Saturday, February 25, 2012

உண்மை நெறி சொல்ல முனைந்தவர்

இந்தியத் திருநாட்டின் மறுமலர்ச்சியில் பெண்கள்!

The world is our country,
All mankind are our brethren,
To do good is our religion
I believe in only one God and no more
அன்னி பெசண்ட் அம்மையார் [1847 - 1933].
நம் இந்திய தேசத்தின் மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் அன்னி பெசண்ட் அம்மையாரும் ஒருவர். இங்கிலாந்து நாட்டில் பிறந்து வளர்ந்தாலும் இவர்தம் உழைப்பு முழுவதையும் இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காகவே அர்ப்பணித்தவர். எண்ணற்ற இந்திய மக்களின் இதயங்களில் நீங்காத இடம் பெற்றவர்
.
அன்னி பெசண்ட் அம்மையார், அயர்லாந்து நாட்டில் பிறந்த ஓர் அன்னியராக இருப்பினும் நம் இந்திய மக்களுக்காகப் போர் கொடி தூக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1893ஆம் ஆண்டு முதன் முதலில் தூத்துக்குடி வந்து இறங்கினார் அன்னி பெசண்ட். இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்த அந்த நொடியிலிருந்து, சென்னையில் கூவம் நதிக்கரையில் நிரந்தர அமைதி அடைந்த [சமாதி] அந்நொடி வரை ஓயாத உழைப்பு ஒன்றையேத் தாரக மந்திரமாகக் கொண்டிருந்தவர் அம்மையார். அவர்தம் வாழ்க்கை முழுவதையும் பிரம்மஞான தத்துவத்தின் விளக்கமாக வாழவே முயற்சித்தவர். இந்திய தேச, கலாச்சார நோக்கின் அடிப்படையில், அம்மையாரின் தொடர் பணிகள் எண்ணிலடங்காதவை
.
பகவத் கீதையின் உயர் தத்துவ ஞானம் அனைவரையும் சென்று அடையும் வகையில் எளிய ஆங்கில மொழியில் மொழியாக்கம் செய்தார் அன்னி. இந்தியக் கலாச்சாரம் மற்றும் இலக்கியங்களை ஊக்குவிக்கும் பொருட்டும், அதனைக் கற்பிக்கும் வண்ணம், வாரணாசி மற்றும் சென்னையில் 1898ஆம் ஆண்டு, ‘சென்ட்ரல் இந்து காலேஜ் என்ற கல்லூரியை நிறுவினார். அங்கு இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளைக் கட்டாயப் பாடமாக வைத்து இந்திய இளைஞர்களை கற்கச் செய்தார். இக்கல்லூரியே, பிற்காலங்களில் மதன் மோகன் மாளவியா, நிறுவிய இந்து பல்கலைக்கழகத்திற்கு அஸ்திவாரமாக அமைந்தது. இன்று பகவத் கீதையை கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளில் லட்சக்கானோர் அறிந்திருக்கிறார்கள் என்றால் அதன் பெருமை அம்மையாரையே சாரும். திலகரின் கீதா ரகசியம்என்ற நூலும் பிரசித்தி பெற்றிருந்தது.
அம்மையார் 1847ஆம் ஆண்டு, அக்டோபர் திங்கள்,1ஆம் நாள், வில்லியம் பேஜ்வுட்- எமிலி மோரீஸ் தம்பதியருக்கு ,அயர்லாந்து நாட்டில் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள், ஹாரி, ஆல்பிரட் என்ற இரு சகோதரர்களும் உண்டு. இவருடைய ஐந்தாவது வயதிலேயே தந்தை இறந்ததனால் குடும்பம் பெரும் பொருளாதார சிக்கலில் திணறியது. வறுமையும், சோகமும் குடும்பத்தைச் சூழந்த வேளையில், சகோதரன் ஆல்பிரட்டும் இறந்து போக, பள்ளியில் சென்று படிக்க முடியாத நிலை ஏற்பட்டது இவருக்கு. மிஸ் மேரியட் என்ற கல்வியாளர் அன்னியை 7 வயதில் தன்னுடன் அழைத்துச் சென்று படிப்பைத் தொடரத் துணைநின்றார். பள்ளியில்,ஆங்கிலம், பிரெஞ், ஜெர்மன் ஆகிய மொழிகளை அன்னி நன்கு கற்றார். படிப்புடன் இசையையும் கற்றிருந்தார். அன்னி தமது 16ஆம் வயதுக்குள்ளே மில்டன், வால்டர் ஸ்காட், சாக்ரடீஸ், பிளாட்டோ, வேர்ட்ஸ்வெர்த், கூட்டன் பர்க், தாந்தே போன்ற அறிஞர்களின் வாழ்க்கையையும் சாதனைகளையும் நன்கு கற்று, சிறந்த கல்வியையும் நற்பண்புகளையும் இளமையிலேயே தன்னகத்தே பெற்று, சிறப்புடன் விளங்கினார்
1867ஆம் ஆண்டில், தம்முடைய 21 வயதில், பிராங்க் பெசண்ட் என்பவருக்கு மணம் முடிக்கப் பெற்றார். பிராங்க், தீவிர மத நம்பிக்கைக் கொண்ட ஒரு மதபோதகராக இருந்தார். இவருடைய ஆழ்ந்த மத நம்பிக்கை, அன்னியின் குணத்திற்கு பொருந்தாத ஒன்றாக இருந்த காரணத்தினால், இருவரும் இரு துருவங்களாகவே வாழ்ந்ததினால், சட்டரீதியானப் பிரிவு இவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
பெண்களுக்கு எதிராக அநீதி இழைக்கும் நாடுகள் பரவலாக இருந்த காலம் அது. பிரித்தானியப் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய காலமும் அதுதான். வாக்குரிமைக்கான அவர்களின் போராட்டம் தலைப்புச் செய்தியானது. இதற்காக சிறைவாசம், காவலர்களின் அச்சுறுத்தல் என்று பல பிரச்சனைகளுக்கு ஆட்பட்டிருந்தார்கள். அப்பெண்கள் இதற்காக மேற்கொண்ட தியாகங்களும், பொறுமைகளும் ஆச்சரியப்படத்தக்க செய்திகளாகும்
.
முதல் உலகப்போரில் இந்தப் போராட்டம் ஓய்ந்தது. வேண்டாதவர்களாக ஒதுக்கப்பட்ட பெண்கள், நாட்டுப்பற்று கொண்ட காரணத்தினால், தங்களின் நேர்மையான, உயர்ந்த சேவைகள் மூலம் தங்களுக்கான அங்கீகாரத்தையும் பெற்றுக் கொண்டனர். ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்குப் பிறகு 1832ஆம் ஆண்டு, முதல் மறுமலர்ச்சி சட்டம் வெளியான பிறகு, வாக்குரிமையைப் பெற்றார்கள். இந்தப் போராட்டத்தின் பின்னனியில் பல்லாண்டுக்கால உழைப்பும், தியாகமும் இருந்ததென்பதை எவரும் மறுக்க இயலாது. பிரித்தானிய அரசாங்கத்திற்கும், பொது மக்களுக்கும், பெண்களும் ஆண்களுக்கு நிகரானவர்கள்தான் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த, எத்தனையோ, சிறைவாசங்களையும், தண்டனைகளையும் பெற்றார்கள் என்பதும் நிதர்சனம். அன்னி பெசண்ட் அம்மையாரும் இந்தப் பெண்கள் இயக்கத்தில் ஒரு முக்கிய நபராக இருந்தவர். இவருடைய முதல் பொதுக்கூட்ட சொற்பொழிவே, பெண்களின் நிலை குறித்ததாகவே இருந்தது
.
மனித உரிமைகளுக்கான மசோதா, அனைத்து குடிமக்களுக்கும் சமமான உரிமைகளை உறுதியளித்திருந்தாலும் பெண்களுக்கு அதனை அளிப்பதற்கு அரசாங்கம் இருமுறை யோசித்தது. ஆனால் சமுதாயமோ, நூறு முறை யோசித்தது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்கூட அந்நாளில் பெண் என்பதால் மாணவிகளுக்கு பட்டம் கொடுப்பதற்கு மறுத்திருக்கிறது
.
