Friday, November 26, 2010

இந்தியத் திரு நாட்டின் மறு மலர்ச்சியில் பெண்கள் - பாகம் - 8.............






திருமதி ருக்மணி தேவி அருண்டேல்.
[ 1904 - 1986 ]


சங்கத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் பிப்ரவரி மாதம் 29 ஆம் நாள், லீப் வருடம், 1904 ஆம் ஆண்டு, பௌர்ணமி தினத்தன்று, மகாமகத் திருவிழாவின் போது, தன் பெற்றோருக்கு எட்டாவது குழந்தையாக பிறந்தார் ருக்மணி தேவி. இவருடைய தந்தையார் நீலகண்ட சாஸ்திரிகள், சமஸ்கிருத பண்டிதர்கள் வழி வந்த ஐதீகமான பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். தாயார் சேஷம்மாள், சிறந்த இசைக்குடும்பத்தில் இருந்து வந்தவராவார்.


ருக்மணி தேவி இருபதாம் நூற்றாண்டில் நம் இந்தியத் திருநாட்டிற்குக் கிடைத்த ஒரு கலைப் பொக்கிஷம் எனலாம். அக்காலங்களில், கோவில் திருவிழாவில் நாட்டியம் ஒரு முக்கிய பங்கு வகித்து வந்தது. இறைவனுக்கு படைக்கப்படும் ஆராதனையாகவே கருதப்பட்டு வந்தது. இவருடைய இளவயது பருவத்திலேயே, இவருடைய தந்தை, மகாராஜாவிற்காக கோவிலில் நவராத்திரி விழாவில் நாட்டியம் ஏற்பாடு செய்யும் பணியில் இருந்தபோது, ருக்மணியும் உடன் இருந்ததால், நாட்டியத்தால் பெரிதும்கவரப்பட்டார். மிகுந்த தெய்வ பக்தி கொண்டவராகவும், மதுரை மீனாட்சியம்மன் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தார் ருக்மணி தேவி.

ருக்மணி தேவியின் தந்தை பொதுப்பணித் துறையில் பொறியாளராக பணிபுரிந்து வந்ததால் அவர்களின் குடும்பம் ஊர், ஊராக மாற்றலாகிக் கொண்டிருந்தலால் இவரால்,
நிலையான ஒரு பள்ளியில் படிக்க இயலாமல் போனது. ஆகவே வீட்டிலேயே ஆசிரியர் வைத்து இவருக்கு கற்பிக்கச் செய்தார்கள். ஸ்ரீராம் என்றொரு சகோதரரும் இவருக்கு உண்டு. அவர், கும்பகோணத்தில் உள்ள தங்கள் மாமா வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்தார். இவர்கள் இருவரையும் எந்த கட்டுப்பாடும் இன்றி சுதந்திரமாக வளர்த்தனர் பெற்றோர். குடும்ப பாரம்பரிய ஒழுக்கம் இயல்பாகவே இவர்களிடம் இருந்தது. இசை, வயலின் வாசிப்பது போன்ற கலைகளையும் கற்றுவித்தனர் பெற்றோர்.இவருடைய தந்தை ஓய்வு பெற்ற பின் இவர்கள் செங்கற்பட்டில் குடியேறினர்.

ருக்மணி தேவியின் தாயார் இசைக் குடும்பத்திலிருந்து வந்தவராவார். தியாகராஜ சுவாமிகள் இவர் வீட்டு திண்ணையில் அமர்ந்து இளைப்பாறுவாராம். பல பிரபல இசைக்கலைஞர்கள் இவர் தாயாரின் வீட்டிற்கு வருவதுண்டு. அருணாசலக் கவிராயர், மகா வைத்தியநாத ஐயர், மற்றும் பலரும் ருக்மணியின் தாயார் இல்லத்திற்கு வருவதுண்டு. தன்னுடைய மூன்றாவது வயதிலிருந்தே , நவராத்திரி விழாவின் போது, புதுக்கோட்டை சமஸ்தானத்தில் மணிக்கணக்காக இசை நிகழ்ச்சியில் அமர்ந்து விழா முடியும் வரை முழுவதுமாக கேட்டு பழகியவருக்கு, பிற்காலத்தில் இசையின் ஆர்வம் முளை விட்டதிலும் ஆச்சரியமில்லை.

ருக்மணியின் தந்தை, கர்னல் ஆல்காட் என்பவரால் ஈர்க்கப்பட்டு, 1906 இல், பிரம்மஞான சபையில் சேர்ந்தார். அடையாரில் இவர்கள் குடும்பம் குடியேறியதுடன், ருக்மணிதேவி, திருவல்லிக்கேணியில் பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்றார். பிரம்மஞான சபையின் அருகிலேயே புதிய இல்லமும் கட்டப்பட்டு, அதற்கு ‘ புத்த விலாஸ்’ என்று பெயரும் சூட்டப்பட்டது. பிரம்மஞான சபையைச் சார்ந்த எலியனார் எல்டர் என்பவரும் அவரது சகோதரி கதலின் என்பவரும் கிரேக்க நடனம் ஆடுவதை இரசித்த ருக்மணிதேவி தானும் அதில் பங்கு கொண்டார். 1918 இல் ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய ‘மாலினி’ என்ற நாடகம் மேடையேறிய போது, ருக்மணிதேவி கேதாரகௌளா ராகத்தில் ஒரு பாடல், இசைப் பாத்திரத்தில் பாடினார்.

