ஷோபனா, அமெரிக்கா கிளம்புவதற்கு பேக்கிங் பண்ண ஆரம்பித்து விட்டாள். நேற்றுதான் வந்தது போல் இருக்கிறது. முப்பது நாட்கள் ஓடிவிட்டது.........
ஒரு வருடம் முழுவதும் அடக்கி வைத்திருந்த பாசம், மடை திறந்த வெள்ளம் போல, பொங்கிவர, முப்பது நாட்களும் முப்பது நொடியென சிட்டாய்ப் பறந்து விட்டது. மனம் மட்டும், பரபரப்பாக, செய்வதொன்றும் அறியாது, பரிதவித்துப் போகிறது. மகளையும், குழந்தைகளையும் பிரிய வேண்டுமே என்று நினைக்கும் போதே, அடிவயிற்றில் சிலீரென ஒரு உணர்வு. ஆனாலும் வேறு வழியில்லையே...... அதற்கு மேல் விடுமுறை இல்லை, விசா பிரச்சனை, குடியுரிமை..........இப்படி ஏதேதோ காரணங்கள் மட்டும், பதிலாகக் கிடைக்கும்.
" அம்மா, இதென்ன எல்லா சாமான்களையும் பேக்கிங் பெட்டியோடயே வைக்கிறீங்க? அதுவே பாதி இடத்தை அடைச்சிக்கும். அது மட்டுமில்லாம இருபது கிலோ வெயிட்தான் அலௌட், தெரியுமில்ல. எல்லா பேக்கிங்கையும் பிரிச்சு வையுங்கம்மா.....", என்றாள்.
" ஷோபி, என்னம்மா குழந்தையோட விளையாட்டுச் சாமானையெல்லாம் வெளியே எடுத்து வைக்கிறே?".
" என்னம்மா, பெட்டி முழுக்க டாய்ஸ் மட்டுமே வைக்க முடியுமா? வேணுங்கற டாய்ஸ் அங்கேயே நிறைய வாங்கி வெச்சிருக்கேன். அங்க ஈசியா கிடைக்காத பொருளை மட்டும் தான் வைக்கணும். அடுத்த முறை வரும்போது, பாத்துக்கலாம்".
" அடுத்த முறை வரும் போது குழந்தை பெரியவனாயிட்டா, இதையெல்லாம் சீந்த மாட்டானே?"
" அதுக்கென்ன பண்ண முடியும்? நீங்க வாங்கும்போதே அதை யோசிச்சிருக்கணும்".
" ஏம்மா அடுத்த முறை நீ வர்றதுக்குள்ள நம்ம பப்பு எங்களையெல்லாம் மறந்திடுவானில்ல? திரும்ப புதுசா பார்க்கிற மாதிரி பார்ப்பான் இல்ல?".
" அதெப்படிம்மா, நாமதான் அடிக்கடி, சாட்டிங் பண்ணறோம், வெப் கேமரா மூலம் பார்த்துக்கறோம், நினைச்சா போன்ல பேசறோம்".
" இருந்தாலும்...........".
" மம்மி.........நோ செண்டிமெண்ட்ஸ்...............கொஞ்சம் பிராக்டிகலா இருங்க. ரொம்ப ஓவர் ஆக்டிங் பண்ணாதீங்க", என்றாள், கடுமையாக. மறு வினாடி மாலதியின் முகம், வாடிய மலராக துவண்டுவிட்டது.
ஆனால் ஷோபாவோ எந்த பிரதிபலிப்பும் இல்லாமல், " பரத் கிளம்புங்க, ஷாப்பிங் போகலாம்", என்று கிளம்பி விட்டாள்.
காரில் ஏறிய மறு வினாடி, அடக்க முடியாதவளாக குலுங்கிக், குலுங்கி அழ ஆரம்பித்தாள் ஷோபனா.
" ஏய் ஷோபி, என்னது இது, ஏன் இப்படி அழறே........" என்றான் பரத் ஒன்றும் புரியாமல்.
" மம்மிகிட்ட ரொம்ப கடுமையா பேசியது, மனதுக்கு ரொம்ப பாரமா இருக்கு பரத்", என்றாள் விசும்பலுடன்.
" பின்னே, எனக்கே நீ பேசியது ரொம்ப சங்கடமா இருந்திச்சு, நீ ஏன் அப்படி பேசினே?", என்றான்.
" மம்மிக்கு ஒரு சின்ன ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்கத்தான் .............. இல்லேன்னா, நாம கிளம்பறத நெனச்சி அவங்க அழ ஆரம்பிச்சிட்டாங்கன்னா, என்னால தாங்க முடியாது............ நாம ஊருக்கு கிளம்பற நேரத்துல ரொம்ப வேதனைப்பட்டு, உடம்பை கெடுத்துக்குவாங்க........ அதைக் கண்ட்ரோல் பண்ணத்தான் அப்படி பேசினேன் ", என்றாள் அழுகையினூடே.
" ஏய், மாலதி, அவதான் அவ்வளவு திமிறா பேசிட்டுப் போறாளே, நீ ஏன் வீணா அழுதுக்கிட்டிருக்கே?".
" இல்லைங்க, ஏதோ டென்சன்ல பேசிட்டா, ஊருக்குப் போயும் அதை நினைச்சி, நினைச்சி வருத்தப்படுவாளே, அதைத்தாங்க என்னால தாங்க முடியல", என்றாள்..............