Monday, May 18, 2026

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 33

 63 நாயன்மார்கள் வரலாறு – 28 – ஏயர்கோன் கலிக்காம நாயனார்

ஏதமில்வே ளாளர்பெரு மங்க லத்துள்

    ஏயர்கோன் கலிக்காமர் ‘இறையை நேரே

தூதுகொளும் அவன் அணுகில் என்னாம்‘ என்னும்

    துணிவினர்பால் இறைவன் அருஞ் சூலைஏவி

‘வேதனைவன் றொண்டன்வரின் நீங்கும்’ என்ன

    வெகுண்டு உடல்வாள் கொடுதுறந்து மேய நாவாற்

போதகமும் உடல்இகழ எழுந்துதாழ்ந்து

    போற்றியது விலக்கியருள் பொருந்தி னாரே.

சுந்தரமூர்த்தி நாயனார் தமது திருத்தொண்டத் தொகையில், “ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்” என்று போற்றும் ஏயர்கோன் கலிக்காம நாயனார், சோழ நாட்டில் திருப்பெருமங்கலம் என்னும் தலத்தில், வேளாளர் குலத்தில் தோன்றியவர். சோழ மன்னர்களிடம் பரம்பரை பரம்பரையாக சேனாதிபதியாக இருந்து வந்துள்ள குடும்பம் இவருடையது. ஏயர்கோன் கலிக்காமர் சிவபக்தியிலும் சிவனடியார் திருத்தொண்டிலும் சிறந்து விளங்கியவர். திருப்புன்கூரிலுள்ள சிவாலயத்தில் அளவில்லாத திருப்பணிகள் செய்தவர். “ஏயர்கோன்” என்பது சிறந்த சேனைத் தலைவனுக்கு மன்னன் வழங்கும் பட்டமாகும். சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்ந்த காலமான எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஏயர்கோன் கலிக்காம நாயனார் இளம் வயதிலேயே சிவ பக்தியில் சிறந்து விளங்கினார்.

ஏயர்கோன் கலிக்காமர் மானக்கஞ்சாற நாயனாரின் மகளைத் திருமணம் செய்து கொண்டு சிறப்பாகத் தமது இல்லறத்தை இனிது நடத்தி வந்தார். இக்காலகட்டத்தில் ஒருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானை, தமது இல்லத்தரசியான பரவை நாச்சியாரிடம் தூது செல்லுமாறு வேண்டிக் கொண்டதால் சிவபெருமானும் அவ்வண்ணமே அவரிடம் சென்றார். இதைப் பற்றி கேள்வியுற்ற, சிவனையே முழுமுதற் பொருளாகப் போற்றிய ஏயர்கோன் கலிக்காம நாயனார், இத்தகைய காரியத்தைச் செய்து, தன்னை அடியார் என்று கூறிக்கொள்ளும் சுந்தரர் எவ்வளவு பெரிய பாவத்தை செய்திருக்கிறார். சிவபெருமானே இதற்கு இசைந்திருந்தாலும் சுந்தரர் செய்த இந்தக் காரியத்தை ஏற்றுக் கொள்ள முடியாதவராய், இப்படிப்பட்டச் செய்தியை கேட்ட பின்னும் தன்னுயிர் போகவில்லையே என்று வருந்தி சுந்தரமூர்த்தி நாயனார் மீது சொல்லொணா துயரமும், கடுங்கோபமும் கொண்டார். இதையறிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் மிகவும் மனம் வருந்தி, அவர்தம் சினத்தை தணித்தருள வேண்டும் என்று சிவபெருமானிடம் பணிந்து வேண்டினார். அவ்விருவரையும் நண்பர்களாக்கத் திருவுளம் கொண்ட சிவபெருமானின் திருவிளையாடல் தொடங்கிய இடமும் இதுதான்.

சூலை நோயை உண்டாக்கி ஏயர்கோன் கலிக்காம நாயனாருக்கு ஆறாத வலியைக் கொடுத்தார் எம்பெருமான். கலிக்காம நாயனாரும் என்ன செய்தும் தம் வலி குறையவே இல்லையே என்று வருந்தி அதனைப் போக்குமாறு சிவபெருமானிடம் வேண்டியவர் அப்படியே மயங்கினார். அந்த மயக்கத்தில் சிவபெருமான் தோன்றி, இந்த சூலை நோயால் ஏற்பட்டுள்ள வலியைத் தீர்க்க வல்லவன் சுந்தரன் மட்டுமே என்று கூறினார். இந்த வார்த்தையைக் கேட்டு கொதித்துப் போனார் கலிக்காமர். ஆனால் கலிக்காமரோ, சுந்தரர் வந்துதான் என் வயிற்று நோய் தீரும் என்றால் அந்நோய் தீரவே வேண்டாம் என்றார். இறைவனார் மறைந்தாலும் அவர் அத்தோடு நிற்கவில்லை. ஆரூரரிடம் சென்று, தம்முடைய ஆணையை ஏற்று கலிக்காமரின் சூலையைத் தீர்க்க வேண்டும் என்று பணித்துவிட்டு மறைந்தார். எம்பெருமானின் கட்டளையை ஏற்று நம்பியாரூர் ஏயர்கோன் உற்ற பிணியைத் தீர்ப்பதற்குத் தாம் வருகின்ற செய்தியைச் சொல்லி அனுப்பினார்.

ஆனால் ஏயர்கோன் தம் மனைவிக்காக எம்பெருமானையே தூது அனுப்பிய சுந்தரன் வந்து தம் நோயைத் தீர்ப்பதற்கு வருகிறார் என்றால், அவர் வந்து தம் நோயைத் தீர்ப்பதற்கு முன் தான் மாய்ந்து விடுவதாகக் கூறி, சூலை உள்ள வயிற்றைக் கத்தியால் கீறிக்கொள்வேன் என்று தன் உடைவாளை எடுத்துக் குத்திக்கொண்டு உயிர் துறந்தார். வேகமாக வந்த ஆரூரரை வெளியே சென்று மாலை அணிவித்து பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றார் அவருடைய துணைவியார்.

சுந்தரர் தான் வந்த காரியத்தைக் கூற, கலிக்காமர் அவ்வாறு நோயால் வருந்தவில்லை என்றும், அவருக்கு நோயுமில்லை துன்பமுமில்லை, அவர் உறங்குகிறார் என்று கூறி தன் கணவரின் இறப்பை மறைக்க முயன்றார். சுந்தரர் விடாது தன் மனம் தடைபடுவதைக் கூறி அவரைக் காண வேண்டும் என்று வற்புறுத்தவே வேறு வழியின்றி தன் கணவரின் அறைக்கு அவரை அழைத்துச் சென்றார். அங்கு கலிக்காமர் இரத்த வெள்ளத்தில் வயிறு கிழிந்து, குடல் வெளிப்பட்டு இறந்து கிடப்பதைச் சுந்தரர் கண்டார். நடந்த எல்லாவற்றுக்கும் தாமே காரணம் என்று வருந்திய சுந்தரமூர்த்தி நாயனார் தம்மிடம் உள்ள வாளால் குத்திக்கொள்ளும் போது சிவபெருமான் அருளால் கலிக்காமர் உயிர்த்தெழுந்தார்.

இறையருளால் உயிர்த்தெழுந்த ஏயர்கோன் கலிக்காம நாயனார், சுந்தரமூர்த்தி நாயனாரை அன்பினால் தழுவிப் பிரியாத நண்பர்களானார்கள். சுந்தரமூர்த்தி நாயனார் சில நாட்கள் ஏயர்கோன் கலிக்காம நாயனாருடன் தங்கி திருப்புன்கூர் திருத்தலத்திற்கு சென்று சிவபெருமானை வழிபட்டனர். பின்னர் சுந்தரமூர்த்தி நாயனாரின் விருப்பத்துகிணங்க அவருடன் திருவாரூர் சென்று சில நாட்கள் தங்கியிருந்து தியாகராசரை வணங்கி மகிழ்ந்தார். பின்னர் ஏயர்கோனார் திருப்பெருமங்கலம் திரும்பி வந்து சிவப்பணி செய்து சிவனடி சேர்ந்தார்.

 

ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் சொல்லும் கருத்து

மெய்ஞ்ஞானம் உற்றார்க்குப் பக்தி பொதுவாயினும் அவரவர் ஆன்ம எழுச்சியின் நிலையைப் பொறுத்து ஒவ்வொருவர் பக்திக்கும் வேறுபாடுகள் உள்ளன என்பதை திருத்தொண்டர் புராண வரலாறுகளின் மூலம் அறியலாம்.

“தந்தம் பெருமைக்களவாகிய சால்பினிற்கும் எந்தம் பெருமக்களை யாவர் தடுக்க வல்லார்” மூர்த்தி நாயனார் புராணம்.

“ஆரங்கண்டிகை ஆடையுங் கந்தையே பாரமீசன் பணியலதொன்றிலார் ஈர அன்பினர் யாதுங் குறைவிலார் வீரமென்னால் விளம்புந் தகையதோ”திருக்குறிப்புத் தொண்ட நாயனார்

தீது ஒன்றுமில்லை என்று தன் கணவர் ஏயர்கோன் கலிக்காம நாயனார் மாண்டதையே மறைக்கத் துணிந்த அவருடைய பத்தினியின் மாண்பைப் போற்றினாலும், தம் மனம் தடைப்பட ஏதேனும் காரணம் இருக்க வேண்டும் என எண்ணிய ஆரூரர் அவரைக் காண வேண்டும் என்று வற்புறுத்த அவர் இருந்த அறையினைக் காட்ட, அங்கு அவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் காண்கிறார். தம்பால் வந்த கோபத்தினால் ஏயர்கோனார் இந்த முடிவுக்கு வந்தார் என்றால் அவர் சென்ற இடத்திற்கே தானும் செல்லப்போவதாகக் கூறி, ஏயர்கோன் கலிக்காம நாயனார் தம் உடைவாளினால் தமது வயிற்றைத் தாமே குற்றிக் கிழித்துக் கொள்ளப் போனார். இதனை கோயிற்றிருப் பண்ணியர் விருத்தத்தில்,

“பொன்னம் பலத்துறை புண்ணிய னென்பர்

புயன்மறந்த கன்னன்மை தீரப்புனிற்றுக்

கலிக்காமற் கன்று புன்கூர் மன்னு

மழைபொழிந் தீரறு வேலிகொண் டாங்கவற்கே

பின்னும் மழைதவிர்த் தீரறு வேலிகொள் பிஞ்ஞகனே” என்றும்

திருத்தொண்டர் புராணத்தில்,

“பெருங்கொடையுந் திண்ணனவும் பேருணர்வுந் திருத்தொண்டால் வரும்பெருமைக் கலிக்காமனார்” எனவும்

சுந்தரர் தேவாரத்தில்,

“வையகம் முற்றும் மாமழை துறந்து

வயலில் நீரிலை மாநிலந் தருகேம்

உய்யக்கொள்கமற் றெங்களை யென்ன

ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும்

பெய்யுமாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப்

பெயர்த்தும் பன்னிரு வேலிகொண்டருளுஞ்

செய்கைகண்டுநின் திருவடியடைந்தேன்

 செழும்பொழிற்றிருப் புன் கூருளானே”

எனவும் வருபவற்றால் அறியப்படும்.

சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானை, தம் பத்தினி பரவைபால் தூதனுப்பிய செய்தியைக் கேட்டமாத்திரத்தே, அதிசயித்து எரிச்சலுற்றவர் இவரெல்லாம் ஒரு தொண்டரா, எத்தகையதொரு பெரிய பாவத்தைச் செய்துள்ளார். இச்செய்தியைக் காதால் கேட்கவும் இயலவில்லை என்னால் என்று புலம்புகிறார்.