1917 ஆம் ஆண்டில், ருக்மணிதேவி பெனாரஸ் சென்றபோது டாக்டர் அருண்டேல் என்பவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிரம்மஞான சபையின் தளபதியான அருண்டேல் அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராவர். பெனாரஸில் [காசி] மத்திய இந்துக் கல்லூரியில் சில காலம் தலைவராகவும் இருந்தார். பின்பு டாக்டர் அன்னி பெசண்ட் அவர்கள் நடத்தி வந்த ‘நியூ இந்தியா’ என்ற பத்திரிக்கையின் பொறுப்பாளராக பதவி வகித்தார். பலத்த எதிப்புக்கிடையில் அன்னிபெசண்டின் உறுதியான உதவியுடன் அருண்டேலை திருமணம் செய்து கொண்டார் ருக்மணிதேவி.

1924 ஆம் ஆண்டு கணவர் அருண்டேலுடன் லண்டனில் தங்கியிருந்த போது, ரஷ்ய நடனக்கலைஞர் பவ்லோவை கொலெண்ட் கார்டன்ஸில் சந்தித்தார். இவருடைய பாலே நடனக்கலைத் திறமை ருக்மணியை பெரிதும் கவர்ந்தது. பாவ்லோ, பாலே நடன அரங்கை விட்டு வெளியே வந்த போது ருக்மணிதேவி, அவருடைய நடனத்தில் மெய்மறந்து, அவரிடம் தன்னால் பாவ்லோவைப் போல ஒரு காலும் நடனமாட முடியாது என்று கூறினார். இதனைக் கேட்ட பாவ்லோ, ருக்மணியிடம், ‘நீங்கள் நடனமே ஆட வேண்டாம், மேடையில் நடந்து வலம் வந்தாலே போதும், மக்கள் உறுகிவிடுவார்கள்’, என்று கூறினார். பாவ்லோ ருக்மணிதேவிக்கு நாட்டியத்தின் மீது தீவிர ஆவலை தூண்டிவிட்டார். பாலே நடனமும் கற்றார்.

ருக்மணிதேவியின் உள்ளத்தில் பரதநாட்டியம் பூரணமாக கற்க என்ற எண்ணத்தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. முறைப்படி நடனம் கற்க வேண்டி முதலில் மைலாப்பூர் கௌரி அம்மாளிடமும், பின்பு பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடமும் நடனம் பயின்றார். தன்னுடைய 31 வயதில் நாட்டிய அரங்கேற்றமும் நடத்தினார். பிரம்மஞான சபையின் வைரவிழா நிகழ்ச்சியில் அரங்கேற்றிய நடனம் பரத நாட்டிய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. நாட்டியத்திற்கு பெரும் எதிர்ப்பு இருந்த அந்த கால கட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமியும் நடனத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.

இந்தச் சூழலில் ருக்மணி அருண்டேலின் நிகழ்ச்சிக்கு சி.பி.ராமசாமி ஐயர், சிவசாமி ஐயர் மற்றும் சீனிவாச சாஸ்திரி போன்றவர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். அன்னி பெசண்ட் அம்மையாரும், டாக்டர் அருண்டேலும் இந்தியாவின் அரசியல் சுதந்திரத்திற்காக பெரும் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் இந்தியா சிறிது சிறிதாக தன்னுடைய தனித்தன்மையை இழந்து கொண்டு வருவதாக உணர்ந்த ரேணுகா அருண்டேல், நமது நாட்டின் கலாச்சாரத்தை மறுமலர்ச்சியடையச் செய்வதும் அப்போராட்டத்திற்கு இணையானது என்று கருதினார்.

மேலும் பரதத்தில் பூரணத்துவம் பெரும் ஆவலில், சுப்பிரமணிய சாஸ்திரியிடம் பரத சாஸ்திரம் குறித்த தெளிவான விளக்கம் பெற்றார். பாபநாசம் சிவன், காளிதாச நீலகண்ட ஐயர், டைகர் வரதாச்சாரியார் போன்றவர்கள் நாட்டியத்திற்கான பாடல் இயற்றியும் ஒருசில குறைபாடுகளை நீக்கியும் சில மாற்றங்களைக் கொண்டு வந்தனர். இதனால் நடனக் கலையின் நுட்பங்கள் பூரணத்துவம் அடைந்தது, என்றால் அது மிகையாகாது. இவருக்குக் கிடைத்த வரவேற்பினாலும், ஆதரவினாலும், நடனக்கலை பள்ளியை ஏற்படுத்த வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.

ருக்மணி தன் கணவர் அருண்டேல் தலைமைப் பதவி ஏற்றிருந்த காலத்தில், பிரம்மஞான சபையின் ஒரு மரத்தின் அடியில்,கலைக்கான பன்னாட்டு மையம் ஒன்றை நிறுவினார். தன் சகோதரரின் மகளான ராதா என்கிற ஒரே ஒரு மாணவி மட்டும் தான் முதலில் இருந்தார். அன்று ராதா அவரை அத்தை என்று அழைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த மற்ற மாணவர்களுக்கும் அவர் அத்தையாகவே ஆனார். உலகளவில் பல மாணவர்கள் பரதம் கற்கும் பொருட்டு வந்து சேர ஆரம்பித்தனர்.

