Thursday, March 1, 2012

புடம் போட்ட தங்கம்!


வல்லமையில் மகளிர் வாரம்!


சௌந்திரம் ராமச்சந்திரன் (1905-1984)


நம் பாரதத் தாயின் மடியில் மலர்ந்த எண்ணற்ற மலர்களில் சேவை மணம் பரப்பி நம் தாயின் மானம் காத்த புனிதமான மலர்கள் பல. தாய்த்திரு நாட்டிற்காக தம் வாழ்க்கையையே அர்ப்பணித்த அத்தகைய நறுமணம் மிக்க மலர்களில் ஒரு தனிப்பெரும் மலர்தான் டாக்டர். சௌந்திரம் ராமச்சந்திரன். நெல்லை மாவட்டத்திலுள்ள சின்னஞ்சிறிய கிராமம் திருக்குறுங்குடி. வேதநெறி தவறாமல் வாழ்ந்த வைதீக பிராமணக் குடும்பங்கள் வாழ்ந்த அந்த செழுமையான கிராமத்தில்தான் வாழ்ந்தது டி.விஎஸ் நிறுவனத்தாரின் குடும்பம். இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழிலில் கொடிகட்டிப் பறந்தவர்களில் இந்த நிறுவனமும் ஒன்று.

1905ஆம் ஆண்டில், மகாத்மா காந்தியடிகள் ஆரம்பித்து வைத்த ஆக்கப்பூர்வமானப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட சமூக சேவகி டி.வி.எஸ்.லட்சுமிக்கும், டி.வி.சுந்தரம் ஐயங்கார் அவர்களுக்கும் பிறந்த செல்ல மகள் சௌந்திரம். உழைப்பின் உன்னதத்தை உணர்ந்த ஓர் குடும்பம் இவருடையது. பத்து வயதிலேயே வீணை வாசிப்பதிலும் வாய்ப்பாட்டிலும் தேர்ச்சி பெற்று வீணைவித்வான் முத்தையா பாகவதர் போன்றோரைத் தம் கலையார்வம் மூலம் வியப்பில் ஆழ்த்தியவர் இவர். இவருடைய சகோதரர்கள் டி.வி.எஸ். நிறுவனங்களின் அதிர்பர்களாக இருந்தும் , அன்றாடம் பணியாட்களுடன், தாமும் ஒரு பணியாளாக, அழுக்கு கைகளும், கருப்பு ஆடையுமாக பணிபுரிவதோடு, அப்பணியாட்களுடனேயே, உண்ணுவது போன்ற சமத்துவமும், அவர்களின் மீதும் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் மீதும் முழு அக்கரை செலுத்துபவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். தாய் லட்சுமி அம்மாள், மகாத்மா காந்தியின், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்திட்டத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். இவரது குடும்பமே ஒட்டு மொத்தமாக, தொழிலாளர் நலப்பணிகளிலும், சத்துணவு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் திட்டங்கள் ஆகியவற்றில் முழு கவனம் செலுத்தியவர்கள். குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில், அரசாங்கம் திட்டமிட்ட காலத்திற்கு வெகு முன்னரே இவர்கள் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.திரு டி.வி சுந்தரம் ஐயங்கார், தேசப்பற்றும் மிக்கவராக இருந்த காரணத்தினால் காங்கிரசுடன் தொடர்பு கொண்டு பணியாற்றிக் கொண்டிருந்ததால் பாரதியார், சுப்பிரமணிய சிவா போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் இவர் இல்லத்திற்கு அடிக்கடி வந்து தேசியப் பிரச்சனைகளைப் பற்றி விவாதிப்பதுண்டு. அப்படிப்பட்ட விவாதங்களின் போது சிறுமியான சௌந்தரமும் அருகில் இருப்பார். இதனால் சின்ன வயதிலேயே இவர் மனதிலும் தேசப்பற்று ஆழமாக வேர் விட்டுப் பதிந்துவிட்டது. வைதீகக் குடும்பங்களில் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவது அந்தக் காலத்திய வழமையாக இருந்தது. அதன்படி, டி.வி.சுந்தரம் அய்யங்காரின் சகோதரியின் மகன் சௌந்தரராஜன் என்பவருக்கும் , சௌந்தரத்திற்கும் 1918ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. அப்போது சௌந்தரத்திற்கு 12 வயது. மணமகனுக்கோ 16 வயது. திருமணமானவுடன் அவர்கள் சென்னை திருவல்லிக்கேணியில் குடியேறினார்கள். சில வருடங்களிலேயே சௌந்தரத்திற்கு குழந்தையும் பிறந்தது. மிகச் சிறிய வயதிலேயே பிரசவமும் ஆனதால், குறைப்பிரசவமாகி ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. துன்பம் என்பதே தெரியாமல் செல்வச் செழிப்பில் வளர்ந்த பெண்ணிற்கு இது பெரும் சோகமானது. இருப்பினும் இந்தச் சோகத்திற்கு மருந்தாக கணவர் சௌந்தரராஜன் மருத்துவக் கல்லூரியில் தேர்ச்சி பெற்று மருத்துவர் பட்டம் பெற்றது ஆறுதலளித்தது அவருக்கு.அருகிருந்த ஓர் மாதர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பெரும்பாலான நேரங்கள் பொதுப்பணியில் ஈடுபடத் தொடங்கினார்.

மதுரையையும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களையும் பிளேக் நோய் தாக்கிய காலமது. பிளேக் நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற, கணவரும் மனைவியும் இரவு பகல் பாராமல் தொண்டாற்றினார்கள். ஒரு முறை கணவர் ஒரு பிளேக் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து முடித்து விட்டு, தம் கையுறையை நீக்கிய போது, தாம் பயன்படுத்திய ஒரு கையுறையில் ஓட்டை இருப்பதைக் கண்டவர் அருகிலிருந்த தம் உதவியாளரிடம், நகைச்சுவையாக, “ஒரு வேளை நான் செப்டிகேமியா நோயினால் பாதிக்கப்பட்டு இறப்பேனானால் அதற்குக் காரணமாக இந்தக் கையுறையாகத்தான் இருக்கும்” என்றாராம். சில நேரங்களில் இது போன்ற வாக்குகள், பறந்து கொண்டிருக்கும் தேவதைகளின் ‘ததாஸ்து’ என்ற ஆசியினால் அப்படியே நடந்து விடும் என்பார்கள். அதன் காரணமாகவே நல்ல வாக்கு மட்டுமே நம் வாயிலிருந்து வர வேண்டும் என்பார்கள் சான்றோர்கள். அந்த வகையில், எந்த நேரத்தில் இப்படி ஒரு வார்த்தை சொன்னாரோ, அம்மருத்துவர் அவர் சொன்னபடியே அதே செப்டிகேமியாவினால் இறந்தே போனார். இறக்கும் தருவாயில், தான் இறந்த பின்னர் மனைவி விதவைக் கோலம் பூணக் கூடாது என்பதிலும், தன்னைப் போல் மருத்துவராகி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்றும்,. விரும்பினால் மறுமணம் செய்து கொள்ளலாம் என்றும் வாக்குறுதிகள் பெற்றுக் கொண்டார் அவர் கணவர். இளம் பருவத்தின் வாசலில் நிற்கும் ஒரு பெண்ணிற்கு இதெல்லாம் மிக அதிர்ச்சியான விசயமானது. தாங்கொணா துயரத்தை மறந்து, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துப் படித்து, தம் கணவரின் விருப்பப்படி அவர் பணியைத் தொடர முடிவு செய்தார். திரும்பவும் கல்வியைத் தொடரும் பொருட்டு, முதலில் மெட்ரிக்குலேஷன் தேர்வை எழுதி முடித்து பின்பு 1928இல் தில்லியில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். மருத்துவப் படிப்பை முடித்தவுடன் சென்னை திரும்பியவர், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியுடன் சென்று சேர்ந்தார். இருவரும இணைந்து குழந்தைகளுக்கான அவ்வை இல்லமும், கிராம மக்களுக்காக அவ்வை சுகாதார சேவை மையங்களும் அமைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்நாளில் அது மிகவும் பிரபலமானது