அன்னி அச்சூழலில்தான் பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் குறித்து எழுத ஆரம்பித்திருந்தார். மணமான பெண்கள் தங்கள் வருமானம், சொத்து அனைத்தையும் கணவனிடம் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்த காலமது. அன்னியின் அது குறித்த முயற்சிகள் மற்றும் எழுத்துக்களில் பின்னடைவு ஏற்பட்டன. ஆயினும் அவர் தடைகளை புறக்கணித்து விட்டு திரும்பவும் எழுத ஆரம்பித்தார். பிற்காலத்தில் பெருமளவில் எழுதவும், பத்திரிக்கைகளுக்குப் பதிப்பாசிரியராகவும், இதழாசிரியராகவும் செயல்பட்டார்
.
கணவரைச் சட்டப்படி பிரிந்தாலும், தன் இரு பெண் குழந்தைகளையும் தன் பொறுப்பில் வளர்க்கவே முடிவெடுத்தார். ஒரு கட்டத்தில் தன் மகள் நோய்வாய்ப்பட்ட தருணத்தில், கடவுள் மீது கொண்ட நம்பிக்கையை இழக்க ஆரம்பித்தார். நாத்திக எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. தன் பேச்சுத் திறமையை வளர்த்துக் கொண்டிருந்தார். 1872 ஆம் ஆண்டு, தன்னுடைய 40ஆவது வயதில் அன்னிக்கு சமூக சேவையில் முழு நாட்டம் உறுவானது. எதனையும் எதிர் கொள்ளும் போராட்டக் குணமும் கொண்டவராக இருந்தார்
.
பிரித்தானிய அருங்காட்சியகம் என்ற நூல் நிலையத்திலுள்ள புத்தகங்களைப் படித்து தன் அறிவை விரிவடையச் செய்திருந்தார். இச்சமயத்தில்தான், சார்லஸ் பிராட்லா என்ற சீர்திருத்த வாதியைச் சந்திக்க நேர்ந்தது. தொழிலாளர்கள் நலனில் அக்கரை கொண்ட அன்னி, அவர்களுக்காகத் தொண்டாற்றியதோடு, சமுதாயச் சீர்திருத்தங்களுக்காக சொற்பொழிவாற்றுதலும், கட்டுரைகள் எழுதும் பணியிலும் ஈடுபட்டிருந்தார். சார்லஸின், அறிவாற்றலாலும், சுதந்திரக் கருத்துகளாலும், தனிப்பட்ட திறன்களினாலும், பொறுமை மற்றும் தொழிலாளர்கள் நலனில் அக்கரையினாலும், பெரிதும் கவரப்பட்டார் அன்னி. அஜக்ஸ்என்ற புனைப்பெயருடன் பிராட்லியின், ‘ நேஷனல் ரெஜிஸ்டர் எனும் பத்திரிக்கையின் முக்கியமான பங்களிப்பாளராக ஆனார்.இவருடைய முதல் மேடைப் பேச்சு, 1874ஆம் ஆண்டு, ஒரு கூட்டுறவு நிறுவனத்தில் ஆரம்பித்தது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சார்லஸ்க்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அன்னி. சமூக நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியதன் மூலம், பல எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டியிருந்தது. எடின்பர்கில், சேரிப்பகுதியில் பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தபோது, அம்மக்களின் துன்பங்களைக் கண்டபிறகு சமூகச் சேவை குறித்த அவரின் பார்வையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. தொழிற்சங்கத் தலைவர் பதவியேற்றார்
.
பல்வேறு விதமான இன்னல்களுக்கிடையேயும், அம்மையார் இலண்டன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டம், மிக உயர்ந்த மதிப்பெண்களுடன், பெற்றது குறிப்பிடத்தக்கது. ஃபேபியன் கூட்டமைப்பில் சேர்ந்து, ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, மற்றும் மாரிஸ், ஹிண்ட்மன் போன்ற பிரபலமானவர்களின் நட்பும் பெற்றார். இந்நேரத்தில் இவருக்கு முழுநேரத் தொழிலாளர் முன்னேற்றப் பணியாளராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. லண்டனில் தீக்குச்சித் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களின் மேம்பாட்டிற்காக, தீக்குச்சித் தொழிலாளர் சங்கம் ஒன்றை நிரந்தரமாக ஏற்படுத்தி அதன் மூலம் போராடி வெற்றி பெற்றார்
.
அன்னி பெசண்ட் அம்மையார் இஸ்லாம், புத்தமதம், இந்துமதம் ஆகிய சமயக்கொள்கைகளை ஆழ்ந்து படித்ததோடு, கிறித்துவ மதக்கொள்கைகளோடு அதனை ஒப்பு நோக்கியதன் விளைவு ஒரு புது கொள்கை உருவானது பிரம்மஞான சபையை நிறுவிய பிளாவட்ஸ்கி அம்மையார் எழுதிய இரகசிய தத்துவம்’, என்ற நூலை ஆழ்ந்து படித்து அழகான விமரிசனம் ஒன்றை பிரபலமான பத்திரிக்கை ஆசிரியர் வில்லியம் ஸ்டெட் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அப்பத்திரிக்கைக்கு அனுப்பினார். பிரம்மஞான சபையை பிளாவட்ஸ்கியும், ஹென்றி ஆல்காட்டும் சேர்ந்து தோற்றுவித்தார்கள்
.
ஒன்றே குலம்....ஒருவனே தேவன், உண்மையே உயர்ந்த மதம், என்பது இச்சங்கத்தின் கொள்கைகளாகும். இவர்களின் சிலைகள் இன்றும் சென்னை அடையாறு பிரம்மஞான சபை மண்டபத்தில் இருக்கின்றன
.
1891இல் பிளாவட்ஸ்கி அம்மையார் காலமானதும் அன்னி அம்மையார் பிரம்மஞான சபையில் இணைந்தார். இதன் கொள்கைகளை தீவிரமாக ஐரோப்பிய நாடுகளிலும் பிரச்சாரம் செய்தார். அச்சமயத்தில் இந்துமத அரிய நூல்களைப் பயின்று அதன் உயர்ந்த கொள்கைகளால் பெரிதும் கவரப்பட்டார். இந்து மதத்தின் மீது மிகுந்த பற்றும் மரியாதையும் ஏற்பட்டது. பிரம்மஞான சபையை பரப்புவதற்கு இந்தியாவே சிறந்த இடம் எனக்கருதி இந்தியாவிற்கு 1893ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வந்து சேர்ந்தார். சென்னையில் உள்ள அடையாறு இச்சபையின் தலைமை இடமாகச் செயல்பட்டது. பல்லாண்டுக்கால பொதுச்சேவையை விட்டு பிரம்மஞான சபையில் இணைவதற்கு சில காரணங்களும் அவருக்கு இருந்தது
.
சாதிமத பேதமற்ற சமத்துவமான, சகோதரத்துவம் உலகில் மலர வேண்டும்
இந்து சமயத் தத்துவங்கள் வெளிவர வேண்டும்
மனிதர்களுக்குள் மறைந்து கிடக்கும் இயற்கை சக்திகளையும், விளங்காத இயற்கை நியதிகளின் விழிப்புணர்வும் கொள்ள வேண்டும்
.மேற்கண்டவைகள் அனைத்தும் சாத்தியமாக வேண்டுமெனில் பிரம்மஞான சங்கத்தில் அனைவரும் இணைய வேண்டும் என முழங்கினார். இவரது ஆத்மார்த்தமான சொற்பொழிவைக் கேட்டு மனம் உருகி ஆயிரக்கணக்கானோர் இச்சங்கத்தின் கொள்கைகளைப் பின்பற்றினர். உலகின் பல நாடுகளில் பிரம்மஞான சபையின் கிளைகள் தோன்றலாயின
.
1907இல் இச்சங்கத்தின் முதல் தலைவர் ஆல்காட் மறைவிற்குப்பின், அன்னி பெசண்ட் அம்மையார் அச்சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்று அதன் வளர்ச்சிக்காக எண்ணற்ற பணிகள் ஆற்றினார். 1912இல் சேவை செய்யும் சகோதரர்கள்’ [ THE BROTHERS OF SERVICE ] என்ற அமைப்பை தோற்றுவித்தார். அதன் மூலம் இளைஞர்களுக்கு ஆன்மீகமும், அரசியலும் பயிற்றுவித்தார். பிரம்மஞானத் தத்துவத்தை பரப்பும் பணியில் இவருடன் டாக்டர் அருண்டேல், ஜீனராஜதாசர், ருக்மணிதேவி ஆகியோர் இணைந்து கொண்டனர்
.