டாக்டர் அருண்டேல், திரு நாராயணமேனன், திரு ராம கோட்டீஸ்வரராவ், திரு சந்திரசேகரன், பண்டித சுப்பிரமணிய சாஸ்திரி, திரு கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல பாரம்பரியக் கலைகளில் விருப்பமுள்ள சென்னையைச் சேர்ந்தவர்களின் ஆதரவுடன், ருக்மணி அம்மையார் “கலாஷேத்ரா”, என்ற கலாச்சாரப் பள்ளியைத் தோற்றுவித்தார்.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் நாட்டிய நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டிய நாடகங்கள் நடத்தப்பட்டது. ருக்மணிதேவி தன் மாணவர்கள் குழுவுடன், தென்னிந்தியப் பயணம் மேற்கொண்டு முதலில் குற்றாலத்தில், ‘குற்றாலக் குறவஞ்சி’, நாட்டிய நாடகத்தை நடத்திக் காண்பித்தார். பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி, காளிதாஸ் நீலகண்ட ஐயர், டைகர் வரதாச்சாரியார், பாபநாசம் சிவன் போன்ற இசைக்கலைஞர்கள் கலாஷேத்ராவில் பணியாற்றி இசையையும், நடனத்தையும் ஒருங்கே வளர்த்தனர். இவர் சமஸ்கிருத நாடகங்களையும், சமஸ்கிருத பண்டிதர்களின் துணை கொண்டு நாட்டிய நாடகமாக மேடையேற்றினார். ‘குமார சம்பவம்’ நாடகம் மிகப்பிரபலமானது. குறைந்த எண்ணிக்கையில் இருந்த மாணவர்கள், போகப் போக பல ஊர்களிலிருந்தும் அதிகளவில் வந்து சேர ஆரம்பித்தனர். பெரும்பாலான நடன வகுப்புகள், அடையாறு பிரம்மஞான சபையின் பெரிய ஆல மரத்தினடியிலேயே நடந்தது.

ருக்மணி, கலாஷேத்ராவில் ‘சங்கீத சிரோமணி’ என்ற படிப்பைக் கொண்டுவர பெரு முயற்சி எடுத்தார். லெட்சுமண சுவாமி முதலியார், லட்சுமி நாயர் தலாராம், வயலின் வெங்கட சுவாமி, புல்லாங்குழல் சஞ்சீவராவ், அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து கே.பொன்னையாபிள்ளை ஆகியோர் அடங்கிய ஒரு குழு கலாஷேத்திராவை பார்வையிட்டு, சங்கீத சிரோமணி படிப்பு ஆரம்பிப்பதற்கு அனுமதியும், சென்னைப் பல்கலைக் கழக அங்கீகாரமும் அளித்தது.

ருக்மணி தேவி அருண்டேல், பரதக்கலை மேம்பாட்டுப் பணிகளுடன், விலங்குகள் பாதுகாப்பு, சைவ நெறி முறை போன்ற பல நற்காரியங்களிலும் ஈடுபட்டிருந்தார். 1952 ஆம் ஆண்டு பாராளுமன்ற ராஜ்யசபை உறுப்பினராக, திரு ராஜாஜி அவர்களின் வற்புறுத்தலின் பேரில் இரண்டு முறை பதவி வகித்தார். வாயில்லாத ஜீவன்களான விலங்குகளின் மீது ஆழ்ந்த அன்பு கொண்டவராக இருந்த காரணத்தினால், 1960 ஆம் ஆண்டு, மிருகவதை தடுப்பு மசோதாவை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்தார்.மிருக நலக் கழகத்தின் முதல் தலைவரும் ஆனார்.

மைசூர் மகாராஜாவின் ஆஸ்தான வித்வானாக விளங்கிய தெய்வீக இசைப் புலமை வாய்ந்த வாசு தேவாச்சாரியார் அவர்களின் உதவியுடன், ‘வால்மீகி இராமாயணம்’ நடன நிகழ்ச்சியைத் தயாரித்தார்.

ருக்மணியும் டாக்டர் அருண்டேலும், 1941 இல் சாந்திநிகேதன் சென்று தாகூரைச் சந்தித்து அவர் விருப்பத்திற்கிணங்க, ஒரு அபிநயமும் பிடித்துக் காட்டினார். சாந்தி நிகேதனின் அமைதியும் அழகும் ருக்மணியை பெரிதும் ஈர்த்தது. அதன் காரணமாக திருவான்மியூரில் நிலம் வாங்கப்பட்டது.

கணவர் அருண்டேல், 1945 ஆம் ஆண்டு காலமானார். இதற்குப் பிறகு ருக்மணிதேவி, இந்தியக் கலாச்சாரத்தையும், மரபுகளையும் எடுத்துக் காட்டும், ‘ஆண்டாள் சரித்திரம்’, ‘சீதா சுயம்வரம்’, ‘சாகுந்தலம்’, ‘குமார சம்பவம்’, ‘கீத கோவிந்தம்’, ‘புத்த அவதாரம்’, ‘பக்த மீரா’, ‘சபரி மோட்சம்’, ‘குற்றாலக் குறவஞ்சி’, ‘குசேலோ பாக்கியானம்’ முதலிய நாட்டிய நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. ‘பாகவத் மேளம்’, என்கிற பழம்பெரும் கலைக்கு புத்துயிர் அளித்தார் ருக்மணிதேவி.

கலாஷேத்ரா, மற்ற குழுக்களிலிருந்து, தங்களுடைய தனிப்பாணியினால் மிகவும் வேறுபட்டு உள்ளது. 1934 இல் டாக்டர் அருண்டேல் பெசண்ட் உயர்நிலைப் பள்ளியை உறுவாக்கினார். சங்கரமேனன் பள்ளியின் முதல்வரானார். பின்பு டாக்டர் மரியா மாண்டிசோரியை வரவழைத்து மாண்டிசோரி கல்வி முறையை பள்ளியில் கொண்டு வந்தார். ஆசிரியர் பயிற்சி கல்வி துவக்கப்பட்டது.