ஏழைக் குழந்தைகளின் கல்வி சம்பந்தமாக பல் உதவிகள் செய்து கொண்டிருந்த சௌந்திரம் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்ற தம் நெருங்கியத் தோழி சுசீலா நய்யார் அவர்களின் தொடர்பால், பல தேசத் தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். சுசீலா நய்யார் அவர்கள் அண்ணல் காந்தியடிகளைச் சந்திக்கச் செல்லும் போதெல்லாம் சௌந்தரத்தையும் அழைத்துச் செல்வார். அப்போது மகாத்மா காந்தி சேவாசிரமத்தில் சேர்ந்து பணிபுரிந்த தென்னிந்திய இளைஞரான ஜி.ராமச்சந்திரனைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது அம்மையாருக்கு.தொடர்ந்து சௌந்திரம் அவர்கள்,பெண்களுக்கு பிரசவ நேர மருத்துவம் பற்றிய அறிவியல் ஆய்வு மற்றும் மகளிர் நோய் மருத்துவ இயல் பற்றிய பட்டயப் படிப்பை மேற்கொண்டார். அப்போது தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கச் செயலாளராக ஜி.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டார். தில்லியில் ஆரம்பித்த இவர்களது நட்பு சென்னையிலும் தொடர்ந்தது. மதுரை அரசு மருத்துவமனையில் கௌரவ உதவி மருத்துவராக பணியில் அமர்ந்தார். தனியாக ஒரு மருத்துவமனை ஆரம்பித்து ஏழை எளிய மக்களுக்கு உதவினார். மதுரையில் மருத்துவராக சேவை செய்த முதல் பெண்மணி இவர்தான்.

1940ம் ஆண்டு, நவம்பர் மாதம் , இந்தியாவில், ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்திற்கு முன்பாக சௌந்தரம் அவர்கள், டாக்டர் ஜி.ராமச்சந்திரனை விரும்பி, மறுமணம் செய்து கொண்டார். சேவாசிரமத்தில் காந்தி முன்னிலையில் இவர்கள் திருமணம் நடந்தது.காந்தி இராட்டையில் தம் கையால் நூற்ற நூலில் செய்யப்பட்ட தாலிக் கயிற்றை ராமச்சந்திரன் சௌந்தரம் கழுத்தில் கட்டினார். காந்தி நூற்ற நூலில் நெய்யப்பட்ட வேட்டியை, மணமகனும் அன்னை கஸ்தூரிபாய் நூற்ற நூலில் நெய்யப்பட்ட சேலையை சௌந்தரமும் திருமண ஆடையாக அணிந்து கொண்டார்கள்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது கேரள மாநிலத்தின் கிராமங்களில் பயணம் செய்து ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு வித்திட்டார். 1942ம் ஆண்டு, டிசம்பர் மாதம் திருமதி சௌந்திரம் ராமச்சந்திரன் அவர்கள் கேரளாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். தம் தாய் வீடு நோக்கி மதுரைக்கு வந்து சேர்ந்தவரை , பெற்றோர் ஏற்க மறுத்தனர். காரணம் பிராமணர் அல்லாத வேற்று சமூகத்தவரான ராமச்சந்திரனை இவர் திருமணம் செய்து கொண்டதால் ஏற்பட்ட மனக்கசப்பு. தவிர, பிராமணப் பெண்கள் மறுமணம் செய்வது பாவச் செயல் என்று கருதப்பட்ட காலம் அது. ராமச்சந்திரன் புகழ்பெற்ற ஒரு ஆங்கில தினசரிக்கு ஆசிரியரானார். இருவரும் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றனர். பிற்காலத்தில் இவர் தாய் லட்சுமி அம்மாள் சமாதானம் ஆனாலும், இவர் தந்தையின் உறுதி சற்றும் தளர்வதாய் இல்லை. இறுதி வரை ராமச்சந்திரன மாமனார் வீட்டிற்குச் செல்ல முடியாமலே போனது. ஆயினும், தம் மகளுக்குச் செய்ய வேண்டிய கடமையில் எந்த குறையும் வைக்கவில்லை பெற்றோர். தங்கள் மகன்களுடன் ,மகளுக்கும் சொத்தை சரி சமமாகப் பங்கிட்டுக் கொடுத்தனர். தம் சொத்து முழுவதையும், இவருடைய கடின உழைப்பிற்கும், நிர்வாகத் திறமைக்கும் ஆதாரமான நினைவுச் சின்னமாக ஆத்தூர் தொகுதியில் உள்ள காந்திகிராம பயிற்சிப் பள்ளியை முன்னேற்றுவதற்கே செலவு செய்தார் என்பதும் போற்றுதலுக்குரியது. கிராமச் சேவைக்கென்றே சின்னாளப் பட்டியைத் தேர்வு செய்து 1947இல் ஒரு தொடக்கப்பள்ளி, கிராம சேவை பயிற்சிப் பள்ளி மற்றும் கிராம மருத்துவ விடுதி ஆகியவற்றைத் தொடங்கினார். இன்று அவைகள்தான் காந்தி கிராமிய பல்கலைக்கழகமாகவும், கிராமிய அறக்கட்டளைகளாகவும் மென்மேலும் வளர்ந்து நிமிர்ந்து நிற்கின்றன.

