Friday, December 17, 2010

ஆலகாலமும் அமுதாகும் ! - பகுதி - 4



சண்டீஸ்வரர் வழிபாடு

பொன்னக் கடுக்கை முடிவேய்ந்த
புனிதற்கு அமைக்கும் பொருள் அன்றி
மின்னும் கலன்ஆடைகள் பிறவும்
வேறுதமக்கு என்று அமையாமே
மன்னாந் தலைவன் பூசனையின்
மல்கும் பயனை அடியார்கள்
துன்னும்படி பூசனை கொள்ளும்
தூயோன் அடித்தா மரைதொழுவாம்.


நலம் தரும் நந்தி

கந்தனின் தந்தையைத்தான் கவணமாய் சுமந்துசெல்வாய்
நந்தனார் வணங்குதற்கு நடையினில் விலகி நின்றாய்
அந்தமாய் ஆதியாகி அகிலத்தை காக்க வந்தாய்
நந்தியே உனைத் துதித்தேன் நாடி வந்து எம்மைக் காப்பாய்
ஒன்பது கோள்:களுக்கும் உயரிய பலன் கொடுப்பாய்
பொன் பொருள் குவிய வைப்பாய் புகழையும் வளர்த்து வைப்பாய்
சிந்தனை வளங்கொடுப்பாய் சிகரத்தில் தூக்கி வைப்பாய்
நந்தியே உனைத்துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்
மாலைகள் ஏற்க வைப்பாய் மழலைகள் பிறக்க வைப்பாய்
வேலைகள் கிடைக்க வைப்பாய் விதியையும் மாற்றி வைப்பாய்
சோலையின் வண்ணப் பூவை சூடிடும் நந்தி தேவா
நந்தியே உனைத்துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்
தஞ்சையில் பெரியநந்தி தளிருடன் வெண்ணெய் சாத்தி
அஞ்சாத வேந்தன் நந்தி அழகிய நெகமம் நந்தி
குஞ்சர முகத்தான் தந்தை குந்திடும் ரிஷப நந்தி
தஞ்சடனாய் உனையடைந்தேன் தயங்காது எம்மைக் காப்பாய்.


பஞ்ச புராணம்

இடரினுந் தளிரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனி லமுதொடு கலந்த நஞ்சை
மிடறினி லடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளுமா
றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவாஉன தின்னருளாவடுதுறை அரனே --- தேவாரம்


சிவபுராணம்



நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம்குவிவார் உன்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க
ஈசன்னடிபோற்றி எந்தை அடி போற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணந்தன்னை
முந்தை வினைமுழுவதும் ஓய உரைப்பன்யான்
கண்னுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறைந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகிமுனிவராய்த் தேவராய்ச்
செல்லா அநின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
வெய்யாய் தணியாய் இயமான நாம் விமலா
பொய்யாயின எல்லாம் போயகல வந்தருளி
மெஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பருக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் என்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்
புறந்தோல் போர்த்தெங்கும் புழுஅழுக்குமூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
வலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்து அன்பாகிக் கசிந்துள் உருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள்காட்டி
நாயிற் கடையாய் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவானதத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தே ஆர் அமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியன்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கும் அன்பனே யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணிக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியெ
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்
ஊற்றானே உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப
ஆற்றேன் என் ஐயா அரனேஓ என்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுற் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.


திருச்சிற்றம்பலம்

வாழ்த்து

வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி
விளங்குக உலகம் எல்லாம்.


ஆலய தரிசன விதி முறைகள் :


1. குளித்து தூய ஆடை அணிந்து ஆலய தரிசனத்திற்குச் செல்ல வேண்டும்.

2. ஆலயத்திற்குள் செல்லும் முன் கோவிலின் கோபுரத்தைப் பார்த்து வணங்க வேண்டும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பர் பெரியோர்.

3. மகாசிவநாமமாகிய, “ஓம் சிவாய நம “ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை மனதினுள் செபித்துக் கொண்டே கொடிமரத்தைப் பார்த்து வணங்க வேண்டும்.

4. பின்பு விநாயகப் பெருமானை தோப்புக்கரணம் இட்டு வணங்க வேண்டும். இதுவும் ஒரு வகை யோகப் பயிற்சியுமாகும்.

5. ஈச்சுவரரை தரிசிக்கும் முன்னர் நந்திதேவரை வணங்கி ஆசி பெற்று உள்ளே செல்ல வேண்டும்.

6. பின்பு ஈச்சுவரரின் காவல் தெய்வங்களாகிய துவாரபாலகர்களிடம் அனுமதி பெற்று ஈச்சுவரனை வணங்க வேண்டும்.

7. எம்பெருமானை வணங்கி மும்முறை வலம் வர வேண்டும்.