“நம்பியாரூரர் நெஞ்சினடுக்கமொன்றின்றி நின்று

தம்பிரானாரைத் தூது தையல்பால்விட்டா ரென்னும்

இம்பரின் மிக்கவார்த்தை யேயர்கோனார்தாங் கேட்டு

 வெம்பினாரதிசயித்தார் வெருவினார் விளம்பலுற்றார்”

 

“நாயனை அடியானேவுங் காரியம் நன்று

சால ஏயுமொன்றிதனைச் செய்வான்

தொண்டனாமென்னே பாவம் பேயனேன்

பொறுக்கவொண்ணாப் பிழையினைச் செவியார்

 கேட்ப தாயின பின்னும் மாயா திருந்ததென் ஆவியென்பார்”

மற்றும்

 “நம்பர்தா மடியாராற்றாராகியே நண்ணினாரேல்

உம்பரார்கோனும் மாலு மயனுநேருணரவொண்ணா

எம்பிரானிசைந்தாலேவப் பெறுவதே யிதனுக்குள்ளங்

கம்பியாதவனை யான்முன் காணுநா ளெந்நா ளென்று”

என வரும் சேக்கிழார் பெருமானின் பாடல்களால் அறியலாம்.

 

குண்டையூரில் நெல்மலை அளிக்கப் பெற்றது:

நம்பியாரூரர் திருவாரூரில் தியாகேசப் பெருமானை முப்பொழுதும் வணங்கி வாழ்ந்து கொண்டிருந்தார். அச்சமயம் திருக்கோளிலி என்னும் திருத்தலத்திற்கு அருகில் உள்ள குண்டையூர் என்னும் ஊரில் வேளாண் குடியைச் சேர்ந்த பெரியவர் ஒருவர், சுந்தரரிடத்தில் பேரன்பு கொண்டிருந்தார். அந்த அன்பின் காரணமாக அவருக்காக பரவையார் திருமாளிகைக்கு, செந்நெல், பருப்பு போன்ற பொருள்களைத் தவறாமல் அனுப்பி வரும் கடமையைக் கொண்டிருந்தார். ஒரு சமயம் மழையின்மையால் விளைச்சல்கள் குறைந்தன. குண்டையூர்க் கிழார் வழமைபோல் சுந்தரர்க்கு அனுப்பப் போதிய தானியங்கள் இல்லாமல் வருந்தியவர், உணவு உண்ணாமல்  உறங்கச் சென்றார். சிவபெருமான் அவர் கனவில் தோன்றி “ஆரூரன் தனக்கு உன் பொருட்டாக நெல் கொடுத்தோம் என்று அருள்பாலித்தார். காலையில் எழுந்து பார்த்தபொழுது குண்டையூர் முழுதும் நெல் மலை குவிந்திருந்தது. நெல்மலையைக் கண்டு வியந்தவர், திருவாரூருக்குச் சென்று சுந்தரரிடம் நடந்தவற்றைக் கூறினார். குண்டையூர்க்கிழார் அந்நெல்மலையைப் பார்த்து இது மனிதர்களால் எடுத்து வரும் அளவினதன்று. மனித முயற்சிக்கு அப்பாற்பட்டது என்றார். அப்போது சுந்தரர் தாமும் அவரோடு குண்டையூருக்கு எழுந்தருளி நெல்மலையைக் கண்டு வியந்து திருக்கோளிலி என்னும் தலத்திற்கு வந்து,

நீள நினைந்தடி யேனுமை

  நித்தலுங் கைதொழுவேன்

வாளன கண்மட வாளவள்

  வாடி வருந்தாமே

கோளிலி எம்பெரு மான்குண்டை

  யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

ஆளிலை எம்பெரு மானவை

  அட்டித் தரப்பணியே.

என்னும் திருப்பதிகம் பாடி நெல்லை எடுத்துச் செல்ல ஏவலாட்களைத் தரும்படி விண்ணப்பித்துக்கொண்டார். அன்றிரவு தம்முடைய பூத கணங்களைக் கொண்டு பரவையார் இருந்த வீதியில் நெல்லைக் கொண்டுவந்து குவித்தார். சுந்தரர் எம்பெருமானின் திருவருளைப் போற்றித் திருவாரூரை அடைந்தவர் பரவையார்க்கும் அந்த நற்செய்தியை தெரிவித்து மகிழ்ந்திருந்தார்.

 

ஆரூர்ப் பெருமானைப் பரவையாரிடம் தூதனுப்புதல்:

சுந்தரர் எம்பெருமானை வணங்கச் சென்ற பொழுது அவருடைய பரிசனங்களில் சிலர் பரவையார் மாளிகையை அடைந்தனர். சங்கிலியாரை மணந்த சுந்தரரின் செய்கையை முன்பே அறிந்திருந்த பரவையார் அவர்களைத் தடுத்த செய்தியினை சிலர் சுந்தரரிடம் சென்று கூறினர். அதனைக் கேட்ட ஆரூரர் மனங் கலங்கிச் சங்கிலியை மணந்தமையால் உண்டான வருத்தம் இது என உணர்ந்தவர், பெரியார் பலரைப் பரவையார்பால் தூது விடுத்தும், அவர்கள் பலவாறு எடுத்துக் கூறியும் சினந்தணியாமல் பரவையார், மீண்டும் பேசினால் தன்னுயிர் இழப்பது உறுதி என்று கூறினார். அதனால் மனம் வருந்திய சுந்தரர் உறங்காது சிவபிரானை எண்ணி வேண்டினார். அடியார் துயர் பொறுக்காத  எம்பெருமான் நள்ளிரவில் சுந்தரர் முன் வந்தணைந்தார். சுந்தரர் வீழ்ந்து பணிந்து எழுந்து நின்று, தமக்குற்ற குறையை எடுத்துக்கூறி தன்னுடைய துன்பத்தைப் போக்கியருள வேண்டும் என்று வேண்டினார். பெருமானும் அப்போதே பரவைபால் தூது செல்ல இசைந்தார். பரவையார்பால் சுந்தரர் கொண்டுள்ள வேட்கையைக் காண வேண்டுமென்ற திருவிளையாடலை மனத்திற்கொண்டு பரவையார் வீட்டிலிருந்து சிவபிரான் மீண்டும் சுந்தரரை வந்தடைந்தார். சுந்தரர் எம்பெருமானை எதிர்கொண்டு வணங்கி விவரம் கேட்டவரிடம், எம்பெருமான் `நாம் பரவையின் இல்லம் அணுகி அவளிடம் வேண்டியும் மறுத்துவிட்டாள்` என்று கூறினார். அச்சொற்கேட்டு நடுங்கிப் போனவர், பரவையிடம் தன்னைக் கூட்டவில்லை என்றால் தன்னுயிர் நீங்குவது உறுதி என்று பலவாறு கூறித் திருவடியில் வீழ்ந்து வணங்கினார்.

சிவபெருமானும் நம்பியாரூரரைப் பார்த்து,  மீண்டும் ஒருமுறை தூது சென்று அவர்தம் குறையை தீர்த்து வைப்பதாகக் கூறியவர் பரவையார் மாளிகையை நோக்கி மீண்டும் எழுந்தருளினார். பரவையார் அடியவர் பொருட்டு நள்ளிரவில் அங்கு மிங்குமாக அலைந்து உழலும் எம்பெருமானின் கருணையை வியந்து, இசைவுற்றதால் பரவையாரைப் பாராட்டிச் சுந்தரரிடம் மீண்டும் எழுந்தருளினார். சிவபெருமான் சுந்தரரைப் பரவையார்பால் அனுப்பிவைத்த பின்னர் திருக்கோயிலினுள் புகுந்தருளினார். இருவரும் இறைவனது எளிவந்த கருணையை வியந்து இன்ப வெள்ளத்துள் திளைத்தனர்.

தங்கக்கட்டியான செங்கல்

திருவலிவலம் பெருமானின் திருவடிக் காட்சியைக் கண்டு களித்த ஆரூரர், திருவாரூர் சென்று அங்கு தங்கியிருந்தார். பங்குனித் திருவிழாவிற்கு ஆகும் பெருஞ்செலவில் தம்முடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் , இல்லையென்றால் பரவையார் முகம் வாடிவிடுமே என்று வருந்தியவர், பணம் பெறுவதற்காக திருப்புகலூர் சென்று பொன் வேண்டிப் பாடினார். திருக்கோயிலை வலம் வந்து வழிபாட்டினை நிறைவு செய்து புறப்படும் சமயம் அயர்ச்சியில், அங்கு அக்கோயில் திருப்பணிக்காக வைக்கப்பட்டிருந்த செங்கல்லை எடுத்து வைத்து அதன்மீது தமது துண்டினை விரித்து அப்படியே கண் அயர்ந்து உறங்கி விட்டார். தூக்கம் விழித்து துண்டை எடுத்தவர் அதிசயித்துப் போனார். துண்டின் கீழிருந்த அச்செங்கல் தங்கக்கட்டியாக மாறியிருந்த்தே அதன் காரணம். இன்றும் பொருள் தட்டுப்பாடு ஏற்படும் நேரங்களில், இந்த அரிய திருப்பாசுரத்தைப் பாடினால் இறைவன் வேண்டிய பொருளை அளிக்க வல்லான் என்ற நம்பிக்கை அடியவர்களிடம் உண்டு என்பதும் சத்தியம்! அப்பாடல்,

தம்மையேபுகழ்ந் திச்சைபேசினுஞ்

  சார்வினுந்தொண்டர் தருகிலாப்

பொய்ம்மையாளரைப் பாடாதேயெந்தை

  புகலூர்பாடுமின் புலவீர்காள்

இம்மையேதருஞ் சோறுங்கூறையும்

  ஏத்தலாமிடர் கெடலுமாம்

அம்மையேசிவ லோகமாள்வதற்

  கியாதுமையுற வில்லையே. 

 

திருச்சிற்றம்பலம்.

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 32

 63 நாயன்மார்கள் வரலாறு – 27. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (5)

எலும்பைப் பெண்ணாக்கியது

மயிலாப்பூரில் வணிகர் குலத்தில், சிவனடி மறவாச் சீலர் சிவநெறித் தொண்டில் ஈடுபட்டு ஈசனடியாரை நேசிக்கும் இயல்புடையாரான  சிவநேசர் என்னும் அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். சைவ சமயமே மெய்மைச் சமயம் என்பதையும், பிற சமயமாகிய சமண, பௌத்த மதங்களைத் தமிழ்நாட்டிலிருந்து விரட்டி, சைவப் பயிர் செழித்தோங்கச் செய்யும் உறுதியுடையோராய்த் திகழ்ந்தவர். தமது மூன்றாம் அகவையில் திருக்காழிப்பதியில் ஞானப்பால் உண்டு, முத்துச் சிவிகை, முத்துப்பந்தர், பொற்றாளம் சிவபெருமான் கருணையால் பெற்றவர், மதுரை மூதூர் சென்று சமணர்களை வென்று சைவம் தழைத்தோங்கச் செய்த அருமைப் பெருமைகளுக்கு உரியவரான ஞானசம்பந்தர் பற்றி கேள்வியுற்று அவர்பால் எல்லையில்லாத பேரன்புடையராயினார். அவருக்கு அழகிற் சிறந்த பூம்பாவை எனும் ஒரு பெண் மகவு இருந்தாள். மணப்பருவம் எய்திய நிலையில் இருந்த அப்பெண் திருமகளென அழகும் கலைமகளென அறிவும் மிக்கவளாய் இருந்தாள். அவளையும், தன்னையும், தன் செல்வத்தையும் ஞானசம்பந்தருக்கே உடமையாக்கி அவர் மடியில் சமர்ப்பிப்பேன் என்று உறுதி கொண்டார்.