1940களில் நூற்றுக்கணக்கானவர்கள் அண்ணல் காந்தியடிகளின் தேசப்பற்றின் மீது ஈடுபாடு கொண்டு தங்களால் ஆன சேவையைச் செய்ய முன் வந்தவர்களுள் சௌந்திரமும் ஒருவர். பன்முகங்கள் கொண்ட காந்திகிராமம் உருவாவதற்கான இரு முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டில் நடந்தன. பிப்ரவரி 2இல், 1946ஆம் ஆண்டு, மதுரைக்குச் செல்லும் புகைவண்டியை, பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரிகளிடம், கட்டாயப்படுத்தி, அண்ணல் காந்தியடிகள் பயணம் செய்யும் அந்த ரயிலை சின்னாளப்பட்டி என்ற கிராமத்தில் நிறுத்தி அண்ணலை தரிசித்து, ஆசி பெறும் பொருட்டு நடத்தப்பட்ட கிளர்ச்சி முதலாவது சம்பவமாகும். மற்றொன்று அவருடைய புரட்சிகரமான திருமணம் ஆகும்.

ஆரம்பத்தில் சௌந்தரம் அம்மையார், ஒரு சாதாரண குடிலில், இரண்டே படுக்கை வசதி கொண்ட ஒரு மருத்துவமனையையும், அனாதை ஆசிரமும் நிறுவுவதன் மூலம் ஆரம்பித்த இவர்களது சேவை, திரு ராமச்சந்திரன் பாடம் சொல்லிக் கொடுப்பதில் தொடர்ந்து, மருத்துவ உதவி, ஆரம்ப சுகாதார நிலையம், கிராமப்புற வேலை வாய்ப்புகள், உற்பத்திப் பொருட்களின் விற்பனை வசதி, சேமிப்பு மற்றும் கடன் பெறும் திட்டங்கள், குழந்தைகள் நலம், முதியோர் இல்லம், போன்ற பல துறைகளில் இவர்களின் நேசக்கரங்களின் சேவைப்பணிகள் தொடர்ந்து கொண்டிருந்தன. கதர் ஆடைகள் தயாரிப்பை ஊக்குவிப்பதன் மூலமாகவும், சோப் தயாரித்தல், ஆயுர்வேத மருந்துகள் தயாரித்தல் போன்றவைகள் மூலமாகவும் ஏழ்மையை விரட்ட திட்டமிட்டார். காதி மற்றும் கிராம தொழிற்சாலைகள் வாரியத்தின் துணைத்தலைவரானார் இவர்.

டாக்டர் சௌந்திரம் அவர்கள் குழந்தைகளுக்கான ஓர் அனாதை இல்லமும் மற்றும் ஆதரவற்ற மகளிருக்கான ஓர் இல்லமும், காந்திகிராமில் ஆரம்பித்தார். இந்த இரண்டு இல்லங்களும் இன்றளவும் நன்றாக நடந்து கொண்டிருக்கின்றன. குடும்பக் கட்டுப்பாடு மையங்களும், சுகாதாரப் பணியாளர்களுக்கான பயிற்சி மையங்களும் மிகச்சிறந்த முறையில் நடத்தப்படுகின்றன. 1952ஆம் ஆண்டில் சௌந்தரம் அம்மையார், அரசியலில் பங்குபெற்று, சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே வருடம், அக்டோபர் 2ஆம் நாள், மதுரை மாவட்டத்தின், சமுதாய வளர்ச்சித் திட்டத்தின் பொறுப்பேற்று அத்திட்டத்தின் கௌரவ திட்டக்குழு அதிகாரியாக நான்கு ஆண்டுகள் பணி புரிந்தார்.

மதுரை மாவட்டத்தில் வினோபாஜி பாத யாத்திரை சென்றிருந்த போது பூதான இயக்கத்தில் சௌந்திரமும் தீவிரமாகப் பங்கு கொண்டார். 1955ம் ஆண்டின், முன்னேற்றப் பணிக்கான தேசீய விருது காந்திகிராமம் அமைந்துள்ள ஆத்தூர் தொகுதிக்கு , அதன் சிறந்த ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பிற்காக வழங்கப்பட்டது. 1956இல், சௌந்திரம் அம்மையார், இந்திய – சைன நல்லுறவை வலியுறுத்தும் பிரதிநிதியாகவும், சைனாவின், கிராமப்புற வளர்ச்சி செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும் சென்றிருந்தார். 1957இல் சௌந்தரம் அம்மையார் சென்னை சட்டமன்றத்திற்கு திரும்பவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இந்த முறை மிகவும் பின் தங்கிய தொகுதியான வேடச்சந்தூரில் நின்று , கல்வி, சுகாதாரம், பேருந்து போக்குவரத்து மற்றும் மின் இணைப்பு, போன்றவற்றின் வசதிகளை மக்களின் முழு ஒத்துழைப்புடன் பெருக்கிக் கொள்ளச் செய்தார்.

காந்தியின் நான்கு அருங்காட்சியகங்களில் ஒன்றை , டாக்டர் ராம சுப்பிரமணியம் அவர்களின் உதவியுடன் மதுரையில் நிறுவினார் சௌந்திரம் அம்மையார். இங்கு பள்ளி மாணவர்களுக்காக மிகச் சுவையான நிகழ்ச்சிகளுடன், நாள் முழுவதும் அங்கு பல விசயங்களைக் கற்றுக் கொள்ள செலவிடுவதுடன், திரும்பும் போது அதைப் பற்றி ஒரு சிறு குறிப்பும் எழுதி விட்டுச் செல்லும்படி திட்டமிட்டு, அந்தப் பரீட்சைத் தாள் மதிப்பிடப்பட்டு அவர்களிடமே அளிக்கப்படும். இந்த முறை மாணவர்களுக்கு காந்தியக் கொள்கைகளையும், காந்தியடிகளின் வாழ்க்கை முறைகளையும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வழியாக இருக்கிறது. 1960இல், அவர் காதி மற்றும் கிராமத் தொழிற்சாலைகள் வாரியம் ஆகியவற்றிற்கு உப தலைவராகவும், திரு பக்தவச்சலம் அவர்கள் தலைவராகவும் இருந்தார். இரண்டே ஆண்டுகளில் காதி தன் உற்பத்தியை இரு மடங்காக்கியதுடன் தற்போதைய குறளகத்திற்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

சௌந்தரம் அம்மையார் துணைக் கல்வி அமைச்சராக ஐந்து ஆண்டுகள் பதவி வகித்தார். இந்த பதவிக் காலத்தில் அவர் பெண்களுக்கான கிராமப்புற நிறுவனங்களைத் துவக்கினார். அதில் ஒன்று கஸ்தூரிபா கிராம் மற்றும் இன்றும் செயல்படுகிற இந்தூர் நிறுவனமுமாகும். கிழக்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த சாதிக் கலவரங்களை, கிராம சேவகர்கள் மற்றும் கிராம சேவகிகளின் தலைமைகள் மூலமாக கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வருவதில் பெரும் பங்களித்ததால் அப்பகுதியில் அமைதி நிலவுவதற்கு வழிவகுத்தார். காந்திகிராம கஸ்தூரிபா மருத்துவமனை, 1971-72 மற்றும், 72-73 க்கான , குடும்ப நலத்திட்டத்திற்கான தேசீய விருதைப் பெற்றது. காதியை இவர் மிகச் சிறப்பாக ஊக்குவித்ததன் விளைவாக அதன் உற்பத்தியின் மதிப்பீடு மூன்றரை கோடியாகியது. 3000 பேர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை வாய்ப்பில் 2000 பேர்கள் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1980 முதல் 1984 வரையிலான ஆண்டுகளில் காந்திகிராம நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் தலைவராகப் ப்தவி புரிந்தார்.

