Showing posts with label தொடர்கதை.-வல்லமை இதழ் வெளியீடு.. Show all posts
Showing posts with label தொடர்கதை.-வல்லமை இதழ் வெளியீடு.. Show all posts

Tuesday, February 28, 2012

வெண்ணிலவில் ஒரு கருமுகில்!(30)

”புற்று நோய் என்பது வெறும் ஒரு வார்த்தைதான் வாழ்க்கையின் முற்றுப் புள்ளி அல்ல “ – ஜான் டைமண்ட்.

பச்சைப்பசேல் என்ற துளிர் இலைகள்! பூவும்,பிஞ்சுமாக நிறைமாத கர்பிணியாக மாமரம்! இதமான காலைத்தென்றலுடன், இனிமையாக மிதந்து வரும் அதன் மெல்லிய மணம். காய்க்கும் பருவமில்லாத இந்த, பனிக்காலத்தில் கூட இயற்கை அன்னையின் இன்ப ஊற்றாக அதிசயமான இந்த மரம்.. வருடம் முழுவதும் காய்க்கும் மரமாம். வாட்ச்மேன் ஐயா இந்த மரத்தைப் பற்றி ஒரு பெரிய கதையே சொல்லுவார். தப்பி வந்த தப்புச் செடியாம். அதனால்தான் இப்படி காய்க்கிறதாம்… அதில் காய் பறிக்கும் விதம் அதைவிட அழகு. கணவன் மரத்தின் மீது ஏறி, திரண்ட காய்களைப் பறித்துப் போட, அதை மனைவி கீழே நின்று கொண்டு, அக்காய்கள் தரையில் விழுந்து அடிபடாதவாறு ஒரு கோணிப்பையினுள் தம் இரு கைகளையும் நுழைத்துக் கொண்டு, அதை இயன்றவரை அகலமாக்கிக் கொண்டு வெகு லாவகமாக அந்தக் காய்களைப் பிடித்து, அடி படாமல் சர்வ ஜாக்கிரதையாக இன்னொரு பையில் மெதுவாக, போட்டுக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நேரம் போனதே தெரியவில்லை. மருத்துவமனை அறையின் சன்னல் வழியாக பார்த்து இரசித்துக் கொண்டிருந்ததில் தன்னையே மறந்த நிலை…

”வந்தனா.. என்னம்மா செய்கிறாய்?” முதுகில் தீண்டிய மெல்லிய ஸ்பரிசத்தில் மெதுவாகத் திரும்பியவள், கணவனின் சோர்ந்த முகம் கண்டு பதறியவளாக,

“ என்ன ஆச்சுங்க…. ஏன் இப்படி இவ்வளவு காலையில வந்திருக்கீங்க..?”

“ஒன்னுமில்லம்மா… ஏதோ கெட்ட கனவு வந்து இரவு பாதியில் முழிப்பு வந்து, பிறகு தூக்கமே இல்லை. அதான் சீக்கிரமே குளிச்சிட்டு வந்தேன். உன் கூட கொஞ்ச நேரம் இருந்துட்டு ஆபீஸ் போலாமேன்னுதான்…..”

“ தேவையில்லாமல் மனதை குழப்பிக் கொள்ளாதீங்க… விதிப்படிதான் எல்லாமே நடக்கும். நான் எல்லாத்துக்கும் தயாராத்தான் இருக்கேன் “

வந்தனாவின் முகத்தில் இருந்த அந்த அமைதியும், உறுதியான பேச்சும், சலனமற்ற பார்வையும் அவனுக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. ரம்யாவிடம் அவள் என்ன பேசியிருப்பாள் என்பதை கற்பனை செய்ய முடிந்த தன்னால் அதை வந்தனாவிடம் கேட்பதற்கு தயக்கமாக இருந்தது. என்னமோ பேசிவிட்டுப் போகட்டும் என்ற சலிப்பும் கூடவே வந்தது,, அன்று மாலை ஐந்து மணிக்கு மருத்துவர் தன்னை வந்து சந்திக்கச் சொன்னதை நினைத்தும் கொஞ்சம் டென்சன் இருப்பதும் உண்மை. வந்தனாவின் உடல்நிலை குறித்து என்ன சொல்லப் போகிறார்கள் என்று நினைத்து அச்சமாகவும் இருந்தது. அதே சமயம் வந்தனாவின் உறுதியான மனநிலையைப் பார்த்து கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது. தன் தாயைப் பார்த்து பழகிய அவளுக்கு, நோயின் தன்மையை ஓரளவிற்குப் புரிந்து கொள்ள முடிந்தாலும், அந்த மருந்துகளின் பின் விளைவுகள் இந்த தேவைதையின் அழகையும் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளை கொண்டுவிடும் என்பதையும் அறிந்திருந்த போதும் ஆண்டவன் கொடுத்த வ்ரப்பிரசாதமாக அந்த மன உறுதியும், அதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் பக்குவமும், மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்ததும் உண்மை.

அவளுக்குத் தேவையான ஒரு சில பணிவிடைகளைச் செய்து விட்டு, வெளியில் சற்று காலாற நடந்து வர உடன் சென்றான். மாலை மருத்துவரிடம் , வீட்டிற்கு அழைத்துப் போவதைப்பற்றிக் கேட்க வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டான். மற்றவர்களைப் போல தான் ஒரு நோயாளி என்ற தாழ்வு மனப்பானமை துளியும் இல்லாததுதான் அவளுடைய தனித்தன்மையே என்று அவளுடைய டாக்டர் அடிக்கடி அவளைப்பற்றி புகழ்ந்து சொல்வதும் நினைவிற்கு வந்தது அவனுக்கு. எத்துனை நல்ல குணங்கள் இவளுக்குள் என்று மேலும் மேலும் ஆச்சரியம்தான் வந்தது. இருவரும் மௌன மொழியில் ஒருவரைப் பற்றி ஒருவர் பேசிக் கொண்டே நடந்து கொண்டிருந்தனர். சொற்ப நேரமே நடக்க முடிந்தது அவளுக்கு. அதற்குள் லேசாக மூச்சு வாங்க ஆரம்பிக்க, திரும்ப ரூமிற்குப் போகலாம் என்று கூறியதால் அவனும் ஒன்றும் பேசாமல் பின்னாலேயே சென்றான்.

அலுவலகம் செல்ல நேரமானபடியால், மாலை டாக்டரைப் பார்க்க சீக்கிரம் வரவேண்டுமே என்று நினைத்துக் கொண்டே கிளம்பினான். .. மாலை மருத்துவரின் அறையின் முன் அமர்ந்திருக்கும் போது பல்வேறு எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. அடுத்து தன் பெயர் சொல்லி செவிலியர் அழைத்தது கூட தெரியாமல் யோசனையில் ஆழ்ந்திருந்தவனை அருகில் வந்து தட்டி அழைத்த பின்புதான் சுயநினைவு வந்தவனாக வேகமாக எழுந்து நடந்தான்.

இந்த இளம் வயதில் வந்தனாவிற்கு ஏன் இத்தனை கொடுமை என்று கண்கள் கலங்க கேட்டவனைப் பார்த்து மருத்துவரும் மனம் க்லங்கியதோடு, அதற்கான காரணமாக, இது பரம்பரையாக வந்த மரபணுப் பிறழ்வினால் வந்தது அதாவது இவர் தாய்க்கு இருந்த காரணத்தினாலேயே, வந்தனாவிற்கு முதலில் கருப்பையில் வந்த இந்த கொடிய புற்று, ஒருவ்ரும் எதிர்பார்க்காத நேரத்தில் இன்று மார்பகத்தையும் தாக்கி, சிகிச்சை எடுக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

”மேடம், வந்தனாவின் நோய் எந்த அளவில் இருக்கிறது என்று கேட்கும் போதே கண்கள் கலங்கி, தொண்டை அடைக்க அடுத்து பேச நா எழவில்லை ரிஷிக்கு.

”பொதுவாக 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பகப் புற்று நோய்க்கான பரிசோதனைகளைச் செய்து கொள்வது, ப்ரோபலிட்டிக் மாஸ்டெக்டோமிஸ் போன்ற தற்காப்பு பரிசோதனைகளைச் செய்து கொள்வது நல்லது. ஆனால் வந்தனாவிற்கு இந்த இளம் வயதிலேயே வந்தது மரபணுப் பிறழ்வினால் ஏற்பட்ட நோய். மார்பில் சதை முடிச்சு போல் இருந்ததை அவர் கண்டுபிடித்து சரியான நேரத்தில் வந்து சொன்னதால் எந்த ஆபத்தும் இல்லாமல் ஒரு சின்ன ஆபரேசன் மூலம் சரி செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தால் போதும். கவலை வேண்டாம் மிஸ்டர் ரிஷி”, என்று சொன்னது சற்று ஆறுதலளித்தாலும், மேற்கொண்டு செய்யப்போகும் வைத்திய முறைகளினால் உடற்சோர்வு அதிகம் ஏற்படும் என்று அவன் கேள்விப்பட்டிருந்ததால் வந்தனா அதைத்தாங்க வேண்டுமே என்ற கவலையும் உடன் வந்தது.

