Friday, March 9, 2012

பவானி சஙகமேஸ்வரர் ஆலயம் - திருநணா.


திருநணா



தலப் பெயர் : திருநணா (பவானி)
இறைவன் பெயர் சங்கமேஸ்வரர்
இறைவி பெயர் வேதநாயகி, வேதாம்பிகை
பண்ணார் மொழியம்மை

பதிகம் திருஞானசம்பந்தர்

1. பந்து ஆர் விரல் மடவாள் பாகமா நாகம் பூண்டு எறு அது ஏறி
அந்தார் அரவு அணிந்த அம்மானை இடம்போலும் அம்தண் சாரல்
வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில் வண்டு பாடச்
செந்தேன் தெளிஒளிரத் தேமாகங்கனி உதிர்க்கும் திருநணாவே.

2. நாட்டம் பொலிந்து இலங்கு நெற்றியினான் மற்றொரு கை வீணை யேந்தி
ஈட்டும் துயரறுக்கும் எம்மான் இடம்போலும் இலை சூழ் கானில்
ஓட்டம் தரும் அருவி வீழும் விசைகாட்ட முந்தூழ் ஓசைச்
சேட்டார் மணிகள் அணியும் திரைசேர்க்கும் திருநணாவே.

3. நன்று ஆங்கு இசை மொழிந்து நன்னுதலாள் பாகமாய் ஞாலம் ஏத்த
மின் தாங்கு செஞ்சடை எம் விகிதர்க்கு இடம்போலும் விரைசூழ் வெற்பில்
குன்று ஓங்கி வன் திரைகள் மோத மயிலாலும் சாரல் செவ்வி
சென்று ஓங்கி வானவர்கள் ஏத்தி அடிபணியுன் திருநணாவே.

4. கையில் மழு ஏந்திக் காலில் சிலம்ப் அணிந்து கரித்தோல் கொண்டு
மெய்யில் முழுதணிந்த விகிர்தர்க்கு இடம்போலு மிடைந்து வானோர்
ஐய அரனே பெருமான் அருள் என்று என்று ஆதரிக்கச்
செய்ய கமலம் பொழில் தேன அளித்து இயலும் திருநணாவே.

5. முத்து ஏர் நகையாள் இடமாகத் தம்மார்பில் வெண்ணூல் பூண்டு
தொத்து ஏர் மலர்ச்சடையில் வைத்தார் இடம்போலும் சோலை சூழ்ந்த
அத்தேன் அளி உண் களியால் இசை முரல ஆலத்தும்பி
தெத்தே என முரலக் கேட்டார் வினைகெடுக்கும் திருநணாவே.

6. வில் ஆர் வரையாக மாநாகம் நாணாக வேடம் கொண்டு
புல்லார் புரமூன்று எரித்தார்க்கு இடம்போலும் புலியும் மானும்
அல்லாத சாதிகளும் அம் கழல்மேல் கைகூப்ப அடியார் கூடிச்
செல்லா அருநெறிக்கே செல்ல அருள்புரியும் திருநணாவே.

7. கானார் களிற்று அவை மேல்மூடி ஆடு அரவு வன்று அரைமேல் சாத்தி
ஊனார் தலை ஓட்டில் ஊண் உகந்தான் தான் உகந்த கோயில் எங்கும்
நானா விதத்தால் விரதிகள் நன் நாமமே ஏத்தி வாழ்த்தத்
தேனார் மலர்கொண்டு அடியார் அடிவணங்கும் திருநணாவே.

8. மன்னீர் இலங்கையர்தம் கோமான் வலி தொலைய விரலால் ஊன்றி
முந்நீர்க் கடல்நஞ்சை உண்டார்க்கு இடம்போலும் முழை சேர் சீயம்
அல் நீர் மைகுன்றி அழலால் விழிகுறைய வழியும் முன்றில்
செந்நீர் பரப்பச் சிறந்து கரி ஒளிக்கும் திருநணாவே.

