Showing posts with label சமூக விழிப்புணர்வு.. Show all posts
Showing posts with label சமூக விழிப்புணர்வு.. Show all posts

Thursday, April 12, 2012

காற்றில் ஆடும் தீபங்கள்


இனிய நந்தன புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர்களே!


வாழ்வியல் வண்ணங்கள் (1)

பெண்களை, குத்துவிளக்கு, குலவிளக்கு என்று கொண்டாடுவது பெரும்பாலும் நம் தமிழர் மரபு. அம்மரபு வழி பண்பாடு பெண்களுக்கென்று ஒரு எல்லைக்கோட்டையும் நிர்ணயித்து வைத்துள்ளது. அந்த எல்லைக்கோட்டினுள் வாழ்த் தெரிந்த பெண்மகள், தம் சுய விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடாமல் ஒரு தவ வாழ்க்கையை மேற்கொண்டு காலத்தை கடத்தி வந்த காலங்கள், பெண்களின் வாழ்க்கைக்குப் பாதுகாப்பு என்பது உறுதியான ஒன்றாக இருந்தது. பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம், கல்வியறிவு, என முன்னேற்றமடைய ஆரம்பித்தவுடன், இந்த பாதுகாப்பு பண்பாட்டு எல்லை சுருங்கி, சுதந்திரம் என்ற ஒன்று கட்டவிழ்த்து விட்டது போன்ற நிலையை ஏற்படுத்துவதன் விளைவாக பல பிரச்சனைகளையும் எதிர்கொள்கிறார்கள். சில நேரங்களில் காற்றில் ஆடும் தீபமாக வாழ்க்கை அச்சமூட்டுகிறது. சில காலங்களில் அது நிலைபெற்று நின்றுவிடும் என்ற நம்பிக்கை இருந்தாலும், இந்த இடைப்பட்ட கால ஊசலாட்டம் ஏற்படுத்தும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு வேண்டும்.

நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், தன்னம்பிக்கையும், சலியாத உழைப்பும் கொண்டு சமுதாயத்தில் பல்வேறு சாதனைகள் புரிந்து கொண்டு, பலவேறு துறைகளிலும், பலருக்கும் முன்னோடியாகவும், இருக்கக் கூடியவராகவும் உள்ள இக்காலகட்டத்திலும், சுயவிழிப்புணர்வு இன்மையாலும், தேவையில்லாத அச்சம், அசாத்திய துணிச்சல், தவறான முடிவெடுத்தல், அளவிற்கதிகமான தன்னம்பிக்கை, கோழைத்தனமான முடிவு என இப்படி பல்வேறு வழிகளில் தங்கள் வாழ்க்கைக்கு தாங்களே பகையாளி ஆனவர்களும் உண்டு. அந்த வகையில் இக்கட்டுரைத்தொடர் பல உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு, இன்றைய பெண்களின் நிலையை அலசப்போகிற ஒரு நிதர்சனம். இதில் சுழலப் போகும் தீபங்கள் நீங்கள் அறிந்தவர்களாகவோ, உங்களுக்கு மிகவும் நெருங்கியவர்களாகவோ இருக்கலாம்….. தத்தளிக்கும் தீபங்கள் சில அணைந்து விட்டாலும், எப்படி வாழக்கூடாது என்பதற்கு முன்னுதாரணமாக இருப்பதன் முகமாக வாழப்போகிறவர்கள். இக்கட்டுரைகளில் ஊரும், பெயரும் மாற்றப்பட்டுள்ளது. யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டதும் அல்ல. சில நிதர்சனங்கள் சரியான முறையில் புரிந்து கொள்ளப்படல் வேண்டும் என்ற ஆதங்கத்தில் மட்டுமே எழுதப்படுகிறது.

தீபம் (1)

தணலில் வெந்த தாய்மை…..

பெரும்பாலான குடும்பங்களில் நம் குழந்தைகளின் திருமண வாழ்க்கையையும், மற்ற முக்கியமான எதிர்கால முடிவுகளை எடுப்பதிலும் ஜோசியம், ஜாதகம் என்பது பெரும்பங்கு வகிக்கிறது. பல நேரங்களில் தலையெழுத்தையே மாற்றக்கூடிய வல்லமை பெற்றது. அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் அல்லவா….?