“மிஸ்டர் ரிஷி, நீங்கள் நினைப்பது புரிகிறது. பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. இப்போது மருத்துவம் மிகவும் முன்னேறியிருக்கிறது. முன்பு போல பாதிக்கப்பட்ட மார்பகத்தை முழுவதும் நீக்கவேண்டியத் தேவை இல்லை. நோயின் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டுள்ளதால் மார்பகத்தைப் பாதுகாக்கும் அறுவை சிகிச்சை – லம்பெக்டமி, செய்து உள்ளோம். பேரைக் கேட்டு பயப்படாதீங்க ரிஷி. இது மார்பகத்தை முழுவதும் நீக்காத அறுவை சிகிச்சை முறை. இதையெல்லாம் அன்றே அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன்பே உங்களிடம் விளக்கமாகக் கூறியிருந்தேன். ஆனால் அன்றிருந்த மன நிலையில் உங்களால் அதைச் சரியாக புரிந்து கொண்டிருக்க முடியாது என்பதால்தான் திரும்பவும் விளக்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அதே இடத்தில் திரும்ப நோய் வராமல் தடுக்க, அல்லது வாய்ப்பைக் குறைக்க கதிர்வீச்சு சிகிச்சை (radiotherapy) தேவைப்படும். அறுவை சிகிச்சை முடிந்த பின்பு திசுக்களை திரும்பவும் பரிசோதனைக்கு அனுப்புவோம். பெறப்படும் முடிவுகளின் அடிப்படையில் கீமோதெரபி, ஹார்மோன் தெரபி மற்றும் சில மருந்துகள் தேவைப்படலாம். இவை ஊசி மூலமோ வாய் வழியாகவோ, அளிக்கப்படும். நோயின் நிலை, நோயாளியின் உடல்நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவரவர்க்கு ஏற்ப இந்த ட்ரீட்மெண்ட் செய்யப்படும். தவிர உங்களுடைய ஒத்துழைப்பு மிக முக்கியம். நோய் வராமல் இருப்பதையே எல்லோரும் மனதார விரும்புகிறோம். ஆனால் நோய் வந்த பின்பு அதனைச் சம்பந்தப்பட்டவர்கள் துணிச்சலுடன் எதிர்கொள்வது என்பதே மிக உன்னதமான நிலை. அந்த வகையில், தங்களைப் போன்று முழுமையாகப் புரிந்து கொண்ட ஒரு கணவராக இருப்பது வந்தனா செய்த புண்ணியம். நல்லதே நடக்கும். அமைதியாக இருங்கள். உங்கள் பொறுமையும், அமைதியும் சேர்ந்ததுதான் அவருடைய வைத்தியம். அதை மனதில் கொண்டு அவரிடம் அதற்கேற்றவாரு நடந்து கொள்ளுங்கள்”. என்று நம்பிக்கையூட்டும் விதமாக மருத்துவர் பேசினார்.

ஓரளவிற்கு நம்பிக்கையும், தெம்பும் வர ரிஷி, தன் முகத்தில் தெரிந்த சிறு சலனத்தையும் தூக்கி எறிந்துவிட்டு, உற்சாகமான முகமூடியை அணிந்து கொண்டு வெளியே வந்தான். டாக்டர் கூறியபடி வந்தனாவிற்கு தைரியம் சொல்லி அவளுடைய மேற்கொண்ட ட்ரீட்மெண்டிற்கு நன்கு ஒத்துழைக்கச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தான். ஆனால் அவளிடம் சென்று பேசிய போதுதான் தெரிந்தது, தான் நினைத்ததற்கும் அவளுடைய நடவடிக்கைக்கும் துளியும் சம்பந்தமில்லை என்று….

ஆம், வந்தனா ஒரு மருத்துவரின் எதிர்ப்பார்ப்பிற்கும் மேலான நேர்மறையான எண்ணங்கள் கொண்ட ஒரு அற்புதமான பிறவி என்றாலும் அது மிகையாகாது.தான் ஒரு நோயாளியான தன்னைப் பார்த்து எல்லோரும் பரிதாபப்படுவார்கள் என்கிற தாழ்வு மனப்பான்மை துளியும் இல்லாத ஒரு முன்மாதிரிப் பெண். தாம் வாழ்ப்போகும் ,ஒவ்வொரு நிமிடத்தையும், மகிழ்ச்சியாக வ்ரவேற்று, அடுத்தவரையும் உற்சாகப்படுத்தி வாழ வேண்டும் என்ற உயரிய கொள்கை உடையவள் என்பது தெளிவாகப் புரிந்தது. இந்த 28 வயதில் இத்துனை வேதனைகளுக்குப் பிறகும் அவள் பெற்றுள்ள பக்குவம் சொல்லில் விளங்க வைக்க இயலாத ஒன்று. ஒரு முறை சிகிச்சை மேற்கொண்டு , மீண்டும் இப்போது அதே நோய் தாக்கிய நிலையில் எந்தப் பெண்ணாலும் இயலாத ஒரு காரியமாக, பதட்டம், குழப்பம் இதெல்லாம் ஒதுக்கிவிட்டு, பச்சாதாபம், இரக்கம் இதில் எதையுமே துளியும் எதிர்பார்க்காமல், யதார்த்த நிலையை அப்படியே ஏற்றுக் கொள்ளும் அவளுடைய பக்குவம் கண்டு, ஆச்சரியப்படாமல் இருக்க இயலவில்லை ரிஷிக்கு என்பதே உண்மை! ஓர் எல்லையில் பாதிக்கப்பட்டவர்கள் கூட எந்த நிலையிலும் வாழ்க்கையை இரசிக்கும்படியான ஒரு ஓவியமாக அமைத்துக் கொள்ளலாம் என்பதற்கு ஒரு நல்ல முன் உதாரணம் வந்தனா!

அவந்திகா வரும் நேரம் நெருங்க, நெருங்க மனதில் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது மாறனுக்கு. எப்படி சமாளிக்கப் போகிறோம் என்றுதான் தெரியவில்லை. அம்மா சொன்ன விசயம், கொஞ்சம் உறுத்தலாகத்தான் இருந்தது. சில நம்பிக்கைகள் பல அற்புத்க் கனவுகளையும், கற்பனைகளையும் உருத்தெரியாமல் அழிக்க வல்லது. அந்த வகையில் அம்மா சொன்ன ஜாதகம் விசயம் சற்றே உறுத்திக் கொண்டிருந்தாலும், அவந்திகாவைப் பார்க்கப் போகிறோம் என்ற இனிய உணர்வு மட்டும் உற்சாகமளிக்காமலில்லை. இதுதானே காதலின் பலமும், பலவீனமும்! பல நேரங்களில் அந்த அசுரபலம், பலவீனத்தை எளிதாக வென்றுவிடத்தான் செய்கின்றன….

பொங்கல் விழாவும், புத்தாண்டு விழாவும் சேர்த்துக் கொண்டாடும் விதமாக நண்பர்கள் குழுமி இருந்தனர். முடிந்தவர்கள் அவரவர் வீட்டிலிருந்து ஒவ்வொரு ஐட்டம் சமைத்து, கொண்டு வந்திருந்தார்கள். பேச்சிலர் ஆண்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. முடிந்தவர்கள் மட்டும் செய்யலாம் என்று. மாறனுக்கு ஏனோ அன்று தானும் ஏதாவது சமையல் செய்து அனைவரையும் குறிப்பாக அவந்திகாவை அசத்த வேண்டும் என்ற ஆவலில்,தனக்குத் தெரிந்த சக்கரைப் பொங்கலையே முயற்சி செய்வது என்ற முடிவுடன், மளமளவென காரியத்தில் இறங்கினான். நல்ல வேளையாக அனைத்துப் பொருட்களும் வீட்டில் இருந்ததால் வேலை எளிதாக முடிந்தது… தன் அம்மாவிடம் சென்ற முறை எழுதி வாங்கி வந்த அக்காரஅடிசல் ரெசிப்பி இன்றும் கைகொடுக்க,சுவையும் பதமும் இனிமையாக அமைந்தது குறித்து அவன் மனம் துள்ள ஆரம்பித்தது. நல்ல சகுணமாகவும் மனதில் பட்டது. தன் கையால் சமைத்த உணவை தம் இளவரசி சுவைக்கப் போகும் சந்தர்ப்பம் எண்ணிக் காத்திருந்தான்.