9. மை ஆர் மணிமிடறன் மங்கையோர் பங்கு உடையான் மனைகள் தோறும்
கையார் பலியேற்ற கள்வன் இடம்போலும் ங் கழல்கள் நேடிப்
பொய்யா மறையானும் பூமி அளந்தானும் போற்ற மன்னிச்
செய் ஆர் எரிஆம் உருவம் உற வணங்கும் திருநணாவே.

10. ஆடை ஒழித்து அங்கு அமணே திரிந்து உண்பார் அல்லல் பேசி
மூடு உருவம் உகந்தார் உரையகற்றும் மூர்த்தி கோயில்
ஓடு நதிசேரும் நித்திலமும் மொய்த்த அகிலும் கரையில் சாரச்
சேடர் சிறந்து ஏத்தத் தோன்றி ஒளிபெருகும் திருநணாவே.

11. பல் வித்தகத்தால் திரைசூழ் கடல் காழிக் கவுணி சீர் ஆர்
நல் வித்தகத்தால் இனிது உணரும் ஞான சம்பந்தன் எண்ணும்
சொல் வித்தகத்தால் இறைவன் திருநணா ஏத்து பாடல்
வல் வித்தகத்தால் மொழிவார் பழி இலர் இம் மண்ணின் மேலே.

அமைவிடம் : ஈரோட்டில் இருந்து சுமார் 15 கி.மி. தொலைவிலும், சேலத்திலிருந்து 56 கி.மி. தொலைவிலும், பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. . அருகில் உள்ள ரயில் நிலயம் ஈரோடு. சேலம் மற்றும் ஈரோட்டிலிருந்து பேருந்து வசதியும் உண்டு.

திருஞானசம்பந்தப் பெருமான், அருணகிரிநாதர் போன்ற சான்றோர்களால் பாடல் பெற்றத் தலமான, திருநணா எனப்படும் பவானி சங்கமேசுவரர் ஆலயம், சுயம்பு மூர்த்தியாக உருவான சங்கமேசுவரப் பெருமான் உறையும் பழம்பெரும் ஆலயம். காவிரி, பவானி, அமிர்தநதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமம் ஆகும் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப் பெறும் இடத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளதால் இத்திருத்தலத்திற்கு சங்கமேசுவரர் ஆலயம் என்ற பெயர் பெற்றது. பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இக்கோவில் அமைந்துள்ளது. கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாகவும், இரண்டு வாயில்கள் உள்ளதாகவும் அமைந்துள்ளது. வேதங்களுக்கெல்லாம் தலைவியாக விளங்குவதாலும், சதுர் வேதங்களால் பூசை செய்யப் பெற்றதாலும் அம்பாள் வேதநாயகி என்று அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.


தட்சிண அளகை,தட்சிண கைலாயம், கட்சிணப் பிரயாகை போன்ற சிறப்புப் பெயர்களுடன், மூன்று நதிகளும் கூடுவதால் முக்கூடல் , கூடுதுறை என்றும், பராசர முனிவரால் வழிபடப்பட்டதால் பராசர தலம் என்றும், குபேரனால் வழிபடப்பட்டதால் குபேரபுரி என்றும் வக்கிராசுரன் இறைவனை வழிபட்டதால் வக்கிரபுரி என்றும், விஜய அரசரால் வழிபடப்பட்டதால் விசயபுரி என்றும் அழைக்கப்படுகிறது.

வேதகிரி (ஊராட்சிக் கோட்டை மலை), சங்ககிரி, நாககிரி (திருச்செங்கோட்டு மலை), மங்களகிரி (பெருமாள் மலை), பதுமகிரி ஆகிய இம்மலைகளுக்கிடையே “பவானி” திருத்தலம் அமைந்துள்ளதால் “பஞ்சகிரி மத்திய பிரதேசம்” என்றும் அழைக்கப்படுகிறது. ஒரே ராஜகோபுரத்தின் கீழ், சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் அமைந்துள்ளதால் “சேத்திர சங்கமம்” என்றும், அமிர்தலிங்கேஸ்வரர், சகசுவரலிங்கேசுவரர் மற்றும் காயத்ரி லிங்கேசுவரர் என பல்வேறு மூர்த்திகள் ஒருங்கிணைந்து உள்ளதால் “மூர்த்தி சங்கமம்” என்றும் வழங்கப்படுகிறது.


