Thursday, August 20, 2026

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

 


63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார்





குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்

    கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப்

பொன்றாழு முடிவேண்டப் புலியூர் வாழும்

    பூசுரர்கள் கொடாதகலப் புனித னீந்த

மன்றாடுந் திருவடியே முடியாச் சூடி

    மாநிலங்காத் திறைவனுறை மாடக் கோயில்

சென்றாசை யுடன்வணங்கிப் பணிகள் செய்து

    திருவருளா லமருலகஞ் சேர்ந்து ளாரே.

 

கூற்றுவ நாயனார் களந்தை என்னும் ஊரில் வாழ்ந்த சிவனடியார். ஒரு சிற்றரசராக இருந்த இவர் தன் தோள் வலிமையாலும், வாள் வலிமையாலும் பகைவர்களை வென்ற மாவீரராகவும் இருந்தார். பல்லவ மன்னரான இவர் பல்வேறு மன்னர்களை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார். தும்பைப் பூ மாலை சூடியவர், சோழ மன்னர்களையும் வென்று சோழ நாட்டையும் தன் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்தார். யானைப் படைகள், விரைந்து செல்லும் குதிரைகள், வலிமையான தேர்கள் மற்றும் சிறப்புப் படை வீரர்கள் என மிகவும் சக்திவாய்ந்த படைகளுக்குத் தலைவராக விளங்கினார். என்றாலும் இவர் முடி சூடிக்கொண்ட அரசராக இல்லை. அந்நாட்களில் மன்னர்களுக்கு மணிமகுடம் சூட்டுவது ஒரு பெரிய விழா. பண்டைய நாட்களில் சோழர்களின் மணிமுடி தில்லையின் கருவூலத்தில் இருந்தது. உரிய காலத்தில் இதனை சோழ மன்னர்களுக்குச் சூட்ட வேண்டும் என்று தில்லை வாழ் அந்தணரை வேண்டினார்.

 

·         ஆனால் அவர்கள் சோழர் குலத்தில் தோன்றாத மன்னர் எவருக்கும் முடி சூட்டமாட்டோம் என்று கூறிவிட்டனர். தீட்சிதர்கள் தங்கள் மரபில் வந்த ஒருவரிடம் மணிமகுடத்தை ஒப்படைத்துவிட்டு சேர நாடு சென்றுவிட்டனர். ஆனால் கூற்றுவ நாயனார் அவர்களிடம் வாதிட்டு முடி சூட்டிக்கொள்ள விரும்பவில்லை.

·         கூத்தப் பெருமானிடத்தில் கூற்றுவனார், தில்லைவாழ் அந்தணர்கள் தனக்கு முடிசூட்ட ஒப்புதல் அளிக்காவிட்டாலும் பரவாயில்லை ஐயனின் திருவடியையே மணிமுடியாகச் சூட்டி அருள வேண்டும் என வேண்டினார். தன் அடிகளை முடியாகத் தரவேண்டும் என்று சிவனை வேண்டியதால், சிவபெருமானும் அவர் கனவில் தோன்றி அவரது சென்னியின் மீது தம் திருவடிகளைச் சூட்டி அருள் புரிந்தார். கண் விழித்த நாயனார் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தார். பேரானந்தம் கொண்ட அந்நாயனார் இறைவனுடைய திருவடியே மணிமுடியாகக் கொண்டு நாடாண்டார். அரசு செல்வத்தைப் பெருமான் அருளால் கிடைத்ததாக எண்ணி மகிழ்ந்து போற்றி இறைப்பணிக்கும், அடியவர் பணிக்கும் அரசு செல்வத்தைப் பயன்படுத்தி இறைவன் திருவடி நிழல் சார்ந்தார்.

·          

·           கூற்றுவ நாயனார் புராணம் சொல்லும் கருத்து:

 

பகைவர்களுக்கு எமன் போன்று விளங்கியதால் கூற்றுவர் என்ற பெயர் பெற்றார் இந்நாயனார். கூற்றுவர் என்பதற்குக் கூறுபடுத்துபவர் என்று பொருள். உடம்பையும், உயிரையும் கூறுபடுத்துவதால் எமனுக்குக் கூற்றுவன் என்று பெயர். வெற்றிகளால் இவர் பகைவர்க்குக் கூற்றுவன் போல விளங்கினார். அருளிலும் பொருளிலும் சிறந்து விளங்கிய இந்நாயனார் பகைவர் அஞ்சும் நாற்படை கொண்டு பெருமிதத்துடன் பகைவர்க்குக் கூற்றுவன் போல விளங்கினார்.

 

தம் பூர்வ புண்ணியப் பேறாகக் கூற்றுவ நாயனார் சிவபெருமான் எனும் மெய்யுணர்வும், சிவநாமமும் எம்பெருமான் வழிபாடும் தவறாது புரிந்து சிறந்த சிவனடியாராக விளங்கியுள்ளார். சேக்கிழார் பெருமான் வாக்கில்,

"துன்னார் முனைகள் தோள்வலியால் வென்று

சூலப்படையார்தம் நன்னா மந்தந் திருநாவில்

நாளும் நாளும் நவிலும் நலம்மிக்கார்

பன்னாளீச ரடியார்தம் பாதம்பரவிப் பணிந்தேத்தி

முன்னா கியநல் திருத்தொண்டின்

முயன்றார் களந்தை முதல்வனார்"

என்று போற்றுகின்றார்.

 

தமக்கு முடிசூட்ட மறுத்த தில்லைவாழ் அந்தணரை வலிந்து உடன்படுத்தவோ அல்லது மாற்று வழி கண்டு முடிசூட்டு விழாவைக் கொள்ளவோ போதிய ஆற்றல் உள்ளவராக இருந்தும் கூற்றுவ நாயனார் அவற்றை நாடாது சிவபெருமான் திருவருளையே வேண்டியவர், அத்திருவடியே தமக்கு மணிமுடியாகப் பெற்று நாடாண்டார். நாடாளும் பணியுடன், இறைப்பணியும், அடியவர் பணியும், சிறக்க வாழ்ந்து இறைவன் திருவடி நிழல் சேர்ந்தார்.

 

திருச்சிற்றம்பலம்.

