Friday, February 18, 2011

காவிரிக் கரையிலிருந்து கங்கை வரை. - பகுதி - 5.


காவிரிக் கரையிலிருந்து கங்கை வரை. - பகுதி - 5.

நாம் அனைவரும் பெரும்பாலும் மாற்றத்தை நேசிக்கக் கூடியவர்களாகவே இருக்கிறோம். நம் உலகம் மிக அமைதியானதாகவும் அன்பு நிறைந்ததாகவும், பொறுமை, பெருந்தன்மை மற்றும் மன்னீக்கும் பக்குவம் இவையனைத்தும் கொண்டதாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நம் கண்ணில் படுகிற சிறிய தவறுகளைக்கூட பூதக் கண்ணடி கொண்டு பார்த்து, வெறுப்பை உமிழ்கிறோம். நியாயமே இல்லாமல், அவ்ர்கள் மாற வேண்டும் என்று முடிவு செய்கிறோம்.நம்மிடம் இல்லாத பொறுமை, சுய விருப்பு, அல்லது பெருந்தன்மை இன்மை ஆகியவைகளை உணராமலேயே, வருத்தம் என்கிற மன நிலையில் நாமே சென்று விழுகின்றோம். மற்றவர்களை ஆள் காட்டி விரல் நீட்டிகுறை சொல்லும் போது, மற்ற மூன்று விரல்கள் நம் இதயத்தை நோக்கி குறி பார்ப்பதைக் காணத் தவறி விடுகிறோம்.

“ Be the change we want to see", என்ற மகாத்மா காந்தியின் சத்திய நெறியை கடைப்பிடிப்பவராக இருந்தால் மட்டுமே, நாம் எதிர்பார்க்கும் அனைத்தும் நடக்கும் சாத்தியம் தென்படும். மிக அமைதியான உலகம் நமக்கு வேண்டுமானால், முதலில் நாம் அமைதியாக இருக்கப் பழக வேண்டும். நியாயமான உலகம் நமக்கு வேண்டுமானால், நாமும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். இது போன்று அடிப்படை தர்மங்கள் கடைப்பிடித்தோமானால், நம் பயணம், அது வாழ்க்கைப் பயணமாக இருந்தாலும் சரி திருக்கூட்டப் பயணமாக இருந்தாலும் சரி மன நிறைவைத் தரக் கூடியதாக அமையும் என்பதில் ஐயமில்லை.

அடுத்த நிகழ்ச்சிகள் பற்றிய உரையில், திருப்பெருந்துறை என்பெருமான் ஆத்மநாதரின் திவ்ய தரிசனத்தின் மகிமையை போற்றிவிட்டு, அடுத்து நாங்கள் செல்லப் போகும் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் பற்றி ஒரு சில விளக்கங்களும், அங்கு நாங்கள் சென்றடையப் போகும் பின் இரவு நேரத்தையும், அங்கு தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சத்திரம் குறித்தும், அடுத்த நாள் நிகழ்வுகள் குறித்த முன்னுரையும் இப்படி அனைத்தையும் சொல்லிவிட்டு, இறுதியாக, இன்னும் 30 நிமிட பயணத்தில் வரக்கூடிய ஒரு திருமண மண்டபத்தில் அடியார்களுக்கு, அமுது படைக்க ஓர் அன்பர் காத்திருக்கிறார். அங்கு மகேஸ்வர பூசை நடைபெறும் என்று இறுதியாக அறிவித்தார். அப்பாடி, ஒரு வழியாக நான் எப்படிக் கேட்பது என்று தயங்கிக் கொண்டேயிருந்த விசயத்திற்கு பதில் கிடைத்தது.