நெய்தல் துறையைத் தோற்றுவித்ததோடு இயற்கை சாயம் ஆராய்ச்சி ஆய்வுக் கூட்டத்தையும் அமைத்தார். இங்கு உற்பத்தியாகும் சேலைகள் சிறப்பான தனிப்பட்ட வடிவமைப்பும், தனிப்பட்ட ரகத்தையும் கொண்டிருந்தன. கலாஷேத்ரா துணிகள் இன்றும் தனித்துவம் பெற்று விளங்குகின்றன.

கணவருடைய மறைவிற்குப்பின், பிரம்மஞான சபையின் வளாகத்திலிருந்து அவருடைய கலாஷேத்ரா, பள்ளி மற்றும் கைத்தறி குடிலை மாற்றப்படவேண்டும் எனக் கேட்டுக் கொண்டதன் பேரில் திருவான்மியூரில் வாங்கிய 60 ஏக்கர் நிலத்தில் கைத்தறி போர்ட் அளித்த நிதி உதவியின் மூலம் கைத்தறி குடில் மாற்றப்பட்டது. 1951 இல் பிரம்மஞான சபையிலிருந்து ஒரு சிறிய ஆலமரச் செடியை கொண்டுவந்து அதனை ஜனவரி முதல் நாள், தங்களது வளாகத்தில், ஒரு விழாவாகக் கொண்டாடி அதனை நட்டு வைத்தார். பல நாட்டு நண்பர்களும், தங்கள் நாட்டிலிருந்து மண் கொண்டுவந்திருந்தனர். கடற்கரை ஒட்டி இன்றும் பசுமையான மரங்களுடன் எழில் சோலையாக மாறியுள்ளது கண்கூடு. ஒரு சமயம் குடில் தீக்கிரையான போல பல்வேறு சம்பவங்கள் நடந்தாலும், ஏதோ ஒரு சக்தி அவரைக் காத்து, அரவணைத்து மீட்டு கொண்டு வந்து கொண்டிருந்தது.

தமிழ் நூல் நிலையம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. ருக்மணிதேவியின் சிறந்த சேவையைப் பாராட்டி பல்வேறு விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டது. இந்திய அரசாங்கத்திடமிருந்து, பத்மபூஷண் விருது, சங்கீத நாடக அகாடமியின் விருது, கலைத்துறையில் சிறப்பான சாதனைகள் புரிந்தமைக்கு மகாராஷ்டிராவில் இச்சல் கரஞ்சி விருது, விலங்குகள் நல அமைப்பிடமிருந்து, பிராணி மித்ரா விருது, தமிழ்நாடு இயல் இசை மன்றத்தின் தனிப்பெரும் கலைஞர் என்ற விருது, மத்திய பிரதேச அரசிடமிருந்து காளிதாச சன்மான் விருது, விலங்குகளுக்குச் செய்த சேவைக்காக அமெரிக்காவிலுள்ள பன்னாட்டு சைவ உணவு ஒன்றியம் அளித்த மன்கர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார் அம்மையார்.

மேலும் அமெரிக்காவின் வேய்ன் பல்கலைக்கழகம், கல்கத்தாவில் உள்ள ரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் பெனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகம் ஆகியவைகள் ருக்மணி அருண்டேலுக்கு டாக்டர் பட்டங்கள் அளித்து கௌரவித்தன.

ருக்மணி தேவி தயாரித்த 25 நாட்டிய நாடகங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான காவியங்களாகும். இவற்றின் தனிச் சிறப்பிற்கு முக்கிய காரணம், மரபு வழுவாத நாட்டியம் மட்டுமல்லாது சிருங்காரம், பக்தி, கலையம்சம், ஆன்மீகம், அழகு மொழியில் பாபநாசம் சிவன் போன்ற பிரபலமானவர்கள் அமைத்துக் கொடுத்த இசை போன்றவைகளாலும் ஆகும்.குடும்பப் பெண்கள் மேடையேறி நடனம் ஆடக்கூடாது என்ற கொள்கையை தகர்த்தெரிந்து, பரதக் கலைக்கு ஒரு மதிப்பையும், மரியாதையையும் ஏற்படுத்தியவர் ருக்மணிதேவி. அருண்டேல் அவர்கள். நாட்டியம், நாடகம் என்ற நவரச காவியத்தை முழுவடிவில் உருவாக்கி நடனக் கலையில் ஒரு மறுமலர்ச்சியை தோற்றுவித்தார்.

இவருடைய தன்னலமற்ற கலைச்சேவை இந்தியாவின் தலைசிறந்த ஒரு கலாச்சாரத் தூதுவராக உயர்த்தியது. உலகின் பல நாடுகளுக்கும் சென்று பரதக் கலையை பரப்பியுள்ளார்.

பிப்ரவரி மாதம் 1986 ஆம் ஆண்டு ருக்மணி தேவி அருண்டேல் இறைவனடி சேர்ந்தார். ‘அத்தை’ என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட ருக்மணி, எல்லாவற்றிலும் அழகான பகுதியை மட்டும் காணக்கூடிய சக்தி வாய்ந்த பார்வையைப் பெற்றிருந்தார். கவித்துவமும், அழகை ஆராதிக்கக் கூடிய தெய்வீகப் பண்பும்தான் இவரை வாழ்நாள் முழுதும் மகிழ்ச்சியாக வைத்திருந்தது எனலாம்.