 

 

·          

 

 

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 42

 


63 நாயன்மார்கள் வரலாறு – 36 கணநாத நாயனார்

 

கந்தமலி வயற்காழி மறையோ ரேத்துங்

    கணநாதர் திருத்தோணிக் கடவு ளார்க்கு                                  

நந்தவனம் பலவமைத்து மலருங் கொய்து

    நற்றாமஞ் சொற்றாம நயந்து சாத்தி

வந்தவரைத் தொண்டாக்கிப் பணிகள் பூட்டி

    வாதுசெய்த வாரணத்தை மகிழ்ந்து வாழ்த்திப்

புந்திமகிழ்ந் தரனருளாற்கயிலை மேவிப்

    பொருவில்கணத் தவர்காவல் பொருந்தி னாரே

 

கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார் போற்றிப் புகழும் கணநாத நாயனார் சீர்காழியில் ஒரு மறையவர் குலத்தில் அவதரித்தவர். சிவபெருமான் மீது மாறாத அன்பு கொண்டு சட்டைநாதர் கோயிலுக்குத் தவறாமல் சென்று, தோணியப்பர் வடிவில் சிவபெருமானை வழிபட்டு வந்தார். அனுதினமும் கோயிலில் பூசைகளை நடத்தி, எம்பெருமானுக்கு நைவேத்தியம் படைத்தார். தனது வீட்டிலும் சிவனடியார்களுக்கும் உணவு அளித்து சேவை புரிந்து வந்தார்.

அடியார்களைக் கவரும் வண்ணம் சைவம் குறித்த அவருடைய சொற்பொழிவுகள், மக்களிடையே மிகுந்த பக்தி உணர்வைத் தூண்டியது. வேதங்களையும் சிவ மந்திரங்களையும் மிகத் தேர்ச்சியுடன் உச்சரிப்பதோடு நெஞ்சுறுதியோடு திருத்தொண்டுகள் பலவும் இடையறாது செய்து கொண்டிருந்தார். சைவ சமயம் தழைத்தோங்கும் வண்ணம் தொண்டர்களுக்கு உரிய பயிற்சிக் கூடம் அமைத்தார். நல்ல தொண்டர்களை உருவாக்கினார்.

நந்தவனம் அமைப்பது, மலர் கொய்வது, மலர்மாலை கட்டுவது, பெருமான் திருமஞ்சனத்திற்கு உரியதைச் சேகரிப்பது, காலையும், மாலையும் கோயிலை அலகிடுதல், மெழுகிடுதல், தூயக் கைத்தொண்டு செய்தல், திருமுறைகளை எழுதிப் படியெடுத்தல், திருமுறைகளைப் பயிற்றுவிப்போர் என்ற இத்துறைகளுக்கெல்லாம் தொண்டர்களை உருவாக்கினார்.

நல்ல நந்தவனப் பணி செய்பவர்

  நறுந்துணர் மலர் கொய்வோர்

பல் மலர்த் தொடை புனைபவர் கொணர்

  திரு மஞ்சனப் பணிக்கு உள்ளோர்

அல்லும் நண் பகலும் திரு அலகிட்டுத்

  திரு மெழுக்கு அமைப்போர்கள்

எல்லையில் விளக்கு எரிப்பவர்

  திரு முறை எழுதுவோர் வாசிப்போர்

 வறுமையில் உழன்ற அடியார்களுக்கு ஆடைகளை வழங்கியவர், அவர்களின் பிள்ளைகளுக்கும் முறையான கல்வியை அளித்தார். 

ஞானசம்பந்தப் பெருமானைத் தம் குருநாதராக ஏற்றிப் போற்றிய கணநாத நாயனார் அவரிடமிருந்து சைவத் தத்துவங்களைக் கற்றுக்கொண்டார்.

சிவபெருமான் மீது அவர் கொண்டிருந்த உண்மையான பக்தியினாலும், அடியார்களுக்கு மட்டுமின்றி பொது மக்களுக்கும் அவர் ஆற்றிய பெரும் சேவையினாலும், சிவபெருமானின் திருவடிகளே காப்பு என்று ஏற்றிப் போற்றி வாழ்ந்து இறைவன் திருவடி நிழல் சார்ந்தார். ஆண்டுதோறும் கணநாத நாயனார் முக்தி அடைந்த நாளான, பங்குனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் இவரது குருபூசைநாள் சீர்காழியில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

 

கணநாத நாயனார் புராணம் சொல்லும் கருத்து:

உலகம் உய்ய நஞ்சுண்டவர் தொண்டினில்

  உறுதி மெய் உணர்வு எய்தி

அலகில் தொண்டருக்கு அறிவு அளித்தவர்

  திறம் அவனியின் மிசை ஆக்கும்

மலர் பெரும் புகழ்ப் புகலியில் வரும்

  கண நாதனார் கழல் வாழ்த்திக்

குலவு நீற்று வண் கூற்றுவனார்

  திறம் கொள்கையின் மொழிகின்றாம்.

 சாதிப் பாகுபாடின்றி அனைவரிடமும் சமமான அன்பையும் பாசத்தையும் பகிர்ந்து கொண்டவரை மக்கள் மனதார நேசித்தனர். அவருடைய கனிவான நடத்தையால், ஏராளமான மக்கள் அவர்பால் ஈர்க்கப்பட்டு, சிவபெருமானைப் பற்றிய அவருடைய தெய்வீக சொற்பொழிவுகளையும் ஆர்வமுடன் செவிமடுத்தவர்கள் தங்கள் தேவையற்ற எண்ணங்களை நீக்கி, நல்ல எண்ணங்களை மட்டுமே நிரப்பினார். தன் வாழ்நாளில், கடவுளுக்கும் மக்களுக்கும் சேவை செய்வதன் மூலம் அவர் பல நல்ல கர்ம வினைகளைச் செய்திருந்தார். சிவபெருமான், ஊழிக்காலத்தில் 64 கலைகளையும் ஆடையாகக் கொண்டு பிரணவத் தோணியில் தேவியுடன் வந்து பிரளயத்தில் அழியாது நின்ற இத்தலத்தில் தங்கியதாக தலபுராணம் கூறும், சீர்காழி திருத்தோணியப்பரை சிவாகம விதிப்படி வழிபட்டு வந்தார். சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு புரியும் உயர்ந்த அறத்தை உணர்ந்து வாழ்க்கையை நடத்திய கணநாதர், சிவனடியார்களுக்குச் செய்ய வேண்டிய சிறந்த தொண்டினைப் பற்றிய தத்துவத்தை உலகிற்கு உணர்த்தியதோடு நில்லாமல், தாமும் அதன் வழி நடந்தார். தொண்டர்கள் விரும்பும் சிவாலயப் பணிகளை அவர்களுக்குக் கொடுத்து, அவர்கள் செய்யும் பணியை இறைமனதோடு தூய்மையாகச் செய்யவும் பயிற்றுவித்தார். திருத்தொண்டின் வழி நிற்பதே சிவபெருமானின் திருவடியை அடையும் வழி என்பதை உணர்ந்தவர் அனைவரையும் அரவணைத்து, தானும் பங்கெடுத்து ஆலயப்பணியைக் குறைவின்றி செய்தார்.

