Saturday, June 13, 2026

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

 


63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்

 


தொண்டை நாடு சான்றோர் உடைத்து, எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித்த தொண்டை நாட்டில், நீர் வளமும் நில வளமும் மிக்க ஊரான திருவேற்காட்டில், வேளாண்மை குலத்தில் தலைமை சார்ந்த பெரியார் ஒருவர் வாழ்ந்தார். திருநீற்றினையே மெய்ப்பொருளாகக் கருதியவர், சிவனடியார்களுக்கு அன்புடன் திருவமுது படைத்து, அவர்களையே சிவமெனக் கருதித் துதித்துப் பின்னர் தாம் உண்ணும் நியதியைக் கொள்கையாகக் கொண்டவர்.

தொண்டைவள நாட்டுவளர் வேற்காட் டூர்வாழ்

    தொல்லுழவர் நற்சூதர் சூது வென்று

கொண்டபொருள் கொண்டன்பர்க்கு அமுத ளிக்குங்

    கொள்கையினார் திருக்குடந்தை குறுகி யுள்ளார்

விண்டிசைவு குழறுமொழி வீணர் மாள

    வெகுண்டிடலான் "மூர்க்கர்" என விளம்பும் நாமம்

எண்டிசையும் மிகவுடையார் அண்டர் போற்றும்                                                 

    ஏழுலகும் உடனாளும் இயல்பி னாரே

அடியார்கள் விரும்பும் அனைத்தையும் அவர்களுக்கு அன்புடன் அளித்து அமுதும் செய்வித்து வந்தார் மூர்க்க நாயனார். அடியவர்கள் திரண்டு வர ஆரம்பித்ததால் அவர் தம் உடைமைகளை விற்றும் திருத்தொண்டு செய்து வந்தார். இருப்பினும் மேலும் அத்தொண்டு செய்வதற்குப் போதிய பொருள் இன்மையால், முன்பு அவர் கற்ற சூதாட்டத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார். அதன் மூலம் பொருள் ஈட்டி அடியவர்களுக்கு அமுது படைக்க எண்ணினார். ஆனால் அவ்வூரில் சூதாடுவோர் இல்லாமையினால் அவ்வூரை அகன்று ஒவ்வொரு சிவத்தலங்களுக்கும் சென்று, அவ்வூரிலுள்ள சிவபெருமானை உள்ளம் உருகி வழிபட்டுப் பின் சூதாடி அதன் மூலம் வரும் பொருளினால் அடியவர்க்கு அமுது ஊட்டி வந்தார்.

பெற்றம் ஏறிப் பலிக்கு வரும்

  பெருமான் அமரும் தானங்கள்

உற்ற அன்பால் சென்று எய்தி

  உருகும் உள்ளத்தொடும் பணிந்து

கற்ற சூதால் நியதியாம்

  கடனும் முடித்தே கருதாரூர்

செற்ற சிலையார் திருக் குடந்தை

  அடைந்தார் வந்து சில நாளில்

பின்னர் கும்பகோணத்தை அடைந்து அங்கே சூதாடிப் பொருள் தேடி தம் கடமையை நிறைவேற்றியவர், சூதிலே முதல் ஆட்டத்தில் தோற்றவர் பின்னாட்டங்களிலே பல முறையும் வென்றவர் பொருள் பெற்றார். சூதிலே மறுத்தவர்களை மூர்க்கமாக உடைவாளை உருவிக் குத்தியதால், நற்சூதர் மூர்க்கர் என்னும் பெயர்களைப் பெற்றார். சூதினால் பெற்ற பொருளை அடியார்களுக்கு திருவமுது செய்தபின் கடைப்பந்தியில் அமர்ந்து தம் பசியாறினார்.

சூதினில் வென்று எய்தும் பொருள்

  துரிசு அற்ற நல் உணர்வில்

தீது அகல அமுது ஆக்குவார்

  கொள்ளத் தாம் தீண்டார்

காதலுடன் அடியார்கள் அமுது

  செயக் கடைப் பந்தி

ஏதம் இலா வகை தாமும் அமுது

  செய்து அங்கு இருக்கும் நாள்.