கூடுதுறையிலிருந்து திருக்கோயில் வரும் வழியில் அமிர்தலிங்கேசுவரர் சன்னதி அமைந்துள்ளது. கையில் எடுப்பதற்கு வாகாக அமைந்துள்ளதால் , இந்த மேல்பாகத்தைக் குழந்தை இல்லாத தாய்மார்கள் இடுப்பில் வைத்துக் கொண்டு மூர்த்தியை வலம் வந்து மீண்டும் அதே இடத்தில் வைத்து விட்டால் குழந்தைப்பேறு உண்டாகும் என்கின்றனர்.

அடுத்து பதுமகிரி அமைந்துள்ள, காயத்ரி லிங்கேசுவரர் சன்னதி உள்ளது. இம்மலையும் அதனை அடுத்துள்ள காயத்ரி மடுவும், காயத்ரி லிங்கமும் மிகப்பழமையானதாகும்.ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலைச் சுற்றிலும் பல்வேறு லிங்கங்கள் இருந்தாலும், கோயில் வளாகத்திலேயே காவிரிக் கரையோரம் “காயத்ரி லிங்கேசுவரர்” தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார்

மூர்த்தி - லிங்கம்,
தலம் - பதுமகிரி,
தீர்த்தம் - காயத்ரி மடு.

விசுவாமித்திர மாமுனிகள், இங்குதான் காயத்ரி மந்திரத்தை ஓதினார் என்பதால், இங்கிருந்து காயத்ரி மந்திரத்தை தவறின்றி ஓர் முறை ஓதினாலும், ஓராயிரம் முறை ஓதியதற்குச் சமமாக பல நன்மைகள் கிட்டும் என்று நம்பப்படுகிறது.


இங்குள்ள காயத்ரி மடு, நீத்தம் கற்றவர்கள் கூட, நீந்திவர இயலாமல் திணறும் அளவிலான சுழற்சி உடைய , வளைந்த பாறையால் அமைந்துள்ளது வியப்புக்குரியது. இதன் காரணமாகவே தற்போது இது மூடப்பட்டுள்ளது. இவ்வாலயத்தின் மேற்கில் ஒரே லிங்கத்தில் 1008 லிங்க முக அமைப்புடன் கூடிய “சகசுவர லிங்கேசுவரர்” சன்னதி மிக அழகான வடிவமைப்பு கொண்டது. சங்கமேசுவரர் ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் ஒரு மேடையின் மீது, “இலந்தை மரம்” தல மரமாக அமைந்துள்ளது. இம்மரம் நாள்தோறும், இறையனாரின் பூசைக்கு, மிகச்சுவையான ஒரு கனியைக் கொடுப்பதாகவும், குழந்தை பேறு தரவல்லது என்றும் நம்பப்படுகிறது.

இத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் கல் தூண்களின் இருபுறங்களிலும் கல்லினால் செய்த கற்சங்கலி மிகுந்த வேலைப்பாடு உடையது. சங்கமேசுவரர் சன்னதிக்கு வடக்கில், சுரகரேசுவரர் எழுந்தருளியுள்ளார். இவருக்கு மிளகு ரசம் வைத்து படையலிட்டு, அப்பிரசாதத்தை அருந்திவர, சுரம் (காய்ச்சல்) பித்தம், வாதம் போன்ற நோய்கள் நீங்குவதாகவும் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.