மகேஸ்வர பூசை என்பது , அடியவர்களுக்கு அமுது படைப்பது. அழகாக இலையில் உணவுகளைப் பறிமாரி, ஒவ்வொரு இலையின் முன்பும் ஒரு சிறு கற்பூரம் வைத்து அடியவர்களை அந்த இலையின் முன்பு அமரச் செய்து, மகேஸ்வர பூசை செய்யும் குடும்பத்தினர் நடுவில் நின்று, கற்பூர தீபாரதையுடன், வணங்கி அமுது படைப்பார்கள். கண் கொள்ளாக் காட்சியாக இது இருக்கும். குழந்தைகள் கூட வழிபாடு முடியும் வரை இலையின் முன்பு பொறுமையாக அமர்ந்து காத்திருப்பார்கள். திவ்யமாக அறுசுவை உணவு முடிந்து 4 மணியளவில் கிளம்பினோம். பேருந்தில் ஏறி அமர்ந்தவுடன் உண்ட களைப்பு தீர அருமையான உறக்கம். பிறகு அந்தி மயங்கும் வேளை...........சத் சங்கம்..........அவரவர் ஐயங்களைத் தெளிவு பட விவாத்தித்தோம்.........பல தகவல்கள்,கோவில்களின் வரலாறு, சிறு தெய்வவழிபாடு குறித்தசுவையான தகவல்கள், இப்படி எத்தையோ விசயங்கள் செவிக்குணவானது. திரும்ப இரவு நெருங்க ஆரம்பிக்க, பல மணி நேர பேருந்துப் பயணம் உடல் அலுப்பைத்தர, கட்டையை சாய்க்க அனைவரும் ஏங்குவது புரிந்தது............

ஒரு வழியாக ராமேஸ்வரம் எல்லையை வந்து சேர்ந்து விட்டோம். பேருந்தை, ஊரின் எல்லையிலேயே நிறுத்தி விட்டார்கள். ஊருக்குள் பெரிய தனியார் பேருந்துகளுக்கு அனுமதி இல்லை. காரணம், நடமாடும் மக்கள் கூட்டத்தில் இது போன்ற பெரிய வாகனங்கள் சிரமமேற்படுத்தும் என்பதால்தான். அங்கிருந்து அரசாங்க பேருந்து மட்டும் அனுமதிக்கப் படுகிறது. என்ன கொஞ்சம் புளி மூட்டையாக அடைத்துக் கூட்டி வந்தார்கள்.......அதுவும் ஒரு அனுபவம் தான்.......

ஸ்ரீராமநாதசுவாமி கோவில், தீவின் கிழக்குப் புறம், கடல் எல்லைக்கு மிக சமீபத்தில் சங்கு வடிவத்தில் அமைந்துள்ளது. இந்த்த் தீவு ஒரு அழகிய ரயில் பாலம் மூலம் மண்டபத்தின் பிரதான பகுதியை இணைக்கிறது. ஆதிகாலத்தில் இக்க் கோவில், கூரை வேய்ந்த ஒரு குடிலாகவே இருந்துள்ளது. ராமநாதபுரப் பகுதியை பல தரப்பட்ட மன்னர்கள், பல்வேறு காலகட்டங்களில் ஆட்சி புரிந்து உள்ளனர். 15 ஆம் நூற்றாண்டு வரை பாண்டிய மனனர்களும், பிற்காலங்களில் 17 ஆம் நூற்றாண்டுகளில், விஜய நகர சாம்ராஜ்ய நாயக்கர்களின் ஆட்சியில் இருந்துள்ளது.அதற்குப் பிறகு சேதுபதிகள் ஆட்சிக்கு வந்திருக்கின்றனர். இவர்கள் தான் வரைகலை மற்றும் கட்டிடக்கலைகளுக்கு தாராளமாக செலவு செய்து ராமேஸ்வரத்தை பளபளக்கச் செய்துள்ளனர்.அதில் குறிப்பிடத்தக்கவர்கள், உதயன் சேதுபதி,திருமலை சேதுபதி, ரகுநாத சேதுபதி முத்துராமலிங்க சேதுபதி போன்றவர்கள். இவர்களின் சிலை வடிவங்கள்
கோவிலிக்குள் நிறுவப்பட்டுள்ளன.