1980களில் இறுதியில் சௌந்திரம் அம்மையார் நோய்வாய்ப்பட்டதனால், மெல்ல மெல்ல தம் பொறுப்புகளை ஒவ்வொன்றாக விட வேண்டியதாகியது. அக்டோபர் மாதம் அதே வருடத்தில் அவருடைய இறுதி மூச்சு இம்மண்ணின் காற்றில் கரைந்தது. வறுமையும், சாதி, மதக் கலவரங்களும் நடக்கும் இடங்களுக்கெல்லாம் ஓடோடிச் சென்று தம் உதவிக் கரங்களை நீட்டும் அந்த உன்னத ஆத்மா ஆழ்ந்த அமைதி கொண்டது தீராத துயரமானது. தம்முடைய வசதியான வாழ்க்கையைத் துறந்து, ஏழை எளிய மக்களுக்காக , குறிப்பாகப் பெண்களுக்காக தம் வாழ்நாள் முழுவதையும், எண்ணற்ற தியாகங்கள் மூலமாக பல்வேறு சேவைகள் செய்தவர் இவர். காந்திகிராமம் வாழும் வரை இவரும் வாழ்ந்து கொண்டிருப்பார் என்பதே நிதர்சனம். எல்லையற்ற அன்பும், பொறுமையும், இரக்க குணமும், உதவும் உள்ளமும் கொண்ட பெண்மணி சௌந்தரம் அம்மையார் என்றால் அது மிகையாகாது.

படத்திற்கு நன்றி : http://www.goodnewsindia.com/Pages/content/institutions/gandhigram.html

Wednesday, February 29, 2012

5 பதிவர்களுக்கு விருது + எனக்குப் பிடித்த ஏழு விசயங்கள்


நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொப்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை - குறள் 789

அன்பு நண்பர் பதிவர் வீடுதிரும்பல் versatile Blogger (பலதுறைகளிலும் திறமையுடைய வலைப்பதிவர்) என்கிற தனக்குக் கிடைத்த விருதை நால்வருக்கு பகிர்ந்தளித்திருக்கிறார். அதிலும் என்னையும் கருத்தில் கொண்டு சேர்த்திருப்பதற்கு மனமார்ந்த நன்றிகள். இந்த விருதிற்கு தகுதியுடையவளாக இனிமேலாவது என்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஊக்கமளித்திருக்கிறார். அவருடைய அன்புக்கட்டளையை சிரமேற்கொண்டு, எனக்குப் பிடித்த ஏழு விசயங்கள் + ஐந்து வெர்சடைல் பிளாகர் பற்றி எழுதுகிறேன். உண்மையைச் சொன்னால், குடும்பம், குழந்தைகள் என்ற முழு சிந்தையில் ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கையில் இந்த எழுத்தும் , வலைப்பதிவர்களின் ஆக்கங்களை இரசிப்பதுவும், அந்த ஊக்கங்களினால் என்னை நானே மேம்படுத்திக் கொள்ள போராடுவதுமே என் ஓய்வு நேர பொழுது போக்காக இருக்கும் போது எனக்கும் பிடித்த அதாவது எனக்கே எனக்காகப் பிடித்த விசயங்கள் என்று கேட்ட போது..... ரூம் போட்டு யோசிக்க வேண்டியிருந்தது என்பதுதாங்க உண்மை!

அடுத்தவர் நிலையில் இருந்து நம்மைப்பற்றி நாம் சிந்திக்கும் போதுதாங்க பல விசயங்கள் நமக்கே புதிதாகத் தெரிகிறது.... அட, பரவாயில்லையே இவ்ளோ நல்ல விசயங்கள் உனக்குப் பிடிக்கிறதா என்று என்னை நானே பாராட்டிக் கொள்ளவும் தோணுது... அதே சமயம் நம்மைப் பிடிக்காதவர்களின் நிலையிலிருந்து நம்மையே பார்க்கும் போது நம்முடைய தவறுகளும், நம் மீது அதிருப்தியைக் காட்டுபவர்களின் பக்கம் உள்ள நியாயங்களும் புரிகிறது. ஆக, எதையோ நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் இயந்திர வாழ்க்கையில் இது போன்று தற்சோதனை செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றது வரம்... இதன் காரணகர்த்தாவை அறிய விருப்பம்... இந்த சங்கிலித் தொடர் நல்லபடியாக அனைவரையும் சென்றடைய வாழ்த்துகள்! சரி விசயத்திற்கு வருகிறேன். எனக்குப் பிடித்த ஏழு விசயங்கள் இதோ......

Inline image 2
(1) என்னை எப்பொழுதும் கொள்ளை கொள்ளும் இயற்கை அன்னைக்கே அந்த முதல் இடம். அந்த இயற்கை அழகில் அப்படியே கரைந்து நின்று விடுவேன். மனமும், உடலும் இளகி அப்படியே வானில் பறப்பது போன்று தோன்றும். வண்ண வண்ண அழகிய மலர்களும், அதைச் சுற்றிச் சுற்றி நாட்டியமாடும் வண்ணத்துப் பூச்சிகளும், சல்சலப்பில்லாமல் அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் தெளிந்த நீரோடையும், தென்னை மரங்களும், நெல் வயல்களும், சுவர்க்க பூமிதான்... என் இளமைக் காலங்களில் பாட்டியுடன், விடுமுறை நாட்களில் அப்படி ஒரு சுவர்க்க பூமியில், கழித்த மறக்க முடியாத நாட்கள்... கற்பனையில் மட்டுமே இப்போது சாத்தியம்... அப்படி என்னையே மறந்து, அதனுள்ளேயே கரைந்து, மறைந்து போய்விட மாட்டோமா என்று பித்தாகி, ஏங்கி நின்ற ஓர் இயற்கை அதிசயம் என்றால் அது நயாகரா நீர்வீழ்ச்சிதான்.... மெய்மறந்து, கரைந்துறுகி, கண்ணில் நீர் மல்க, வைத்த கண் வாங்காமால், இரசித்த அனுபவம்... ஆடலரசரின் திருநடனத்தையேக் கண்டு களித்தது போன்று ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவம். அருமையான தியானம்!