வேதநாயகி அம்மன் சன்னதியின் முன் மண்டபத்தில், “சிரிக்கும் சிலை” மற்றும் மிக அழகிய பல சிற்பங்கள் அமையப் பெற்றுள்ளது. சிரிக்கும் சிலை மீது தண்ணீர் ஊற்றினால் அச்சிலை சிரிக்கும் தோற்றமளிப்பது குறிப்பிடத்தக்கதாகும். இக்கலை, “கல் விரிக்கும் கலை” எனப் போற்றப்படுகிறது.

இக்கோவிலின் ,வேதநாயகி அம்மன் சன்னதிக்கு நேர் எதிரில், கிழக்கு மதிற்சுவரில் மூன்று துவாரங்கள் காணப்படுகின்றன. இந்த துவாரங்களின் பின்னணியில் ஒரு சுவையான கதையும் கூறப்படுகிறது. 1804ஆம் ஆண்டில் இங்கு ஆட்சியராக இருந்தவர் வில்லியம் கேரோ. தினசரி சங்கமேசுவரர் ஆலயத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதையும், கூடுதுறையில் நீராடுவதையும், அம்மன் புகழ் பாடுவதையும் கேட்டு ஆச்சரியம் கொண்டிருந்திருக்கிறார். ஒரு நாள் மேல்மாடியில் இருந்த தம் அறையில் அவர் உறங்கிக் கொண்டிருந்த வேளையில், திடீரென, வேதநாயகி அம்மன் போன்று தோற்றம் உடைய ஒரு சிறு பெண் குழந்தை தம்மை எழுப்பி, கையைப் பிடித்து வெளியே அழைத்து வருவது போல் கனவு கண்டு , உடனே விழித்துக் கொண்டவர் எழுந்து வெளியே வந்து பார்த்திருக்கிறார். அந்த நேரத்தில் அவர் படுத்திருந்த இடத்தின் மேலிருந்த விட்டம் முரிந்து மேற்கூரையே முற்றிலும் இடிந்து விழக் கண்கூடாகக் கண்டார். அம்பிகையே நேரில் வந்து தம் உயிரைக் காத்ததாக நம்பிய ஆட்சியர் அவர்கள், மனம் கனிந்துறுகி, தமது காணிக்கையாக அம்மனுக்கு அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய , யானைத் தந்தத்தினால் ஆன, பல்லக்கு ஊஞ்சலும், ஆபரணங்களும் வழங்கியுள்ளார். ஆயினும், இவர் வேற்று மதத்தவரானக் காரணத்தால் அம்மனை தரிசிக்க அனுமதியில்லை. இதை அறிந்த தாலுக்கா தாசில்தார், அம்பிகையைத் தரிசிக்கும் பொருட்டு, மூன்று துவாரங்களை அமைத்துக் கொடுத்தார். அதன் மூலம் அம்மனை அவர் மனமார தரிசித்திருக்கிறார்.

வேதநாயகி அம்மன் ஆலயத்தை அடுத்து சௌந்திரவல்லித் தாயார் சன்னதியும் , ஆதிகேசவப் பெருமாள் சன்னதியும் உள்ளன. இப்புனிதமான இரு சன்னதிகளுக்கிடையில் யோக இலக்குமி நரசிம்மர் சன்னதி உள்ளது. கிழக்கு நோக்கியுள்ள ஆதிகேசவப் பெருமாள் சங்கு சக்கரதாரியாக திவ்ய தரிசனம் அளிக்கிறார். இங்குள்ள வேணுகோபாலர், பாமா, ருக்குமணி உருவச் சிலைகள் சாலிக்கிராமத்தால் மிகவும் அழகுற அமைக்கப் பெற்றவைகளாகும்.