எம்பெருமானின் அடியார்களுக்கு அன்றாடம் அமுது படைத்தவர், அப்பெருமக்களின் அருளால் அனைத்துத் துன்பங்களும் நீங்கப் பெற்று இவ்வுலகை விட்டு இறையடி நிழல் சென்று சார்ந்தார்.

மூர்க்க நாயனார் புராணம் சொல்லும் கருத்து

உலகினிலென் செயலெல்லா முன்விதியே நீயே உண்ணின்றுஞ் செய்வித்துஞ் செய்கின்றாய் என்றும் நிலவுவதோர் செயலெனக்கின்றுன் செயலேயென்றும் நினைவார்க்கு வினைகளெலாம் நீங்குந்கானே" என்று சிவஞான சித்தியாரிலும்,

"எல்லா முன்னுடைமையே எல்லாமுன் அடிமையே எல்லாமுன்னுடைய செயலே" - "அறிந்தபடிநின்று சுகநான் அவ்வண்ணமாகாமை இவ்வண்ணமாயினேன் அதுவுநின் செயலதென்றே கல்லாத வறிஞனுக்குள்ளே யுணர்த்தினை" - "சந்ததமுமெனது செயல் நினது செயல் யானெனுந் தன்மை நினையன்றியில்லாத் தன்மையால் வேறலேன்" என தாயுமான சுவாமிகள் பாடலிலும்,

"என்செயலாவதி யாதொன்றுமில்லை இனித்தெய்வமே உன் செயலே என்றுணரப் பெற்றேன்" என பட்டினத்தடிகள் பாடலிலும் வருவன கொண்டு, செய்யும் செயல் யாவும் சிவனருளால் மட்டுமே நடைபெறுவதை அறியத் தருகின்றனர்.

ஐம்பெரும் பாவங்களில் ஒன்றான சூதாட்டத்தை இறையடியாரான ஒரு நாயனார் செய்வது தகுமோ என்ற வினா எழுவது இயல்புதானே. ஆனால் இந்நாயனார் அந்த சூதாட்டத்தை தம் மகிழ்ச்சிக்காகவோ அல்லது தம் குடும்பத்திற்காகவும், சுய நோக்கிற்காகவும் செய்திருந்தால் அது மாபெரும் தவறாகும். ஆனால் நாயனார் தாம் முன்பு கற்ற அந்த சூதாட்டத்தை தம் வாழ்வு வளம் பெற பயன்படுத்தவில்லை. தம் உடைமைகள் அனைத்தும் தீர்ந்து விட்ட பிறகு வேறு வழியின்றி அடியவர்களின் நலன் கருதி அந்த சூதாட்டத்தைத் தேர்ந்தெடுத்தார். அடியார்களுக்கு அமுது படைக்கவும், அவர்களுக்குத் தேவையான பொருட்களை அள்ளி வழங்க வேண்டும் என்ற தம் கொள்கை நிறைவேறவும் அவர் இறுதி வரை பாடுபட்டார். பொதுவாகவே அடியார்கள் தாம் கொண்ட கொள்கைகளை நிறைவேற்ற தம் உயிரையும் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். அதனால் வரும் பாவத்தை ஏற்கவும் அவர் தயாராக இருந்தார். அந்த வகையில் அவர் சூதாடி வந்த பொருளில் தனக்காகவோ, தன் குடும்பத்தினர்க்காகவோ ஏதும் எடுத்துக் கொள்ளவில்லை.

செய்தற்கரிய செயல்பலவுஞ் செய்து சிலர் எய்தற்கரியதனை எய்தினர்கள் ஐயோ நாம் செய்யாமை செய்து செயலறுக்கலாயிருக்கச் செய்யாமை செய்யாதவாறு" என்று திருக்களிற்றுப்படியார் கூற்றினாலும்,

"நடமாடுங் கோயில் நம்பர்க் கொன்றீயிற் படமாடுங் கோயிற் பகைவற் கதாமே" எனத் திருமூலர் திருவாய் மலர்ந்தருளியதாலும் அறிய முடிகிறது.

வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்       

மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்       

ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்

நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்       

நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்

அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்       

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                   

 

நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன்        

நாவினுக் கரையன் நாளைப்போ வானுங்

கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி        

கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள்

குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங்        

கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன்

பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும்        

பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே. 

சுந்தரர் தேவாரம்

 

திருச்சிற்றம்பலம்

 

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 35

 

63 நாயன்மார்கள் வரலாறு – 30 தண்டியடிகள் நாயனார்







சோழநாட்டுத் திருத்தலங்களில் முக்கியமான ஒன்றான திருவாரூர் எனும்

திருத்தலம் நால்வர் பெருமக்களால் பாடப்பெற்ற அருட்தலமாம்.

நம்பியாரூரர் வலது கண் பெற்ற திருத்தலம் என்பதோடு ஆரூரருக்கு

இறைவன் தோழமை கொடுத்த மிகத் தொன்மையான அருட்தலமும்

இதுதான். "நாட்டமிகு தண்டிக்கும் அடியேன்" என்று தண்டியடிகள்

நாயனாரை சுந்தரமூர்த்தி நாயனார் தம் திருத்தொண்டத் தொகையில்

புகழப்படும், சிவபெருமானின் மீது அதீத பக்தி கொண்டிருந்த தண்டியடிகள்

நாயனார், செங்குந்தர் மரபில் அவதரித்தவர். பிறந்தபோதே கண்காணார்,

புறக்கண்ணால் உலகத்தைக் காண இயலாத இவர் தம்முடைய அகக்கண்

கொண்டு இறைவனை வழிபட்டு வந்தார். கண் காண்பது சிவன்

மெய்த்தொண்டே என்று சிவன் கழல் போற்றித் திருத்தொண்டின் நெறி

நின்றவர் இவர்.

திருவாரூர் வருந்தண்டி யடிகள் காட்சி

சேராதார் குளந்தொட்டற்கு அமணர் சீறிக்

"குருடா! நீ முன்செவிடுங் கூடிற்று" என்று

குறித்தறியைப் பறித்தெறியக் கொதித்துத் தங்கண்

அருளாலே விழித்தெவரும் அந்தராக

அமணர் கலக் கம்பலகண் டவர்கள் பாழிப்

பருவான கற்பறித்தா விக்கரையுங் கட்டிப்

பரனருளால் அமருலகம் பற்றி னாரே.


தண்டியடிகள் நாயனார், அன்றாடம் தண்டியடிகள் பெருமான்

எழுந்தருளியுள்ள திருக்கோயிலுக்குச் சென்று தேவாசிரிய மண்டபத்தை

வணங்கி, ஆலயத்தை வலம் வந்து, ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து

மந்திரத்தை உச்சரித்து, சிவத்தொண்டு செய்து வாழ்ந்து வந்தார். திருவாரூர்க்

கோயிலின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கமலாலயம் எனும் திருக்குளம்,

பெருமானுக்குத் தீர்த்தக் குளமாகவும், அடியவர்கள் குளிப்பதற்கும்

உரியதாகும். அங்கு வாழ்ந்த சமணர்கள், ஒரு நாள் அங்கு பாழிகளும்,

பள்ளிகளும் அமைத்ததால் குளத்தின் இடமும் குறைந்தது. இதனை அறிந்த

தண்டியடிகள் அக்குளத்தினை தூர்வாரி அகலப்படுத்தவும் எண்ணினார்.