Inline image 4
(2) அன்றாடம் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை துணிந்து நின்று எதிர் கொள்ளும் நல்ல நண்பர்களை மிகவும் பிடிக்கும்... அடுத்தவர் துன்பத்தைக் கண்டு மனம் பொறுக்காதவர்கள், தானே ஓடி வந்து எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் வலிய உதவி செய்பவர்கள்.... பலரைச் சொல்ல முடியும். ஆனால் சிலரை மறந்து விட்டு விட்டால் அவர் மனம் புண்படுமே என்று எவரையும் குறித்து சொல்லவில்லை.. ஆனால் அவர்களெல்லாம் கட்டாயம் புரிந்து கொள்வார்கள்.

(3). எனக்கு அதிகம் பிடித்த என்று சொல்வதை விட, நான் அதிகம் நேசிக்கும், அதாவது தெய்வத்திற்கு சமமாக வழிபடும் அன்பே சிவங்கள்..... ஆம் தெய்வக் குழந்தைகளின் பெற்றோர். வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் பலவிதமான இன்னல்களையும், சவால்களையும் சந்திக்கக் கூடியவர்கள்... தங்களுடைய, இன்பம், உல்லாசம் என அனைத்து சாதாரண விசயங்களைக்கூட தியாகம் செய்யும் பெற்றோர். நான் அறிந்த ஒரு தம்பதியர் ஆறு ஆண்டுகள் குழந்தை இல்லாமல் பல கோவில்களும், விரதங்களும் மேற்கொண்டு போராடிப் பெற்ற குழந்தை ஹைபர் ஆக்டிவ் பாதிப்பினால் தங்கள் வாழ்க்கையில் அனைத்தையுமே தியாகம் செய்து அக்குழந்தையை நல்ல முறையில் வளர்ப்பதற்காகவே இந்த 11 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருப்பவர்கள்... நடமாடும் தெய்வங்கள்!

(4) நல்ல உணவு சமைப்பதும், அதை ருசித்து சாப்பிடுவதும் ரொம்ப பிடிக்கும். இண்டர்நேஷனல் உணவு வகைகளை சுவைப்பதில் மிகுந்த விருப்பம.. ஆனால் சைவ உணவு வகைகள் மட்டுமே.. சில வருடங்கள் முன்பு சுத்த சைவமாக மாறிவிட்டேன்... சைனீஸ் உணவு வகைகளும், தாய்லாந்து உணவு வகைகளும் மிகுந்த விருப்பம் உண்டு...இனிப்பு வகைகள் என்றால் கேட்கவே வேண்டாம்...
Inline image 5

(5) பயணம்:

பயணம் செல்வது மிக பிடித்தமான விசயம். அது தொலைதூர நீண்ட விமானப் பயணமாக இருந்தாலும், ரயில் அல்லது பேருந்து , உல்லாச உந்து இப்படி எதுவானாலும் கொண்டாட்டம்தான்.... பலவகையான மக்களையும், அவர்தம் வித்தியாசமான பழக்க வழக்கங்களையும் பற்றி அறிந்து கொள்வதிலும், அங்குள்ள இயற்கை அழகையும் ரசிப்பதிலும் தனி சுகம்தான்.
Inline image 6

(6) சுகமான சுமைகள்:

என் பலமும் இதுதான்..... பலவீனமும் இதுதான்.....

சுழன்று சுழன்று சூறைக் காற்றாய் சுற்றியடிக்கும் பாசம்!
நெருக்கி நெருக்கி திணறச் செய்யும் பாசம்!
நெருங்கி நெருங்கிச் செல்ல வழுக்கிச் செல்லும் பாசம்!
பிரித்து, பிரிந்து பேரிடர் செய்யும் பிரிய பாசம்!
பழித்து, கிழித்து இதயம் பிளக்கும் பாசம்!
சிரித்து, சிறைப் பிடித்து சித்தம் கலக்கும் பாசம்!
மறைத்து, மறைந்து மனதை மயக்கும் பாசம்!
கொடுத்து, பிடுங்கி கொடுமையாய் கும்மாளமிடும் பாசம்!
அடித்து, அணைத்து அசட்டையாய் அன்பு பொழியும் பாசம்!
நெருங்கினால், பிரிந்து, பிரிந்தால் நெருங்கி சாலம் காட்டும் மாயம்!
[அந்த பாசம்]

(7) இன்ப கானம்:

ஜேசுதாஸ், எஸ்.பி.பி. சித்ரா, இவர்களின் மெலோடி பாடல்கள் கண்களை மூடி மெய்மறந்து இனிமையா இரசிக்கப் பிடிக்கும். குறுக்கில் எந்த இடையூறும் இருக்கக் கூடாது... ஆயிரம் முறை கேட்டாலும் சரி முதல் முறை கேட்பது போல ஆரம்பத்திலிருந்து , இறுதி வரை எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக கேட்க வேண்டும். பயண நேரங்களிலும், இரவு நேரங்களிலும், நிசப்தமாக கேட்கப் பிடிக்கும்..... எம்.எஸ் அம்மாவின் குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா என்றும் என் விருப்பத் தேர்வு.... அன்பே சிவம் பாடல் தொடர்ந்து பல முறை கேட்டாலும் அலுக்காதது... பணி நேரங்களில் பாட்டு கேட்பது பணியை பாதிக்கும்... அதனால் பணி நேரத்தில் பணி மட்டும், பாட்டு கேட்பதற்கு அதற்கான தனி நேரம்...சில நண்பர்களின் கவிதைகள் மிகவும் பிடிக்கும்.எளிய நடையில் படித்தவுடன் புரிய வேண்டும்...

ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம் என்றில்லாமல் நாலு பேருக்கு நல்லது செய்தோம் என்று இருக்க வேண்டும். கண்களை நிரந்தரமாக மூடிய பின்னும் நமக்காக நாலு பேர் உண்மையாக நாலு சொட்டு கண்ணீர் விடவேண்டும், சற்று பேராசைதான் என்றாலும், அதுவும் ஒரு குறிக்கோளாய் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை!

ஐந்து பேருக்கு விருதைப் பகிர்ந்து கொடுக்க வேண்டும் அல்லவா..? நிறைய பேர் ஏற்கனவே விருது பெற்று விட்டார்கள் போல் உள்ளது... இப்போது நான் குறிப்பிடப் போகிறவர்களும் ஏற்கனவே பலப்பல முறைகள் பலப்பல விருதுகள் வாங்கியிருக்கக் கூடும். இருப்பினும் என் திருப்திக்காக கொடுக்கிறேன்...
Inline image 7

சிறுகதைகள், கவிதைகள், சுய முன்னேற்றம், ஆன்மிகம் மற்றும் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள் என்று அறிவுத் தேடலில் திளைத்திருப்போருக்கான ஒரு வலைப்பூ...என்.கணேசன் அவர்களின் வலைப்பூ...

