Saturday, January 8, 2022

பாரம்பரிய உடையில் தைப்பொங்கல்!

 

 



 

ஒவ்வொரு மனித சமுதாயத்திற்கும் ஒரு பண்பாடு உண்டு. பேசும் மொழி, உண்ணும் உணவு, வாழும் முறை போன்றனைத்தையும்விட அணியும் ஆடை அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆடை என்பது ஒருவரின் முக்கியமான அடையாளம். அவரின் தன்மை, தரம், சார்பு, இயல்பு என அனைத்தையும் எடுத்துக்காட்டுவது. ஒருவருடைய ஆடையே அவருடைய முழுமையான பண்பாட்டை வெளிப்படுத்துகிறது. ஒருவர் அணியும் ஆடையை வைத்தே அவர் வாழும் நாட்டின் தட்பவெப்ப நிலையைக் கணிக்க முடியும் எனும்போது, தமிழ்நாடு போன்று வெப்பமான சூழலில் வாழ்பவர்கள் லெக்கின்ஸ், ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை அணியும்போது அவை உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும். தமிழ்ப் பெண்கள் சேலை அணிவதும் ஆண்கள் வேட்டி அணிவதும் பன்னெடுங்காலமாகப் பின்பற்றப்படும் இப்பழக்கத்தின் பின்புலம் தமிழர் பண்பாட்டின் ஒரு கூறு.

எனவே தைப்பொங்கல் போன்ற பண்பாட்டு பண்டிகைகளின் போதாவது நாம் வேட்டி சேலை அணிந்து கொண்டாடுவோம். இதுவே நம் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் விதமாக அமையும். நம் பண்பாட்டு கொண்டாட்டங்களில் பட்டாடைகளுக்கு பிரத்யேக இடமுண்டு.

 

காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரிப் பொட்டும் வைத்து

தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்

அந்தத் திருமகளும் உன்னழகைப் பெறவேண்டும் ….

 

என்று வண்ணமிகு ஒளியில்  மின்னும் மேடையின் பின்புலத்தில் மென்மையாக ஒலித்துக்கொண்டிருக்க அழகிய மங்கையர் வண்ண வண்ணப் பட்டாடை அணிந்து அணிவகுத்து நிற்கின்றனர். பார்ப்பவர்களின் கண்களில் வியப்பும், ஆனந்தமும் மாறி மாறி நாட்டியம் பயின்று கொண்டிருந்தன.

 

அன்று கல்லூரிகளுக்கு இடையிலான பிரம்மாண்ட தமிழர் மரபுத் திருவிழா நிகழ்வு. எப்போதும் லெக்கின்சும், ஜீன்சும், சராரா, சுடிதார் என்று போட்டுக்கொண்டு சுற்றிக் கொண்டிருந்த இளஞ்சிட்டுகள் அன்று தமிழர் பாரம்பரிய உடையான பட்டுப்பாவாடை தாவணி, பட்டுச் சேலை, நகை, நட்டு, பூ, பொட்டு என அழகிய பாரம்பரிய உடைகளில் மேடையை அலங்கரித்துக் கொண்டிருந்தனர். ஃபிரீ ஹேர் என்று சொல்லிக்கொண்டு தலைமுடியை விரித்துவிட்டுக் கொண்டிருந்தவர்கள் அழகிய பின்னலிட்டு, கண்களில் மையிட்டு, பொன்னகையும் போட்டு காளையரை கவர்ந்திழுத்துக் கொண்டிருந்தனர். அந்தப் பெண்களின் கண்களின் இருந்த பூரிப்பும், கலாச்சாரப் பெருமையும் அவர்களின் தன்னம்பிக்கையை மேலும் ஒரு படி உயர்த்திக்காட்டியதும் உண்மை. நளினமே இல்லாமல் ஆண்களைப்போல் நடை, உடை, பாவனை என்று இருந்த கன்னியரின் அச்சம், மடம், நாணம், பயிர்ப்புடன் கூடிய வித்தியாசமான நடை  அனைவரையும் கவர்ந்திழுக்கத்தான் செய்தன. அவரவர்களின் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பான பாரம்பரிய உடைகளை அணியும் பெண்ணின் மதிப்பு எப்போதும் ஒருபடி கூடுதலாக இருக்கும் என்பதே உண்மை. நவநாகரிக மேலைநாட்டு உடைகளை அணியும் பெண்களை காட்சிப்பொருளாக இரசிக்கும் இளைஞர்கள் பாரம்பரிய உடையில் இருக்கும் பெண்ணின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கித் திரிவதையும் காணமுடியும். அதேபோல் இப்படி பாரம்பரிய உடையில் இருக்கும் பெண்ணைத்தான் மகாலட்சுமி போல் கையெடுத்து கும்பிடத்தோன்றும் வகையில் இருக்கிறாள் என்பார்கள். இதெல்லாம் அவரவர் இனம் சார்ந்த இயல்பான உளவியல் கூறுகள்.