 திருச்சிற்றம்பலம்

 

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 41

 


63 நாயன்மார்கள் வரலாறு – 34 சிறுத்தொண்ட நாயனார் (பகுதி – 2)

ஒரு குடும்பத்திற்கு ஒரே புதல்வனாக இருக்க வேண்டும். அந்த மைந்தனைத் தாய் பிடிக்க, தந்தை அரிய வேண்டும். தாயும் தந்தையும் தம்முள் மனம் உவந்த துன்பமின்றி அமைந்த கறியைத்தான் தாம் உண்பது என்கிறார் பைரவ அடியார்.

பள்ளிக்குச் சென்ற சீராளத் தேவரை அழைத்து வந்து நீராட்டி, அணிகலன்களைப் பூட்டி அழகு செய்து, வழமைபோல் அள்ளியணைத்து முத்தமிட நினைத்த திருவெண்காட்டு நங்கையார் வெருவுற்று நீங்கினார். அடியவருக்கு அமுதாகப் போகின்ற சீராளத் தேவரை முத்தமிட்டு எச்சில் செய்வதா என்று அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டார்.

தாங்கள் பெற்றெடுத்த தெய்வச் செல்வனை, மழலை மாறா இனிய புதல்வனைச் சலங்கை கொஞ்சும் அழகிய கால்கள் இரண்டையும் மடியில் வைத்துப் புடை இடுக்கி மகனுடைய இரண்டு கைகளையும் தாய் பிடிக்கத் தந்தையார் கருவி கொண்டு தலையரிவார். பைரவர் தாயும் தந்தையும் தம்முள் மகிழ்ந்து துன்பமின்றி அரிந்து கறிசமைக்க வேண்டும் என்றதனால், தாயும் தந்தையும், சீராளத் தேவர் என்னும் மகன் இருந்ததால் தங்கள் திருத்தொண்டு முற்றுப் பெறாமல் தொடர்ந்து நிகழ வாய்ப்பளித்தான் என்று மகிழ்ந்திருந்தார் சிறுத்தொண்டர். திருவெண்காட்டு நங்கையோ இன்று அடியவர் அமுது செய்யவில்லையானால் தன் கணவர் உயிர் வாழார், சீராளத் தேவர் அடியவருக்கு அமுதாக இருந்து தன் கணவர் உயிரைக் காத்து தன் தாலியை தமக்களித்தான் என்று இருவர் மனமும் மகிழ உணவு சமைத்தார். 

சந்தனத்தாதியார் கறியைப் பல்வேறு வகையாக, விரைந்து சமைத்து சிறுத்தொண்டருக்கு விவரம் அளித்தவுடன், அவரும் பைரவ அடியாரைச் சென்று அழைத்து வந்து, அவரின் பாதங்களைத் தூய்மை செய்து, ஆசனத்தில் அமரச் செய்து மாலைகள் சூட்டிப் புனித நீரால் பாதங்களைக் கழுவினார். அப்புனித நீரை வீடு முழுக்கத் தெளித்துத் தூப தீபம் காட்டிப் பூசனை செய்து வேண்டினார். மனைவியுடன் வணங்கி திருவமுது செய்ய வேண்டும் என்று பணிந்து வேண்டி நின்றார். பைரவ அடியாரும், சிறுத்தொண்டரைப் பார்த்து, தாம் சொன்ன முறையால் உறுப்பெல்லாம் கொண்டு சுவையாக கறியமைத்தீரா என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த திருவெண்காட்டு நங்கை தலைக்கறி அமுதுக்காகாது என்று கழித்துவிட்டதாகக் கூறியபோது, அதுவும்கூட தாம் உண்போம் என்றார். இணையர் இருவரும் சிந்தை கலங்கித் திகைத்து நின்றனர். உடனே சந்தனத்தாதியார் அதையும் சமைத்து வைத்திருப்பதாகக் கூறி எடுத்துக் கொடுத்தார்.

பைரவ அடியாருக்கு எவ்விதக் குறையுமின்றி அமுது படைப்பதில் மகிழ்ந்த திருவெண்காட்டு நங்கையார் தலைக்கறியைப் பரிமாறினார். ஆனால் அதன் பின்னும் பைரவ அடியார், தாம் தனித்து உண்ண மாட்டோம் என்றும் சிவனடியார் யாராவது இருந்தால் அழைத்து வரவேண்டும் என்றும் கூறினார். வெளியில் தேடிய சிறுத்தொண்ட நாயனார், எவரையும் காணவில்லை என்று கூறுகிறார். பைரவ அடியாரும், திருவெண்ணீறு அணிந்திருக்கும் அவரும் அடியார்தான் என்பதால் சிறுத்தொண்டரும் தன்னுடன் அமுது உட்கொள்ள வேண்டும் என்றார். அடியார் திருவமுது செய்யும் பொருட்டு தாமும் உடனமர்ந்து உணவருந்துவதாகக் கூறி உண்ண ஆரம்பித்தார். அது கண்ட பைரவ அடியார். உமக்கு ஓர் பிள்ளை இருக்கிறான் அல்லவா? அவனையும் அழைத்து வா. அவனும் நம்முடன் திருவமுது செய்யட்டும்என்றார். அது கேட்டு சிறுத்தொண்ட நாயனார் கண் கலங்கி தங்கள் மைந்தன் அதற்கு உதவான் என்றார். ஆனால் பைரவ அடியார் அவர்களது மைந்தனும் வந்தால் தான் தாம் அமுது உண்பேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார். சிறுத்தொண்ட நாயனார் செய்வதறியாது திகைத்து நின்றவர், செய்வதறியாது கணவன், மனைவி இருவரும் வாயிற்புறத்தில் நின்று மகனே வருவாய் என்று அழைக்க ஆரம்பித்தபோதும் மகன் வரவில்லை.

