Tuesday, May 17, 2011

காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி 2 (5)


காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை -பகுதி - 2 (5)



அடுத்து நாங்கள் சென்ற கோவில்களில் மிக இனிமையான, அதாவது இனிப்புகளாலேயே அலங்கரிக்கப்பட்ட கோவில் இருந்ததே........சொல்கிறேன்....சற்று பொருங்கள் சாமி.....

கால பைரவர் சிவனுடைய பக்தர்.இவருடைய கோவிலில்தான் முழுவதும் விதவிதமான இனிப்பு தின்பண்டங்களினாலேயே அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.இவருடைய மகிமை எத்தகையது என்பதற்கான ஆதாரம், பனாரஸில் ஔரங்கசீப்பின் கையிலிருந்து தப்பித்தது இந்த கால பைரவர் கோவில் மட்டும்தானாம்.கால பைரவர் நீதிமான் என்று கருதப்படுகிறார் ஒரு கவளம் சோறுண்டு, ஒரு கோடி சொத்தானாலும், சோர்வின்றி விடிய விடிய காக்கும்,நாய் என்ற அந்த நன்றியுள்ள ஜீவன்.கால பைரவரின் வாகனமாக இருக்கக்கூடிய தகுதி வாய்ந்த ஜீவன்!நகரத்தின் ஒவ்வொரு முக்கிலும் நின்று காவல் காத்துக் கொண்டிருக்கிறார்.ஊரில் உள்ள அத்துனை விதமான இனிப்பு வகைகளையும் அந்த கால பைரவருக்கு நன்றி செலுத்தும் வகையில் அலங்க்காரம் செய்திருந்தனர்.

அடுத்து துர்கையம்மன் கோவில் தரிசனம்! மகா துர்கா கோவில், காசி நகரத்தின் தெற்கே உள்ளது. இக்கோவில் பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப்பழமை வாய்ந்த கோவிலாம்.ஒவ்வொரு செவ்வாய் கிழமையும், நவராத்திரி காலங்களிலும், விசேட பூசைகள் நடப்பதுடன், கூட்டமும் அதிகமாக இருக்கிறது. ஒரு ஆங்கிலேய அதிகாரி, ஏதோ ஒரு சண்டையில் வெற்றி கொண்டால் ஒரு மணி வாங்கி வைப்பதாக வேண்டிக்கொண்டு அச்சண்டையில் வெற்றி கண்டதால் ஒரு மணியும் வாங்கி தொங்க விட்டுள்ளார். அந்நிய நாட்டவருக்கும், நம்பிக்கையை ஏற்படுத்திய அற்புத சக்திவாய்ந்த அம்மன்!இந்தக் கோவிலில் குரங்குகள் மிக அதிகமாக இருக்கிறது. அதனாலேயோ என்னவோ இக்கோவிலை குரங்கு கோவில் என்றும் அழைக்கின்றனர்.

அடுத்து, சோளியம்மன் கோவில் என்ற மிகப் பழமையான சிறிய கோவில். காசிவிசுவநாதரின் தமக்கை இந்த சோளியம்மன் என்றும் மக்கள் நம்புகிறார்கள்.சற்றே உயர்ந்த குன்றின் மீது தனியளாக கம்பீரமாக வீற்றிருக்கிறாள் சோளியம்மன்.

சிரி சுவாமி பாஸ்கரானந் சமாதி:

துர்கா கோவிலின் அருகில் சுவாமி பாஸ்கரானந் சமாதி மிகவும் அழகாக சங்மர்மங் என்ற கல்லினால் கட்டப்படடு இருக்கிறது.இந்த சமாதியின் பூந்தோட்டம், கண்ணைக் கவரும் வண்ணம் அழகாக வடிவமைக்கப்பட்டு, பாதுகாக்கவும்படுகிறது.சிவலிங்கத் திருமேனி வடிவில் கட்டப்பட்ட இச்சமாதி எந்நேரமும் திறந்திருக்கிறது.இங்குதான் அருகில் நாங்கள் ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டுச் சென்றோம். பயணிகளுக்கு வரப்பிரசாதம் இந்த ஏடிஎம் வசதி. கையில் பணம் அதிகமாக வைத்துக் கொள்வது பாதுகாப்பற்ற சூழலை எற்படுத்துகிற காலகட்டத்தில் அங்கங்கே, ஏடிஎம் வசதி, மிகுந்த பயனளிப்பதாகாவே இருக்கிறது!அதிகமான கல்வியறிவற்ற கிராமத்து மக்கள் கூட பழக்க தோசத்தில் அழகாக ஏடிஎம்மை பயன்படுத்துவது வரவேற்கத்தக்க அம்சமாகும்.

