Wednesday, November 10, 2010

INDIAN SHAME

* மனிதக் கழிவை மனிதனே அகற்றும் முறை ஒழிப்பில் மெத்தனம் : அரசுக்கு உச்ச நீதி மன்றம் கண்டனம். [நவம்பர் 09/2010 , செய்தி ]

மனிதக் கழிவை மனிதனே அகற்றும் உலர் கழிப்பிட முறையை ஒழிப்பதிலும் அந்த பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதிலும் மெத்தனமாக செயல்படுவதாகக் கூறி தில்லி உள்ளிட்ட சில மாநில அரசுகளுக்கு உச்ச நீதி மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இச்சட்டம் நடைமுறையில் உள்ளது. இது ஒரு அரசியல் சாசன விடயம். இந்தச் சட்டத்தை முறையாக அமல்படுத்த நீதிமன்றமே நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலிக்கும் என்றும் பெஞ்ச் தெரிவித்தது.



இந்தியாவின் அவலம்

அவமானம், கீழ்தரமான, மனிதாபிமானமற்ற, சங்கடப்படுத்துகிற, அருவருப்பான, மனிதத்தின் அவமதிப்பு - இது தான் “கைகளினால் கழிவை அகற்றும் முறை “. - மனிதக் கழிவை மனிதனே அகற்றும் அவலம். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால், மனிதனின் கழிவை, மனிதனே கைகளால் அள்ளி, தலையில் அல்லது இடுப்பிலோ,தோளிலோ கூடையில் வைத்து சுமந்து, ஒரு வேளை நல்ல நேரம் வாய்க்கப் பெற்றவராக இருக்கும் பட்சத்தில், தள்ளு வண்டி கிடைக்கும்.

பல்லாண்டு காலமாக இந்தக் கொடுமையான முறையை முற்றிலுமாக ஒழிக்க, புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. கூட்டமைப்புகளும் கமிஷன்களும் நிறுவப்பட்டுள்ளன. சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான பணமும் செலவிடப்பட்டுள்ளன. ஆனால் சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் இந்த மனிதத்தை அவமதிக்கக்கூடிய செயல் நம்மிடையே நடந்து கொண்டுதானிருக்கிறது.

2002-2003 இல், ச்மூக நீதித்துறை அமைச்சகம், 6.76 லட்சம் கழிவை அள்ளும் தொழிலாளர்கள் இருப்பதாகவும், 92 லட்சம் உலர் கழிவறைகள், 21 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் பரவி இருப்பதாகவும், ஒப்புக் கொண்டுள்ளனர். இருப்பினும் கழிவுப் பணியாளர்கள் சங்கம் [SKA] தனிப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுடன் சேர்ந்து, 2003 இல் உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். பல மாநிலங்கள் தங்கள் பகுதிகளில் இந்த முறை ஒழிக்கப்பட்டு விட்டதாகவும்,குறிப்பிட்ட அந்தத் தொழிலைச் செய்பவர்கள் வேறு தொழிலுக்கு மாறிவிட்டதாகவும் தீவிரமாக மறுத்தனர். மாநிலங்களின் உச்சநீதி மன்றங்கள் பதிலளிப்பதற்கு மூன்று ஆண்டுகள் ஆயின. பலரும் உலர் கழிப்பறையே இல்லை என்பதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்தனர். அதிலிருந்து விவாதங்கள் தொடர்ந்தன. SKAவின் தேசிய அமைப்பாளரான பெஸ்வாடா வில்சன், இந்தப் பிரச்சனை, அறிவுறுத்துவதற்காகவோ, மாற்று உபாயம் நிர்ணயிப்பதோ குறித்தது அல்ல. இது ஒரு சமுதாயப் பிரச்சனை. அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்புகள் இல்லாத நிலையில்,கிடைத்த தகவல்களின் கொண்டு, மாதிரிக் கணக்கெடுப்பை செய்த போது 13 லட்சம் பணியாளர்கள் நாட்டில் இருக்கக் கூடும் என்று கூறினார். 1993 இல், வில்சன், மனிதக் கழிவை மனிதனே அகற்றும் பணி மற்றும் உலர் கழிவறை கட்டுவதை தடை செய்யும் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அது மேலும் சில மாநிலங்களில் இதனை கடைப்பிடிப்பதற்கு மேலும் 10 ஆண்டுகள் ஆயின. சில மாநிலங்கள் இச்சட்டத்தை, தங்களிடம் எந்த கழிவுகள் அகற்றும் துப்புரவு தொழிலாளிகளும் இல்லை என்று கூறி நிராகரித்தனர். சில மாநிலங்களோ SKA அமைப்பு உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்து ஏற்றுக் கொண்டன.