பிறவியிலேயே பார்வையற்றவராக இருந்தும் குளத்தினை சீரமைக்கும்

திருத்தொண்டினைச் செய்தவர். அதற்கு வழிகாட்டும் வகையில் குளத்தை

அகலமாக்கும் குழிவாயில் ஒரு தறியையும், குளக்கரையில் ஒரு தறியையும்

நட்டார். இரண்டையும் ஒரு கயிற்றால் இணைத்தார். குளத்தில் இறங்கி

மண்ணைத் தோண்டி ஒரு கூடையில் எடுத்தவர் அதைக் கரைமேட்டில்

கொட்டினார். தண்டியடிகள் நாயனாரின் இந்தத் தொண்டால், வெகு

விரைவிலேயே குளம் சுத்தமாகி, ஆழம் ஏற்பட்டு, தண்ணீர் பெருகத்

தொடங்கியது. தண்டியடிகள் நாயனாரின் செயலைக் கண்ட சமணர்கள்

பொறாமை கொண்டனர். இத்தொண்டினைக் கண்ட சமணர்கள், மண்ணைக்

கிளறினால் அதில் உள்ள சிற்றுயிர்கள் அழிந்து போகும் என்று கூறி

அதனைத் தடுத்தனர்.

சிவபெருமானுக்குத் தான் செய்யும் இப்பணியால், சிறு உயிரினங்களுக்கு

மட்டுமல்லாமல், அவர்களுக்கும் எவ்விதத் தீங்கும் நேராது என்றார். ஆனால்

அவர்கள் தாங்கள் கூறிய அறிவுரை காதில் விழவில்லையா, கண்தான்

இல்லை காதுமா செவிடு என்று கேட்டவர்களிடம்,

“சிவபெருமான் திருவடிகளன்றி வேறு ஒன்றையும் நான் காணவில்லை.

காண விரும்பவும் இல்லை. சிவபெருமானின் திருவருளால் என் கண்

காணப்பெற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்றார்.


அதற்கு சமணர்கள் தண்டியடிகளிடம், அவர் தம் கடவுள் அருளால் கண்

பெற்றால் தாங்கள் அந்த ஊரை விட்டேச் சென்று விடுவதாகக் கூறியவர்கள்,

அவர்தம் கரத்திலிருந்த மண் வெட்டியையும், கூடையையும் பிடுங்கி

எறிந்தனர்.

மிகவும் வருந்திய தண்டியடிகள் நாயனார், ஆரூர் பெருமானின் திருமுன்

நின்று, தனது துன்பத்தை நீக்கி அருள்புரிதல் வேண்டும், என்று கண்ணீர்

மல்க வேண்டியவர், அப்படியே தூங்கியும் போனார். அவரது கனவில்

தோன்றிய எம்பெருமான், “மனக்கவலையை விடு. உன் கண்கள் நாளை ஒளி

பெறும். உன் தொண்டினைத் தடுத்துப் பழித்துப் பேசியவர்கள் கண்களை

இழப்பார்கள்” என்று அருளினார். அன்று இரவே சோழ அரசனின் கனவிலும்

தோன்றி, “தண்டியடிகள் நானார் செய்யும் கமலாலய குளத் திருப்பணிக்கு

ஊறு விளைவிக்கும் சமணர்களின் வழக்கினை முடித்து வை.” என்று

கட்டளையிட்டார். சோழ அரசன் கண்விழித்து எழுந்து திருவாரூரை

அடைந்தவர், தண்டியடிகளைச் சந்தித்து நடந்தவைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர் சமணர்களை அழைத்து விசாரித்தார். சமணர்கள் இறையருளால்

தண்டியடிகளுக்கு கண்ணொளி கிடைத்து விட்டால் திருவாரூரைவிட்டு

வெளியே செல்வதாக ஒப்புக்கொண்டதையும் தெரிவித்தனர். மறுநாள்

இருத்தரப்பினரையும் அழைத்துக் கொண்டு குளத்திற்கு வந்தார் சோழ

அரசன். அடிகளாரைப் பார்த்து, அவரை கண் பெறும் நிகழ்வினைச் செய்து

காட்டும்படி கூறினார். தண்டியடிகள் நாயனார் இறைவனை மனத்தால்

வழிபட்டு திருவைந்தெழுத்தை ஓதியபடி குளத்தில் மூழ்கி எழுந்தபோது,

கண்கள் செம்மையாகக் காண ஒளிபெற்று எழுந்தார். வானவர்கள் பூமாரி

பொழிந்தனர். தண்டியடிகள் நாயனார் பார்வை பெற்ற அதே நேரம்

அவர்களைச் சுற்றியிருந்த சமணர்கள் கண்பார்வை பறி போனது.