 

இந்நிலையில் பூம்பாவை பூஞ்சோலையில் மலர் பறிக்கச் சென்றபோது அரவு தீண்டி உயிர் துறந்தாள்.  சிவநேசர் மிகவும் வருந்தினாலும் அப்பெண், சம்பந்தப் பெருமானின் உடமையென்பதால் தாம் ஏன் கவலை கொள்ள வேண்டும் என்று உளம் தெளிந்து, அவள் உடலைத் தகனம் செய்து, எலும்பையும் சாம்பலையும் ஒரு மட்குடத்திலிட்டு, அதைக் கன்னி மாடத்தில் வைத்து அக்குடத்திற்குப் பூம்பாவை பூணும் அணிகலன்களையெல்லாம் அணிவித்துப் பூசனை செய்து வந்தார். ஞானசம்பந்தர் திருவொற்றியூரில் தங்கியுள்ளார் என்ற செய்தியை அவ்வூர் மக்கள் சிவநேசரிடம் தெரிவித்தனர். அகமலர்ந்த சிவநேசர் சம்பந்தரை வரவேற்கத் திருவொற்றியூர் சென்று எதிர் கொண்டழைத்தார். ஞானசம்பந்தரைக் கண்டு வணங்கிய அளவில் உடன் வந்த அடியார்கள் அவரை அறிமுகம் செய்ததோடு அவள் மகள் இறந்த செய்தியையும் அவரிடம் கூறினர்.

ஞானசம்பந்தர் மயிலாப்பூருக்கு எழுந்தருளி கபாலீசுரரை வழிபட்டு, சிவநேசரை அழைத்து அவர்தம் மகளின் என்பு நிறைந்த குடத்தினை எடுத்து வரச் செய்து அக்குடத்தை இறைவன் திருமுன் வைக்கும்படி பணித்தார். சிவநேசரும் வெந்த சாம்பலோடு எலும்பு நிறைந்த குடத்தினைச் சிவிகையில் வைத்து எடுத்து வந்து கபாலீச்சுவரப் பெருமான் திருமுன் வைத்து வணங்கினார். `மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல் என்பது உண்மையாயின் உலகவர் முன் இப்பூம்பாவை உயிர் பெற்று எழுந்து வருவாளாக` எனக்கூறி இறைவனை வேண்டிப் பூம்பாவைத் திருப்பதிகமாகிய,

 

மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்

 

எனத் திருப்பதிகம் தொடங்கி, முதல் பாடலிலே உருவம் பெற்ற பூம்பாவை, இப்பதிகத்தின் இரண்டு முதல் ஒன்பது வரையான எட்டுப் பாடல்களைப் பாடிய அளவில் பன்னிரெண்டு வயதுடையவளாக மாறி நின்றாள்.

 

உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும்

இருஞ்சாக் கியர்கள் எடுத்துரைப்ப நாட்டில்

கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்

பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்!

 

எனும் பத்தாவது பாடலைப் பாடிய அளவில் செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் போல அப்பெண் உயிர் பெற்று குடம் உடைய வெளிப்பட்டு எழுந்தவள், ஞானசம்பந்தரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினாள். ஞானசம்பந்தர் திருப்பதிகத்தின் பதினொன்றாவது பாடலைப் பாடி நிறைவு செய்தார். சிவநேசர் ஞானசம்பந்தரை வணங்கித் திருவருளைப் போற்றினார். தன் திருமகளைத் திருமணம் புரிந்து ஏற்றருள வேண்டுமெனவும் வேண்டினார். அது கேட்ட ஞானசம்பந்தர், அரவு தீண்டி உயிர் துறந்த மகளை இறைவன் திருவருளால் பூம்பாவையாக மீண்டும் பிறப்பித்த்தால் அவள் தமக்கு மகளாவாள் என்ற மறை நெறி மரபை அவருக்கு உணர்த்தினார். சிவநேசர் மனத் தெளிவுற்று அப்பெண்ணை வேறொருவர்க்கு மணம் முடிக்க மனமின்றிக் கன்னிமாடத்தே இருக்கச் செய்தார். பூம்பாவையும் சிவன் அருளையே சிந்தித்துச் சிவனடி சேர்ந்தார்.
பின்னர் ஞானசம்பந்தர் தொண்டை நாட்டுத் திருத்தலங்கள், திருவான்மியூர், இடைச்சுரம், திருக்கழுக்குன்றம் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு தில்லையை அடைந்து திருச்சிற்றம்பலம் உடையானைப் போற்றிச் சீர்காழிக்கு எழுந்தருளிப் பிரமபுரத்துப் பெருமானை வழிபட்டுத் தம் திருமாளிகையை அடைந்தார்.

காழிவேந்தருக்குக் கடிமணம்!

 

ஞானசம்பந்தர் சீர்காழிமேய பெருமானை நாளும் வணங்கி முருக நாயனார், திருநீலநக்க நாயனார் முதலிய அடியவருடன் இனிதிருந்தார். சிவபாத இருதயரும் சுற்றத்தாரும் ஞானசம்பந்தர், அக்கால மரபுப்படி திருமண வயதான பதினாறு ஆண்டு எய்திய நிலையினராய் இருத்தலை எண்ணி அவரை அணுகி மறை நெறிப்படி வேள்வி செய்ய ஒரு கன்னியைத் திருமணம் புரிந்து இவ்வுலகிற்கு நல்வழி காட்ட வேண்டும் என வேண்டினர். ஞானசம்பந்தர் முதலில் மறுத்தாலும் திருவருளை நினைந்து மறைவாழவும் அந்நெறியின் துறைவாழவும் திருமணத்திற்கு இசைந்தார்.

 

சிவபாத இருதயர் திருநல்லூரில் வாழ்ந்த சீலமிக்க அந்தணர் குடியில் தோன்றிய நம்மாண்டவர் என்பாரின் திருமகளை மணம் பேசி நிச்சயித்தார். திருமண நாளும் குறிக்கப்பட்டது. நல்லூர் மணவிழாவினால் பொலிவு பெற்றது. ஞானசம்பந்தர் உரிய அத்திருநாளில் தோணிபுரத்தில் பெரிய நாயகியாருடன் வீற்றிருந்தருளும் எம்பெருமானை வணங்கிச் சிவிகைமீது அமர்ந்து அடியவர்கள் உறவினர்கள் உடன் வரத் திருநல்லூரை அடைந்தார். அங்கு விளங்கும் பெருமணம் என்னும் கோயிலை அடைந்து சிவபிரானைப் பணிந்து, கோயிலின் அருகே அமைந்த திருமடத்தில் திரு மஞ்சனமாடித் திருமணக் கோலம் பூண்டு திருமணச் சாலைக்கு எழுந்தருளினார். நம்மாண்டவர் நம்பியும் அவரது துணைவியாரும் அவரைப் பொற்பீடத்தில் இருத்தி, மங்கல மகளிர் மணப் பெண்ணை அழைத்து வந்து ஞானசம்பந்தரின் வலப்புறம் அமரச் செய்தனர். திருநீலநக்க நாயனார் வேத விதிப்படி திருமணச் சடங்குகளை நிகழ்த்தினார். இறைவன் திருமுன் நின்று `கல்லூர்ப் பெருமணம் வேண்டா` எனத் தொடங்கித் திருப்பதிகம் அருளிச் செய்தார். அப்போது சிவபெருமான் தூய சோதிப் பிழம்பாய்த் தோன்றி நின்று `ஞானசம்பந்தனே நீயும் நின் மனைவியும் திருமணம் காண வந்தோரும் இச்சோதியினுள்ளே வந்து சேர்மின்` எனக்கூறி அதனுள்ளே புகுதற்கு வாயிலையும் காட்டி நின்றார். ஞானசம்பந்தர் `இம்மண விழாக்காண வந்தோர் அனைவரும் இச் சோதியுட் புகுமின்` எனக் கூறி `காதலாகி` எனத் தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகம் அருளினார். திருநீலநக்கர் முருக நாயனார் சிவபாத இருதயர் நம்மாண்டவர் நம்பி திருநீலகண்டப் பெரும்பாணர் முதலானோர் தத்தம் துணைவியாருடன் சிவசோதியுட் புகுந்தார்கள். ஆளுடைய பிள்ளையாரைத் தொடர்ந்து வந்த அடியவர் பரிசனங்கள் அருந்தவ முனிவர்கள் முதலிய அனைவரும் சிவசோதியுட் புகுந்த பின் திருஞானசம்பந்தர் மணமகளைக் கைப்பிடித்து இறைவனது எழில்வளர் சோதியை வலம் வந்து அதனுள்ளே புகுந்து பெருமானோடு ஒன்றி உடனானார்.
அச்சோதி மறைய பெருமணக் கோயில் முன் போலவே அமைந்தது. அனைவர்க்கும் சிவலோகம் வழங்கிய பெருமானை அன்பர்கள் சிவலோகத்தியாகர் எனப் போற்றினர்.

 

கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில
சொல்லூர்ப் பெருமணம் சூடல ரேதொண்டர்
நல்லூர்ப் பெருமண மேயநம் பானே

ஞானசம்பந்தர் உலகத்தார் உய்யும் பொருட்டு நன்னெறியினை அறிவுறுத்த உளங்கொண்டு ஞானமெய் நெறிதான் யார்க்கும், ‘நமச்சிவாயச் சொல்லாம்’ என்று அனைவருக்கும் ஐந்தெழுத்தாகிய நமச்சிவாயத் திருப்பதிகத்தினை அருளிச் செய்து கூட்டுச் சிவதீக்கை செய்வித்துச் சோதியில் கலக்கச் செய்தார்.

 

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் சொல்லும் கருத்து

திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலம் கி.பி.7ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி என்பது வரலாற்று ஆசிரியர்கள் கணித்துள்ள உண்மையாகும். திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் சம காலத்தவர் என்பதும் அவர் தம் வரலாறுகளால் விளங்கும். குணபரன் என்ற சிறப்புப் பெயரோடு வாழ்ந்த பல்லவன் மகேந்திர வர்மன் காலம் கி.பி. 600 முதல் 630 வரை ஆகும் என்ற வகையில் அம்மன்னனும் திருநாவுக்கரசர் காலத்தில் வாழ்ந்தவன் ஆவான். திருஞானசம்பந்தர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார்களில் சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் மகேந்திரவர்மனின் புதல்வனான நரசிம்மவர்மப் பல்லவன் காலத்தில் படைத் தளபதியாக இருந்து சாளுக்கியரோடு வாதாபியில் நிகழ்த்திய போரில் வெற்றி கண்டவர். அதன் பின்னரே அவர் திருச்செங்காட்டங்குடி சென்று சிவனடித் தொண்டு பூண்டு அடியவராக விளங்கினார். நரசிம்மவர்மன் வாதாபிப் போர் நிகழ்த்திய காலம் கி.பி.642 ஆகும் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். திருஞானசம்பந்தரால் வெப்புநோய் தவிர்த்தருளப் பெற்ற பாண்டிய மன்னன் நெடுமாறன் மாறவர்மன் அரிகேசரி என்ற பெயருடையவன். மங்கையர்க்கரசியாரின் மணாளனான இம்மன்னனின் காலம் கி.பி. 640-670 என்ற வகையில் திருஞானசம்பந்தரின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியேயாகும் என்பதை ஐயம் இன்றித் துணியலாம் என்கின்றனர்.

வேதெநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை

விளங்கப் பூத பரம்பரை பொலியப் புனிதவாய்

மலர்ந்தழுத சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்

பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்”

என்ற திருத்தொண்டர் புராணச் செய்யுளால், வேதநெறியையும் சைவத்துறையையும் புனர்நிர்மாணம் செய்யும் பொருட்டாகத் திருவவதாரம் செய்தருளியுள்ளவர் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் என்பது உறுதிப்படும். ஆன்மாவானது ஞானத்தால் விளையும் மெய்யன்பின் மூலம் சிவனருளிற் படிந்து மூழ்கித் திளைத்தற்குரிய இடம் என்ற நயப் பாட்டினாலும் அத்தகு மெய்யன்பை இடமாகக் கொண்டு அதன் மயமாகவே சிவம் வெளிப்படும் என அறியப்படுதலானும் மெய்ஞ்ஞான நிலை சைவத்துறையாதல் அமையும். “ஞானம் ஈசன்பாலன்பே” எனத் திருத்தொண்டர் புராணத்தும் “அன்பே சிவமாவது” எனத் திருமந்திரத்தும் வருவன கொண்டும் அது தெளியப்படுகிறது.

அன்பு, அறம், மறம் ஆதியனவும் அச்சிவத்தினால் அமைந்தவையே என்பது,

பூவினில் வாசம் புனலினிற் பொற்பு

புதுவிரைச்சந்தினின் நாற்றம் நாவினிற்

 பாடல்கள் நள்ளாறுடைய நம் பெருமான்”

 

 “கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே

கடல்மலைவா னாகாசமானாய் நீயே”

 

 “பண்ணி னிசையாகி நின்றாய் போற்றி”

என்பன போன்ற தேவாரத் திருப்பதிகங்களாலும்,

 “தீயினுள் தெறல்நீ பூவினுள் நாற்றம்

நீ கல்லினுள் மணியுநீ சொல்லினுள்

வாய்மைநீ அறத்தினுளன்புநீ

மறத்தினுள் மைந்து நீ வேதத்து

மறைநீ பூதத்து முதலுநீ அனைத்துநீ

அனைத்தினுட் பொருளுநீ”

என்னும் பரிபாடலாலும் அறியப்படும்.

வேள்வி நெறியாகிய வேத நெறி மீளத் தலையெடுத்தோங்க வைத்து அருளிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் விறல் மிக்க தொண்டின் மகிமை அளப்பரியது என்பது அவர்தம் வரலாற்று நிகழ்வுகளும் அவர் திருவாய் மலர்ந்தருளிய தேவாரத் திருப்பாடல்களுமாகிய அகச் சான்றுகளாலேயே இன்றளவிலும் உறுதியாக நிற்பதும் கண்கூடு.

சைவத்துறை தழைத்தோங்கும் பொருட்டு அவர்தம் திருவவதாரம் அமைந்தது என்பதற்கு ஆதாரம், அவர் தமது மூன்றாண்டுப் பருவத்திலேயே உமாதேவியாரால் ஞானப்பாலூட்டப் பெற்று, சைவத் துறையாகிய ஞான நிலையில் விளங்கி, ஞானமுண்டார் – திருஞானசம்பந்தர் – சிவஞானசம்பந்தர் என்ற திருப்பெயர்களால் வழங்கப் பெற்றதனாலும், நின்றசீர் நெடுமாறன், மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் என்போர் சிவஞானிகளாகி நாயன்மார் அறுபத்து மூவர் நிரலில் அம்மூவரும் இடம்பெற அருளியமையாலும் சிவம் எனும் ஞானம் பெருக்கும் பிள்ளையார் என்றே போற்றப் பெற்றிருத்தலாலும், திருவோத்தூர்ப் பனைகளே பாசநீக்கம் பெற்றுச் சிவப்பேறடைய வைத்தமையாலும், அவர் திருவாய் மலர்ந்தருளிய தேவாரத்தமிழ், தனிப்பட்டதொரு ஞான எழுச்சியும் விறலும் உடைத்தாதலைச் சுட்டியே அதனைத் திருநெறிய தமிழெனவும் அதை விளம்பிய ஞானச்செல்வனைத் தமிழ்ஞான சம்பந்தன் எனவும் விதந்தோதப்பட்டுள்ளார்.

காகமுணவு கலந்துண்ணக் கண்டீர்

அகண்டாகாரசிவ போக மென்னும்

பெருவெள்ளம் பொங்கித் ததும்பிப்பூரணமாய்

ஏகவெளியாய்க் கிடக்குதையோ இன்புற்றிடநாம்

இனியெடுத்த தேகம் விழுமுன்

புசிப்பதற்குச் சேரவாருஞ் செகத்தீரே”

எனத் தாயுமான சுவாமிகள் விடுத்துள்ள அறைகூவலால், உலகமுள்ள அளவும் சைவஞானத்தின் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்க வல்லதாக இருக்குங்கால் இதற்குக் காரணகர்த்தராய் விளங்கிய சுவாமிகளாகிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் ஞான மகிமை எக்காலத்தும் போற்றுதலுக்குரியதாம்.

ஞானப்பிள்ளையார், தென்பாண்டி நாட்டில் சென்றபோது நாடு இருந்த நிலையும் சைவம் இருந்த நிலையும் வேதனைக்குரியதாக இருந்தது. சமணரைக் கழுவில் ஏற்றியது சரியா என்ற வாதம் எழுவது இயல்புதான் என்றாலும் அது சிந்திக்கத்தக்க வினாவாகும். ஆனால் திருஞானசம்பந்தர் சமணர்களைக் கழுவில் ஏற்றச் சொல்லவில்லை என்பதும் உண்மைதான். சமணர்களைப் பொருத்தவரை, அவர்களே சூளுரைத்து அவர்களுக்கு, அவர்களே விதித்துக் கொண்ட தண்டனைதான் அது. வாதிலே தோற்ற சமணர்கள் தாங்கள் செய்த சபதத்தின்படி, பாண்டி வேந்தன், கழுவிலே ஏற்றுமாறு உத்தரவிட்டான். குலச்சிறையாரும் அதனை நிறைவேற்றினார். ஆனால் சமணர்கள் பல்லாயிரம் அடியார்கள் தங்கியிருந்த மடத்தில் தீ வைத்தது தண்டனைக்குரிய குற்றம் என்பதும் உண்மை. நாடாளும் மன்னனான நின்றசீர் நெடுமாறன் அரச நீதி காக்கும் பொருட்டே அவர்களைக் கழுவேற்றினான். நாட்டில் சட்டம் ஒழுங்கைச் சீர் குலைப்பது மக்களின் அமைதியான வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதால் அதனைச் சரி செய்வதும் மன்னனின் கடமையாகும். எனவே மன்னன் உரிய தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்டினான். இதனை சம்பந்தர் தடுத்திருக்கலாமே என்ற வினாவும் எழலாம். அவருக்குச் சமணர்கள்பால் காழ்ப்புணர்ச்சி இல்லையென்றாலும் அரச நீதியில் மதம் கலந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் அடியவர்களுக்கு இழைத்த அநீதிக்காகவும் அவர் இதில் தலையிடவில்லை என்றே அறியலாம்.

வழிபாட்டு மொழி பற்றிய ஐயம் எழுபவருக்கு ஞானச்செல்வர் எம்பெருமானை வழுத்தும் அடியவருக்கும் பெருமானுக்கும் இடையில் மொழி எந்த தடையும் இல்லை. காரணம் அனைத்து மொழியும் அறிந்தவன் சிவபெருமான். ஆகவே அடியாருக்குத் தெரிந்த மொழியால் அவன் புகழ் சொல்லிப் பரவலாம் என்பதைத் தெள்ளென விளக்குகிறார்.

  1. தம்மலரடி யொன்ற அடியவர் பரவத்

தமிழ் சொல்லும் வட சொல்லும் தாணிழற்சேர

அம்மலர் கொன்றை அணிந்த எம் அடிகள்

 

  1. கல்லால் நிழல்மேய கறை சேர் கண்டா என்று

எல்லா மொழியாலும் இமையோர் தொழுது ஏத்த

 

  1. பத்தரொடு பலரும் வொலியும்மலர் அங்கை புனல்தூவி

ஒத்த சொல்லி யுலகத்தவர் தாந்தொழ

 

  1. செந்தமிழ் தெய்வமறை நாவர் செழுநற்கலை தெரிந்த அவரோடு

அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரன்.

 

சம்மந்தப் பெருமான் வழிபாட்டு மொழி எது எனில், தம் உள்ளத்தை எது ஒன்றச் செய்கிறதோ அம்மொழியே வழிபாட்டு மொழி என வழிகாட்டுகிறார்.

 

வழிபாட்டு நெறிகள்

  1. சிவ வழிபாடு செய்தல்
  2. திருநீறு அணிந்து மகிழ்தல்
  3. ஐந்தெழுத்து ஓதல்

ஆகிய மூன்று நெறிகளை வலியுறுத்தி நாம் வாழச் சிந்தை நிலை பெறச் சிவ வழிபாடும் அதற்குச் சாதனமாகத் திருநீறு அணிதலும், திருஐந்தெழுத்தை ஓதலுமே முத்தி பெற எளிய வழி என வலியுறுத்தி வாழ்ந்து காட்டினார்.

திருஞானசம்பந்தர் துதி

பரசமய கோளரியைப் பாலறா வாயனைப்பூம் பழனம் சூழ்ந்த

சிரபுரத்துத் திருஞான சம்பந்தப் பெருமானைத் தேய மெல்லாம்

குரவையிடத் தமிழ்வேதம் விரித்தருளும் கவுணியர்கள் குலதீ பத்தை

விரவிஎமை ஆளுடைய வென்றிமழ இளங்களிற்றை விரும்பி வாழ்வாம்.

திருச்சிற்றம்பலம்.

 

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 31

 63 நாயன்மார்கள் வரலாறு – 27. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (4)

சண்பை வேந்தர் முன்பு சென்று பணிந்த மங்கையர்கரசியாரையும், குலச்சிறையாரையும் தம் மலர்க்கரங்களால் எடுத்தருளியவர், அவர்களுக்கு அஞ்சத் தேவையில்லை என்றும் உணர்விலா சமணர்களை அவர்கள் கண்டு மகிழும்படி வென்று விதிப்படி பாண்டிய வேந்தனை வெண்ணீறு அணிவிப்பான் எனக் கூறியருளினார். அதன்படி ஞானசம்பந்தர் எம்பெருமான் திருவருள் பெற்று பாண்டிமாதேவியின் அழைப்பினை ஏற்று அரண்மனை சென்றடைந்தார். ஞானப்பிள்ளையாரின் திருவடியைத் தொழுது வரவேற்றவர்கள் மன்னன் படுத்துக்கொண்டிருந்த அறைக்கு அழைத்துச் சென்று அவர் அருகில் இடப்பெற்ற பொற்றவிசில் எழுந்தருளச் செய்தனர். மன்னன் ஞானசம்பந்தரைத் தரிசித்த அளவில் நோய் சிறிது தணியப் பெற்றவனாய் மகிழ்ச்சியுடன் அவரோடு உரையாடும் முறையில் அவர்தம் ஊர் குறித்துக் கேட்டவரிடம் `பிரமனூர்` என்ற திருப்பதிகத்தால் விடையளித்தார்.

