Friday, February 21, 2014

தோற்றப் பிழை



பவள சங்கரி



உள்ளத்தில் கள்ளம் புகுந்தால்
உறவுக்கும் உன்மத்தம் பிடிக்கும்
உள்ளதும் உள்ளமும் ஓய்ந்துதான்போகும்

விஷம்  கூட விருட்சமாய்
வீறுகொண்டு எழாதவரை
விகல்பமில்லாத அழகுதான்!

முள்ளம்பன்றியாய் உறுத்தும்
முயங்குமனம் குத்திக்கிழித்த
இதயத்தின் ஆறாத ரணம்.

Thursday, February 20, 2014

கடித இலக்கியப் பரிசுப் போட்டி!

வல்லமையில் கடித இலக்கியப் பரிசுப் போட்டி!

அன்பு நண்பர்களே,
வணக்கம். இணையமும் செல்பேசிகளும் பரவலாகிவிட்ட இந்தக் காலக்கட்டத்தில், கடிதம் எழுதும் வழக்கம் அருகி வருகிறது. குறுஞ்செய்திகளில் நம் எண்ணங்களைச் சுருக்கி இரண்டு வரிகளில் அளிக்க வேண்டிய நிலையில், நம் உள்ளக் கிடக்கைகளை விலாவாரியாக விவரிக்கும் கடித இலக்கியம் இன்று பெரும்பாலும் மறைந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் அரிதான கடித இலக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில் நம் வல்லமையில் வருகிற மகளிர் தினத்தை முன்னிட்டு ‘அன்புள்ள மணிமொழிக்கு’ என்ற தலைப்பில் போட்டி அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

Monday, February 17, 2014

திருத்தப்படமுடியாத தீர்ப்புகள்!


பவள சங்கரி



”யக்கா, யக்கா இன்னைக்கு நான் ஊட்டாண்ட வர நேரமாவும் போலக்கீது, கொஞ்சம்  புள்ளைய பாத்துக்கக்கா. வயித்துக்கு எதுனா சாப்பாடு குடுத்துடு இன்னா.. நான் அப்பாலைக்கி வந்து குயந்தையை இட்டுணுப்போறன். சரியா”

“.......................”

“அட ஆமா யக்கா.  இங்க இந்த பெரிசு படுத்துக்கிணு கீதில்ல. அத்தைப் பாத்துக்க இன்னைக்கு ஆளு வரல. அதான் சின்ன ஐயா இன்னைக்கு ஒரு நாளைக்கு இத்தை பாத்துக்கச் சொன்னாரு.  என்னால தட்டமுடியல..  பணமும் 200 ரூவா கொடுத்தாரு.  அதேன், நீ இருக்க தகிரியத்துலதான் ஒத்துக்கினேன்”

“.................”

“அதா, அத்தை ஏன் கேக்கற, சுய நினைவே இல்லாம மரக்கட்டையாட்டமாத்தான் கிடக்குது. என்னமோ கோமாவுல கடக்குதுன்றாங்க.  உசிரும் போவாம இசுத்துக்கினு கடக்குது . மனசுல என்ன ஆசை கீதோ தெரீல, இப்புடி அந்த உசிரு அல்லாடிங்கிடக்குது பாவம்”

“கடவுளே, இது தேவையா எனக்கு, இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படி செத்த உடலோட , மனசு மட்டும் சுறுசுறுப்பா வச்சி வதைக்கப் போற.  டெர்ரர் சிவசாமின்னு பேரெடுத்த எனக்கு இப்புடி ஒரு நிலைமை வந்திருக்க வேண்டாம்.  கண் பார்வையிலேயே என்னோட நூல் மில்லுல வேலை செய்த நூத்துக்கணக்கானவர்களும் மிரண்டுபோய் சுழன்றுவேலை பார்ப்பாங்களே. இன்னைக்கு ஒரு வேலைக்காரி கூட என்னை ஒரு ஜடமாட்டம் பாக்கறாளே. இந்தக் கையினால எத்தனை முறை போனசு, குழந்தைக்கு உடம்பு சரியில்ல, புருசனுக்கு உடம்பு சரியில்லேன்னு காசு வாங்கியிருப்பா..  இந்த மூனு மாசமா படுக்கையில கிடக்க ஆரம்பிச்ச உடனே இவ்ளோ அவமானப்படுத்துறாங்களே.  வாயைத் திறந்து ஒரு வார்த்தையும் பேச முடியல. இன்னும் என்னவெல்லாம் கேக்கணுமோ.. திடீர்னு அம்மா எப்பவோ பேசுன இதே டயலாக் நினைப்பு வந்தது. ..