சந்திரிகா, நல்ல பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்து, தெய்வ நம்பிக்கையும், பெரியோரிடம் பயபக்தியும் கொண்டு, அவ்ர்தம் சொற்களை வேதவாக்காக எண்ணி வாழக்கூடிய சராசரி இந்தியப்பெண். சுயவிருப்பு, வெறுப்பு என்பதற்கெல்லாம் இடம் இருந்ததில்லை இது போன்ற சூழலில் வளரும் பெண்களுக்கு. பெரியவர்கள் சொல்வதை கண்மூடி கேட்டுக் கொண்டு போக வேண்டியதுதான் ஒரேவழி. மாற்றுவழி என்ற உபாயமே வழங்கப்படுவதில்லை. படிப்பில் நல்ல சூட்டிப்பான பெண் அவள். பள்ளியிறுதித் தேர்வில் பள்ளியிலேயே இரண்டாவது மாணவியாக தேர்ச்சி பெற்றவள். மேற்படிப்பு படித்து மருத்துவராக வேண்டும் என்று பல கற்பனைகள் கொண்டிருந்தவள். தன் விருப்பம் எப்படியும் நிறைவேறும் என்ற கனவும் கொண்டு வாழ்பவள்.

ஆனால் நடந்ததோ வேறு. உறவு வகையில் நல்ல வரன் வரவும், ஜாதகத்தில் சில தோஷங்கள் பெயரைச் சொல்லி, அதற்குத் தோதான வரன் அமைவது சிரமம், அதனால் எல்லாம் கூடிவந்து இப்படி ஒரு வரன் வரும்போது தவிர்க்கக் கூடாது என்ற மூத்தோரின் சொல்கேட்டு வேறு வழியின்றி, கனவுகளைப் புதைத்துவிட்டு மங்கல நாணை மனமுவந்து ஏற்றுக் கொண்டவள். அதற்குப் பிறகு வாழ்க்கை தெளிந்த நீரோடையாகத்தான் போய்க்கொண்டிருந்தது, இரண்டாவது குழந்தை பிறக்கும் வரை. நல்ல வசதியான குடும்பம். பரம்பரையாக நெசவுத் தொழில் செய்பவர்கள். தற்காலமுறையில் நவீனப்படுத்த்ப்பட்ட இயந்திரங்களுடன், கடின உழைப்பும் சேர நன்கு கொடிகட்டி பறந்து கொண்டிருந்தனர்.

காலச்சக்கரம் எப்போதும் ஒரே மாதிரி சுழலுவதில்லையே. நூல் விலை ஏற்றம் பணியாட்கள் பிரச்சனை என வியாபாரத்தில் புயல் அடிக்க ஆரம்பிக்க, காரணங்கள் அலசப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஜோசியம், ஜாதகம் என்று பார்க்க ஆரம்பித்தார்கள். அப்போதுதான், சந்திரிகா இரண்டாவது குழந்தை உண்டாகியிருந்தாள். வீட்டு நிலை அவள் உடல்நிலையையும் பாதித்தது. மிகப் பொறுமையான குணமும், அமைதியான சுபாவமும் கொண்டவளான அவள் அனைத்தையும் பொறுத்துக் கொண்டுதான் இருந்தாள். ஆனால் அந்தப் பொறுமையின் எல்லையைச் சோதிப்பதாகவே சம்பவங்கள் நடந்தது.

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில், அனைத்து விதமான பரிகாரங்களும் செய்யத் தயாராகிவிட்டனர். அந்த இடத்தில்தான் சந்திரிகாவின் விதி விளையாட ஆரம்பித்தது. குடும்ப ஜோசியர் குலதெயவ வழிபாடு, அன்னதானம் என ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைத்துப் பரிகாரங்களையும் சொன்னவர், இறுதியாக ஒரு குண்டை தூக்கிப் போட்டுவிட்டார். ஆம், சந்திரிகாவின் வயிற்றில் கரு உருவான நேரம் சரியில்லையாம்.! அதுவும் ஒரு காரணமாம் வியாபாரம் நொடித்துப்போவதற்கு. அவ்வளவுதான் குடும்பமே சேர்ந்து முட்டாள்தனமாக ஒரு முடிவெடுத்துள்ளார்கள். சந்திரிகாவின் வயிற்றில் வளரும் கருவை அழித்துவிடுவது என்று. அவள் அழுது ஆர்ப்பாட்டம் செய்தும் கணவனின் கட்டாயத்தால், வேறு வழியின்றி மருத்துவமனை சென்றவள், அங்கு மருத்துவர், குழந்தை நன்கு வளர்ந்துவிட்டதால் கருவை அழிக்க முடியாது என்று சொல்லி, வயிற்றில் பாலை வார்த்ததால், வேறு வழியின்றி, வீடு திரும்பினர்.