அன்னி பெசண்ட் அம்மையாரின் தோற்றப்பொலிவும், பழகும் வள்ளலும், எவரையும் எளிதில் கவர்ந்து விடும். அவர் இந்தியாவில் வாழ்ந்த மொத்த காலங்களிலும் மெல்லிய தங்கநிற நீண்டக் கோடுகள் இழைத்த வெண்ணிற சேலையையே அணிந்து கொண்டார். அவருடைய வெள்ளி நிற தலை முடிக்கு அது மிகப் பொருத்தமானதாகவே இருந்தது. அவருடைய குரலோ, கேட்பவரை வசீகரிக்கும், ஒரு அழகான ஆன்மாவின் குரலாகவே ஒலித்தது. இக்குரல் வளமே பல்லாயிரக்கணக்கோரை தம்பால் கவர்ந்திழுக்கச் செய்து, பேச்சின் மீது முழுகவனம் செலுத்தவும், ஆழ்ந்த அமைதி காக்கவும் செய்தது
.
இந்து மதத்திற்கு அம்மையார் ஆற்றிய தொண்டு அளப்பரியது. இந்து சமய நூல்களையும், கலாச்சாரங்களையும் பரப்பும் பொருட்டு அவர் பகவத் கீதையை எளிமையான ஆங்கிலத்தில், சிறுவர்களும், இளைஞர்களும் பயிலும் வகையில் மொழி மாற்றம் செய்தார். அதுமட்டுமன்றி, இந்து மத தர்மங்களைப் பற்றி பல புத்தகங்களையும் எழுதி வெளியிட்டார். இந்திய இளைஞர்களின் எண்ணத்தில் தம் நாடு, தம் கலாச்சாரம் பண்பாடு போன்ற அனைத்தையும் பதியச் செய்யும் பொருட்டு, 1898இல் சென்ட்ரல் இந்து காலேஜ்என்ற கல்லூரியை நிறுவினார். அங்கு இந்து மதத்தின் அடிப்படையான கொள்கைகளை கட்டாயப் பாடமாக வைத்து இந்து இளைஞர்களை கற்கச் செய்தார். இக்கல்லூரிதான் பிற்காலத்தில் மதன் மோகன் மாளவியா நிறுவிய இந்து பல்கலைக்கழகத்திற்கு’, அஸ்திவாரமாக அமைந்தது. இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டோர் என்றொரு பிரிவு , சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்காக இருந்ததைக் கண்டு, வருந்தியவர், அவர்களுக்கென்று தனிப்பட்ட பள்ளிகளையும் அவர்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பல சங்கங்களையும் நிறுவினார்
.
1916ஆம் ஆண்டு இவர் ஹோம் ரூல் இயக்கம்’, என்ற சுய ஆட்சி இயக்கத்தை ஆங்கிலேயர்களின், கடுமையான எதிர்ப்புக்கிடையில், மனம் தளராமல் நடத்தி வந்தார். இந்தியர்களுக்கு உரிமை வழங்கும்படி ஆங்கிலேயர்களுடன் போராடிக் கொண்டிருந்தார். பல தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் இந்த இயக்கத்தில் இணைந்தனர். மேலும் அவர் காமன்வெல்த் மசோதாவை நகலாக்கினாலும் அதனை பிரபலப்படுத்தும் முயற்சியை எடுக்கவில்லை.
இந்திய இளைஞர் சங்கத்தை [Y.M.I.A.] சென்னையில் ஏற்படுத்தி அதில் பார்லிமெண்ட் விவாத சபையும் நிறுவினார். பெரிய நூல்நிலையம் ஒன்றையும் நிறுவினார். இந்தியச் சிறார்களை சாரணர் இயக்கத்தில் பங்குபெறச் செய்தார். இந்திய சாரண இயக்கத்தினர் அன்னி அம்மையாரை சாரண இயக்கத்தின் கௌரவ பொறுப்பாணைக்குழு அங்கத்தினராக அறிவித்தது அவருடைய உயர்ந்த சேவைக்குக் கிடைத்த பரிசாகும். சாரண இயக்கத்தின் நிறுவனர் பேடன் பவல் பிரபு அம்மையாரை கௌரவிப்பதற்காகவே இங்கிலாந்திலிருந்து வந்தார். சாரண இயக்கத்திற்கு ஒப்பற்ற சேவை செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் வெள்ளி ஓநாய் என்ற பதக்கத்தை மாபெரும் மக்கள் கூட்டத்தில் பேடன் பவல் பிரபு அன்னி பெசண்ட் அம்மையாருக்கு அணிவித்து மகிழ்ந்தார்
.
1917ஆம் ஆண்டு கல்கத்தாவில் கூடிய இந்திய தேசிய காங்கிரசின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அழைக்கப்பட்டார். அந்த பிரம்மாண்ட கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை, இந்திய மக்களின் மீது அவர் கொண்ட ஆழ்ந்த அக்கரையையும், அன்பையும் வெளிப்படுத்தியது. இதற்குப் பிறகு இவருடைய செயல்பாடுகள் கலாச்சரம் மற்றும் அரசியல் தொடர்புடையதாகவே இருந்தது. இந்த காலகட்டத்தில்தான் அவர் கையெழுத்துப் பிரதிகளுக்கான நூலகக் கட்டிடத்தை அடையாறில் கட்டினார். இந்தியக் கலாச்சாரத்தின் முக்கிய அம்சமான பரத நாட்டியம், கோயில் நடனக் கலைஞர்கள் மற்றும் தேவதாசிகளிடம் அடைபட்டுக் கிடந்ததை ருக்மிணி தேவிக்கு உதவித்தொகை அளித்ததன் மூலம் பரதநாட்டியக் கலாச்சாரத்திற்கே ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். நாட்டுப்பற்று கொண்ட பல்வேறு இனப் பெண்களையும் ஒன்றிணைத்து சகோதரத்துடன் நாட்டு நலனில் பங்கெடுக்கும்படி செய்தார். மார்கரெட் கசின்ஸ் உடன் இணைந்து அம்மையார் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தார். மக்கள் அவரைத் தங்கள் எதிர்காலத் தலைவராகவே அடையாளம் கொண்டனர்
.
1927ஆம் ஆண்டு, சுதந்திரமான எண்ணம் கொண்ட மகாராணி சின்னாபாய் கெய்க்வாட் தலைமையிலான அகில இந்திய பெண்கள் மகாநாடு, பூனாவில் நடத்தப்பட்டது. ஆனால்,படித்த, சொற்பமான பெண்கள் மட்டுமே உறுப்பினராக முன்வந்த போது இதன் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மையே ஏற்பட்டது. ஆனால் அம்மையாரின் தொலைநோக்குப் பார்வை அதன் நம்பிக்கையை வலுப்படுத்தியது. இம்மகாநாடு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து நடைபெற்று விரிவடைய ஆரம்பித்ததோடு இந்திய அரசாங்கத்திலேயே பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. அன்னி பெசண்ட்டின் வழிகாட்டுதல் மற்றும் மார்கரெட் கசின்ஸ் அவர்களின் சேவையாலும் அந்த மகாநாடு வைர விழா கொண்டாடியது
.
அன்னி பெசண்ட் அம்மையார் எழுதி வெளியிட்ட நூல்கள் பல. நியூ இந்தியா’, ’காமன்வெல்த்ஆகிய செய்தித் தாள்களை நடத்தி வந்தார். தேசிய கல்வி அறக்கட்டளை’, என்ற அமைப்பை உருவாக்கி இந்திய மாணவர்களின் வளர்ச்சிக்காக, பத்திரிக்கைத் துறை கல்வித் திட்டத்தை அடையாறு தேசிய பல்கலைக்கழகத்தில் தொடங்கினார். இவருடைய கல்விச் சேவையைப் பாராட்டி பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது
.1933இல் செப்டம்பர் மாதம் 20ஆம் நாள் தனது 86 ஆவது வயதில் உயிர் நீத்தார். அவருடைய அஸ்தியின் ஒரு பகுதி காசியில் பெரிய ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு டாக்டர் பகவன் தாஸ் அவர்களால் கங்கையில் கரைக்கப்பட்டது. அடையாறில் அம்மையாரின் சமாதி உள்ளது
.இவள் உண்மை நெறி சொல்ல முயன்றாள் “, என்று தம் கல்லறையில் பொறிக்க வேண்டும் என்று அம்மையார் விரும்பிய காரணத்தினால் அதனை நிறைவேற்றினர். இவருடைய தன்னலமற்ற சேவையால் இந்திய வரலாற்றில் தன் பெயரை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பெற்றார்!
அன்னி அம்மையாரின் பகவத் கீதையின் மொழிபெயர்ப்புகள்:

Tuesday, February 21, 2012

நாங்களும் மாணவர்கள்தான்!

நேர்காணல் – சித்தார்த்தா பள்ளி மாணவர்கள்

உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது.! – காந்தியடிகளின் இந்த சத்தியமான வார்த்தைகள் எக்காலத்திற்கும், மனிதராய்ப் பிறந்த எந்நாட்டவருக்கும் பொருந்தக்கூடியது.

ஒரு குழந்தை பிறந்தவுடன், பெற்றவர்களுக்குத் தம் குழந்தையின் எதிர்காலம் குறித்து பல கனவுகளும், கற்பனைகளும் உடன் தோன்றுவதும் இயற்கை. அதனை நன்முறையில் செயல்படுத்தும் வகையில் அவர்கள் மனதில் தோன்றக்கூடிய அடுத்த விசயம் குழந்தையின் கல்வி. தம் குழந்தையை, ஒரு பிரபலமான பள்ளியில் சிறந்த மாணவனாக உருவாக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான பெற்றோரின் விருப்பமாக உள்ளது. அவரவர் குடும்பச் சூழலுக்கேற்றவாரு பள்ளியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். பிரம்மாண்ட கட்டிடங்களுடன், அதிகக் கட்டணமும் வசூலித்து, அதிக மதிப்பெண்கள் வாங்க வைத்து, நூறு சதவிகித தேர்வு முடிவுகள் காட்டும் வல்லமை பெற்ற பள்ளிகளே சிறந்த பள்ளிகளாகவும் முடிவு செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட பள்ளிகளில் மாணவர்களைச் சேர்த்து பயிலச் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு, பிரம்மப் பிரயத்தனப்பட்டு அது போன்ற பள்ளிகளில் தம் குழந்தைகளைச் சேர்க்கும் பெற்றோரே அதிக அளவில் உள்ளனர்.

