Saturday, February 25, 2012

உண்மை நெறி சொல்ல முனைந்தவர்

இந்தியத் திருநாட்டின் மறுமலர்ச்சியில் பெண்கள்!

The world is our country,
All mankind are our brethren,
To do good is our religion
I believe in only one God and no more
அன்னி பெசண்ட் அம்மையார் [1847 - 1933].
நம் இந்திய தேசத்தின் மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் அன்னி பெசண்ட் அம்மையாரும் ஒருவர். இங்கிலாந்து நாட்டில் பிறந்து வளர்ந்தாலும் இவர்தம் உழைப்பு முழுவதையும் இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காகவே அர்ப்பணித்தவர். எண்ணற்ற இந்திய மக்களின் இதயங்களில் நீங்காத இடம் பெற்றவர்
.
அன்னி பெசண்ட் அம்மையார், அயர்லாந்து நாட்டில் பிறந்த ஓர் அன்னியராக இருப்பினும் நம் இந்திய மக்களுக்காகப் போர் கொடி தூக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1893ஆம் ஆண்டு முதன் முதலில் தூத்துக்குடி வந்து இறங்கினார் அன்னி பெசண்ட். இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்த அந்த நொடியிலிருந்து, சென்னையில் கூவம் நதிக்கரையில் நிரந்தர அமைதி அடைந்த [சமாதி] அந்நொடி வரை ஓயாத உழைப்பு ஒன்றையேத் தாரக மந்திரமாகக் கொண்டிருந்தவர் அம்மையார். அவர்தம் வாழ்க்கை முழுவதையும் பிரம்மஞான தத்துவத்தின் விளக்கமாக வாழவே முயற்சித்தவர். இந்திய தேச, கலாச்சார நோக்கின் அடிப்படையில், அம்மையாரின் தொடர் பணிகள் எண்ணிலடங்காதவை
.
பகவத் கீதையின் உயர் தத்துவ ஞானம் அனைவரையும் சென்று அடையும் வகையில் எளிய ஆங்கில மொழியில் மொழியாக்கம் செய்தார் அன்னி. இந்தியக் கலாச்சாரம் மற்றும் இலக்கியங்களை ஊக்குவிக்கும் பொருட்டும், அதனைக் கற்பிக்கும் வண்ணம், வாரணாசி மற்றும் சென்னையில் 1898ஆம் ஆண்டு, ‘சென்ட்ரல் இந்து காலேஜ் என்ற கல்லூரியை நிறுவினார். அங்கு இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளைக் கட்டாயப் பாடமாக வைத்து இந்திய இளைஞர்களை கற்கச் செய்தார். இக்கல்லூரியே, பிற்காலங்களில் மதன் மோகன் மாளவியா, நிறுவிய இந்து பல்கலைக்கழகத்திற்கு அஸ்திவாரமாக அமைந்தது. இன்று பகவத் கீதையை கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளில் லட்சக்கானோர் அறிந்திருக்கிறார்கள் என்றால் அதன் பெருமை அம்மையாரையே சாரும். திலகரின் கீதா ரகசியம்என்ற நூலும் பிரசித்தி பெற்றிருந்தது.
அம்மையார் 1847ஆம் ஆண்டு, அக்டோபர் திங்கள்,1ஆம் நாள், வில்லியம் பேஜ்வுட்- எமிலி மோரீஸ் தம்பதியருக்கு ,அயர்லாந்து நாட்டில் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள், ஹாரி, ஆல்பிரட் என்ற இரு சகோதரர்களும் உண்டு. இவருடைய ஐந்தாவது வயதிலேயே தந்தை இறந்ததனால் குடும்பம் பெரும் பொருளாதார சிக்கலில் திணறியது. வறுமையும், சோகமும் குடும்பத்தைச் சூழந்த வேளையில், சகோதரன் ஆல்பிரட்டும் இறந்து போக, பள்ளியில் சென்று படிக்க முடியாத நிலை ஏற்பட்டது இவருக்கு. மிஸ் மேரியட் என்ற கல்வியாளர் அன்னியை 7 வயதில் தன்னுடன் அழைத்துச் சென்று