Thursday, July 16, 2015

அவந்திகா



பவள சங்கரி

அவந்திகா



நம் ஒவ்வொருவரின் செயல்பாட்டிற்குமே நாம் பெற்றிருக்கின்ற ஞானத்தின் இயல்பு, நம்மிடம் மறைந்துள்ள சத்வ, ரஜோ, தாமச குண இயல்புகள், நமது கொள்கைப் பிடிப்பு ஆகியவையும், நமது கர்மப் பலனும் தான் முக்கிய காரணம்.

ஒரு செயலில் ஈடுபடுதல், செய்யாமல் விடுவது, செய்யத்தக்க செயல், செய்யத் தகாத செயல், அச்சம், அச்சமின்மை, பந்தம், விடுதலை போன்றவற்றைச் சரியாக உணர்ந்துகொள்ளும் அறிவு தான் சாத்வீக புத்தி.

எந்த ஓர் அறிவு செய்யத்தக்கது, செய்யத் தகாதது ஆகியவற்றைச் சரியாக அறிவதில்லையோ அது குழப்பமான ராஜச புத்தி. இவை தவிர தர்மத்தை அதர்மமாகவும், அதர்மத்தைத் தர்மமாகவும் மாற்றிப் புரிந்துகொண்டு செயல்படுவது தாமச புத்தி. இதற்கு நல்லதெல்லாம் தீயதாகவும், தீயவை நல்லவையாகவும் தோன்றும். எடுத்துச் சொன்னாலும் புரியாது. தொடர்ந்து தவறாகச் செயல்படவே தூண்டும்.

Wednesday, July 15, 2015

கர்மவீரர் காமராசர் !



தன் தாய்க்கு மாதம் 120 ரூபாய்  சாப்பாட்டு செலவிற்குக் கொடுப்பாராம். ஒரு முறை அவருடைய தாயார், மகனிடம், செலவிற்கு பணம் போதவில்லை கொஞ்சம் சேர்த்து கொடுக்கும்படி கேட்டாராம். ஆனால் நம் தலைவரோ முடியாது என்று மறுத்துவிட்டாராம். முதல் அமைச்சரின் தாயார் என்பதால் அடிக்கடி அவரக் காண வருபவர்களுக்கு காபி, தேநீர் கூட கொடுக்க முடியவில்லையே என்று அன்னை வருந்தியிருக்கிறார்.  அப்போது காமராஜரைப் பார்த்து அவருடைய  நண்பர் ஒருவர், ‘நீங்கள்தான் சம்பளம் வாங்குகிறீர்களே. அதையெல்லாம் என்ன செய்கிறீர்கள்?’  என்று கேட்க, அவரும் உடனே, ‘என் தாயாருக்கு சாப்பாட்டு செலவுக்கு பணம் அனுப்பி வைக்கிறேன். என்னுடைய  சாப்பாட்டு செலவுகள் போக, அடிக்கடி கட்சி வேலைகளுக்காக புதுடெல்லிக்குப் போவதால்,  சம்பளப் பணம் செலவழிந்து போகிறது. முதலமைச்சராகப் போனால் மட்டும்தான் அரசாங்கச் செலவு. நம் கட்சி வேலைகளுக்காகப் போனால் என் சொந்தப் பணத்திலேதான் சென்று வருகிறேன்’ என்று பதில் வந்துள்ளது. எத்தனை பெருந்தன்மை! இவரல்லவோ சிறந்த தலைவர்!

Tuesday, July 14, 2015

நாடகத் துறையில் ஒரு மைல்கல்!