துளசி மனாஸ் கோவில் :

துளசி மனாஸ் கோவில் துர்கா கோவிலுக்குப்பின் 1964ல் இரண்டு இலட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து கட்டப்பட்டிருக்கிறது. இக்கோவிலின் சுவர்களில் ராமர், சீதை, விஷ்ணு,இலக்குமி, அண்ணபூரணி, ராமாயணம் வடித்த துளசிதாசர் ஆகியவர்கள் அழகிய சித்திர வடிவமாக அருள்பாலிக்கின்றனர். அருகில் சிவபெருமான் தன் தலையில் கங்கையைத் தாங்கியுள்ளது போல் அழகாக வடிவமைக்கப்பட்ட கோவிலும் அதனருகில் அழகான பூந்தோட்டமும் உள்ளது.

பாரத மாதா கோவில் :

இந்த கோவில் 1936ல் மகாத்மா காந்தியடிகள் திறப்பு விழா செய்த பெருமை வாய்ந்த கோவில்.ஆங்கிலேயர்களுடன் நடந்த சுதந்திரப் போராட்டத்தின் நினைவாக சிரிசில் பிரசாத் குப்தா என்பவர் இக்கோவிலைக் கட்டியுள்ளார். இக்கோவிலில் இமாலய பர்வதத்தின் சிகரம் , திபெத் முதலிய இயற்கை காட்சிகளுடன், அழகான சித்திரங்களும் மேலும் அழகூட்டுகிறது. அருகில் ஒரு நூலகமும் இருக்கிறது.

சமஸ்கிருத பல்கலைக்கழகம் :

காசியில் சமஸ்கிருத மொழி கற்றுக் கொள்பவர்கள் அதிகம். பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் கட்டப்பட்ட ‘குயீன்ஸ் காலேஜ்’ என்ற பிரபலமான கல்லூரி, அந்த காலகட்டத்தில் முதல்வராக இருந்த டாக்டர் சம்பூர்ணா நந்தி காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த பல்கலைகழகத்தில் அருங்காட்சியகம் மற்றும் நூலகமும் இருக்கிறது. இந்த பல்கலைக் கழகத்தில் அழகாக கோவில்களும் கட்டப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த பல்கலைக்கழகம் ஆயுர்வேத கல்லூரியாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் :

பனாரசின், தெற்கு எல்லையில் 1300 ஏக்கர் நிலம் காசி ராஜாவினால் கொடுகப்பட்டுள்ளது.இது மிகப் பெரிய பல்கலைக்கழகமாக உள்ளது.மதன் மோகன் மாளவியர் 1916ல் இந்த பல்கலைக்கழகத்தை கட்டியுள்ளார்.முதல் வாசலில் இவருடைய சிலையும் இருக்கிறது.இந்த பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி, நூலகம், சமஸ்கிருத அறிவியல், விவசாய நுட்பம், இசைக்கல்லூரி முதலியவைகள் இருக்கின்றன.இன்னொரு சுவையான தகவல், இந்த பல்கலைக்கழகத்தில், சுயமின் உற்பத்தி செய்யப்படுகிறது.

காசி ராஜாவின் அரண்மனை கங்கை நதியின் தெற்குப் புறம் மிக அழகாக கட்டப்பட்டுள்ளது. ராஜா பயன்படுத்திய விதவிதமான பல்லக்கு,வண்டிகள் மற்றும் அவருடைய உடைகள், ராணியின் உடைகள், அனைத்தும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவையெல்லாம் மிக மோசமான நிலையிலேயே உள்ளது.