8. வலம் வரும் போது குருவாகிய தட்சிணாமூர்த்தி சுவாமிமுன் நின்று கண்களை திறந்து அவரைப் பார்த்து வணங்க வேண்டும்.

9. அடுத்து வள்ளி தெய்வானை சமேதரராயக் காட்சியளிக்கும் முருகப் பெருமானை தரிசிக்க வேண்டும்.

10 . சண்டிகேசுவரர் சன்னதிக்குச் சென்று, அவரிடம் ஆசி பெற வேண்டும்.
எக்காரணம் கொண்டும், தியானத்தில் ஈடுபட்டிருக்கும் சண்டிகேசுவரர் சந்நிதியில் கைதட்டியோ, ஒலி எழுப்பியோ இடையூறு செய்தல் ஆகாது.


தீபம் ஏற்றும் முறை :


வேப்பெண்ணெய், நெய், இலுப்பெண்ணெய் மூன்றும் கலந்து தீபமிடுவதால் செல்வம் உண்டாகும். இது மேலும் தெய்வத்திற்கு மிகவும் உகந்ததாகும்.
மருத்துவ குணம் நிறைந்த இம்மூன்று எண்னெய் கொண்டு தீபம் ஏற்றுதல் சுற்றுச் சூழல் மற்றும் உடல் நலம், மன நலம் இவையனைத்திற்கும் சுகம் விளைவிக்கக் கூடியதாகும்.

நெய், விளக்கெண்னெய், இலுப்பெண்ணெய், வேப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய இந்த ஐந்து எண்ணெய்களையும் எவர் ஒருவர் கலந்து ஊற்றி ஒரு மண்டலம் பூசை செய்கின்றனரோ அவருக்கு தேவியின் அருள் மந்திரசக்தி உண்டாகும்.


தீபம் ஏற்றும் திசைகளின் பயன்கள் :


கிழக்கு : இத்திசையில் தீபம் ஏற்றி வழிபட துன்பம் ஒழியும். கிரகக் கோளாறுகள் நீங்கும்.

மேற்கு : இந்நிலையில் தீபமேற்றி வழிபட கடன் தொல்லை, சனிப்பீடை, கிரகதோசங்கள், சல்லியதோசம், பங்காளிப் பகை இவை நீங்கும்.

வடக்கு : இத்திசையில் தீபம் ஏற்றி வழிபட திரண்ட செல்வம், மங்களம், திருமணத்தடை, கல்வித்தடை இவையனைத்தும் நீங்கி, சர்வ மங்களம் உண்டாகும்.

தெற்கு : இத்திசையில் தீபம் ஏற்றக் கூடாது. இது பெரும்பாலும் அபசகுனமாகும்.

திரி ஏற்றும் முகப்பக்கம் :

ஒரு முகம் ஏற்றுவது - மத்திமம்.

இரண்டு முகம் ஏற்றுவது - குடும்ப ஒற்றுமையைப் பெருக்கும்.

மூன்று முகம் ஏற்றுவது - புத்திரசுகம்.

நான்கு முகம் ஏற்றுவது - பசு பரி இனத்தைத் தரும்

ஐந்து முகம் ஏற்றுவது - செல்வத்தைப் பெருக்கும்.



திரி தரும் பலன்கள் :

பஞ்சுதிரி : குடும்பத்தில் மங்களம் நிலைக்கும்.

தாமரைத் தண்டு திரி : முன் வினைப்பாவம் நீங்கி, செல்வம் நிலைக்கும்.

வாழைத்தண்டு திரி : மக்கட் செல்வம் உண்டாகும். தெய்வக் குற்றம் நீங்கி மன அமைதி ஏற்படும்.

வெள்ளை எருக்கன் பட்டைத் திரி : பெருத்த செல்வம் சேரும்

புது மஞ்சள் துணித் திரி : திருமணத்தடை நீங்கும், மலட்டுத் தன்மை நீங்கும்.

புது வெள்ளைத் துணித் திரி : தரித்திரம் நிவாரணமாகி, குடும்பத்தில் சுபிட்சம் நிலவும்.


இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே.


அம்மை துதி :

எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும்
உண்மையாவது பூசனை என உரைத்தருள
அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்
பெண்ணின் நல்லவளாயின பெருந்தவக் கொழுந்து.

முருகப் பெருமான் துதி:

கொன்றை வேணியார் தாமும் பாகங் கொண்ட குலக்கொடியும்
வென்றி நெடுவேல் மைந்தரும் தம் விரைப்பூங்கமலச் சேவடிக்கீழ்
நின்ற தொண்டர் மனைவியார் நீடு மகனார் தாதியார்
என்றும் பிரியாதே இறைஞ்சி இருக்க உடன்கொண்டு ஏகினார்.



