Saturday, November 2, 2013

அருளுடை அன்னை சாரதா தேவியார்


பவள சங்கரி



கற்காலம் தொடங்கி, இன்றைய நவீன காலம்வரையிலும் இந்திய மண்ணில் அவதரிக்கும் பெரும்பாலான பெண்களின் நடை, உடை, பாவனைகளின் அடிப்படையில், ஆன்மிக உணர்வு நிறைந்திருப்பது வெள்ளிடைமலை. இந்த ஆன்மீக எண்ணங்களுக்கு அடிகோலுகிற, தூய்மை, பொறுமை, பக்தி, ஒழுக்கநெறி, தன்னலமற்ற அன்பு ஆகிய குண நலன்கள் பிறவியிலேயே வாய்க்கப் பெறுகிறார்கள் பெண்கள். உண்மையிலேயே நம் இந்திய வரலாற்றின் முக்கியமான பக்கங்களை நிரப்புவது இதுபோன்ற ஆத்மாக்களின் சரிதங்களையே. குறைபாடுகளைக் களைந்து தனி மனித ஒழுக்க நெறியை பின்பற்றி, அகத்தூய்மை பெறுவதே வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தோர், வாழ்வோர் எண்ணற்றவர். நாகரீகம் வளர, வளர நம் இந்தியப் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் ஓரளவு மாற்றங்கள் வந்திருப்பினும், அடிப்படையில் பெரிய மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை என்பதே சத்தியம். சாதாரண மானிடராய் இருப்பவருக்கே இந்நிலை எனும்போது, ஒரு மகானாக அவதரித்த, தெய்வப் பிறவியான அவருக்கு வாழ்க்கைப்படும் ஒரு பெண்மணி எப்படியிருப்பார் என்று சற்றே சிந்தித்துப் பார்த்தால் புரியும்.

Friday, November 1, 2013

கருந்தெய்வம் காளி கோவிலின் வரலாறு - ராணி ராசுமணியின் வரலாறு!



பவள சங்கரி



நம் இந்திய வரலாற்றில் பெண்களின் சாதனைப் பட்டியலை எடுத்துக்கொண்டால் அவை பெரும்பாலும் தன்னலமற்ற சேவைகளின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. மெழுகுவர்த்தியாக தம்மைத்தாமே ஆகுதியாக,  மக்கள் சேவையே மகேசன் சேவையாகக் கருதி தொண்டாற்றும் எத்தனையோ தெய்வப் பிறவிகளை நம் வரலாறு சந்தித்துக்கொண்டுதானிருக்கிறது. குடத்திலிட்ட விளக்காக எத்தனையோ சேவைகள் வெளியில் தன்னை வெளிச்சம் போட்டு காட்டிக் கொள்ளாவிட்டாலும், அதன் பலாபலன்கள் மூலமாக பிரகாசிக்கத்தான் செய்கிறது. அப்படிப்பட்ட அவதாரங்களின் கீர்த்தி எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் வானும், மண்ணும் இருக்கும்வரை நிலைத்து நிற்கத்தான் செய்கிறது. அந்த வகையில், பல்வேறு விதமான சமூகக் கட்டுப்பாட்டுத் தளையில் சிக்கிக்கொண்டிருந்த காலகட்டங்களிலும் தன்னலமற்ற தன்னுடைய அரிய சேவையால் தம் பிறவிப்பயனை அடைந்த  ஒரு பெண்மணி, ராணி ராசுமணி.  ஸ்ரீராமகிருஷ்ணரின் மண்ணில் தோன்றிய மற்றொரு மாணிக்கம் இவர்.



கருந்தெய்வம் காளி கோவிலின் வரலாறு - ராணி ராசுமணியின் வரலாறு!


பவள சங்கரி

நம் இந்திய வரலாற்றில் பெண்களின் சாதனைப் பட்டியலை எடுத்துக்கொண்டால் அவை பெரும்பாலும் தன்னலமற்ற சேவைகளின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. மெழுகுவர்த்தியாக தம்மைத்தாமே ஆகுதியாக,  மக்கள் சேவையே மகேசன் சேவையாகக் கருதி தொண்டாற்றும் எத்தனையோ தெய்வப் பிறவிகளை நம் வரலாறு சந்தித்துக்கொண்டுதானிருக்கிறது. குடத்திலிட்ட விளக்காக எத்தனையோ சேவைகள் வெளியில் தன்னை வெளிச்சம் போட்டு காட்டிக் கொள்ளாவிட்டாலும், அதன் பலாபலன்கள் மூலமாக பிரகாசிக்கத்தான் செய்கிறது. அப்படிப்பட்ட அவதாரங்களின் கீர்த்தி எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் வானும், மண்ணும் இருக்கும்வரை நிலைத்து நிற்கத்தான் செய்கிறது. அந்த வகையில், பல்வேறு விதமான சமூகக் கட்டுப்பாட்டுத் தளையில் சிக்கிக்கொண்டிருந்த காலகட்டங்களிலும் தன்னலமற்ற தன்னுடைய அரிய சேவையால் தம் பிறவிப்பயனை அடைந்த  ஒரு பெண்மணி, ராணி ராசுமணி.  ஸ்ரீராமகிருஷ்ணரின் மண்ணில் தோன்றிய மற்றொரு மாணிக்கம் இவர்.



‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்பார்கள். ஆனால் பொன் போன்றதொரு புதன் நந்நாளில்  செப்டம்பர் மாதம் 1793ம் ஆண்டில், வங்காள தேசத்தில் கொல்கத்தா நகரின் சில மைல்கல் தொலைவில் உள்ள கோனா என்னும் ஊரில் அவதரித்தவர். இவருடைய தந்தையார் ஹரேகிருஷ்ணதாஸ் ஒரு கூலித்தொழிலாளி. தாய் ராம்பிரியா மற்றும் சகோதரர்கள் ராமச்சந்திரா மற்றும் கோவிந்தா ஆவர். ராசுமணி என்ற இவருடைய பெயருடன் செல்லப்பெயரான ராணியும் சேர்ந்து ராணி ராசுமணியானது. இளம் வயதிலேயே காளிதேவியின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி, ராமாயணம் மற்றும் மகாபாரதக் காவியங்களின் மீது கொண்டிருந்த ஈடுபாடு காரணமாகவும், தம் பெற்றோரின் வழியில் வைஷ்ணவத்தில் ஈடுபாடும் கொண்டதனால்  மிகவும் தாழ்த்தப்பட்ட சாதி என்று சொல்லப்படுகிற ஒரு சாதியில் பிறந்திருந்தாலும் எளிதாக மக்களின் இதயங்களைக் கவர்ந்தார்.  தன்னுடைய ஏழாவது அகவையிலேயே தாய் ராம்பிரியாவை இழக்க வேண்டிய பெரும் துக்கத்தில் தள்ளப்பட்டார். மூன்று ஆண்டுகள் அதன் பாதிப்பில் நொந்து போயிருந்தாலும் விரைவில் மீண்டும் வந்தார். விதியின் வசத்தால் மிகவும் ஏழ்மை நிலையிலிருந்த ராணி ராசுமணி அதிசயத்தின் அதிசயமாய் இறையருளால் ஒரே நாளில் ஊரில் மிகப்பிரபலமான மற்றும் மிகப்பெரிய கோடீசுவரியானார்.

ஹௌரா மாவட்டத்தின் கோஷல்பூர் நகரைச்சேர்ந்த பிரித்திராம் தாஸ் என்பவர் மிகப்பிரபலமான தொழிலதிபர். தன்னுடைய முதுமையுடன் சேர்த்து இளைய மகன் ராஜ்சந்திராவின் தனிமையின் சோர்வும் அவரை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியிருந்தது. ராஜ்சந்திராவிற்கு இரண்டும் முறை திருமணம் முடித்தும் இரு மனைவிகளும் மிகக் குறுகிய காலத்திலேயே இறந்து போய்விட்டனர். மூன்றாவது திருமணம் செய்து கொள்ளும் மனநிலையில் மகன் இல்லாததே அவருடைய மிகுந்த சோகத்திற்கு காரணமானது. ஒரு நாள் ராஜ்சந்திரா ஹூக்லி மாவட்டத்தில் திரிவேணியில் கங்கை நதியில் குளிப்பதற்காக படகில் சென்றார்.  அச்சமயம் படித்துறையின் வழியாக கடந்து செல்லும் அந்த கருணை மிகு, தெய்வீக அழகு நிறைந்த சிறுமியைப் பார்த்தவுடன் அந்த அபரிமிதமான அழகில் மயங்கி, அவளையே மணம் புரிய விரும்புவதாக தந்தையிடம் கூறுகிறார். மகனின் இந்த விருப்பம் தெய்வ சங்கல்பம் என்று மிக மகிழ்ச்சியாக ராணி ராசுமணியை அவர்  பெற்றோரிடம் பெண் கேட்டு, இத்திருமணம் 1804ம் ஆண்டு, ராசுமணியின் 11ம் வயதில்  கொல்கத்தா நகரின் ராஜ்சந்திராவின் மாளிகையில் நடந்தது. இந்த இளம் வயதில் திடீர் மாற்றத்தை எதிர்கொண்டாலும் அந்த சிறுமி ராணி ராசுமணி தன் எளிமையையும், இறை பணியையும் இழக்கவில்லை. தன்னுடைய மாமனார் மற்றும் மாமியாரின் சேவைகளையும் தம் அன்றாடக் கடமைகளில் ஒன்றாக சேர்த்துக்கொண்டாள். இத்தோடு நில்லாமல் குடும்பத்தின் ஏனைய பொறுப்புகள் அனைத்தையும் அவள் திறமையாக கையாண்ட விதமும்,  அவளுடைய அறிவுக்கூர்மையும் கணவனின் நம்பிக்கையை பெறச் செய்ததால், எல்லா முக்கியமான முடிவுகளையும் அவளைக் கேட்டே எடுக்கும் நிலை ஏற்பட்டது.