தெள்ளுதமிழ் நடை, மனம்கவர் கவிதைகள், என்று பிரம்மிப்பேற்படுத்தும் இவர் வலைப்பூ.... நேசமித்திரன் கவிதைகள்.

மிகச்சுவையான ஒரு வலைப்பூ. சமீபத்தில் வம்சி சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர்.... பல விசயங்களை அனாவசியமாக அலசுபவர். திரு அப்பாதுரை அவர்களின் மூன்றாம் சுழி....

வாழ்க்கையின் எளிய பக்கங்களை மட்டும் பார்ப்பது ஒரு சிறந்த தவம்... அதாவது சீரியசான விசயங்களைக் கூட மிக எளிதாக நகைச்சுவையாக சொல்ல வல்லவர்.. Scribblings வித்யா.

சிறுகதை, கவிதை என்று கலக்குபவர். இரண்டு பிளாக் வைத்திருக்கிறார். கவிச்சோலை மற்றும் பாகீரதி என்று......... நிறைய எழுதிக் கொண்டிருந்தவர், இப்போது பணியில் பிசி என்கிறார். விரைவில் நிறைய எழுத வாருங்கள் எல்.கே..

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

Tuesday, February 28, 2012

வெண்ணிலவில் ஒரு கருமுகில்!(30)

”புற்று நோய் என்பது வெறும் ஒரு வார்த்தைதான் வாழ்க்கையின் முற்றுப் புள்ளி அல்ல “ – ஜான் டைமண்ட்.

பச்சைப்பசேல் என்ற துளிர் இலைகள்! பூவும்,பிஞ்சுமாக நிறைமாத கர்பிணியாக மாமரம்! இதமான காலைத்தென்றலுடன், இனிமையாக மிதந்து வரும் அதன் மெல்லிய மணம். காய்க்கும் பருவமில்லாத இந்த, பனிக்காலத்தில் கூட இயற்கை அன்னையின் இன்ப ஊற்றாக அதிசயமான இந்த மரம்.. வருடம் முழுவதும் காய்க்கும் மரமாம். வாட்ச்மேன் ஐயா இந்த மரத்தைப் பற்றி ஒரு பெரிய கதையே சொல்லுவார். தப்பி வந்த தப்புச் செடியாம். அதனால்தான் இப்படி காய்க்கிறதாம்… அதில் காய் பறிக்கும் விதம் அதைவிட அழகு. கணவன் மரத்தின் மீது ஏறி, திரண்ட காய்களைப் பறித்துப் போட, அதை மனைவி கீழே நின்று கொண்டு, அக்காய்கள் தரையில் விழுந்து அடிபடாதவாறு ஒரு கோணிப்பையினுள் தம் இரு கைகளையும் நுழைத்துக் கொண்டு, அதை இயன்றவரை அகலமாக்கிக் கொண்டு வெகு லாவகமாக அந்தக் காய்களைப் பிடித்து, அடி படாமல் சர்வ ஜாக்கிரதையாக இன்னொரு பையில் மெதுவாக, போட்டுக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நேரம் போனதே தெரியவில்லை. மருத்துவமனை அறையின் சன்னல் வழியாக பார்த்து இரசித்துக் கொண்டிருந்ததில் தன்னையே மறந்த நிலை…

”வந்தனா.. என்னம்மா செய்கிறாய்?” முதுகில் தீண்டிய மெல்லிய ஸ்பரிசத்தில் மெதுவாகத் திரும்பியவள், கணவனின் சோர்ந்த முகம் கண்டு பதறியவளாக,

“ என்ன ஆச்சுங்க…. ஏன் இப்படி இவ்வளவு காலையில வந்திருக்கீங்க..?”

“ஒன்னுமில்லம்மா… ஏதோ கெட்ட கனவு வந்து இரவு பாதியில் முழிப்பு வந்து, பிறகு தூக்கமே இல்லை. அதான் சீக்கிரமே குளிச்சிட்டு வந்தேன். உன் கூட கொஞ்ச நேரம் இருந்துட்டு ஆபீஸ் போலாமேன்னுதான்…..”

“ தேவையில்லாமல் மனதை குழப்பிக் கொள்ளாதீங்க… விதிப்படிதான் எல்லாமே நடக்கும். நான் எல்லாத்துக்கும் தயாராத்தான் இருக்கேன் “

வந்தனாவின் முகத்தில் இருந்த அந்த அமைதியும், உறுதியான பேச்சும், சலனமற்ற பார்வையும் அவனுக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. ரம்யாவிடம் அவள் என்ன பேசியிருப்பாள் என்பதை கற்பனை செய்ய முடிந்த தன்னால் அதை வந்தனாவிடம் கேட்பதற்கு தயக்கமாக இருந்தது. என்னமோ பேசிவிட்டுப் போகட்டும் என்ற சலிப்பும் கூடவே வந்தது,, அன்று மாலை ஐந்து மணிக்கு மருத்துவர் தன்னை வந்து சந்திக்கச் சொன்னதை நினைத்தும் கொஞ்சம் டென்சன் இருப்பதும் உண்மை. வந்தனாவின் உடல்நிலை குறித்து என்ன சொல்லப் போகிறார்கள் என்று நினைத்து அச்சமாகவும் இருந்தது. அதே சமயம் வந்தனாவின் உறுதியான மனநிலையைப் பார்த்து கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது. தன் தாயைப் பார்த்து பழகிய அவளுக்கு, நோயின் தன்மையை ஓரளவிற்குப் புரிந்து கொள்ள முடிந்தாலும், அந்த மருந்துகளின் பின் விளைவுகள் இந்த தேவைதையின் அழகையும் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளை கொண்டுவிடும் என்பதையும் அறிந்திருந்த போதும் ஆண்டவன் கொடுத்த வ்ரப்பிரசாதமாக அந்த மன உறுதியும், அதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் பக்குவமும், மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்ததும் உண்மை.

அவளுக்குத் தேவையான ஒரு சில பணிவிடைகளைச் செய்து விட்டு, வெளியில் சற்று காலாற நடந்து வர உடன் சென்றான். மாலை மருத்துவரிடம் , வீட்டிற்கு அழைத்துப் போவதைப்பற்றிக் கேட்க வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டான். மற்றவர்களைப் போல தான் ஒரு நோயாளி என்ற தாழ்வு மனப்பானமை துளியும் இல்லாததுதான் அவளுடைய தனித்தன்மையே என்று அவளுடைய டாக்டர் அடிக்கடி அவளைப்பற்றி புகழ்ந்து சொல்வதும் நினைவிற்கு வந்தது அவனுக்கு. எத்துனை நல்ல குணங்கள் இவளுக்குள் என்று மேலும் மேலும் ஆச்சரியம்தான் வந்தது. இருவரும் மௌன மொழியில் ஒருவரைப் பற்றி ஒருவர் பேசிக் கொண்டே நடந்து கொண்டிருந்தனர். சொற்ப நேரமே நடக்க முடிந்தது அவளுக்கு. அதற்குள் லேசாக மூச்சு வாங்க ஆரம்பிக்க, திரும்ப ரூமிற்குப் போகலாம் என்று கூறியதால் அவனும் ஒன்றும் பேசாமல் பின்னாலேயே சென்றான்.

