Sunday, January 14, 2018

பொங்கல் நல்வாழ்த்துகள்!




ஒவ்வொரு ஆண்டும் தைத்திங்கள் முதல் நாளன்று தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா ‘பொங்கல் திருவிழா’ – உழவர் திருநாள். சங்ககாலம்தொட்டு அறுவடைக் காலங்களில், மழையுடன் நாடு செழித்து, மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும்பொருட்டும், பயிர்களின் விளைச்சல் அளித்த அன்னை பூமி, கதிரோன், ஏர் உழுத மாடு போன்றனைத்திற்கும் நன்றி செலுத்தும் விதமாக இனிமையான சர்க்கரைப் பொங்கல் வைத்து சிறப்பாக வழிபடுவது வழக்கம். தொடர்ந்து பல காலங்களாக வழிவழியாக இந்த நிகழ்வு திருவிழாவாகவே கொண்டாடப்பட்டுவருகின்றது. இவ்விழா, சமயங்கள் கடந்து அனைத்து தமிழர்களால், தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. உழவர் பெருமக்கள் மாரியின் தயவால், ஆடிப்பட்டம் தேடி விதைத்து, அன்று முதல் சோர்வின்றி உழைத்துச் சேர்த்த நெல் மணிகளை மார்கழியில் அறுவடை செய்து களம் சேர்த்து, தங்கள் உழைப்பின் பயனை மகிழ்ச்சியுடன் நுகரத் தொடங்கி அதைக் கொண்டாடும் திருநாளே தைப்பொங்கல். ஏர் உழும் ஆவினத்தின் உழைப்பையும் போற்றி நன்றி நவிலும் திருநாள் இது.
புத்தாடை உடுத்தி, முற்றத்தில் வண்ணக் கோலமிட்டு அதன் நடுவில் புதுப் பானை வைத்து புத்தரிசியிட்டு, பாலும், வெல்லமும், நெய்யும் சேர்த்து பொங்கல் வைப்பார்கள். பானைக்குப் புதிய மஞ்சளைக் காப்பாக அணிவித்து, புதிய கரும்பையும், பசுமையான காய்கறிகளையும் வைத்துப் படையலிடுவர். தலை வாழையிலையில் வைத்து, விளக்கேற்றி கதிரவனை வணங்கி “பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!” என்று உரக்கக் கூவி, குலவையிட்டு மகிழ்ந்துக் கொண்டாடுவர்.
சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல் குறித்த சில பாடல்களைக் காணமுடிகின்றது:
“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” – நற்றிணை
“தைஇத் திங்கள் தண்கயம் போல்” – புறநானூறு
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” – கலித்தொகை
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” – குறுந்தொகை
“தைஇத் திங்கள் தண்கயம் போல” – ஐங்குறுநூறு
இந்த உழவர் திருநாள் தொன்று தொட்டு நம் தமிழ் நாட்டைப் போன்றே பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஜப்பான் நாட்டில், டோரி நோ ஈச்சி (Tori no Ichi) என்ற இத்திருவிழா ஈடோ காலம் (1603-1868) முதற்கொண்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. நல்ல மகசூல் பெற்று அறுவடை செய்து, அவைகளை வளமாக விற்பனையும் செய்யும் பொருட்டு பிரார்த்தனை செய்வதே இதன் நோக்கமாகும்.டோக்கியோ நகரிலுள்ள ஆலயத்தில் மிகச்சிறப்பாக நடைபெறும் இவ்விழாவிற்காக ஒவ்வொரு ஆண்டும் 200 கடைகள் அமைக்கப்படுகின்றன. இவை பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஈடோ காலத்திற்குப் பின்னர் இன்றும் தொடர்ந்து, இரவு முழுவதும் நீடிக்கும் இந்த திருவிழாக்கள் நவம்பர் மாதம் ரூஸ்டர் நாளில் நடைபெறுகின்றன.
கருணைக்கிழங்குத் திருவிழா (Yam festival), ஆப்பிரிக்காவில் அறுவடைக்காலங்களில் விவசாயிகள், கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மூன்று நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடும் திருவிழாவாகும்.
இசுரேலில், எபிரேய மாதத்தின் 15 வது நாளில், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சுக்கோத் எனும் திருவிழா நடத்தப்படுகின்றது. அறுவடை நேரத்தில், “அறுவடைத் திருவிழா” எனவும் யூத நன்றி விழா எனவும் பெருவிருந்துடன் கொண்டாடப்படுகின்றது.
சூசுக் (Chu Suk) என்பது கொரிய நாட்டின் நன்றித் திருவிழா ஆகும், கொரியர்கள் அறுவடைத் திருவிழாவை செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி, அதாவது 8 வது சந்திர மாதத்தின் 15 வது நாளில் கொண்டாடுகின்றனர். அன்று அதிகாலையில், அவர்கள் தங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டி தங்கள் மூதாதையர்களுக்கு, அறுவடை செய்த புதிய பயிர்களால் தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தங்கள் மூலம் மூதாதையர் வழிபாட்டு சடங்கு செய்கின்றனர்.
இதுபோன்று வியட்நாம், இலங்கை, (உழவர் திருநாள்) அமெரிக்கா (நன்றி நவிலல் நாள்), சீனா (ஆகஸ்ட் – சந்திரன் திருவிழா) பல நாடுகளிலும் பல்வேறு பெயர்களில் இத்திருவிழா கொண்டாடப்பட்டாலும் இதன் அடிப்படை நோக்கம், அறுவடைத் திருநாள் என்பதுதான்!
பொங்கல் நல்வாழ்த்துகள்!
http://www.vallamai.com/?p=82789