ஒரு பிரச்சனை இருப்பதை ஒப்புக் கொள்லாவிடில் எங்கனம் அதற்கான தீர்வைக் காண இயலும் ?

தன்னுடைய 9 வது வயதிலிருந்து, ஒரு துப்புரவுத் தொழிலாளியாக[இன்று 20] இருக்கும் மீனா, தான் முதன் முதலில் ஒரு கூடையில் கழிவுகளை சுமந்து சென்ற போது, வழுக்கி கீழே விழ, கழிவுகள் தன் மீதே கொட்டிவிட, கூடையும் மிக அருவருப்பான நிலையில் இருந்ததால் ஒருவரும் தன்னைத் தூக்கிவிட முன்வரவில்லை என்பதை நினைவு கூறுகிறார். மற்றொரு துப்புரவு தொழிலாளி வந்து தூக்கிவிடும் வரை அதே இடத்தில் அப்படியே சுருண்டுக் கிடந்ததை எண்ணி இன்றளவும் மாய்ந்து போகும் மீனா, அந்த நாளில், இந்த உலகத்திலேயே மிக துரதிருஷ்டமான குழந்தை தான் மட்டுமே என்று நொந்துப் போனதாகவும் சொல்கிறார். அவருடைய கணக்குப்படி இது போன்ற தொழில்புரிபவர்கள் 100 முதல் 150 குடும்பங்கள் வரை உள்ளதென்கிறார்.

திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கமும் இருந்தது. அதையும் இத்தொழிலாளர்களே சென்று சுத்தம் செய்தனர். மீனா எப்படியோ சிரமப்பட்டு படித்து பள்ளியிறுதியாண்டு வரை முடித்திருக்கிறார். ஆனாலும் இக்கல்வி எந்த பெரிய மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. அவர் மேலும் கூறியதாவது,

“பரம்பரை பரம்பரையாக இதுதான் எங்கள் குடும்பங்களில் நடந்து கொண்டிருக்கிறது. வேறு வேலை எவரும் கொடுக்கத் தயாராகவும் இல்லை. உண்மையில் சொல்லப்போனால், என் தாய் என் தந்தையை திருமணம் செய்து கொண்டதே அவர், அதிகமாக அள்ளக்கூடிய ஜனசந்தடி அதிகம் உள்ள இடத்தில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றதால்தான்.”

மீனாவின் கணவன் முகேஷ் நந்த நகரியில் பொதுக்கழிப்பறையில் பணிபுரிகிறார். முகேஷ் அரசாங்கத்துறை துப்புரவுப் பணியில் சேர விரும்பினாலும், அதற்கு ரூ.50,000 லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்ததால், அதையும் கைவிட்டு, அன்றாடம் ரூ100 வாங்கும் கூலித் தொழிலாளியாக பணியமர்ந்தார். இதிலும் கொடுமை என்னவென்றால், அந்த சொற்ப கூலியிலும் ஒரு பகுதியை காவல்துறையினருக்குக் கொடுக்க வேண்டுமென்பதுதான்.

மீனாவின் தாய் சாரதா, அந்தப்பகுதி குடியிருப்பில் வீட்டிற்கு ரூ10 வாங்கிக் கொண்டு, பத்து உலர் கழிவறைகளை சுத்தப்படுத்தும் வேலையைச் செய்கிறார். தேவையான தண்ணீர் கூட இல்லாத நிலையில் தானும் தன் கணவனும் சேர்ந்து உடைந்த பிளாஸ்ட்டிக் துண்டுகளைக் கொண்டு, சுரண்டி அள்ளி கூடையில் போட்டுக் கொண்டு செல்வதாகக் கூறுகிறார். இவருடைய கவலையே தன் கூடை பிய்ந்துப் போனதால் புதிய கூடை வாங்க ரூ 70 ஆகுமே என்பதுதான்.

மகாத்மா காந்தியின் குஜராத்தில் கூட தங்கள் கழிவறையை தாங்களே சுத்தம் செய்ய கற்றுக் கொள்ளவில்லை. 55,000 பணியாளர்கள் வரை குஜராத்தில் உள்ளனர். மாநில அரசும், அவர்களுக்குரிய பணப்பட்டுவாடாவை செய்வதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை. இந்தத் தொழிலாளர்கள் இதுதான் தங்கள் தலைவிதி என்று நம்ப ஆரம்பித்ததால் இதைப்பற்றி பேசவும் விரும்பவில்லை.