 

சமணர்கள் அச்சமுற்றாலும் அதனை வெளிக்காட்டாமல் மறைத்துக் கொண்டு சம்பந்தரை நோக்கி `உங்கள் உறுதிப் பொருளைக் கூறி வாது செய்து வென்றவர்கள் மதத்தை ஏற்போம்` எனக்கூறினர். `மன்னனும், வாது செய்வதெல்லாம் வேண்டாம் என்றும் தமது உடற்பிணியை யார் இறையருளால் நீக்குகிறார்களோ அவர்கள் பக்கமே தாம் சாரப்போவதாகவும், நோய் தணிந்த பிறகு வாது செய்யலாம் என்றும் கூறினார். ஞானசம்பந்தர் அரசமா தேவியாரைப் பார்த்து `அஞ்சற்க; என்னைப் பாலகன் எனக் கருத வேண்டா; ஆலவாயரன் துணை நிற்க வாதில் வெல்வோம்` என்றார். அது கேட்ட சமணர்கள் மன்னன் உடலில் இடப்பாகம் பற்றிய நோயை தாங்கள் குணப்படுத்துகிறோம் என்றும் வலது பக்கம் அவர் தீர்க்கட்டும் என்று கூறி குண்டிகை நீரைத் தெளித்து பீலி கொண்டு உடலைத் தடவிய அளவில் அது தீயில் பட்ட நீராகக் கொதிக்க நோய் மேலும் கூடியது. ஆனால் ஞானசம்பந்தர் `மந்திரமாவது நீறு` என்ற திருப்பதிகம் பாடி, தம் திருக்கரத்தால் வலப்பாகத்தில் திருநீற்றைத் தடவிய அளவில் நோய் தணிந்து இடப்பாகத்தே மூண்டெழக் கண்ட மன்னன் அப்பாகத்தையும் தாங்களே தீர்த்தருள வேண்டுமென வேண்டினான். ஞானசம்பந்தர் இடப்பாகத்திலும் திருநீறு பூசிய அளவில் நோய் தணிந்தது.

 

மந்திர மாவது நீறு

  வானவர் மேலது நீறு

சுந்தர மாவது நீறு

  துதிக்கப் படுவது நீறு

தந்திர மாவது நீறு

  சமயத்தி லுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன்

  திருஆல வாயான் திருநீறே.

 

ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப் போற்றிப்

புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்

தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்

சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே!!!

பாண்டிய மன்னன் முற்றாகக் குணமுற்றுத் தெளிந்து எழுந்து ஞானசம்பந்தரைப் பணிந்து அவர்தம் திருவடிகளில் விழுந்து வணங்கிப் போற்றினான்.

 

பாண்டியனது வெப்பு நோயைப் போக்க இயலாத சமணர்கள் தருக்க வாதம் புரிவதை விடுத்துத் தீயிலும் நீரிலும் அவரை வெல்லலாம் என்று மனக்கணக்குப் போட்டனர். திருஞானசம்பந்தர் `இனி உங்கள் வாய்மையே பேசுமின்` எனப் பணித்தார். சமணர்கள் `இருதிறத்தாரும் தாங்கள் கண்ட பேருண்மையை ஏட்டில் எழுதி நெருப்பில் இட்டால் வேகாத ஏடு எவருடையதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்வோம்` என்றனர். ஞானசம்பந்தரும் அதற்கிசைந்தார். பாண்டிய மன்னனும் தீக்குண்டம் அமைக்கக் கட்டளையிட்டான்.
அத் தீ கொழுந்து விட்டு எரிந்தது. சிவபெருமானே மெய்ப்பொருள் என உணர்ந்த ஞானசம்பந்தர் தாம் அதுவரை  அருளிய திருப்பதிகச் சுவடியைக் கொணரச் செய்து வழிபட்டு அதனை விரித்தருளினார். `போகமார்த்த பூண்முலையாள்` என்ற திருநள்ளாற்றுத் திருப்பதிகம் உதயமாயிற்று. ஞானசம்பந்தர் திருநள்ளாற்று இறைவனைப் போற்றி அவ்வேட்டினை எடுத்து மெய்ப்பொருளாகும் இவ்வுலக மாந்தருக்கு அறிவுறுத்தும் வகை இவ்வேடு அனலிடை வேகாதிருக்க வேண்டி `தளிரிள வளரொளி` எனத்தொடங்கும் திருப்பதிகம் அருளி எடுத்த ஏட்டினைத் தீயில் இட்டார். அவ்வேடு கொழுந்து விட்டு எரியும் தீயில் வேகாது பசுமையாய்க் காட்சியளித்தது. சமணர்கள் தங்கள் நூற் பொருள் எழுதப் பெற்றதொரு ஏட்டினைத் தீயில் இட்டனர். அது எரிந்து கரிந்து சாம்பலாயிற்று. ஞானசம்பந்தர் குறித்த நேரம் வரை காத்திருந்து தான் இட்ட ஏட்டை யாவரும் காண எடுத்தருளினார். அது தீயில் இட்டும் முன்னையினும் பசுமையாக இருந்த காரணத்தால் பச்சைத் திருப்பதிகம் எனப் போற்றப் பெறுவதாயிற்று.

 

சமணர்கள் தங்கள் ஏடு எரிந்து சாம்பலானதைக் கண்டு நகைத்த மன்னனை நோக்கி `ஓர் வாதினை மும்முறை செய்து உண்மை காணுதலே முறையாகும். ஆதலால் இரு தரப்பினரும் தத்தம் சமய உண்மைகள் எழுதிய ஏட்டினை ஆற்றில் விட்டால் எவருடைய ஏடு நீரில் அடித்துச் செல்லாமல் எதிர்த்து வருகிறதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்ளலாம்` என்றனர். அப்பொழுது அமைச்சர் குலச்சிறையார் இதிலும் தோற்றவர்களுக்கு ஏற்படும் இழப்பு என்ன என்பதையும் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டார். அது கேட்ட சமணர்கள் இவ்வாதில் தோல்வியுற்றோமானால் எங்களை இவ் வேந்தன் கழுவில் ஏற்றட்டும் என்றனர். மன்னனும் அவர்கள் ஆத்திரத்தில் அறிவிழந்துப் பேசிவிட்டதாகக் கூறி அதற்கு உடன் பட்டான்.

ஞானசம்பந்தரும் சமண முனிவர்களும் வைகையாற்றின் கரையை அடைந்தனர் முதலில் சமணர்கள் தங்கள் சமய உண்மையாகக் கூறும் `அதி நாதி` என வடமொழி மந்திரத்தை எழுதி ஆற்றில் இட்டனர். அவ்வேடு ஆற்று நீரோட்டத்தை எதிர்க்கும் ஆற்றலின்றி நீர் ஓடும் நெறியிலேயே கடலை நோக்கி விரைந்தோடிற்று. அதனைக் கண்ட சமணர்கள் நீவிரும் உமது சமய உண்மையை எழுதி நீரில் இடுக எனக்கூறினர். ஞான சம்பந்தர், தம் திருக்கரத்தால்,

வாழ்க அந்தணர்

  வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல்

  வேந்தனும் ஓங்குக

ஆழ்க தீயதெல்

  லாம்அரன் நாமமே

சூழ்க வையக

  முந்துயர் தீர்கவே

 

என்னும் திருப்பதிகத்தை எழுதி அதனை வைகையாற்றில் இட்டனர். வைகை ஆற்று வெள்ளத்தைக் கிழித்துக் கொண்டு எதிர் ஏறிச் சென்றது. குலச்சிறையாரும் அந்த ஏட்டினையொட்டி குதிரை மீது ஏறிச் சென்றார். இத்திருப்பாட்டில் `வேந்தனும் ஓங்குக` என ஞானசம்பந்தர் அருளிச் செய்ததால் பாண்டியன் கூன் நிமிர்ந்து நின்றசீர் நெடுமாறன் ஆக மாறினான். ஏடு எதிரேறிச் செல்வதைக் கண்ட பிள்ளையார் `வண்ணியும் மத்தடும் மதிபொதி சடையினன்` என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார். அவ்வேடு வைகையின் வடகரையில் அமைந்த ஒரு கோயிலுக்கு அருகே சென்று சேர்ந்தது. அதனை குலச்சிறையார் வணங்கி எடுத்து வந்தவர், நின்றசீர் நெடுமாறனிடமும், மங்கையர்கரசியாரிடமும் காட்டினார். மக்களும் இறைவன் திருவருளை எண்ணி வியந்துப் போற்றினர்.  ஏடு நின்ற இத்திருக்கோயில் இன்றும் திருவேடகம் என்று வழங்கப்படுகிறது.
வாதிலே தோற்ற சமணர்கள் தாங்கள் செய்த சபதத்தின்படிக் கழுவேறினர். பாண்டிய மன்னன் கட்டளைப்படி குலச்சிறையாரும் அதை நிறைவேற்றினார். ஞானசம்பந்தர் பாண்டிய மன்னனுடன் ஆலவாய் இறைவர் திருக் கோயில் சென்று `வீடலால வாயிலாய்` என்ற திருப்பதிகம் பாடி வழிபட்டுத் தம் திருமடத்துக்கு எழுந்தருளினார்.

ஆளுடைய பிள்ளையார் மதுரையில் சில நாள் தங்கியிருந்து ஆலவாய் அப்பனைப் பரவினார். பின்னர் பாண்டிய மன்னன், மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் ஆகியோரோடு திருப்பரங்குன்றம், திருவாப்பனூர், திருப்புத்தூர், திருக்கானப்பேர், திருச்சுழியல், குற்றாலம், திருநெல்வேலி முதலிய தலங்களை வழிபட்டு திருஇராமேச்சுரம் சென்றடைந்தார். திருமால் இராமாவதாரத்தில் சிவ வழிபாடு செய்த இராமேசுவரத்தை அடைந்து அங்கு இராமநாதரைத் தரிசித்து அங்கிருந்தபடியே ஈழத்தலங்களாகிய திருக்கேதீச்சரம், திருக்கோணமலை ஆகிய தலங்களை நினைந்து போற்றினார். இராமேச்சுரத்திலிருந்து ஆடானை, புனல்வாயில், மணமேற்குடி ஆகியவற்றை வழிபட்டுப் பாண்டிய மன்னன் அரசியார் அமைச்சர் முதலானோர்க்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டுச் சோழநாடு புகுந்து பாதாளீச்சரம், திருக்களர் முதலான தலங்களை வழிபட்டுக் கொண்டு திருக்கொள்ளம்பூதூர் வந்தடைந்தார்.

பாண்டிய நாட்டிலிருந்து புறப்பட்டுச் சோழ நாட்டையடைந்த பிள்ளையார் திருக்களர், திருப்பாதாளீச்சுரம் முதலிய தலங்களையும் வழிபட்டு முள்ளிவாய்க்கரை என்னும் ஊரைச் சேர்ந்தார். அங்கு முள்ளியாறு எனும் ஆறு உள்ளது. ஆற்றின் மறுகரையில் கொள்ளம்பூதூர் என்னும் திருத்தலம் உள்ளது. அங்கு சென்று பரமனைப் பாடும் அவாவினால் சம்பந்தர் தம் அடியார் குழாத்துடன் முள்ளியாற்றின் கரையை அடைந்தார். முள்ளியாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. மறுகரைக்கு ஏற்றிச் செல்லும் ஓடக்காரர்கள் வெள்ளமிகுதி கண்டு ஓடத்தைக் கரையில் கட்டி விட்டுப் போயிருந்தனர். ஞானசம்பந்தர் ஓர் ஓடத்தை அவிழ்க்கச் செய்து அடியவர்களுடன் தானும் ஏறிக்கொண்டு கொள்ளம்பூதூர் இறைவனைப் போற்றி, `கொட்டமே கமழும்` என்ற திருப்பதிகத்தை இசைத்துத் தன் நாவன்மையே கோலாகக் கொண்டு ஓடத்தைச் செலுத்தினார். ஆறாவது பாடல் பாடும்போது ஓடம் கரையை அடைந்தது. ஞானசம்பந்தர் கொள்ளம்பூதூர் ஆலயத்தை அடைந்து எடுத்த திருப்பதிகத்தின் எஞ்சிய பாடல்களால் இறைவனைப் பரவினார். திருநள்ளாறு அடைந்து மதுரை மாநகருக்கு வந்து அனல் வாதத்தில் வெற்றியருளிய திருநள்ளாற்று இறைவன் மீது `பாடகமெல்லடி` என்ற பதிகத்தால் போற்றித் தன் பயணத்தைத் தொடர்ந்தார். பின்னர்த் திருக்கடவூர் சென்று வழிபட்டு அப்பர் எங்குள்ளார் எனக் கேட்டு அவர் திருப்பூந்துருத்தியில் இருக்கும் செய்தி அறிந்து அவரைக் காணத் திருப்பூந்துருத்தி வந்து அடைந்தார்.