நாங்கள் கோவிலுக்கு மிக அருகில் உள்ள சத்திரத்தில் தங்குவதாக ஏற்பாடு. இரவு 10 மணியளவில் வந்து சேர்ந்தோம். நல்ல பசி நேரம் அனைவருக்கும். இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எளிமையாக வெண் பொங்கலும், இட்லியும் சட்னி, சாம்பாரும் அனைத்தும் சுடச்சுட தயாராக இருந்தது. மொத்தம் நாங்கள் 80 பேர் இருந்தோம், உணவு பறிமாரும் நபரோ ஒரே ஒருவர்தான். எல்லோரும், உடல் அசதியின் உச்சத்தில். அவரவர்களும் சாப்பிட தயாரானோமேத் தவிர பறிமார ஒருவரும் முன்வராத சூழலில், ஒரு பள்ளி ஆசிரியை சூழலை உணர்ந்தவராக தான் முதலில் வந்து பறிமார ஆரம்பிக்கவும், அதற்குப் பிறகு மற்றுமிரண்டு இளைஞர்கள் உணவு விநியோகம் செய்ய முன்வந்தனர். ஒரு
வழியாக உண்டு முடித்தாகி விட்டது.

உணவு உண்பதற்கு முன்பே படுக்கை போட அனைவரும் இடம் பிடிக்க ஆரம்பித்து விட்டனர். ஆண்கள் ஒரு புறமும், பெண்கள் ஒரு புறமும் படுக்க ஏற்பாடு. பல முறை ஏற்கனவே திருக்கூட்டத்துடன் பயணம் செய்தவர்கள், சூழலை நன்கு உணர்ந்தவராக இருந்தகாரணத்தினால், சாமர்த்தியமாக உள்ளே நுழைந்தவுடன் முதலில் இடம் பிடிக்கும் வேட்டையில் இறங்கி விட்டனர். பக்கத்திலேயே இரண்டு தங்கும் விடுதிகள் இருந்தன. சரி போய் தங்கிக் கொள்ளலாம் என்றால், அதற்கு அனுமதி கிடையாது என்றார்கள். ஆம் இது போன்று திருக் கூட்ட பயணத்தின் நோக்கமே அதுதானே. மனப்பக்குவம் அடையும் மார்கமும் இதுதானே?

ஆம், இந்த திருக்கூட்ட பயணத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள், பங்களா வாசிகள், குளிர்சாதன வசதியுடன், வேலைக்காரர்கள் வேலை செய்ய, ஆனந்தமாக வாழ்பவர்கள். ஆனாலும், யாத்திரை வருபவர்கள் தனிப்பட்ட முறையில் தங்குவதற்கு அனுமதியில்லை. இருக்கும் இடத்தில், அதாவது ஒருவர் கிடக்க, இருவர் இருக்க, மூவர் நிற்க என்ற ஆழ்வார்களின் நிலை போன்று இராது, அதைவிட சற்றே தேவலாம் போல அனைவரும் கிடக்க இடம் உண்டு. ஆண்களுக்கு ஒரு குளியல் அறை, பெண்களுக்கு ஒரு குளியல் அறை. காலை 4 மணிக்குத் தயாராகிவிட வேண்டும் என்று அறிவித்து விட்டு தலைவர் ஒரு மூலையாக படுத்து விட்டார்.

மணி இரவு 11.30. காலை 4 மணிக்குள் சுமாராக, 45 பெண்கள் அந்த ஒரே குளியல் அறையில் குளித்து விட்டு வர வேண்டும். இதை நினைத்த்வுடன், தூங்கும் எண்ணமே போய்விட்டது. கடலில் சென்று குளிப்பவர்கள் செல்லலாம். ஆனால் எப்படியிருந்தாலும், 4 மணிக்கு அனைவரும் தயாராகி விட வேண்டும். கடலுக்குச் சென்று குளிப்பது என்று முடிவு செய்த தாய்மார்கள், கவலையே இல்லாது, ஆனந்தமாக அடித்துப் பிடித்து இடம்பிடித்து, சயனம் கொண்டு விட்டார்கள். என்னவரும் தன் அண்ணன் அருகில் போய் ஒரு ஓரமாக பள்ளி கொண்டுவிட்டார். அனைவரும் எப்படியோ படுத்து விட்டனர். நானும் இன்னும் இருவரும், திருதிருவென விழித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தோம். சரி இனி படுத்தால் நேரம் போவது தெரியாமல் தூங்கி விடுவோம் என முடிவு செய்து, குளியல் அறை காலியாக இருக்கும் போதே குளித்து விட்டு வந்துவிடலாம் என்று முடிவு செய்து ஒருவாறு சென்று குளித்து விட்டு வந்து, பிறகு சிறுது நேரம்
ஓய்வெடுத்தோம்.

