Monday, November 16, 2015

மௌனம் உறைந்த மனம் (வரலாறு அல்ல.. கற்பனைக் கதை)


பவள சங்கரி


மனத் தெளிவு மட்டுமே ஒரு சாமான்ய மனிதனை புத்தனாக்குகிறது. ஒரு புத்த பிக்குனி கதை கேளுங்கள்.

இயற்கை வளமும், இறை நலமும் ஒருங்கே உறையும் உன்னத மலை அது. அமைதி.. அமைதி.. எங்கும் பேரமைதி.. அமைதியின் அழகில் இறைமையின் வடிவாக வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலை. தெளிந்த நீரோடையின் இதமான குளிர் தென்றல் சுகமாக அணைத்திருக்க, பதமான பல்சுவையமுதாய் புள்ளினங்களின் மெல்லிய கீதங்கள். இரைச்சலற்ற இனிய நாதங்கள். இவையெல்லாம் மகுடமாய் அலங்கரிக்க மகாராணியாய் வீற்றிருக்கிறாள் அம்பிகைதேவி, பூத்துக்குலுங்கி மணம் பரப்பிக்கொண்டிருக்கும் பசுமை வேம்பின் தண்ணிழலில் தனி இராச்சியம் அமைத்தபடி ஆனந்த தியானத்தில் அமைந்திருந்தாள். எண்ணமெல்லாம் இசைக்களிப்பு! சுவாசமெல்லாம் கானத்தின் சிலிர்ப்பு! நேசமெல்லாம் இராகாலாபனையின் உயிர்ப்பு! உண்டியும், உறக்கமும் கூட மறந்த மோன நிலை! இசையே உணவாய், உணர்வாய் உயிர் மூச்சாய் உறைந்திருக்கும் உன்னத நிலை! இதுதான் அம்பிகைதேவியின் இறை நிலை. அவளின் அன்றாட வாடிக்கை. எத்தனைக் காலமாய் இப்படி கிடக்கிறாளோ, அறிந்தவர் எவரும் இலர். பலர் கண்களுக்கு கந்திற்பாவையாகத் தெரிபவள், சிலர் பார்வையில் மட்டும் உயிருள்ள ஓவியமாய், உன்னதக் காவியமாய் காட்சியளிப்பவள். கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று காலம் ஓடிக்கொண்டிருந்தது. இளவரசன் இமயவர்மன் சிறந்த பௌத்த நெறியாளர். கருணையே வடிவாக, கடமையே உறவாக, மக்கள் நலமே பெரிதாக நினைத்து வாழ்பவன். அவனுடைய அன்றாடப் பணிகளுள் முக்கியமான ஒன்று அம்பிகைதேவி தரிசனம். பெரும்பாலும் கந்திற்பாவை காட்சியே காணக்கிடைத்தாலும் பலமுறை கனவிலும், சிலமுறை அரை நினைவிலும் அம்பிகைதேவியின் உருவைக் கண்டவன். அந்த தீப ஒளியில் கண்கள் கூசிட உள்ளம் மட்டும் பட்டொளியாய் பளிச்சென்று மின்ன, சிறிது சிறிதாக ஞானம் பெற்றவாறு புத்தம் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தவன். புரியாத புதிர் ஒன்று கந்திற்பாவையிடம் இருந்ததையும் கண்டவன், என்றேனும் ஓர்நாள் அம்பிகைதேவி தனக்கு விடை பகர்வாள் என்று ஞானம் பெறக் காத்திருந்தான். தேடல் தொடர்ந்தவண்ணம் இருந்தது. கந்திற்பாவையின் கழுத்தைச் சுற்றிய யாழிசைக் கருவியின் உறுதியான நரம்புகள் நீண்டு நெளிந்து, சில நேரங்களில் இறுக்கியவண்ணம் இருந்தது. ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு வண்ணம் காட்டி காண்போரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்த அந்த மென்நரம்புகள் இடையூறாய் இருப்பதாக நினைத்து போகவர விலக்க நினைக்க, இமயவர்மனைத் தீண்ட விட்டால்தானே.. இறுக்கிய இசை நரம்பிற்கு இதயமில்லையோ என்றுகூட கருவினான் அவன். கேள்வி கேட்பாரும் இல்லாமல் பதிலளிக்கவும் முனையாமல் அசையா சடமாக கந்திற்பாவை … பரபரத்து துடித்த கையை , மடக்குவதைக் காட்டிலும் வேறேதும் செய்ய இயலா நிலை இமயவர்மனுக்கு. விடிவு காலம் வர வினையாவும் தீரும் என்று காத்திருந்தான் அவன்.

தமிழ் மொழியின் சொல்வளம்!

பவள சங்கரி


ஒரு பொருளின் தன்மைக்கேற்ப அப்பொருளின் பெயரைக் குறிக்க பல சொற்கள் பயன்படுத்துவது நம் மொழியின் தனிச்சிறப்பு. இது வேறு எந்த மொழியிலும் காணமுடியுமா என்பது ஐயமே… உதாரணமாக,
இலை என்று எடுத்துக்கொண்டோமானால் அதற்கு எத்தனை வகைப் பெயர்கள் பாருங்கள்…
நெற்பயிர் இலைகள் – தாள்
கருப்பஞ்செடி இலைகள் – தோகை
தென்னை, பனை மர இலைகள் – ஓலை
தாழை இலைகள் – மடல்
காய்ந்த இலை – சருகு
சில வகை இலைகளை – தழை என்கிறோம்..

வெண்பனி மனிதன் (கொரிய மொழிபெயர்ப்பு கவிதை)


பவள சங்கரி

சதாசர்வமும் பஞ்சுப்பொதியாய்
பனித்திவலைகள் பெறுவதினிது.
செல்லக்குட்டி நாய்போல்,
மீண்டும் நானொரு சிசுவாய் ஆவதினிது.
கூதாளிக்கால நெட்டை மரங்களினூடே
நோக்கமேதுமின்றி கடப்பதுவே
அற்புதமாம்.
அஃதேபோல் வெண்மை பாதச்சுவடுகளாய்
தனித்திருப்பதும் அற்புதமே.

எம்மை வாழ்த்தும்பொருட்டு
கூதாளியின் விளிம்பில் நிற்கும்
விருப்பமான ஒருவருடனே - எல்லோரும் விரும்பும் அந்த ஒருவருடனே-
இருப்பதும் இனிமையே.
ஒருவரையொருவர் மெலிந்த முதுகுகளை தட்டிக்கொடுத்தவாறு
உளமார்ந்து நகைப்பதும்
உன்னதமே.
இப்பஞ்சுப்பொதி பனித்திவலைகள்போல்
உள்ளார்ந்து நகைத்தலும்
உன்னதம்.
அற்புதம் -
வேதனையின் உச்சத்தில் நொந்ததோர்முறை
சோகத்தின் உச்சத்தில் நொந்ததோர்முறை
ஏழ்மையின் உச்சத்தில் நொந்ததோர்முறை
அதுவும்கூட அற்புதமே.
இவையனைத்தையும் வெண்மையாக்கும்
முடிவில்லாமல் முகிழும் பஞ்சுப்பொதி பனித்திவலைகள்
அற்புதமே.
அதீத
அறிவீனம்தான்,
ஆயினுமோர் வெண்பனி மனிதனாவதில்தான் எத்துனை ஆனந்தம்!