தண்டியடிகள் நாயனாரின் இறை பக்தியை எண்ணி அனைவரும் பரவசம்

அடைந்தனர். சமணர்கள் அனைவரும் தங்கள் நிலையை எண்ணி

வருந்தியபடி ஊரை விட்டே புறப்பட்டு போய்விட்டனர்.


ஏய்ந்த வடிமை சிவனுக்கியா னென்னி லின்றென் கண்பெற்று

வேந்த னெதிரே திருவாரூர் விரவுஞ் சமணர் கண்ணிழப்பார்;

ஆய்ந்த பொருளுஞ் சிவபதமே யாவ" தென்றே யஞ்செழுத்தை

வாய்ந்த தொண்ட ரெடுத்தோதி மணிநீர் வாவி மூழ்கினார்.

தண்டியடிகள் நாயனார் தான் எண்ணியபடி, திருக்குளத்தை அரசரின்

உதவியுடன் பெரிதாக கட்டி முடித்தார். தண்டியடிகள் நாயனாரின்

அறப்பணியை அரசரும், மக்களும் கொண்டாடி பெருமிதம் கொண்டனர்.

அதன்பிறகு பல காலம் இறைவனுக்கு தொண்டு செய்து வந்த தண்டியடிகள்

நாயனார் சிவபெருமான் திருவடி நிழல் சார்ந்தார்.

தண்டியடிகள் நாயனார் புராணம் சொல்லும் கருத்து

"முகத்திற் கண் கொண்டு காண்கின்ற மூடர்காள் அகத்திற் கண்கொண்டு

காண்பதே ஆனந்தம்" திருமந்திரம்.

சிவன் கழல் அல்லது வேறு காணாத அக நோக்கு உடைமையன்றிப் புறத்தில்

வேறு எதையும் காணாதவர் என்ற குறிப்பினால் பிறந்தபோதே கண்காணார்

கண் காண்பது சிவன் மெய்த்தொண்டே என்று சிவன் கழல் போற்றித்

திருத்தொண்டின் நெறி நின்றார். அகக்கண் காட்சியாகிய ஞானக்கண்

காட்சிக்குச் சிவம் அல்லாது வேறு ஒன்றும் தோன்றாது. அகக் காட்சியில்

சிவதரிசனம் பெற்றோர் புறக்காட்சியாகிய மற்றெந்த உணர்வுகளும் முற்றாக

அற்றிருப்பர் என்பதற்கிணங்க இந்நாயனார் பிறப்பிலேயே புறக்கண்

அற்றவராய்ப் பிறந்துள்ளார் என்பதை சேக்கிழார் பெருமான்,

"தண்டியடிகள் திருவாரூர் பிறக்கும் பெருமைத் தவமுடையார்

அண்டவாணர் மறைபாட ஆடுஞ்செய்ய கழல்மனத்துக்

கொண்ட கருத்தி னகநோக்குங் குறிப்பே யன்றிப் புறநோக்குங்

கண்டவுணர்வு துறந்தார்போற் பிறந்த பொழுதே கண்காணார்"

என்பார்.


எனவே, “நாட்டம்மிகு தண்டிக்கும் (மூர்க்கர்க்கும்) அடியேன்" என்னும்

இத்திருத்தொண்டத்தொகை வாக்கு நிற்றல் அறியப்படும்.

"காணுங் கண்ணாற் காண்பது மெய்த் தொண்டேயான கருத்துடையார்" என

அடுத்துவரும் சேக்கிழார் திருவாக்காலும் அறியப்பெறும்.

"கந்தை மிகையாங் கருத்து" எனத் திருநாவுக்கரசு நாயனார் புராணத்திலும்

வருவனவற்றாலும் விளங்கப் பெறும்.

எவ்வகைப் பற்றுதலுமின்றி முழுமையாகச் சிவன் பேரிலும் சிவன் சார்பிலும்

பணி செய்து கிடப்பவர்க்கு சிவ புண்ணியம் எனப்பட்டு, அதன் தரமும்

தகுதியும் உயர்வாகும்.