கடலுக்குக் குளிக்கப் போகலாம் என்று முடிவெடுத்தவர்கள் 3 மணியளவில் எழுந்து அவசர அவசரமாக கடல் நோக்கிச் சென்றவர்கள், சென்ற வேகத்திலேயே பாதி பேர் திரும்பி வந்துவிட்டனர். எப்போதும் மிக சாந்தமாக ஓடிக் கொண்டிருக்கின்ற கடல் அன்னை அன்று ஆக்ரோஷமாக ஆர்பரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து பயத்தில் குளிக்காமல் திரும்பி வந்துவிட்டனர். இங்கு வந்தால் கோவிலுக்கு செல்ல நேரம் ஆகிவிட்ட படியால், குளியல் அறைக்கு முட்டி மோதி குளிக்க வேண்டிய கட்டாயம். நல்ல வேளை நாங்கள் முன்பே குளித்து விட்டது கவலையைப் போக்கியது. இதற்குள் அவரவர்கள், தனக்கு வேண்டியவர்களையும் காப்பாற்றிக் கொண்டிருந்தது பார்க்கவேவேடிக்கையாக இருந்தது.............அந்த ஒரு நாள் ஒரு சிறு வசதிக் குறைவைக் கூட தாங்கிக் கொள்ள இயலவில்லையே நம்மால், காலம் முழுவதும் தங்க இடம் இல்லாமல் தெரு ஓரத்திலும், பிளாட்பாரத்திலும் தங்கிக் கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்களே அவர்களும் நம்மைப் போல ரத்தமும், சதையும் உள்ள மனிதர்கள் தானே!. ஆண்டவன் எவ்வளவு கருணை உள்ளவன் நம்மை இவ்வளவு சொகுசாக நிழலில் வாழ வைத்தானே, எத்துனை நன்றி சொல்ல வேண்டும் அந்த பரமாத்வாவிற்கு. வெயிலில் இருந்தால் தானே நிழலின் சுகம் தெரிகிறது?

காலையில் சொன்ன படி அனைவரும் 4.30 மணிக்கெல்லாம் கோவிலில் ஆஜராகிவிட்டோம். சிறப்பு தரிசன சீட்டு பெற்றுக் கொண்டு அதற்கே வரிசையில் 1.30 மணி நேரம் நிற்க வேண்டியிருந்தது. ஸ்படிக லிங்க பூசை திவ்யமாக பார்க்க முடிந்தது. மணி தரிசனம் என்று அழைக்கப்படுகிற இந்த பூசை அன்றாடம் காலை வேளைகளில் மட்டும் நடக்கும். பூசை முடிந்து கோவில் பிரகாரம் சுற்றி வந்தோம். பணிரண்டு சோதிலிங்கங்களில் ஒன்று இங்கிருக்கின்றது.

தென் இந்தியாவின் மிகச் சிறந்த கட்டிடக் கலையின் வடிவமான , இந்தியாவிலேயே மிகப் பெரிய கோவில் பிரகாரம் கொண்ட கோவில் இது. 22 வித்தியாசமான சுவையுடன் கூடிய நீரை உடையக் கிணறு இங்கு பிரசித்தி பெற்றதாகும். இந்தக் கோவிலின் பிரதான அம்சமே, 1219 மீட்டர் தூண்கள் கொண்ட பிரகாரம், அழகாக செதுக்கப்பட்ட 3.6 மீட்டர் உயரமுள்ள கிரானைட் தூண்கள் ஆகும்.
புராண சாத்திரங்களின்படி, ஸ்ரீராமர், சீதா தேவி மற்றும் இலக்குவணுடன், முனிவரின் உபதேசப்படி, தங்களுடைய பிரம்மஹத்தி தோசம் தீர்வதற்காக சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம்.