1817ம் ஆண்டு, தன்னுடைய 64வது வயதில் பிரித்திரம் தன்னுடைய ஏராளமான சொத்துகளை மகனுக்குக் கொடுத்துவிட்டு இறந்துபோனார். ராஜ்சந்திரா தன்னுடைய பரந்த சேவையுள்ளம் காரணமாக பெரிதும் மதிக்கப்பட்டார். 1823ல் ராணி ராசுமணி தன் தகப்பனை இழந்தார். அதே ஆண்டில் அப்பகுதியில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் காரணமாக வீடு, வாசல் தங்கள் உடமைகள் என அனைத்தையும் இழந்த மக்களுக்குத் தாராளமாக தம் உதவிக்கரம் நீட்டினார். தங்கள் வீட்டினருகில் கங்கையின் மீது மலைப்பாதை மிகவும் மோசமான நிலையில் ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக இருந்தது. அந்தப் பாதையை அதற்கான உயரதிகாரிகளிடம் பேசி அனுமதி பெற்று, தன் கணவரிடமும் இது பற்றி விரிவாக எடுத்துச்சொல்லி அவருடைய ஒப்புதலையும் பெற்று, செப்பனிடும் பணியையும் முடித்து, அவருடைய பெயரிலேயே பாபு காட் மற்றும் பாபு சாலை என்ற பெயரில் 1830ம் ஆண்டு அந்த முக்கியமான சாலை  திறக்கப்பட்டது.

விதியின் விளையாட்டு ஆரம்பமானது. 1836ல் ஜூன் மாதத்தில் தன்னுடைய 49வது வயதில் மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக இவருடைய கணவர் திடீரென்று உயிர் நீத்தார். தன்னுடைய 44 வது வயதில் மூன்று பெண் குழந்தைகளுக்கும் திருமணம் ஆன நிலையில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வாழ்ந்தார் ராணி ராசுமணி. இந்த வேதனை தாளாமல் மூன்று நாட்கள் அன்ன ஆகாரமோ, நீரோ கூட பருகாமல் இருந்தார்.  ஆனாலும் பிரிந்த அந்த ஆன்மாவிற்காக மிகச் சிறப்பான முறையில் சிரார்த்த பூசை செய்தார். வந்தவர்கள் அனைவருக்கும் இல்லை என்று இல்லாமல் வேண்டுவதையெல்லாம்  அளித்து அனுப்பினார். அந்த விழா முடியும் தருவாயில் ஒரு இனிமையான சம்பவம் நடந்தது.  பல ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்சந்திராவிற்கு, ஸ்ரீ ரகுநாதரின் திரு உருவப்படத்தை தினசரி வழிபாட்டிற்காக பரிசாக வழங்கிய  அதே துறவி ஒருவரும் எதிர்பார்க்காத அன்று மீண்டும் தோன்றினார். ராசுமணி மிகவும் மகிழ்ந்து, வணங்கி  ஏதேனும் பரிசு பெற்றுக்கொள்ள வேண்டுமென்று மன்றாடினார். ஆனால் அந்தத் துறவியோ ஒரு கம்பளியும், தண்ணீர் குவளையும் மட்டுமே பெற்றுக்கொண்டு ஸ்ரீரகுநாதரைப் பார்த்துவிட்டு, ஆசி வழங்கிச் சென்றார். ராசுமணி இதனைத் தன் ஆன்மீகத் தேடலுக்கான  நல்லதொரு சகுனமாகக் கருதினார். ஆன்மீகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டாலும், கணவரை இழந்த நிலையில் அந்த மிகப் பெரிய சொத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் அதனால் பல விதமான நெருக்கடியான சூழல்களைச் சமாளிக்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டது. காளியின் மீது தான் கொண்ட ஆழ்ந்த பக்தியின் காரணமாக துணிச்சலாக அனைத்தையும் கையாண்டார். இவையனைத்திற்கும் உதவியாக தனது வலக்கரமாக செயல்பட்டவர் இவருடைய மருமகனான மதுரநாத் பிஷ்வாஸ்.

அந்த கட்டுப்பாடான காலத்தில் ராணி ராசுமணி மனித உரிமைக்காக வெளிப்படையாக, துணிச்சலாகக் குரல் கொடுத்தார்.  மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பிரித்தானிய அரசாங்கம் மீன் பிடிப்பதற்கு வரி விதித்தது. இந்த நேரத்தில்தான் ராணியின் முடிவெடுக்கும் திறன் இப்பிரச்சனைக்கு தீர்வாக அமைந்தது. பிரித்தானிய அரசாங்கத்திடம் கங்கையில் மீன் பிடிக்கும் உரிமையைப் பெற முடிவெடுத்தார்.  அந்த காலத்தில் மிகப்பெரிய தொகையான ரூ.10,000 கொடுத்துவிட்டு அந்த உரிமையையும் பெற்றார். அடுத்து உடனடியாக அவர் செய்த காரியம் கங்கை நதியைச் சுற்றி தடுப்பு சுவர் அமைத்ததுதான். இதனால்  கப்பல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதனால் பிரித்தானிய அரசாங்கம் அதனை நீக்கச் சொல்லி பேச்சு வார்த்தை நடத்தியபோது, தான் ரூ 10,000 கொடுத்து வாங்கிய மீன்கள் கப்பல் போக்குவரத்தினால் சிரமத்திற்கு உள்ளாகிறது என்று வாதிட்டார். பிரித்தானிய அரசாங்கம் செய்வதறியாது, அவரை சமாதானம் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதற்கான தீர்வாக மீன்பிடி வரியை நீக்கிவிட்டு, தன்னுடைய பணத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டால் தான் தடுப்பணைகளை நீக்கி விடுவதாகக் கூறினார். பிரித்தானிய அரசும் அதனை ஒப்புக்கொண்டு வரியையும் நீக்கி, பணத்தையும் திருப்பிக் கொடுத்தது. இப்படி ஒரு தனி மனுசியாக தன் இராசதந்திரம் மூலமாக ஒரு அரசாங்கத்தையே தம் கட்டுக்குள் வைத்திருந்ததற்கு ஆதாரமாக பல சம்பவங்கள் நடந்ததை வரலாறு கூறுகிறது.