அலுவலகம் செல்ல நேரமானபடியால், மாலை டாக்டரைப் பார்க்க சீக்கிரம் வரவேண்டுமே என்று நினைத்துக் கொண்டே கிளம்பினான். .. மாலை மருத்துவரின் அறையின் முன் அமர்ந்திருக்கும் போது பல்வேறு எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. அடுத்து தன் பெயர் சொல்லி செவிலியர் அழைத்தது கூட தெரியாமல் யோசனையில் ஆழ்ந்திருந்தவனை அருகில் வந்து தட்டி அழைத்த பின்புதான் சுயநினைவு வந்தவனாக வேகமாக எழுந்து நடந்தான்.

இந்த இளம் வயதில் வந்தனாவிற்கு ஏன் இத்தனை கொடுமை என்று கண்கள் கலங்க கேட்டவனைப் பார்த்து மருத்துவரும் மனம் க்லங்கியதோடு, அதற்கான காரணமாக, இது பரம்பரையாக வந்த மரபணுப் பிறழ்வினால் வந்தது அதாவது இவர் தாய்க்கு இருந்த காரணத்தினாலேயே, வந்தனாவிற்கு முதலில் கருப்பையில் வந்த இந்த கொடிய புற்று, ஒருவ்ரும் எதிர்பார்க்காத நேரத்தில் இன்று மார்பகத்தையும் தாக்கி, சிகிச்சை எடுக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

”மேடம், வந்தனாவின் நோய் எந்த அளவில் இருக்கிறது என்று கேட்கும் போதே கண்கள் கலங்கி, தொண்டை அடைக்க அடுத்து பேச நா எழவில்லை ரிஷிக்கு.

”பொதுவாக 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பகப் புற்று நோய்க்கான பரிசோதனைகளைச் செய்து கொள்வது, ப்ரோபலிட்டிக் மாஸ்டெக்டோமிஸ் போன்ற தற்காப்பு பரிசோதனைகளைச் செய்து கொள்வது நல்லது. ஆனால் வந்தனாவிற்கு இந்த இளம் வயதிலேயே வந்தது மரபணுப் பிறழ்வினால் ஏற்பட்ட நோய். மார்பில் சதை முடிச்சு போல் இருந்ததை அவர் கண்டுபிடித்து சரியான நேரத்தில் வந்து சொன்னதால் எந்த ஆபத்தும் இல்லாமல் ஒரு சின்ன ஆபரேசன் மூலம் சரி செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தால் போதும். கவலை வேண்டாம் மிஸ்டர் ரிஷி”, என்று சொன்னது சற்று ஆறுதலளித்தாலும், மேற்கொண்டு செய்யப்போகும் வைத்திய முறைகளினால் உடற்சோர்வு அதிகம் ஏற்படும் என்று அவன் கேள்விப்பட்டிருந்ததால் வந்தனா அதைத்தாங்க வேண்டுமே என்ற கவலையும் உடன் வந்தது.

“மிஸ்டர் ரிஷி, நீங்கள் நினைப்பது புரிகிறது. பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. இப்போது மருத்துவம் மிகவும் முன்னேறியிருக்கிறது. முன்பு போல பாதிக்கப்பட்ட மார்பகத்தை முழுவதும் நீக்கவேண்டியத் தேவை இல்லை. நோயின் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டுள்ளதால் மார்பகத்தைப் பாதுகாக்கும் அறுவை சிகிச்சை – லம்பெக்டமி, செய்து உள்ளோம். பேரைக் கேட்டு பயப்படாதீங்க ரிஷி. இது மார்பகத்தை முழுவதும் நீக்காத அறுவை சிகிச்சை முறை. இதையெல்லாம் அன்றே அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன்பே உங்களிடம் விளக்கமாகக் கூறியிருந்தேன். ஆனால் அன்றிருந்த மன நிலையில் உங்களால் அதைச் சரியாக புரிந்து கொண்டிருக்க முடியாது என்பதால்தான் திரும்பவும் விளக்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அதே இடத்தில் திரும்ப நோய் வராமல் தடுக்க, அல்லது வாய்ப்பைக் குறைக்க கதிர்வீச்சு சிகிச்சை (radiotherapy) தேவைப்படும். அறுவை சிகிச்சை முடிந்த பின்பு திசுக்களை திரும்பவும் பரிசோதனைக்கு அனுப்புவோம். பெறப்படும் முடிவுகளின் அடிப்படையில் கீமோதெரபி, ஹார்மோன் தெரபி மற்றும் சில மருந்துகள் தேவைப்படலாம். இவை ஊசி மூலமோ வாய் வழியாகவோ, அளிக்கப்படும். நோயின் நிலை, நோயாளியின் உடல்நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவரவர்க்கு ஏற்ப இந்த ட்ரீட்மெண்ட் செய்யப்படும். தவிர உங்களுடைய ஒத்துழைப்பு மிக முக்கியம். நோய் வராமல் இருப்பதையே எல்லோரும் மனதார விரும்புகிறோம். ஆனால் நோய் வந்த பின்பு அதனைச் சம்பந்தப்பட்டவர்கள் துணிச்சலுடன் எதிர்கொள்வது என்பதே மிக உன்னதமான நிலை. அந்த வகையில், தங்களைப் போன்று முழுமையாகப் புரிந்து கொண்ட ஒரு கணவராக இருப்பது வந்தனா செய்த புண்ணியம். நல்லதே நடக்கும். அமைதியாக இருங்கள். உங்கள் பொறுமையும், அமைதியும் சேர்ந்ததுதான் அவருடைய வைத்தியம். அதை மனதில் கொண்டு அவரிடம் அதற்கேற்றவாரு நடந்து கொள்ளுங்கள்”. என்று நம்பிக்கையூட்டும் விதமாக மருத்துவர் பேசினார்.

ஓரளவிற்கு நம்பிக்கையும், தெம்பும் வர ரிஷி, தன் முகத்தில் தெரிந்த சிறு சலனத்தையும் தூக்கி எறிந்துவிட்டு, உற்சாகமான முகமூடியை அணிந்து கொண்டு வெளியே வந்தான். டாக்டர் கூறியபடி வந்தனாவிற்கு தைரியம் சொல்லி அவளுடைய மேற்கொண்ட ட்ரீட்மெண்டிற்கு நன்கு ஒத்துழைக்கச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தான். ஆனால் அவளிடம் சென்று பேசிய போதுதான் தெரிந்தது, தான் நினைத்ததற்கும் அவளுடைய நடவடிக்கைக்கும் துளியும் சம்பந்தமில்லை என்று….

