும் அப்போராட்டத்திற்கு இணையானது என்று கருதினார்.

மேலும் பரதத்தில் பூரணத்துவம் பெரும் ஆவலில், சுப்பிரமணிய சாஸ்திரியிடம் பரத சாஸ்திரம் குறித்த தெளிவான விளக்கம் பெற்றார். பாபநாசம் சிவன், காளிதாச நீலகண்ட ஐயர், டைகர் வரதாச்சாரியார் போன்றவர்கள் நாட்டியத்திற்கான பாடல் இயற்றியும் ஒருசில குறைபாடுகளை நீக்கியும் சில மாற்றங்களைக் கொண்டு வந்தனர். இதனால் நடனக் கலையின் நுட்பங்கள் பூரணத்துவம் அடைந்தது, என்றால் அது மிகையாகாது. இவருக்குக் கிடைத்த வரவேற்பினாலும், ஆதரவினாலும், நடனக்கலை பள்ளியை ஏற்படுத்த வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.

ருக்மணி தன் கணவர் அருண்டேல் தலைமைப் பதவி ஏற்றிருந்த காலத்தில், பிரம்மஞான சபையின் ஒரு மரத்தின் அடியில்,கலைக்கான பன்னாட்டு மையம் ஒன்றை நிறுவினார். தன் சகோதரரின் மகளான ராதா என்கிற ஒரே ஒரு மாணவி மட்டும் தான் முதலில் இருந்தார். அன்று ராதா அவரை அத்தை என்று அழைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த மற்ற மாணவர்களுக்கும் அவர் அத்தையாகவே ஆனார். உலகளவில் பல மாணவர்கள் பரதம் கற்கும் பொருட்டு வந்து சேர ஆரம்பித்தனர்.

டாக்டர் அருண்டேல், திரு நாராயணமேனன், திரு ராம கோட்டீஸ்வரராவ், திரு சந்திரசேகரன், பண்டித சுப்பிரமணிய சாஸ்திரி, திரு கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல பாரம்பரியக் கலைகளில் விருப்பமுள்ள சென்னையைச் சேர்ந்தவர்களின் ஆதரவுடன், ருக்மணி அம்மையார் “கலாஷேத்ரா”, என்ற கலாச்சாரப் பள்ளியைத் தோற்றுவித்தார்.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் நாட்டிய நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டிய நாடகங்கள் நடத்தப்பட்டது. ருக்மணிதேவி தன் மாணவர்கள் குழுவுடன், தென்னிந்தியப் பயணம் மேற்கொண்டு முதலில் குற்றாலத்தில், ‘குற்றாலக் குறவஞ்சி’, நாட்டிய நாடகத்தை நடத்திக் காண்பித்தார். பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி, காளிதாஸ் நீலகண்ட ஐயர், டைகர் வரதாச்சாரியார், பாபநாசம் சிவன் போன்ற இசைக்கலைஞர்கள் கலாஷேத்ராவில் பணியாற்றி இசையையும், நடனத்தையும் ஒருங்கே வளர்த்தனர். இவர் சமஸ்கிருத நாடகங்களையும், சமஸ்கிருத பண்டிதர்களின் துணை கொண்டு நாட்டிய நாடகமாக மேடையேற்றினார். ‘குமார சம்பவம்’ நாடகம் மிகப்பிரபலமானது. குறைந்த எண்ணிக்கையில் இருந்த மாணவர்கள், போகப் போக பல ஊர்களிலிருந்தும் அதிகளவில் வந்து சேர ஆரம்பித்தனர். பெரும்பாலான நடன வகுப்புகள், அடையாறு பிரம்மஞான சபையின் பெரிய ஆல மரத்தினடியிலேயே நடந்தது.

ருக்மணி, கலாஷேத்ராவில் ‘சங்கீத சிரோமணி’ என்ற படிப்பைக் கொண்டுவர பெரு முயற்சி எடுத்தார். லெட்சுமண சுவாமி முதலியார், லட்சுமி நாயர் தலாராம், வயலின் வெங்கட சுவாமி, புல்லாங்குழல் சஞ்சீவராவ், அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து கே.பொன்னையாபிள்ளை ஆகியோர் அடங்கிய ஒரு குழு கலாஷேத்திராவை பார்வையிட்டு, சங்கீத சிரோமணி படிப்பு ஆரம்பிப்பதற்கு அனுமதியும், சென்னைப் பல்கலைக் கழக அங்கீகாரமும் அளித்தது.