ஞானசம்பந்தர் வருகையை அறிந்த அப்பர், திருப்பூந்துருத்தி எல்லைக்குமுன் சென்று அடியவர் கூட்டத்தினரோடு அவர் ஏறி வரும் சிவிகையைத் தானும் ஒருவராய்ச் சுமந்து வருவாராயினார்.
திருஞானசம்பந்தர் திருப்பூந்துருத்தி எல்லையை அடைந்தபோது அப்பர் வரவைக் காணாது `அப்பர் எங்குற்றார்?` என அடியவர்களை வினவினார். அவ்வுரை கேட்ட அப்பர் `உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் பெருவாழ்வு வந்து எய்தப் பெற்று இங்குற்றேன்` என்றார். ஞானசம்பந்தர் விரைந்து சிவிகையிலிருந்து இறங்கி `இவ்வாறு செய்தருள்வது தகுமா?` எனக் கூறி அப்பரை வணங்கினார். அப்பரும் உடன் வணங்கினார். பின்னர் இருவரும் ஆலயம் சென்று இறைவனை வணங்கினர். ஞானசம்பந்தர் அப்பர் திருமடத்தில் அவரோடு உடன் உறைந்து பாண்டி நாட்டில் நடந்தவைகளை விவரித்தார். அப்பர் `திருநெறித் தொண்டெனும் வான்பயிர் தழைக்கச் சூழும் பெருவேலி ஆயினீர்` எனப் போற்றினார். பாண்டி நாட்டில் சைவம் தழைக்கத் தொடங்கியதை அறிந்த அப்பர் அந்நாடு செல்லும் விருப்புடையவரானார். அப்பர் தொண்டை நாட்டின் சிறப்பைக் கூறக் கேட்ட ஞானசம்பந்தர் தொண்டை நாடு செல்ல விரும்பினார். இருவரும் ஒருவரையொருவர் பிரிந்து பயணம் மேற்கொண்டனர். ஞானசம்பந்தர் காவிரி வடகரையை அடைந்து நெய்த்தானம் ஐயாறு பழனம் முதலிய தலங்களை வணங்கி, சீர்காழிப் பதியை அடைந்து தோணிபுரப் பெருமானைப் போற்றித் தம் திருமாளிகையை அடைந்தார்.

தொண்டைநாட்டில் உலா

தொண்டை நாட்டில் திருப்பயணம் மேற்கொண்ட ஞானசம்பந்தர் கச்சித்திருஏகம்பப் பெருமானை வழிபடும் விருப்பத்துடன் சீர்காழியிலிருந்து புறப்பட்டுத் தில்லை சென்று ஆனந்தக் கூத்தனைப் பணிந்து திருத்திணைநகர், திருமாணிக்குழி, திருப்பாதிரிப்புலியூர், திருவடுகூர், திருவக்கரை, திருஇரும்பை, மாகாளம் முதலிய தலங்களை வழிபட்டு அப்பரடிகட்கு அருள் செய்த, தற்போது பண்ருட்டி என வழங்கும் ஊரிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள அழகிய ஆலயமான திருவதிகை வீரட்டானத்தைச் சென்றடைந்தார். அங்கு வீரட்டானத்து இறையைத் தொழுது போற்றியவர், பின்னர் கோவலூர் அறையணி நல்லூர் ஆகிய தலங்களை வணங்கி அண்ணாமலை சென்றடைந்தார். ‘உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய நடுவன்’ எனும் திருப்பதிக இசை பாடி திருவோத்தூர் எனும் திருத்தலத்தை அடைந்து இறைவனைப் போற்றினார். திருவோத்தூர் தற்போது செய்யாறு திருவத்தூர் என வழங்கப்படுகிறது.

 

திருவோத்தூரில் சிவனடியார் ஒருவர் இருந்தார். அவர் ஆலயத்தருகில் அன்பர்கள் வேனிற்காலத்தே பருகுவதற்காகப் பனை மரங்கள் நட்டு நீர் வார்த்து வளர்த்து வந்தார். அடியவர்க்கெனத் தான் வளர்த்த, வானுற ஓங்கி வளர்ந்த அப்பனை மரங்கள் அனைத்தும் ஆண்பனைகளாக இருந்தன. இதனைக் கண்ணுற்ற சமணர்கள் அவ்வடியாரைக் கேலி செய்து உன் சிவனருளால் ஆண் பனையெல்லாம் பெண் பனையாக மாறி காய்க்க வைக்க முடியுமா? என ஏளனமாகக் கேட்டதையும் ஞானசம்பந்தரிடம் கூற அவர் ஆலயம் சென்று வணங்கி, `பூத்தேர்ந்தாயன` என்னும் பதிகம் பாடிய அளவில்,

 

குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்    

    அரும்பு கொன்றை யடிகளைப்    

    பெரும்பு கலியுள் ஞானசம் பந்தன்சொல்    

    விரும்பு வார்வினை வீடே.    

என முடிக்கும்போது ஆண்பனைகளனைத்தும் பெண் பனைகளாய்க் குலையீன்றதைக் கண்ட அடியவர் அதிசயித்தனர். சமணர்கள் பிழை பொறுக்க வேண்டியதோடு சைவ சமயத்தின் சிறப்பினை அறிந்து சைவ சமயத்திற்கு மதம் மாறி ஞானசம்பந்தரைப் போற்றினர்.

 

திருவோத்தூரிலிருந்து புறப்பட்டு ஞானசம்பந்தர் திருமாகறல் குரங்கணில் முட்டம் ஆகிய தலங்களை வணங்கிக் காஞ்சிபுரம் சென்றடைந்தார். கச்சி ஏகம்பம், காமகோட்டம் ஆகிய ஆலயங்களை வணங்கிக் கொண்டு அத்தலத்தின் அருகில் விளங்கும், ஆலயங்களைப் போற்றி, காரைக்காலம்மையார் முத்திப் பேறு பெற்றருளிய திருவாலங்காட்டை வணங்கிப் போற்ற எண்ணினார். அம்மையார் தலையால் நடந்து வந்த அத்தலத்தை மிதித்தற்கு அஞ்சி அத்தலத்தின் அருகில் உள்ளதொரு ஊரில் அன்றிரவு துயில் கொண்டார். ஆலங்காட்டு இறைவர் அவர் கனவில் தோன்றி நம்மைப் பாடுதற்கு மறந்தனையோ என்ன உடனெழுந்து `துஞ்சவருவாரும்` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். பின்னர் அவ்வூரை விட்டகன்று பாசூர் வெண்பாக்கம் காரிகரை ஆகிய தலங்களை வணங்கிக் கொண்டு காளத்தியை அடைந்தார். கண்ணப்பரின் பக்தித் திறம் போற்றி திருக்காளத்தி இறைவரைப் பணிந்து அங்குள்ள திருமடம் ஒன்றில் பலநாள் தங்கிப் பரவினார். அங்கிருந்தே வடதிசையிலுள்ள திருக்கயிலாயம், கேதாரம், திருப்பருப்பதம் முதலிய தலங்களைப் போற்றிப் பதிகங்கள் அருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவேற்காடு பணிந்து திருவொற்றியூரை வந்தடைந்தார்.

தொடரும்

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 30

 

63 நாயன்மார்கள் வரலாறு – 27. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (3)

திருஞானசம்பந்தர் திருப்புகலூர், வர்த்தமானிச்சுரம் ஆகிய தலங்களை வணங்கச் சென்றார். முருக நாயனார் எனும் அடியவர் வர்த்தமானச்சுரத்துப் பெருமானை நாளும் பூவும், பட்டும் கொண்டு அலங்கரித்து, அகில் கொண்டு புகைத்து ஐயன் அழகில் அவர்தம் அடி பரவும் அத்திருத்தொண்டர் வழிபடும் திருக்கோயில் வர்த்தமானிச்சுரம் எனப் போற்றிப் பாடியருளினார். முருக நாயனார் எதிர் கொண்டழைக்கத் திருப்புகலூர் சென்ற ஞானப்பிள்ளையார் ஆலயம் சென்று பெருமானை வணங்கி திருப்பதிகம் பாடிப் போற்றி முருக நாயனார் திருமடத்தில் தங்கியிருந்தார். ஞானப்பிள்ளையார் திருப்புகலூரில் உள்ளார் என்ற செய்தியறிந்த அப்பரடிகள் ஆரூர்ப் பெருமானின் ஆதிரைப் பெருவிழாவினைக் கண்டு களித்து திருப்புகலூர் வந்து சேர்ந்தார்.

அப்பர் பெருமான் வருகையை அறிந்த ஞானசம்பந்தர் ஆராத அன்புடன் அவரை எதிர்கொண்டழைத்து அளவளாவி மகிழ்ந்தார். திருவாரூரில் நிகழ்ந்த திருவாதிரைத் திருநாளின் சிறப்பை விரித்துரைக்கக் கேட்ட ஞானசம்பந்தர் அப்பரைத் திருப்புகலூரில் இருக்கச் செய்து விற்குடி வீரட்டத்தைப் பணிந்து விழா கண்ட ஆரூரைத் தொழுது வருவதாகக் கூறி திருவாரூருக்கு எழுந்தருளினார். ஞானசம்பந்தரின் வருகையை அறிந்த நகர மக்கள் எதிர்கொண்டு போற்றினர். ஞான சம்பந்தர் திருவாரூர்ப் பூங்கோயிலை அடைந்து `சித்தம் தெளிவீர் காள்` என்பது முதலிய பல திருப்பதிகங்களை அருளிப் பரவி வழிபட்டார். அரனெறியைத் தரிசித்தார். பின்னர் வலிவலம் கோளிலி முதலான தலங்களை அடைந்து வழிபட்டு மீண்டும் திருவாரூரை அடைந்து தங்கியிருந்து வழிபட்டு, வழியிடையே பனையூரைத் தொழுதுப் பின்னர் திருப்புகலூருக்கு வந்து சேர்ந்தார். ஊர் எல்லையில் முருக நாயனார் முதலிய அடியவர்கள் வரவேற்கத் திருப்புகலூரை அடைந்து இறைவனை வழிபட்டு முருகநாயனார் திருமடத்தில் திருநாவுக்கரசர், நீலநக்கர், சிறுத்தொண்டர் முதலிய அடியவர்களோடு உரையாடிக் கலந்து மகிழ்ந்திருந்தார்.

 

ஞானசம்பந்தரும் அப்பரடிகளும் நீலநக்கர் சிறுத்தொண்டர் முதலானோர்க்கு விடையளித்து இறைவன் வீற்றிருக்கும் பல திருத்தலங்களையும் வழிபட விரும்பிப் புறப்பட்டனர். ஞானசம்பந்தர் அப்பர் உடன் வருவதால், முத்துச்சிவிகை பின்வர, தானும் அவருடன் நடந்து செல்லலானார். அதைக்கண்ட அப்பர் பெருமான் இறைவன் அளித்த சிவிகையில் வராமல் நடந்து வரும் வகையில் அதைப் புறக்கணிப்பது தகாது என்றும், தன்னுடனேயே பல்லக்கில் பவனி வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ள எண்பதாண்டு முதியவரான அப்பர் பெருமானை நடக்க வைத்துத் தாம் மட்டும் சிவிகையில் செல்வது சரியாகாது என்று எண்ணிய  ஞானசம்பந்தர் அப்பரை முன்னே விடுத்து அவர் செல்லும் திருத்தலங்களைத் தொடர்ந்து சென்று வழிபட்டார்.

