Friday, October 20, 2017

நாவாய்






உயிர் எல்லை நோக்கிய பயணம்
சக பயணியர் வரலாம் போகலாம்
புரிந்த மொழியில் புரியாத கதைபல பேசி
பரந்த உலகில் இறக்கை கட்டிப் பறக்கும் பாவலர்கள்
பண்பாளர், பாசப்பட்சிகள், நேசக்கனல்கள்
என்றெவரும் பட்டுக்கம்பளத்தில் பாதம்பதிக்கலாம்
பகடைகள், பச்சோந்திகள், பலிகெடாக்கள்
என்றெவரும் முகநட்பொடு பயணிக்கலாம்  படகில்
சென்றுசேரும் இலக்கு எவர்க்கும் ஒன்றுதான்
நிதானமும் பொறுமையும் நிறைவாய் இருந்தால்
எதிர்நீச்சல் போடலாம் வாழும் ஆசையிருந்தால்
அமைதியாக அடங்கிப்போகலாம் வீழநினைத்தால்
சுருதிமீட்டி சுகம் காணலாம் அல்லது
குருதி கொதிக்க நொறுங்கிப் போகலாம்
இறுதியில் போகும் இடம் ஒன்றுதான் 
சடுதியில்போக நினைத்தால் சறுக்கலை சந்திக்கலாம்
விட்டுவிலக நினைத்தால் மூழ்கிப்போகலாம்
கட்டுவிலக நினைத்தால் கடந்துபோகலாம்
பட்டுத்தெளிய நினைத்தால் பண்ணிசைக்கலாம்
சூரைக்காற்று வீசினாலும் சுதாரித்தால் பிழைக்கலாம்
வாடைக்காற்றில் வாட்டமின்றி வண்ணம் காணலாம்
கணக்கும் வழக்கும் பிணக்கும் துரோகமும்
கருப்பும் வெளுப்பும் படகிற்கு பொருட்டல்ல
சொர்கம் சுமந்தபடி கனவில் மிதந்துச் செல்லலாம்
நரகம் அஞ்சியே துஞ்சாமல் கடந்து செல்லலாம்
துடுப்பு போடுபவனையும் துளையிடுபவனையும் 
கணித்து துணிந்துவிட்டால் ஏற்றமும் இறக்கமும்
பொருட்டல்ல .. இலக்கை அடைய தடையுமல்ல!