அண்ணல் காந்தியடிகள் தம்முடைய, ‘நயீ தலீம்’ என்ற கல்வி முறையின் மூலம் இந்தியாவில் தொழில் மூலம் கல்வி கற்கும் முறையை விரிவாக்கத் திட்டமிட்டிருந்தார். குழந்தைகள், தங்கள் கைகளினாலேயே பொருட்கள் தயாரிப்பதை, மிகவும் விரும்பி வரவேற்றனர். அனைத்துக் கல்வியும், ஏதாவது, கைவினைப் பொருட்களின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றார். உதாரணமாக, குழந்தைகளை, பஞ்சு பொறுக்கிப் போடுவதற்கு, அழைத்துச் சென்று, அது எப்படி விளைகிறது என்கிற விளக்கங்களையும் கற்பிக்கலாம். பஞ்சு விளையக் கூடிய நாடுகள், பலதரப்பட்ட பஞ்சு வகைகள், அதனைப் பயிரிடும் முறைகள் மற்றும், அதன் வளர்ச்சி குறித்த தகவல்கள் போன்றவற்றையும் கற்பிக்கலாம்.

இந்த முறையில் குழந்தைகளின் கற்கும் ஆவல் கட்டமைக்கப்பட்டு, தெளிவான விளக்கங்கள் அளிப்பதன் மூலம் மண் எப்படி நீரை உரிஞ்சுக் கொள்ளுமோ அது போல அவர்களுடைய ஆழ்மனதில் அனைத்தும் பதிந்துவிடும். எதையும் சிரமப்பட்டு மனப்பாடம் பண்ண வேண்டியத் தேவையுமில்லை. படிப்பும்,
எழுத்தும், பின்னாளில் வந்து விடும். ஆனால் இன்றைய காலச் சூழலுக்கு ஏற்றவாரு சில மாற்றங்களுடன், படிப்பும், எழுத்தும் சேர்த்துக் கூட இது போன்ற கல்வி முறைகளை முயற்சிக்கலாம். குழந்தைகளுக்கு கல்வி கற்பது ஒரு சுமையாக இல்லாமல் அது வாழ்க்கைக்குத் தேவையான, வகையில் அமையலாம். உடல் உழைப்பும் சேர்ந்த தாய் மொழி வழி – தொழில் சார்ந்த கல்வி என்பது நமக்கு கனவாகவே இருக்கப் போகிறதா? என்பதும் நம் கல்வியாளர்களின் கவலையாகவும் உள்ளது

Hong Kong Institute of Educational Research, The Chinese university of Hong Kong பல்கலைக்கழகங்கள் இளம் சிறார்கள் முதல் பதின்மப் பருவத்தினரின் (6 முதல் 18 வயது பருவத்தினர்) கல்வி முறைமைகளின் மூலம் கல்வித் தகுதியில் முன்னேற்றம் இருப்பது போன்று சமூக வளர்ச்சியின் முன்னேற்றம் குறித்த ஆய்வுகள் உலகளாவிய முறையில் 2006, ஜூன் 3ஆம் தேதியில் மேற்கொள்ளப்ப்பட்டது.
OST (out-of-school-time services.என்ற பள்ளிக்கு வேளியேயான செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கைகள் மூலம், உலகளவில் பள்ளி மாணவர்களுக்கான ஐந்து பொதுவான, பரிமாணங்கள குறிப்பிடப்பட்டுள்ளன.

1. குழந்தைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் நல்ல புரிந்துணர்வு இருக்க வேண்டும் – நான் மிகச்சிறந்து விளங்குவதற்கு உதவி புரிபவரான எம் ஆசிரியர் இருக்கும் இடமே எம் பள்ளி என்ற எண்ணம்.

2. சமூக ஒருங்கிணைப்பு: மாணவர்களின் சக மாணவர்கள் மற்றும் பொது மக்களிடம் பழகும் தன்மை. என் பள்ளி என்பது நான் நானாக அப்படியே ஏற்றுக் கொள்ளப்படும் ஓர் இடம் என்ற எண்ணம்.

3.வாய்ப்பு: பள்ளி வாழ்க்கை அனுபவங்கள் தொடர்புடைய அவர்தம் கருத்துகள்- என் வாழ்க்கைக்கு மிக முக்கியமான விசயங்களைக் கற்கக் கூடிய இடமே எம் பள்ளியென்பது…..

4. சாதனை: பள்ளிக் காரியங்களில் வெற்றியாளராக இருக்கக் கூடிய தன்மை – ஒரு மாணவனாக நான் வெற்றியடைந்திருக்கக் கூடிய ஓர் இடமே எம் பள்ளியென்பது.

5. சாகசம் : கல்வி கற்பதற்கான சுய ஊக்கம் மற்றும் கற்பது தனக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்று என்ற தெளிவு – நான் செய்யும் செயல்கள் அனைத்தும் என்னை உற்சாகமடையச் செய்ய்க்கூடிய இடம் எம் பள்ளியென்பது.

உலகளவில், பள்ளிக் குழந்தைகளின் எண்ண ஓட்டங்களாக குறிப்பிடப்படுவன,

1. பொதுவான மன நிறைவு: தம் பள்ளியைப் பற்றிய ஆக்கப்பூர்வமான எண்ணங்கள். கொண்டிருப்பது. அதாவது, நான் தினமும் விரும்பிச் செல்லும் இடம் எம் பள்ளி என்ற என்ணம் மேலோங்கியிருப்பது.

2. எதிர்மறையான பாதிப்பு: பள்ளியைப் பற்றிய எதிரான எணணங்களைத் தோற்றுவிப்பது. அதாவது, பள்ளி என் மனநிலையைப் பாதித்து வருத்தமேற்படுத்தக்கூடிய இடமாக இருக்கிறது என்ற எண்ணம் கொண்டிருப்பது.