தான் எதிர்பார்த்ததைவிட, மிகத்தெளிவான சிந்தனையுடன் இருந்தாள் அவந்திகா. ரம்யாவின் முயற்சி குறித்தும்,வெகு விரைவில் தன்னுடைய தந்தையை இது விசயமாக சந்திக்கப் போவதையும் சொல்லலாமா என்று யோசித்தான். அவள் பார்வையிலும், நடவடிக்கையிலும் பல மாற்றங்கள் தெரிந்தாலும், நேரிடையாக அவளுடன் பேசிவிடுவதே நல்லது என்று முடிவு செய்திருந்தான். ரம்யா அவள் பெற்றோரிடம் பேசுவதற்கு முன்பாக அவந்திகாவிற்கு விவரம் தெரிந்தால் தேவையில்லாத குழப்பத்திற்கு இடம் இருக்காது என்று அதற்கான தக்க தருணமும் அன்று அமையும் என்று நினைத்திருந்தான். அம்மா ஜாதகம் பற்றி சொன்ன விசயம் சிறு குழப்பம் ஏற்படுத்தினாலும், இறுதியாக மனப்பொருத்தம் இருந்தால் இந்த ஜாதகப் பொருத்தம் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்ற வார்த்தை கொடுத்த நம்பிக்கையே அவன் கற்பனையை மேலும் வளர்க்க உதவியாய் இருந்தது.

தான் எதிர்பார்த்ததைவிட,இவ்வளவு எளிதாக சந்தர்ப்பம் அமையும் என்று அவன் எண்ணவில்லைதான்.. சில நேரங்களில் நல்லது நடக்க வேண்டுமென்ற அருள் இருந்தால் சமயமும், சந்தர்ப்பமும் தானாக வாய்ப்பதில் ஆச்சரியமில்லையே….

தொடரும்.

படத்திற்கு நன்றி:
http://shari-chocolatebox.blogspot.in/2010_06_01_archive.html

http://www.ifood.tv/blog/easy-guide-on-how-to-host-a-potluck-party

Wednesday, January 18, 2012

வெண்ணிலவில் ஒரு கருமுகில்!(29)

எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ, அவரையே நான் மகாத்மா என்பேன்சுவாமி விவேகானந்தர்.
தந்தையிடம் மிக எளிதாக தன் நிலையைப் புரிய வைத்துவிட முடியும் என்ற தன்னுடைய நினைப்பு சரியில்லையோ என்று தோன்றியது அவந்திகாவிற்கு. தன் மகளை ஜோசியம், ஜாதகம் என்ற காரணம் காட்டி நிராகரித்த ஒரு குடும்பத்தில் திரும்ப வலிய சென்று , தன் பெண்னைக் கொடுக்க எந்த தந்தைக்குத்தான் மனம் வரும்? அந்த வகையில் அவந்திகாவின் தந்தை தன் மகளுக்காக , அவளுடைய மகிழ்ச்சிக்காக, விரும்பிய வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் உரிமை கொடுப்பதற்காக தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டதோடு, மாறனை மனதார ஏற்றுக் கொள்ளவும் செய்ததும் உணர முடிந்தது அவளால்……
புத்தாண்டு வருகிறதென்றால் உடன் ஒரு பரபரப்பும் தொற்றிக் கொள்ளும். செல்லப்போகும் ஆண்டின் பல்சுவை நினைவலைகளை அசைபோடுவதே தனி சுகம் என்றாலும், ஒரு வயதும் கூடப்போவதும் சிறு கலக்கம் ஏற்படுத்துவதும் உண்மைதானே. நாட்கள், வாரங்கள், மாதங்கள் என்று உருண்டோடி, மளமளவென மறு வருடம் ஓடி வருவதும் வாடிக்கையாகி விடுகிறது. தன் சிநேகிதிகளில் பெரும்பாலோனோர், வாழ்க்கையில் செட்டிலாகி குழந்தை குட்டியுடன் இருக்கும் போதும் இவ்வளவு நாட்கள் திருமண ஆசை என்பது பெரிதாக ஏதும் இல்லாவிட்டாலும் இப்போது ஏனோ அந்த ஆசை முளைவிட்டு, செடியாகிக் கொண்டிருந்தாலும், அதற்குக் காரணமானவன் மட்டும் சம்பந்தமில்லாதவன் போல சட்டை செய்யாமல் இருப்பது அவந்திகாவிற்கு சிறு கலக்கமேற்படுத்தினாலும், இப்புத்தாண்டில் அனைத்தும் நன்றாகவே நடக்கும் என்ற நம்பிக்கை வேரும் துளிர்விடத்தான் செய்தது. ‘ தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற அந்தப் பூரிப்பில் முகம் மலரவும் செய்தது. அதை வெளிப்படுத்தும் விதமாக அழகானதொரு பரிசுப் பொருளும் தேடிப்பிடித்து வாங்கி வைத்திருந்தாள்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எப்படியும் நண்பர்கள் அழைப்பார்கள் . அன்று எப்படியாவது மாறனிடம் வெளிப்படையாகப் பேச வேண்டும் எனவும் முடிவெடுத்திருந்தாள்.
மாறன் எப்படியும் வந்து தன்னை அழைத்துப் போவான், அந்த நேரத்தில் மனதில் இருப்பவைகளை பட்டென்று போட்டு உடைத்துவிட வேண்டுமெனவும் முடிவு செய்திருந்தாள். ஆனால் மாறன் தன் பெற்றோரிடம் பேசிக்கொண்டிருந்ததால் நண்பரை அனுப்பி அழைத்து வரச் சொல்லியிருந்தான். சற்று ஏமாற்றமாக இருந்தாலும் , சரி அவன் இருக்கும் இடத்திற்குத்தானே செல்கிறோம் என்ற ஆறுதலும் இல்லாமலில்லை. மூச்சுக்கு முன்னூறு முறை முயற்சி செய்தும் வழக்கம் போல் எடுத்த எடுப்பில் பேசத் தயக்கம் மட்டும் தவிர்க்க முடியவில்லை அவளால். ஓவியங்களில் காதலையும், துயரத்தையும், மகிழ்ச்சியையும் தெளிவாக வெளிப்படுத்த முடிந்த தன்னால், தன் மன ஓவியத்தை வெளிக்கொணர முடியாமல் போனது ஆச்சரியமாகவும் இருந்தது. பெண்மைக்கேயுரிய அந்த நாணம் அவளைத் தடுத்தாலும், இதற்குமேல் மறைத்து வைத்தால், காலம் கடந்த சூழலில் இதற்கான தேவையே இல்லாமலும் போகலாம் என்ற நிலையில் பேச வேண்டிய கட்டாயம் வந்ததையும் உணர்ந்ததால் வந்த வினைதான்……
ரம்யா தான் செய்யப் போகும் காரியம் குறித்து மாறனிடம் ஏதும் பேசவில்லை. அவன் மறுக்கலாம் என்பது ஒரு காரணமாக இருப்பினும், எல்லாம் நல்லபடியாக முடித்து விட்டு ஒரு சர்ப்பிரைஸ் கொடுக்க வேண்டும் என்ற ஆவலும்தான். அவள் எதிர்பார்த்ததை விட காரியங்கள் சரியாக எளிதாக நடந்து
கொண்டிருந்தாலும் மாறனின் தந்தை மட்டும் பிடி கொடுக்காமல் பேசியது சற்று அச்சம் கொடுத்தது. எப்படியும் தன் மகனிடம் இது பற்றி பேசுவார். அப்போது மாறன் தன் நிலை குறித்து அவரிடம் உறுதியாக பேச வேண்டுமே என்ற கவலையும் எழாமல் இல்லை.. அது பற்றி அவன் தந்தை மாறனிடம் பேசுவதற்கு முன்பு தான் பேசிவிட வேண்டும் என்று அவசரமாக அடுத்த நாளே அவனுக்குப் போன் செய்தாள். இதை சற்றும் எதிர்பாராத மாறன் அவன் அப்பா அதை எப்படி எடுத்துக் கொள்வாரோ, அதனால் அவர் உடல் நிலை திரும்பவும் கெட்டு விட்டால் என்ன ஆவது என்ற கவலையும் தொற்றிக் கொண்டதால், பேச நா எழாமல் மௌனம் காத்தான்.
“ மாறன் என்ன ஆச்சு… லைனில் இருக்கிறாயா’? என்றாள் ரம்யா.
“ ஆம் ,ரம்யா. நீ கொஞ்சம் அவசரப்பட்டு விட்டாயோ என்று தோணுதுப்பா….”
“ இல்லப்பா… பூனைக்கு யாராவது மணி கட்டித்தான் ஆகனும் இல்லையா.. உன்கிட்ட நானும் பலமுறை சொல்லிட்டேன். நீ கேட்பதாக இல்லை. அதான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன். அனு நான் எதிர்பார்க்காத அளவிற்கு மிக உயர்ந்த குணம் கொண்டவளாக இருக்கிறாள். ஒரு வகையில் நீ அவளை மிஸ்
பன்னுவதும் தவிர்க்க முடியாததுதான். ஆனா உனக்கு நல்ல ராசிப்பா. இரண்டு பேரில் யார் கிடைத்தாலும் உன் அமைதியான வாழ்க்கைக்கு உத்திரவாதம் உண்டு”
“ சரி… சரி. ஓவரா ஓட்டாதே. அப்பா என்ன முடிவா சொன்னார்?”
“ அதுதான் உன் கையில்தான் இருக்குது. யோசிக்கலாம் என்றார் .. பிடி கொடுக்காமலே. ஆனா, நல்லவேளையா ரொம்ப எமோஷனலா இல்லாம, அமைதியா கேட்டுக்கிட்டார்.. அது வரைக்கும் பரவாயில்லை. கட்டாயம் உன்கிட்ட பேசித்தான் முடிவெடுப்பார். நீ உறுதியா அவர்கிட்ட உன் நிலையை எடுத்துச் சொல்ல வேண்டும். இனி என் கையில் ஏதுமில்லை. நானும், அனுவும் பேச வேண்டியதை பேசி விட்டோம். நீதான் உன் அப்பாவை சம்மதிக்க வைக்க வேண்டும்.”
“ கொஞ்சம் அவசரப்பட்டு விட்டாயோன்னுதான் திரும்பவும் சொல்லத் தோணுது ரம்யா. அவர் கண்டதையும் யோசிச்சு உடம்பைக்
கெடுத்துக்குவாரோன்னு பயமா இருக்குப்பா..”
“ அப்படீல்லாம் ஒன்னும் ஆகாது. நல்லதையே நினைப்போம். பாசிட்டிவ்வா எடுத்துக்கிட்டு அப்பாகிட்ட தெளிவா உறுதியா பேசுப்பா.. எல்லாம் சரியாகிடும். “
மாறன் இனி தானே பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை வந்தது அவளுக்கு. போனை பேசி முடித்த மறு வினாடி அவளுடைய கைபேசி திரும்பவும் சிணுங்கவும் , ‘ரிஷி ஏன் இந்த வேளையில் கூப்பிடுகிறான்’ என்ற யோசனையில் புருவத்தை நெரித்துக் கொண்டே கைபேசியின் பச்சை விளக்கின் மீது மெல்லிய விரல்களால் அணைத்தாள்.
“ ரம்யா.. சாரி…யா.. இந்த நேரத்தில் உன்னை தொந்திரவு செய்வதற்கு. வேறு வழியில்ல. வந்தனாவிற்கு திரும்பவும் உடல் நலம் சரியில்லாமல் போய் விட்டது. இப்போது மருத்துவமனையில் தான் இருக்கிறோம். உன்னைப் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறாள். அவளிடம் போனை கொடுக்கிறேன்.
ஒரு வார்த்தை பேசேன் “ என்றான்.
“ ஹலோ, வந்தனா.. எப்படி இருக்கீங்க.. ”
.” ……………….”
“ம்ம்…. ம்ம்.. என்னால் திரும்ப அங்கு வருவது சிரமம் வந்தனா. பர்சனலா கொஞ்சம் வேலை இருக்குங்க. இன்னும் ஒரு வாரத்தில் நான் ஊருக்குக் கிளம்ப
வேண்டுமே..”
“…………..”
“ சரி.. சரி… அமைதியாக இருங்கள். நாளை வருகிறேன். இப்போது ரெஸ்ட் எடுங்கள்”
அடுத்த நாள் ஆட்டோ பிடித்து கேன்சர் மருத்துவமனை நோக்கிச் சென்றாள். ஏனோ உள்ளே செல்லும்போதே மனம் கனப்பதை தவிர்க்க முடியவில்லை. எத்தனை விதமான நோயாளிகள்… ஒரு சிறுவன்.. 10 வயது இருக்கலாமோ.. கண்ணில் புற்று நோயாம். ஒரு கண்ணை எடுத்து விட்டார்களாம். மற்றொரு கண்ணில் ஏற்கனவே கிரிக்கெட் பந்து அடித்து பிரச்சனையாக இருக்கிறதாம். அந்தத் தாய் அடுத்த அறை பெண்மணியிடம் சொல்லி அழுது கொண்டிருப்பதைக் கேட்ட ரம்யாவிற்கு ஈரக்குலையே நடுங்கியது. ஆண்டவனின் இந்த விளையாட்டை எதில் சேர்க்க முடியும்.. எத்தனையோ நாயன்மார்களின், ஆழ்வார்களின் கதை மூலம் ஆண்டவனின் திருவிளையாடல்களையும், இறுதியில் பக்தர்களை ஆண்டவன் ஆட்கொண்டு அருள் புரிவதையும் கேட்டிருக்கிறோம். ஆனால் இந்த வகை திருவிளையாடலை எதில் சேர்க்க முடியும். என்ன விமோசனத்தை எதிர்பார்க்க முடியும்…..
வந்தனாவைப் பார்த்தவுடன், கிழிந்த நாராகக் கிடக்கும் அவள் வதனத்தைப் பார்த்தவுடன் அவளையறியாமல் கண்கள் கலங்கி விட்டன. கீமோதெரபி கொடுத்ததால் அவ்வளவு களைப்பாக இருப்பதாக ரிஷியின் மூலமாக தெரிந்து கொண்டாள். பின், தான் ரம்யாவிடம் தனியாக பேச வேண்டும் என்று வந்தனா கூறியதால், ரிஷி பெரும் சந்தேகத்துடன், நெற்றியை சுருக்கிக் கொண்டு வெளியில் வந்து நின்று கொண்டான். கண்ணாடிக் கதவு வழியாக வந்தனா வாயசைப்பதும், ரம்யா தலையசைப்பதும், அவ்வப்போது வந்தனாவின் தலையை வருடுவதும், அவள் கையைப் பிடிப்பதும், ரம்யா வேகமாக தலையசைப்பதும் , ஏதோ நிழற்படம் போல தெரிந்தாலும், வந்தனா என்னதான் பேசியிருப்பாள் என்று புரியாமல் குழப்பமாக இருந்தது ரிஷிக்கு. ரம்யா எப்படி எடுத்துக் கொள்வாளோ என்ற குழப்பம் வேறு அவனுக்கு.
ஆனால் ரம்யா வெளியே வந்து ஒரு வார்த்தைக்கூட அதைப் பற்றி பேசாமல், வந்தனாவை அருகில் இருந்து ஜாக்கிரதையாக கவனித்துக் கொள்ளுங்கள் என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள்…..
அன்று முழுவதுமே எந்த வேலையும் ஓடாமல் , மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்ததது. மற்ற கடமைகள் அழைக்க ஒருவாறு சமாளித்துக் கொண்டு அடுத்த வேலையைப் பார்க்கத் தயாரானாள்.
மாறனுக்கு அப்பாவிடம் எப்படிப் பேசுவது என்று ஒரே தயக்கம். ஆனால் இந்த வாய்ப்பை எப்படியும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அவசியமும்
இருந்தது. போனை அம்மா எடுத்தவுடன், ”என்னப்பா மாறா.. இப்படி பன்னிட்டே.. எதுவானாலும் என்கிட்ட மறைக்கலாமா..?” என்றவுடன் சற்று வருத்தமாக இருந்தாலும்,
“ இல்லம்மா…. அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமப் போனதால , அவருக்கு அதிர்ச்சி கொடுக்க வேண்டாமேன்னுதான்… “ என்று மென்று முழுங்கினான்.
சரிம்மா.. அப்பா என்ன சொன்னார். ரம்யா அப்பாவை ஏதும் வருத்தப்பட வைக்கலியே…?
“ இல்லப்பா, அவ பாவம் ரொம்ப பயந்து, பயந்துண்டுதான் பேசினாள். உன் மேல இருக்கற அக்கரையில்தான் பேசறாள்னு தெரிஞ்சதால அப்பாவும் அவகிட்ட கடிந்து ஏதும் பேசவும் இல்ல.. கோவிச்சுக்கவும் இல்ல. ஆனாலும் அவகிட்ட மனம் திறந்து பேச முடியல அவரால. என்கிட்டதான் புலம்பிக்கிட்டே இருக்கார். தேவையில்லாம அனாவசியமா ஒரு நல்ல பெண்ணை ஏன் வேண்டாம்னு சொல்லப் போறேன்னு கேட்கிறார். ?”
“ பின்ன என்னம்மா பிரச்சனை.. ஜாதகத்துல கொஞ்சம் யோக பலன் கம்மியா இருந்தாலும் பரவாயில்லம்மா. நான் நிம்மதியா வாழ முடியும்”
“ அதில்லப்பா…. வந்து…. ”
அனு வருத்தப்படுவான்னு யோசிக்கிறேளா…. நான் வேணுமானா பேசட்டுமா அனுகிட்ட..?”
“ ம்ம்.. அது மட்டும் காரணமில்ல. அப்பா பயப்படுற விசயமே வேற… எனக்கு அது சரியா , தப்பான்னு தெரியல… உங்க அப்பா அளவுக்கு நேக்கு ஜாதகத்துல பழக்கம் இல்லே. ஆனாலும் அவரோட சேர்ந்து கொஞ்சம் ஏதோ சொன்னால் புரியறது.. அதான் பிரச்சனையே…”
“ அப்படி என்னம்மா பிரச்சனை. இன்னும் ஏன் மறைக்கிறேள்.. என்னன்னு சொல்லுங்கோ. நானும்தான் தெரிஞ்சிக்கிறேனே…”
“ அப்படி இல்லப்பா.. நேக்கு தெரிஞ்ச வகையில அந்தப் பொண்ணை நீ கல்யாணம் பண்ணிண்டா நேக்கும், அப்பாவுக்கும் ஆகாதாம். திருமணத்திலேயே பிரச்சனையும் வருமாம். இன்னும் சொல்லப் போனா உன் வெளிநாட்டு வேலைக்குக் கூடப் பிரச்சனை வருமாம்.. அதனால்தான் அப்பா புலம்பிண்டிருக்கார்..”
“ அம்மா நீங்க நம்பறேளா இதெல்லாம்… படிச்சவா கூட இப்படீல்லாம் சொல்லிண்டிருந்தா எப்படீம்மா…?”
“ நோக்கு தெரியாதா.. அப்பாவுக்கு இதில் எவ்வளவு நம்பிக்கையின்னு…. அவர் மனசை மாத்தனும்னுதான் நானும் நினைச்சுண்டிருக்கேன்.. பார்ப்போம். ஆண்டவன் கிருபையால எல்லாம் நன்னா நடக்கும். நீ ஒன்னும் வருத்தப்படாதே… சரியா?”
“ இல்லம்மா… நேக்கும் அப்பா பத்தி தெரியுமோன்னோ.. நானும் அவரை வருத்தப்பட வைக்க வேண்டாமேன்னுதான் இதைப்பத்தி ஏதும் பேசாம இருந்தேன்… ஆனா, ரம்யா எனக்கே தெரியாம அங்கே வந்து எல்லாத்தையும் போட்டு உடைச்சுப்பிட்டா.. அப்பா ரொம்ப கோபப்பட்டாராம்மா..?”
“ அதெல்லாம் ஒன்னுமில்ல… எல்லாம் சரியாயிடும். என்ன நீ முன்னாடியே சொல்லியிருந்தா, அந்தப் பொண்ணு அனு மனசில அத்தனை ஆசையை வளர்த்திருக்க வேனாமில்லையா.. பாவம் அந்தப் பொண்ணு இல்லையா…”
மாறனால் இதற்கு எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. அம்மா சொல்வதும் சரிதானே.. அனுவின் பூப்போல மனசை நோகடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டதே. இது எவ்வளவு பெரிய பாவம்.. குழப்பம் அதிகமானதே தவிர குறையவில்லை. நல்லவேளையாக அப்பா கோவிலுக்குச் சென்றிருக்கிறார். இந்த மன நிலையில் அவருடன் பேச வேண்டாம் என்றே தோன்றியது. எது எப்படி இருந்தாலும் தன் சுய நலத்திற்காக யார் மனதையும் நோகடித்து எந்த முடிவும் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதில் மட்டும் தெளிவாக இருந்தான். அம்மாவிடமும் அதையே சொல்லிவிட்டு அப்பாவிடம் பிறகு பேசுவதாகச் சொல்லி தொடர்பைத் துண்டித்தான்.
அப்பப்பா… எப்படி இந்தச் சூழலை எதிர்கொள்ளப் போகிறோம் என்ற குழப்பம் முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது. இன்னும் சற்று நேரத்தில் அவந்திகா வந்து விடுவாள். இயன்றவரை முகத்தில் எதையும் காட்டாமல் இருக்க முயற்சிக்க வேண்டுமே? அகத்தின் அழகு முகத்தில் தெரியாமல் மறைக்க இயலுமா…? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
தொடரும்.