சிறுத்தொண்டர் மீண்டும் இப்போது அடியார் அமுதுண்ண நீ வேண்டும் மகனே, என் துன்பத்தை நீக்கும் மைந்தா வருக என்று வேண்டியபோதும் வரவில்லை. திருவெண்காட்டு நங்கையோ, பிள்ளையைத் தந்தை அரிய கால்களைப் புடை இடுக்கி அழுத்திப் பிடித்தபோது சீராள தேவர் கால்களை உதறிய நேரத்தில் அந்தப் பிஞ்சுக் கால்களில் அணிந்திருந்த சிலம்பின் மணி ஒலிகள் தம் காதுகளில் ஒலித்த அந்த நொடியே அது கடைசிக் காட்சியாக ஆகிவிட்டாலும் அதனையே வைத்து மீண்டும் அழைத்தார்.

வையம் நிகழும் சிறுத் தொண்டர்

  மைந்தா வருவாய் என அழைத்தார்

தையலாரும் தலைவர் பணி தலை

  நிற்பாராய்த் தாம் அழைப்பார்

செய்ய மணியே சீராளா வாராய்

  சிவனார் அடியார் யாம்

உய்யும் வகையால் உடன் உண்ண

  அழைக்கின்றார் என்று ஓலம் இட. 

எம்பெருமான் திருவருளால் அந்த அதிசயமும் நடந்தது. குழந்தை சீராளன் பாடசாலையிலிருந்து ஓடி வரும் குழந்தை போல துள்ளிக் குதித்து ஓடி வந்த அன்பு புதல்வனை அள்ளியெடுத்த அன்னை வாரிக் கையிலெடுத்து கணவரிடம் கொடுக்க, சிவனடியார் அமுதுண்ணப் பெற்றோம் என இருவரும் அகமகிழ்ந்தனர். மகனை அழைத்துக்கொண்டு வேகமாக ஓடிவந்த சிறுத்தொண்டர் பைரவரைக் காணாது சிந்தை கலங்கித் திகைத்துக் கீழே விழுந்தார். கலத்தில் இருந்த கறியமுதும் காணாமல் அஞ்சினார். பைரவரைத் தேடி வீட்டின் பகுதியில் பார்த்தார். மறைந்த பைரவர் விடை மீது எம்பெருமாட்டியோடும் முருகப் பெருமானோடும் காட்சிக் கொடுத்த அதிசயமும் நடந்தது. திருத்தொண்டில் மூவரும் ஈடுபட்டதால் மூவருக்கும் அருள் செய்ய எம்பெருமான் மூவராகவே வந்தனர் போலும்!

தனி வெள் விடை மேல் நெடும்

  விசும்பில் தலைவர் பூத கண நாதர்

முனிவர் அமரர் விஞ்சையர்கள் முதலாய்

  உள்ளோர் போற்றி இசைப்ப

இனிய கறியும் திரு அமுதும்

  அமைத்தார் காண எழுந்து அருளிப்

பனி வெண் திங்கள் முடி துளங்கப்

  பரந்த கருணை நோக்கு அளித்தார்

 

சிறுத்தொண்ட நாயனார் புராணம் சொல்லும் கருத்து

திருத்தொண்டில் வல்வினையும் நல்வினையும்!

சிவனடியார்களின் திருத்தொண்டுகள் பற்றிய நூலாகிய திருக்களிற்றுப்படியார், அடியார்களின் செயல்களின் தன்மை சார்ந்து அவற்றை மெல்வினை, வல்வினை என வகைப்படுத்துகிறது. அவற்றுள், ஏறுமாறாக இல்லாமல், மிக இயல்பாக, எவரும் செய்யக்கூடிய எளிமையான சரியை கிரியைத் தொண்டுகள் மெல்லினையெனவும், நினைக்கவே அச்சமூட்டுகின்றனவும், பதற்றமும் ஏற்படுத்துகிற, அடுத்தவர்களால் எளிதாகச் செய்ய முடியாதனவாக உள்ளத் தொண்டுகள் வல்வினை எனவும் குறிப்பிடப்படுகின்றன. அவற்றுள் மெல்வினையை இலக்கண வகையாலுரைத்த திருக்களிற்றுப்படியார் வல்வினையை உதாரணங்கள் மூலமே காட்டியிருத்தல் குறிப்பிடத்தகும்.

"வரங்கள் தருஞ்செய்ய வியிரவர்க்குத் தங்கள்
கரங்களினாலன்று கறியாக்க இரங்காதே
கொல்வினையே செய்யுங் கொடுவினையே யானவற்றை
வல்வினையே யென்றதுகாண் மற்று."

  திருஞானசம்பந்தர் தேவாரத்தில், "சிறப்புலவன் சிறுத்தொண்டன்" என்றும் "சீராளன் சிறுத்தொண்டன்"

சிறுத்தொண்ட நாயனார் குறிக்கப்பட்டுள்ளார்

 சேக்கிழார் தம் வாக்கில்,

 "சீதமதி அரவினுமின் செஞ்சடைமேற்

செறிவித்த நாதனடியார் தம்மை நயப்பாட்டு

வழிபாட்டால் மேதகையாரவர் முன்பு மிகச்

சிறியராயடைந்தார் ஆதலினாற் சிறுத்தொண்டராய்

நிகழ்ந்தா ரவனியின் மேல்"

 என்பார்.

சிவனடியார்களுக்குச் செய்யும் தொண்டும், அளவற்ற அன்பின் காரணமாகச் செய்யப்படும் செயல்கள் உலக இயல்புக்கு மாறானவை என்றாலும் அவை முக்தி தரும் என்கிறார். பைரவர் (சிவன்) வடிவில் வந்த அடியாருக்குத் தனது கைகளாலேயே தன் மகனைக் கறியாக்கிச் சமைத்து அன்போடு படைத்த சிறுத்தொண்ட நாயனாரின் வல்வினை பற்றி குறிப்பிடுகின்றது.

உயிர் உள்ள ஆடு, கோழி போன்றவற்றை அறுத்தார்கள் எனும்போது, உயிர் அற்ற காய்கறிகளை அரிந்தார்கள் என்பது வழக்கு. சீராளத் தேவர் சிவயோக நிலையில் உயிர் பொருளாக இருந்த காரணத்தால் தெய்வச் சேக்கிழார் பெருமான் அரிந்தார் என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளதோடு, அரியவினை செய்தார் என்று இரு பொருள்படக் கூறுகிறார். அதாவது ஒன்று அருமையான செயல் என்று குறிப்பிடுவது. மற்றொன்று சீராளத் தேவர் அரிகின்ற செயல் என்பதாம்.