படிப்பைத் தொடரத் துணைநின்றார். பள்ளியில்,ஆங்கிலம், பிரெஞ், ஜெர்மன் ஆகிய மொழிகளை அன்னி நன்கு கற்றார். படிப்புடன் இசையையும் கற்றிருந்தார். அன்னி தமது 16ஆம் வயதுக்குள்ளே மில்டன், வால்டர் ஸ்காட், சாக்ரடீஸ், பிளாட்டோ, வேர்ட்ஸ்வெர்த், கூட்டன் பர்க், தாந்தே போன்ற அறிஞர்களின் வாழ்க்கையையும் சாதனைகளையும் நன்கு கற்று, சிறந்த கல்வியையும் நற்பண்புகளையும் இளமையிலேயே தன்னகத்தே பெற்று, சிறப்புடன் விளங்கினார்
1867ஆம் ஆண்டில், தம்முடைய 21 வயதில், பிராங்க் பெசண்ட் என்பவருக்கு மணம் முடிக்கப் பெற்றார். பிராங்க், தீவிர மத நம்பிக்கைக் கொண்ட ஒரு மதபோதகராக இருந்தார். இவருடைய ஆழ்ந்த மத நம்பிக்கை, அன்னியின் குணத்திற்கு பொருந்தாத ஒன்றாக இருந்த காரணத்தினால், இருவரும் இரு துருவங்களாகவே வாழ்ந்ததினால், சட்டரீதியானப் பிரிவு இவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
பெண்களுக்கு எதிராக அநீதி இழைக்கும் நாடுகள் பரவலாக இருந்த காலம் அது. பிரித்தானியப் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய காலமும் அதுதான். வாக்குரிமைக்கான அவர்களின் போராட்டம் தலைப்புச் செய்தியானது. இதற்காக சிறைவாசம், காவலர்களின் அச்சுறுத்தல் என்று பல பிரச்சனைகளுக்கு ஆட்பட்டிருந்தார்கள். அப்பெண்கள் இதற்காக மேற்கொண்ட தியாகங்களும், பொறுமைகளும் ஆச்சரியப்படத்தக்க செய்திகளாகும்
.
முதல் உலகப்போரில் இந்தப் போராட்டம் ஓய்ந்தது. வேண்டாதவர்களாக ஒதுக்கப்பட்ட பெண்கள், நாட்டுப்பற்று கொண்ட காரணத்தினால், தங்களின் நேர்மையான, உயர்ந்த சேவைகள் மூலம் தங்களுக்கான அங்கீகாரத்தையும் பெற்றுக் கொண்டனர். ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்குப் பிறகு 1832ஆம் ஆண்டு, முதல் மறுமலர்ச்சி சட்டம் வெளியான பிறகு, வாக்குரிமையைப் பெற்றார்கள். இந்தப் போராட்டத்தின் பின்னனியில் பல்லாண்டுக்கால உழைப்பும், தியாகமும் இருந்ததென்பதை எவரும் மறுக்க இயலாது. பிரித்தானிய அரசாங்கத்திற்கும், பொது மக்களுக்கும், பெண்களும் ஆண்களுக்கு நிகரானவர்கள்தான் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த, எத்தனையோ, சிறைவாசங்களையும், தண்டனைகளையும் பெற்றார்கள் என்பதும் நிதர்சனம். அன்னி பெசண்ட் அம்மையாரும் இந்தப் பெண்கள் இயக்கத்தில் ஒரு முக்கிய நபராக இருந்தவர். இவருடைய முதல் பொதுக்கூட்ட சொற்பொழிவே, பெண்களின் நிலை குறித்ததாகவே இருந்தது
.
மனித உரிமைகளுக்கான மசோதா, அனைத்து குடிமக்களுக்கும் சமமான உரிமைகளை உறுதியளித்திருந்தாலும் பெண்களுக்கு அதனை அளிப்பதற்கு அரசாங்கம் இருமுறை யோசித்தது. ஆனால் சமுதாயமோ, நூறு முறை யோசித்தது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்கூட அந்நாளில் பெண் என்பதால் மாணவிகளுக்கு பட்டம் கொடுப்பதற்கு மறுத்திருக்கிறது
.