ஒரு நூற்றாண்டாக, பள்ளிக்கு வெளியே ஆற்றும் செயல் திட்டங்களின் மீதான ஆர்வம் அமெரிக்க மக்களிடமும் வெகுவாகக் குறைந்திருந்தாலும், கடந்த 20 ஆண்டுகளில் இது போன்ற திட்டங்களில், பள்ளிப் பருவக் குழந்தைகளின் பயிற்சியாளர்கள், இளைஞர் மேம்பாட்டு வல்லுநர்கள், கல்வியாளர்கள், குற்றவியல் மற்றும் சிறார் நீதித்துறை வல்லுநர்கள், வறுமை ஒழிப்பு வல்லுநர்கள் போன்றவர்கள் இளம் சிறார்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பின்னடைவிலிருந்து தற்காத்துக் கொள்ளக் கூடிய ஓர் உபாயம் இத்திட்டம் என்பதனை வாதிட்டுக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய இந்த பிரம்மாண்ட ஆய்வுகளின் முடிவில், கிடைத்த மதிப்பீடுகளின்படி, கல்வி கற்றலில் நல்ல ஆக்கப்பூர்வமான முன்னேற்றமும், சாதனைகளும் தென்பட்டதோடு, போதைப் பழக்கம், பெண் குழந்தைகளின் இளவயது கர்ப்பம், சிறார்களின், சிறு குற்றங்கள், போன்றவைகள் கணிசமாகக் குறைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சங்கடமான சூழ்நிலைகளைச் சமாளிக்கும் பக்குவமும், பள்ளியில் கல்வி கற்பதில் மட்டுமே முழு நேரமும் ஈடுபட்டிருக்கும் மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவதற்கு பேருதவி புரிவதாகவும், இதனால் மன உளைச்சலிலிருந்து விடுபடுவதால், தேர்வில் மதிப்பெண்களில் நல்ல முன்னேற்றமும் கிடைப்பதாகவும் , குறிக்கோள்களை நிர்ணயிப்பதில் ஆழ்ந்த ஈடுபாடும் ஏற்படுவதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டின் சூழலுக்கு இத்தகைய ஆய்வுகள் எந்த வகையில் பயன்படுகின்றன, குழந்தைகள் இதனால் பயனடைகிறார்களா என்று அறிந்து கொள்ளும் ஆவல் மேலிட்டாலும், பெரும்பாலான பள்ளிகளில், கல்வி கற்றலைத் தாண்டி ஒரு சில கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் ஏதோ ஓரிரு முறைகள் உல்லாசப் பயணங்கள் செல்வது போன்றவைகள் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கல்வி சார்ந்த பிராஜக்ட் மட்டுமே வழ்மையாக் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் குழந்தைகளின் மனநிலையில் அழுத்தம் ஏற்படுவதோடு, தொடர்ந்து கல்வி கற்றலில் ஈடுபடுவதிலும் சிரமம் ஏற்படுகிறது. அத்துடன் அத்தகைய இறுக்கமான மனநிலையே அவர்களை தவறிழைக்கவும் தூண்டுகிறது. பள்ளிப்பாடத் திட்டங்களைக் குறித்த நேரத்தில் முடிப்பதற்கே கால அவகாசம் இருப்பதில்லை. இதில் இது போன்ற சமூக வளர்ச்சித் திட்டங்கள் செயல்பாடுகள் என்பதெல்லாம் சாத்தியமாவது கடினம் என்பதே பல பள்ளிகளின் நிலைப்பாடாக உள்ளது.

அந்த வகையில் ஈரோடு சித்தார்த்தா மேல்நிலைப்பள்ளியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இது போன்று திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு பல்வேறு வகையான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 1989-90இல் பவானியில் சாயக்கழிவு நீர் மூலம் ஏற்படும் மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாணவர்கள் ஈரோட்டிலிருந்து, மிதிவண்டி பயணம் சென்று பாதுகாப்பு குறித்த பிரச்சாரம் மேற்கொண்டது பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் அது போன்று ஒவ்வொரு வகுப்பிற்கும், ஒரு திட்டம், அதாவது சமூக நலம் தொடர்பாகவும், அதே சமயம் தங்கள் வாழ்க்கைக்கும் அத்தியாவசியமாக அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் மற்றும் நம் நாட்டில் வறுமைக் கோட்டில் வாழும், குறைந்த வருமானம் கொண்டவர்களின் வாழ்க்கைத் தரம் பற்றி அறிந்து கொள்ள்வும், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான தீர்வுகளையும் ஆய்ந்து அறிக்கை வெளியிடுகின்றனர். சென்ற ஆண்டில் தெருவோரங்கள் மற்றும் நடைமேடை போக்குவரத்து பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில் மாணவர்கள் எடுத்த முயற்சியும் அதற்கான அவர்களின் பரிந்துரையும், அத்துறை மேலாளர்களால் பெரிதும் பாராட்டப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டும் இப்பள்ளி மாணவர்கள், சவரத் தொழில் செய்பவர்கள், சலவைத் தொழில், தையற்கலைஞர்கள், கட்டிடம் கட்டுமானத் தொழிலாளர்கள் ,காய்கறி விற்பவர்கள் என அனைத்து சிறு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களிடம், அவர்களின் தொழில் மற்றும் வியாபாரம் குறித்த முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கான ஆய்வேடுகளும் சமர்ப்பித்துள்ளனர். ஆசிரியர்களின் ஆலோசனையுடன், வெகு நேர்த்தியாக அவர்கள் திட்ட அறிக்கை தாயரித்திருந்தது பாராட்டுதலுக்குரியது.

ஆறாம் வகுப்பு மாணவர்கள் சவரத் தொழிலாளர்களின் கணக்கெடுப்பைச் செய்தனர். மாண்வர்கள் தங்களுக்குள் குழுக்களாகப் பிரிந்து, நகர எல்லைக்குள் ஒவ்வொரு குழுவும் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டு அங்கு உள்ள ஒவ்வொரு சவரத் தொழிலாளர்கள், அதாவது பெட்டி தூக்கிக்கொண்டு மரத்தடியில் சவரம் செய்யும் மிகச் சாதாரண கடைநிலை சவரத் தொழிலாளி முதல், ஆண்களுக்கான அழகு நிலையம் வரையிலான அனைத்துத் தரப்பு தொழிலாளர்களான சராசரியாக 80 பேரிடம், அவர்களுடைய வாழ்க்கைத்தரம், தொழில், அவர்தம் குடும்பச் சூழல், அவர்தம் மக்களின் கல்வி, எதிர்காலத் திட்டங்கள் ஆகிய அனைத்தையும் திரட்டியதோடு, அவர்தம் வாழ்க்கை உயரவும், சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது வரை அனைத்துத் தரப்பு ஆய்வுகளையும் மிக நேர்த்தியாக செய்திருந்தனர். சவரத் தொழில் செய்யும் நபர் ஒருவரை சிறப்பு விருந்தினராக அழைத்து அவர் முன்னிலையில் தாங்கள் அறிந்து கொண்ட கலைகளை செயல் முறை விளக்கமாகவும் நடித்தும் காண்பித்தது குறிப்பிடத்தக்கது. சுற்றுச் சூழல் பாதிக்காத வகையில் அந்தக் கழிவுகள் சரியாக அப்புறத்தப்படுத்தப்பட வேண்டும் அது மட்டுமல்லாமல் நோய்த் தொற்று வராமல் இருக்கும் வகையில் சுத்தமான கைத்துண்டுகள் மற்றும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளேடுகளை பயன்படுத்தலாம் என்பதற்கான விழிப்புணர்வை சிறிய சவரத் தொழிலாளிகளுக்கு ஏற்படுத்தியுள்ளதோடு, அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர, தம் தொழிலில் முன்னேறக் கூடிய வழிகள், , வங்கிக் கடன் பெறும் வழி முறைகள் போன்றவற்றிற்கான ஆலோசனைகளும் அளித்துள்ளனர். ஆசிரியர்கள் இதற்கான பயிற்சிகளையும் மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர். இறுதியில் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றிருந்த சவரத் தொழிலாளி நண்பர், கண்கள் கலங்கி, உள்ளம் நிறைந்து, இக்குழந்தைகளை வாழ்த்தியதோடு, அந்தத் தெளிவான ஆய்வறிக்கையை தங்கள் சங்கத்தில் வைப்பதற்காக ஒரு கோப்பு வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். உள்ளம் நெகிழ்ந்து அவர் நன்றி சொன்னதும், அவர் தன்னம்பிக்கையுடன் மேடையிலிருந்து கீழிறங்கிச் செல்வதையும் காண முடிந்தது.