நாட்கள் பிரச்சனைகளுடன் சேர்ந்தே நகர்ந்து கொண்டிருந்தது. வியாபாரத்தில் ஒரு பிரச்சனை முளைவிட ஆரம்பிக்கும்போதே அதன் வேரை சரியாக அறிந்து அதனைக் களையாவிட்டால், அது விடவிருட்சமாக வளரத்தானே செய்யும்? அதனைக் களையும் முயற்சியை சரியாகக் கடைப்பிடிக்காமல், தேவையற்ற மற்ற விசயங்களில் கவனம் செலுத்தி, மேலும் பிரச்சனையை வளர்த்துக்கொண்டவர்கள், சந்திரிகாவின் வயிற்றில் வளரும் குழந்தையின் மீதே அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்ததால் அவள் மனதிலும், உளைச்சல் அதிகமாக ஆரம்பித்தது. விளைவு அவள் உடல் நலமும் பாதிக்கப்பட்டது. பிரசவ நேரம் நெருங்க, நெருங்க, குடும்பத்தில், குழந்தை பிறந்தவுடன் அதை என்ன செய்வது என்று யோசிக்கும் அளவிற்கு போனது, தாயினால் தாங்க முடியாத வேதனையாகிப் போனது.

பிரசவ வேதனையை பல்லைக் கடித்துக்கொண்டு தாங்கிக் கொண்ட அந்தத் தாய்க்கு, பெற்ற குழந்தையை அனாதை ஆசிரமத்தில் விட்டுவிடலாம் என்று இறுதியாக எடுத்த முடிவில் உடன்பட முடியாத வேதனையில் கதிகலங்கிப் போனாள். எவ்வளவோ வாதாடிப் பார்த்தும் குடும்பத்தில் அனைவரும் ஒன்றுபோல குழந்தையை இழப்பதிலேயே குறியாய் இருக்க, செய்வதறியாது, மன வேதனையில் புழுவாய்த் துடித்தவள், பிறந்தவீடே அடைக்க்லம் என்று அடிக்கடி அங்கு சென்று தங்கவும் ஆரம்பித்திருக்கிறாள். அங்கேயும் அவளுக்குப் பிரச்சனை உறவினர் வழியாக வந்துள்ளது. பெண் கணவன் வீட்டில் ஒழுங்காகப் பிழைக்காமல் தாய் வீட்டில் வந்து அடிக்கடி தங்க ஆரம்பித்தால் சில பெற்றவர்கள் வழக்கமாகச் செய்யும் தவறு, அப்பெண்ணின் மனநிலையைப் பற்றிக்கூட அறிந்து கொள்ள முயலாமல், எப்படியும் அவளை சமாதானப்படுத்தி கணவன் வீட்டில் கொண்டு விட்டுவிடுவது….. அதற்கு, திருமணம் ஆகாத அடுத்த பெண்ணைக் காரணம் காட்டி அவள் வாழ்க்கை கெட்டுவிடும் என்று பயமுறுத்தி கட்டாயப்படுத்தி அனுப்பி விட்டார்கள்.

பிரச்சனை அதிகமாக, புகுந்த வீட்டிலோ குழந்தையை எங்காவது தொலைத்துவிட்டு வந்தால்தான் ஆச்சு என்று கட்டாயப்படுத்தவும், பிறந்த வீட்டிலோ, கணவனும், மாமனார், மாமியாரும் என்ன சொல்கிறார்களோ அதன்படி கேட்டுத்தான் நடக்க வேண்டும் என்று உறுதியாகச் சொல்லி அனுப்பிவிட்டதாலோ, இருதலைக்கொள்ளி எறும்பாக போக்கிடம் தெரியாமல், ஒரு வயதே ஆன, பெண் குழந்தையை, இழக்கவும் முடியாமல் அத்தாய் பட்டவேதனை சொல்லில் அடங்காது. பொருளாதாரச் சுதந்திரமும் இல்லாமல், தனியாக வெளியே சென்று குழந்தைகளைக் காப்பாற்றும் துணிச்சலும் இல்லாமல், பெற்றக் குழந்தையை பிரித்து வைக்கக் கட்டாயப்படுத்தும் கொடுமையைச் செய்யும் புகுந்த வீட்டாரைத் தட்டிக் கேட்கும் தைரியமும் இல்லாமல், ஒரு பெண் எடுக்கக் கூடிய அடுத்த முடிவு என்னவாக இருக்க முடியும்?

ஆம், அதேதான், தன் இறப்பு மட்டுமே இதற்கான ஒரே தீர்வு என்று முடிவெடுத்தவள், தன் குழந்தைகளும் இவர்களிடம் சிக்கித் தவிக்கக் கூடாது என்ற கோழைத்தனமான முடிவையும் சேர்ந்தே எடுத்து விட்டாள். மூன்று வயதான மூத்த மகனையும், ஒரு வயதான இளைய மகளையும் தம் படுக்கையறையினுள் கூட்டிச்சென்று, எண்ணவும் அச்சம் ஏற்படுத்தும் செயலைச் செய்துவிட்டாள். மண்ணெண்ணையை ஊற்றிக் கொளுத்தி விட்டாள். மூன்று உயிர்களும் கருகி சாம்பலாகிவிட்டன. இதற்கு யார் காரணம், மூடநம்பிக்கைகள் என்றாலும்,

பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
திடங்கொண்டு போராடு பாப்பா!