 

கலாச்சாரத்திற்கும் பாரம்பரியத்திற்கும் பெயர்பெற்ற நம் இந்தியாவில் எப்போதும் பட்டுப்புடவைகளுக்கு என்று தனிப்பெருமை உண்டு. உலகளவில் பட்டுப்புடவைகள் தயாரிப்பில் இந்தியா 2வது இடத்தில் இருக்கிறது. பட்டுப்புடவையில் பல்வேறு ரகங்கள் உள்ளன. இன்றைய நவீன உலகிலும் உடைகளிலும் நவீன வளர்ச்சியை எட்டியிருக்கும் இக்காலகட்டத்திலும்கூட பெண்களுக்கு பட்டுப்புடவைகள் மீது அலாதி பிரியம் உண்டு.  மன்னர் காலத்திலேயே அரச பரம்பரையினரின் கௌரவ உடையாக மகுடம் சூடியிருந்தவை வண்ண வண்ண பட்டுப் புடவைகள்.  பல்லவப் பேரரசில் தலைசிறந்த நகரமாக விளங்கியது காஞ்சிபுரம். இந்த நகரமே பாரம்பரியம் மிக்க கோவில்களுக்கும், பட்டுப்புடவைகளுக்கும் பெயர்பெற்றது. தூய்மையான மல்பரி எனும் பட்டு நூலில் இருந்து பட்டுப் புடவைகள் தயாரிக்கப்படுகின்றன. இதுவே  இந்தப் பட்டுப்புடவைகளின் தனிச்சிறப்புமாகும். மன்னர் காலந்தொட்டு இன்றளவிலும் தமிழர் திருமணங்களில் தவிர்க்க முடியாத பாரம்பரியச் சின்னமாக விளங்குவது காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள். இது கோயில் நகரமாகவும் இருப்பதால், இங்கு உள்நாடு, வெளிநாடு என ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவதோடு பட்டுப் புடவைகளை நினைவுச் சின்னமாக பெருமையுடன் வாங்கிச் செல்வதையும் காணமுடிகின்றது.

 

பட்டுப்புடவை என்பது எல்லாப் பெண்களுக்கும் பிடித்தமான பாரம்பரிய உடை. பாரம்பரியத்தை விரும்பி மதிக்கும் அனைத்து பெண்களும் பட்டுப்புடவையை கட்டாயம் விரும்புவார்கள். 

பொதுவாக தென்னிந்தியத் திருமணங்கள் பெரிதும் மாறுபட்டவை. திருமண உடை என்றாலே பாரம்பரியமான நெசவுப் புடவைகளான  பட்டின் பல வகைகளை அணிந்து கொள்வதைப் பெருமிதமாக நினைக்கிறார்கள். பெண்களின் திருமணக் கனவுகளில் முதன்மை பெறுவதும் இந்தப் பட்டாடைகளே.  நவீன உடை அணியும் வழக்கம் கொண்டவர்களாக இருந்தாலும் திருமணங்களுக்கு பட்டுச்சேலைகள் அணிந்து செல்வதையே  பெருமையாக நினைத்தாலும், உடுத்த வசதியாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களும் பட்டு சுடிதார் உடன் டிசைனர் பட்டு துப்பட்டாவை அணிந்து கொள்கிறார்கள்.