மற்றொரு முக்கியமான தடை ரயில்வேத்துறை. இரயில் தண்டவாளங்கள் கைகளினாலேயே சுத்தப்படுத்த வேண்டிய கட்டாயம், திறந்த வெளி கழிவறைத்திட்டம்.

இதனைத் தடை செய்யும் சட்டம் அமலுக்கு வந்து 13 ஆண்டுகளில் ஒரு வழக்கு கூட வரவில்லை. இந்தச்சட்டம் 1 வருட சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் அல்லது இரண்டுமோ கொண்டது. இந்தச்சட்டம் ஒரு திட்டம் போல்தான் செயல்பட்டது.

அரசாங்கம், கடன் வழங்குதல், மானியம் அளித்தல், என்று பல திட்டங்கள் மூலம் முன்னேற்றத்தை ஊக்குவித்தாலும் பெரிய பலன் ஏதுமில்லை.

SKA அளித்த அறிக்கையில் பெரும்பாலான பணியாளர்கள் இரத்த சோகை, வாந்தி, பேதி போன்ற நோய்களுக்குப் பலியாவதாகக் கூறுகிறது. செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பலர் கார்பன் மோனாக்ஸைட் விசவாயுவினால் பாதிக்கப்படுவதாகக் கூறுகிறது.

அரசியல்வாதிகளும் இப்பிரச்சனையை கண்டு கொள்ளாமல் இருப்பதற்கும் காரணம் உள்ளது. தண்ணீர் மற்றும் மின்சாரம் போன்று ஓட்டுப் பெறுவதற்கு துருப்புச் சீட்டாக இதை பயன்படுத்த இயலாது என்பதுதான்.

நன்றி - FRONTLINE - Sept - 09/22/2006.


Tuesday, November 9, 2010

தாயிற்சிறந்த கோயில் இல்லை......

நன்றி - தினமலர்.



* பெற்ற தாயை மறந்த பிள்ளைகள்: பிச்சை எடுத்து வாழும் மூதாட்டி.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில், ஆதரவற்ற நோயாளிகள் அதிகளவில் தஞ்சம் புகுந்துள்ளனர். நீலாங்கரையைச் சேர்ந்த இந்திரா எஸ்தர் [60] இரண்டு மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் சிக்கிய இவர், சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதிகப்பட்ட இவர், சிகிச்சைக்குப் பிறகும் டிஸ்சார்ஜ் செய்து கூட்டிச் செல்ல உறவினர்கள் வராத நிலையில் இன்று, தற்போது மருத்துவமனையில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மழையிலும், குளிரிலும், தவித்துக் கொண்டிருக்கிறார். பத்மாவதி, சீனிவாசன், கோடிஸ்வரன் என்ற மூன்று பிள்ளைகள் இருந்தும் தனக்கு இப்படிப்பட்ட நிலை என்று நொந்துப் போய் கூறுகிறார், எஸ்தர். இது போன்ற பிள்ளைகளை முதியோர் பராமரிப்புச் சட்டத்தில் தண்டிப்பதுதான் இந்திரா எஸ்தர் போன்றோரை காப்பாற்ற சிறந்த வழி

Sunday, November 7, 2010

இந்திய திருநாட்டின் மறுமலர்ச்சியில் பெண்கள் - பாகம் -7


அன்னி பெசண்ட் அம்மையார் [1847 - 1933].


நம் இந்திய தேசத்தின் மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் அன்னி பெசண்ட் அம்மையாரும் ஒருவராவார். இங்கிலாந்து நாட்டில் பிறந்து வளர்ந்தாலும் இவர்தம் உழைப்பு முழுவதையும் இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காகவே அர்ப்பணித்தவர். எண்ணற்ற இந்திய மக்களின் இதயங்களில் நீங்காத இடம் பெற்றவர்.

அன்னி பெசண்ட் அம்மையார், அயர்லாந்து நாட்டில் பிறந்த ஓர் அன்னியராக இருப்பினும் நம் இந்திய மக்களுக்காகப் போர் கொடி தூக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1893 ஆம் ஆண்டு முதன் முதலில் தூத்துக்குடி வந்து இறங்கினார் அன்னி பெசண்ட். இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்த அந்த நொடியிலிருந்து, சென்னையில் கூவம் நதிக்கரையில் நிரந்தர அமைதி அடைந்த [சமாதி] அந்நொடி வரை ஓயாத உழப்பையேத் தாரக மந்திரமாகக் கொண்டிருந்தார் அம்மையார். அவர் தம் வாழ்க்கை முழுவதையும் பிரம்மஞான தத்துவத்தின் விளக்கமாக வாழ்வே முயற்சித்தார். இந்திய தேசக்கலாச்சார நோக்கின் அடிப்படையில், அம்மையாரின் தொடர்பணிகள் எண்ணிலடங்காதவை.