"நானவனென் றெண்ணினர்க்கு நாடுமுளமுண் டாதல்

தானென ஒன்றின்றியே தானதுவாய் –

நானென வொன்று இல்லென்று தானே எனுமவரைத்

தன்னடி வைத்து இல்லென்று தானும் இறை"

எனச் சிவஞான போதத்திலும்,

"யாதே செய்து மியாமலோ நீ என்னில் ஆதே என்னும் அளவில்

பெருமையான்" எனத் தேவாரத்திலும்,

"சிவனுமிவன் செய்தியெல்லா மென்செய்தி என்றுஞ் செய்ததிவனுக்

கெனக்குச் செய்ததென்றும் பவமகல உடனாகி ஏன்று கொள்வன்" எனச்

சிவஞான சித்தியாரிலும் வருவனவற்றால் அறியப்படும்.

தண்டியடிகள் நாயனார் புறக்கண் இன்மையாகிய தமது மீப்பெரும்

குறைபாட்டின் இடையிலும், அகக்கண் கூர்மைமிகப் பெற்று, திருவாரூர்த்

திருக்கோயிலின் திருக்குளத்துக்கு அநீதியான முறையில் ஏற்பட்ட

அவலத்தை உற்றுணர்ந்து தாமே தனி ஒருவராய் நின்று திருக்குளத்

திருப்பணியாற்றிய சீர்மை சிவத்திருப்பணியைத் தம் இலட்சியமாகக்


கொண்டு சைவத்திருப்பணி வரலாற்றின் பொன் எழுத்துக்களாற் பொறித்துப்

போற்றப்படும் தகைமையுடைவரானார்.

திருச்சிற்றம்பலம்

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 34

 


63 நாயன்மார்கள் வரலாறு – 29 – திருமூல நாயனார்

 


நம்பிரான் திருமூலன்அடியார்க்கும் அடியேன், என்று ஆரூரர் தம் திருத்தொண்டத் தொகையில் போற்றிப் புகழும் திருமூல நாயனார், சைவ சமயத்தில் காலத்தால் முதிர்ந்தவர் மட்டுமின்றி கருத்தால், எண்ணத்தால், சிந்தையால் முதிர்ந்தவர் என்று அறியப்படும் ஆகச்சிறந்த சிவயோகி ஆவார். திருக்கையிலை மலையின் திருக்கோயிலுக்கு முதற்பெரும் நாயகரான திருநந்திதேவர், இந்திரன், மால், அயன் முதலிய தேவர்களுக்கு நெறி அருள்கின்ற திருவருள் பெற்றவர். இத்தகைய நந்தி தேவரின் திருவருள் பெற்ற சிவயோகிகளில் ஒருவர் என்ற பேர் பெற்றவர். திருமந்திரத்தில் திருமூலர் என்று குறிப்பிடப்படும் இவர் சுந்தரநாதன் அன்று அழைப்பட்டவர். 

"நந்தியருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே" 

திருமூலரின் பழைய நண்பராகிய, பொதிகையில் எழுந்தருளியுள்ளஅகத்திய மகாமுனிவருடன் சில நாட்கள் தங்கியிருக்க விரும்பியவர் கயிலையினின்றும் புறப்பட்டுத் தென் திசையை நோக்கி வந்தார். திருக்கேதாரம், நேபாளம், காசி, திருசைலம், திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சீபுரம், திருவதிகை, சிதம்பரம் என்னுந் தலங்களை வணங்கிக் கொண்டு திருவாவடுதுறையை அடைந்து, அங்கே ஆவடுதுறைப் பெருமானை வணங்கத் திட்டமிட்டார்.