அதற்கு ஆதாரமான மற்றொரு நிகழ்ச்சி. தன்னுடைய ஜன்பஜார் மாளிகையில் துர்கா பூசைக்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார் ராணி. ஏழு அடுக்கு மாடியும், 300 அறைகளும் கொண்ட தன்னுடைய அந்த மாளிகையே விழாக்கோலம் பூண்டு   கோலாகலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.  அதற்கான தீர்த்தம் எடுத்து வரவேண்டி குருக்கள் குழு விடியலில் ஊர்வலமாக மேள தாளங்களுடன் கங்கை நோக்கிச் சென்றனர். செல்வாக்கும் வசதியும் நிறைந்த ஐரோப்பியர்கள் பலர் குடியிருந்த இடம் அது. விடியலில் இந்த ஊர்வலமும், மேள தாளமும் அவர்களின் உறக்கத்தைக் கலைக்க அதனால் கோபம் கொண்ட ஒருவர் ராணியின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க  மேற்கொண்டு ஊர்வலம் நடத்தத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் ராணியோ அந்தத் தடையை மீறி ஊர்வலம் நடத்தினார். அதனால் அவருக்கு 50 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஒரு வார்த்தையும் பேசாமல் உடனே அபராதத்தைச் செலுத்தியவர், அன்றைய தினமே பாபுகாட் சாலையில் மூங்கிலால் ஒரு தடுப்புச்சுவரை ஏற்படுத்தினார். அவருடைய சொந்த சாலையில் தடுப்புச் சுவர் ஏற்படுத்தியதை ஒன்றும் செய்ய முடியாமல் போனாலும் தெற்கிலிருந்து மேற்கு கொல்கத்தாவிற்கும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வருவதற்கான போக்குவரத்தும் சுத்தமாக நின்றுபோனது. அரசாங்கத்தினர் பலமுறை இவரிடம் வேண்டியும் அந்தத் தடுப்பை நீக்க மறுத்தார். தன்னுடைய உரிமையான இடத்தில் தான் எதையும் செய்ய முடியும் என்று உறுதியாக வாதிட்டார். இறுதியில் வேறு வழியில்லாமல் அரசாங்கம் அவருடைய அபராதத் தொகையைத் திருப்பிக் கொடுத்ததோடு விடியற்காலையில் கங்கையில் தீர்த்தம் எடுக்கச் செல்லும் ஊர்வலத்திற்கான தடையையும் நீக்கினர்.  அதன்பின் தடுப்புச் சுவரை நீக்கி போக்குவரத்திற்கு வழி செய்தார். அன்னை மாகாளியின் அருளால் அஞ்சா நெஞ்சமும், பொறுமையும் உடன்வர பல்வேறு நலப்பணிகளை செய்து முடித்தார் ராணி ராசுமணி.  ஒரு முறை சில குடிகார பிரித்தானிய இராணுவ வீரர்கள் ராணியின் மாளிகையில் நுழைந்து தகராறு செய்தபோது சற்றும் தயங்காது தானே அவர்களைத் தாக்க ஆரம்பித்தார் அந்த வீரப்பெண்மணி. தெய்வாதீனமாக  அந்தப்புறம் கடந்து சென்ற ஒரு அதிகாரியின் மூலமாக அவரும் அவருடைய சொத்தும் காப்பாற்றப்பட்டது. இதுபோன்று பல்வேறு சம்பவங்களில் அவருடைய தனித்திறமை மற்றும் துணிச்சல் காரணமாக தன்னையும், தம் சொத்தையும் காப்பாற்றிக்கொண்டார். காளியின் துணை இருக்கும்வரை தன்னை ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று திடமாக நம்ப ஆரம்பித்தார். 

