Tuesday, March 21, 2023

இதயப்பறவை

 





ஏதோவொரு வலையில் சிக்குண்ட

அப்பறவையை மீட்கச் சென்றேன்.

சிறைபட்ட சிறகெலாம் காயங்கள்:

அந்த அழுத்தம் தந்த முத்தங்கள்.

        என் தோப்பில் சுகமாக

         சிறகடித்துத் திரிந்த பறவைதானது!

 

கையிலே ஓடேந்தி

வனம் வனமாய் சுற்றித்திரிந்த

பாழ்பறவை வெறுமையைத் தாங்கி

கூடு திரும்பியது.

          தானுறையும் வனமெலாம் தேன்பூக்களும்

          சுவையான பழங்களும் நிறைந்ததுதான்!

 

வெகுதூரம் பறந்து சென்றதுதான்

சோகம் தீர்க்கும் சுகத்திற்காக.

சுமைகூடி சிந்திய கண்ணீரால்

தாகம் தீர்த்துக் கொண்டது.

        பாயும் சுனையின் குளிரினூடே

         குதூகலித்துக் கிடந்த புள்தானது.

 

தன்னைச்சுற்றி குவிந்துக் கிடப்பதையே

அறியாமல் தேடும் பரிதாபம்

என்றுதான் புரிந்துகொள்ளும்

பற்றறுத்தலே பேரின்பமென்று?

#பவளசங்கரி