என்று முழங்கினானே பாரதி, அத்துணிச்சலை ஊட்டி வளர்க்காத பெற்றோரின் குற்றமா அன்றி,

துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!
சூரப் பிள்ளைகள் தாயென் றும் போற்றுவோம்.
வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்
கலிய ழிப்பது பெண்க ளறமடா!
கைகள் கோர்த்துக் களிப்பதுநின் றாடுவோம்.!

என்று கணவனை வழிநடத்திச் செல்லும் வனமையையும் வளர்த்திக் கொள்ளாதது அவளுடைய குற்றமா? சிந்திக்க வேண்டும் நண்பர்களே. பெண் குழந்தைகளை கட்டுப்பாடுகள் வைத்து வளர்க்க வேண்டியது அவர்களுடைய பாதுகாப்பிற்காக மட்டுமே என்று வாதிடும் பெற்றோராக இருந்தாலும், அவளுக்கு தற்காப்பு என்ற தாரக மந்திரத்தையும், வாழ்க்கையில் எத்தகைய பிரச்சனைகள் வந்தாலும், கோழைத்தனமான முடிவு எடுக்காமல், எதிர்த்து நின்று சமாளிக்கும் வல்லமையையும் ஊட்டி வளர்க்க வேண்டாமா?

ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன், பெற்றோரின் பொறுப்புகள் அதிகமாவதை உணரும் நாம், தங்கத்தையும், வெள்ளியையும் சேர்க்க ஆரம்பிக்கிறோம். அவளுடைய சுயவலிமையை மேம்படுத்திக் கொள்ளும் கலையைக் கற்பிக்கத் தவறுகிறோம். திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒரு பகுதி மட்டுமே. அதற்கு அவள் தன்னை முழுவதுமாக தயார்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்கு அவளுக்குத் தேவையான கல்வியறிவை ஊட்டவேண்டும். சுயவிழிப்புணர்வை ஏற்படுத்தி வாழ்க்கையில் நேர்படும் பிரச்சனைகளை எதிர்த்து நின்று சமாளிக்கும் சக்தி கொடுப்பதும் அக்கல்வியறிவு மட்டுமாகத்தானே இருக்க முடியும். அக்கல்வியறிவை எப்பாடுபட்டேனும் அளிக்க வேண்டும் என்பதில் உறுதி கொள்ள வேண்டும். அது மட்டுமே இது போன்றதொரு பிரச்சனைகள் வராமல் தடுக்கக்கூடிய காப்பாக அமைய முடியும் அல்லவா.

”தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.”
என்னும் ஐயனின் வாக்கைக் காக்கும் பெண்மகளாக வாழும் வாய்ப்பை வளப்படுத்துவோம்!

தயவுசெய்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தொடரும்.

படங்களுக்கு நன்றி:

http://ssubbanna.sulekha.com/albums/bydate/2009-09-20/slideshow/281605.htm

http://trade.indiamart.com/details.mp?offer=2095133988

Sunday, April 8, 2012

மொழியின் எல்லையே நம் சிந்தனையின் எல்லை!



மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் – அண்ணன்
வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்!
கவிஞர் கண்ணதாசனின் இனிய கவிமொழியில், டி.எம்.சௌந்தரராசன் அவர்களின் தேனினும் இனிய குரலில், பாசமலர் எனும் திரைப்படத்தின் பிரபலமான பாடல் இது. இந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தபோது, நண்பர் கேட்ட ஒரு கேள்வி என்னை சிந்திக்க வைத்தது. ”ஒரு தங்கை உறங்குகிறாள், ஆனால் கவிஞர் மலரைப்போல் தங்கை உறங்குகிறாள் என்று சொல்லாமல் ஏன் மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் என்று சொல்ல வேண்டும்” என்ற வினாவை எழுப்பினார். இத்தனை ஆண்டுகளாக இப்பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் எமக்கு இப்படி ஒரு ஐயம் எழுந்ததே இல்லையே….. சிந்திக்க ஆரம்பித்தேன்…. அதற்கான வண்ணமிகு காட்சி அழகாக எம் எண்ணத்தில் உதித்தது.
கவின்மிகு மலர்வனம்
மதிநுதல் மங்கையவள்
வண்ணமிகு மலர்மஞ்சமதில்
சயனம் கொண்டுள்ளாள்
பாசமிகு தமையனவன்
நேசமிகு சகோதரியின்
அமைதியான நித்திரைக்காக
காவல்காத்து நிற்கிறான்
மலர்க்கூட்டத்தை மொய்க்கும்
வண்டுகளின் ரீங்காரம்
இன்னிசை கீதமாய்
தாலாட்டாய் இசைக்கிறது.
அம்மயக்கத்தில் மலர்களும்
கிரக்கமாய் துவண்டு கிடக்கிறது
அம்மலர்களை ஒத்ததாம்
மங்கையவள் வதனம்…….
இதுவே என் பதிலாய் என் நண்பருக்கு நான் விளக்க அவருடைய சிந்தையோ வேறு திசை நோக்கி பயணிக்கிறது. அதாவது, பொதுவாக மங்கையரின் ஒவ்வொரு அங்கத்தையும் ஒவ்வொரு மலருக்குச் சமமாய் வர்ணிப்பது கவிஞர்களின் வழமை. அவ்வகையில் அல்லி மலர் போன்ற கண்களையும், எள் மலர் போன்ற நாசியும், தாமரை மலர் போன்ற மலர்ந்த முகமும், ரோசா இதழ்களும் ,இப்படி ஒரு மலர்க்கூட்டமாகத் தம் தங்கையின் காட்சி அவனுக்குக் கிடைப்பதாலேயே, மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் என்றானாம்…… என்னே கற்பனை பாருங்கள்!
இதுதானே நம் செம்மொழியின் சீர்மிகு வளமை. மொழிவளம் இருந்தால் எப்படி வேண்டுமானாலும் பொருளில் புகுந்து விளையாடலாமே! இதற்கு நமக்கு வேண்டியதெல்லாம் சிந்தனா சக்தி அல்லவா? இந்த சிந்தனையை இப்போது எந்த மொழியில் கொண்டுவரப் போகிறோம் என்பதுதான் கேள்வி. அவரவர் தாய்மொழியில் சிந்திக்கும் வேளையில் மட்டுமே நம் சிந்தனையின் எல்லை பரந்துபட்டுக் கிடக்கும். வேற்று மொழியில் சிந்திக்கும் பொழுது அச்சிந்தனை குறுகிய எல்லைக்குள் முடங்கிவிடலாம். ஒருவர் எவ்வளவுதான் வேற்று மொழியிலும், சிறந்து விளங்கினாலும் தத்தம் தாய்மொழியில், பிறந்தது முதல் பேசிப் பழகிய மொழியில் சிந்திக்கும் போது நம் சிந்தனா சக்தியின் எல்லை விரிவடைகிறது என்பதை உணர இயலும்.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே
வாளொடு முன் தோன்றிய மூத்த குடி
நம் தமிழ் மொழி என்பார் பரிமேலழகர்!
2000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் நம் இந்திய நாட்டைப்பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளில் பல தமிழ் பெயர்கள் காணப்ப்படுவது இதற்கு ஓர் சான்று. 2300 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழில் எழதப்பட்ட சில கல்வெட்டுகள் உள்ளன. 2400 ஆண்டுகளுக்கு முன்பே, பாணினி காலத்திலேயே தமிழில், ‘நற்றிணை’ எனும் ஈடற்ற இலக்கண நூல் தோன்றியுள்ளது. 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, சிறிதும் சிதையாத நிலையில் முழுமையாக நமக்குக் கிடைத்துள்ள பொக்கிசம் ‘தொல்காப்பியம்’ ஒன்றே. அதற்கு முன்பும், ’அகத்தியம்’ எனப்படும் இலக்கிய நூல் 3500 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப் பெற்றதாக நம்பப்படுகிறது. சிலர் 5000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்றும் கூறுகிறார்கள்.
செருமனி நாட்டின் முதல் எழுத்து வடிவம் கி.பி.8ம் நூற்றாண்டிலும், பிரெஞ்சு மொழியின் எழுத்து வடிவம் 9ம் நூற்றாண்டிலும், உருசிய மொழியின் எழுத்து வடிவம் 10ம் நூற்றாண்டிலும், இலத்தீனிலிருந்து பிறந்த இத்தாலி மொழியும் 10ம் நூற்றாண்டில்தான் எழுத்து வடிவம் பெற்றுள்ளது. ஆனால், நம் அன்னைத் தமிழ் மொழியோ, கி.மு.2ம் நூற்றாண்டின் முன்பே, முதல் எழுத்து வடிவமான தொல்காப்பியம் கிடைத்துள்ளது.