அடுத்து ஏழாம் வகுப்பு மாணவர்கள் சலவைத் தொழிலாளர்களை இதே முறையிலும், அவர்தம் வாழ்க்கை முறைகளைக் கேட்டறிந்து கொண்டதோடு, அவர்களுக்கான முன்னேற்றத்திற்காக , இன்று வெகுவாக குறைந்துவிட்ட வெள்ளாவி வைத்து துணியை வேகவைத்து சுத்தம் செய்யும் முறையை சற்றே நவீனமாக, பெரிய மின்சாரத் தானியங்கி இயந்திரங்கள், முக்கியமாக, அதிக அளவிலான மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில், வெளிநாடுகளில் உள்ளது போன்று ,வைத்து மக்கள் கட்டணம் செலுத்தி தாங்களே வெளுத்துக் கொள்ளும்படி வைக்கலாம். அதற்கு அரசாங்கம் மற்றும் வங்கிக் கடன் உதவியும் பெறலாம். சலவைத் தொழிலாளகள் குழுக்களாக இணைந்து கூட இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளலாம். இதனால் சுற்றுப் புறமும், படித்துறைகளும். நீர்நிலைகளும் மாசுபடுவதைச் சுத்தமாகத் தவிர்க்க இயலும் என்பதையும் இந்தக் குழந்தைகள் தங்கள் ஆய்வேட்டில் குறித்துள்ளதோடு அதனை அம்மக்களிடமும் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. காலப்போக்கில் இது போன்ற கருத்துகள் மெல்ல மெல்ல நடைமுறைபடுத்தப்படும் வாய்ப்பும் உருவாகும் என்ற நம்பிக்கையும் கொண்டுள்ளனர். அவர்களிடம் நல்ல வரவேற்பும் இருந்ததாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். திருக்குறிப்புத் தொண்ட நாயனாரின் வரலாற்றை சிறு நாடகமாக ஆக்கி, ஆண்டவனே அவ்வடியாருக்குக் காட்சி கொடுத்த வகையில், அவர்தம் தொழில் எத்துனை சாலச்சிறந்தது என்பதை எளிதாக விளக்கியும் காட்டி , சிறப்பு விருந்தினராக வந்த அந்த சலவைத் தொழிலாளியை நெகிழ வைத்தனர்.