ஆம், வந்தனா ஒரு மருத்துவரின் எதிர்ப்பார்ப்பிற்கும் மேலான நேர்மறையான எண்ணங்கள் கொண்ட ஒரு அற்புதமான பிறவி என்றாலும் அது மிகையாகாது.தான் ஒரு நோயாளியான தன்னைப் பார்த்து எல்லோரும் பரிதாபப்படுவார்கள் என்கிற தாழ்வு மனப்பான்மை துளியும் இல்லாத ஒரு முன்மாதிரிப் பெண். தாம் வாழ்ப்போகும் ,ஒவ்வொரு நிமிடத்தையும், மகிழ்ச்சியாக வ்ரவேற்று, அடுத்தவரையும் உற்சாகப்படுத்தி வாழ வேண்டும் என்ற உயரிய கொள்கை உடையவள் என்பது தெளிவாகப் புரிந்தது. இந்த 28 வயதில் இத்துனை வேதனைகளுக்குப் பிறகும் அவள் பெற்றுள்ள பக்குவம் சொல்லில் விளங்க வைக்க இயலாத ஒன்று. ஒரு முறை சிகிச்சை மேற்கொண்டு , மீண்டும் இப்போது அதே நோய் தாக்கிய நிலையில் எந்தப் பெண்ணாலும் இயலாத ஒரு காரியமாக, பதட்டம், குழப்பம் இதெல்லாம் ஒதுக்கிவிட்டு, பச்சாதாபம், இரக்கம் இதில் எதையுமே துளியும் எதிர்பார்க்காமல், யதார்த்த நிலையை அப்படியே ஏற்றுக் கொள்ளும் அவளுடைய பக்குவம் கண்டு, ஆச்சரியப்படாமல் இருக்க இயலவில்லை ரிஷிக்கு என்பதே உண்மை! ஓர் எல்லையில் பாதிக்கப்பட்டவர்கள் கூட எந்த நிலையிலும் வாழ்க்கையை இரசிக்கும்படியான ஒரு ஓவியமாக அமைத்துக் கொள்ளலாம் என்பதற்கு ஒரு நல்ல முன் உதாரணம் வந்தனா!

அவந்திகா வரும் நேரம் நெருங்க, நெருங்க மனதில் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது மாறனுக்கு. எப்படி சமாளிக்கப் போகிறோம் என்றுதான் தெரியவில்லை. அம்மா சொன்ன விசயம், கொஞ்சம் உறுத்தலாகத்தான் இருந்தது. சில நம்பிக்கைகள் பல அற்புத்க் கனவுகளையும், கற்பனைகளையும் உருத்தெரியாமல் அழிக்க வல்லது. அந்த வகையில் அம்மா சொன்ன ஜாதகம் விசயம் சற்றே உறுத்திக் கொண்டிருந்தாலும், அவந்திகாவைப் பார்க்கப் போகிறோம் என்ற இனிய உணர்வு மட்டும் உற்சாகமளிக்காமலில்லை. இதுதானே காதலின் பலமும், பலவீனமும்! பல நேரங்களில் அந்த அசுரபலம், பலவீனத்தை எளிதாக வென்றுவிடத்தான் செய்கின்றன….

பொங்கல் விழாவும், புத்தாண்டு விழாவும் சேர்த்துக் கொண்டாடும் விதமாக நண்பர்கள் குழுமி இருந்தனர். முடிந்தவர்கள் அவரவர் வீட்டிலிருந்து ஒவ்வொரு ஐட்டம் சமைத்து, கொண்டு வந்திருந்தார்கள். பேச்சிலர் ஆண்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. முடிந்தவர்கள் மட்டும் செய்யலாம் என்று. மாறனுக்கு ஏனோ அன்று தானும் ஏதாவது சமையல் செய்து அனைவரையும் குறிப்பாக அவந்திகாவை அசத்த வேண்டும் என்ற ஆவலில்,தனக்குத் தெரிந்த சக்கரைப் பொங்கலையே முயற்சி செய்வது என்ற முடிவுடன், மளமளவென காரியத்தில் இறங்கினான். நல்ல வேளையாக அனைத்துப் பொருட்களும் வீட்டில் இருந்ததால் வேலை எளிதாக முடிந்தது… தன் அம்மாவிடம் சென்ற முறை எழுதி வாங்கி வந்த அக்காரஅடிசல் ரெசிப்பி இன்றும் கைகொடுக்க,சுவையும் பதமும் இனிமையாக அமைந்தது குறித்து அவன் மனம் துள்ள ஆரம்பித்தது. நல்ல சகுணமாகவும் மனதில் பட்டது. தன் கையால் சமைத்த உணவை தம் இளவரசி சுவைக்கப் போகும் சந்தர்ப்பம் எண்ணிக் காத்திருந்தான்.

தான் எதிர்பார்த்ததைவிட, மிகத்தெளிவான சிந்தனையுடன் இருந்தாள் அவந்திகா. ரம்யாவின் முயற்சி குறித்தும்,வெகு விரைவில் தன்னுடைய தந்தையை இது விசயமாக சந்திக்கப் போவதையும் சொல்லலாமா என்று யோசித்தான். அவள் பார்வையிலும், நடவடிக்கையிலும் பல மாற்றங்கள் தெரிந்தாலும், நேரிடையாக அவளுடன் பேசிவிடுவதே நல்லது என்று முடிவு செய்திருந்தான். ரம்யா அவள் பெற்றோரிடம் பேசுவதற்கு முன்பாக அவந்திகாவிற்கு விவரம் தெரிந்தால் தேவையில்லாத குழப்பத்திற்கு இடம் இருக்காது என்று அதற்கான தக்க தருணமும் அன்று அமையும் என்று நினைத்திருந்தான். அம்மா ஜாதகம் பற்றி சொன்ன விசயம் சிறு குழப்பம் ஏற்படுத்தினாலும், இறுதியாக மனப்பொருத்தம் இருந்தால் இந்த ஜாதகப் பொருத்தம் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்ற வார்த்தை கொடுத்த நம்பிக்கையே அவன் கற்பனையை மேலும் வளர்க்க உதவியாய் இருந்தது.

தான் எதிர்பார்த்ததைவிட,இவ்வளவு எளிதாக சந்தர்ப்பம் அமையும் என்று அவன் எண்ணவில்லைதான்.. சில நேரங்களில் நல்லது நடக்க வேண்டுமென்ற அருள் இருந்தால் சமயமும், சந்தர்ப்பமும் தானாக வாய்ப்பதில் ஆச்சரியமில்லையே….

தொடரும்.

படத்திற்கு நன்றி:
http://shari-chocolatebox.blogspot.in/2010_06_01_archive.html

http://www.ifood.tv/blog/easy-guide-on-how-to-host-a-potluck-party