பவள சங்கரி
நம் சங்கத் தமிழ் என்பது இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் உள்ளடக்கியது. இயற்றமிழ் இன்று மெல்ல, மெல்ல உருமாறிக் கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் நம் தமிழ் வல்லுநர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. கர்நாடக இசை, மெல்லிசைப் பாடல்கள், பக்தி இலக்கியம் போன்றவைகள் மூலமாக இசைத்தமிழ் காப்பாற்றப்பட்டு, தம் நிறம் இழக்காமல் இருக்கிறது. தம் எண்ணங்களை தமது உடல்மொழியின் வாயிலாக இயல்பாக வெளிப்படுத்தி, புறத்தார்க்குப் புலனாக நடித்துக் காட்டுதற்கு ஏற்றவாறு அமைந்த மொழிநடை நாடகத் தமிழ் என வழங்கப்படுகிறது. ஆனால் வீரம், காதல், பக்தி, வாழ்க்கை நெறி, வாழும் முறை என அனைத்தையும் உள்ளடக்கிய நம் தமிழ் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் நாடகக் கலை இன்று வருங்கால சந்ததியினருக்கு முழுமையாகச் சென்றடையுமா என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. தற்பொழுது திரு. கிரேசி மோகன், திரு ஒய்.ஜி. மகேந்திரன், திரு. எஸ்.வி. சேகர் போன்ற குறிப்பிட்ட சிலரே நாடகவியலை கட்டிக்காத்துக்கொண்டு வரும் சூழலில் சமீபத்தில் திரு.கிரேசி மோகன் அவர்களின், ‘சாக்லேட் கிருஷ்ணா’ என்ற நாடகம், நகைச்சுவையும், ஆன்மீகமும் கலந்த கலவையாக, பிரகாசித்துக் கொண்டிருக்கும் மேடை நாடகம் தன்னுடைய 777 வது நிகழ்ச்சியை வெகு சிறப்பாகக் கொண்டாடியுள்ளது. போகிற போக்கில் தம் யதார்த்தமான வசனம் மூலம், சகோதரர் மாது பாலாஜி மற்றும் தம் நாடகக் குடும்பத்துடன் உலகின் பல பகுதிகளில், வெகு சிறப்பாக நடந்து வரும் மேடை நாடகம் இது. திரையுலகிலும், எழுத்து, வசனம் என அனைத்திலும் தம் முத்திரையைப் பதித்துள்ள மூத்த எழுத்தாளர், திருமிகு சித்ராலயா கோபு, உலக நாயகர் திருமிகு கமலஹாசன், திருமிகு நல்லி குப்புசாமி அவர்கள் முன்னணியில், சென்னை மயிலை நாரத கான சபாவில், அரங்கு நிறைந்த காட்சியாக மிகச் சிறப்பாக நடந்தேறியது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, மிகப்பெரிய தொகைக்கு நுழைவுச் சீட்டு விற்பனை ஆகியுள்ளதுதான். மக்களிடம் நல்ல நாடகங்களைக் காணும் ஆவல் அதிகமாக இருப்பதையே இது உணர்த்துகிறது.
acraz
திரு.நல்லி குப்புசாமி அவர்கள் கமலஹாசன் அவர்களின் சமீபத்திய வெற்றிப்படமான ‘பாபநாசம்’ திரைப்படத்தை பாராட்டிப் பேசியவர், அப்படத்தில் பல காட்சிகளில் தாம் வெளியில் வந்து நின்று கொண்டதைக் கண்ட நண்பர்கள் காரணம் கேட்டபோது, தாம் ஏற்கனவே மலையாளத்தில் வந்த, மோகன்லால் படத்தை பார்த்திருந்ததால், போலீசார் அவரை அடிக்கும் காட்சி வரும் நேரத்தில் அதைக் காணச்சகிக்காது, வெளியில் வந்துவிட்டதாகச் சொன்னார்.

இந்த 21ம் நூற்றாண்டிலுமா இப்படி..?



நம் இந்தியர்களிடம் இருக்கும் சில மூட நம்பிக்கைகளாம்.. நாம் இருக்கும் இந்த 21ம் நூற்றாண்டிலுமா இப்படி..?


1. இடது கண் துடித்தால் ஏதோ கெட்டது நடக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

2. மீன், இறால் உள்ளிட்ட கடல் உணவுகளுடன் பால் அல்லது பால் தயாரிப்புகளை உட்கொண்டால் தோல் வியாதி வரும் என்று நம்புகிறார்கள்.

3. பூனை குறுக்கே ஓடினால் அது அபசகுணம் என்று ஆணித்தரமாக நம்புகிறார்கள்.

4. வீட்டை விட்டு வெளியே கிளம்புகையில் யாராவது எங்கே போகிறீர்கள் என்று கேட்டால் போதும். போகும் போதே எங்கே போகிற என்று கேட்டுவிட்டீர்களா இனி அந்த காரியம் நடந்தது போன்று தான் என்று அலுத்துக்கொள்வார்கள்.

குழந்தைகளுக்கு சுயநலச் சிந்தையை ஊட்டி வளர்க்கிறோமோ?



எனக்கு ஒரு சந்தேகம் சாமியோவ்....

யூ டியூபில் பல இலட்சம் குழந்தைகளைக் கவர்ந்த தமிழ் பாடல் இது. குழந்தைப் பாடல் என்பதற்கு குழந்தைகளை நன்னெறிப்படுத்தி, சிறந்த மனிதனாக உருவாக்க வேண்டிய கடமை உள்ளது அல்லவா.. இது போன்ற பாடல்கள் அதைச் சரியாக செய்கிறதா என்ற அச்சம் ஏற்படுத்துகிறது. உலகில் நடக்கும் யதார்த்தம்தான் என்றாலும் அதை எடுத்து விவரிக்கும் விதம் குழந்தைகளின் எண்ணங்களை திசை திருப்புவதாக அமைந்துவிடுகிறது. இந்த பாட்டு நாம் அறிந்ததுதான்...