Monday, March 24, 2014

மொட்டைத் தெங்கு



பவள சங்கரி



முன் குறிப்பு :  காட்டை அழித்து நாட்டை விரிவு படுத்தும் கூட்டம் ஒரு புறமும், வாய்க்கால் வரப்பு தகராறு என்ற பெயரால் தோட்டத்தையே அழிக்கத் துணியும் கூட்டம் இன்னொரு புறமும், இவையெல்லாம் போக மரத்தை வெட்டி பணம் சம்பாதிக்கும் கூட்டம் ஒரு புறமும் இப்படி ஆளாளுக்குப் பங்கு போட்டுக்கொண்டு நம் வாழ்வாதாரமான இயற்கை வளங்களை அழித்துக்கொண்டிருப்பது வேதனைக்குரியது. எத்தனை வேளான் விஞ்ஞானிகளும், நம்மாழ்வார்களும் உயிரைக் கொடுத்துப் புலம்பினாலும் கேட்பார் இல்லை. நாட்டில் நீர்வளம் மிக மோசமாகக் குறைந்து கொண்டு வருகிறது. இந்த ஆதங்கத்தில், அந்த இயற்கையே நம்மை எதிர்த்து நிற்கத் துணிந்தால் என்ன ஆகும் என்ற ஒரு சிறு கற்பனைதான்.  செய்தித்தாள் செய்திகளுக்கும், படங்களுக்கும் நன்றி.
பரட்டையாய்ப் படர்ந்துக் கிடந்த, காயும் பிஞ்சுமாக செழுமையாகக் குலை தள்ளிக் கொண்டு உயர்ந்து நின்றவைகளை, ஈவு இரக்கமில்லாமல்  குரல் வளையுடன் மொத்தமாய் வெட்டப்பட்டு முண்டமாய், வெதும்பி வேதனையில் துடித்துக்கொண்டிருப்பது இன்று நேற்று அல்ல. கடந்த சில மாதங்களாகவே இப்படித்தான்.  ஒரு குடும்பமாக ஒன்றாகக் கூடிக் குலவிக் கொண்டிருந்த அந்தத் தென்னை மரங்கள் இன்று அழுது அரற்றிக்கொண்டிருக்கின்றன.
ஏன் இப்படி ஒரு நிலை இவைகளுக்கு? பெரிய சர்வதேச பிரச்சனை இல்லை என்றாலும் அதை அந்த அளவிற்கு உயர்த்திவிட்ட மன விகாரங்கள்! காக்கப்பட வேண்டிய பெரிய அரச இரகசியமோ என்றால் அதுவும் இல்லை.  ஏதோ நாட்டையும், தம் இனத்தையும் காக்க வேண்டிப் போராட்டமா என்றால் அதுவும் இல்லை. எல்லாம் வழக்கமாக நடக்கும் பங்காளிச் சண்டை, வரப்புத் தகராறுதான் என்றாலும் இது ஒரு வம்சத்தையே வேரறுத்துவிட்டதே.  நம் வாழ்வாதாரத்தை முடித்துக்கட்டி விட்டு  இன்னும் நம் மூலம் கிடைக்கும் பலாபலன்களை அன்றாடம் சாப்பாட்டு மேசையில் அனுபவித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள் வெட்கங்கெட்டவர்கள்.