அம்பலவாணன் துதி :

உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்து என் உளம்மன்னிக்
கருத்து இருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட
திருத்துருத்தி மேயானைத் தித்திக்கும் சிவபதத்தை
அருத்ததியினால் நாயடியேன் அணிகொள் தில்லை கண்டேனே.


குறிப்பு :

வழிபாட்டின் தொடக்கத்திலும் நிறைவிலும் “திருச்சிற்றம்பலம்” என்று சொல்லி மகுடம் சொல்வது நலமாம்.


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண்ணுருவானாய் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி! போற்றி !!

திருச்சிற்றம்பலம்.


நிறைவடைந்தது.





Thursday, December 16, 2010

ஆலகாலமும் அமுதாகும் ! - பகுதி - 3.





பிரதோச விரதம்

பிரதோச விரதம், வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும், திரயோதசி திதி அன்று நீராடி மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும்.சுவாமிக்கும், அம்பிகைக்கும் அபிசேக ஆராதனைகள் செய்ய வேண்டும். அல்லது சிவன் கோவிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிசேக ஆராதனைகள் பிரதோச காலத்தில் நடக்கும். அதில் கலந்து கொண்டு அருள் பெறலாம். பிரதோச பூசையன்று முதலில் நந்தி தேவருக்கு பூசை நடைபெறும். சிவபெருமான் பிரதோச காலத்தில் நந்திதேவரின் இரு கொம்புகளுக்கு இடையே உயிர்கள் உய்யும் பொருட்டுத் திருநடனம் புரிந்தார்.

இப்பிரதோச வேளையில் பூலோகம் மட்டுமல்லாமல், ஈரேழுலகத்தில் வசிப்பவர்களும் வழிபாடு செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் பிரதோசத்தின் வழிபாட்டின் சிறப்பு அம்சமாகும். குறிப்பாக தேவர்கள் தாங்கள் பிரதோச வழிபாடு செய்வதோடு அவ்வழிபாடு செய்பவர்களுக்கும் தாங்களே முன்வந்து உதவுவதாக புராணங்கள் கூறுகின்றன.

திருவாரூரில் உள்ள சிவாலயத்தில்தான் முதன் முதலில் பிரதோச பூசை ஆரம்பித்துள்ளது. தேவலோகத்தைச் சேர்ந்த தேவேந்திரன் தான் முதன் முதலில் இப்பூசையை ஆரம்பித்து வைத்திருக்கிறார். பிரதோச தினத்தன்று நாள் முழுவதும் விரதம் இருந்து பிரதோச தரிசனம் முடிப்பது அதிக நற்பலனை அளிக்கவல்லது என்பது அனுபவத்தில் உணர்ந்த உண்மை. ‘பிர’ என்பதன் பொருள் பாவம், அந்த பாவத்தைப் போக்கும் தோசம் என்பது நேரம் என்பர் ஆன்றோர்.

பிரதோச காலத்தில் சிவபெருமான் அனைத்துப் பொருட்கள், அதாவது உயிருள்ள மற்றும் ஜடமான அனைத்துப் பொருள்களையும் தன்னுள்ளே அடக்கிக் கொள்கின்றார். அதனால் பிரதோச காலம் என்பது அகிலாண்ட நாயகனான பரமேச்வரனை தியானம் செய்வதற்கும் அந்த ஈச்வரனையே தம் வசப்படுத்திக் கொள்வதற்கும் உகந்த காலமாகும். பிரதோச வேளையில் ‘சிவாய நம’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிக்கும் போது உடல், மனம் இரண்டும் தூய்மை பெறுகிறது. அதனால் பல நன்மைகளும் விளைகின்றது. பிரதோச காலத்தில் சிவபுராணப் பாடலைப் பாடி வழிபடுதல் நலம்.

பிரதோச காலங்களில் ஐந்து வகையுண்டு.

1. நித்ய பிரதோசம் : தினந்தோறும் மாலை 4.30 மணி முதல் 5.00 மணி வரையுள்ள காலகட்டமே நித்ய பிரதோசம் எனப்படும்.

2. பஷ பிரதோசம் : வளர்பிறையில் [ சுக்லபட்சம்] சதுர்த்தி திதியில் மாலைக் காலமே பஷ பிரதோசம் எனப்படும்.

3. மாத பிரதோசம் : தேய்பிறையில்
[ கிருஷ்ணபட்சம்] திரயோதசி திதியில் வரும் பிரதோசமே மாத பிரதோசம் எனப்படும்.

4. மஹா பிரதோசம் : தேய்பிறையில் [கிருஷ்ணபட்சம்] திரயோதசி திதியில் சனிக்கிழமையில் வந்தால் அதுவே மிகச் சிறப்புடைய மஹாபிரதோசம் எனப்படும்.