 

இருவரும் அம்பர் மாகாளத்தை வணங்கித் திருக்கடவூர் சென்றனர். அங்கு குங்குலியக்கலய நாயனார் அவர்களை வரவேற்க இருவரும் கடவூர் வீரட்டத்தைத் தொழுது போற்றி அந்நாயனார் திருமனையில் அமுது கொண்டு திருக்கடவூர் மயானம் ஆக்கூர் மீயச்சூர் பாம்புரம் முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு திருவீழிமிழலை எனும் திருத்தலத்தை வந்தடைந்தனர். அப்பரடிகளும் ஞானசம்பந்தரும் திருவீழிமிழலையில் வீழிமிழலைப் பெருமானை வணங்கி அங்கு தங்கியிருந்தார்கள். ஞானசம்பந்தர் வீழியில் இருந்தபோது காழிமக்கள் அவர் பிரிவாற்றாது, காழிப்பதியை விட்டு வந்து வெகுநாட்கள் ஆகிறது, தங்களோடு சீர்காழிக்கு வந்து சில நாட்கள் தங்கியருள வேண்டுமென விண்ணப்பித்தனர். ஞானசம்பந்தர் வீழிநாதனின் அருள் பெற்று இன்று கழித்து நாளை செல்வோம் எனக் கூறி, அவர்களைத் திருமடத்தில் தங்க வைத்துத் தாமும் துயில் கொண்டார்.

 

பெருமான் அவர் தம் கனவில் தோன்றி, தம்மைத் திருமால் வணங்க, இந்திரனால் இங்கு வரவழைக்கப்பட்ட விண்விழி விமானத்தே தாம் தோணியிலமர்ந்த வண்ணத்தை நாளை வீழிமிழலையிலேயே காட்சியளிப்பதாகக் கூறக் கேட்டு பெருமான் கருணை வெள்ளத்தை நினைந்து மகிழ்ந்து அதிகாலை விழித்தெழுந்து நீராடி ஆலயம் சென்றபோது இறைவன் காழிக்காட்சியை அவ்வாலயத்திலேயே காட்டக் கண்டு `மைம் மருபூங் குழல்` எனத் தொடங்கும் திருப்பாசுரம் பாடி வியந்தார். காழி மக்கட்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு வீழிமிழலையிலேயே தங்கியிருந்தார்.

ஞானசம்பந்தரும் அப்பரும் திருவீழிமிழலையில் தங்கியிருந்த சமயம் அங்கு மழையின்றி, நீர்வரத்தும் குன்றி, நதிநீர் குறைந்து, வளம் இன்றி நாடு வறட்சியுற்றதால் பஞ்சம் ஏற்பட்டது. உணவு உற்பத்தி குறைந்து வறுமையுற்றதால் உயிர்களெல்லாம் பசியால் வாடின. மக்களோடு அடியார்களும் துயருற்றனர். அதனை அறிந்த பிள்ளையார் `கண்ணுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்கும் கவலை வருமோ? என்று கருதியவராய் பெருமானை எண்ணியவாறு இருவரும் கண்ணயர்ந்தனர்.

 

உறங்கிய பெருமக்களின் கனவில் பெருமான் தோன்றி நாட்டின் பஞ்சம் நீங்கும் காலம் வரை ஆலயத்தின் கிழக்குப் பலிபீடத்திலும் மேற்குப் பலிபீடத்திலும் இருவருக்கும் பொற்காசு அளிப்பதாகக் கூறி மறைந்தார். விழித்தெழுந்த ஞானசம்பந்தர் அப்பரடிகளுடன் ஆலயம் சென்றார். கனவில் கண்டதுபோல் கிழக்குப் பலிபீடத்தில் ஞானசம்பந்தர் காசு பெற்றார். மேற்குப் பலிபீடத்தில் அப்பர் பெருமான் காசு பெற்றார். இருவரும் அக்காசுகளைப் பெற்றுத் தத்தம் திருமடங்களில் அடியவர்களுக்கு அமுதளிப்பதாக பறை அறிவித்துச் செய்தியளித்தனர். அடியவர்கள் அனைவரும் உணவு உண்டு மகிழ்ந்திருந்த நேரத்தில், நாவுக்கரசர் திருமடத்தில் உரிய காலத்திலும், ஞானசம்பந்தர் திருமடத்தில் சிறிது காலம் தாழ்ந்தும் உணவளிக்கப் பெறுவதை அறிந்த ஞானசம்பந்தர், பணியாளர்களை அழைத்துத் தாமதத்திற்குரிய காரணம் வினவினார். இறைவன் தனக்கு அளிக்கும் காசுகள் வாசியுள்ளதாக இருத்தலையும், நாவுக்கரசர் அளிக்கும் காசு நல்ல காசு என்பதையும் அறிந்தார். அக்காசினை மாற்றிப் பொருள்கள் பெற்று வருதலினால் காலத்தாமதம் ஏற்படுதலையும் அறிந்தார் ஞானசம்பந்தர். அப்பர் கைத்தொண்டும் செய்தலால் அவருக்கு வாசியில்லாத காசு வழங்குதலை அறிந்து மறுநாள் ஆலயம் சென்று `வாசிதீரவே காசு நல்குவீர்` எனத் திருப்பதிகம் பாடி நல்ல காசினைப் பெற்று உரிய காலத்தில் தமது திருமடத்திலும் அடியவர்களுக்கு அமுதளிக்கச் செய்து மகிழ்ந்திருந்தார்.

 

வாசி தீரவே, காசு நல்குவீர்

மாசின் மிழலையீர், ஏச லில்லையே.

 

இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்

கறைகொள் காசினை, முறைமை நல்குமே.

 

செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்

பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.

 

நீறு பூசினீர், ஏற தேறினீர்

கூறு மிழலையீர், பேறும் அருளுமே.

 

காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்

நாமம் மிழலையீர், சேமம் நல்குமே.

 

பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்

அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே.

 

மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்

கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே.

 

அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்

பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே.

 

அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்

இயலும் மிழலையீர், பயனும் அருளுமே.

 

பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்

வெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே.

 

காழி மாநகர், வாழி சம்பந்தன்

வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.

 

சில திங்களில் மழைபெய்து நாடு செழித்தது. பஞ்சம் நீங்கி மக்கள் இனிது வாழத் தொடங்கினர்.

 

ஞானசம்பந்தரும் அப்பரும் அடியவர்களுடன் திருவீழிமிழலையிலிருந்து புறப்பட்டுத் திருவாஞ்சியம் முதலிய தலங்களை வழிபட்டுக்கொண்டு அடியவர் எதிர்கொண்டு வரவேற்க, தற்போது வேதாரண்யம் என்று வழங்கப்படுகிற திருமறைக்காடு சென்று அடைந்தனர். ஆலயத்தை வலம் வந்து வாயிலை அணுகியபோது வேதங்களால் பூசிக்கப்பெற்றுத் திருக்காப்பிடப்பெற்ற அத்திருக்கதவுகள் திறக்கப்படாமல் இருந்ததையும் மக்கள் மற்றொரு புறத்தில் வாயில் அமைத்துச் சென்று வழிபட்டு வருவதையும் கண்ட ஞானசம்பந்தர் வேதவனப் பெருமானை உரிய வாயில் வழியே சென்று வழிபட வேண்டும் என்று எண்ணி அப்பரடிகளிடம், அத்திருக்கதவுகள் திறக்க வேண்டி திருப்பதிகம் பாடியருள வேண்டுமென வேண்டினார். அப்பர் பெருமானும் `பண்ணினேர் மொழியாள்` எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடியருளினார். அப்பதிகப் பொருட் சுவையில் ஈர்க்கப்பட்ட இறைவன் பதிகத்தின் நிறைவில் திருக்கதவுகள் திறக்குமாறு செய்தருளினார். இருவரும் மகிழ்வுடன் ஆலயத்தினுள் சென்று மறைக்காட்டுறையும் இறைவனைப் போற்றிப் பரவித் திரும்பினர். அப்பர் இக்கதவுகள் இனி திறக்கவும் அடைக்கவும் உரியனவாக இருத்தல் வேண்டுமென எண்ணி ஞான சம்பந்தரை நோக்கி இப்போது தாங்கள் திருக்கதவுகள் அடைக்கப் பாட வேண்டுமெனவும் வேண்டினார்.
ஞானசம்பந்தர் `சதுரம் மறை` எனத் தொடங்கும் திருப்பதிகம் பாட, அந்த முதற்பாடலிலேயே கதவு அடைத்துக் கொள்ள ஏனைய பாடல்களையும் பாடிப் போற்றினார் ஞானசம்பந்தர். பின்னர் இருவரும் மகிழ்ச்சியுடன் திருமடம் சேர்ந்தனர்.

 

அப்பர் திருமடத்தைச் சார்ந்து தான் 10 பாடல்கள் பாடி அரிதில் திறக்கவும், முதல் பாடல் சம்பந்தர் பாடிய உடனே மூடியதையும் நினைத்துப் பார்த்து இறைவன் திருவருள் குறிப்பை உணராது திருக்கதவந் திறக்கப் புகுந்தது தவறெனக் கருதி அம்மடத்தின் ஒரு பால் துயில் கொண்டார். அவர்தம் மனக்கருத்தை அறிந்த சிவபெருமான் அவர் எதிரே சைவ வேடத்துடன் தோன்றி, `நாம் வாய்மூரில் இருப்போம். நம்மைப்பின் தொடர்ந்து வருக` எனப் பணித்தார். அப்பர் பெருமான் கை, தலை குவித்து பின் தொடர்ந்து சென்றார். அப்பெரியவர் அண்மையில் இருப்பது போலக் காட்டி மறைந்தார். சண்பை வேந்தர் எழுந்து அப்பரடிகள் பற்றி வினவ, அடியார்கள் அப்பர் வாய்மூர் சென்றமையைத் தெரிவித்தனர். அப்பரடிகளை அவர் சென்ற வழி கேட்டறிந்து அவரைத் தேடித் திருவாய்மூர் வந்தடைந்தார்.

 

ஞானசம்பந்தரின் வருகையை அறிந்த அப்பரடிகள் அகமகிழ்ந்து தாம் திருக்கதவம் திறக்கப் பாடிய திருப்பதிகத்தினினும் சிறப்புடைய செந்தமிழ் பாடித் திருக்கதவம் அடைப்பித்த ஞானசம்பந்தர் வருகையைக் கூறி அவருக்காக திருக்காட்சி நல்க வேண்டினார். வாய்மூர் பெருமான் ஞானசம்பந்தருக்கு மட்டும் தமது ஆடல் காட்சியைக் காட்டியருள ஞானப்பிள்ளையார் `தளிரிள வளரென` எனத் திருப்பதிகம் பாடிப் போற்றி அக்காட்சியை அப்பருக்கும் காட்டியருளினார். அவ்வருட் காட்சியைக் கண்ட அப்பரடிகளும் பதிகம் பாடிப் போற்றினார். இருவரும் திருவாய்மூரில் சில நாட்கள் தங்கியிருந்து மகிழ்ந்தவர்கள் மீண்டும் திருமறைக்காடு சென்று சேர்ந்தனர்.