ருக்மணி தேவி அருண்டேல், பரதக்கலை மேம்பாட்டுப் பணிகளுடன், விலங்குகள் பாதுகாப்பு, சைவ நெறி முறை போன்ற பல நற்காரியங்களிலும் ஈடுபட்டிருந்தார். 1952 ஆம் ஆண்டு பாராளுமன்ற ராஜ்யசபை உறுப்பினராக, திரு ராஜாஜி அவர்களின் வற்புறுத்தலின் பேரில் இரண்டு முறை பதவி வகித்தார். வாயில்லாத ஜீவன்களான விலங்குகளின் மீது ஆழ்ந்த அன்பு கொண்டவராக இருந்த காரணத்தினால், 1960 ஆம் ஆண்டு, மிருகவதை தடுப்பு மசோதாவை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்தார்.மிருக நலக் கழகத்தின் முதல் தலைவரும் ஆனார்.

மைசூர் மகாராஜாவின் ஆஸ்தான வித்வானாக விளங்கிய தெய்வீக இசைப் புலமை வாய்ந்த வாசு தேவாச்சாரியார் அவர்களின் உதவியுடன், ‘வால்மீகி இராமாயணம்’ நடன நிகழ்ச்சியைத் தயாரித்தார்.

ருக்மணியும் டாக்டர் அருண்டேலும், 1941 இல் சாந்திநிகேதன் சென்று தாகூரைச் சந்தித்து அவர் விருப்பத்திற்கிணங்க, ஒரு அபிநயமும் பிடித்துக் காட்டினார். சாந்தி நிகேதனின் அமைதியும் அழகும் ருக்மணியை பெரிதும் ஈர்த்தது. அதன் காரணமாக திருவான்மியூரில் நிலம் வாங்கப்பட்டது.

கணவர் அருண்டேல், 1945 ஆம் ஆண்டு காலமானார். இதற்குப் பிறகு ருக்மணிதேவி, இந்தியக் கலாச்சாரத்தையும், மரபுகளையும் எடுத்துக் காட்டும், ‘ஆண்டாள் சரித்திரம்’, ‘சீதா சுயம்வரம்’, ‘சாகுந்தலம்’, ‘குமார சம்பவம்’, ‘கீத கோவிந்தம்’, ‘புத்த அவதாரம்’, ‘பக்த மீரா’, ‘சபரி மோட்சம்’, ‘குற்றாலக் குறவஞ்சி’, ‘குசேலோ பாக்கியானம்’ முதலிய நாட்டிய நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. ‘பாகவத் மேளம்’, என்கிற பழம்பெரும் கலைக்கு புத்துயிர் அளித்தார் ருக்மணிதேவி.

கலாஷேத்ரா, மற்ற குழுக்களிலிருந்து, தங்களுடைய தனிப்பாணியினால் மிகவும் வேறுபட்டு உள்ளது. 1934 இல் டாக்டர் அருண்டேல் பெசண்ட் உயர்நிலைப் பள்ளியை உறுவாக்கினார். சங்கரமேனன் பள்ளியின் முதல்வரானார். பின்பு டாக்டர் மரியா மாண்டிசோரியை வரவழைத்து மாண்டிசோரி கல்வி முறையை பள்ளியில் கொண்டு வந்தார். ஆசிரியர் பயிற்சி கல்வி துவக்கப்பட்டது.

நெய்தல் துறையைத் தோற்றுவித்ததோடு இயற்கை சாயம் ஆராய்ச்சி ஆய்வுக் கூட்டத்தையும் அமைத்தார். இங்கு உற்பத்தியாகும் சேலைகள் சிறப்பான தனிப்பட்ட வடிவமைப்பும், தனிப்பட்ட ரகத்தையும் கொண்டிருந்தன. கலாஷேத்ரா துணிகள் இன்றும் தனித்துவம் பெற்று விளங்குகின்றன.