Wednesday, November 24, 2010

கல்லையும் கரைக்கும்..........காதல்.




காதல் என்ற வார்த்தையைக் கேட்டாலே காத தூரம் ஓடி ஒளியும் காலம் மலையேறி விட்டது. இன்று பெண் குழந்தைகள் தங்களுக்குத் தேவையானதை, தாஙகளே தேர்ந்தெடுக்கக் கூடியத் தெளிவையும், நல்லது, தீயது குறித்த தெளிந்த விழிப்புணர்வும் கொண்டுள்ளார்கள். எந்த விடயங்களையும் தெளிவாக சிந்தித்து முடிவெடுக்கக் கூடியத் திறனும் பெற்றிருக்கிறார்கள்.

சில காலம்முன்பு பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம் சிறந்ததா அல்லது காதல் திருமணம் சிறந்ததா என்று ஒரு விவாதம், “அவள் விகடன்” பத்திரிக்கைக்காக ஈரோடு மகளிர் கலைக்கல்லூரியில் நடத்தினேன். அதில் பத்து மாணவிகள் கலந்து கொண்டு காரசாரமாக விவாதித்தனர். அதனை சுருக்கமாக இங்கே தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

ஜான்ஸி : காதலர் தின கொண்டாட்டம் மிகப் பிரபலமானதிலிருந்து புரியவில்லையா, காதலின் உன்னதத்தை மக்கள் புரிந்து கொண்டார்கள் என்று.

ஜெயசுதா : நாட்டில் தலை போகிற பிரச்சனைகள் எத்தனையோ இருக்கின்றன. காதலர் தின கொண்டாட்டமா முக்கியம்? இது போல தேவையில்லாத கொண்டாட்டங்கள் குறைந்தால்தான் நாடு உருப்படும்.

சத்யா : கல்லைக் கூடக் கரைய வைக்கும் சக்தி உள்ளது காதல். கல்லாய் இருந்த இறைவனைக் கூட உருக வைத்தது ஆண்டாளின் காதல் அல்லவா...?

ஜெயசுதா : தெய்வீகக் காதல் வேறு....மனிதனின் காதல் வேறு. திருமணத்திற்குப் பிறகு ஒவ்வொருவர் வாழ்விலும் எத்தனையோ பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனை உறவுகளால் மட்டுமே தீர்க்க முடியும்.

ரேணுகா தேவி : வரதட்சணை கொடுமையால் அதிகமா ஸ்டவ் வெடிக்கறது நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில்தாங்க........காதல் திருமணம்னா எந்த எதிர்பார்ப்பும் இருப்பதில்லையே.

கார்த்திகா : பல காதலர்கள் வீட்ல இருந்து பணம் நகையெல்லாம் எடுத்துக்கிட்டுத்தானே ஓடிப்போறாங்க.....சில நேரத்தில் அந்த காரணத்தினாலேயே ஏமாற்றப்படவும் செய்கிறார்கள்.

மேகலதா : சாதி வேறுபாடுகள் ஒழிய உதவுவது காதல்தானே. அரசாங்கமே காதல் திருமணத்திற்கு ஆதரவு கொடுக்கிறதே. பல சலுகைகளும் கொடுக்கிறது. காதல்ல மட்டும் தான் கலப்புத் திருமணம் சாத்தியமாகும்.

நிரஞ்சனா : அரசு பண்றது எல்லாமே, தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடுகிற வேலைதான். சாதி என்னன்னு கேட்காத பள்ளிக்கூடமும் இல்லை, சாதி இல்லாத சர்டிபிகேட்டும் இல்லை.

சித்ரா : காதல் எப்படிங்க வருது? பெரும்பாலும் வெளித்தோற்றமும், அந்தஸ்தும் பார்த்துத்தானே வருது....?
பெற்றோர் பலதையும் விசாரித்துப் பார்த்து முடிவு பண்ணும் திருமணத்தில் தான் பாதுகாப்பு அதிகம்.

ப்ரியா : அதில மட்டும் என்ன, குழந்தை இல்லேன்னாலோ, அல்லது வேறு ஏதாவது சின்ன பிரச்சனை இருந்தாலோ அதே பெரியவர்களே பார்த்து இரண்டாம் திருமணம் கூட செய்து வைக்கிறார்களே.

ஜான்சி : பெற்றோர் நிச்சயிக்கிற திருமணத்தில் பெண் பார்க்கும் படலம் என்று ஒண்ணு இருக்குமே, அது கொடுமைங்க.... ஆடு மாடு பேரம் பேசுவது போல பெண்ணை கேவலப்படுத்தும் இந்த திருமண பேரம் அவசியமா?

கார்த்திகா : காதல் திருமணத்தில் மட்டும், ப்ளஸ் பாயிண்டெல்லாம் மட்டும் காட்டி அட்ராக்ட் பண்ணுவாங்க. திருமணத்திற்குப் பிறகு மைனஸ் பாயிண்டெல்லாம் தெரியும் போது அப்ப பத்திக்கும்......

ஜெயசுதா : பல காதல் திருமணங்கள் தற்கொலையில் தானே முடிகிறது?
ரேணுகாதேவி : அதற்குக் காரணம் பெரும்பாலும்,பெற்றோராத்தான் இருப்பாங்க. ஈகோ, சாதி வேறுபாடு போன்ற காரணங்களைச் சொல்லியே பிரித்து விடுகிறார்கள். மகிழ்ச்சி, துக்கம் மாதிரி காதலும் ஒரு யதார்த்தமான உணர்வுதானே ?