புலவர் கு.குமாரசுவாமி பிள்ளையவர்களால் கூடற்புராண வசனம் என்னும் நூலும், பவானிப் பதிற்றுப்பத்தந்தாதி என்னும் நூலும் இயற்றப்பட்டுள்ளது. ஓலைச்சுவடியிலிருந்து வேதநாயகியம்மன் சதகம் என்னும் நூலும் கிடைத்துள்ளது. கலம்பகம், உலா போன்ற நூல்களுடன், திருமுகவூர் மு.ரா. கந்தசாமிக்கவிராயர் அவர்கள் இயற்றிய பவாநி வேதநாயகியம்மன் பிள்ளைத்தமிழ் என்னும் நூலும் பவானி தலத்தைப் பற்றி எடுத்துரைக்கின்றன.

“நணா” எனும் தலத்திற்கு உடைய இறைவன் “நண்ணாவுடையார்” எனபடுகிறார். ”மிகத்தொண்மையான துவாரபாலகர் கற்சிலைகள் கொண்ட பவானிச் சிவாலயத்தில் முற்கால அரசர்கள் பலருடைய கல்வெட்டுகள் இருந்திருக்க வேண்டும். இங்கு கிடைக்கும் முதல் கல்வெட்டு விசய நகர மன்னன் கிருட்டிண தேவராயனின் (1509 - 1529) கொங்கு மண்டல நிர்வாகி பாலதேவராசன் காலக்கல்வெட்டுத்தான் . 1640 முதல் கெட்டி முதலிகளின் கல்வெட்டுகளும், பிற கல்வெட்டுகளும் உள்ளன. “ என்கிறார் புலவர் கல்வெட்டு ராசு அவர்கள்.

மேலும் அவர், 1640, 1645, 1741ஆம் ஆண்டுக் கல்வெட்டுகளில் நண்ணாவுடையார் , நண்ணாவுடையார் சுவாமி, பண்ணார் மொழியம்மை, பண்ணார் மொழியம்மன் என்றே குறிக்கப்படுகிறது, என்கிறார். 11.01.1840-ல் கலெக்டர் வில்லியம் கேரோவின் எழுத்துப் பொறிப்பில் “ஸ்ரீ பவாநி கூடல் வேதநாயகி அம்மன்” என்ற தொடரைக் காணுகின்றோம். தலைதடுமாறிக் கலைந்து கிடந்த வேதங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டதால் நான்றா - புராண ஐதீகத்தால் “வேதகிரி” என்றும், அம்மன் வேதநாயகி என்றும் அழைக்கப்பட்டதாகக் கூறுகிறார். பண்ணார் மொழியம்மையின் பெயர் வேதநாயகியாக மாற்றம் பெற்றதற்கு “வேதகிரியே” காரணம் என்கிறார். நாரதர் செய்த வேள்வியின் சாம்பலால் இம்மலை ஏற்பட்டதாகக் கொங்கு மண்டலச் சதகம் கூறுகிறது. நண்ணாவுடையார் எழுந்தருளியுள்ள பவானியை “நண்ணாவூர்” எனக் குறிக்கும் வழக்கமும் முன்பு இருந்துள்ளது.

திருவிழா : மார்கழி, தை மாதங்களில் பவானித் திருமுறைக் கழகத்தினரால் பன்னிரு திருமுறை விழாவும், மார்கழி பஜனையும் நடைபெறுகின்றன. வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி, சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், ஆடிப் பதினெட்டுப்பெருக்குத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவமும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.


வடநாட்டின் திருக்காசியைப் புண்ணியத் தலமாக வழிபடுவதற்கு இணையாகத் தென்நாட்டில் பவானி கூடுதுறையை “இளைய காசி” என்று அழைத்து வழிபடுகிறார்கள். காசியைப் போன்றே இங்கு இறந்தாலும், மோட்சம் என்றும், இறந்தவர்களின் அஸ்தியை இங்கு கரைக்கப்படுவதும் பெருகி வருகின்றன. நீண்ட ஆயுளுக்கும், திருமணத்தடை நீங்கவும், இங்கு வழிபடுவதும் வழமை.