Thursday, December 15, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில்!(28)

பவள சங்கரி

ஒரு சமீபத்திய சர்வேயின்படி, வேலைக்குச் செல்லும் பெண்களின் 50 சதவிகிதம் பெண்களுக்கு மட்டுமே , தங்கள் குழந்தைகளுடன் முழுமையாக நேரம் கழிக்க இயலாததன் குற்ற உணர்ச்சி இருக்கிறதாம். 80 % பெண்கள் ஆண்களைவிட மிக திறமைசாலிகளாகவும், ஒரே நேரத்தில் பலவிதமான வேலைகளைச் செய்யக்கூடிய திறன் படைத்த சகலகலாவல்லிகளாக இருக்கின்றனராம். 45% பெண்கள் தங்கள் ஓய்வு நேரம் முழுவதையும் குழந்தைகளுடன் கழிப்பதே சுகம் என்கிறார்களாம்.. ரீடர்ஸ் டைஜஸ்ட் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தவள், நினைவுகள் திசை திரும்ப அப்படியே புத்தகத்தை கவிழ்த்து மார்பின்மீது வைத்துவிட்டு, விட்டத்தை நோக்கியவாறு சிந்தனையில் ஆழ்ந்து விட்டாள், அவந்திகா.. அறையின் நறுமணத் தெளிப்பானின் மணம் நாசியை நிறைக்க, மனமும் வாழ்க்கையின் சுகந்தம் நாடி அசைபோட ஆரம்பித்ததில் ஆச்சரியம் இல்லையே.

தீர யோசித்து, தீர்க்கமான ஒரு முடிவிற்கு வந்திருந்தாள். திருமணத்திற்குப் பிறகு குறைந்தது 4 அல்லது 5 ஆண்டுகளாவது வேலைக்குப் போவது என்ற எண்ணத்தையே மறந்து, அன்பு கணவனுக்கு அழகாக சமைத்துப்போட்டு, தேவையான பணிவிடைகள் செய்து, விரைவிலேயே குழந்தையும் பெற்றுக் கொண்டு , கண்ணுங் கருத்துமாக குழந்தையை வளர்ப்பது மட்டுமே முழு நேரக் கடமையாக எடுத்துக் கொண்டு, எஞ்சிய நேரங்களில் ஓவியங்களுக்கு மட்டும் நேரம் ஒதுக்கிக்கொண்டு இன்பமாக வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் என்று கற்பனைக் கோட்டை கட்டி வைத்து விட்டது என்னவோ நிசம்தான். ஆனால் மாறனிடம் கலந்தாலோசிக்காமால் தானே முடிவெடுத்து விட்டோமே என்று ஒரு புறம் தயக்கமாக இருந்தாலும், அவனும் இந்த முடிவை கட்டாயம் ஆதரிப்பான் என்றும் நம்பிக்கை இருந்தது. காரணம் அவனும் தன்னைப் போல ஹோம்லி டைப் ஆசாமிதானே என்ற எண்ணமும் கூடவே வந்து கற்பனைக்கு மேலும் உரமிட்டது.

ஆனால் அவளுக்கே இது சற்று அதிகப்படியாகத்தான் தெரிந்தது. காரணம் தான் பல முறை இலை மறைவு காய் மறைவாக தன் விருப்பத்தை வெளிப்படுத்திய போதும், கண்டுகொள்ளாமல் இருக்கும் மாறனை என்ன செய்வதென்றே புரியவில்லை அவளுக்கு. ஒரு வேளை ஆரம்பத்தில் தான் பெற்றோர் விருப்பப்படிதான் தன் திருமணம் என்று கூறி, அவனை சட்டை செய்யாமல் இருந்ததற்கு பழி வாங்குகிறானோ என்றுகூட நினைக்கத் தோன்றியது அவளுக்கு. எப்படியும் அவனிடம் நேரிடையாக பேசிவிட வேண்டும் என்று முடிவும் செய்து வைத்திருந்தாள். அதற்கானதொரு சரியான சந்தர்ப்பமும் வரும் எனவும் காத்திருந்தாள். அந்த சந்தர்ப்பம் இதற்கு முன்பு இரண்டொரு முறை வந்த பொழுதும் , அவன் பிடி கொடுக்காமல் நழுவிச் சென்றதும் நினைத்தால் கவலையாகத்தான் இருந்தது. இருந்தாலும் , எது எப்படி இருந்தாலும், தனக்கு திருமணம் என்று ஒன்று நடந்தால் அது மாறனுடன் மட்டுமாகத்தான் இருக்க முடியும் என்ற உறுதியான நினைவு மட்டும் இருந்தது. அடுத்த நாள் காலை முதலில் இதை தன் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டுமென்ற முடிவிற்கும் வந்திருந்தாள்.

அம்மா கட்டாயம் , ஜாதகம், பொருத்தம் என்றெல்லாம் காரணம் காட்டி மறுப்பு தெரிவித்தாலும், அப்பா எப்படியும் அம்மாவை சமாதானப்படுத்தி, எளிதாக சம்மதிக்கவும் வைத்துவிடுவார் . பிறகு அப்பாவை நேரே மாறனின் தந்தையிடம் சென்று பேசச் சொல்ல வேண்டும். அதற்கு முன்பாக மாறனிடம் உறுதியாக பேசிவிட வேண்டும் என்றும் திட்டம் போட்டுக் கொண்டிருந்தவள், எவ்வளவு நேரம் ஆனதோ தெரியாமல் இரவு உணவையும் மறந்து அப்படியே உறங்கியும் போனாள்.