சறுகும் கொடியும்! (குட்டிக்கதை)





பச்சைப்பசும் கொடி ஒன்று, சலசலத்து வீழும் சறுகுகளைப்பார்த்து, “வீழும்போதும் நீங்கள் ஏற்படுத்தும் சரசரவெனும் ஓசை எம் கூதிர்காலக் கனவுகள் அனைத்தையும் வீசியெறிந்துவிட்டது” என்றது எகத்தாளமாக.

அதற்கு அந்த சறுகு, “எதன் மீதோ படர்ந்தவாறே காலம் கழிக்கும் சுயமற்ற உன்னால் இந்தப் பிரபஞ்சத்தின் இயற்கையை எப்படி இரசிக்க இயலும்” என்றது கோபமாக.

குவிந்த சறுகுகள் அனைத்தும் பொடிப்பொடியாகி மண்ணில் கலந்து அதே மரத்தின் உரமாகி மீண்டும் வசந்தத்தில் பசுமையாய் துளிர்விட ஆரம்பித்தன. 

அந்தப் பசுங்கொடி படர்ந்திருந்த கொம்பு கால ஓட்டத்தில் களையிழந்து, கருகிப்போக, படரும் கொம்பின்றி  துவண்டுக் கிடந்த அந்த பச்சிளம் கொடியோ பரிதவித்து சுருண்டு வாடிக்கிடந்தது. துளிர்விட்ட மரமோ அக்கொடிக்கு கொழுகொம்பாய் மீண்டும் உயிரூட்ட எண்ணியது. 

ஆணவமலம் அதிர்வூட்ட அதனை ஏற்க மறுத்தக் கொடியை பரிதாபமாகப் பார்த்த மரத்திடம், மனந்தெளிந்த  கொடியோ,

“காலங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. தேவைகளும், தெரிவுகளும் விரிவடைந்து வளமாய் வாழ்வதற்கு பாதையமைக்கின்றன. ஆனாலும் சூழ்நிலையைச் சார்ந்து இருத்தல் அவசியமாகிறது. எந்தவொரு சூழலிலும் சுதந்திரம் இன்றி வாழும் அடிமை வாழ்க்கை அழகற்றது. சன்னமானதென்றாலும் என் தண்டை முறுக்கி உறுதியாக்கிக்கொண்டு தனித்தியங்குவது எனக்கும் சாத்தியமே. அதுதான் நிரந்தரத் தீர்வாகவும் இருக்கமுடியும்” என்றது.

புன்னகையோடு விடைபெற்றது மரம்.

பி.கு. இயற்கையின் அசைவுகள் ஒவ்வொன்றும் உயிரினங்களைப் பக்குவப்படுத்தும் பாடங்களின் அங்கங்களாகவே உள்ளன .

#பவளா