பவானி அருள்மிகு வேதநாயகி அம்மன் உடனமர் சங்கமேசுவரப் பெருமான் மற்றும் அருள்மிகு சௌந்தரவல்லித் தாயார் உடனமர் ஆதிகேசவப் பெருமாள் திருவருளால் இத்தலம் மிகச் சிறந்து விளங்குவதோடு, மக்கள் பல்வேறு நலங்களும் பெற்று வாழ்கின்றனர்.


--




Thursday, March 8, 2012

வானில் வண்ண ஒளி வெள்ளம்!

பவள சங்கரி

நறுக்… துணுக்…..

பல ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை காந்தப் புயல் தாக்கியது. இந்த காந்தப் புயல் ஐரோப்பிய நாடுகளின் வட முனையில் உள்ள அயர்லாந்து, இங்கிலாந்தின் வட பகுதியான ஸ்காட்லாந்து, நார்வே ஆகிய பகுதிகளைத் தாக்கியது. அப்போது வானில் நீலம், பச்சை வண்னங்கள் கலந்த ஒளி வெள்ளம், மின்னல் போல தோன்றியது. நாசாவைச் சார்ந்த விஞ்ஞானிகள் அதிநவீன தொலை நோக்குக் கருவிகள் மூலம் இதனைப் பதிவு செய்துள்ளார்கள். சூரியனில் நேற்று முன் தினம் கரோனா பிளாஸ்மா கதிர்வீச்சு உருவாகி அன்றைய தினமே பூமியின் காந்த மண்டலத்திற்குள் வந்து விட்டதாக உறுதிபடுத்தியுள்ளனர். 2005ஆம் ஆண்டிற்குப்பிறகு இத்தகைய காந்தப் புயல் பூமியைத் தாக்கியுள்ளது. சூரியனில் ஏற்படும் இந்த மின் காந்தப் புயலின் தாக்கம் 2013ஆம் ஆண்டில் அதிகமாக வாய்ப்புள்ளது என்ற அதிர்ச்சியான தகவலும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 1ஆம் தேதி சூரியனின் மேல் பகுதியில் இரண்டு முறை மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டு, அதி பயங்கர வெப்பம் கிளம்பி, அது பூமியை நோக்கி மணிக்கு ஒன்பது கோடியே முப்பது மைல் வேகத்தில் வந்ததும் குறிப்பிடத்தக்கது. வாயு மண்டலத்தைத் தாண்டி, பூமிக்கு மேல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்யக் கூடிய இந்த செயற்கை கோள்கள் . சூரியனில் இருந்து வரும் அதிக வெப்பம் காரணமாக தாக்கப்பட வாய்ப்புள்ளதாம்!

படத்திற்கு நன்றி : சுவையான வீடியோக் காட்சியையும் காண கீழே சொடுக்குங்கள்!

http://baltimore.cbslocal.com/2012/03/08/nasa-monitoring-solar-flares-may-impact-gps-satellite-communications/

நன்றி : வல்லமை மின்னிதழ்

Wednesday, March 7, 2012

வழிமேல் விழிவைத்து.......!

























உடலோடும் உணர்வோடும்
விளையாடுவதே
வாடிக்கையாகப் போய்விட்டது.

சூடுபட்ட பூனையானாலும்
சொரணை கெட்டுத்தான்
போய்விடுகிறது.

மடிமீதும் மார்மீதும்
கையணைப்பினுள்ளும்
தஞ்சம் புகுவதே
வாடிக்கை.ஆகிவிடுகிறது.

வெட்கமுமின்றி துக்கமுமின்றி
தேடித்திரிதலே அன்றாடப்
பிழைப்பாய் இருக்கிறது.

எவர் கொடுத்தாலும்
மறுக்க இயலாத
ஏழ்மையாகிவிடுகிறது.

உண்ணும்போதும்
உறங்கும் போதும் கூட
பிரிய மனம் மறுக்கிறது.