5. பிரளய பிரதோசம் : பிரளய காலத்தில் இவ்வுலகின் அனைத்து சீவராசிகளும் சிவனிடம் ஒடுங்கும். அதுவே பிரளய பிரதோசமாகும்.

பிரதோச பூசை செய்தால் ஒருவருக்குக் கிட்டும் பலன்கள்.

1. துன்பம் நீங்கி இன்பம் எய்துவர்.

2. மலடு நீங்கி மகப்பேறு பெறுவர்.

3. கடன் நீங்கி தனம் பெறுவர்.

4. வறுமை ஒழிந்து செல்வம் சேரும்.

5. நோய் நீங்கி நலம் பெறுவர்.

6. அறியாமை நீங்கி ஞானம் பெறுவர்.

7. பாவம் தொலைந்து புண்ணியம் எய்துவர்.

8. பிறவி ஒழிந்து முக்தி எய்துவர்.


ஒரு வருட பலன் : சனிக்கிழமை தவிர மற்ற கிழமைகளில் வரும் பிரதோச தினத்தன்று பிரதோச வேளையாகிய மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் அன்று, முழுவதும் விரதம் இருந்து சிவாலயத்திற்குச் சென்று ஆலய வழிபாடு செய்தால் ஒருவருக்கு ஒரு வருடம் தினமும் கோவில்சென்று வழிபட்ட பலன் கிடைக்கும்.

மஹா பிதோசம் :

ஐந்து வருட பலன் : சனிக்கிழமை வரும் பிரதோச வேளையில் நாள் முழுவதும் விரதமிருந்து சிவாலயம் சென்று வழிபாடு செய்தால் ஐந்து வருடம் தினமும் தவறாது கோவிலுக்குச் சென்று வழிபடும் புண்ணியம் கிட்டும். பஞ்சமாபாபமும் விலகும் என்பர்.

பிரதோச காலத்தில் நந்தீஸ்வரர் பூசை.

1. ஒவ்வொரு பிரதோச வேளையிலும் சிவபெருமானை பூசிப்பதற்கு முன் நந்தியெம்பெருமானை பூசிப்பது நலமாகும்

2. பிரதோச வேளையில் நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையில் இறைவனை தரிசித்து வணங்கினால் கடன், வறுமை, நோய், பயம், மனகிலேசம், மரணவேதனைகள் நீங்குதல், புத்திர பாக்கியம் பெறுதல், காரியசித்தி பெறுதல் ஊக்கத்தை உண்டாக்குதல், சகல சௌபாக்கியங்களையும் பெறுதல் இவைகளுடன் கைலாயமும் அடைந்து இம்மை, மறுமையில் அனைத்து நன்மைகளையும் பெற்று பயனடைவர்.

3 . எனவே பிரதோச காலத்தில் நந்தியெம் பெருமானின் தரிசனமும் பூசையும் பெறும் பலனளிக்கக் கூடியதாகும்.

பிரதோச பூசையன்று முக்கிய அபிசேகப் பொருள்களும் அதன் பலனும்:

1. அபிசேக வேளையில் பால் கொடுத்தால் - நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்.

2. தயிர் கொடுத்தால் - பல வளமும் உண்டாகும்.

3. தேன் கொடுத்தால் - இனிய சாரீரம் கிட்டும்.

4. பழங்கள் கொடுத்தால் - விளைச்சல் பெருகும்.

5. பஞ்சாமிர்தம் கொடுத்தால் - செல்வச் செழிப்பு ஏற்படும்.

6. நெய் கொடுத்தால் முக்திப் பேறு கிடைக்கும்.

7. இளநீர் கொடுத்தால் - நன்மக்கட்பேறு கிட்டும்.

8. சர்க்கரை கொடுத்தால் - எதிர்ப்புகள் மறையும்.

9. எண்ணெய் தைலம் கொடுத்தால் - சுக வாழ்வு கிட்டும்.

10 சந்தனம் கொடுத்தால் - சிறப்பான சக்திகள் பெறலாம்.

11. மலர்கள் கொடுத்தால் - தெய்வ தரிசனம் கிட்டும்.

பிரதோச நாளன்று கூடியவரை விரதம் இருந்து வர வேண்டும். அன்றைய தினம் தரிசனம் முடிந்த பின்னர் பால், பழம் மட்டும் அருந்தி வெறுந்தரையில் படுத்து உறங்கினால் பிரதோசப் பலன் முழுமையாகக் கிட்டும்.

நந்தியெம் பெருமான் வழிபாடு.

ஐயிரு புராணநூல் அமலற்கு ஓதியும்
செய்யபன் மறைகளும் தெரிந்து மாயையான்
மெய்யறு சூள்புகல் வியாதன் ஈட்டிய
கையறு நந்திதன் கழல்கள் போற்றுவாம்.