ஏழைகளுக்கும், நலிவடைந்தவருக்கும் தன் உதவிக்கரம் தயங்காது நீட்டி பெரும் சேவைகள் புரிந்திருந்தாலும்,  இன்றளவும் ராணியைப்பற்றி நினைக்கும்பொழுதெல்லாம் அவருடைய காளி பக்தியே முதன்மையாக நினைவிற்கு வரும். ராணியின் வாழ்க்கையில் திடீரென எதிர்பார்க்காத சில சம்பவங்கள் நடக்கத் தொடங்கின. தம்முடைய பிறவிப்பயனை அடையக்கூடிய காலமும் கனிந்து வந்தது எனலாம். பல காலமாக பனாரசில், காசிவிசுவநாதரையும், அன்னபூரணி அன்னையையும் தரிசித்து வரவேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தார். அது கனிந்து வரும் காலம் வந்தபோது பிரயாண ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடந்தது. ராணி படகில் பிரயாணம் செய்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 24 படகுகள் ஏற்பாடாகியிருந்தது.  ஆறு மாதங்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் தயாராக இருந்தது. உணவு மற்றும் மற்ற பொருட்களுக்காக ஏழு படகுகள், தனக்காக ஒரு படகு, தன் மூன்று மகள்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்காக , இரண்டு படகுகள் பாதுகாப்பாளர்களுக்காக, இரண்டு படகுகள் பணியாளர்களுக்காக, நான்கு படகுகள் மற்ற உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக, துணி துவைப்பவர்களுக்காக ஒரு படகு,  நான்கு பசுக்கள் மற்றும் கன்றுக்காக ஒரு படகு, என்று அனைத்தும் தயாரான நிலையில் ராணி ராசுமணி மிகவும் ஆர்வமாகக் காத்துக்கொண்டிருந்தார். காசி விசுவநாதரையும், அன்னபூரணியையும் தரிசிக்கப்போகும் ஆனந்தத்தில் இருந்தார்.  அப்படி ஒரு சூழலில்தான் ஒரு அதிசயம் நடந்தது. அடுத்த நாள் கிளம்பப்போகும் மகிழ்ச்சியில் இருக்கும் அந்த வேளையில் அன்று இரவு ராணி ராசுமணியின் கனவில் தோன்றிய அன்னை காளிதேவி, “காசிக்குச் செல்ல வேண்டியத் தேவை இல்லை.  கங்கை நதிக் கரையின் ஒரு அழகிய இடத்தில் எனக்கு ஆலயம் அமைத்து அன்றாட வழிபாடு மற்றும்  நைவேத்தியமும் ஏற்பாடு செய்வாயாக. யாம் அங்கு எழுந்தருளி உன்னுடைய தினசரி வழிபாட்டை ஏற்றுக்கொள்ளப் போகிறோம்” என்றார். உள்ளம் பூரித்துப்போன  இராணி ராசுமணி பயணத்தை நிறுத்திவிட்டு உடனடியாக அடுத்த நாளே பயணத்திற்காக ஏற்றிய பொருட்கள் அனைத்தையும் ஏழை மக்களுக்கும் தேவையானவர்களுக்கும் கொடுத்துவிட்டு காளியின் பாதாரவிந்தங்களுக்கு அன்றாடம் பூசை செய்யும் வகையில் ஆலயம் கட்டும் பணியைத் துவக்கினார்.



முதலில் ஆலயம் எழுப்புவதற்கான ஒரு தகுதியான இடத்தை முனைந்து தேடி, கங்கை நதியின் வடபுறம் தட்சிணேசுவரம்  கிராமப் பகுதியில் 20 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்தார். ஆமையின் பின்புறப் பகுதியைப் போன்ற தோற்றமுடையது அந்த நிலம். அந்த நிலத்தின் ஒரு பகுதி ஒரு ஆங்கிலேயருடையதும் மற்றொரு பகுதி ஒரு முகமதிய சமயப் பெரியவரின் நினைவாக இருந்த இடுகாட்டு நிலம். இப்படி ஒரு இடுகாட்டுப் பகுதியே தந்திரங்களின் அடிப்படையில் சக்தி தேவிக்கும் அவள்தம் உபாசனைக்கும் உகந்த இடம் என்பார்கள். 1847ம் ஆண்டில் ஆலயம் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. ஆலயம் கட்டி முடிக்க எட்டு ஆண்டுகள் ஆனது. விஷ்ணு ஆலயம் மற்றும் 12 சிவாலயங்களும் கட்டப்பட்டன. நிலத்திற்கு ரூ 50,000, கட்டிடத்திற்கு 160,000 ரூபாயும், காளி கோவில் வளாகத்திற்கு 900,000 ரூபாயும், மற்றும் ரூபாய் 226,000 கோவிலை நிர்வாகம் செய்வதற்கான இருப்புத் தொகைக்கான சொத்தாகவும் அந்தக் காலத்திலேயே மிகப் பெரிய தொகையாக செலவு செய்து பிரம்மாண்டமாக எழுப்பப்பட்ட கோவில் இது. கோவில் முடியும் தருணம் வரும்போதே அவர் பூசை நேய நியமனங்களில் முழுமையாக ஆழ்ந்திருந்தார். தினமும் மூன்று முறை குளித்து, மிக எளிய உணவை உட்கொண்டு, பெரும்பாலான நேரங்களை தியானம் மற்றும் அன்னையின் திருநாமங்கள் உச்சாடணையிலேயே  கழித்துக் கொண்டிருந்தார். 