உலகில் முதன்முதலில் தோன்றிய நாடு தமிழகமும் அதை அடுத்த கடல் கொண்ட தென்னாடுமே என்கின்றனர் நில ஆய்வாளர்கள். இளங்கோவடிகள், “பதியெழ் அறியாப் பழங்குடியினர்” என காவிரிப்பூம்பட்டிணத்து மக்களைக் கூறுவதும் இதற்கான சான்றாக அமையும். ஆதியைக் கண்டறிய முடியாத அளவிற்கு காலம் கடந்த மொழியாக நம் தமிழ் மொழி இருப்பது மிக ஆச்சரியம் அல்லவா.
சங்க காலத்தில் காதலையும், வீரத்தையும் நம் தமிழர் பண்பாட்டின் ஒருங்கிணைந்த இரு கூறுகளாகக் கொண்டு வாழ்ந்துள்ளனர். அக வாழ்க்கை – தலைவன், தலைவி, குழந்தைகள், உற்றார், பெற்றார் என குடும்ப வாழ்க்கை. புற வாழ்க்கை என்பது வீரத்தை எடுத்துரைக்கும் வாழ்க்கையாக இருந்துள்ளது. இதற்கான சான்று, அகநானூறு மற்றும் புறநானூற்றுப் பாடல்கள்.
மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
என்பார் ஐயன்.
இன்று கனடா, பிரான்சு, ஆத்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சுமார் 30 நாடுகளில் நம் தமிழர்கள் வாழுகின்றனர். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், சூரினாம், மாலத்தீவுகள், மொரீசியசு, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் காடாய்க்கிடந்த பூமியை செப்பனிட்டு விவசாய பூமியாகச் சிறக்கச் செய்த வல்லமை பெற்றவர்கள் நம் தமிழர்கள் அன்றோ! நெடிதுயர்ந்த அழகான கட்டிட வடிவமைப்புகளிலும் நம் தமிழர்களே சிறந்து விளங்கியுள்ளதையும் வரலாறு கூறுகின்றது. சீன யாத்ரீகர் யுவான் சுவாங் முதல் கால்குவெல், ஜி.யு போப் வரையுள்ள பல்வேறு நாட்டு அறிஞர்கள், மொழி, மத வேறுபாடின்றி, தமிழின் பண்பட்ட மற்றும் அதன் தொன்மையை போற்றிப் புகழ்ந்துள்ளனர்.
பின்னை நின்றென்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவஞ் செய்திலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே. -திருமூலர் 10 பா.20
தமிழ் மொழியின் பெருஞ்சிறப்பிற்கு உரிய முதன்மையான நூல்களைத் தொகுத்து உரைக்கும் பழம்பாடல் ஒன்றுள்ளது. அப்பாடலில் திருமூலரின் திருமந்திரமும் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சைவத்திருமறைகளுள் பத்தாம் திருமறையாக இடம்பெற்றுள்ள இம்மகா தெய்வ நூல் 3000 ஆண்டுகள் வாழ்ந்த சித்தர் பெருமான் திருமூலர் ஆண்டிற்கொரு பாடலாக முத்து முத்தாகத் தொகுத்த தெயவ காவியமாகும். இந்நூலில் இல்லாத வாழ்வியல் தத்துவங்களே இல்லை என அருதியிட்டுக் கூறலாம். ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்றும்,
அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே.
என்பதனை,
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
என்ற ஐயன் வள்ளுவனின் வாக்கும் , கடவுள் அன்பாய் இருக்கிறார், (யோவான் – 48- விவிலியம்) என்று அனைத்து மதத்தினரும் அன்பையே பிரதானமாகக் கொண்டு வாழ்ந்த நம் தமிழர் பாரம்பரியத்தை தெள்ளென விளக்குவதாக அமைந்துள்ளது.
திருமூலர் திருமந்திரத்தில் 3000 ஆண்டுகளுக்கும் முன்னரே அறிவியல் நோக்கில் சிந்தனையைச் செலுத்தி, சாதனைகள் படைத்துள்ளது ஆச்சரியப்படத்தக்க செய்தியன்றோ? நம் தாய்த்திருமொழியான தமிழ் மொழியில் அறிவியல் ஞானமும் பெற இயலும் என்பதற்கான சிறந்ததோர் சான்று அன்றோ அவர்தம் பாடல்கள்! மிகச் சிறந்த காட்டுகள் பல உள்ளன. குழந்தைகள் ஊனமாகவும், மனநலம் பாதிக்கப்பட்டும் பிறப்பதற்கான காரணத்தைக் கூட ஆய்ந்தறிந்து அதைத் தவிர்ப்பதற்கான உபாயமும் ஓர் தமிழ் சித்தர் வழங்கியுள்ளார், அதுவும் விஞ்ஞானம் என்ற ஒன்று அறியப்படாத 3000 ஆண்டுகளுக்கு முன்னர் என்றால் ஆச்சரியமாக அல்லவா உள்ளது.
இன்றைய அறிவியல் விண்ணளாவ உயர்ந்திருந்தாலும், கருவின் பாலினத்தைத் தேர்வு செய்யும் உபாயம் அறிந்திலோம் நாம். ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ வேண்டியதைப் பெற்றுக் கொள்ளும் வழியை இன்றளவும் கண்டிலோம். ஆயின் திருமூலர் அதற்கான உபாயம் ஓர் பாடலில் சொல்லியிருக்கிறார் பாருங்களேன்… ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அல்லவா..
ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகுந்
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.
பொருள் – கூட்டுறவின்போது ஆண் பண்பு மிகுந்தால் சிசு ஆணாகும், பெண் பண்பு மிகுந்தால் சிசு பெண்ணாகும். ஆண் – பெண் இரண்டொத்துப் பொருந்தில் அலியாகும் அதாவது, ஆண் , பெண் குணம் இரண்டும் சமமாகின் அது அலியாகுமாம். பெண்ணின் நீக்க நிலைக்குக் கடந்த பூமானாகில் உலகை ஆளத்தக்க குழவியாகுமாம். மேலும், கூட்டுறவின் போது தாழ்ச்சி மனப்பான்மையிருந்தால் சுக்கிலம் பாய்வது நின்றுவிடும் என்கிறார்…… கருவில் ஆண், பெண் மாற்றம் அமைவது அழகாகக் கூறப்பட்டுள்ளது காண்க!
உலகமயமாக்கலின் இன்றைய நிலையின் அதிகபட்ச விலையாக நம் தமிழ்த்திருமொழியை கொடுக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது,தவிர்க்க இயலவில்லை. உலகம் முழுவதும் தற்போது 6000 மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால் அடுத்த நூற்றாண்டில் 12 மொழிகள் மட்டுமே வளமையாக வாழப்போகிறது என்றொரு ஆய்வறிக்கை அச்சமூட்டுகிறது. இதில் இன்னொரு அதிர்ச்சியான தகவல், அப்பட்டியலில் தமிழ் மொழி இல்லை. நம் நாட்டில் மொத்தம் வழக்கில் உள்ள 18 மொழிகளில், இந்தி மற்றும் வங்காளி மொழி மட்டும்தான் எஞ்சி நிற்கலாம் என்கிறது அந்த ஆய்வறிக்கை. மொரீசியசு நாடு இதற்கு ஒரு சான்று. இன்றும் பலர் தமிழ் பெயர்களுடன் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், இவர்கள் தமிழர்களாயினும் தமிழ் மொழி பயன்பாடு அறவே நின்றுபோய் உள்ளது. காலப்போக்கில் அழிந்து போய் உள்ளது.
அமெரிக்கப் பழங்குடியினர், யூதர்கள், ஆர்மீனியர்கள், ஈழத்தமிழர்கள் போன்றவர்கள் தங்கள் மொழியைக் காக்க அரும்பாடுபட்டு அதில் ஓரளவிற்கு வெற்றியும் கண்டுள்ளனர். ஒரு மொழி முற்றிலும் அழிவது என்பது அம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவரால் மட்டுமே ஆகக் கூடியது அல்லவா….
தாய்மொழியில் ஒரு நுணுக்கமானச் செய்தியை திறம்பட வெளிப்படுத்த வேண்டுமானால் குறைந்தது, 7000 முதல் 8000 வரையிலாவது சொற்கள் தெரிந்திருக்க வேண்டுமாம். அப்போதுதான் நாம் நினைக்கும் ஒரு செய்தியை தெளிவாக அடுத்தவருக்கு உணர்த்த இயலும். குழந்தைப் பருவத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் வாய்ப்பைப் பொறுத்து நாம் ஒரு சொல் தொகுதியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். அது அவரவர் சூழலுக்கேற்றவாறான அளவுகோளில் அமையலாம். இன்றைய சூழலில் ஒரு தமிழருக்கு அதிகபட்சமாக 3000 முதல் 4000 சொற்களின் தொகுதியையே பெற்றுள்ளார்களாம். நம் அகரமுதலியே, மிகச் சொற்பமான 16,000 வார்த்தைகள் மட்டுமே கொண்டதாக இருக்கிறதாம். நம் தமிழ் மொழியின் சொற்களின் தொகுதியைக் கூட்டிக் கொள்வதே இன்றைய அத்தியாவசியத் தேவையாக உள்ளது. இன்று பெரும்பாலான அறிஞர்கள், ஒரு செய்தியை தெளிவுபடுத்த விரும்பினால், அதனை முதலில் ஆங்கிலத்தில் பயின்று, பின் சிரமப்பட்டு அதனை தமிழில் புரிந்து கொண்டு வெளிக்கொணரும் நிலையே உள்ளது. இந்த நிலை மாறுவதற்கான முயற்சியை நம் அறிஞர்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதே எம் போன்ற சாமான்யர்களின் பெரும் விருப்பாக உள்ளது. நம் தமிழ் அன்னையின் இன்னுயிரைக் காக்க வேண்டியச் சூழலில் நாம் இருக்கிறோமோ என்ற அச்சம் மேலோங்குகிறது. நம் குழந்தைகளின் நிலையை இன்று காணும்போது அந்த அச்சம் பன்மடங்கு அதிகரிக்கிறது. அதற்கான காரணம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
ஒப்பிலக்கணம் கண்ட கால்குவெல் போப், நம் தமிழ் மொழியை செம்மொழி என்று நிறுவிய பரிதிமாற்கலைஞர், சங்க இலக்கியங்களை ஓலைச்சுவடிகளிலிருந்து, அச்சு வடிவம் பெறச் செய்த உ.வே,சாமிநாத ஐயர், சி.வை.தாமோதரம் பிள்ளை போன்ற நம் தமிழன்னைக்கு அணிகலனாக இருந்த சான்றோர்களை எண்ணி கைகூப்பித் தொழுவோம்! நம் செம்மொழித் தமிழை அறிவியல் தமிழாகக்கட்டிக் காக்கும் உறுதி கொள்வோம்!
படத்திற்கு நன்றி :
நன்றி - திண்ணை வெளியீடு