நந்தீஸ்வரர் பெருமை

நந்தியெம் பெருமான் தன்னை
நாள்தோறும் வணங்குவோர்க்குப்
பக்தியால் ஞானம் சேரும்
பொலிவுறு செல்வம் கூடும்
குலமுறை தழைத்தே ஓங்கிக்
குன்றுபோல் செல்வம் சேரும்
சிந்தையில் அமைதி தோன்றும்
சிறப்புறு மக்கள் சேர்வர்
இந்திர போகம் கிட்டும்
இணையிலா வாழ்வு தானே
உளம்நிறை எண்ணம் கூடி
உயர்ந்திடும் வாழ்வு தானே.

தொடரும்.

Tuesday, December 14, 2010

ஆலகாலமும் அமுதாகும் ! - பகுதி - 2



விநாயகர் வழிபாடு

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகந்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே.

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானை
காதலால் கூப்புவர்தம் கை.

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.


பிரதோச வரலாறு :

உலகாளும் நாயகியான அன்னை பராசக்தி தன்னுடைய பீடத்தில் அமர்ந்திருக்குங்கால், தேவலோகக் கன்னிகையை நடனம் ஆடப் பணித்தார். அன்னையின் ஆவலைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, அக்கன்னிகை, அற்புதமாக நடனம் ஆடி அன்னையை உளம் குளிரச் செய்தாள். அன்னையும் உளம் குளிர்ந்து, அவள் நாட்டியத்தை மெச்சி, தன் கழுத்தில் அணிந்திருந்த மலர் மாலையை எடுத்து அவளுக்குப் பரிசாகக் கொடுத்தார். அக்கனிகையையும் பேரானந்தம் கொண்டு அம்மாலையுடன் செல்லும் வழியில் துர்வாச முனிவரைச் சந்திக்கிறார். அம்மாலையின் மகத்துவம் குறித்து முனிவரிடம் அப்பெண் கூறக் கேட்ட துர்வாசரும் மனம் மகிழ்ந்து அப்பெண்ணை வாழ்த்தினார். அப்பெண்ணும் அம்மாலை தன்னிடம் இருப்பதைவிட இம்மாமுனிவசம் இருப்பதுதான் சிறப்பாகும் என்றெண்ணி, அம்மாலையை முனிவர் வசம் ஒப்படைத்தார்.

துர்வாச முனிவரும் அம்மாலையை நேராக தேவலோகம் எடுத்துச் சென்று, தேவேந்திரனிடம் அம்மாலையின் மகத்துவம் பற்றி எடுத்துக் கூறி அதை அவருக்கே அளித்தார்.

தேவேந்திரனோ, அம்மாலையைத் தன் வஜ்ராயுதம் கொண்டு வாங்கி, அதனை அருகில் நின்று கொண்டிருந்த யானையிடம் கொடுக்கிறார். யானையோ அதன் மகத்துவம் உணராமல் கீழே போட்டு காலால் மிதித்து விடுகிறது. இதனைக் கண்ணுற்ற துர்வாச முனி கடுங்கோபம் கொண்டு, தேவேந்திரனையும், தேவலோகத்தை சேர்ந்த அனைவரையும் கடுமையாகச் சபித்து விட்டுச் சென்றார். அதன் காரணமாக தேவேந்திரனும் ஏனைய தேவலோகத்தாரும், சாப விமோசனம் பெற்று, நரை, மூப்பு, மரணம் போன்ற துன்பங்களிலிருந்து விடுபட்டு வாழும் ஆவல் கொண்டு நாரத முனியின் துணையுடன், பிரம்ம தேவனிடம் சென்று முறையிட்டனர்.

பிரம்ம தேவனும் அவர்களை, பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமனிடம் அழைத்துச் சென்று நடந்த விவரங்களைக் கூறி, பாபவிமோசனம் நாடினர்.

திருமால் தேவர்களிடம், அவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்து, அமிர்தம் எடுத்து உண்டால், அவர்களின் சாபம் நீங்கி, பாபவிமோசனம் பெற்று, அசுரர்களின் பிடியிலிருந்து விலகுவதோடு, மரணம் நீங்கி என்றும் இளமையான தோற்றம் பெறலாம் என்றுரைத்தார். நாரதரும், யார் யார் பாற்கடலைக் கடைதல் நலம்தரும் என்பதனையும் திருமாலிடமே கேட்க, அவரும், தேவர்களும் அசுரர்களும் சேர்ந்தே கடைதல் வேண்டும் என்றும், தேவர்கள் வால் பகுதியையும், அசுரர்கள் தலைப் பகுதியையும் பிடித்துக் கடைதல் வேண்டும் என்றருளினார்.

