Thursday, March 9, 2017

சர்வதேச மகளிர் தினம் (2017)






ஆதி மனிதம் உருவானது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு என்றாலும் குரங்கிலிருந்து முதன் முதலில் தோன்றியது மூதாய் என்று நம் அறிவியல் அருதியிட்டுக்கூறும் பெண் தான் அவள். ஆதியில் பெண்ணே தலைமை வகிப்பவளாகவும், வேட்டையாடி உணவைக் கொண்டுவருபவளாகவும், சமுதாயத்தை வழிநடாத்துபவளாகவும் இருந்தாள். நாகரிகம் வளர ஆரம்பித்தவுடன் பொதுவுடமைக் கொள்கைகளில் மாற்றம் காண ஆரம்பிக்கவும், தனியுடைமைக் கொள்கை, அரசியல், மத நிறுவனங்கள் தலை தூக்க ஆரம்பித்தன. அறிவியல் கண்டுபிடிப்புகள் உருவாக ஆரம்பித்தன. மெல்ல மெல்ல ஆண் தலைமைப் பொறுப்பை ஏற்க ஆரம்பித்தான். முதல் விஞ்ஞானி, முதல் விவசாயி, முதல் ஞானி என அனைத்திலும் பெண்களே முன்னிலை வகித்திருந்தனர். ஆனாலும் சட்டங்கள், கருத்தாக்கங்கள், சமூக அமைப்புகள் என அனைத்திலும் பெண் ஓரங்கட்டப்பட்டு ஆண் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டான். மெல்ல மெல்ல அவள் வீட்டிற்குள் முடக்கப்பட்டு, குறுகிய எல்லைகளை வகுத்து, இறுதியாக இரண்டாந்தர குடிமக்களாகவும் ஆக்கப்பட்டாள். 15ஆம் நூற்றாண்டின் பிறகு ஐரோப்பிய நாடுகள் பெரும் அரசியல் மாற்றங்களைச் சந்தித்த பிறகு மனித உரிமைச் சிந்தைகள் எழுச்சியுற்றன.