ப்ரியா : உண்மைதான். காதலியின் நினைவாக கட்டிய தாஜ்மகால் இன்னும் உலக அதிசயமாக நிற்கிறது. நிச்சயித்த திருமணம் பண்ணின கண்ணகி சிலை இன்றும் கண்ணீருடன் நீதி கேட்டுக் கொண்டு நிக்குது. அது மட்டுமில்ல. கலப்பு மணம் மூலம் பிறக்கும் குழந்தைகள் மிக அறிவாளிகளாக இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றனவே.


சித்ரா : குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க பெரியோர் ஆதரவு அவசியம். அது மட்டுமல்ல, என்னதான் கணவனின் அரவணைப்பும், ஆதரவும் இருந்தாலும், பேறு காலங்களிலெல்லாம் தாயன்பு இல்லாவிட்டால் ஏக்கம் தான் மிஞ்சும்.

ஜான்சி : அதற்காக மனதிற்கு பிடிக்காதவரை மணந்து காலம் முழுவதும் கண்ணீருடன் வாழ்க்கையை நடத்த முடியுமா? மனப்பக்குவமும், தன்னம்பிக்கையும் உள்ளவங்க தைரியமாக காதலிச்சு கல்யாணம் செய்து, வாழ்க்கையில் வெற்றியும் பெறலாம்.

இப்படித்தாங்க நீண்டு கொண்டே போனது விவாதம். இதற்கு தீர்ப்பு நீங்கதான் சொல்லனும்.........

Monday, November 22, 2010

நட்பு சுகமா.......சுமையா....?

வாழ்க்கையில் நாம் அன்றாடம் எத்தனையோ பேரைச் சந்திக்கிறோம். ஒரு சிலரை பார்த்தவுடன் வெகு நாட்கள் அவர்களுடன் பழகியது போல ஒரு நெருக்கம் உண்டாகும். நம்மையறியாமல் ஒரு நேசமும், பாசமும் உருவாகிவிடும். சில நேரங்களில் இந்த பாசம் நேரில் பார்க்காமல் கூட ஒரு கற்பனை உருவத்துடனே வளர்ந்து வருவதற்கு, நம் பதிவுலக நட்புக்களே ஆதாரம். இந்த பாசமும், நேசமும், முன் ஜென்ம தொடர்போ என்று கூட பல நேரங்களில் நினைக்கத் தோன்றும். நம்மையறியாமல் நம் மனது அவர்களிடம் அதிக உரிமையைக் கூட எடுத்துக் கொள்ளும்.

என் தோழி அஞ்சுவை {அஞ்சனா] என்ற பேரை நான் அஞ்சு என்றுதான் கூப்பிடுவேன் ] நான் சந்தித்தது ஒரு சுவாரசியமான சூழலில்..............

நாங்கள் புதிதாக வீடு வாங்கி குடி வந்திருந்த காலம். அக்கம் பக்கத்தில், 200 அடிக்கு எந்த வீடும் இல்லை. என் இரண்டு குழந்தைகளும் பள்ளி செல்லும் வயது. கணவர் பணி நிமித்தமாக வெளியில் சென்று திரும்ப நேரமானால் கூட அச்சமாகத்தான் இருக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருந்துவிட்டு முதன் முதலில் தனியே வெளியே வரும் அத்தனை பெண்களுக்கும் ஏற்படக்கூடிய சங்கடம்தான் இது. ஏதோ கண்ணைக் கட்டி ஒரு அத்துவானக் காட்டில் விட்டது போல சோகம்..... வலிய போய் பக்கத்தில் இருப்பவர்களிடம் பழகவும் தயக்கம். கல்லூரிக் காலங்களில் இருக்கும் சகஜ நிலை ஏனோ திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைந்தவுடன், அப்படியே மாறிவிடுகிறது.

உற்றார், உறவினர் என்ற சூழலிலேயே சுழன்று விட ஆரம்பித்துவிடுகிறது. பழைய நட்புக்களைப் பற்றி நினைக்கவும் நேரமின்றிப் போய்விடுகிறது. புதிய சூழல், புதிய மனிதர்கள் என்று ஒரு புறம், கணவரும் பணி நிமித்தமாக அதிக,நேரம் வெளியில் இருக்க வேண்டிய கட்டாயம். வழமையாக நான் தான் மகிழுந்தில் குழந்தைகளை பள்ளியில் சென்று விட்டு விட்டு வருவேன் அன்றும் அப்படி விட்டுவிட்டு, வங்கியில் ஒரு வேலை இருந்ததால் அதையும் முடித்துவிட்டு, வீடு திரும்ப எண்ணி காரை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். கிளம்பிய 5 நிமிடத்தில் ..........