அன்னி அச்சூழலில்தான் பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் குறித்து எழுத ஆரம்பித்திருந்தார். மணமான பெண்கள் தங்கள் வருமானம், சொத்து அனைத்தையும் கணவனிடம் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்த காலமது. அன்னியின் அது குறித்த முயற்சிகள் மற்றும் எழுத்துக்களில் பின்னடைவு ஏற்பட்டன. ஆயினும் அவர் தடைகளை புறக்கணித்து விட்டு திரும்பவும் எழுத ஆரம்பித்தார். பிற்காலத்தில் பெருமளவில் எழுதவும், பத்திரிக்கைகளுக்குப் பதிப்பாசிரியராகவும், இதழாசிரியராகவும் செயல்பட்டார்
.
கணவரைச் சட்டப்படி பிரிந்தாலும், தன் இரு பெண் குழந்தைகளையும் தன் பொறுப்பில் வளர்க்கவே முடிவெடுத்தார். ஒரு கட்டத்தில் தன் மகள் நோய்வாய்ப்பட்ட தருணத்தில், கடவுள் மீது கொண்ட நம்பிக்கையை இழக்க ஆரம்பித்தார். நாத்திக எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. தன் பேச்சுத் திறமையை வளர்த்துக் கொண்டிருந்தார். 1872 ஆம் ஆண்டு, தன்னுடைய 40ஆவது வயதில் அன்னிக்கு சமூக சேவையில் முழு நாட்டம் உறுவானது. எதனையும் எதிர் கொள்ளும் போராட்டக் குணமும் கொண்டவராக இருந்தார்
.
பிரித்தானிய அருங்காட்சியகம் என்ற நூல் நிலையத்திலுள்ள புத்தகங்களைப் படித்து தன் அறிவை விரிவடையச் செய்திருந்தார். இச்சமயத்தில்தான், சார்லஸ் பிராட்லா என்ற சீர்திருத்த வாதியைச் சந்திக்க நேர்ந்தது. தொழிலாளர்கள் நலனில் அக்கரை கொண்ட அன்னி, அவர்களுக்காகத் தொண்டாற்றியதோடு, சமுதாயச் சீர்திருத்தங்களுக்காக சொற்பொழிவாற்றுதலும், கட்டுரைகள் எழுதும் பணியிலும் ஈடுபட்டிருந்தார். சார்லஸின், அறிவாற்றலாலும், சுதந்திரக் கருத்துகளாலும், தனிப்பட்ட திறன்களினாலும், பொறுமை மற்றும் தொழிலாளர்கள் நலனில் அக்கரையினாலும், பெரிதும் கவரப்பட்டார் அன்னி. அஜக்ஸ்என்ற புனைப்பெயருடன் பிராட்லியின், ‘ நேஷனல் ரெஜிஸ்டர் எனும் பத்திரிக்கையின் முக்கியமான பங்களிப்பாளராக ஆனார்.இவருடைய முதல் மேடைப் பேச்சு, 1874ஆம் ஆண்டு, ஒரு கூட்டுறவு நிறுவனத்தில் ஆரம்பித்தது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சார்லஸ்க்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அன்னி. சமூக நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியதன் மூலம், பல எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டியிருந்தது. எடின்பர்கில், சேரிப்பகுதியில் பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தபோது, அம்மக்களின் துன்பங்களைக் கண்டபிறகு சமூகச் சேவை குறித்த அவரின் பார்வையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. தொழிற்சங்கத் தலைவர் பதவியேற்றார்
.
பல்வேறு விதமான இன்னல்களுக்கிடையேயும், அம்மையார் இலண்டன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டம், மிக உயர்ந்த மதிப்பெண்களுடன், பெற்றது குறிப்பிடத்தக்கது. ஃபேபியன் கூட்டமைப்பில் சேர்ந்து, ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, மற்றும் மாரிஸ், ஹிண்ட்மன் போன்ற பிரபலமானவர்களின் நட்பும் பெற்றார். இந்நேரத்தில் இவருக்கு முழுநேரத் தொழிலாளர் முன்னேற்றப் பணியாளராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. லண்டனில் தீக்குச்சித் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களின் மேம்பாட்டிற்காக, தீக்குச்சித் தொழிலாளர் சங்கம் ஒன்றை நிரந்தரமாக ஏற்படுத்தி அதன் மூலம் போராடி வெற்றி பெற்றார்