ராணியின் விருப்பத்திற்கேற்ப அன்னையின் திருவுருவ மேனி அழகாக அமைந்த பின்னும் அம்மனின் உருவத்தை ஆலயத்தின் கருவறையினுள் எழுந்தருளச் செய்ய தகுந்த நாளுக்காக காத்துக்கொண்டிருந்தார். நாட்கள் சென்று கொண்டிருந்தது. அன்னையோ ஒரு பேழையில் பத்திரமாக பூட்டி வைக்கப்பட்டிருந்தார். ஒரு நாள் இரவு மீண்டும் கனவில் தோன்றிய காளிமாதேவி , “இன்னும் எவ்வளவு நாட்களுக்குத்தான் என்னை இப்படி அடைத்து வைத்திருக்கப் போகிறாய்?  எனக்கு ஒரே புழுக்கமாக இருக்கிறது, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம்  கருவறையில் பிரதிஷ்டை செய்” என்று கட்டளையிட்டிருக்கிறார்.  உடனே அதற்கான பணிகளை முடுக்கிவிட்டார் ராணி. அப்போது வேலையாட்கள் அம்மன் வைத்திருந்த பேழையைத் திறந்த போது அம்மனின் திருமேனி வியர்வையில் நனைந்திருப்பதைக்  கண்டு ஆச்சரியப்பட்டனர்.

உடனே ராணி தீர்த்தவாரி நாளன்று அன்னையை கருவறையினுள் பிரதிஷ்டை செய்யத் திட்டமிட்டார். அனைத்தும் தயார் நிலையில் இருந்தது.  காளி கோவிலை கட்டி முடிப்பதற்குள் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருந்தாலும், செலவு, சக்தி, என அனைத்தும் மிக அதிகமாக ஆனாலும், எல்லாப் பணிகளும் செவ்வனே நடந்து முடிந்தபோதிலும், இறுதியாக அந்த பிரம்மாண்டமான பிரச்சனையில் வந்து நின்றது. ஆம், சாதிப்பிரச்சனை தலை தூக்கியது அங்கு!  ராணி பிராமணர்கள், மற்ற உயர் சாதிப் பிரிவினரின் அபிமானம் பெற்றிருந்தாலும், அத்துனை பெரிய சொத்திற்கு அதிபதியாக இருந்தபோதிலும் அவர் ஒரு கீழ் சாதிப்பிறப்பாகவே பார்க்கப்பட்டார். அதனால் அவர் கோவிலின் சொந்தக்காரராகவும், பிராமணர்களுக்கு உணவு சமைப்பதையும் விரும்பக்கூடிய நிலையில் இருக்கமுடியவில்லை. ராணி பல பண்டிதர்களுடனும் ஆலோசனை பெற்றாலும் ஒருவராலும் இதற்கான தீர்வைச் சொல்ல முடியவில்லை. இந்த நேரத்தில்தான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மூத்த சகோதரர் ராம்குமார் அந்த காலகட்டத்தில் இருந்த கட்டாயமான பிராமணிய சட்டத்தைக் கடைபிடிக்கும் முகமாக ஒரு தீர்வைச் சொன்னார்.



ஆலயம் ராணியின் குரு மற்றும் ராம்குமார், அதிகாரப்பூர்வமான அர்ச்சகர் ஆகியோரின் பெயரில், காளிதேவியின் சிலையை, ஒரு வியாழன்று, மே மாதம் 31ம் நாள் 1855ம் ஆண்டில் கருவறையில் பிரதிஷ்டை செய்தார். பல பிரபலமான சாஸ்திரிகள், பிராமண பண்டிதர்கள், பக்தர்கள்,  ஞானிகள், காசி, ஒரிசா, நவதீப் போன்ற வெகு தூர தேசத்திலிருந்தும் வந்திருந்தனர். மிகப்பரந்த மனம் கொண்ட ராணி சாதி, மதம் என்ற எந்த பாகுபாடும் இன்றி, காளிமாதேவி ஆலயத்தை நிர்மாணிக்கும் குறிக்கோளை அடைந்துவிட்டார். சாதுக்களும், மத குருமார்களும், யாத்ரீகர்களும், கங்காசாகர் அல்லது பூரி ஆலயத்திற்குச் செல்லும் வழியில் தக்சினேசுவரத்தில் தங்கி அன்னையின் தரிசனமும் பிரசாதமும் பெற்று தியானம் செய்து வழிபட்டு நிறைவாகச் சென்று கொண்டிருந்தனர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர், தன்னுடைய 19 வயதில் விஷ்ணு ஆலயத்தில் பூசாரியாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டபோது முதலில் மறுத்தவர் பின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஒப்புக்கொண்டார். பல விதமான சாதுக்களின் தரிசனங்கள் பற்றியும் சிலாகித்துக் கூறுகிறார் இவர். அவர் முன்னிலையிலேயே ஒரு துறவி நிர்வாணமாக உடல் முழுவதும் சாம்பலைப் பூசிக்கொண்டு நீண்ட முடியும், நகங்களும் கொண்டு, எரிந்த உடலிலிருந்து எடுக்கப்பட்டது போன்ற சாம்பலை மேனியில் பூசிக் கொண்டிருந்தவர், காளி தேவியைப் பற்றிய பாடலை கோவிலே அதிரும் வகையில் உரக்கப் பாடியதை அன்னை மகிழ்ச்சியுடன் புன்னகைத்து ரசித்ததை ஸ்ரீராமகிருஷ்ணர் நேரில் கண்டதாகக் கூறுவார். ஒரே வருடத்தில் ராம்குமார் இறந்துவிட, ஸ்ரீராமகிருஷ்ணர் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ராணி இவருடைய காளி பக்தியில் மனமுறுகிப்போவார். காளி மீதான அவருடைய பாடல்களை மெய் மறந்து கேட்டுக் கொண்டிருப்பார்.