பகவத் கீதையின் உயர் தத்துவ ஞானம் அனைவரையும் சென்று அடையும் வகையில் எளிய ஆங்கில மொழியில் மொழியாக்கம் செய்தார் அன்னி. இந்தியக் கலாச்சாரம் மற்றும் இலக்கியங்களை ஊக்குவிக்கும் பொருட்டும், அதனைக் கற்பிக்கும் வண்ணம், வாரணாசி மற்றும் சென்னையில் 1898 ஆம் ஆண்டு, ‘சென்ட்ரல் இந்து காலேஜ் ‘ என்ற கல்லூரியை நிறுவினார். அங்கு இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளைக் கட்டாயப்பாடமாக வைத்து இந்திய இளைஞர்களை கற்கச் செய்தார். இக்கல்லூரியே, பிற்காலங்களில் மதன் மோகன் மாளவியா, நிறுவிய இந்து பல்கலைக்கழகத்திற்கு அஸ்திவாரமாக அமைந்தது. இன்று பகவத் கீதையை கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளில் லட்சக்கானோர் அறிந்திருக்கிறார்கள் என்றால் அதன் பெருமை அம்மையாரையேச் சாரும். திலகரின் ‘கீதா ரகசியம்’ என்ற நூலும் பிரசித்தி பெற்றிருந்தது.

அம்மையார் 1847 ஆம் ஆண்டு, அயர்லாந்து நாட்டில் பிறந்தார். இவர் பிறந்த குடும்பம் பாரம்பரியப் பெருமை வாய்ந்த குடும்பமாகும்.தனிப்பள்ளியில் கல்வி பயின்று, இளம் வயதிலேயே ஃராங்க் பெசண்ட் என்பவருக்கு மணம் முடிக்கப்பெற்றார். ஃராங்க், தீவிர மத நம்பிக்கைக் கொண்ட ஒரு பாதிரியாராக இருந்தார். இவருடைய ஆழ்ந்த மத நம்பிக்கை, அன்னியின் குணத்திற்கு பொருந்தாத ஒன்றாக இருந்த காரணத்தினால், இருவரும் இரு துருவங்களாகவே வாழ்ந்ததினால், சட்டரீதியானப் பிரிவு இவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பெண்களுக்கு எதிராக அநீதி இழைக்கும் நாடுகள் பரவலாக இருந்த காலம் அது. பிரிட்டானியப் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய காலம் அது. வாக்குரிமைக்கான அவர்களின் போராட்டம் தலைப்புச் செய்தியானது. இதற்காக சிறைவாசம், காவலர்களின் அச்சுறுத்தல் என்று பல பிரச்சனைகளுக்கு ஆட்பட்டிருந்தார்கள். அப்பெண்கள் இதற்காக மேற்கொண்ட தியாகங்களும், பொறுமைகளும் ஆச்சரியப்படத்தக்க செய்திகளாகும்.

முதல் உலகப்போரில் இந்தப் போராட்டம் ஓய்ந்தது. வேண்டாதவர்களாக ஒதுக்கப்பட்ட பெண்கள், நாட்டுப்பற்று கொண்ட காரணத்தினால், தங்களின் நேர்மையான, உயர்ந்த சேவைகள் மூலம் தங்களுக்கான அங்கீகாரத்தையும் பெற்றுக் கொண்டனர். ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்குப் பிறகு 1832 ஆம் ஆண்டு, முதல் மறுமலர்ச்சி சட்டம் வெளியான பிறகு, வாக்குரிமையைப் பெற்றார்கள். இந்தப் போராட்டத்தின் பின்னனியில் பல்லாண்டுக்கால உழைப்பும், தியாகமும் இருந்ததென்பதை எவரும் மறுக்க இயலாது. பிரிட்டானிய அரசாங்கத்திற்கும், பொது மக்களுக்கும், பெண்களும் ஆண்களுக்கு நிகரானவர்கள்தான் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த, எத்தனையோ, சிறைவாசங்களையும், தண்டனைகளையும் பெற்றார்கள் என்பதும் நிதர்சனம். அன்னி பெசண்ட் அம்மையாரும் இந்த பெண்கள் இயக்கத்தில் ஒரு முக்கிய நபராக இருந்தவர். இவருடைய முதல் பொதுக்கூட்ட சொற்பொழிவே, பெண்களின் நிலை குறித்ததாகவே இருந்தது.