இத்தகைய அரிய செயல் செய்தவரை ஆண்டவன் அருள் செய்தது சற்று கடினமான முறைதான் என்றாலும் பெற்ற பிள்ளையை அரிந்து சமைக்கச் செய்தது கருணையின்பால் படுமா என்று தோன்றலாம். யாரை எப்படி ஆட்கொள்வது என்பதை அந்த இறைவனே முடிவு செய்கிறான். வடபுலத்தில் படையெடுத்துச் சென்ற பரஞ்சோதியார் வாதாபித் தென் நகரைத் தீக்கிரையாக்கியுள்ளார். அதில் பல உயிர்களும், குழந்தைகளும் உயிர் நீத்துள்ளனர். பரஞ்சோதியாரைப் பொருத்தவரையில் அது தனது தேசபக்தியின் வெளிப்பாடு என்பார். பற்றின்றி விருப்பு வெறுப்பின்றித் தேச பக்தியால் வாதாபியை வீழ்த்தியவர் தெய்வ பக்திக்காகப் பற்றற்று தம் பிள்ளையை அரிவாரோ என்று சோதிப்பார் போலும்! இவ்வினாவிற்கான விடையாக சிறுத்தொண்டர் வரலாற்றால் அடியவர்களின் பற்றற்ற நிலையை உலகிற்கு விளக்கியருளுகிறார்.

சிறுத்தொண்டர் நாயனார் பல்லவ மன்னனின் படைத் தளபதியாக வாதாபிசென்று சாளுக்கியர்களோடு போர் செய்து வாகை சூடி வந்தபோது தம்முடன் கொண்டு வந்த (வாதாபி) விநாயகரை இக்கோயிலில் நிர்மாணம் செய்துள்ளார். இவரது குருபூசை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

திருச்சிற்றம்பலம்

 

 

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 41

 


63 நாயன்மார்கள் வரலாறு – 35 கழறிற்று அறிவார் (சேரமான் பெருமாள்) நாயனார்

 

சுந்தரமூர்த்தி நாயனார் தம் திருத்தொண்டத் தொகையில் கார் கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன்’ என்று போற்றும் பெருமை பெற்றவர் இளவரசர் பெருமாக்கோதையார். சேர நாட்டின் தலைநகரமான மகோதை என்னும் கொடுங்கோளூரில், சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருவஞ்சைக்களத்தில் சேரர் குலத்தின் பெரும் புண்ணியங்களின் பயனாய் தோன்றிய இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் பெருமாக்கோதையார். இளம் வயதிலேயே அவர் மனம் நாளும் சிவ சிந்தையிலேயே ஈடுபட்டு வந்ததுதிருஅஞ்சைக்களத்து ஈசன் பால் பேரன்புடையவராய் விளங்கிய இவர், பொழுது புலரும் முன்பே எழுந்து புனித நீராடி ஆலயத்தைத் தூய்மை செய்து திருஅலகிட்டும், திருமெழுக்கிட்டும் பூமாலை புனைந்தும் அயராது பணி செய்து இறைவனை வழிபட்டு வந்தார். இளவரசனாக இருந்தும் அரச போகங்களில் அதிகாரச் செழிப்பில் அவர் மனம் ஈடுபடாமல், திருத்தொண்டு செய்வதே நிலையான பேரின்பம் என்று வாழ்ந்து வந்தார். சுந்தரரது திருத்தொண்டத் தொகை பெரிய புராணத்துக்கு மூலமாக இருந்தது. சுந்தரரின் சமகாலத்தவர் சேரமான் பெருமாள் நாயனார் ஆவார்.

செங்கொற்பொறையன் என்னும் மன்னன் அப்போது சேர நாட்டை ஆண்டு வந்தான். நிலையற்ற வாழ்வில் இறைவன் திருவடியை அடைவதே உத்தமம் என்று எண்ணிய அவன் தன் அரச வாழ்வைத் துறந்து தவம் மேற்கொள்ள கானகத்தை நோக்கிச் சென்றான். அமைச்சர் முதலானோர் ஆய்வு செய்து சேரர் குடியில் தோன்றி திருஅஞ்சைக்களத்தில் சிவத் தொண்டு புரிந்து வந்த இப்பெருமாக்கோதையாரே அரசு உரிமை புரக்கும் உரிமை உடையார் என்று அறிந்து அவரை அணுகி அரசுரிமை ஏற்று அம்மலை நாட்டு மக்களை காத்தருள வேண்டும் என்று அழைத்தனர்.

சேர நாட்டு ஆட்சி உரிமையை அவர் ஏற்க வேண்டும் என்பதை அவருக்குத் திருவருள் உணர்த்திற்று. பெருமாக்கோதையார் இறைவனிடத்தில் அனைத்து உயிர்களின் துன்பத்தை நீக்குகின்ற ஆற்றலும் அவற்றை அறிகின்ற திறனும் அருளல் வேண்டுமென வேண்டி நின்றார். அவ்வண்ணமே இறையருளால் மக்களுயிர் மட்டுமன்றி அனைத்துயிர்க்கும் நலம் செய்து ஆட்சி நடத்துமாறு எல்லா உயிரினங்களும் பேசும் மொழிகளை அறியும் அறிவாற்றலைப் பெற்றார். பிற உயிர்கள் பேசும் மொழிகளைஅறியும் அறிவை இவர் பெற்ற காரணத்தால் கழறிற்றறிவார் என்ற சிறப்புப் பெயரும் பெற்றார். சேர நாட்டு மன்னரானதால் சேரமான் பெருமான் என்ற பெயரும் இவருக்கு உரித்தாயிற்று.

சேரமான் பெருமானுக்கு முடிசூட்டு விழா முடிந்தது. திருவஞ்சைக்களத்து  இறைவனை வழிபட்டு பட்டத்து யானை மீது  அரச மாளிகைக்குச் சென்று கொண்டிருந்தார் அரசர். அப்போது உவர் மண் மூட்டையோடு  ஒரு சலவைத் தொழிலாளி எதிர்ப்பட்டான். அவன் சுமந்து வந்த அந்த உவர் மண் அவன் உடல் முழுவதும் சிதறிப் படர்ந்து முழு நீறு பூசிய முனிவர் போன்று தோற்றமளிக்கச் செய்தது. அவனைக் கண்ட சேரமான் பெருமான் சிவனடியார் என்றே கருதியவர் சற்றும் தயங்காமல் யானையினின்றும் கீழே இறங்கி அந்த ஏழைத் தொழிலாளியின் காலில் விழுந்து வணங்கினார். பதறிப்போன அந்த சலவைத் தொழிலாளி அச்சம் கொண்டு, தான் மன்னருக்கு அடித்தொழில் புரியும் ஒரு சலவைத் தொழிலாளி என்று கூறக்கேட்டு அடியேன் அடிச்சேரன் சிவவேடத்தை நினைப்பித்தீர் வருந்தாது செல்லும்  என்று கூறி வழியனுப்பி வைத்து அரண்மனையை அடைந்தார்.