சேதுக்கரை என்பது ராமேஸ்வரத்திற்கு 22 கி.மீ. முன்பாக இருக்கிறது. ஆனால் எங்களுக்கு அங்கு செல்லும் வாய்ப்பு அமையவில்லை. ராமேஸ்வரத்தில் தரிசனம் முடித்து 7 மணியளவில் கிளம்பினோம். அடுத்து உத்திரகோச மங்கை. அங்கு திருவாசக முற்றோதலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அடுத்த தொடரில் அந்த சுவையான நிகழ்வைப் பற்றிக் கூறுகிறேன்.

தொடரும்.



Monday, February 14, 2011

காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி -4


மனிதவாழ்வில் மறுக்க முடியாத ஒரு உண்மை ,நாம் சந்திக்கும் நபர் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் நம்மை விட, தான் மிகவும் உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டவராகவே இருக்கின்றனர். நாம் அவருடைய இதயத்தை நெருங்க வேண்டுமாயின், நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவரைப் பற்றிய கடந்த கால நினைவுகளை ஓரளவேனும் நினைவில் கொள்வதோடு, அவர்களுடைய முக்கியத்துவத்தைமட்டும் அல்லாது ,அவருடைய தனித்தன்மையையும் கட்டாயம் நினைவில் கொண்டிருத்தல் வேண்டும். அதில் உண்மையாகவும் இருக்க வேண்டும இதுவே மனித மனங்களை நெருங்கும் டெக்னிக்.

எமர்சன் அழகாகச் சொல்லுவார்,
” Every man I meet is my superior in some way. In that, I learn of him".

அதாவது, நான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும், ஏதோ சில வகையிலேனும், என்னைவிட மேம்பட்டவராக,உயர்வான நிலையிலேயே இருக்கிறார்.அதில் நான் அவரைப் பற்றி அறிந்து கொள்கிறேன்.

நாம் பல எண்ண அலைகளும், குணநலன்களும் உடைய பல்வேறு விதமான மனிதர்களுடன் பயணம் செய்யும் போதுதான், நமக்கும் நம்மைப் பற்றியும் பல புதிய தகவல்கள் அறியும் வாய்ப்பு கிட்டும். ஆம் நம்முள் உறங்கிக் கொண்டிருக்கும் சில மிருகங்கள் கூட முழித்துக் கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். அது நாள் வரை இப்படி ஒரு மிருகம் தம்முள் உறங்கிக் கொண்டிருப்பதே தெரியாமல் கூட இருந்திருக்கலாம்.

நாங்கள் அடியார் குழுவுடன், பயணம் மேற்கொண்டது பல விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்தது. ஆம் நாம் சுகமாக உல்லாச வாகனத்திலோ, தனிப்பட்ட முறையிலோ செல்லும் போது எந்த விட்டுக் கொடுத்தலோ அல்லது அனுசரித்துப் போக வேண்டிய கட்டாயமோ ஏற்படுவதில்லை. ஆனால் பொதுவாக இது போன்று திருப் பயணம் செல்லும் வேளைகளில், நம்முடைய ஆணவத்தை முதலில் மூட்டை கட்டி தூக்கிப் போட்டுவிட வேண்டும். அடுத்து கிடைத்ததை வைத்து தன்னிறைவு கொள்ளும் தன்மை வேண்டும். பசி, தாகம், ஓய்வு, போன்ற சாதாரண விசயங்களைக் கூட கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டிய அவசியமும் ஏற்படும்.அதற்கு தகுந்தாற் போல நம் பழக்க வழக்கங்களை மாற்றியமைக்க வேண்டியும் வரும். இவ்வளவு பீடிகைக்கும் காரணம் இல்லாமல் இல்லை.