இந்திராதி தேவர்கள் திருப்பாற்கடலை அடைந்து மந்திரகிரி மலையை மத்தாகவும், வாசுகி என்ற அரவத்தை தாம்புக் கயிறாகவும் அமைத்து திருப்பாற்கடலைக் கடையும் சமயம், மந்திரகிரி மலை சாய்ந்து, கடலில் மூழ்கிப் போகும்போது தேவேந்திரன் திருமாலிடம் ஓடி முறையிடுகிறார். ஸ்ரீமந்நாராயணன் அவ்வேளையில், “கூர்ம அவதாரம் “ எடுத்து கடலுக்குள் சென்று, தன்னுடைய முதுகின்மேல் மந்திரகிரி மலையை தாங்கிப் பிடித்துக் கொள்கிறார். அந்த நாள் பத்தாவது திதியான தசமித் திதியாகும்.

பிறகு தொடர்ந்து தேவர்கள் திருப்பாற்கடலை கடைந்து வரும்போது, மறுநாள் 11 வது திதியான ஏகாதசித்திதியாகும். வாசுகி வலி யினால் ஏற்பட்ட துன்பம் தாளாமல் கடலில் நஞ்சை உமிழ்ந்தது. கடலிலும் நஞ்சு உண்டானது. கடலில் தோன்றிய ஆலமும், வாசுகி கக்கிய ஆலமும் ஒன்று சேர்ந்து “ஆலாலம்” ஆனது. கடல் முழுவதும் நஞ்சாய் ஆனது. வெண்ணிறமாக இருந்த விஷ்ணு மூர்த்தியும் கடும் நஞ்சினால், நீலநிறமானார். இதைக் கண்ணுற்ற வானவர்கள் அஞ்சி, நடுங்கினர். திரும்பவும் திருமாலின் பதம் நாடினர். திருமாலும், நான்முகனும் சேர்ந்து, தேவர்களை திருக்கைலாயம் செல்லும்படிக் கூறினர். அனைவரும் ஒன்று சேர்ந்து கைலாயம் விரைந்தனர்.

திருக்கையிலையில் சிவபெருமான் சந்நிதியில் நந்திதேவர் பொற்பிரம்பும், உடைவாளும் ஏந்தி, காவல் புரிந்து கொண்டிருந்தார். தேவர்கள் முதலில் நந்திதேவனை வணங்கி, திருப்பாற்கடலைக் கடையவேண்டிய காரணத்தையும், அதனால் நேர்ந்த இன்னல்கள் குறித்தும் விவரமாக நந்திதேவனிடம் கூறி, அந்த இன்னல் தீர்க்கும் பொருட்டேத் தாங்கள் அகிலாண்டகோடி நாயகனைக் காண வந்த சேதியும் கூறினர். நந்திதேவனும் இவர்களை வாயிலிலேயே நிறுத்திவிட்டு, சிவபெருமானிடம் சேதி சொல்லி, சர்வேஸ்வரனின் அழைப்பிற்குப் பிறகு தேவர்கள் , நவரத்தினமணி பீடத்தில் எழுந்தருளியுள்ள சிவ சக்தியைக் கண்டு, தங்கள் இன்னல்களைக் கூறித் தங்களைக் காப்பாற்ற வேண்டி இறைஞ்சினர்.

சிவபெருமானும் அனைத்து சீவராசிகளையும் காக்கும் பொருட்டு, அருகில் நின்றிருந்த தன் தொண்டனான சுந்ததரை திருநோக்கம் செய்து, “ சுந்தரா, அந்நஞ்சை, அவ்விடம் அகற்றி, இவ்விடம் கொண்டுவருவாயாக”, என்று பணித்தார். சுந்தரரும், மாலைப்பொழுதான காரணத்தினால், வானவர்கள் அணுக இயலாத அக்கொடிய விடத்தை நாவற்கனி போன்ற வடிவத்தில் திரட்டி, உருட்டிக் கொண்டுவந்து சிவபெருமானிடம் கொடுத்தார்.திரிசடைப்பெருமானோ, அக்கொடிய விடத்தை, அமரர்களான தேவர்கள் வாழும் பொருட்டு அமுதம் போல அதனை உண்டருளினார். அவ்விடம் உள்ளே சென்றால், உள் முகத்திலுள்ள ஆருயிர்கள் அழிந்துவிடுமே என்றும், உமிழ்ந்தாலோ வெளிமுகத்திலுள்ள ஆருயிர்கள் அழிந்துவிடுமாதலாலும், உண்ணாமலும், உமிழாமலும் கண்டத்தில் தரித்தருளினார்.

இக்காரணத்தினாலேயே எம்பெருமானின் செம்பொன்மேனியானது, கன்னங்கரிய மேனியானது. இக்காரணத்தினாலேயே ஐயனுக்கு, “மணிகண்டன்” மற்றும் “திருநீலகண்டர் “ என்றும் பெயர் ஏற்பட்டது. இது நிகழ்ந்தது, ஏகாதசி திதியன்று மாலைப் பொழுதாகும். சிவபெருமான் தேவர்களை நோக்கி மீண்டும் சென்று திருப்பாற்கடலைக் கடையும்படிப் பணித்தருளினார். அவ்வாறே, தேவர்களும், அசுரர்களும் சென்று திரும்பவும் திருப்பாற்கடலைக் கடைய முற்பட்டனர்.