மத்த யானை ஏறி மன்னர்

  சூழவரு வீர்காள்

செத்த போதில் ஆரும் இல்லை

  சிந்தையுள் வைம்மின்கள்

வைத்த உள்ளம் மாற்ற வேண்டா

  வம்மின் மனத்தீரே

அத்தர் கோயில் எதிர்கொள் பாடி

  என்ப தடைவோமே. 

என்று ஆரூரர் தம் பாடலில் அழகாக விளக்குகிறார்.

கழறிற்றறிவார் மனதில் முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் பிடி சாம்பலாவது நிச்சயம் என்ற உணர்வு, தமது அரச வாழ்வு நிச்சயமல்ல என்பதையும் உணர்த்தியதால் அவ்வேடத்திற்கு உரிய வகையில் வணங்கினார் சேரமான் பெருமான். எல்லா உயிர்களின் துன்பத்தையும் போக்கி மக்கள் வாழ்வில் இன்பம் பெருக அரசு நடத்தினார். மன்னர் நாள்தோறும் தன் ஆன்மார்த்த மூர்த்தியான, ‘திருஅஞ்சைக்களம் சபாபதிஎன்ற கூத்தப் பெருமான் திருமேனியை உள்ளம் நெக்குருக வழிபாடு செய்வார். பெருமானும் இவர்தம் வழிபாட்டினை ஏற்கும் வகையில் பாதச் சிலம்போசை அளிப்பார். ஓசை கேட்ட பின்பு வழிபாட்டினை நிறைவு செய்து அரசுப் பணிகளில் ஈடுபடுவார்.

ஒரு நாள் சிவபெருமான் கழறிற்றறிவார் நாயனாரைச் சுந்தரமூர்த்தி நாயனாருடன் நட்புக் கொள்ளச் செய்யும் திருவுளக்குறிப்பை மேற்கொண்டார். அன்று நாள்தோறும் அவருடைய பூசை முடிவில் கேட்கும் சிலம்பொலியைக் கேட்கப் பெறாததால் நாயனார் மிக வருந்தி இவ்வாறு நிகழ்தற்குத் தான் செய்த பூசையில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருக்குமோ என்று எண்ணி உயிர்விடத் துணிந்தார்.

 அப்போது எம்பெருமான், தில்லையம்பதியில் சுந்தரர் தம்மைப் பாடிக் கொண்டிருக்கும் அப்பாடலில் ஒன்றிப்போனதால் சேரமானின் பூசையை ஏற்க சிறிது தாமதம் நேர்ந்தது என்று கூறுகிறார். இறைவனின் அருளை வியந்துப் போற்றியவர்,  தில்லைக் கூத்தப்பெருமானை வணங்கி வென்தொண்டரையும் காண்பேன் என்று சோழ நாடு செல்லத் தயாரானார். தில்லைத் திருக்கோயிலை அடைந்து கூத்தப்பெருமான் திருநடம் பயிலும் பேரம்பலத்தை அடைந்து புலனும் உளமும் ஒன்றாகி வழிபாடு செய்தார். பொன்வண்ணத்தந்தாதி என்ற நூலைப் பாடினார். கூத்தப் பெருமானும் பாடல் கேட்டு மகிழ்ந்து பாதச் சிலம்போசை கேட்பித்தார்.

வானக் கங்கை நதிபொதிந்த மல்கு சடையார் வழிபாட்டுத்
தூநற் சிறப்பி னர்ச்சனையாந் தொண்டு புரிவார் தமக்கொருநாள்
தேனக் கலர்ந்த கொன்றையினா ராடற் சிலம்பி னொலிமுன்போன்
மானப் பூசை முடிவின்கட் கேளா தொழிய மதிமயங்கி

சுந்தரரைத் தரிசித்து மகிழ வேண்டித் தில்லையை அடைந்தவர், அவர் திருவாரூர் சென்றதை அறிந்து தாமும் திருவாரூருக்குச் சென்று சுந்தரரைத் தரிசித்து மகிழ்ந்தார். பின் தியாகராசரையும் வணங்கி, திருமும்மணிக்கோவை என்னும் பிரபந்தத்தால் சிவபெருமானைப் போற்றினார்.

என்பும் உருக உயிர் ஒன்றி உடம்பு ஒன்னும்என்று சேக்கிழார் பெருமான் என் நெகிழ்ந்துரைக்கும் அளவிற்கு, ஆரூரரைக் கண்ட சேரமான் பெருவிருப்புடன் தாழ்ந்தார், விழுந்தார், வணங்கினார். அவரை வாரியெடுத்துத் தழுவினார் நம்பியாரூரர்.

 மதுரையில் வறுமையால் வாடிக்கொண்டிருந்த பாணபத்திரர் எனும் புலவரைக் கண்ட சொக்கநாதர் பாணபத்திரரின் வறுமையைப் போக்க எண்ணம் கொண்டார். ஆதலால் மதிமலி புரிசை என்ற பாடலை ஓர் திரைச்சீலையில் எழுதி, ‘இத்திருமுகத்தை சேரமான் பெருமாளிடம் சேர்ப்பித்தால் பரிசில் வழங்குவான் என்று குறிப்பித்தார்.

பின்னர் எம்பெருமானார் சேரமான் பெருமான் நாயனாரின் கனவில் தோன்றித் தம் அடியவனான பாணபத்திரன் அவரைக் கண்டு பொருள் பெறும் நோக்கில் வந்துள்ளதால் அவருக்கு வேண்டும் அளவு பொருள் கொடுத்தனுப்புமாறு திருவாய் மலர்ந்தருளினார்.