அடுத்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலமான சாரநாத் சென்றடைந்தோம். பண்டைய அரண்மனைகளும், தர்பார்களின் நினைவுகள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், இன்றும் செவ்வனே பராமரிக்கப்பட்டு வருகிறது.சாரநாத் காசியிலிருந்து, 6 மைல் தொலைவில் வடக்குப் பகுதியில் இருக்கிறது.இதுவே புத்த மதத்தின் தாய்நாடு. காசியிலிருந்து கார் அல்லது இரயில் மூலம் செல்லலாம்.சாரநாத்தில் இரயில் நிலையம் உள்ளது. பிர்லா சத்திரமும் உள்ளது. சுமார் 2 அல்லது 3 ஃபர்லாங்க் தூரத்தில் கி.மு.5ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சாக்குண்டி இருக்கிறது. அசோகர்,கனிஷ்கர்,குப்தர் முதலிய அரசர்கள் காலத்தில் சாரநாத் நகரம் மென்மேலும் சிறப்படைந்திருக்கிறது. பாஹினி, ஹியின் சங் ஆகிய இரண்டு சீன யாத்ரீகர்கள் கி.மு.5,7ம் நூற்றாண்டில் மிகவும் புகழ்ந்துரைத்துள்ளார்கள். சாரநாத்தில், செங்கற்களால் கட்டப்பட்ட மிக அழகிய புத்தர் கோவில்கள் உள்ளன. புத்த மதத்தினர்கள்,அழிந்து போன, செங்கற்கள், கருங்கற்கள் முதலியவைகளையும் வணங்குகின்றனர். புத்த பகவான் இங்கே ஒரு சாதாரண குடிலில் 4 மாதங்கள் தங்கி இருந்துள்ளார். அந்த இடத்தில் 200 அடி உயர புத்தர் கோவில் கி.மு 5ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. ஒரு அருங்காட்சியகமும் உள்ளது.

இந்த அருங்காட்சியகம் கி.மு.3ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.இதில் புத்த மதத்தின் வரலாற்று சின்னங்கள் மற்றும், அசோகச் சக்கரத்தின் சிதைந்த பாகங்களை அதன் மூல வடிவம் போல் செய்து பாதுகாத்து வருகின்றனர். அதன் முகப்பில், அசோக ஸ்தூபியில் உள்ள நான்கு புறமும் இருக்கக்கூடிய சிங்க உருவ அமைப்பை அப்படியே வைத்து பாதுகாக்கின்றனர்.

முல்காஞ்குடி விஹார் :

இந்தக் கோவில் தங்கத்தில் இலங்கை ஆளுநர் காதர்மபாலினால் கட்டப்பட்டது.ஜப்பானிய சிற்ப வல்லுநர்களால் கட்டப்பட்டுள்ளது. அஜந்தா பெயிண்டிங்கும் உள்ளது.

அடுத்து நாம் தரிசிக்கப் போவது சுவர்க்க லோகத்தின் முகப்பு வாயிலான ரிசிகேஷ் மற்றும் ஹரித்துவார் ஆகிய புண்ணியத்தலங்களை!

தொடரும்.


காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி 2 (5)
May 15, 2011
by coral shree

Sunday, May 15, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில் - பகுதி - 9

வெண்ணிலவில் ஒரு கருமுகில் ! (9)


பரந்து விரிந்த வனாந்திரம். திரும்பிய புறமெல்லாம் வறண்ட் நிலங்கள்! காய்ந்து சருகாய்ப் போன மரங்கள். அங்கங்கே கூட்டம் கூட்டமாய் முகம் தெரியாத விதவிதமான மூகமூடிகளுடன், எள்ளி நகையாடும் மனிதர்கள். இதில் அழகான முகமூடிகளைத் தாங்கிய உருவங்களை நாடிச் சென்ற மற்றொரு முகமூடி அதன் உண்மை முகத்தைக் கண்டு அலறிக்கொண்டு காத தூரம் ஓடும் காட்சி..........மத்தியில் மரக்கட்டையாய் நீண்ட ஒரு உருவம் மல்லாந்துக்கிடக்க, சுற்றிலும் கருமையான, பயங்கர தோற்றத்துடன் கொத்தித் திங்கக் காத்திருக்கும் இராட்சத கழுகுகள்..........அய்யோ பாவம் யாரந்த உருவம் என்று உற்று நோக்க.......... அம்மாடியோவ்.......... நானா அது ?