தேவர்கள் கடையும் போது, அதிலிருந்து, இலட்சுமி ஐராவதம் என்ற வெண்யானை, காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துபமணி, சூடாமணி, உச்சைஸ்வரம் என்ற குதிரை முதலானவை ஒவ்வொன்றாக வரத் தொடங்கின. இலக்குமியைத் திருமால் எற்றருளினார். மற்றவற்றை தேவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

தேவர்கள் தொடர்ந்து திருப்பாற்கடலைக் கடைந்து கொண்டிருந்தனர். மறுநாள், துவாதசியன்று அதிகாலையில் அமிர்தம் தோன்றலாயிற்று ! தேவர்கள் அதனைப் பகிர்ந்து உண்டனர். அமிர்தம் உண்ட மகிழ்ச்சியில் ஆடியும், பாடியும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்து , இவற்றுக்குக் காரணமான ஈசனையே வணங்க மறந்து விட்டனர். பிறகு பிரம்மதேவர், தேவர்களின் தவறை உணரச் செய்து, அவர்களை சிவபெருமானிடம் சென்று பணிந்து தங்கள் குற்றத்தை மன்னித்தருளும்படி வேண்டச் செய்தார்.

பரம்பொருளான எம்பெருமான் மகிழ்ந்து தேவர்களுக்கு அருள்புரியத் திருவுளம் கொண்டு திருக்கயிலையில் அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிவரையிலான, பிரதோச வேளையில் தம் திருமுன் இருந்த ரிசப தேவரின் இரு கொம்புகளுக்கு இடையில் நின்று அம்பிகையைக் காண திருநடனம் செய்தருளினார்கள். தேவர்கள் அதைகண்டு பேரானந்தம் கொண்டு, சிவபெருமானை வணங்கினர். அதுமுதல், திரயோதசி திதியன்று மாலை நேரம் பிரதோச காலம் என்று வழங்கலாயிற்று. இது கார்த்திகை மாதம் சனிக் கிழமையன்று நடந்ததால் சனிப்பிரதோசமாகும். பிரதோசம் என்ற விரதம் சிவபெருமானுக்கு மட்டுமே உரியதாம். அனைத்து உலக ஜீவராசிகளும், தேவர்களும், விஷ்ணு, பிரம்மா என்று அனைவரும் ஒன்று சேர்ந்து விரதம் இருந்த நாள்தான் பிரதோச நாளாகும்.

பிரதோச விரதம் இருக்கும் முறை குறித்து இனிக் காணலாம்.

தொடரும்.

Sunday, December 12, 2010

ஆலகாலமும் அமுதாகும் !



ஆலகாலமும் அமுதாகும் !

பூமியர் கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல் மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி
வாழி திருநாவலூர் வந்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாத ஊரர் திருத்தாள் போற்றி.

நால்வர் பெருமக்கள் துதி.

இப்பூவுலகின்கண் வாழும் உயிரினங்களில் ஆறறிவுப் படைத்த மனித இனம் சாலச் சிறந்ததொரு படைப்பாகும்.ஆதி காலத்தில் வாழ்ந்த அருளாளர்கள், ஞானிகள் ஏனையோர், ஆலயங்களில் உருவத்திருமேனி, அருவுருவத் திருமேனிகளில் நீக்கமற எங்கும் நிறைந்துள்ள களங்கமற்ற பரம்பொருளாகிய சிவத்தை எழுந்தருளச் செய்து வழிபட்டு, நித்திய ஆனந்தம் பெற்றனர் என்றால் அது மிகையாகாது.

ஆதிகாலந்தொட்டே நாயன்மார்கள், சந்தானாச்சாரியார்கள் போன்றவர்கள் சைவத்தை ஒளியூட்டி பிரகாசிக்கச் செய்வதில் பெரும் பணியாற்றியுள்ளனர்.சைவாலயங்களின் வழிபாட்டில் பிரதோச கால வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும்.

மகாப் பிரதோசத்தின் மகிமை :

* சிவபெருமான் ஆலகால விடத்தை அருந்திய நேரம்தான் பிரதோச வழிபாடாக செயல்படுகிறது.

* ஒரு பிரதோசம் பார்ப்பது பதினைந்து நாட்கள் கோவிலுக்குச் சென்று வந்த பலனைக் கொடுக்கும்.

* பதினோரு பிரதோசம் பார்ப்பது ஒரு கும்பாபிசேகம் பார்த்த பலனைக் கொடுக்கும்.