ஒரு நாள், ஸ்ரீராமகிருஷ்ணர் அன்னை காளிமாதேவியை ஆழ்ந்த ஏக்கத்துடன் அழைத்து மனமுறுக பாடிக் கொண்டிருக்கும்போது, எதிரில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த ராணியை திடீரென்று ஓங்கி கன்னத்தில் அறைந்துவிட்டார். அதிர்ந்து நின்றிருந்தவரைப் பார்த்து, “என்ன செய்கிறாய் நீ, இந்த புனிதமான இடத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு உலக விசயங்கள் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறாயா” என்று சப்தமிட, உடனே காவலர்கள் ஓடிவந்து அவரை வெளியில் இழுத்துவிட முயற்சிக்க, ராணியோ அதைத் தடுத்து அன்னை காளிதேவியே ராமகிருஷ்ணர் உருவில் வந்து தன்னை மிரட்டியதாக எடுத்துக்கொண்டார். உண்மையிலேயே தான் ஒரு வழக்கு பற்றி எண்ணிக் கொண்டிருந்தது அவருக்கு எப்படித் தெரிந்தது என்று மிகவும் அதிசயப்பட்டார்.

1861ம் ஆண்டில் ராணி மிகவும் நோய்வாய்ப்பட்டார். தன் இறுதி நாட்களை உணர்ந்து கொண்டவர், தென் கொல்கத்தா நகரின் காலிகட் பகுதியில் இருந்த தோட்டவீட்டில் குடியேறினார். ஆதி கங்கையின் கரையில் இருந்த இல்லம் அது. தன் இறுதிக் காலம் வந்துவிட்டதை அறிந்து தான் முடிக்காமல் விட்ட ஒரு பணியான தக்சிணேசுவர கோவிலின் நிர்வாகப் பணிகளுக்கான கையிருப்புப் பணத்திற்கான சொத்தை கோவில் பெயரில் மாற்ற வேண்டிய பெரும் பணியை உடனடியாகச் செய்து முடித்த அடுத்த நாளே தன்னுயிரையும் இழந்தார். 1861, பிப்ரவரி 19ம் நாளில் இயற்கை எய்தினார். இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால், அவர் கங்கை நதிக்கரைக்கு கொண்டுவரப்பட்டார். அது இரவு வேளையாதலால் விளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தன. ராணி ராசுமணி, “அந்த விளக்குகளை நிறுத்துங்கள். இந்த செயற்கையான பிரகாசம் இனி எனக்குத் தேவையில்லை. இதோ என் தாய் வந்துவிட்டாள். அவளுடைய ஞான ஒளி இந்த இடம் முழுவதும் நீக்கமற  நிரம்பியிருக்கிறது.” என்று சத்தமிட்டவர் சற்று நேரத்திலேயே, “அம்மா, நீங்கள் வந்துவிட்டீர்களா!” என்று சொல்லிக்கொண்டே தன் இன்னுயிரை விட்டார்.  அன்னையே நேரில் வந்து தன் அன்பு மகளை அள்ளி அணைத்துச் சென்றாள்!

நீண்ட தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு பெண்ணாக இருந்தாலும், ராணி ராசுமணி தன் கோவில் நிர்வாகத்திற்காக சேர்த்து வைத்திருந்த சொத்தை பயன்படுத்த முடியாத அளவிற்கு அவரே எதிர்பார்க்காத, 1947ம் ஆண்டின் இந்தியப் பிரிவினை வந்தது. இவருடைய நிலம் பங்களாதேச எல்லைக்குட்பட்டிருந்ததாலும், அரசாங்கம் அவருடைய அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ததாலும் அன்று முதல் தக்சிணேசுவரத்தின் காளி கோவில் இவருடைய சொத்திலிருந்து வந்த வருமானத்தில் நிர்வகிக்கப்படவில்லை என்பதுதான் வருத்தமான செய்தி. அனைத்தும் அன்னையின் விளையாட்டு!

இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்!


வணக்கம் நண்பர்களே,

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!