 

 குடும்ப விழாக்கள் என்றாலே பலருக்கு ம்மை அறியாமலேயே உற்சாகம் தொற்றிக் கொள்வதன் காரணம் பல காலமாக உடுத்தாமல் உறங்கிக் கொண்டிருக்கும் பட்டாடைகளின் நினைவு வந்து எதை உடுத்தலாம் என்ற மிகப் பெரிய ஆர்வமும் எழும். அதுவும் திருமணவிழா என்று வந்துவிட்டால் கல்யாண வீட்டுக்காரர்களைப் போலவே விருந்தினர்களாகச் செல்பவர்களுக்கும் புதிய வடிவில் மற்றவர்கள் பார்த்து பொறாமைப்படும் வகையில் தாமும் அணிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் உந்தித்தள்ளுவதும் இயற்கைதான். உலகின் எந்த மூலையில் நடக்கும் இந்தியத் திருமணம் என்றாலும், அல்லது பாரம்பரிய விழாக்காலக் கொண்டாட்டங்கள் என்றாலும் அங்கு இறக்குமதி செய்யப்பட்ட பட்டுச்சேலைகள், சல்வார், பட்டுப் பாவாடை என்று அவரவர் சமூகக் கலாச்சாரத்திற்கு ஏற்றாற்போல் உடைகளை அணிந்து அசத்துகிறார்கள்..

 

தமிழ்நாடு என்றாலும் தமிழர்கள் என்றாலும் முதன் முதலில் அனைவர் நினைவிலும் வருவது அவர்களின் பாரம்பரிய ஆடையான புடவைகள்தான். புடவைகளை தங்களுடைய கலாச்சார அணிகலனாக மாற்றியவர்கள் தமிழர்கள். அதுவும் பட்டுப் புடவையென்பது பெண்களின் மங்கலச் சின்னமாக உயர்ந்து நிற்பது. அந்த வகையில் இன்றும் நம் தமிழ் திருமணங்களில் பட்டுபுடவைகள் தான் முன்னிலை வகிக்கின்றன.

 

பெண்கள் மட்டுமல்லாமல் பெண் தெய்வச் சிலைகளுக்கும் பட்டாடை உடுத்தி அழகு பார்ப்பதில் நம் தமிழர்களுக்கு தனித்திறமையும் உண்டு. தம் செல்லப்பெண் போலவே எண்ணி, அலங்கரித்துக் கொண்டாடும் வழமையும் இருக்கத்தான் செய்கின்றன.

 

சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி

சிவகங்கைக் குளத்தருகே ஸ்ரீதுர்கை சிரித்திருப்பாள்

பெண்ணவளின் கண்ணழகைப் பேசி முடியாது

பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது (சின்னஞ்சிறு)

மின்னலைப் போல் மேனி அன்னை சிவகாமி

இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்

பின்னல் சடை போட்டு பிச்சிப்பூச் சூடிடுவாள்

பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள் (சின்னஞ்சிறு)

 

பெண்மையின் இலக்கணத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டும் அற்புதமான பாடல் இது. பெண் என்பவளே சக்தியின் வடிவம் அல்லவா. அறிவைப் போலவே அழகிலும் குறைந்தவளில்லை. குழந்தையாகட்டும், குமரியாகட்டும் அன்றி முதுமையின் வாசலில் நிற்பவராகட்டும்பெண் என்றாலே தனிப்பட்ட ஒரு அழகும், நல்ல கலையுணர்வும்உடன் பிறந்தவைகளாகவே இருக்கின்ற. இதற்கு அவர்கள் தங்கள் உடைகளைத் தேர்வு செய்யும் பொறுமையே சாட்சி.