 

பாண்டிநாடு சமண சமய இருளில் மூழ்கியிருந்த காலம் அது. பல்லாயிரம் சமணத் துறவிகளைத் தோற்றுவித்து  ஆனைமலை முதலிய மலைகளைத் தம் இருப்பிடங்களாகக் கொண்டு தங்கள் சமயத்தைப் பரப்புவதுடன் சைவ சமயத்தை இகழ்ந்தும் பழித்தும் வந்தனர். சைவத் திருக்கோயில்கள் அனைத்தும் சமணப் பாழிகளாக மாற்றமடைந்தன. அக்காலத்தில் அரசு புரிந்த கூன்பாண்டிய மன்னனையும் சமண சமயத்தில் சேர்த்தனர். மக்களும் அச்சமயம் சார்ந்து ஒழுகத் தலைப்பட்டனர். பாண்டிய மாதேவியான மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் குலச்சிறையாரும் உறுதியாய்ச் சிவநெறி கடைபிடித்து காத்து வந்தனர். இந்நிலையில் ஞானசம்பந்தரின் பெருமைகளைக் கேள்வியுற்ற அரசியாரும் அமைச்சரும் இறையருள் பெற்ற அவர் திருமறைக்காட்டுக்கு எழுந்தருளியிருப்பதை அறிந்து பரிசனங்களை அனுப்பி வணங்கித் தம் நாட்டு நிலையைத் தெரிவித்து வருமாறு செய்தனர். உடன் இருந்த அடியவர்கள் ஞானசம்பந்தரிடம் பாண்டி நாட்டுக்கு எழுந்தருள வேண்டுமென வேண்டிக் கொண்டனர். ஞானசம்பந்தரும் அப்பரடிகளும் மறைக்காட்டீசர் திருக்கோயில் சென்று வணங்கினர். ஞானசம்பந்தர் மதுரைக்குச் செல்லும் தம் விருப்பத்தை அப்பரிடம் தெரிவிக்க, அப்பர் ஞானசம்பந்தரை நோக்கிப் `பிள்ளாய் அமணர் செய்யும் வஞ்சனைக்கோர் அளவில்லை. அதை நானே அனுபவித்திருக்கிறேன். ஆயினும் இன்று நாளும் கோளும் நன்றாக இல்லை. இதுபோது பாண்டிநாடு செல்வது கூடாது` எனத் தடுத்தருளினார். ஞானசம்பந்தர் அப்பரை நோக்கி `நாம் பரவுவது நம் பெருமான் கழல் ஆதலால் நம்பால் எத்தகைய தீங்கும் வாராது` எனக் கூறியதோடு, நாள் கோள்களின் குற்றங்கள் நீங்க `வேயுறு தோளிபங்கன்` என்னும் திருப்பதிகம் பாடி, மதுரைப் பயணத்தை மேற்கொண்டார். பாடல் கேட்டு வந்த அப்பரடிகள் தானும் உடன் வருவதாகக் கூறிப் புறப்பட்டார். சம்பந்தர் அவரது வயது கருதி அவரை சோழ நாட்டுத் திருத்தலங்களை வழிபட்டு இருந்தருள வேண்டினார். அப்பரடிகளும் அதற்கு இசைந்தார்கள்.

 

திருஞானசம்பந்தர் திருமறைக்காட்டிலிருந்து அடியவர் புடைசூழச் சிவிகையில் அமர்ந்து அகத்தியான்பள்ளி, கோடிக்குழல் முதலிய தலங்களை வணங்கிச் சோழ நாட்டிலிருந்து தென் மேற்றிசை நோக்கிச் சென்று திருக் கொடுங்குன்றத்து இறைவனைப் பணிந்து மதுரை மூதூர் மருங்கணைந்தார். மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தர் வருகையை அறிந்து குலச்சிறையாரை ஊர் எல்லையில் அவரை வரவேற்குமாறு பணித்திருந்தார். மதுரை எல்லையை அடைந்த ஞானசம்பந்தரைக் குலச்சிறையார் வணங்கி வரவேற்றார். பிள்ளையார் சிவிகையிலிருந்து இறங்கி, மங்கையர்கரசியாருக்கும் அமைச்சருக்கும் திருவருளால் நன்மைகள் விளைய வேண்டும் என வாழ்த்தினார். குலச்சிறையாரும், சம்பந்தப் பெருமான் எழுந்தருளப் பெற்ற பேற்றினால் என்றைக்கும் திருவருள் உடையவராவோம் என்றார். தங்கள் நாட்டில் இனி திருநீற்றொளி விளங்குவது உறுதி எனவும் முகமனுரை கூறியவர் மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தரை வரவேற்கத் தன்னை அனுப்பியுள்ளதையும் தெரிவித்தவர், மதுரை மிக அண்மையிலுள்ளது என்றும் கூறினார். ஞானசம்பந்தர் மதுரையை நெருங்கிய நிலையில் `மதுரை இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது` எனக் கேட்க அடியவர்கள் கோபுரத்துடன் திருக்கோயிலைச் சுட்டிக்காட்டி `அதுவே திருவாலவாய்` எனக் கூறக்கேட்டு `மங்கையர்க்கரசியார் குலச்சிறையார் ஆகியோரின் பக்தி நலத்தைப் புகழ்ந்து திருப்பதிகம் அருளிச் செய்து கொண்டே ஆலவாய்த் திருக்கோயிலை அடைந்து குலச்சிறையாருடன் வலங்கொண்டு பணிந்து `நீலமாமிடற்று` எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடியருளினார்.

மங்கையர்க்கரசியார் ஆலவாய் இறைவர் திருக்கோயிலில் வழிபாடு முடித்தவர், கோயில் முன்றிலில் திருஞானசம்பந்தரைக் கண்டு அவர்தம் திருவடித் தாமரைகளில் வீழ்ந்து பணிந்தார். பிள்ளையார் தம் மலர்க்கரங்களால் அவரை எடுத்தபோது தாங்கள் செய்த தவப்பயனால் சம்பந்தப் பிள்ளையாரைத் தரிசிக்கும் பேறு பெற்றதாகக் கூறினார். ஞானசம்பந்தரும் புறச்சமயச் சூழலிலும் சிவனடித் தொண்டினை மறவாது போற்றும் அவர்களைக் காணும் பொருட்டே அங்கு வந்ததாகக் கூறி அவருக்கு விடைகொடுத்து அனுப்பியவர், திருக்கோயில் புறத்தில் சென்று குலச்சிறையார் காட்டிய திருமடம் ஒன்றில் அடியவர்களோடு எழுந்தருளியிருந்தவர்களுக்கு அரச மாதேவியாரின் கட்டளைப்படி குலச்சிறையார் நல்விருந்தளித்து உபசரித்தார்.

பகற்பொழுது கழிந்து இரவு வந்த நேரத்தில் ஞானசம்பந்தரோடு உடன் வந்த அடியவர்கள், அந்தணர்களின் வருகையை அறிந்த சமணர்கள் கண்டு முட்டு ஆயினர். மன்னனிடம் சென்று முறையிட்டவர்கள், தாங்கள் அறிந்த மந்திரத்தால் ஞானசம்பந்தர் தூங்குகின்ற மடத்திற்குத் தீவைக்கவும் அனுமதி பெற்றனர்.

ஆனால் சமணர் அனலை ஏவிய மந்திரம் ஞானசம்பந்தரின் அடியவர் ஓதும் ஐந்தெழுத்துக்கு முன்னால் பலிதம் ஆகவில்லை என்பதை அறிந்த சமணர்கள் ஞானசம்பந்தர் திருமடத்திற்குத் தீ வைத்தனர். அந்த மடத்தின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்தது. அடியவர்கள் சமணர்களின் வஞ்சனையை அறிந்து ஞானசம்பந்தரிடம் முறையிட்டனர். `இத்தீ அரசன் முறை செய்யாமையால் நேர்ந்தது என்பதால் இத்தீ அவனைச் சென்று பற்றுதலே முறை என்றாலும் மங்கையர்க்கரசியாரின் மங்கல நாணுக்கு ஊறு நேராதவாறு பையச் சென்று பாண்டியனைப் பற்றுவதாகட்டும் என்று கூறி `செய்யனே திரு` என்று பதிகம் ஓதி தீயை ஏவினார்.
பொழுது விடிந்து, ஞானசம்பந்தர் தங்கியிருந்த திருமடத்தில் சமணர்கள் தீவைத்த செய்தி மதுரை மாநகர் முழுதும் பரவியதைக் கேள்வியுற்ற மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் பேரச்சம் கொண்டனர். இத்தகைய கொடியவர்கள் வாழும் நாட்டில் ஞானசம்பந்தப் பெருமானை வரவழைத்த குற்றத்துக்குத் தாங்கள் இறப்பதே சரியான தண்டனையாக இருக்கும் என்று எண்ணினர். ஆனாலும் திருமடத்தில் இடப்பட்ட தீயால் எவருக்கும் எந்தத் தீங்கும் ஏற்படாததால் மன ஆறுதல் உற்றனர். இந்நிலையில் பாண்டி மன்னனை வெப்பு நோய் பற்றி வருத்தியதை அறிந்து அச்சமுற்று அரசனைக் காணச் சென்றனர். எவ்வளவு முயன்றும் மருத்துவர்களாலும் சமண முனிவர்களாலும் அந்த வெப்பு நோயைக் குணப்படுத்த இயலவில்லை.
அப்போது அமைச்சர் குலச்சிறையார் அரசனை அணுகி, ஞானசம்பந்தர் தங்கியிருந்த திருமடத்துக்குச் சமணர்கள் இட்ட தீயே நோயாகி வந்துள்ளதால் அவர் வந்தால் இந்நோய் தீரலாம்` என்றார். பாண்டிய மன்னனும் ஞானசம்பந்தர் என்ற திருநாமத்தைக் கேட்ட உடனேயே அவருடைய அயர்வு நீங்கியதை உணர்கிறார். அதனால் அவரை அழைக்கும்படியும் கூறினார். ஆனால் சமணர்கள் அரசனிடம் சென்று அவருடைய இந்த நோய் ஞானசம்பந்தரால் தீர்க்கப் பெற்றாலும் சமணர்களாகிய தங்களாலேயே தணிந்தது எனப் பொய்யுரைக்க வேண்டினர். மன்னன் அதற்கு ஒப்புக் கொள்ளாமல் நடுநிலை பிறழ முடியாது என்று மறுத்தான்.

 

குலச்சிறையாரும் அரசியாரும் ஞானசம்பந்தரை தரிசித்துத் திருமடத்திற்குத் தீயிடப்பட்ட செயலுக்கு மிகவும் வருந்தியதோடு, வெப்பு நோயால் வாடும் மன்னன் பற்றி எடுத்துரைத்து சம்பந்தப்பெருமான் எழுந்தருளி மன்னனின் நோயைக் குணப்படுத்த வேண்டும் என்று  விண்ணப்பித்துக் கொண்டனர். ஞானசம்பந்தர் சமணர்களோடு செய்யும் வாதில் வென்று `தென்னர் கோனுக்குத் திருநீறு அணிவிப்போம்` எனக் கூறிப் புறப்பட்டுத் திருக்கோயிலை அடைந்து `காட்டு மாவது உரித்து` என்ற திருப்பதிகத்தால் பாடிப்பரவினார்.  சமணர் மேற்கொள்ளும் வாதங்களிலும் வெற்றி நல்க `வேத வேள்வியை` என்ற திருப்பதிகம் பாடி இறைவனிடம் விடை பெற்று வெளிவந்து சிவிகையில் ஏறி மன்னனின் மாளிகையை அடைந்தார்.

தொடரும்

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 33

  63 நாயன்மார்கள் வரலாறு – 28 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் ஏதமில்வே ளாளர்பெரு மங்க லத்துள்     ஏயர்கோன் கலிக்காமர் ‘இறையை நேரே தூதுகொளும் அவ...