.
அன்னி பெசண்ட் அம்மையார் இஸ்லாம், புத்தமதம், இந்துமதம் ஆகிய சமயக்கொள்கைகளை ஆழ்ந்து படித்ததோடு, கிறித்துவ மதக்கொள்கைகளோடு அதனை ஒப்பு நோக்கியதன் விளைவு ஒரு புது கொள்கை உருவானது பிரம்மஞான சபையை நிறுவிய பிளாவட்ஸ்கி அம்மையார் எழுதிய இரகசிய தத்துவம்’, என்ற நூலை ஆழ்ந்து படித்து அழகான விமரிசனம் ஒன்றை பிரபலமான பத்திரிக்கை ஆசிரியர் வில்லியம் ஸ்டெட் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அப்பத்திரிக்கைக்கு அனுப்பினார். பிரம்மஞான சபையை பிளாவட்ஸ்கியும், ஹென்றி ஆல்காட்டும் சேர்ந்து தோற்றுவித்தார்கள்
.
ஒன்றே குலம்....ஒருவனே தேவன், உண்மையே உயர்ந்த மதம், என்பது இச்சங்கத்தின் கொள்கைகளாகும். இவர்களின் சிலைகள் இன்றும் சென்னை அடையாறு பிரம்மஞான சபை மண்டபத்தில் இருக்கின்றன
.
1891இல் பிளாவட்ஸ்கி அம்மையார் காலமானதும் அன்னி அம்மையார் பிரம்மஞான சபையில் இணைந்தார். இதன் கொள்கைகளை தீவிரமாக ஐரோப்பிய நாடுகளிலும் பிரச்சாரம் செய்தார். அச்சமயத்தில் இந்துமத அரிய நூல்களைப் பயின்று அதன் உயர்ந்த கொள்கைகளால் பெரிதும் கவரப்பட்டார். இந்து மதத்தின் மீது மிகுந்த பற்றும் மரியாதையும் ஏற்பட்டது. பிரம்மஞான சபையை பரப்புவதற்கு இந்தியாவே சிறந்த இடம் எனக்கருதி இந்தியாவிற்கு 1893ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வந்து சேர்ந்தார். சென்னையில் உள்ள அடையாறு இச்சபையின் தலைமை இடமாகச் செயல்பட்டது. பல்லாண்டுக்கால பொதுச்சேவையை விட்டு பிரம்மஞான சபையில் இணைவதற்கு சில காரணங்களும் அவருக்கு இருந்தது
.
சாதிமத பேதமற்ற சமத்துவமான, சகோதரத்துவம் உலகில் மலர வேண்டும்
இந்து சமயத் தத்துவங்கள் வெளிவர வேண்டும்
மனிதர்களுக்குள் மறைந்து கிடக்கும் இயற்கை சக்திகளையும், விளங்காத இயற்கை நியதிகளின் விழிப்புணர்வும் கொள்ள வேண்டும்
.மேற்கண்டவைகள் அனைத்தும் சாத்தியமாக வேண்டுமெனில் பிரம்மஞான சங்கத்தில் அனைவரும் இணைய வேண்டும் என முழங்கினார். இவரது ஆத்மார்த்தமான சொற்பொழிவைக் கேட்டு மனம் உருகி ஆயிரக்கணக்கானோர் இச்சங்கத்தின் கொள்கைகளைப் பின்பற்றினர். உலகின் பல நாடுகளில் பிரம்மஞான சபையின் கிளைகள் தோன்றலாயின
.
1907இல் இச்சங்கத்தின் முதல் தலைவர் ஆல்காட் மறைவிற்குப்பின், அன்னி பெசண்ட் அம்மையார் அச்சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்று அதன் வளர்ச்சிக்காக எண்ணற்ற பணிகள் ஆற்றினார். 1912இல் சேவை செய்யும் சகோதரர்கள்’ [ THE BROTHERS OF SERVICE ] என்ற அமைப்பை தோற்றுவித்தார். அதன் மூலம் இளைஞர்களுக்கு ஆன்மீகமும், அரசியலும் பயிற்றுவித்தார். பிரம்மஞானத் தத்துவத்தை பரப்பும் பணியில் இவருடன் டாக்டர் அருண்டேல், ஜீனராஜதாசர், ருக்மணிதேவி ஆகியோர் இணைந்து கொண்டனர்
.