ஈரோட்டில் மேட்டூர் சாலை பிரதான சாலை. மிகப் பரபரப்பான சாலை, பஸ் நிலையமஅருகில் உள்ளதால், எந்நேரமும் சாரி, சாரியாக வண்டிகள் போய்க்கொண்டே இருக்கும். இடது புறம் இருந்த வங்கியிலிருந்து, சாலையின் மேற்குப் புறம் செல்வதற்காக, தெருவை கடக்க வேண்டி, என்னுடைய நான்கு சக்கர வாகனத்தை வேகமாக முடுக்கிவிட, அந்த வேளையில் சரியாக, நேர் எதிரில், ஒரு ஸ்கூட்டர், கண்,மண் தெரியாமல் படுவேகமாக வர, நேராக வந்து வண்டியின், பம்ப்பரில், மோதி, குட்டிக் கரணம் அடித்து சுருண்டு விழுந்ததை முதன் முதலில் கண்ணுக்கு நேராக, அதுவும், என் வண்டியிலேயே....... கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து விட்டது, அடுத்த நொடி, போக்குவரத்து காவல் அதிகாரி, இதையனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவர், நேராக வந்து, தவறு அந்த பெருங்குடி மகனார் மீதுதான், என்றும், தவறான பாதையில் அவர் வந்ததையும் சுட்டிக் காட்டி, என்னை அந்த இடத்தை விட்டு நகரச் சொன்னார். தெய்வாதீனமாக, விழுந்த அந்த மனிதரும் போதை தெளிய, மெதுவாக எழ முயற்சித்தார். ஆனாலும்,எனக்கு, கை, கால்கள் உதறல் எடுத்து, ஒரு அடி கூட நகர மறுக்கிறது.

இந்த இக்கட்டான சூழலில்தான், ஒரு பெண்மணி,ஆதரவாக என் தோளில் கை போட்டு, வாருங்கள் போகலாம், என்றார். அந்த நேரத்தில் அவரை யார் என்று கேட்கக் கூட எனக்குத் தோன்றவில்லை. தன் கணவருடன் வந்திருந்தவர், அவரை எங்கள் பின்னாலேயே வரச் சொல்லிவிட்டு, என்னை வண்டியை எடுக்கச் சொல்லி, அருகில் அமர்ந்து கொண்டார். எனக்கு அந்த நேரத்தில் தெய்வமே வானத்திலிருந்து இறங்கி வந்தது போல ஒரு உணர்வு. செல்லும் வழியில்தான் அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். எங்கள் வீட்டின் அருகில் தான் அவர் வீடு என்றும், என்னை அவர் பார்த்திருப்பதாகவும், கூறினார். அவர் தன் பெயரை, அஞ்சனா என்றும், தன் கணவர் வங்கியில் பணிபுரிவதாகவும், ஒரே மகன் பத்தாம் வகுப்பு படிப்பதாகவும், தான் ஒரு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக இருப்பதாகவும் கூறினார்.

அன்று முதல் அஞ்சனா எனக்கு அஞ்சுவானார். எங்கள் நட்பு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருந்தது. அஞ்சுவின் கணவர் மிக கலகலப்பாக பழகக் கூடிய மனிதர். வலிய சென்று அடுத்தவர்களுக்கு உதவுவதில் அஞ்சுவிற்கு எள்ளளவும் குறைந்தவரில்லை அவர். அவரும் என்னை உடன் பிறவா சகோதரியாகவே நடத்தினார். இருவரும் “மேட் ஃபார் ஈச் அதர்” என்பார்களே, அப்படித்தான் இருப்பார்கள்.மிக அன்னியோன்யமான தம்பதியர் இருவரும். மிகத் தெளிந்த நீரோடையாக இருந்தது இவர்கள் வாழ்க்கை.

ஆனால் விதிக்கு அது பொறுக்கவில்லை போலும். மிக ஆரோக்கியமான உடல் நிலையுடன், அன்றாடம் வாக்கிங், யோகாசனம், தியானம் என்று அழகாக திட்டமிட்ட வாழ்க்கை அவருடையது. அன்றும் வாக்கிங் சென்று விட்டு, வீடு திரும்பியவர், வழியில் பார்த்தவர்களுக்கெல்லாம் காலை வணக்கம் சொல்லிவிட்டு, வீட்டிற்குள் சென்றவர், சற்று நேரத்திலேயே அவர்கள் வீட்டில் ஒரே பரபரப்பு. காரில் அவரை தூக்கி வைத்துக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. தீடீரென்று அதிகமாக வியர்க்க ஆரம்பித்ததாகவும், உடல் மிகவும் அசதியில் மயக்கமாக இருப்பதாகவும் கூறியதாக பேசிக் கொண்டனர். எந்த வலியோ வேதனையோ எதுவும் இல்லை. மருத்துவமனைக்குச் சென்றவர், இரண்டு மணி நேரத்திற்குள் அதே புன்னகை மாறா முகத்துடன் வெறும் உடலாக வந்து சேர்ந்தார். “திடீர் மாரடைப்பு” [ Massive attack ] என்றார்கள்.

கூடியிருந்த அனைவரும் கதறியழ, அஞ்சு மட்டும், அப்படியே அசையாமல், அதிர்ச்சி நீங்காதவராக அமர்ந்திருந்தார். வெளியூரில் படித்துக் கொண்டிருந்த மகன் வந்து கதறிய போது கூட எந்த சலனமும் இல்லை அவரிடம். எல்லாம் முடிந்து வீட்டை சுத்தம் செய்து முக்கியமான உறவினர் மட்டும் இருந்து கொண்டிருந்தனர். இன்னும் நம் குடும்பங்களில் கணவனை இழந்த பெண்களுக்கு செய்யும் சடங்குகள் என்னும் கொடுமையிலிருந்து பெரிதாக விடிவு வந்தது போல் தெரியவில்லை. இப்பொழுதெல்லாம் பொட்டு வைக்க அனுமதிக்கிறார்கள். ஆனால் தாலி வாங்குவது, என்று ஒரு சடங்கு இருக்கிறதே. அது போன்ற கொடுமை ஏதுமில்லை எனலாம்.