திருப்பெருந்துறை ஆன்மநாதர் அநாதி மூர்த்தராக இங்கே எழுந்தருளி ஐந்தொழில் நடத்தலால் இது அநாதி மூர்த்தித் தலமாகும். உருத்திர மூர்த்தி எழுந்தருளியுள்ள கையிலைமலை துவாத சாந்தத் தலம். ஆன்மநாதர் எழுந்தருளியுள்ள திருப்பெருந்துறை சோடாசாந்தத் தலம். இத்தலம் கையிலையைக் காட்டிலும் மேலானதாம். இத்தலத்திற்கு ஆதியும், அந்தமும் இல்லை என்கின்றனர். இத்தலத்தை அடைந்தவர்களுக்கு மீண்டும் பிறப்பு இல்லையாம். புராணங்கள் இத்தலத்திற்கு பல பெயர்கள் கூறினாலும், தற்போது ஆவுடையார் கோவில் என்ற பெயர் வழங்கி வருகிறது.


அப்பர் தேவாரம் - மூவரால் முழுப்பதிகம் பெற்றதான பாடல் பெற்ற தலப்பெயர்களின் வரிசையில் திருப்பெருந்துறை இடம் பெறவில்லை. ஆயினும் அப்பர் தேவாரத்தில் இத்தலம் வைப்புத்தலமாக இடம்பெற்று இருக்கிறது.


திருவாசகம் - மணிவாசகப் பெருமான் திருவாய் மலர்ந்தருளிய தித்திக்கும் தேனான திருவாசகம் 51 பகுதிகள் கொண்டதாகும். இவற்றுள் 20 பகுதிகள் திருப்பெருந்துறையில் இருந்து அருளிச் செய்யப்பட்டனவாகும்.அவை, சிவபுராணம், திருச்சதகம், திருப்பள்ளியெழுச்சி, செந்திலாப்பத்து, அடைக்கலப்பத்து, ஆசைப்பத்து, அதிசயப்பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, அருட்பத்து, பிரார்த்தனைப்பத்து, குழைத்தப்பத்து, உயிருண்ணிப்பத்து, திருப்பாண்டிப்பதிகம், திருவேசறவு, அற்புதப்பத்து, சென்னிப்பத்து, திருவார்த்தை, திருவெண்பா, பண்டாயநான்மறை இவை மட்டுமன்றி, திருவாசகத்தில் இத்தலமும், குருந்தமரமும் ஆங்காங்கே மிகப் பாராட்டப் பெற்றுள்ளன.
அருணகிரிநாதர் திருப்பெருந்துறைக்கு வந்து முருகனை வழிபட்டு மூன்று திருப்புகழ் பாடல்களை அருளியுள்ளதும் இத்தலத்தின் சிறப்பு.

இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும்
துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய் - அன்பமைத்துச்
சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊராகக் கொண்டான் உவந்து. - திருவெண்பா 4.11.


ஆவுடையார் கோவில் சிற்பங்கள் புகழ் வாய்ந்தவை. அதிலும் இங்குள்ள கொடுங்கை வேலைப்பாடுகள் உலகப் பிரசித்தமானவை.
தியாகராச மண்டபத்தில் மாணிக்கவாசகரின் மந்திரிக் கோலச் சிற்பமும் துறவுக் கோலச் சிற்பமும் உள்ளன. இந்த மண்டபத்தின் கொடுங்கையின் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது கருங்கல்லைத் தகடாக்கி அதிலே பல வளைவுகளை உருவாக்கிக் கூரை போட்டது போல் அமைந்திருக்கும் திறம் பெரும் வியப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். மரவேலையில் செய்யக் கூடிய நுண்கலை நுட்பங்களெல்லாம் இங்கே கருங்கல்லில் செய்யப்பட்டிருப்பதைக் காண கண் கோடி வேண்டும். மரச்சட்டங்களில் குமிழ் ஆணி அடித்தாற்போன்ற தோற்றங்களை கல்லிலும் காட்டி, தம் கைத்திறத்தைக் காட்டிய சிற்பியை புகழும் வார்த்தைகளும் அறியவில்லை. எனவேதான் திருப்பெருந்துறையின் கொடுங்கை உலகப் பிரசித்தமாக இருக்கிறது.