 

பெரும்பாலான நாடுகளில் பூப்பு நன்னீராட்டு விழா போன்று பெண்களுக்கான தனிப்பட்ட கலாச்சார சடங்குகள் கூட வழமையாக நடந்து வருகின்றன. இதற்கான பாரம்பரிய உடையான பட்டும் அவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றது. சாத்திரங்கள் சொல்லும் சான்றுகள் பல இருப்பினும்பௌதிக மாற்றங்கள் பெண்களுக்கு பெருமளவில் வெளிப்படும் அந்தத் தருணத்தை உற்சாகமாக வரவேற்று கொண்டாடும் நிலையில் நம் பாரம்பரிய ஆடைகள் தனிப்பட்ட பெருமை பெறுகின்றன.

 

நம் தமிழ்நாட்டுக் கிராமங்களில் பெண் பூப்படைந்துசடங்குகள் செய்யும்போது, பெண்ணிற்கு நம் பாரம்பரியப் பட்டாடையை அணியச் செய்து குலவை ஒலியெழுப்பி ஊருக்கெல்லாம் அறிவிப்பார்கள். ப்பானியர்கள் பெண்ணின் பருவ வயதை அறிவிக்கும் முகமாக அவளுடைய பதினைந்தாம் வயதில் கிமோனோ உடை அணிவித்து விழாவாகக் கொண்டாடுகிறார்கள். ஆப்பிரிக்க நாட்டிலும் பெண் பூப்படையும் நேரத்தில்  பல வித்தியாசமான சடங்குகளை நடத்துகின்றனர். அமெரிக்காவின் ஹிஸ்பானிக் என்றொரு சமூகத்தில்பெண்களின் பதினைந்தாவது வயதில் அவர்களுக்கு அழகிய உடைகள் அணிவித்து அழகாக மெழுகுவர்த்திகள் ஏற்றி சமயப் பிரார்த்தனையுடன் பெண்கள் பருவத்திற்கு வரும் அந்த நிகழ்ச்சியைக் கொண்டாடுவார்கள். இப்படி அவரவர் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு அவரவர் உடைகள் பெரும் பங்கு வகித்தாலும் அவர்களிடையேயும் நம் பாரம்பரியப் பட்டாடைகளின் தனித்தன்மை பெரிதும் போற்றப்படுகிறது என்பதே உண்மை.

 

கலாச்சாரம் என்பது வாழ்வியல் பழக்கவழக்கங்கள், ஆடை அணிகலன்கள், கலைகள் போன்றவற்றின் மூலம் வெளிப்படும் மக்களின் பிரதிபலிப்பு. நாகரிக வளர்ச்சியும் பிறமொழிக் கலப்புகளும் மேற்கத்திய கலாச்சார ஊடுருவல்களுமே இன்றைய அடிப்படை மாற்றத்திற்குக் காரணம். எந்த ஒரு கலாச்சார முறையும் தனிமனித அனுபவத்துக்குள் வந்தால் மட்டுமே அந்த பாரம்பரியம் எப்போதும் உயிர்ப்போடு இருக்கின்ற ஒரு வாழ்க்கை முறையாக மாறும். பண்பாடு அல்லது கலாச்சாரம்  என்பது பொதுவாக மனித செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புகளைக் குறிக்கின்றது.  உலகுக்கே பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் சொல்லிக் கொடுத்த நம் தமிழ் இனம் மது பெருமைகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்திக்கொண்டு வருகின்றன.

 

 பண்பாடு என்பது வாழ்க்கை முறை என்பது சமூகவியல் அறிஞர்களின் கருத்து. அச்சமும், நாணமும் கொண்ட பெண், தான் அணியும் ஆடையின் வாயிலாகவும் அவற்றை வெளிப்படுத்துபவள் தன் உடலின் பெரும்பகுதியையும் போர்த்தக்கூடிய ஆடையாகிய சேலையை அணிகிறாள். இது தமிழர் பண்பாட்டின் ஒரு கூறாகத் திகழ்கிறது. நெற்றியில் அணியும் திலகமும், திருநீறும், தலையில் சூடும் மலரும், கைகளில் அணியும் வளையலும் இவ்வகையான பண்பாட்டுக் குறியீடுகள்.