மனித உரிமைகளுக்கான மசோதா, அனைத்து குடிமக்களுக்கும் சமமான உரிமைகளை உறுதியளித்திருந்தாலும் பெண்களுக்கு அதனை அளிப்பதற்கு அரசாங்கம் இருமுறை யோசித்தது. ஆனால் சமுதாயமோ, நூறு முறை யோசித்தது. ஆக்ஃபோர்ட் பல்கலைக்கழகம்கூட அந்நாளில் மாணவிகளுக்கு பட்டம் கொடுப்பதற்கு மட்டும் மறுத்திருக்கிறது.

அன்னி அச்சூழலில்தான் பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் குறித்து எழுத ஆரம்பித்திருந்தார். மணமான பெண்கள் தங்கள் வருமானம், சொத்து அனைத்தையும் கணவனிடம் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்த காலமது. அன்னியின் அது குறித்த முயற்சிகள் மற்றும் எழுத்துக்களில் பின்னடைவு ஏற்பட்டன. ஆயினும் அவர் தடைகளை புறக்கணித்து விட்டு திரும்பவும் எழுத ஆரம்பித்தார். பிற்காலத்தில் பெருமளவில் எழுதவும், பத்திரிக்கைகளுக்குப் பதிப்பாசிரியராகவும், இதழாசிரியராகவும் செயல்பட்டார்.

கணவரைச் சட்டப்படி பிர்ந்தாலும், தன் இரு பெண் குழந்தைகளையும் தன் பொறுப்பில் வளர்க்கவே முடிவெடுத்தார். ஒரு கட்டத்தில் தன் மகள் நோய்வாய்ப்பட்ட தருணத்தில், கடவுள் மீது கொண்ட நம்பிக்கையை இழக்க ஆரம்பித்தார். நாத்திக எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. தன் பேச்சுத் திறமையை வளர்த்துக் கொண்டிருந்தார். 1872 ஆம் ஆண்டு, தன்னுடைய 40 ஆவது வயதில் அன்னிக்கு சமூக சேவையில் முழு நாட்டம் உறுவானது. எதனையும் எதிர் கொள்ளும் போராட்டக் குணமும் கொண்டவராக இருந்தார்.

பிரிட்டிஷ் மியூசியம் என்ற நூல் நிலையத்திலுள்ள புத்தகங்களைப் படித்து தன் அறிவை விரிவடையச் செய்திருந்தார். இச்சமயத்தில்தான், சார்லஸ் பிராட்லா என்ற சீர்திருத்த வாதியைச் சந்திக்க நேர்ந்தது. தொழிலாளர்கள் நலனில் அக்கரை கொண்ட அன்னி, அவர்களுக்காகத் தொண்டாற்றியதோடு, சமுதாயச் சீர்திருத்தங்களுக்காக சொற்பொழிவாற்றுதலும், கட்டுரைகள் எழுதும் பணியிலும் ஈடுபட்டிருந்தார். சார்லஸின், அறிவாற்றலாலும், சுதந்திரக் கருத்துக்களாலும், தனிப்பட்ட திறன்களினாலும், பொறுமை மற்றும் தொழிலாளர்கள் நலனில் அக்கரையினாலும், பெரிதும் கவரப்பட்டார் அன்னி. ‘அஜக்ஸ்’ என்ற புனைப்பெயருடன் பிராட்லியின், ‘ நேஷனல் ரெஜிஸ்டர் ‘ எனும் பத்திரிக்கையின் முக்கியமான பங்களிப்பாளராக ஆனார்.இவருடைய முதல் மேடைப்பேச்சு, 1874 ஆம் ஆண்டு, ஒரு கூட்டுறவு நிறுவனத்தில் ஆரம்பித்தது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சார்லஸ்க்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அன்னி. சமூக நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியதன் மூலம், பல எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டியிருந்தது. எடின்பர்கில், சேரிப்பகுதியில் பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தபோது, அம்மக்களின் துன்பங்களைக் கண்டபிறகு சமூகச் சேவை குறித்த அவரின் பார்வையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. தொழிற்சங்கத் தலைவர் பதவியேற்றார்.