வியர்வை வெள்ளம் ஆறாய்ப் பெருக, க்ண்கள் திறக்க மறுக்க, மிகச் சிரமப்பட்டு போராடி மீண்டு வந்தது போல் கண் விழித்தாள ரம்யா. டிஜிட்டல் கடிகாரம் இரவு 2 மணியைக் காட்டியது. ஓ.......கனவா.......சே.........
என்ன மோசமான கனவு!

இரவு வெகு நேரம் தூங்காமல் எதை, எதையோ நினைத்து மனக் குழப்பத்தோடேயே கண் அசந்ததின் விளைவுதான் இப்படி ஒரு மோசமான கனவு என்பது புரிந்தாலும், அதைத் தவிர்க்கும் உபாயம்தான் அவளுக்குப் பிடிபடவில்லை. ரிஷியின் மனைவி சொன்ன விசயம் தன் மனதை மிகவும் பாதித்திருந்ததையும் உணர முடிந்தது அவளால். ரிஷி மீது இருந்த அத்துனைக் கோபமும் நொடியில் மறைந்து போனது அவளுக்கே ஆச்சரியமாகவும் இருந்தது. ஆம் ரிஷி செய்தது சாதாரண தியாகமா? எந்த குறையும் இல்லாத பெண்களைத் திருமணம் செய்யவே ஆயிரம் யோசனை செய்யும் இளைஞர்கள் மத்தியில் ஒரு பெண் என்பதற்கு ஆதாரச்சுருதியான, கருவைச் சுமக்கும் அந்த கர்பப்பையே இல்லாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முன்வந்த அவன் தியாகச் சிந்தையை எப்படி பாராட்டுவது. தன் தாய், அந்த கொடிய வியாதியால் அவதிப்பட்டு, உருக்குலைந்து உயிர்விட்ட ரணம் அந்த இளகிய உள்ளத்தை ஆழமாக பாதித்ததன் விளைவு, அதே வியாதியால், திருமண வயதில் பாதிக்கப்பட்டு, நோயின் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டுபிடித்ததனால், அந்த ஒரு பகுதியின் இழப்போடு உயிர் பிழைக்க முடிந்த, தன்னுடைய தூரத்து உறவினரின் பெண்ணை மனமுவந்து மணந்து கொண்ட அவனைத் தன் நண்பன் என்று சொல்வதில் பெருமையாக இருந்தது அவளுக்கு.

சுட்டித்தனமும், குறும்பும் நிறைந்திருந்த இந்த ரிஷிக்குள் இத்துனை நல்ல மனம் இருக்கும் என்று நினைக்க முடியவில்லை. ஆனாலும் தனக்கு அந்த பேரிழப்பைத் தாங்குவது சிரமமான காரியம் என்றாலும், காலம் எல்லாவற்றிற்கும் ஒரு சிறந்த மருந்து என்பதும் அவளால் உணர முடிந்தது.

மாறனின் தந்தையின் உடல் நலம் குறித்த பெரும் கவலையும் சேர்ந்து கொண்டது.மூன்றாவது நாளாக இன்று அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பது வேதனையான விசயம் தான். மாறன் மருத்துவரிடம் தந்தையின் உடல் நலம் குறித்து விசாரித்துக் கொண்டே இருந்தாலும், அவன் உடனே கிளம்பி செல்ல முடியாத அளவிற்கு சில பிரச்சனைகள். விரைவில் கிளம்பும் ஏற்பாடுகளும் செய்து கொண்டுதான் இருக்கிறான். தந்தை அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாக அறிந்தவுடன் தான் சற்றே நிம்மதிப் பெருமூச்சு அவனிடமிருந்து வந்தது.