நம்மையே நையப்புடைத்தாலும்
விட்டு அகல முடியாமல்
தவிக்கிறது உள்ளம்.

ஓங்கி ஒலித்தாலும்
இதமாக வருடினாலும்
தாங்கிப் பிடிக்கிறது தன்னையே.

வண்ணங்களும் எண்ணங்களும்
வேறுவேறாய் ஆனாலும்
அகல மறுத்து
திண்ணமாய் இருக்கிறது.

காட்டாற்று வெள்ளத்தில்
அடித்துச் செல்லும்போது
தோணியாகி காத்துநிற்கிறாய்.

தத்துவங்களாய்ப் பேசி
கட்டாந்தரையையும்
கரும்புக் காடாக்கினாய்!

கவின்மிகு நடையினால்
கனிமொழி உரையினால்
பனிப்பொழிவாய் உறையச்செய்தாய்!

துணைநாடி துவண்டு
விழும் வேளையில்
தோள்கொடுத்து அணைக்கிறாய்.

கவிபாடி காத்து நிற்கையில்
மடிஏந்தி பூத்து நிற்கிறாய்.

விதியின் பாதையில்
வீழ்ந்து விடாமலிருக்க
விருட்சமாய் நீள்கிறாய்.

கள்ளத் தோணியானாலும்
கனிவாய் கொண்டுசேர்க்கிறாய்
கதைகள் பலபேசி.

ஊனின்றி உறக்கமின்றி
பித்தாக்கி பேதையாக்கி
என்ன செய்யப்போகிறாய் மேலும்?

உடன்கட்டை ஏறிவருவாயா
மறுபிறவியில் உடன்வருவாயா
கானல்நீராய் ஓடி ஒளிவாயா?
சொல்வாயா எம் புத்தகக் காதலனே?


நன்றி - திண்ணை வெளியீடு


மனித நேயச் சிந்தையின் உயிர்ப்பு!

அந்த நான் இல்லை நான் – கவிதை மலர் மதிப்புரை.

ஒருவரை ஒருவர் எழுதிக் கொள்கிறோம்! கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் கவிதையுடனான உறவு தொடங்கிய விதம் மிகச்சுவையான ஆரம்பம்……. ”அந்த நான் இல்லை நான்” என்ற கவிதைத் தொகுப்பில்.”புதுக்கவிதைப் புனலில் ஆடும் இவர், மரபுக் கவிதை மழையிலும் நனைபவர்” என்று கவிஞர் க.து.மு.இக்பால் அவர்களின் பிச்சிப்பூவாக மலரும் கவிதைகள் என்ற புகழாரத்துடன், கோடைத் தென்றலாய் மென்மையாக மலர்ந்திருக்கும் மலர்வனம்!

வாழ்க்கை
வாழ்தலில் புரிதலா?
அல்லது
வாழ்ந்து புரிதலா?

புரிதல் என்பது வாழ்க்கையின் பல்வேறு கோணங்களில் அலசப்பட்டுள்ளது, கவிஞரால். என்னென்னவோ புரிந்தாலும்…. அவையனைத்தும் வாழ்க்கை முடியும் தருவாயில்தான் சாத்தியமாகிறது என்ற இவருடைய வாதம் ஓஷோவின் ஆழ்ந்த தத்துவ ஞானத்தின் வெளிப்பாடாகக் காண முடிகிறது!

புரியாத மொழியில் அறியாத வகையில் ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட பல கவிதைகள் மருட்சி ஏற்படுத்தி, மக்களை முழுமையாகச் சென்று அடைவதில்லை. எளிமையான நடையில் சாமான்யரும் சுவைக்கும் வகையில் இன்பத்தேனை அள்ளி வழங்கும் போது வாசகரின் கற்பனைச் சிறகையும் உடன் ஏந்திக் கொண்டு மேலும் பல பரிமாணங்களுடன் வானில் வட்டமிடத் துவங்கி விடுகிறது. கவிஞரோடு சேர்ந்து, வாசகரும் பயணிக்கும் அந்த சுகம் எளிமையான அந்த நடையின் தாக்கம் படைப்பாளியையும் வெற்றி வாகை சூடச் செய்து விடுகிறது. அந்த வகையில், “கவிதை என் வழியாய்த் தன்னை எழுதிக் கொள்கிறது – நான் கவிதை வழியாய் என்னை எழுதிக் கொள்கிறேன் – இப்படித்தான் நானும் கவிதையும்!” என்று வெகு நேர்த்தியாக தம் நிலையை விளக்கி விடுகிறார் கவிஞர்.