திருமுகத்தைப் படித்துப் பரவசமடைந்த சேரமான் பெருமான் அதனைத் தலையில் வைத்துக் கொண்டு எம்பெருமானின் திருமுகம் பெறும்பேறு எனக்குக் கிடைத்ததே என்று ஆனந்தக் கூத்தாடினார். பாணரைப் பணிந்து, தமது அனைத்து சொத்துகள் மட்டுமின்றி அரசாட்சியும் அவருக்கே உரியது என்றார் கழறிற்றறிவார் நாயனார். இவற்றை எல்லாம் கண்டு வியந்த பாணபத்திரரோ நாயனாரின் உயர் குணத்திற்குத் தலை வணங்கியதோடு எல்லையில்லா மகிழ்ச்சியுடன் தமக்கு வேண்டிய பொருள்களை மட்டும் எடுத்துக் கொண்ட பாணரை பரிசுப் பொருட்களுடன் யானைமீது அமர்த்தி  அன்புடன் வழியனுப்பி வைத்தார் கழறிற்றறிவார் நாயனார்.

சேரமான் பெருமான் நம்பியாரூரரைப் பார்த்து மதுரை சென்று அங்கையற்கண்ணி உடனமர் சொக்கலிங்கப் பெருமானை வணங்க விருப்பம் தெரிவிக்க  இருவரும் பாண்டி நாடு சென்று மதுரை சொக்கலிங்கப் பெருமானை வணங்கி மகிழ்ந்தனர். பாண்டிய மன்னனும் அவர்  மகளை மணந்த சோழ மன்னனும் இரு பெரு மக்களையும் வரவேற்று உபசரித்தனர். சேர, சோழ, பாண்டிய மன்னர்களான மூவேந்தர் புடைசூழச் சுந்தரர் பாண்டித் தலங்கள் பலவற்றைத் தரிசித்தார். பின்னர் சேரமானும் சுந்தரரும் திருவாரூர் மீண்டனர். சேரமான்  சுந்தரரோடு  திருவாரூரில் தங்கியிருந்து அவரைத் தம் நாட்டுக்கு எழுந்தருள வேண்டுமெனப் பலமுறையும் விண்ணப்பித்துச் சுந்தரரை அழைத்துக்கொண்டு வழியிடையே பல தலங்களையும் தரிசித்துக்கொண்டு கொடுங்கோளூர் சென்றடைந்தார். சுந்தரரைச் சேரமான் தம் அரியணையில் அமர்த்தி உபசரித்தார். நாள்தோறும் ஆடல் பாடல் முதலிய நிகழ்ச்சிகளால் அவரை மகிழ்வித்தார்.

அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமென்று

அமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி

முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே

மொழிந்தாறு மோர்நான்கு மோர் ஒன்றினையும்
படியா இவைகற் றுவல்ல அடியார்

பரங்குன்ற மேய பரமன் அடிக்கே
குடியாகி வானோர்க்கு மோர்கோவு மாகிக்

குலவேந்த ராய்விண் முழுதாள் பவரே.
என்று ஆரூரர் தம் பாடலில் குறிப்பிடுகிறார்.

திருவாரூர் வந்தடைந்த சுந்தரர் நீண்ட நாட்களுக்குப் பின் சேரமான் நினைவு வர அடியவர் குழாங்களோடு கொடுங்கோளூர் புறப்பட்டுச் சென்று இருவரும் அரண்மனையில் அளவளாவி மகிழ்ந்திருந்தனர். ஆரூரரும் சேரமானும் ஒன்று சேர்ந்து சென்று ஐயாறப்பரை வழிபட்டப் பின்னர் இருவரும் மலைநாடு நோக்கிச் சென்றனர். இவர்கள் வருகை அறிந்து நாட்டு மக்கள் அனைவரும் திரண்டு வந்து தோரணம் அமைத்துப் பல்வேறு நலன் செய்தனர். நாடே விழாக்கோலம் பூண்டது. சுந்தரர் திருவஞ்சைக்களம் இறைவனை தலைக்குத் தலைமாலை` என்ற திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார்.
சிலநாட்களுக்குப் பிறகு சுந்தரர் ஆரூரானை மறத்தற்கியலா நிலையைச் சேரமானிடம் தெரிவித்து பிரியா விடைப் பெற்றார். சேரமான் பொன்னும், மணியும், பூந்துகிலும் இன்ன பிற பொருட்களையும் வாரி வழங்கி  சுந்தரரை வழியனுப்பினார்.

 எம்பெருமான் ஆரூரரின் பாசத்தளையை நீக்கி அருள் புரிய எண்ணம் கொண்டவர், இந்திரன் முதலிய தேவகணங்களையும் வெள்ளை யானையையும் அனுப்பி அவரைத் திருக்கயிலைக்கு அழைத்து வருமாறு பணித்தார். அக்கணம் வெள்ளை யானையுடன் திருவஞ்சைக்களம் திருக்கோயிலை அடைந்த தேவர்கள் எம்பெருமானின் அருளிப்பாட்டைத் தெரிவித்தனர். சுந்தரரும் இறையாணையை ஏற்றவர், சேரமானையும் மனத்தில் சிந்தித்துக் கொண்டே வெள்ளை யானையின் மேல் ஏறி

தானெனை முன்படைத் தானத

  றிந்துதன் பொன்னடிக்கே

நானென பாடலந் தோநாயி

  னேனைப் பொருட்படுத்து

வானெனை வந்தெதிர் கொள்ளமத்த

  யானை அருள்புரிந்து

ஊனுயிர் வேறுசெய் தான்நொடித்

  தான்மலை உத்தமனே

 என்ற திருப்பதிகத்தை ஓதிக்கொண்டே திருக்கயிலாயம் சென்றார்.
 

ஆனால் சேரமான் பெருமான் சுந்தரர் திருக்கயிலாயம் செல்வதைத் தம் யோகக் காட்சியால் அறிந்தவர், தன் அருகில் நின்றிருந்த குதிரை மீது ஏறித் திருவஞ்சைக்களம் சென்று ஆரூரர் தேவகணங்களுடன் திருக்கயிலை செல்வதைக் கண்டு களித்துத் தாமும் அவருடன் கயிலை செல்லும் எண்ணம் கொண்டார். வெள்ளை யானையின் மீதமர்ந்து விண்ணிற் செல்லும் தம் தோழரைக் கண்டபோது, தானும் கயிலாயம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் தமது குதிரையின் காதில் ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயஎனும் திருமந்திரத்தைக் கூறியவர், வான வெளியில் சுந்தரர் செல்லும் வெள்ளை யானையை வலம் வந்தவர், அதன் முன்னே சென்றார். இருவரும் தெற்கு வாயில் வழியாகத் திருக்கயிலையை அடைந்தனர்.

