Saturday, April 15, 2017

நல்லை யல்லை!



முன்னிலைப் புறமொழி - முன்னால் நிற்பவர்க்குரிய செய்தியை கூறினாலும் நேரிடையாக அவரிடம் கூறாமல், வேறு ஒருவரையோ அல்லது வேறு பொருளையோ விளித்து அச்செய்தியை இலைமறை காயாக புரியவைப்பது. 

கருங்கால் வேங்கை வீயுகு துறுகல் 
இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை 
    எல்லி வருநர் களவிற்கு 
    நல்லை யல்லை நெடுவெண் ணிலவே. 
(தொல். கற்பு.26, ந.)


நெடுவெண்ணிலவே, (விரைவில் மறையாமல் நெடுநேரம்  காயும் நிலவு) இப்படி நீ இரவில் வந்து பழகும் தலைவரது களவொழுக்கத்திற்கு நன்மை செய்வதால் நீ நல்லவரில்லை என்கிறாள் தலைவி. முன்னிலைப் புறமொழியாக நிலவிடம் சொல்கிறாள் தலைவி.

Tuesday, April 11, 2017

தீம்புளி



தீம்புளி சாப்பிட்டதுண்டா? சங்கப்பாடல் சொல்லும் சுவையான பண்டம்!
புளியையும் கருப்பங்கட்டியையும் சேர்த்துப்பிசைந்து அதைப் பொரிப்பார்கள். இப் பண்டத்துக்குத்தான் தீம்புளி என்று பெயர்.
பரதர் தந்த பல்வேறு கூலம்
இருங்கழிச் செறுவிற் றீம்புளி வெள்ளுப்புப்
பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்
கொழுமீன் குறைஇய துடிக்கண் துணியல் . . (மதுரை காஞ்சி 318)
பண்டமாற்று முறை வாணிபத்தில், நம் நாட்டிற்கு குதிரைகளை மரக்கலங்களில் ஏற்றிக் கொண்டுவந்த யவனர்கள் அதே மரக்கலங்களில் பொன் அணிகலன்களையும், தீம்புளி, உப்பு, உணக்கிய மீன் ஆகியவற்றையும் தத்தம் நாடுகட்கு ஏற்றிச் செல்லுவார்களாம்

தெய்வப்புலவர்!



1330 குறட்பாக்களை ஈரடியில் எழுதிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஒரே ஒரு நாலு வரி பாடல் எழுதியுள்ளார்.
images
அடியிற்கினியாளே அன்புடையாளே 
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்- 
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு
அன்பு மனைவி இறந்தபின் அவர்தம் பிரிவைத் தாங்காமல் கலங்கி நின்றவர் , நேற்றிருந்தவர் இன்றில்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்று பாடியவர், அதன்படி தம் மனைவியாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டியவர், அப்பிரிவைத் தாளாமல் இப்படி எழுதியுள்ளார்!
திருவள்ளுவர் எழுதியதாகக் கருதப்படும் நூல்கள்
1. ஞானவெட்டியான் – 1500 பாக்கள்
2. திருக்குறள் – 1330 பாக்கள்
3. ரத்தினசிந்தாமணி – 800 பாக்கள்
4. பஞ்சரத்தனம் – 500 பாக்கள்
5. கற்பம் – 300 பாக்கள்
6. நாதாந்த சாரம் – 100 பாக்கள்
7. நாதாந்த திறவுகோல – 100 பாக்கள்
8. வைத்திய சூஸ்திரம் – 100 பாக்கள்
9. கற்ப குருநூல் – 50 பாக்கள்
10. முப்பு சூஸ்திரம் – 30 பாக்கள்
11. வாத சூஸ்திரம் – 16 பாக்கள்
12. முப்புக்குரு – 11 பாக்கள்
13. கவுன மணி – 100 பாக்கள்
14. ஏணி ஏற்றம் – 100 பாக்கள்
15. குருநூல் – 51 பாக்கள்