Thursday, November 18, 2010

மணமும்.........மனிதமும்.




திருமணம் என்றாலே பல லட்சங்கள் செலவு செய்து அதில் பல ஆயிரங்கள் விரயம் ஆவது, இப்படி வழமையாக நடந்து கொண்டிருந்தாலும், இன்று மக்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு உண்டாகி இருப்பதும் பாராட்டுக்குரிய விடயமாகும்.

இன்று ஈரோடை மாநகரில், குருசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் ஒரு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. வெகு விமரிசையாக நடந்த அந்த திருமண மண்டபத்தில் ஒரு ஆச்சரியமான விடயமும் நடந்தது. பொதுவாக திருமணம் முடிந்தவுடன் தாம்பூலப்பையில், தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு இப்படி ஏதாவது போட்டுக் கொடுப்பதுதான் வழக்கம். ஆனால் இந்த திருமணத்தில் வித்தியாசமாக மரக்கன்றுகள், தாம்பூலப்பையில் போட்டு அனைவருக்கும் கொடுத்தார்கள். சராசரியாக 1000 தாம்பூலப்பைகள். ஒரு பையில் 2 அல்லது 3 மரக்கன்றுகள்.



ஈரோடு, குமாரபளையம் SSM பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்
திரு முத்துசாமி அவர்கள் தன் மகன் திருமணத்தில்தான் கொடுத்துள்ளார். இது பற்றி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆர்வலரான, அவரிடம் கேட்டபோது, “ மக்களிடம் மரம் வளர்க்கும் ஆர்வத்தை அதிகரிப்பதுடன், இன்று சுமாராக 2500 மரக்கன்றுகள் [ மலை வேம்பு, குமிள் தேக்கு, நாவல் மரம் ] மற்றும் மகிழம்பூ, மல்லி, செண்பகம் போன்ற பூச்செடிக் கன்றுகள் ஆகியவைகள் கொடுத்துள்ளோம். இத்தனைக் கன்றுகளையும் இன்று ஊர் முழுவதும் அவரவர் இல்லங்களில் வைக்கும் போது, ஊர் பசுமையாவதுடன், மரம், செடிகள் வளர, வளர, கரியமல வாய்வினால் ஏற்படக்கூடிய மாசு கட்டுப்படுவதுடன், மரங்களைக் காணும் போதும் அதன் குளிர்ச்சியை அனுபவிக்கும் போதும், தங்கள் நினைவும் அவர்களுக்கு பசுமையாக இருப்பதுடன், மனதார வாழ்த்தவும் செய்வார்களே. இவ்வரிய திட்டம் செயல்படுத்துவதற்கு முழு காரணம் கவிந்தப்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் PG. Asst. ஆக இருக்கும் தம் மனைவி யசோதாதான் “, என்கிறார் பெருமை பொங்க. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த தம் மகள் திருமணத்திலும் இது போல் 3200 மரக்கன்றுகள் அவர்கள் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...