ஆரூரர் திருக்கயிலையினுள் சென்று இறைவனையும் இறைவியையும் வணங்கிப் போற்றியவர், சேரமான் வருகையையும் எம்பெருமானிடம் விண்ணப்பித்தபோது பெருமானும் சேரமான் பெருமானை உள்ளே அழைத்துத் தாம் அழையாமல் எதற்கு வந்தார் எனக் கேட்கிறார். சேரமானும் திருவருள் வெள்ளம் ஆரூரருடன் தன்னையும் ஈர்த்துக் கொணர்ந்து வந்து அங்கே நிறுத்திவிட்டதாகக் கூறுகிறார். சிவபெருமானைப் பாட்டுடைத் தலைவராக வைத்து திருஉலா ஒன்று பாடியுள்ளதாகவும், அதனைச் செவிமடுத்து ஏற்றருள வேண்டுமெனவும் வேண்டினார். சிவபெருமான் அதனைச் சொல்லக் கேட்டுத் திருக்கயிலாய ஞான உலாவைத் திருக்கயிலையில் எம்பெருமான் முன்னர் அரங்கேற்றி ஆனந்தமடைந்தார். எம்பெருமான் ஆரூரரோடு சேரமானையும் சிவகணத் தலைவராய் தம்பால் நிலை பெற்றிருக்கப் பணிக்கச் சேரமான் பெருமான் நாயனாரும் திருக்கயிலையில் திருத்தொண்டு புரிந்து மகிழ்ந்து மீப்பெருவாழ்வு அடைந்தார்.

கழறிற்றறிவார் நாயனார் குருபூசை தினம் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவஞ்சைக்களம் என்ற ஸ்ரீவாஞ்சி குளம் கோயிலில் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஒரு நாள் மட்டும் இங்கு தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூசை செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

சேரமான் நாயனார் புராணம் சொல்லும் கருத்து:

பெருமாக்கோதையார் இறைவனிடத்தில் அனைத்து உயிர்களின் துன்பத்தை நீக்குகின்ற ஆற்றலும் அவற்றை அறிகின்ற திறனும் அருளல் வேண்டுமென வேண்டி நின்றார். அவ்வண்ணமே இறையருளால் மக்களுயிர் மட்டுமன்றி அனைத்துயிர்க்கும் நலம் செய்து ஆட்சி நடத்துமாறு எல்லா உயிரினங்களும் பேசும் மொழிகளை அறியும் அறிவாற்றலைப் பெற்றார். இறைவனும் அவர்தம் பேரருளால் யாவும் யாரும் கழறினவும் அறியும் உணர்வும் இரக்க உள்ளமும் தண்டாத கொடையும் காவல் மன்னர்க்குரியனவும் எல்லாம் கைவந்துறப் பெற்றார்.

பிற உயிர்கள் பேசும் மொழிகளை அறியும் அறிவை இவர் பெற்ற காரணத்தால் கழறிற்றறிவார் என்ற சிறப்புப் பெயரும் பெற்றார். கழறுதல் என்றால் சொல்லுதல் என்று பொருள். எல்லா உயிர்களும் சொல்லுவதனைப் பெருமான் அருளால் அறியப் பெற்றமையால் கழற்றிற்றறிவார் என்ற பெயர் பெற்றார். சேர நாட்டு மன்னரானார். எனவே சேரமான் பெருமான் என்ற பெயரும் இவருக்கு உரித்தாயிற்று. 

சேரமான் பெருமாள் நாயனாரின் படைப்புகள்

சேரமான் பெருமாள் நாயனார், திருக்கைலாய ஞான உலாதிருவாரூர் மும்மணிக்கோவை, பொன் வண்ணத்து அந்தாதி ஆகிய மூன்று நூல்களை இக்காலக் கட்டத்தில் இயற்றினார்.

 திருக்கைலாய ஞானவுலா, ஆதிஉலா என்றும் வழங்கப்படுகிறது. உலாவில் சிவபெருமான் போற்றப்படுகிறார். திருக்கயிலையில் தேவர்கள் கூடிச் சிவபெருமான் உலா வந்து காட்சி அளிக்க வேண்டும் என்று வேண்டியதால், எம்பெருமானும் அதற்கிசைவளிக்க, உமையவள் சிவனாருக்கு அனைத்து அணிகலன்களையும் அணிவித்து அழகு பார்க்கிறாள். மன்மதன் மாலை தருகிறான். சந்தனம் பூசிக் கிளம்பும் சிவனைத் தெருக்களில் உள்ள மகளிர் கண்டு காதல் கொள்கின்றனர். முனிவர்கள் பணிந்து வாழ்த்துகின்றனர். தேவர்கள் தொண்டு செய்கின்றனர் என்று அமைந்துள்ள நூல் இது. காண்பவர் நெஞ்சங்களைக் கவரும் ஒப்பற்ற தலைவனாம் சிவனது திருவுலாக் காட்சியை அற்புதமாக விவரிக்கும் நூல் இது.

உலா' எனும் இலக்கிய அமைப்பைத் தோற்றுவித்துள்ளது இந்நூல். அந்த வகையில் இதை இலக்கணமாகக் கொண்டு, இதே அமைப்பில் பின்னாளில் உலா நூல்கள் இயற்றப்பட்டன.

திருவாரூர் மும்மணிக்கோவை என்ற நூல் சிவனடியார்கள் செந்தமிழ் வல்லவர்களாகவும் இருந்தமை அறிய முடிகின்றது. மூன்று வெவ்வேறு மணிகளை மாற்றி மாற்றித் தொடுத்த மாலை போல், வெவ்வேறு மூவகைச் செய்யுள்கள் மாறி மாறி வர முப்பது பாடல்களைக் கொண்ட இந்நூலும் புதிய அமைப்பைக் கொண்டுள்ளது. இதுபோலவே, சிவபெருமானைப் போற்றுவதற்குக் கண்டுபிடித்த புதுப்புது இலக்கிய வடிவங்கள் பின்னாளில் சிற்றிலக்கியங்களாக மலர்ந்தன.

பொன் வண்ணத்து அந்தாதி எனும் நூல் பதினொராம் திருமுறையில் உள்ளது. சிவபெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட இந்நூல் 101 பாடல்களை உடையது. ஒரு செய்யுளின் இறுதிப் பகுதியே அடுத்த செய்யுளின் தொடக்கமாக அமைவது அந்தாதி ஆகும்.

சேத்திர திருவெண்பா, திருமும்மணிக்கோவை, மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை ஆகிய நூல்களும் தோன்றின.

திருச்சிற்றம்பலம்

 

 

 

 

 

 

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...