காலையில் எழுந்தவள் , அவளுடைய பிரியமான கலெக்‌ஷன்ஸ் மெல்லிசைப் பாடல்களை வைத்துக் கொண்டு , ஒரு கையில் தேநீர் கோப்பையையும் பிடித்துக் கொண்டு, லேசான நாணத்தையும் சுமந்து கொண்டு தன்வீட்டு தொலைபேசி எண்ணை சொடுக்கியவள், மறு முனையில் நீண்ட மணியோசை மட்டுமே விடையாகக் கிடைக்க, காத்திருக்க வேண்டியதாகியது.

அனு காலையில் எழுந்தது முதலே ஒரே பரபரப்பாக இருந்தாள். எந்த விசயத்தையும் மிக நிதானமாக கையாள்பவள், இதில் மட்டும் என்னவோ சற்று பரபரப்பு தொற்றிக் கொள்வதை தவிர்க்க முடியவில்லைதான். காரணம் நல்ல ஒரு வாழ்க்கை தன் கை நழுவிச் செல்வதை ஏற்றுக் கொள்வது சிரமம்தான். அதைவிட தன்னைப்பெற்றவர்களிடமும் இதைப்பற்றி தானே சொல்ல வேண்டிய கட்டாயம் வேறு. ரம்யா என்னவோ மிக எளிதாகத்தான் சொல்லிவிட்டுப் போய் விட்டாள். அம்மாவும், அப்பாவும் தன் திருமணத்தில் எத்துனை ஆர்வமும் , நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள் என்பது அவளுக்கு எந்த அளவு புரியப் போகிறது. அவள் கண்முன் தெரிவதெல்லாம் இப்போது தன் உயிர்த் தோழனின் நல்வாழ்க்கை மட்டுமே. அதை எப்படியும் முடிப்பது என்ற உறுதியோடுதான் வந்திருக்கிறாள். களையிழந்து போன தன் வாழ்க்கையைப் பற்றியே நினைக்க நேரமில்லாதவள், எங்கேயிருந்து தன் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படப் போகிறாள். தன்னையறியாமல் ஒரு பெருமூச்சு வர அந்த சத்தம் கேட்டு அம்மா அருகில் வந்து, வாஞ்சையாக ‘என்னம்மா’ என்று கேட்க, அதற்கு மேல் அவளால் தன் மனப்பாரத்தை இறக்கி வைக்காமல் இருக்க முடியவில்லை. எப்படி ஆரம்பிப்பது என்று தயங்கினாலும் எப்படியோ சொல்லி முடித்தாலும், அவள் அம்மாவின் முகத்தில் வெளிப்பட்ட அதிர்ச்சியை சமாளிப்பதும் சிரமமாகத்தான் இருந்தது. ஒரு வழியாக அம்மாவை சமாதானம் செய்ய முயற்சித்தாலும் அவள் தந்தையை எதிர்கொள்வது அவ்வளவு சாமான்ய காரியமாக இல்லை அவளுக்கு.

பெரியவர்களாகப் பார்த்து நல்ல நேரமும் , காலமும், சோதிடமும், ஜாதகமும் பார்த்து பொருத்தம் பார்த்து முடிந்த கல்யாணம் எப்படி முடிவிற்கு வரும் என்று பேரதிர்ச்சி மட்டுமே அனுவின் தந்தைக்கு எஞ்சியிருந்தது. ஆயினும் அனு சொன்ன சில விசயங்கள் அவர்களுக்கு ஏற்புடையதாக இருந்ததால், தங்கள் மகளின் அமைதியான எதிர்கால வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு மனதை தேற்றிக் கொள்ள தயாராவதைத் தவிர வேறு வழியும் இல்லை அவர்களுக்கு.

தன்னையறியாமல் மனதில் ஏற்பட்ட இழப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சுறுசுறுப்பாகத் தயாரானாள் மாமாவின் வீடு நோக்கி. மாமாவிடம் பக்குவமாக பேசவேண்டும். இருதய நோயாளி.. அதற்காக தன்னை முதலில் தயார்படுத்திக் கொண்டாள். தன் கவலையை துளியும் வெளிக்காட்டாமல், தன்னை இந்த விசயம் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பதாக அழகாக நடிக்க வேண்டும். சற்று கடிமான காரியமாக இருந்தாலும், நடத்தியே ஆக வேண்டும். நாம் மிகவும் நேசிக்கும் ஒருவர் நம்மை உதாசீனப்படுத்துகிறார்கள் என்று தெரியும் போது அதன் பாதிப்பு சொல்லில் விளக்க முடியாதது. அந்த வகையில் மாறனின் தந்தையும் இந்த விசயத்தை தவறாகப் புரிந்து கொண்டு மகனை வெறுக்காமல் இருக்க வேண்டுமே என்றும் ஆதங்கப்பட்டது. இந்த நிமிடம் வரை மாறன் தன் சுயநலம் மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படாமல் ,மனதிற்குள்ளேயே வைத்து பூட்டி வைத்துக் கொண்டுதானே இருக்கிறான். ரம்யா முயற்சி எடுக்கவில்லையென்றால் எல்லாவற்றையும் மனதிற்குள்ளேயே புதைத்து விட்டு, இரண்டு உயிர்களின் நிம்மதியற்ற வாழ்க்கைக்கு காரணமாகியிருப்பான். ஒரு வகையில் ரம்யா செய்த செயல் பாராட்டிற்குரியதே.

இப்படி பல விதமான யோசனைகளுடன் தான் மாறனின் வீடு வந்து சேர்ந்தாள்.. இவ்வளவு நாட்கள் இல்லாமல் இன்று ஏதோ அந்த வீடு அவளுக்கு அன்னியப்பட்டுப் போனது போல் இருந்தது. ரம்யாவிற்கும் போன் செய்து விட்டு கிளம்பியதால் இன்னும் சற்று நேரத்தில் அவளும் வந்து சேர்ந்து விடுவாள். அவளுடன் சேர்ந்தே போகலாம் என வீட்டின் முகனையில் காத்துக் கொண்டு நின்றிருந்தாள். அங்கு நடைமேடையில் நின்று கொண்டு பிச்சை எடுக்கும் ஒரு சிறிய பெண் ஒவ்வொருவரிடமும் நெருங்கி காசு கேட்கும் போது, மறுதலிக்கப்பட்ட போதும், சற்றும் கலங்காது அதே முகபாவத்துடன், எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல், இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்ற போக்கில் தொடர்ந்து சலிக்காமல் கையேந்திக் கொண்டிருந்ததைப் பார்க்க சங்கடமாக இருந்தாலும், அந்த சிறு வயதில் இந்த அளவிற்கு ஒரு மனத்தெளிவை அவள் சூழல்தான் கொடுத்திருக்கிறது என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டியிருந்தது. வேறு ஒரு சமயமாக இருந்தால் கட்டாயம் இதை வேடிக்கை மட்டும் பார்த்து விட்டு சென்றிருக்க மாட்டாள் அனு.. அந்தப் பெண்ணிற்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ முயற்சித்திருப்பாள். ஆனால் இன்று தன் மனநிலை அதற்கு இடங்கொடுக்காததும் அவளுக்கு வருத்தத்தையே ஏற்படுத்தியது.

பல்வேறு சிந்தனைகள் அருகில் ஆட்டோவில் இருந்து ரம்யா இறங்கியதைக்கூட கவனிக்க முடியாமல் செய்தாலும் அதை உணர்ந்து கொண்ட ரம்யா அவளைத் தட்டி நினைவிற்கு கொண்டு வந்தாள். இருவரும் அதிகம் பேசும் மனநிலையில் இல்லாதலால் சம்பிரதாயமாக நலம் விசாரித்துவிட்டு மாறனின் வீடு நோக்கி நடந்தனர். நல்ல வரவேற்பும் , அருமையான பில்டர் காப்பியும் சற்று நேரத்தைக் கடத்தினாலும், இவர்கள் ஏதோ பேச வந்திருக்கிறார்கள் என்பதும் புரியாமல் இல்லை மாறனின் தந்தைக்கு. மெல்ல விசயத்தை ஆரம்பித்தாள் அனு. மாறன் சில நாட்களாகவே எதிலும் ஒரு பிடிப்பில்லாமல் பேசுவதையும், அனுவிடம் அதிகம் ஒட்டுதல் இல்லாமல், மற்ற இளைஞர்கள் போல் தான் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணிடம் அடிக்கொரு முறை போனில் பேசுவதும், பரிசுப் பொருட்கள் வாங்கி அனுப்புவதும், இப்படி எதையுமே செய்யாத மகனைப் பார்த்து ஆச்சரியப்பட்டும் இருக்கிறார். இருந்தாலும் அதன் பின்னணியில் இத்துனை பெரிய அதிர்ச்சியான தகவல் இருக்கும் என்று உணரவில்லை அவர்.

