Saturday, September 14, 2013

ஏன் இப்படி?





பவள சங்கரி

சமீபத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதிய கதை. இளகிய மனம் படைத்தவர்கள் படிக்காமல் இருப்பது நல்லது. இப்படியும் நடக்குமா? உண்மையாக இருக்குமா? அல்லது வணிக நோக்கில் இப்படி ஒரு தந்திரமோ என்ற எண்ணம் கூட தோன்றலாம்.. இல்லைங்க.. இது சத்தியமாக நடந்த ஒரு சம்பவம். நடக்கக்கூடிய சம்பவம்தான்.. படிப்பினை ஊட்டும் சம்பவம்தான்.. வாசித்துப் பாருங்கள் புரியும்!


என்னங்க, உங்க அம்மாகிட்ட இருந்து இன்னைக்கும் தபால் வந்திருக்கு. இந்த வாரத்தில் மட்டும் இது இரண்டாவது தபால்பாவங்க அத்தை, அவுங்களுக்கு ஒரு பதில் தபால்கூட போட முடியாதா உங்களுக்குநாம பதில் போடாட்டியும், அவங்க தவறாம வாரம் இரண்டு தபால் போட்டுக்கிட்டு இருக்காங்க. இந்த தடவை ரொம்ப விசனமா எழுதியிருக்காங்க. அந்த டேபிள் மேலதான் இருக்கு, எடுத்துப்பாருங்க. ஒரு நாலு வரி பதில் கடுதாசியாவது எழுதிப் போடுங்க

போடலாம். என்னத்த எழுதறது. நாம எழுதப்போற எதுவும் அவங்கள சந்தோசப்படுத்தப் போறதில்ல.. அதுக்கு சும்மாவே இருக்கலாம்னு தோணுது சந்திரா.”

Thursday, September 12, 2013

சிறுகை துளாவி... சிற்றுளி எடுத்து!



பவள சங்கரி


எங்கோ ஓரு மூலையில் ஒரு திரை சட்டென்று விலகுகிறது..  வெடித்துக்கொண்டு சிதறுகிறது சொற்களாக..  ஆசானின் அரிச்சுவடியை சிரமேற்கொண்டு சிறுகை துளாவி சிற்றுளி எடுத்து சிரத்தையாய் வடிவமைக்கும் முயற்சி..தவறானால் தண்டனிட்டு மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்! 



என்றோ காயாத கான்கிரீட் தரையில் 
பதிந்து கிடந்த நாயின் அடியொற்றி
பற்றில்லாக் கால்களின் பாதையறியா பயணம்.

கந்தலாகிப்போன வறட்டு கௌரவம் 
கதைபல பேசி கட்டாந்தரையாக்கியதால்
நத்தையாய் சுருண்டு போனது உயிர்.

பூமியாய் பொறுமையும்
 சோதியாய் தனிமையும்
போதியாய் ஞானமும்
சாமியாய் வரமும் வந்தது

ஓடுகூட பாரமாகித்தான் போகிறது
கூடுவிட்டு கூடுபாய ஊர்ந்து தேய்க்கிறது
கடக்க வேண்டிய காததூரத்தையும்!




படத்திற்கு நன்றி:

பெருமதிப்பிற்குரிய கவிஞர் சுந்தர்ஜி அவர்களின் ‘அதனதன் இடம்’ என்ற கவிதையின் இன்ஸ்பிரேஷன் தான் இந்த என் கவிதை! அவரிடம் சம்மதம் பெற்று படத்தையும் சுட்டுவிட்டேன்! கவிஞர் சுந்தர்ஜி அவர்களுக்கு என் மனமார்ந்த  நன்றி.

Tuesday, September 10, 2013

வினை தீர்க்கும் விநாயகன்!



பவள சங்கரி



உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நில உலாவிய நீர் மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம். 

அனைத்து உயிர்களிலும் இறைவன் இருக்கிறான். காணும் ஒவ்வொரு பொருளும் இறை வடிவாகக் காட்சியளிப்பதே தமிழர்தம் அறநெறியாம். கீதையில் கண்ணன் அருளும் மொழியும் இதுதான். மலரிலும் மகேசனைக் கண்ட  தாயுமானவர் சுவாமிகள் அருளியதும், ‘பார்க்கின்ற மலரூடு நீயேயிருத்தி ` என்பதுதான். பார்க்கின்ற இடமெல்லாம் நிறைந்திருக்கிற பரிபூரண ஆனந்தம் ஆண்டவன் என்கிறார் அவர். அதாவது நீர், வான், நெருப்பு, காற்று, சந்திரன், சூரியன், மண், உயிர்கள் என எட்டுப் பொருட்களிலும் நிறைந்துள்ளவன் இறைவன் . உடலில் பேதமிருந்தாலும், இறைவன் அனைத்து உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான் . இந்த உயரிய தத்துவத்தின் மொத்த உருவமே விநாயகப் பெருமானின் திருவுருவமாகும். பூமியின் ஒரு உருவகம்தான் விநாயகர் உருவம்.. 
யானை முகமும், மனித உடலும் கொண்டு அனைத்து உயிரும் சமம் என்று சொல்லாமல் சொல்கிறானோ?