--
சில நேரங்களில் விதியின் போக்கை எவராலும் உணர முடிவதில்லை. எப்படியும் அவந்திகா பற்றி அம்மாவிடமும், அப்பாவிடமும் சொல்லிவிட வேண்டும் என்று அவன் எடுத்த முயற்சியை எவ்வளவு எளிதாக முறியடித்ததோடு, அதே அத்தையிடமும், அத்தை பெண்ணிடமும் தானே வலியச் சென்று அப்பாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க வேண்டி அடிக்கடி பேசவும் வைத்து விட்டதே......

ரம்யாவின் நிலையோ அதனினும் பரிதாபமானது. இவ்வளவு நாள் ரிஷி தனக்கு பெரிய துரோகம் இழைத்து விட்டதாக கற்பனை பண்ணிக் கொண்டதன் விளைவு,அவன் மீது ஏற்பட்ட கோபம், காதலை மறக்கச் செய்தது. ஆனால் இன்று அவனுடைய தியாக மனநிலையை உணர்ந்து கொண்டபின், காரிருள் விலகிய கதிரவன் போல் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது மனது.ரிஷியின் மீது எப்படியும் தப்பு கண்டுபிடித்தே தீர வேண்டும் என்று மனம் திட்டம் போட்டு வேலை செய்ததையும் அவளால் மறுக்க இயலவில்லை.

தனக்கு நிறைவேறாமல் போன காதலை எப்படியும், தன் நண்பனை அவன் அன்பிற்குப் பாத்திரமான அவந்திகாவுடன் சேர்த்து வைத்து விடுவது என்று முடிவு செய்த பிறகுதான் சற்றே ஆறுதல் அடைந்தது.நினைப்பதெல்லாம் நடத்திவிடத்தான் அனைவருக்கும் ஆசை, விதி என்ற ஒன்று இருப்பதை மறக்கும்வரை.

மாறன் அலுவலகத்திலும் இருப்பு கொள்ளாமல், தந்தையின் உடல் நலம் குறித்த கவலையில் பணியிலும் கவனம் செலுத்த இயலாமல் பரிதவித்ததை உணர்ந்த உயர் அதிகாரி, அவனுக்கு விடுமுறையும் கொடுத்து, பயணச் சீட்டிற்கான ஏற்பாடும் பண்ணிக் கொடுத்தார்.ரம்யாவிற்கு முன்பாகவே தான் இந்தியா கிளம்பி வருவோம், அதுவும் இப்படி ஒரு சூழலில் வருவோம் என்ற நினைத்துப் பார்க்கவில்லையென்றாலும், காலத்தின் கட்டாயம்.

விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன், தன்னையறியாமல் மனது அப்பாவைத் தேட ஆரம்பித்தது. ஒவ்வொருமுறை தான் செல்லும் போதும் வரும் போதும் தந்தையை வரவேண்டாம் என்று கூறினாலுல் அவர் அதை சட்டை செய்யாமல், காலந்தவறாமல் சரியாக வந்து சேர்ந்துவிடுவார். கண்கள் தன்னையறியாமல் தந்தையைத் தேட, மூத்த அண்ணன் கண்ணில் பட்டான். ....

‘ அண்ணா, நீ எப்ப மும்பையிலருந்து வ்ந்தாய்’?

‘நானும், நேற்றுதான் வந்தேன், மாறன்’

‘அண்ணியும் கூட வந்திருக்காங்கல்ல.எப்படி இருக்காங்க’.

‘இல்லப்பா. அண்ணியை டாக்டர் டிராவல் பண்ண வேண்டாம்னு சொல்லியிருக்காங்க.....குழந்தை உண்டாகியிருக்கு. கொஞ்சம் வீக்கா இருக்கறதுனால ரெஸ்ட்ல இருக்கச் சொல்லியிருக்கா, டாக்டர்.

இருவரும் ஏதும் பேசத்தோன்றாமல், ஆழ்ந்த யோசனையினூடே, மருத்துவமனை வந்து சேர்ந்தார்கள்.