அன்னி பெசண்ட் அம்மையாரின் தோற்றப்பொலிவும், பழகும் வள்ளலும், எவரையும் எளிதில் கவர்ந்து விடும். அவர் இந்தியாவில் வாழ்ந்த மொத்த காலங்களிலும் மெல்லிய தங்கநிற நீண்டக் கோடுகள் இழைத்த வெண்ணிற சேலையையே அணிந்து கொண்டார். அவருடைய வெள்ளி நிற தலை முடிக்கு அது மிகப் பொருத்தமானதாகவே இருந்தது. அவருடைய குரலோ, கேட்பவரை வசீகரிக்கும், ஒரு அழகான ஆன்மாவின் குரலாகவே ஒலித்தது. இக்குரல் வளமே பல்லாயிரக்கணக்கோரை தம்பால் கவர்ந்திழுக்கச் செய்து, பேச்சின் மீது முழுகவனம் செலுத்தவும், ஆழ்ந்த அமைதி காக்கவும் செய்தது
.
இந்து மதத்திற்கு அம்மையார் ஆற்றிய தொண்டு அளப்பரியது. இந்து சமய நூல்களையும், கலாச்சாரங்களையும் பரப்பும் பொருட்டு அவர் பகவத் கீதையை எளிமையான ஆங்கிலத்தில், சிறுவர்களும், இளைஞர்களும் பயிலும் வகையில் மொழி மாற்றம் செய்தார். அதுமட்டுமன்றி, இந்து மத தர்மங்களைப் பற்றி பல புத்தகங்களையும் எழுதி வெளியிட்டார். இந்திய இளைஞர்களின் எண்ணத்தில் தம் நாடு, தம் கலாச்சாரம் பண்பாடு போன்ற அனைத்தையும் பதியச் செய்யும் பொருட்டு, 1898இல் சென்ட்ரல் இந்து காலேஜ்என்ற கல்லூரியை நிறுவினார். அங்கு இந்து மதத்தின் அடிப்படையான கொள்கைகளை கட்டாயப் பாடமாக வைத்து இந்து இளைஞர்களை கற்கச் செய்தார். இக்கல்லூரிதான் பிற்காலத்தில் மதன் மோகன் மாளவியா நிறுவிய இந்து பல்கலைக்கழகத்திற்கு’, அஸ்திவாரமாக அமைந்தது. இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டோர் என்றொரு பிரிவு , சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்காக இருந்ததைக் கண்டு, வருந்தியவர், அவர்களுக்கென்று தனிப்பட்ட பள்ளிகளையும் அவர்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பல சங்கங்களையும் நிறுவினார்
.
1916ஆம் ஆண்டு இவர் ஹோம் ரூல் இயக்கம்’, என்ற சுய ஆட்சி இயக்கத்தை ஆங்கிலேயர்களின், கடுமையான எதிர்ப்புக்கிடையில், மனம் தளராமல் நடத்தி வந்தார். இந்தியர்களுக்கு உரிமை வழங்கும்படி ஆங்கிலேயர்களுடன் போராடிக் கொண்டிருந்தார். பல தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் இந்த இயக்கத்தில் இணைந்தனர். மேலும் அவர் காமன்வெல்த் மசோதாவை நகலாக்கினாலும் அதனை பிரபலப்படுத்தும் முயற்சியை எடுக்கவில்லை.
இந்திய இளைஞர் சங்கத்தை [Y.M.I.A.] சென்னையில் ஏற்படுத்தி அதில் பார்லிமெண்ட் விவாத சபையும் நிறுவினார். பெரிய நூல்நிலையம் ஒன்றையும் நிறுவினார். இந்தியச் சிறார்களை சாரணர் இயக்கத்தில் பங்குபெறச் செய்தார். இந்திய சாரண இயக்கத்தினர் அன்னி அம்மையாரை சாரண இயக்கத்தின் கௌரவ பொறுப்பாணைக்குழு அங்கத்தினராக அறிவித்தது அவருடைய உயர்ந்த சேவைக்குக் கிடைத்த பரிசாகும். சாரண இயக்கத்தின் நிறுவனர் பேடன் பவல் பிரபு அம்மையாரை கௌரவிப்பதற்காகவே இங்கிலாந்திலிருந்து வந்தார். சாரண இயக்கத்திற்கு ஒப்பற்ற சேவை செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் வெள்ளி ஓநாய் என்ற பதக்கத்தை மாபெரும் மக்கள் கூட்டத்தில் பேடன் பவல் பிரபு அன்னி பெசண்ட் அம்மையாருக்கு அணிவித்து மகிழ்ந்தார்
.