அனு அமைதியாக அதே சமயம் அழுத்தமாக சூழ்நிலையை விளக்கிய விதம் அவரை அதிர்ச்சியிலிருந்து சிறிது சிறிதாக மீட்டுக் கொண்டு வந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஆரம்பத் தவறு தன் மீது இருந்ததும் அவருடைய சமாதானத்திற்கு காரணமானது. தான் தவறுதலாக புகைப்படம் அனுப்பப் போகத்தானே இப்படியெல்லாம் நடந்து விட்டது என்றும் புரிந்தது. ஆனாலும் அந்தப் பெண் பல வகையிலும் மாறனுக்குப் பொருத்தமாக இருந்த போதிலும் முக்கியமான ஜாதகப் பொருத்தம் இல்லாமையால்தானே அந்த பெண்ணை ஒதுக்க வேண்டியதாகியது. அதனை திரும்பவும் எப்படி ஒப்புக் கொள்வது என்று பெரும் குழப்பமாக இருந்தது.

லக்னத்துக்கு , ஒன்று , மூன்று,ஐந்து, ஏழு , ஒன்பது, பதினொன்றாம் இடங்களில் இராகு அல்லது கேது ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் இருந்தால் அது பிதுர் தோஷம் என்பார்களாம். இது உரிய ஜாதகரின் வாழ்க்கையில் திருமணத்தடை, புத்திர பிறப்புத் தடை, நல்ல வாழ்க்கைத் திருப்புமுனைகளை அனுபவிக்க இயலாமல் போகுதல் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடாமல் இருப்பது போன்றவைகளால் தினசரி வாழ்க்கையே ஒரு போராட்டமாகிவிடும் என்பார்கள். அதனாலேயே அவந்திகாவின் ஜாதகத்தை திருப்பிக் கொடுத்தது இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது.அதுவும் அந்த ஜாதகம் தன் உற்ற தோழனின் மூலமாக வந்ததால் மறக்கவில்லை. அதற்குப் பிறகு கூட பல முறை தன் நண்பன் அது பற்றி பேசியும் தான் பிடி கொடுத்து பேசாதலால் தானே அவன் நிறுத்தினான். அனுவை நிச்சயம் செய்த பின்பு சுத்தமாக இது பற்றி கேட்பதையே மறந்து விட்டான். ஆனாலும் அவருக்கு இதில் முழுமையாக உடன்பாடு இல்லை என்பது அவர் முகத்தில் நன்றாகவே தெரிந்தது. ரம்யா அவரிடம் தெளிவாக மாறனின் நிலை குறித்தும் அவந்திகாவிடமும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் தெளிவாக எடுத்துரைத்த பின்பு அவரால் அதிகமாக மறுப்பேதும் சொல்ல முடியாவிட்டாலும், உடனடியாக ஒப்புக் கொள்ளவும் முடியவில்லை. தனக்கு யோசிக்க அவகாசம் வேண்டும் என்றும் சொன்னார். ஏதேனும் இந்த தோஷத்திற்கு பரிகாரம் செய்ய முடியுமா என்று விசாரிக்கவும் வேண்டும் என்றார்.

இதற்கு மேலும் அவரைக் கட்டாயப்படுத்தி சங்கடப்படுத்துவது சரியல்ல என்பதை உணர்ந்தவர்களாக இருவரும் கிளம்பினார்கள். ரம்யாவும் ஒரு வாரத்தில் தான் திரும்பவும் அமெரிக்கா கிளம்புவதாகச் சொல்லிவிட்டு விடை பெற்றாள். அனுவிற்கு மட்டும் விடை பெறும்போது இருதயத்தில் ஒரு பெரிய பந்து வந்து அடித்தது போன்று ஒரு அதிர்வு ஏற்பட்டது. இவ்வளவு நாள்கள் இருந்த உரிமை திடீரென பறிக்கப்பட்டது போல் உணர்ந்தாள். எப்படி இருந்தாலும் அது தன்னுடைய மாமன், மாமி வீடு என்பதால் அவள் வந்து போய்க் கொண்டிருந்தாலும் பழையபடி எந்த உரிமையும் கொண்டாட முடியாது என்ற நிதர்சனம் முள்ளாய் குத்தியது. மௌனம் மட்டுமே மருந்தாகிப் போக ஏதும் பேசாமல் அமைதியாக வெளியே வந்தாள். ரம்யா அவளை இறுக அணைத்து உச்சி முகர்ந்ததில் உண்மையான அன்பும் பாசமும் வெளிப்படையாகத் தெரிந்தது.

அதற்கு மேல் அனுவுடன் இருந்து அவளை சங்கடப்படுத்த விரும்பாதவளாக அவசரமாக வீட்டிற்கு கிளம்ப வேண்டும் என்று எதையோ ஒரு காரணம் சொல்லி கிளம்பினாள். அனுவிற்கும் சற்று தனிமை தேவையாக இருந்ததனால், ரம்யாவை திரும்பவும் ஆட்டோ பிடித்து ஏற்றி விட்டு, தன் இருசக்கர வாகனத்தைக் கிளப்பிக் கொண்டு வீடு நோக்கிச் செல்லலானாள்……

அவந்திகா வெகு நேரத்திற்குப் பிறகு பெற்றோரின் தொடர்பு கிடைக்க, ஆவலாக பேச்சைத் துவக்கினாள்…..

தொடரும்.

படத்திற்கு நன்றி

Tuesday, November 22, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில்!(27)

பவள சங்கரி

ஒரு மனிதனின் அடிப்படைக் குணத்தையே மாற்றக்கூடிய வல்லமை காலத்திற்கு உண்டு. அவரவரின் சூழ்நிலைகளே பல நேரங்களில் அவர்களை ஆளுகின்றது என்பதுமே நிதர்சனமாகிறது. அதனை எதிர்த்துப் போரிடுவதைக் காட்டிலும், அதன் போக்கிலேயே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு போகும் போது அந்த வெப்ப வீச்சின் கடுமை சற்று குறையவும் வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில் ரிஷி விதியின் போக்கிலேயேப் போக பழகிக் கொண்டதாகவே நினைத்துக் கொண்டிருந்தான். வந்தனா என்ற ஒரு மென்மை மனம் படைத்த தேவதை , தனிமைச் சிறையில் அகப்பட்டு வதை படக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தன் மீது உயிரையே வைத்திருந்த ரம்யாவை விட்டு விலகி வந்தனாவை ஏற்றுக் கொண்டாலும், ஆறே மாதங்களில் அவள் உடல் நிலையில் மாற்றம் தோன்றி, இன்று அடிக்கடி மருத்துவமனைக்கு படை எடுப்பதே முக்கிய வேலையாகவும் இருக்கிறது. இதெல்லாம் பழகிப் போனாலும், முகத்தில் சிரிப்பு என்ற ஒன்றே மறைந்து போனதும் மறைக்க முடியாமல் போனது.

தனக்கு நன்மை செய்வதாக எண்ணி இப்படித் தன் வாழ்க்கையையே கெடுத்துக் கொண்டாரே… வாழ வேண்டிய வயதில், எந்த சுகமும் இல்லாமல் சோர்ந்த முகத்துடனும், சுரத்தில்லாத பேச்சுடனும், இருப்பதோடு, அதனை மறைக்க அவர் படும் பாடு அதைவிடக் கொடுமையானது. தன்னால், அலுவலகப் பணியைக்கூட ஒழுங்காக கவனிக்க இயலாத சூழலில், எந்த பொழுது போக்கும் இன்றி தன் பின்னாலேயே சுற்றிச் சுற்றி வரும் இந்த நல்ல இதயத்திற்கு ஏதாவது களிம்பு இட வேண்டுமே என்று மனம் துடித்தாலும், தன் இயலாமையை எண்ணி நொந்து போவதைத் தவிர ஏதும் செய்வதறியாது தவித்து நின்ற போதுதான், ரம்யா ஊரிலிருந்து வந்திருக்கும் செய்தி, அவள் போன் செய்து விசாரித்ததன் மூலம் தெரிந்தது. அவளை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் இருந்தது. ரம்யா விரைவில் வந்து தன்னைச் சந்திப்பதாகக் கூறியிருந்ததை நம்பிக் காத்திருந்தாள். அவளிடம் மனம் விட்டுப் பேச வேண்டும் என்றும் எண்ணியிருந்தாள்.

அன்று காலை எழுந்ததிலிருந்தே உபாதைகள் ஏதுமின்றி சற்று உற்சாகமாகவே இருந்தது. தன் அன்பு கணவனுக்கு ஆசையாக சமைத்துப்போட மனம் ஏங்கியது. ரிஷிக்குப் பிடித்த பால் கொழுக்கட்டை செய்து அசத்த வேண்டும் என்று முடிவும் செய்து, மளமளவென செயலிலும் இறங்கினாள். பக்குவமாக குங்குமப்பூ போட்டு, சக்கரையும் சேர்த்து பதமாகக் காய்ச்சிய பாலில், ஒரே அளவில், நீள வடிவில் உருட்டி, பாலில் வேக வைத்து, அதை அழகான ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் போட்டு, அதற்கு தகுந்த அளவிலான வெள்ளியிலான வேலைப்பாடுகளுடன் கூடிய அன்னப்பச்சி வடிவிலான சின்ன கரண்டியும் வைத்து அந்தக் கிண்ணத்தை ஒரு சின்ன வெள்ளித் தட்டில் வைத்து அன்பாக எடுத்துச் சென்று கொடுத்தவள், அவனுடைய ஆச்சரியமான பார்வையில் சற்றே நாணித் தலை குனிந்தாள்.