பல்வேறு விதமான இன்னல்களுக்கிடையேயும், இலண்டன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டம்,மிக உயர்ந்த மதிப்பெண்களுடன், பெற்றது குறிப்பிடத்தக்கது. ஃபேபியன் கூட்டமைப்பில் சேர்ந்து, ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, மற்றும் மாரிஸ், ஹிண்ட்மன் போன்ற பிரபலமானவர்களின் நட்பும் பெற்றார்.இந்நேரத்தில் இவருக்கு முழுநேரத் தொழிலாளர் முன்னேற்றப் பணியாளராக வேண்டிய நிப்பந்தம் ஏற்பட்டது. லண்டனில் தீக்குச்சித் தொழிற்சாலைப் பெண்களின் மேம்பாட்டிற்காக, தீக்குச்சித் தொழிலாளர் சங்கம் ஒன்றை நிரந்தரமாக ஏற்படுத்தி அதன் மூலம் போராடி வெற்றி பெற்றார்.

அன்னி பெசண்ட் அம்மையார் இஸ்லாம், புத்தமதம், இந்துமதம் ஆகிய சமயக்கொள்கைகளை ஆழ்ந்து படித்ததோடு, கிறித்துவ மதக்கொள்கைகளோடு அதனை ஒப்பு நோக்கியதன் விளைவு ஒரு புது கொள்கை உருவானது பிரம்மஞான சபையை நிறுவிய பிளாவட்ஸ்கி அம்மையார் எழுதிய ‘இரகசிய தத்துவம்’, என்ற நூலை ஆழ்ந்து படித்து அழகான விமரிசனம் ஒன்றை பிரபலமான பத்திரிக்கை ஆசிரியர் வில்லியம் ஸ்டெட் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அப்பத்திரிக்கைக்கு அனுப்பினார். பிரம்மஞான சபையை பிளாவட்ஸ்கியும், ஹென்றி ஆல்காட்டும் சேர்ந்து தோற்றுவித்தார்கள்.

ஒன்றே குலம்....ஒருவனே தேவன்,

உண்மையே உயர்ந்த மதம்,

என்பது இச்சங்கத்தின் கொள்கைகளாகும். இவர்களின் சிலைகள் இன்றும் சென்னை அடையாறு பிரம்மஞான சபை மண்டபத்தில் இருக்கின்றன.

1891 இல் பிளாவட்ஸ்கி அம்மையார் காலமானதும் அன்னி அம்மையார் பிரம்மஞான சபையில் இணைந்தார். இதன் கொள்கைகளை தீவிரமாக ஐரோப்பிய நாடுகளிலும் பிரச்சாரம் செய்தார். அச்சமயத்தில் இந்துமத அரிய நூல்களைப் பயின்று அதன் உயர்ந்த கொள்கைகளால் பெரிதும் கவரப்பட்டார். இந்து மதத்தின் மீது மிகுந்த பற்றும் மரியாதையும் ஏற்பட்டது. பிரம்மஞான சபையை பரப்புவதற்கு இந்தியாவே சிறந்த இடம் எனக்கருதி இந்தியாவிற்கு 1893 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வந்து சேர்ந்தார். சென்னையில் உள்ள அடையாறு இச்சபையின் தலைமை இடமாகச் செயல்பட்டது. பல்லாண்டுக்கால பொதுச்சேவையை விட்டு பிரம்மஞான சபையில் இணைவதற்கு சில காரணங்களும் அவருக்கு இருந்தது.

* சாதிமத பேதமற்ற சமத்துவமான, சகோதரத்துவம் உலகில் மலர வேண்டும்.

* இந்து சமயத் தத்துவங்கள் வெளிவர வேண்டும்.

* மனிதர்களுக்குள் மறைந்து கிடக்கும் இயற்கை சக்திகளையும், விளங்காத இயற்கை நியதிகளின் விழிப்புணர்வும் கொள்ள வேண்டும்.

மேற்கண்டவைகள் அனைத்தும் சாத்தியமாக வேண்டுமெனில் பிரம்மஞான சங்கத்தில் அனைவரும் இணைய வேண்டும் என முழங்கினார். இவரது ஆத்மார்த்தமான சொற்பொழிவைக் கேட்டு மனம் உருகி ஆயிரக்கணக்கானோர் இச்சங்கத்தின் கொள்கைகளை பின்பற்றினர். உலகின் பல நாடுகளில் பிரம்மஞான சபையின் கிளைகள் தோன்றலாயின.

1907 இல் இச்சங்கத்தின் முதல் தலைவர் ஆல்காட் மறைவிற்குப்பின், அன்னி பெசண்ட் அம்மையார் அச்சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்று அதன் வளர்ச்சிக்காக எண்ணற்ற பணிகள் ஆற்றினார். 1912 இல் ‘சேவை செய்யும் சகோதரர்கள்’ [ THE BROTHERS OF SERVICE ] என்ற அமைப்பை தோற்றுவித்தார். அதன் மூலம் இளைஞர்களுக்கு ஆன்மீகமும், அரசியலும் பயிற்றுவித்தார். பிரம்மஞானத் தத்துவத்தை பரப்பும் பணியில் இவருடன் டாக்டர் அருண்டேல், ஜீனராஜதாசர், ருக்மணிதேவி ஆகியோர் இணைந்து கொண்டனர்.