1917ஆம் ஆண்டு கல்கத்தாவில் கூடிய இந்திய தேசிய காங்கிரசின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அழைக்கப்பட்டார். அந்த பிரம்மாண்ட கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை, இந்திய மக்களின் மீது அவர் கொண்ட ஆழ்ந்த அக்கரையையும், அன்பையும் வெளிப்படுத்தியது. இதற்குப் பிறகு இவருடைய செயல்பாடுகள் கலாச்சரம் மற்றும் அரசியல் தொடர்புடையதாகவே இருந்தது. இந்த காலகட்டத்தில்தான் அவர் கையெழுத்துப் பிரதிகளுக்கான நூலகக் கட்டிடத்தை அடையாறில் கட்டினார். இந்தியக் கலாச்சாரத்தின் முக்கிய அம்சமான பரத நாட்டியம், கோயில் நடனக் கலைஞர்கள் மற்றும் தேவதாசிகளிடம் அடைபட்டுக் கிடந்ததை ருக்மிணி தேவிக்கு உதவித்தொகை அளித்ததன் மூலம் பரதநாட்டியக் கலாச்சாரத்திற்கே ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். நாட்டுப்பற்று கொண்ட பல்வேறு இனப் பெண்களையும் ஒன்றிணைத்து சகோதரத்துடன் நாட்டு நலனில் பங்கெடுக்கும்படி செய்தார். மார்கரெட் கசின்ஸ் உடன் இணைந்து அம்மையார் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தார். மக்கள் அவரைத் தங்கள் எதிர்காலத் தலைவராகவே அடையாளம் கொண்டனர்
.
1927ஆம் ஆண்டு, சுதந்திரமான எண்ணம் கொண்ட மகாராணி சின்னாபாய் கெய்க்வாட் தலைமையிலான அகில இந்திய பெண்கள் மகாநாடு, பூனாவில் நடத்தப்பட்டது. ஆனால்,படித்த, சொற்பமான பெண்கள் மட்டுமே உறுப்பினராக முன்வந்த போது இதன் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மையே ஏற்பட்டது. ஆனால் அம்மையாரின் தொலைநோக்குப் பார்வை அதன் நம்பிக்கையை வலுப்படுத்தியது. இம்மகாநாடு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து நடைபெற்று விரிவடைய ஆரம்பித்ததோடு இந்திய அரசாங்கத்திலேயே பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. அன்னி பெசண்ட்டின் வழிகாட்டுதல் மற்றும் மார்கரெட் கசின்ஸ் அவர்களின் சேவையாலும் அந்த மகாநாடு வைர விழா கொண்டாடியது
.
அன்னி பெசண்ட் அம்மையார் எழுதி வெளியிட்ட நூல்கள் பல. நியூ இந்தியா’, ’காமன்வெல்த்ஆகிய செய்தித் தாள்களை நடத்தி வந்தார். தேசிய கல்வி அறக்கட்டளை’, என்ற அமைப்பை உருவாக்கி இந்திய மாணவர்களின் வளர்ச்சிக்காக, பத்திரிக்கைத் துறை கல்வித் திட்டத்தை அடையாறு தேசிய பல்கலைக்கழகத்தில் தொடங்கினார். இவருடைய கல்விச் சேவையைப் பாராட்டி பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது
.1933இல் செப்டம்பர் மாதம் 20ஆம் நாள் தனது 86 ஆவது வயதில் உயிர் நீத்தார். அவருடைய அஸ்தியின் ஒரு பகுதி காசியில் பெரிய ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு டாக்டர் பகவன் தாஸ் அவர்களால் கங்கையில் கரைக்கப்பட்டது. அடையாறில் அம்மையாரின் சமாதி உள்ளது
.இவள் உண்மை நெறி சொல்ல முயன்றாள் “, என்று தம் கல்லறையில் பொறிக்க வேண்டும் என்று அம்மையார் விரும்பிய காரணத்தினால் அதனை நிறைவேற்றினர். இவருடைய தன்னலமற்ற சேவையால் இந்திய வரலாற்றில் தன் பெயரை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பெற்றார்!
அன்னி அம்மையாரின் பகவத் கீதையின் மொழிபெயர்ப்புகள்:

9 comments:

  1. நல்ல பதிவு

    உங்க ஓட்டை நீங்களே போடலைன்னா எப்படி?

    ReplyDelete
  2. நிறைய விவரங்கள். பெயரளவில் தெரிந்த நபரை புரிந்துகொள்ள முடிந்தது.
    இவர் மொழிபெயர்த்த கீதை புத்தகங்கள் பற்றிய விவரம் ஏதாவது தெரியுமா? நெட்டில் தேடினேன்.. எதுவும் கிடைக்கவில்லை. ஆர்வத்தைக் கிளப்பிவிட்டது.

    ReplyDelete
  3. அன்பின் திரு செந்தில் குமார்,

    தங்கள் வருகைக்கு நன்றி. நம் ஓட்டை நாமே போட்டுக் கொள்வதை விட, நமக்காக இன்னொருவர் ஓட்டு போடுவதுதானே சிறந்ததாக இருக்கும் இல்லையா? அதற்கு என்னை நான் தகுதியாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். சரிதானே அது?

    ReplyDelete
  4. http://www.archive.org/stream/bhagavadgitaorlo00besa#page/n1/mode/2up

    http://www.light-weaver.com/bg/bg_links.html

    http://www.theosophical.org/files/resources/selfstudy/Gita.pdf

    அன்பின் ஐயா,

    தங்கள் புண்ணியத்தில் எனக்கும் இந்த மொழிபெயர்ப்புப் பகுதியை படிக்கும் வாய்ப்பு.... மிக்க நன்றி. பணிவான வணக்கங்கள்

    அன்புடன்

    பவள சங்கரி.

    ReplyDelete
  5. http://www.archive.org/stream/bhagavadgitaorlo00besa#page/n1/mode/2up

    இதற்கு லிங்க் கொடுக்க முயற்சித்தேன் ... முடியாதலால், பதிவினுள்ளேயே கொடுக்கிறேன். நன்றி அப்பாதுரை சார்.

    ReplyDelete
  6. linksக்கு நன்றிங்க.
    இந்தப் புத்தகங்கள் பெசந்ட் அம்மை மொழி பெயர்த்ததல்ல.. அல்லது i think அதிலிருந்து இன்னொருவர் தன் கருத்துக்களைச் சேர்த்து எழுதியது.
    அவர் மொழி பெயர்த்தக் குழந்தைகள் புத்தகத்தைப் படிக்க விரும்புகிறேன். உங்கள் தேடலில் கிடைத்தால் தகவல் கொடுங்கள். சென்னை வந்தால் அடையாறு சென்று கேட்டுப் பார்க்கிறேன். பிள்ளைகளுக்கு கீதையின் சாரத்தை எடுத்துச் சொல்வது மிகவும் கடினம்.. அவர் எப்படிச் சொன்னார் என்று அறிய ஆவல். :)

    ReplyDelete
  7. அம்மை மொழி பெயர்த்த நடேசன் பதிப்பக version க்கு நன்றிங்க.

    ReplyDelete
  8. அன்பின் திரு அப்பாதுரை சார்,

    இதோ அம்மையாரின் மொத்த படைப்புகளும் ஆன்லைனில் கிடைக்கிறது.தேவையானால் நாம் பிரிண்ட் அவுட் கூட எடுத்துக்கலாம் இல்லையா... அம்மையாரின் படைப்புகளை பொறுமையாக படிக்கலாம்... சூப்பரா இருக்கு சார்.. எல்லாமே இருக்கு பாருங்க..நன்றி சார்,

    http://www.anandgholap.net/

    ReplyDelete