 

அக உணர்வின் வெளிப்பாடான புறச்செயல்கள், சம்பிரதாயங்கள் என்பவையும் பண்பாட்டின் இரு கூறுகள். ஆடை அணிதல், உணவு முறை, பழக்கவழக்கங்கள், நம்பிக்கை வழிபாடு, ஆகியவற்றில் தமிழர்களுக்கென சில தனித்தன்மைகள் அமைந்துள்ளன. அதில் ஆடவர் வேட்டி அணிவதும், இளம் மங்கையர் தாவணி அணிதல், சேலை அணிதல் ஆகியவை முக்கியமானவை, அதுவும் தமிழர் திருநாள் போன்ற விழாக்கள் என்றால் சொல்லவே வேண்டியதில்லை.

 

உணவு, உடை, பழக்க வழக்கங்கள், திருமணம் போன்ற விழாக்களின் நிகழ்முறைகள் அனைத்தும் தமிழர்களின் மரபுப்படி அர்த்தமுள்ளவை. பல்வேறு தட்பவெப்ப நிலைக்கு உட்பட்ட நிலையில் உணவு, உடை போன்றவற்றையும் அதற்கேற் அமைத்துள்ளனர். நாகரிகம் என்னும் பெயரில் உடையமைப்பில்  மாற்றங்கள் ஏற்படுத்துவது நாகரிகச் சிதைவைண்டாக்குவதும் இயல்பு.

 

சிலர், சில நாடுகளில் குடியேறிய நாட்டுப் பண்பாட்டுடன் ஒன்றுபட்டாலும், தங்கள் பண்பாட்டின் தனித் தன்மையையும் காப்பாற்றி வருகின்றனர். உலக நாடுகள் பலவற்றில் குடியேறியுள்ள தமிழர்கள் தங்கள் அடையாளங்களைக் காக்கவும் தங்கள் தனித்தன்மையைப் புலப்படுத்தவும், தங்கள் பண்பாட்டுப் பெருமையை உணர்ந்து பெருமைப்படவும் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் பலவற்றை இன்றளவும் போற்றி வளர்த்தும் வருகின்றனர். அந்த வகையில் இன்றும் பெண்களின் பட்டாடை மோகம் சற்றும் குறைந்தபாடில்லை என்பதே சத்தியம்!

 

தமிழர் மரபின் பண்பாட்டு அடையாளமாக நம் வாழ்க்கை முறையில் ஆழமாக வேரூன்றி இருக்கும் பொங்கல் திருவிழாவில், உழவுத் தொழிலும், அது சார்ந்த ஏனைய மற்ற தொழில்களும் சிறந்து விளங்கும் மகிழ்வை பறைசாற்றும் விதமாக நாம் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதன் அடையாளமே நாம் அணியும் பட்டாடைகள். இதில் திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கான கன்னிப் பொங்கல் ஆண்களுக்கான கன்றுப் பொங்கலும் முக்கியத்துவம் பெறுகின்றன. நம் அகத்தையும் புறத்தையும் புதுப்பித்துக்கொள்ளவும் புத்துணர்ச்சியையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்திக்கொள்ளவுமே இப்படியான பண்டிகைகள். இது போன்ற பண்டிகை நாட்களிலேனும், நம் பாரம்பரிய உடைகளான, ஆண்கள் பட்டு வேட்டியும், பெண்கள் பட்டுச் சேலையும் அணிந்து கொண்டாடும் வகையில்  நம் அடுத்த தலைமுறைகளுக்கும் நம் பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களை எடுத்துச் செல்ல முடிகிறது என்பதே சத்தியம்.