“ ஏய் என்னது, இது காலங்கார்த்தாலே, பால் கொழுக்கட்டையெல்லாம் செய்து அசத்தறே…:

“ ம்ம்… இன்று என்ன நாள்னு நினைவில்லையா.. அதுக்குள்ள மறந்தாச்சா?”

“ என்ன நாள்.. ஓ உன்னோட பிறந்த நாள் இல்லையா…. சாரிடா . மறந்தே போயிட்டேன். ஓ…. எப்படி மறந்தேன்.. சே.. நீயாவது நேற்றே சொல்லியிருக்கலாமில்லையா”

“ பரவாயில்லை ரிஷி. நான் எப்பவும் பெரிசா பிறந்த நாள் எல்லாம் கொண்டாடறதில்ல. சாய்பாபா கோவிலில் அன்னதானம் செய்வேன். அத்தோடு சரி. முடிந்தால் இன்று போய் வரலாம். “

“ அதற்கென்ன வந்தனா, இப்பவே கிளம்பு போகலாம். ஆபீசிற்கு 2 மணி நேரம் பர்மிஷன் சொல்லிடலாம்”

“ இல்லை ரிஷி, மாலையில் போகலாம். அனாவசியமாக எதுக்கு பர்மிஷன் எல்லாம்…”

“ இல்லை, வந்தனா அஷ்டலட்சுமி கோவிலுக்கும் அப்படியே போயிட்டு வரலாமே.”

“ உங்களுக்கு விருப்பம்னா அப்படியே செய்யலாம்… எனக்கு இன்னொரு ஆசை ரிஷி. ரம்யா வந்திருக்கறதா சொன்னீர்களே. அவங்களை நம் வீட்டிற்கு இன்று டின்னருக்குக் கூப்பிடலாமா….?”

“ எதுக்கு வீணா சிரமப்படறே வந்தனா. அவளையும் கூட்டிக்கிட்டு ஏதேனும் ரெஸ்டாரெண்ட் போகலாமே…..”

“ இல்லை ரிஷி. ரம்யாவை வீட்டிற்குக் கூப்பிட்டு அவளுக்கு என் கையால ஏதாவது சமைத்து அசத்த வேண்டும் . சும்மா சிம்பிளா செய்யறேன். இன்று நல்லாத்தானே இருக்கேன்”

“ இல்லை, அவள் புரோகிரோம் எப்படியோ தெரியல. அவ வேற ஷார்ட் ட்ரிப்லதான் வந்திருப்பா போல. நான் கேட்டுப் பார்க்கிறேன் . பார்க்கலாம் என்றான்.”

“இல்லை போனை கொடுங்கள் நானே பேசுகிறேன்” என்றாள் விடாப்பிடியாக..

ரம்யாவும் சொன்னவுடன் சற்றே யோசித்தவள், தானும் ஊருக்குச் செல்வதற்கு முன் ஒரு முறையாவது வந்தனாவை பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்ததால், ஒப்புக் கொண்டாலும், அன்று மாலை அனுவைச் சந்திப்பதாகச் சொன்னதும் நினைவில் வர சற்றே யோசித்தவள், தன்னுடன் அனுவும் வருவாள் என்பதையும் சொல்லி தான் வருவதை உறுதி செய்தாள்.

மாலை அனுவை வரச் சொன்னதன் காரணமே, மாறனின் தந்தையிடம், அவந்திகா பற்றி பேசும் போது அவளும் உடன் இருப்பது நலம் என்பதனாலேயே. அன்று இருவரும் சேர்ந்து சென்று மாறனின் தந்தையை சந்திப்பதாக இருந்தது. வந்தனாவின் பிறந்த நாள் என்று சொன்னதனால் அன்று மாறனின் வீட்டிற்குச் செல்வதை அடுத்த நாளுக்குத் தள்ளி வைத்து, அனுவையும் அழைத்துக் கொண்டு ரிஷியின் வீடு நோக்கிச் சென்றார்கள் இருவரும். அனுவிடம், தன் நண்பன் ரிஷியின் வீட்டிற்குச் செல்வதாக மட்டுமே சொல்லியிருந்தாள்.

வந்தனாவை முதன் முதலில் அன்றுதான் நேரில் பார்த்தாலும் ஏதோ பல காலம் அவளுடன் பழகியது போன்று ஒரு உணர்வை ஏற்படுத்தியது அவளுடைய நெருக்கம். அத்தனை கனிவு அவள் பார்வையிலும், உபசரிப்பிலும். நல்ல உயரமான, ஒடிசலான உடல் வாகுடன், இளஞ்சிவப்பு நிறத்திற்கு பாந்தமாக, நல்ல அடர் செந்நிற ஷிப்பான் புடவையில், ஒரு தேவதையாகவே காட்சியளித்தாள். கண்களைச் சுற்றி லேசான கருவளையமும், லேசான சோர்வும் மட்டுமே அவளை வித்தியாசப்படுத்தியதே தவிர மற்றபடி அவளுடைய அந்த கொடிய நோய்க்கான அறிகுறி நல்ல வேளையாக ஏதும் இல்லை.

அவளுடைய அன்பான உபசரிப்பில் அதிகமாகவே சாப்பிட்டார்கள் ரம்யாவும், அனுவும். அனுவைப்பற்றியும் விசாரித்துத் தெரிந்து கொண்டாள். எதைப்பற்றி வந்தனா கேட்காமல் இருக்க வேண்டும் என்று எண்ணியிருந்தாளோ , அதைச் சரியாக கேட்டே விட்டாள் நேரிடையாக. அவளுடைய திருமணம் பற்றி வீட்டில் ஏதும் ஏற்பாடு செய்திருக்கிறார்களா, என்ற கேள்விக்கு, பதில் அளிப்பதற்கு முன் தன்னையறியாமல், ரிஷியின் முகத்தைப் பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை அவளால். அவனும் அவள் கண்களை நேரிடையாகப் பார்க்கத் திராணியற்றவனாக தலையை தாழ்த்திக் கொண்டான்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அனுவிற்கு இவர்கள் மூவருக்குள்ளும் ஏதோ விசயம் இருப்பது மட்டும் புரிந்தது. ஒரு வேளை தன் வரவு இவர்கள் வெளிப்படையாகப் பேசத்தடையாக இருக்கிறதோ என்று கூட எண்ண ஆரம்பித்தாள். ஆனாலும் ரம்யா அது போன்ற தர்மசங்கடமான சூழலை விரும்பாதவளாக, பேச்சை மாற்ற முயற்சித்தாள்.

“ஏன் நீங்களிருவரும் ஒரு முறை அமெரிக்கா வரக்கூடாது. வந்து சுற்றிப் பார்த்து விட்டு வரலாமே. ரிஷி அழைத்து வாருங்கள்” என்றாள்.

புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்த ரிஷியின் போக்கு அனுவிற்கு ஐயம் ஏற்படுத்துவதாகவே இருந்தது. எதிலும் ஒட்டாதது போல ஒரு விரக்தியான மன நிலையும் அவனிடம் தெரிந்தது ரம்யாவிற்கும் உறுத்தலாகவே இருந்தது. ஆனாலும் தன்னால் வேறு என்ன செய்ய முடியும். வந்தனாவும் விடாமல் திருமணச் சாப்பாடு விரைவில் போட வேண்டும் என்று உரிமையுடன் திரும்பவும் கேட்கவும், அதற்கு மேல் அவளிடம் மறுப்பு சொல்ல விரும்பாமல், புன்னகையுடன் ஆமோதிப்பது போன்று பாசாங்கு செய்தது அனைவருக்கும் புரியாமல் இல்லை. ஒரு வழியாக சமாளித்து வெளிவந்தவள் அனுவிடம் தப்பிக்க முடியாமல் நடந்தது அனைத்தையும் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டாள். அனைத்தையும் கேட்டவளின் முகத்தில் அதிர்ச்சி வெளிப்படையாகத் தெரிந்தது.

அடுத்து நடக்கப் போவது என்ன என்பது படைத்தவன் மட்டுமே அறிந்த இரகசியம் அல்லவா. பேச வார்த்தைகள் ஏதும் கிடைக்காதலால் இருவரும் மௌனமாகவே வந்து சேர்ந்தார்கள். ரம்யாவை அவள் வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டு அடுத்த நாள் வந்து அவளை மாறனின் தந்தையிடம் அழைத்துச் செல்வதாக வாக்களித்து விட்டு, தன் ஏமாற்றத்தையும் மறந்து, ரம்யாவைப் பற்றி நினைத்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தாள்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெயவம் ஏதுமில்லைநடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை! என்ற பாடல் எங்கோ வானொலியில் ஒலிக்க தன்னையறியாமல் பெருமூச்சு வர வீட்டின் உள்ளே நுழைந்து கதவைத் தாளிட்டாள் ரம்யா……….

தொடரும்.

படத்திற்கு நன்றி - http://www.google.com/imgres?imgurl

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...