ஒருநாள் அந்தத்தலத்தை அகன்று செல்லும்பொழுது, காவிரியாற்றங்கரையிலுள்ள வனத்தினில் பசுக்கூட்டங்கள் அழுது கொண்டிருப்பதைக் கண்டார். சாத்தனூரில் மூலன் எனும் இடையன் அவைகளை மேய்க்கின்றவன். அன்று அவன் அவ்விடத்தில், பசும்புல்வெளியில் இறந்து கிடந்தான். அப்பசுக் கூட்டங்கள் அவன் மீது உள்ள அன்பினால் அவனைச் சுற்றிச் சுற்றி வந்து கதறி அழுதன.

பசுக்களின் துன்பத்தைக் கண்ட சிவயோகியார், எம்பெருமானின் திருவருளால் ப்பசுக்களின் துயரத்தை நீக்க  வேண்டும் என்று முடிவெடுத்தார். தம் திருமேனியை ஒரு பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்துவிட்டு, மூலனின் உடலிலே தன் உயிரைப் புகுத்தினார். பசுக்களின் துயரத்தைப் போக்குவதற்காக திருமூலராய் எழுந்தார். மூலனை மோந்த பசுக்கள் அளவற்ற மகிழ்ச்சி கொண்டன. திருமூலநாயனார் அது கண்டு திருவுளமகிழ்ந்து, அவைகள் மேயுமிடத்திற் சென்று மேய்த்தார். மகிழ்ந்து, துள்ளிக் குதித்து, மேய்ந்திருந்த பசுக்கள் அந்தி நேரத்தில், பசுக்கள் தத்தம் கன்றுகளை நினைந்து, தாமே முன் பைய நடந்து, சாத்தனூரை அடைந்தன. சிவயோகியார் அப்பசுக்களுக்குப் பின்சென்று, அவைகளெல்லாம் தத்தமது வீடுகளுக்குச் செல்லத் தாம் வெளியிலே நின்றார்.

மூலனுடைய மனைவி தன் கணவனைத் தேடி வந்தவள், சிவயோகியார் நின்ற இடத்தை அடைந்து, அவருடைய திருமேனியைத் தீண்ட, அவர் விலகி நின்றார். திருமூலநாயனார், னக்கும் மூலனின் மனைவிக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று மறுத்து, ஒரு பொது மடத்தினுள்ளே புகுந்து, சிவயோகத்தில் இருந்தார். மனைவி அன்று இரவு முழுவதும் உறக்கமின்றி கவலை கொண்டிருந்தவள் றுநாள் அதனை ஊர்ப்பெரியவர்களிடம் சென்று முறையிட்டாள். தன் கணவனுக்கு சித்தம் பேதலித்துவிட்டதாகவும் கூறினாள். திருமூலனைக் கூர்ந்து கவனித்த அப்பெரியவர்கள் அவர் சிறந்த ஞானியாகத் தெரிவதாகவும், சிவயோகியாராகத் தெரிவதாகவும் கூறி, அவரை இனி அவள் என்றும் சேர முடியாது என்று புரிய வைத்து திரும்ப அழைத்துச் சென்றனர்.

சிவயோகத்தில் இருந்த திருமூல நாயனார் எழுந்து, பசுக்கள் வந்த வழியே சென்று தாம் மறைத்து வைத்திருந்த தம் உடலைக் காணாது, மெய்ஞ்ஞானத்தையுடைய சிந்தையினால் ஆராய்ந்து, சிவபெருமான் அருள் செய்த ஆகமத்தினுடைய பொருள் அனைத்தும் தமிழ் ஆக்க எம்பெருமான் திருவருள் இவ்வுடலைத் தந்தது என்று உணர்ந்தார்.

"தண்ணிலவார் சடையார்தாம் தந்த ஆகமப் பொருளை
மண்ணின்மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ்வகுப்பக்
கண்ணிய அத்திருவருளால் அவ்வுடலைக் கரப்பிக்க
எண்ணிறைந்த உணர்வுடையார் ஈசர் அருள் எனவுணர்ந்தார்" 

