Sunday, April 3, 2016

LIFE 1


‘கடலோடி’ நரசய்யா (2)


பவள சங்கரி

நம் இந்தியக் கப்பற்படையில் பணியாற்றியவரும், நம் நாடு சுதந்திரம் பெற்றிருந்த காலகட்டங்களில் பொறுப்பான பதவிகளில் இருந்தவர் மட்டுமல்லாது, ஒரு மீப்பெரும் எழுத்தாளராகவும் இருக்கும் ஒரு ஆளுமையைச் சந்திக்கப்போகிறோம் என்ற பேராவல் உடன்வர பேராசிரியர் நாகராஜன் ஐயா அவர்களும் நான் நரசய்யா ஐயாவை சந்திக்கப்போவது தெரிந்தவுடன் உடன் வருவதாகக் கூறிவிட்டார்கள். அவர்தம் இல்லத்தின் எல்லையைத் தொட்டவுடன் கட்டிடப் பாதுகாவலர், ‘இதோ இந்த வீடுதான். ஐயா உங்களுக்காகத்தான் காத்திருக்கிறார்’ என்றார். வீட்டிற்குள் நுழைந்தவுடன் தம்பதி சமயதராக வந்து வரவேற்று அன்பாக இருக்கையில் அமரச் செய்தார்கள். இலக்குமி கடாட்சம் முழுமையாக நிறைந்திருந்த இல்லம் அது. நாங்கள் அமர்ந்திருந்த, சற்றே பள்ளமாக அமைந்திருந்த வரவேற்பறையின் நேர் எதிர்புறம் முதன்முதலில் கண்களில் பளிச்சிட்டது பரந்த அழகானதொரு ஓவியம். இரண்டு, மூன்று முறை திரும்பத் திரும்ப என் பார்வை அதன் மீதே செல்வதைக் கண்ணுற்றவர் குறிப்பால் என் எண்ணம் உணர்ந்தவராக அது செருமனியில் இருக்கும் ஒரு கோட்டை என்றும் அந்த ஓவியத்தைத் தீட்டியதும் தான் தான் என்ற ஆச்சரியமான தகவலையும் அளித்தார். பன்முக நாயகரின் மற்றொரு முகத்தையும் அறிந்த திருப்தி எங்களுக்கு. அம்மையாரின் அன்பான உபசரிப்புடன் எங்கள் உரையாடல் துவங்கியது.

பணியையும், எழுத்தையும், வாழ்க்கையையும் சமமாக பாவிக்கும் மனித நேயமிக்க ஒரு எழுத்தாளர் திரு நரசய்யா அவர்கள். அதாவது எந்த முகமூடியுமில்லாத வெளிப்படையான பேச்சே இவருடைய மொத்த உருவமாக உயர்ந்து நிற்கிறது! சமகால எழுத்து மட்டுமன்றி, தொல்லியல் சார்ந்த பதிவுகள், வரலாற்றுத் தகவல்கள், விமர்சனங்கள், நாட்டு நடப்பு என பல்வேறு தளங்களில் மிக அமைதியாக, தன் போக்கில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மிக சுறுசுறுப்பாக இயங்கி வருபவர் இவர். பெரும்பாலும் பிரபலமான அனைத்து தினசரிகள், வார இதழ்கள், இணைய தளங்கள் என பல்வேறு பத்திரிகைகளில் இவரது படைப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. எந்த ஒரு விசயத்தையும் ஆய்வுப்பூர்வமாக அணுகி அதன் நன்மை, தீமைகளை எந்தவிதமான மேற்பூச்சுமின்றி வெளிப்படையாக விவரிப்பதில் வல்லவர் இவர். அனைத்திற்கும் மேலாக வார்த்தைகளில் தெளிவும், எவரையும் புண்படுத்தாத நளினமும் இவருடைய தனித்தன்மை. அந்த வகையில் அன்பான மனைவியையும், பண்பான இரு மகன்களும் கொண்ட அழகான குடும்பத்தின் சொந்தக்காரர் இவர். இரண்டு மகன்களும் திருமணமாகி குழந்தைகளுடன் நல்ல நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு மகன் தன்னைப் போலவே கப்பற் பணியில் ஈடுபட்டு இளம் வயதிலேயே மிக உயர் பதவியை வகிப்பதை பெருமை பொங்கக்கூறுகிறார். அமைதியும், அருளும் நிறைந்த அழகிய குடும்பத்தின் தலைவராக இருக்கும் , நரை, திரை மூப்பைக் கடந்த இந்த இளைஞருக்கு 83 வயது என்று சொன்னால் நம்புவது சற்று கடினமாகத்தான் உள்ளது. புலவர் பிசிராந்தையாரிடம் ஒரு வழிப்போக்கர் அவருடைய இளமையின் இரகசியம் குறித்து கேட்டபோது அவர் பாடிய அந்த புறநானூற்றுப் பாடல்தான் நினைவிற்கு வந்தது.