விடியற்காலை ஊர் உறங்கும் வேளையில், ஏற்கனவே கைம்பெண்களாக உள்ள சில பெண்கள் வருவார்கள். நெருங்கிய உறவினர், பெண்கள் மட்டும் இருப்பார்கள். அந்தப் பெண்ணை, நிறைய மஞ்சள் பூசி குளிக்க வைப்பார்கள். தலை நிறைய பூ வைத்து, பொட்டு பெரிதாக வைப்பார்கள். நல்ல புடவையும் உடுத்துவார்கள். பின்பு இந்த அலங்காரத்தைக் கண்ணாடியில் காட்டுவார்கள். கட்டிப்பிடித்து, ஒப்பாரி பாட்டு சொல்லி, [அந்த பாட்டைக் கேட்டால் கல் நெஞ்சும் கரையும்] பின்பு, தலையில் உள்ள பூவை பிய்த்துப் போட்டு, பொட்டை அழித்து, தாலியை கழட்டி ஒரு கிண்ணத்தில் பாலை வைத்து அதில் போட்டு விடுவார்கள். கையில் கண்ணாடி வளையல் இருந்தால் அதை உடைப்பார்கள். மற்ற சுமங்கலிப் பெண்கள் இந்த நேரத்தில் அவரைப் பார்க்காவிட்டால் மீண்டும் மூன்று மாதத்திற்கு திரும்பவும் அவரைப் பார்க்கக் கூடாதாம்.........

இந்த சடங்கு நடப்பதற்காக எல்லோரும் கூடியிருந்தனர். அந்த நேரத்தில் தான் அஞ்சுவின் மகன், எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, தன் அம்மாவிற்கு இப்படி ஒரு காரியம் செய்யவே கூடாது என்று அடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டான். எல்லோரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள், அவன் கேட்பதாக இல்லை. எந்த சடங்கும் செய்ய அனுமதிக்க மாட்டேன். விருப்பப்பட்டவர்கள் மட்டும் இங்கே இருக்கலாம், என்று தெளிவாகக் கூறிவிட்டான். பெரியவர்கள் அவனை பலவாறாக சமாதானம் செய்யவும், தாலியை மட்டும் கழட்டிக் கொள்ள சம்மதித்தான். ஆனால் அதற்காக அஞ்சுவிடம் அந்த பெண்கள் நெருங்கிய போதுதான், அவர் சுய நினைவு பெற்றவராக, ஓ வென கத்த ஆரம்பித்தது தெருவில் இருந்த அனைவரையும் கதி கலங்கச் செய்தது. எனக்கும் ஏதும் புரியவில்லை, அந்த நிமிடம் வரை சொட்டு கண்ணீர் விடாதவர், தாலியை தொட்டவுடன் அவர் கத்தியது, இன்று நினைத்தாலும் கதி கலங்குகிறது.

ஒருவரையும் அருகில் நெருங்கவே விடாமல், என் மடியில் படுத்துக் கொண்டு கதறியழுதது தாங்க முடியாத வேதனை. அன்று ஆரம்பித்த அழுகை முப்பது நாட்கள் இருக்கும் ஓயாத அவர் அழுகை சற்றே ஓய்வதற்கு. திடீரென, இரவு பத்து மணிக்குக்கூட அவர் அம்மா வந்து என்னை அழைப்பார்கள். அஞ்சுவின் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லையென. நானும் எந்த நேரம் கூப்பிட்டாலும், வீட்டில் போட்டது போட்டபடி உடனே ஒடி விடுவேன். அவரிடம், பல விடயங்களைப் புரிய வைத்து அவர் அழுகையை கட்டுப்படுத்த முயற்சிப்பேன். கொஞ்சம், கொஞ்சமாக தேற ஆரம்பித்தார். மகனுக்காக தன்னைத் தேற்றிக் கொள்ள முயன்றார்.

இதற்குப் பிறகுதான், என்னுடன் பழகுவதை குறைத்துக் கொள்ள ஆரம்பித்தார். கணவர் இறந்து ஆறு மாதங்கள் ஆகியிருக்கும் அந்த நேரத்தில். என்னைக் கண்டவுடன், ஏனோ அவருக்கு அழுகை பொங்கி வர ஆரம்பித்தது. நானும் அதை உணர்ந்து, சற்றே அவர் சந்திப்பைக் குறைத்துக் கொண்டேன். ஆனாலும் அவர் என்னை பார்ப்பதையே தவிர்க்க ஆரம்பித்ததுதான் ஏன் என்றே எனக்குப் புரியவில்லை....... நானும் எத்தனையோ முறை முயன்று பார்த்தும் பழையபடி அவரால் என்னிடம் பழக முடியவில்லை. அதுதான் ஏன் என்று எனக்கு இன்றும் புரியாத புதிராகவே, மனதை நெருடிக் கொண்டிருக்கிறது. இன்று அஞ்சுவின் மகன் படித்து முடித்து, துபாயில் வேலை கிடைத்து செட்டில் ஆகி விட்டான். இவரும் விருப்பு ஓய்வு பெற்று, மகனுடன் துபாய் சென்றுவிட்டார். நாட்டையே விட்டுச் செல்லும் போதுகூட என்னிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை.......... அதுதான் ஏன் என்ற காரணம் புரியாமல் என் மனம் குழம்பித் தவிக்கிறது............ மனித மனம் என்றுமே ஒரு புரியாத புதிராகத்தான் உள்ளது அல்லவா?