அடுத்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், காய்கறி வியாபாரிகளைச் சந்தித்து அவர்தம் தொழிற்முறைகள், வாழ்க்கை முறைகள், குழந்தைகள் கல்வித் தகுதி போன்ற பல வகையான விளக்கங்களை அலசி ஆய்ந்து அறிக்கை சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கான செயல்முறை விள்க்கங்களும் செய்து காட்டினர். காய்கறி சந்தை போன்றும், தள்ளு வண்டியில் காய்கறிகள் விற்பது போன்றும் மிக நேர்த்தியாக நடித்துக் காட்டியது, அவர்கள் அத்தொழிலை ஆழமாக புரிந்து கொண்ட விதத்தை தெளிவாகக் காட்டியது. தராசில் நிறுக்கக் கூடிய முறைகள், அதைச் சரியாகப் பயன்படுத்தும் முறையையும் அறிந்திருந்தார்கள் அவர்கள். அதுமட்டுமல்லாமல் அக்காய்கறிகளின் சத்துகள், அவைகள் விளையக்கூடிய இடங்கள் , அதற்கான தட்பவெட்ப நிலைகள், போன்ற அனைத்துச் செய்திகளையும் மிக நேர்த்தியாக சேகரித்து அறிக்கையாக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அழுகிய காய்கறிகளை உரமாக மாற்றக்கூடிய முறையையும் அதனால் வியாபாரிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கக் கூடும் என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தியதோடு, அப்பள்ளித் தாளாளர், திருமதி ஜெயபாரதி அவர்கள், மண்புழு உரம் தயாரிக்க இது போன்று அழுகிய காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை பயன்படுத்தும் வகையில் அதற்கான இடம் ஒதுக்குவது மற்றும் அதற்கான செலவுகளுக்கான வங்கிக் கடன் பெறுவதற்கோ வழியமைத்துக் கொடுக்கலாம் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தியதும் பாராட்டிற்குரியது. அக்குழந்தைகள் ஆரஞ்சுப்பழத் தோலில் இருந்து பெட்ரோல் தயாரிக்க இயலும் என்ற சமீபத்திய ஆய்வையும் எடுத்துரைத்ததும் அவர்களுடைய சமுதாய விழிப்புணர்வைப் பறை சாற்றுவதாக அமைந்திருந்தது. காய்கறிக் கழிவுகளை சுற்றுச் சூழல் மாசுபடாத வகையில் அப்புறப்படுத்தும் ஆய்வையும் அழகாக மேற்கொண்டு அதற்கான அறிக்கையும் அளித்திருந்தனர். அனைத்திற்கும் மேலாக பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டித் தேசிய பசுமைப்படை இயக்கம் மற்றும் சுற்றுச் சூழல் மன்றம் மூலம் தம் பள்ளியில் தயாரித்த துணிப்பைகளை அங்காடியில் வழங்கி அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சிறப்பு விருந்தினராக வந்திருந்த அங்காடியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஓர் பெண்மணி இக்குழந்தைகளின் திறமை மற்றும் பொறுமை போன்ற விசயங்கள் குறித்து உள்ளம் நெகிழ்ந்து பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்து கட்டிடக் கலைத் தொழிளாளர்களின் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்த எட்டாம் வகுப்பு மாணவர்களின் திறமை வெளிப்படையாகத் தெரிந்தது அவர்கள் வடிவமைத்திருந்த சிறு மாதிரிக் குடில் மூலம். ஆம். அத்துனை அழகாக தாங்களே ஒரு கட்டிடத் தொழிலாளியின் ஆலோசனையுடன் மிக நேர்த்தியாக கட்டியிருந்தனர். உறுதியான கட்டிடம் எழுப்புவதற்கு எந்த அளவிலான கலவை இருக்க வேண்டியது அவசியம் என்பது முதற்கொண்டு மிகத் தெளிவாக அறிந்து வைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தண்ணீர் வரும் குழாய்களைக் கூடத் தங்களின் கற்பனைத் திறனுடன், ஒரு சிறு புட்டியுடன் சேர்த்து இணைத்து, அதற்கான வால்வுகளையும் பொறுத்தி தண்ணீர் வரும்படி செய்து வைத்திருந்ததும் ஆச்சரியப்பட வைத்தது. அம்மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்தம் குழந்தைகளின் கல்வித் திறம் குறித்த தகவல்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் என அனைத்தையும் மிக அழகாக அறிக்கையாக்கியிருந்தனர். கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்படும், கற்கள், ஓடுகள், மார்பிள், டைல்ஸ், வர்ணங்கள், மரப்பொருட்கள் என அனைத்துத் துறைகளையும் மிக நேர்த்தியாக காட்சியாக்கியிருந்தனர் மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்து தையற்கலைஞர்களை ஆய்விற்கு எடுத்துக் கொண்டிருந்தனர் 11ஆம் வகுப்பு மாணவர்கள். அவர்களும் அதற்கான தெளிவான அறிக்கை சமர்ப்பிப்பதில் எந்த குறையும் வைக்கவில்லை. வாடிக்கையாளரிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து சிறு நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது, மற்றும் அசையாச் சிலையாக அழகாக நின்று ஆச்சரியப்பட வைத்த மாணவர் மற்றும் பல ஆண்டுகள் அனுபவம் உள்ளது போன்று துணிகளைப் பற்றியும், தையல்கலை பற்றியும் அழகாக விளக்கமளித்த மாணவர் மற்றும் நவீன முறை தையலகம் வடிவமைப்பு போன்ற பல விசயங்களில் தெளிவான விளக்கம் கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆண் தையற்கலை வல்லுநர்கள் இருபாலருக்கும் ஆடைகள் தைக்கும் வல்லமை பெற்ற அளவிற்கு பெண் தையற் கலைஞர்கள், பெண்களுக்குரிய ஆடைகளை மட்டுமே தைக்கும் வழக்கமே பெரும்பாலானவர்கள் கொண்டிருப்பதாக அவர்கள் சமர்பித்த அறிக்கையில் இருந்ததும் சிந்திக்க வைப்பதாகவும் இருந்தது.

அனைத்து மாணவர்களையும் இறுதியாக வாய்மொழித் தேர்வாக எழுப்பப்பட்ட வினாக்கள் மூலம் அவர்கள் அறிந்து கொண்டதாகக் கூறிய விசயங்கள்தான் சித்தார்த்தா பள்ளியின் உன்னதமான இம்முயற்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது எனலாம். ஆம், அக்குழந்தைகள் அனைவரும் ஒன்று போல சொன்ன விசயங்கள்:

எந்தத் தொழிலிலும் உயர்வு தாழ்வு என்பதே கிடையாது. நாம் செய்யும் தொழிலே நமக்கு தெய்வம்.

செய்யும் தொழிலை வைத்து அவர் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு கொள்வது முறையல்ல.

கைத்தொழில் சிறு வயது முதலே கற்றுக் கொள்வது பிற்காலத்தில் கட்டாயம் பயன்படும்.

நவீன முறைமைகளை பின்பற்றுவது மூலமாக தனி மனித வாழ்க்கை உயர்வடைவது போன்றே சமுதாயமும் உயர்வடைந்து நம் நாடும் நல்ல முன்னேற்றம் காணும் வாய்ப்பும் அதிகம்.

ஓய்வு நேரங்களை இது போன்று ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட பயன்படுத்தும் போது, மன இறுக்கமும் குறைந்து, சமுதாயத்திற்காக தம் பங்களிப்பையும் வழங்கியுள்ள மன நிறைவும் கிடைக்கிறது.

தேவையற்ற தீய சிந்தனைகள், பழக்க வழக்கங்கள் அறவே நெருங்க முடியாத அளவிற்கு உள்ளத் தெளிவு ஏற்படுகிறது .

சமுதாயத்தில் பொது மக்களிடம் பழகும் தன்மை மற்றும் சக மனிதரை மதித்துப் போற்றும் வள்ளல் தன்மையும் இயல்பாவதும் சிறப்பு.

தம் எதிர்காலம் குறித்த தெளிவான குறிக்கோள் அமைப்பதற்கான அடிப்படை விழிப்புணர்வு பெற முடியும் நிலை.

தன்னம்பிக்கை, குழுவாக இணைந்து பணிபுரியும் திறன், விடாமுயற்சி, பொறுமை, தாம் நினைத்ததை சொற்கள் மற்றும் செயல்கள் மூலமாக வெளிப்படுத்தும் திறமை.

ஆசிரியர்களிடம் நட்புறவுடன் மற்றும் அன்புடன் பழகும் வாய்ப்பு.

சமுதாயத்தில் தானும் ஒரு சாதனையாளர் என்ற மன நிறைவு.

தங்களுக்கு இது போன்ற சமூகப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான கால அவகாசம் எவ்வாறு கிடைக்கிறது என்று கேட்ட பொழுது தாளாளர் ஜெயபாரதி அவர்கள் அமைதியான புன்சிரிப்புடன், மனம் இருந்தால் மார்கமுண்டு என்று கூறியதில் அர்த்தம் இருப்பதாகவே உணர முடிந்தது.

இப்படி இன்னும் பலப்பல காரணங்களை மாணவர்கள் குறிப்பிட்டதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இம்மாணவர்களின் எண்னங்கள் சரியான பாதையில் வழி நடத்தப்படுவதற்காக அப்பள்ளித் தாளாளர் திருமதி ஜெயபாரதி மற்றும் முதல்வர் , ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து, நாமும் இனி ஆசிரியர் உமாமகேசுவரி அவர்களுக்கு நடந்த கொடுமை நடக்காது என்ற நம்பிக்கையும் முளைவிட மன நிறைவுடன் வந்தோம்!

நன்றி : வல்லமை வெளியீடு.