அண்ணன் வீட்டிற்குச் சென்று சற்று ஓய்வெடுத்துவிட்டு வந்து அப்பாவைப் பார்க்கலாம் என்று சொல்லியும் கேட்காமல், மாறன் அடம்பிடித்து நேரே மருத்துவமனை வந்து சேர்ந்தான். கட்டிலில் கிழிந்த நாராய்க் கிடந்த தந்தையைப் பார்க்கவே வேதனையாக இருந்தது . இந்த ஒரு வாரத்தில் எத்துனை மாற்றம் .அசந்து உறங்கிக் கொண்டிருந்ததால், சத்தம் செய்ய மனம் வராமல், அம்மாவை வெளியே வரும்படி கையை ஆட்டிவிட்டு, வெளியில் வந்தான்.

மாறனைப் பார்த்தவுடன், தாய்மை உணர்ச்சி மேலிட,மகனின் கையைப் பிடித்துக் கொண்டு, ‘எனக்கு பயமா இருக்குப்பா’........என்று நாத்தழுக்க சொல்ல,மாறனின் கண்களிலும் கண்ணீர் தழும்புவதைப் பார்த்த அண்ணன்,

‘என்ன மாறன் இது. அம்மாதான் உணர்ச்சிவசப் படுகிறார்களென்றால், நீயும் இப்படி இருப்பது சரியல்ல. அம்மாவிற்கு ஆறுதல் சொல்வதைவிட்டு, நீயும் இப்படி இருந்தால் எப்படி..?’

‘சரி அண்ணா, டாக்டர் என்ன சொன்னார். ஒன்னும் பயம் இல்லையே’


‘சரி . மருத்துவமனையைப் பார்த்தவுடன் அப்பாவிற்கு நல்லபடியாக விரைவில் குணம் அடைந்து விடும் என்ற நம்பிக்கை வருகிறது.அம்மா, நீங்க ஏன் இவ்வளவு டல்லா இருக்கீங்க. பயப்படாதீங்க அம்மா. அப்பா விரைவில் குணமடைந்து விடுவார்’என்றான், தாயின் கைகளைப்பிடித்துக் கொண்டு.

அம்மாவின் செல்பேசி அழைக்கவும், மாறன் அதை எடுத்து ஹலோ என்று அழைக்க,மறுமுனையில், அத்தை.

‘ ஹலோ, மாறனாப்பா..... எப்படி இருக்கிறாய். அப்பா நல்லா இருக்கார். கவலைப்படாதீங்கப்பா. விரைவில் வீட்டிற்கு நல்லபடியாக கூட்டிச் செல்லலாம் ‘ என்று சொல்லிவிட்டு,மங்களத்திடம் போனை கொடுக்கச் சொல்லி,

‘ மங்களம், அனுவிடம் சாப்பாடு கொடுத்தனுப்புகிறேன்.இன்னைக்கு அவளுக்கு ஆபீஸ் லீவ்தான்.’

‘சரி, அக்கா,நீங்களும் முடிந்தால் ஒரு எட்டு வந்துட்டுப் போனேள்னா பரவாயில்லை’

‘ அதுக்கென்ன. நான் சாயங்காலமா, வரேன்’

அத்தை போனை வைத்தவுடன், மாறன் அம்மாவின் முகத்தைப் பார்க்க, அம்மாவும்,

‘இந்த ஒரு வாரமா, அனுதான் தினந்தோறும் வந்து அப்பாவிற்கு தேவையான காரியங்களெல்லாம் செய்துண்டிருக்கா........இதோ இன்னும் சித்த நாழில வந்துடுவோ......’

அனு வரப்போகிறாளா.....மாறனுக்கு அதுக்கும் மேல் அந்த இடத்தில் இருக்கப் பிடிக்காவிட்டாலும், தந்தை முழித்தவுடன் அவரைப் பார்த்து பேச வேண்டுமென்ற ஆவலில் மௌனமாகக் காத்திருந்தான்.....


தொடரும்.

--