அன்னி பெசண்ட் அம்மையாரின் தோற்றப்பொலிவும், பழகும் வள்ளலும், எவரையும் எளிதில் கவர்ந்து விடும். அவர் இந்தியாவில் வாழ்ந்த மொத்த காலங்களிலும் மெல்லிய தங்கநிற நீண்டக் கோடுகள் இழைத்த வெண்ணிற சேலையையே அணிந்து கொண்டார். அவருடைய வெள்ளி நிற தலை முடிக்கு அது மிகப் பொருத்தமானதாகவே இருந்தது. அவருடைய குரலோ, கேட்பவரை வசீகரிக்கும், ஒரு அழகான ஆன்மாவின் குரலாகவே ஒலித்தது. இக்குரல் வளமே பல்லாயிரக்கணக்கோரை தம்பால் கவர்ந்திழுக்கச் செய்து, பேச்சின் மீது முழுகவனம் செலுத்தவும், ஆழ்ந்த அமைதி காக்கவும் செய்தது.

இந்து மதத்திற்கு அம்மையார் ஆற்றிய தொண்டு அளப்பரியது. இந்து சமய நூல்களையும், கலாச்சாரங்களையும் பரப்பும் பொருட்டு அவர் பகவத் கீதையை எளிமையான ஆங்கிலத்தில், சிறுவர்களும், இளைஞர்களும் பயிலும் வகையில் மொழி மாற்றம் செய்தார். அதுமட்டுமன்றி, இந்து மத தர்மங்களைப் பற்றி பல புத்தகங்களையும் எழுதி வெளியிட்டார். இந்திய இளைஞர்களின் எண்ணத்தில் தம் நாடு, தம் கலாச்சாரம் பண்பாடு போன்ற அனைத்தையும் பதியச் செய்யும் பொருட்டு, 1898 இல் ‘சென்ட்ரல் இந்து காலேஜ்’ என்ற கல்லூரியை நிறுவினார். அங்கு இந்து மதத்தின் அடிப்படையான கொள்கைகளை கட்டாயப் பாடமாக வைத்து இந்து இளைஞர்களை கற்கச் செய்தார். இக்கல்லூரிதான் பிற்காலத்தில் மதன் மோகன் மாளவியா நிறுவிய ‘இந்து பல்கலைக்கழகத்திற்கு’, அஸ்திவாரமாக அமைந்தது. இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டோர் என்றொரு பிரிவு , சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்காக இருந்ததைக் கண்டு, வருந்தியவர், அவர்களுக்கென்று தனிப்பட்ட பள்ளிகளையும் அவர்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பல சங்கங்களையும் நிறுவினார்.

1916 ஆம் ஆண்டு இவர் ‘ஹோம் ரூல் இயக்கம்’, என்ற சுய ஆட்சி இயக்கத்தை ஆங்கிலேயர்களின், கடுமையான எதிர்ப்புக்கிடையில், மனம் தளராமல் நடத்தி வந்தார். இந்தியர்களுக்கு உரிமை வழங்கும்படி ஆங்கிலேயர்களுடன் போராடிக் கொண்டிருந்தார். பல தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் இந்த இயக்கத்தில் இணைந்தனர். மேலும் அவர் காமன்வெல்த் மசோதாவை நகலாக்கினாலும் அதனை பிரபலப்படுத்தும் முயற்சியை எடுக்கவில்லை.

இந்திய இளைஞர் சங்கத்தை [ Y.M.I.A.] சென்னையில் ஏற்படுத்தி அதில் பார்லிமெண்ட் விவாத சபையும் நிறுவினார். பெரிய நூல்நிலையம் ஒன்றையும் நிறுவினார். இந்தியச் சிறார்களை சாரணர் இயக்கத்தில் பங்குபெறச் செய்தார். இந்திய சாரண இயக்கத்தினர் அன்னி அம்மையாரை சாரண இயக்கத்தின் கௌரவ பொறுப்பாணைக்குழு அங்கத்தினராக அறிவித்தது அவருடைய உயர்ந்த சேவைக்குக் கிடைத்த பரிசாகும். சாரண இயக்கத்தின் நிறுவனர் பேடன் பவல் பிரபு அம்மையாரை கௌரவிப்பதற்காகவே இங்கிலாந்திலிருந்து வந்தார். சாரண இயக்கத்திற்கு ஒப்பற்ற சேவை செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் வெள்ளி ஓநாய் என்ற பதக்கத்தை மாபெரும் மக்கள் கூட்டத்தில் பேடன் பவல் பிரபு அன்னி பெசண்ட் அம்மையாருக்கு அணிவித்து மகிழ்ந்தார்.