 திருமூலரும் எம்பெருமானின் திருவருளைத் துதித்து, திருவாவடுதுறையை அடைந்து, அங்குள்ள சிவாலயத்தின் சிவபெருமானை வணங்கி, அதற்கு மேற்குப் புறத்தில் உள்ள அரசின் கீழ் அமர்ந்து சிவயோகத்தில் நிலைத்திருந்தார். மூவாயிரம் ஆண்டுகள் அங்ஙனம் இருந்து, ஒவ்வொரு ஆண்டிற்கு ஒவ்வொரு திருப்பாடலாக மூவாயிரம் திருப்பாடலால் சைவாகமங்களில் உணர்த்தப்பட்ட ஞானம் யோகம் கிரியை சரியை என்னும் நான்கு பாதங்களையும் பேசுகின்ற திருமந்திரம் எனும் தமிழ்நூலைப் பாடியருளி, பின் திருக்கையிலையை அடைந்தார்.

முன்னிய அப் பொருள் மாலைத்

  தமிழ் மூவாயிரம் சாத்தி

மன்னிய மூவாயிரத்து ஆண்டு

  இப்புவிமேல் மகிழ்ந்து இருந்து

சென்னி மதி அணிந்தார் தம்

  திருவருளால் திருக் கயிலை

தன்னில் அணைந்து ஒரு காலும்

  பிரியாமைத் தாள் அடைந்தார். 

 

திருமூலதேவ நாயனார் புராணம் சொல்லும் கருத்து

 

"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே"

திருமூலர் அருளிய மூவாயிரம் பாடல்களும் திருமந்திரம் என்ற நூலாகப் பன்னிரெண்டு திருமுறைகளில் பத்தாவது திருமுறையாக விளங்குவது. திருமூலர், இறைவன் தம்மைப் படைத்தது இறைவனுடைய தன்மைகளைத் தமிழில் அழகுற எடுத்தியம்புவதற்காகவே என்றார். திருமூலர் திருமந்திரம் ஆகமப் பொருளையெல்லாம் திரட்டி ஒன்பது தந்திரங்களாக அருளிச் செய்தார்.

ஞானமுதல் நான்கும் மலர் நற்றிரு மந்திரமாலை" என்ற திருத்தொண்டர்புராண வசனமாகிய புறச்சான்றினாலும் அது வலுவுறும்.

 

"பக்தன் சரியை கிரியை பயில்வுற்றுச்

சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில்

உய்த்தநெறியுற் றுணர்கின்ற ஞானத்தாற்

சித்தங் குருவருளாற் சிவமாகுமே"

சிவப்பேறடைதற்குரிய நெறிகளான சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கும் சைவநாற்பாதங்களாம். நான்காவதாகிய ஞானம் சிவப்பேற்றை நேரே அருள்வதாக, ஏனைய மூன்றும் படிமுறைக்கிரமத்தில் அதற்குத் தகுதியளிப்பன. ஞானம் என்பது சிவத்தில் லயித்த உயிர் சிவத்தையுணர்தலாகிய மெய்யுணர்வு விளக்கமுற்றிருப்பதாகவும் அமையும்.

திருவாவடுதுறையில் அரசின் கீழ் திருமூலர் யோகத்தில் இருந்ததை ,

சேர்ந்திருந்தேன் சிவ மங்கை தன் பங்கனைச்
சேர்ந்திருந்தேன் சிவன் ஆவடு தண்டுறை
சேர்ந்திருந்தேன் சிவ போதியின் நீழலில்
சேர்ந்திருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே 

என்று குறிப்பிடுகின்றார்.

சைவ சித்தாந்த சாத்திரங்களுக்கு முன்னோடியாக விளங்கும் திருமந்திரம், ஒன்றே குலம் ஒருவனே தேவன்என்று அனைவராலும் பயன்படுத்தப்படுகின்ற சொற்றொடரை அருளியவர் திருமூலர். சாத்திரங்களின் சாரத்தை மிக எளிமையாகவும், முழுமையாகவும் உரைத்தவர் திருமூலர். ஆகமங்கள் 28 தமிழாகமம் சொல்ல வந்த திருமூலர் வரலாறு 28 பாடல்களில் அமைந்துள்ளதும் போற்றத்தக்கது.

திருச்சிற்றம்பலம்.

 

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...