* நூற்று இருபது பிரதோசம் பார்ப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது.

* சிவாலயங்களில் சிறப்பான வழிபாடு மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறும்.

* பிரதோச விரதம் கடைப்பிடிப்பவர்களுக்கு சகல செல்வங்களும் வந்து சேரும் என்பது திண்ணம்.

துன்பங்கள் [ விக்கினங்கள் ] அனைத்தையும் நிவர்த்தி செய்யும் என்பெருமான் விக்னேசுவரன் என்றும் அழைக்கப் பெறுகிறார்.இம்மையிலும், மறுமையிலும், அறிந்தும், அறியாமலும் செய்யும் பாபமாகிய தோசங்கள் அனைத்தையும் போக்கும் வழிபாட்டிற்கு பிரதோசகால வழிபாடு அதாவது பிரதோசம் எனப் பெயர் வழங்குகிறது.

கிறித்துவ மதங்களில், பாவ மன்னிப்பு என்று ஒரு முறை உண்டு.அம்முறையில், மத குருமார்களின் காதில் சென்று தான் செய்த பாவத்தைக் கூறி அதற்கு மன்னிப்பும் கேட்கப்படும். மத குருவும் ஆண்டவரிடம் அந்த பக்தரின் சார்பில் பாவ மன்னிப்புக் கோரி தூது செல்வதாக ஐதீகம்.

இது போலத்தான் நம் இந்து மதத்தில், சைவாகமத்தில், இந்த பிரதோசகால வழிபாடு அமைந்துள்ளது எனலாம்.

ப்ர - தோசம் - மிக்க தோசம், எனப் பொருள்.
அதாவது, போக்குதற்கு இயலாத எத்தகைய தோசமாக இருந்தாலும் அவை அனைத்தையும் நிவர்த்தி செய்யும் ஆற்றல் கொண்டதுதான் பிரதோச வழிபாடு.

பிரதோச காலத்தில் சிவபெருமான் நந்தியெம்பெருமான் விருப்பப்படி நர்த்தனக் காட்சி அளிக்கின்றார். நந்தியெம்பெருமானுக்கு அபிசேக ஆராதனை செய்து, விடையின் மேல் உலகையே ஆளுகின்ற சக்தியாகிய பராசக்தியுடன் சிவபெருமான் எழுந்தருளி அடியவருக்கு நித்தியானந்தம் அளிக்கின்றார்.

பிரதோச காலத்தில், விரதமிருந்து வழிபடும் அடியார்களுக்கு கடன், நோய், தரித்திரம், மனக்கவலை, மரணபயம், மன சோர்வு, கோபம், மோகம், பயம் போன்றவைகளால் வரும் தோசங்கள் அனைத்தும் அறவே நிவர்த்தி ஆகும் என உத்தரகாரணாகமம் இயம்புகின்றது.

பசுவின் திருமேனி, பிற உயிரினங்களின் சரீரங்களைக் காட்டிலும் பல்வகையிலும் மேன்மையுடையதாகும். இல்லத்தையும், மற்ற இடங்களையும், பசுவின் சாணம் மற்றும் கோமயம் கொண்டு சுத்தம் செய்வது வழக்கத்தில் உள்ளது. அக்காலந்தொட்டு, வீட்டு வாசலை அதி காலையில் பசுஞ்சாணம் கொண்டு மொழுகுவது இலட்சுமி கடாட்சம் அருள்வதாகவும் பெரியோர் கூறுவர்.

ஆகவே, தருமத்தின் சொரூபமாக விளங்கும் விடையின் மேல் ஏறி வலம் வருகின்றார் இறைவன், இப்பிரதோச காலத்தில்.

தேவர்கள் வாழும் பொருட்டு நஞ்சை உண்டு, கண்டத்தில் தாங்கி, நஞ்சுண்ட கண்டனாக அருள்பாலித்து, அமிர்தத்தை அவர்களுக்கு வழங்கிய காலம் இப்பிரதோச காலமாகும்.

இப்பிரதோச நாளில் வழிபடும் அன்பர்கள் வேண்டுவன அனைத்தையும் பெற்று மேன்மையான வாழ்வைப் பெறுவார்கள் என்பது அனுபவத்தில் உணர்ந்த மறுக்க இயலாத உண்மையாகும்.

தொடரும்.

பி.கு.: பிரதோச விரதம் என்ற விரதம் சிவபெருமானுக்கு மட்டுமே உரியது. அனைத்துலக ஜீவராசிகளும், தேவர்களும், விஷ்ணு, பிரம்மா என அனைவரும் ஒன்று கூடி விரதம் இருந்த நாள்தான் பிரதோச நாளாகும். பிரதோச வரலாறும், விரதம் இருக்க வேண்டிய முறை குறித்தும் தொடர்ந்து காணலாம்.