கணவருடைய மறைவிற்குப்பின், பிரம்மஞான சபையின் வளாகத்திலிருந்து அவருடைய கலாஷேத்ரா, பள்ளி மற்றும் கைத்தறி குடிலை மாற்றப்படவேண்டும் எனக் கேட்டுக் கொண்டதன் பேரில் திருவான்மியூரில் வாங்கிய 60 ஏக்கர் நிலத்தில் கைத்தறி போர்ட் அளித்த நிதி உதவியின் மூலம் கைத்தறி குடில் மாற்றப்பட்டது. 1951 இல் பிரம்மஞான சபையிலிருந்து ஒரு சிறிய ஆலமரச் செடியை கொண்டுவந்து அதனை ஜனவரி முதல் நாள், தங்களது வளாகத்தில், ஒரு விழாவாகக் கொண்டாடி அதனை நட்டு வைத்தார். பல நாட்டு நண்பர்களும், தங்கள் நாட்டிலிருந்து மண் கொண்டுவந்திருந்தனர். கடற்கரை ஒட்டி இன்றும் பசுமையான மரங்களுடன் எழில் சோலையாக மாறியுள்ளது கண்கூடு. ஒரு சமயம் குடில் தீக்கிரையான போல பல்வேறு சம்பவங்கள் நடந்தாலும், ஏதோ ஒரு சக்தி அவரைக் காத்து, அரவணைத்து மீட்டு கொண்டு வந்து கொண்டிருந்தது.

தமிழ் நூல் நிலையம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. ருக்மணிதேவியின் சிறந்த சேவையைப் பாராட்டி பல்வேறு விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டது. இந்திய அரசாங்கத்திடமிருந்து, பத்மபூஷண் விருது, சங்கீத நாடக அகாடமியின் விருது, கலைத்துறையில் சிறப்பான சாதனைகள் புரிந்தமைக்கு மகாராஷ்டிராவில் இச்சல் கரஞ்சி விருது, விலங்குகள் நல அமைப்பிடமிருந்து, பிராணி மித்ரா விருது, தமிழ்நாடு இயல் இசை மன்றத்தின் தனிப்பெரும் கலைஞர் என்ற விருது, மத்திய பிரதேச அரசிடமிருந்து காளிதாச சன்மான் விருது, விலங்குகளுக்குச் செய்த சேவைக்காக அமெரிக்காவிலுள்ள பன்னாட்டு சைவ உணவு ஒன்றியம் அளித்த மன்கர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார் அம்மையார்.

மேலும் அமெரிக்காவின் வேய்ன் பல்கலைக்கழகம், கல்கத்தாவில் உள்ள ரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் பெனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகம் ஆகியவைகள் ருக்மணி அருண்டேலுக்கு டாக்டர் பட்டங்கள் அளித்து கௌரவித்தன.

ருக்மணி தேவி தயாரித்த 25 நாட்டிய நாடகங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான காவியங்களாகும். இவற்றின் தனிச் சிறப்பிற்கு முக்கிய காரணம், மரபு வழுவாத நாட்டியம் மட்டுமல்லாது சிருங்காரம், பக்தி, கலையம்சம், ஆன்மீகம், அழகு மொழியில் பாபநாசம் சிவன் போன்ற பிரபலமானவர்கள் அமைத்துக் கொடுத்த இசை போன்றவைகளாலும் ஆகும்.குடும்பப் பெண்கள் மேடையேறி நடனம் ஆடக்கூடாது என்ற கொள்கையை தகர்த்தெரிந்து, பரதக் கலைக்கு ஒரு மதிப்பையும், மரியாதையையும் ஏற்படுத்தியவர் ருக்மணிதேவி. அருண்டேல் அவர்கள். நாட்டியம், நாடகம் என்ற நவரச காவியத்தை முழுவடிவில் உருவாக்கி நடனக் கலையில் ஒரு மறுமலர்ச்சியை தோற்றுவித்தார்.

இவருடைய தன்னலமற்ற கலைச்சேவை இந்தியாவின் தலைசிறந்த ஒரு கலாச்சாரத் தூதுவராக உயர்த்தியது. உலகின் பல நாடுகளுக்கும் சென்று பரதக் கலையை பரப்பியுள்ளார்.

பிப்ரவரி மாதம் 1986 ஆம் ஆண்டு ருக்மணி தேவி அருண்டேல் இறைவனடி சேர்ந்தார். ‘அத்தை’ என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட ருக்மணி, எல்லாவற்றிலும் அழகான பகுதியை மட்டும் காணக்கூடிய சக்தி வாய்ந்த பார்வையைப் பெற்றிருந்தார். கவித்துவமும், அழகை ஆராதிக்கக் கூடிய தெய்வீகப் பண்பும்தான் இவரை வாழ்நாள் முழுதும் மகிழ்ச்சியாக வைத்திருந்தது எனலாம்.