அனைவரும் நலமா? ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி வரத்தான் செய்கிறது. ஆனால் கூடவே மாற்றங்களும் வந்துகொண்டுதான் இருக்கிறது. சென்ற ஆண்டுபோல் இந்த ஆண்டு இல்லை. அடுத்த ஆண்டு எப்படியிருக்குமோ தெரியாது. இன்று மகிழ்ச்சியாக உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொண்டு கொண்டாடிவிட்டுப்போகலாமே, இல்லையா? நாளைபற்றி யார் அறிவார்? அரசியலில் ஆரம்பித்து, சமுதாயம், குடும்பம், தனிப்பட்ட முறையில் என எத்தனை, எத்தனை மாற்றங்கள். இளம் வயதில் அப்பா, அம்மாவிடம் பட்டாசும், புதுத் துணியும் சண்டை போட்டு வாங்கியதில் இருந்த மகிழ்ச்சி இன்று நம் விருப்பம்போல வாங்கிக் கொண்டாடுவதில் இல்லை. அன்று என் சகோதரிகளுடன் சண்டை போடுவேன் அப்பா மொத்தமாக வாங்கிப் போடும் துணியில் நான் தான் முதலில் தேர்ந்தெடுத்துக்கொள்வேன் என்று! அதில் எத்தனை தில்லாலங்கடி வேலையெல்லாம் செய்வோம். நாம் விரும்பிய உடையும் பட்டாசு பங்கில் ஒரு மத்தாப்பு பெட்டி அதிகம் கிடைத்துவிட்டாலோ ஏதோ உலகமே நம் காலடியில் கிடப்பதுபோல அப்படி ஒரு பெருமை. தலை நிமிர்ந்து நடந்து செல்வோம். இன்று அப்படி சண்டை போடவும் ஆளில்லை எனும்போது விருப்பமும் குறைந்து போகிறது. பெற்றோர்கள் ஒரு புறம், பிள்ளைகள் ஒரு புறம், நாம் ஒரு புறம் எப்படியோ காலமும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது, கணினி வழியாகவும், தொலைபேசி வழியாகவும்! இதோ தெருவே இன்று அமைதியாக இருக்கிறது. ஒரு காலத்தில் விடியலில் 3 மணிக்கே தெருவெல்லாம் ஜெகஜோதியாக இருக்கும். பட, பட.. சட.சடவென எங்கு பார்த்தாலும் சத்தம் காதைப் பிளக்கும். நாங்களெல்லாம் சந்தோசமாக விடியலில் எழுந்து அவ்வளவு சீக்கிரம் தலைக்குக் குளித்துவிட்டு புத்தாடை உடுத்திக்கொண்டு பட்டாசு வெடித்து முடித்து, பிறகு பலகாரங்கள் ஒரு பிடி, பிடித்துவிட்டு, அடுத்து அம்மா அக்கம் பக்கத்து வீடுகளுக்கு பலகாரம் கொடுத்தனுப்புவார்கள். மகிழ்ச்சியாக ஒடுவோம். புத்தாடையைக்காட்டி பெருமைப்பட வேண்டுமே.. அந்த மகிழ்ச்சியெல்லாம் இன்றைய பெரும்பாலான குழந்தைகளுக்கு கிடைக்காமலே போய்விட்டது. தெருவில் பாதி குடும்பம் வெளிநாட்டில். குழந்தைகள் இல்லாமல் தொலைக்காட்சி முன்பு பெற்றோர். எங்கிருந்து பட்டாசு சத்தம் கேட்கும்.. போகிற போக்கில் இந்த வாழ்க்கையே பழகிவிடும் போல் உள்ளது!

எது எப்படியோ தீபாவளி என்ற அந்த சொல் ஒரு இன்பத்தை கொடுக்கத்தான் செய்கிறது. அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்களே. அனைவரின் வீட்டிலும் மங்கலம் பொங்கட்டும்! எங்கள் மனமார்ந்த பிரார்த்தனைகள்.

அன்புடன்
பவள சங்கரி
திருநாவுக்கரசு

Monday, October 28, 2013

அம்பலவாணா... அம்பலவாணா..




பவள சங்கரி


அம்பலவாணா.. அம்பலவாணா
அருளாளா ஆனந்தவாணா

பொருளியலில் உழன்றுய்ந்தேனே
பொற்பாதம் சேரவரம் அருளாயோ
காலமெலாம் காத்துக்கிடந்தேனே
காதலிலுருகி உளம்நொந்தேனே

அம்பலவாணா.. அம்பலவாணா
அருளாளா ஆனந்தவாணா!

Sunday, October 27, 2013

சித்தன்னவாசல்



பவள சங்கரி

 ‘குயிலின் கீதமும், கிளியின் கிரீச் ஒலியும் கூட சங்கடப்படுத்துமா என்ன..  வாழ்க்கையின் அடித்தளமே ஆட்டம் காணும்போது இதெல்லாம்கூட  பாரமாகி  சலிப்பேற்படுத்தத்தானே செய்கிறது. அழகு என்ற சொல்லே எட்டிக்காயாய் கசக்கிறதே. அது குயிலாக இருந்தால் என்ன, இல்லை மயிலாக இருந்தால் என்ன, அழகு எங்கிருந்தாலும் அது ஆபத்துதான்.. என்ன இது என் நினைப்பில் இவ்வளவு விரக்தி, இது தப்பாச்சே. தைரியத்தை விடக்கூடாது’...

சரசு தனக்குள் சொல்லிக்கொண்டாலும் அது உள்ளத்தின் ஆழத்தில்  இருந்ததுதான். இல்லாவிட்டால் இந்த 35 வயதில் 300 முறை செத்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு ஒசத்தியான வாழ்க்கையல்லாவா கிடைத்திருக்கிறதுமுதல் அடி விழுந்த அந்த மோசமான நாளை இன்னைக்கும் மறக்க முடியுமா...