1917 ஆம் ஆண்டு கல்கத்தாவில் கூடிய இந்திய தேசிய காங்கிரசின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அழைக்கப்பட்டார். அந்த பிரம்மாண்ட கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை, இந்திய மக்களின் மீது அவர் கொண்ட ஆழ்ந்த அக்கரையையும், அன்பையையும் வெளிப்படுத்தியது. இதற்குப் பிறகு இவருடைய செயல்பாடுகள் கலாச்சரம் மற்றும் அரசியல் தொடர்புடையதாகவே இருந்தது. இந்த காலகட்டத்தில்தான் அவர் கையெழுத்துப்பிரதிகளுக்கான நூலகக் கட்டிடத்தை அடையாறில் கட்டினார். இந்தியக் கலாச்சாரத்தின் முக்கிய அம்சமான பரத நாட்டியம், கோயில் நடனக் கலைஞர்கள் மற்றும் தேவதாசிகளிடம் அடைபட்டுக் கிடந்ததை ருக்மணி தேவிக்கு உதவித்தொகை அளித்ததன் மூலம் பரதநாட்டியக் கலாச்சாரத்திற்கே ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். நாட்டுப்பற்று கொண்ட பல்வேறு இனப் பெண்களையும் ஒன்றிணைத்து சகோதரத்துடன் நாட்டு நலனில் பங்கெடுக்கும்படி செய்தார். மார்கரெட் கசின்ஸ் உடன் இணைந்து அம்மையார் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தார். மக்கள் அவரைத் தங்கள் எதிர்காலத் தலைவராகவே அடையாளம் கொண்டனர்.

1927 ஆம் ஆண்டு, சுதந்திரமான எண்ணம் கொண்ட மகாராணி சின்னாபாய் கெய்க்வாட் தலைமையிலான அகில இந்திய பெண்கள் மகாநாடு, பூனாவில் நடத்தப்பட்டது. ஆனால்,படித்த, சொற்பமான பெண்கள் மட்டுமே உறுப்பினராக முன்வந்த போது இதன் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மையே ஏற்பட்டது. ஆனால் அம்மையாரின் தொலைநோக்குப்பார்வை அதன் நம்பிக்கையை வலுப்படுத்தியது. இம்மகாநாடு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து நடைபெற்று விரிவடைய ஆரம்பித்ததோடு இந்திய அரசாங்கத்திலேயே பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. அன்னி பெசண்ட்டின் வழிகாட்டுதல் மற்றும் மார்கரெட் கசின்ஸ் அவர்களின் சேவையாலும் அந்த மகாநாடு வைர விழா கொண்டாடியது.

அன்னி பெசண்ட் அம்மையார் எழுதி வெளியிட்ட நூல்கள் பல. ‘நியூ இந்தியா’, ’காமன்வெல்த்’ ஆகிய செய்தித் தாள்களை நடத்தி வந்தார். ‘தேசிய கல்வி அறக்கட்டளை’, என்ற அமைப்பை உருவாக்கி இந்திய மாணவர்களின் வளர்ச்சிக்காக, பத்திரிக்கைத் துறை கல்வித்திட்டத்தை அடையாறு தேசிய பல்கலைக்கழகத்தில் தொடங்கினார். இவருடைய கல்விச் சேவையைப் பாராட்டி பெனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

1933 இல் செப்டம்பர் மாதம் 20ஆம் நாள் தனது 86 ஆவது வயதில் உயிர் நீத்தார். அவருடைய அஸ்தியின் ஒரு பகுதி காசியில் பெரிய ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு டாக்டர் பகவன் தாஸ் அவர்களால் கங்கையில் கரைக்கப்பட்டது. அடையாறில் அம்மையாரின் சமாதி உள்ளது.

“ இவள் உண்மை நெறி சொல்ல முயன்றாள் “, என்று தம் கல்லறையில் பொறிக்க வேண்டும் என்று அம்மையார் விரும்பிய காரணத்தினால் அதனை நிறைவேற்றினர். இவருடைய தன்னலமற்ற சேவையால் இந்திய வரலாற்றில் தன் பெயரை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பெற்றார்!