குதிரைச்சாமி - அசுவநாதர்:
பஞ்சாட்சர மண்டபத்திற்கு குதிரைச்சாமி மண்டபம் எனவும் மற்றொரு பெயருண்டு. இந்த மண்டபத்தூணில் குதிரைச்சாமி காட்சி தருகிறார். குதிரை பின்னிரண்டு கால்களை ஊன்றி முன்னிரண்டு கால்களை தூக்கி மேலே பாய்வது போல இருக்கிறது. வாதவூரருக்காக பெருந்துறை பெருமான் வேதப்புரவி ஏறிக் குதிரைச் சேவகராக போன தோற்றந்தான் இது. அதனால் இக்காட்சியை குதிரைச்சாமி அசுவநாதர் என்று அழைக்கின்றனர்.


மாணிக்கவாசகப் பெருமானின் பக்தி நெறியும் அவர்தம் ஒளி யாக்கை குறித்த தகவல்களும் ஐயா தங்கவிசுவநாதன் அவர்கள் ஆற்றிய உரையை ஆனந்தமாகக் கேட்டு மகிழ்ந்தோம். அவ்வுரையின் சாரத்தை மணிவாசகப் பெருமானின் பிறப்புத்தலத்திலேயே காண்பது மேலும் சிறப்பாகுமல்லவா.
திருப்பெருந்துறை தரிசனம் முடிந்து மதியம் 1.40 மணியளவில் ராமேஸ்வரம் நோக்கிப் புறப்பட்டோம். மதிய உணவு வேளை ஆகியும் சாப்பாடு பற்றி ஏதும் சொல்லாமல் கிளம்பச் சொல்கிறார்கள். அதற்கு ஏதும் பதிலே பேசாமல் அனைவரும் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு நல்ல பசி. காலை உப்புமாவே அதிக காரமாக இருந்ததால் எனக்கு இறங்கவில்லை. தண்ணீர் மட்டுமே குடித்து வயிரை நிரப்பகிக் கொண்டிருந்தேன். ‘உண்டி சுருங்குவது தானே பெண்டிர்க்கு அழகு’. ஆனால் அதற்கு மேல் பசி தாங்கும் வழியே தெரியவில்லை. அனைவரும் பேருந்தில் ஏறி அமர்ந்தாகிவிட்டது. ஒருவரும் வாயைத் திறந்து கேட்பதாக இல்லை.இளஞ்சிறார்கள் நால்வர் இருந்தனர். சரி எப்படியும் அவர்களாவது பசி என்று கேட்பார்களே, என்ற ஆவலில் அவர்கள் முகத்தைப் பார்த்தால் அவர்களும் ஒன்றுமே கேட்காமல், தங்கள் பையில் இருந்து ஏதோ நொறுக்குத் தீனியும், வாழைப்பழமும் எடுத்து உண்ண ஆரம்பித்து விட்டனர்.

சரி இது வேலைக்காகாது, நாமே மெதுவாக கேட்டுவிடுவது என்ற எண்ணத்தில், எனக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த என் ஓரகத்தியிடம், அக்கா.....என்று ஆரம்பிக்க வாயைத் திறக்கவும், பேருந்து கிளம்பவும்,

“வேயுறு தோளிபங்கன்,விடமுண்டகண்டன் மிகநல்லவீணை தடவி.மாசறு திங்கள்கங்கை முடிமேலணிந்தென்உளமே புகுந்தவதனால்...................”

என்று கோளறு திருப்பதிகம் [ ஒவ்வொரு முறை, பேருந்து நிறுத்தி இறங்கி ஏறும் போதும் கோளறு திருப்பதிகம் முழுமையாகப்பாடப்படும். தேவார ஓதுவாருடன், சேர்ந்து, பயணிகளும் பாடுவர்.]. என் குரல் அப்பதிகத்தினுள்ளே கரைந்தே போனது. ஆனால் உடன் பாட ஆரம்பித்தவுடன், பசி சற்று மறந்தாற்போலத்தான் இருந்தது. கோளறு திருப்பதிகம் முழுமையாக பாடி முடித்தவுடன், ஒரு சிறு சலசலப்பு,. அதற்குப் பின் தலைவர் எழுந்து, அன்பர்களே, என்று ஆரம்பித்து,
அடுத்து வரக்கூடிய நிகழ்வுகள் குறித்து பேச ஆரம்பித்தார்............................

தொடரும்.