அந்தக்கணத்தில்
பனியாய் இறங்கியவை
பறவையாய்ச்
சிறகுவிரித்தவை

பறவையாய் வானில் விரிந்த சிறகு, வாசகரையும் அணைத்து உடன் அழைத்துப் போகும் உற்சாகம் இவர்தம் கவிதையில் காணலாம்.. காட்டாக,

இருப்பு இல்லாத கவலையால்
இருப்புக்கொள்ளவில்லை மனம்

புன்னகை செய்யுங்கள்
புன்னகை செய்யவையுங்கள் என்கிறார் ,ஆம் செய்கூலி, சேதாரம் இல்லாத நகையாம் – புன்னகை! (நகை செய்யுங்கள்)

இமைகளின் நடனம்
இல்லாமல்
இதயங்களில் சலனம்
இல்லை

இமைகளின் நடனங்கள்
காதல் கடிதங்கள்
சபலங்கள் எல்லாம்
காதல் சாபங்கள்
என்ற இவருடைய இதமான கற்பனை மு.மேத்தா அவர்களின்,

விரித்தவர்களே
அகப்பட்டுக்கொள்ளும்
விசித்திர
வலை.

இரண்டு கண்களும்
இரண்டு கண்களும்
எதிர்பட்டுக்கொள்ள
நான்கும் குருடானபின்
நடக்கும் நாடகம்!
என்ற நிதர்சனத்தையும் நினைவில் கொண்டு நிறுத்துவதையும் தவிர்க்க இயலவில்லை!

உன்னதமான உணர்வுப் பகிர்வை உறுதியான எளிய நடையில் உவர்ப்பில்லாமல் வழங்குவதில் வெற்றி கண்டிருக்கிறார் இந்த மனித நேயக் கவிஞர்.

கவிஞர் மு.மேத்தா அவர்களின் ,”எழுத்து விதைகள் இதயங்களில் தூவப்படும்போது செழித்து வளர்வது ஒரு தனிமனிதன் அல்ல- சமுதாயம்! என்ற வரிகளை நினைவு கூறச் செய்கிறது இவர்தம், ‘பசும்பொன்’கவிதை.

வெகுளியும் இல்லாத,வெட்கமும் இல்லாத விலங்குகளின் வீடு, இது நல்ல காடு…… என்ற இவரின் ஆதங்கம் மனிதாபிமானத்தின் உச்சம்! அழகான புனைவு!

பெண்ணாய்ப் பிறந்தது தவமல்ல பாவ்ம், உன்னை நாங்கள் பெற்றதுதான் பெருந்தவம் என்கிறார்,தாடிக்காரர் வாழ்ந்துபோன வந்து போன, தடயம் இருக்கிறது, தடமும் இருக்கிறது என்று அறுதியிட்டு கூறியுள்ள இக்கவிஞர்! ’மங்கையராய்ப் பிறந்திடவே மாதவம் செய்திட வேண்டுமம்மா என்றானே உங்கள் தாடிக்காரன்!’ என்று கேட்கத் தோன்றுகிறது.

கரை நோக்கி நகரும் புயல் அழித்த வாழை, தென்னைத் தோட்டங்கள் மற்றும் கரும்பு , நெல் வயல்கள், ஏரி, குளங்கள் என்று பட்டியலிடும் கவிஞர், நாட்டில் நடந்து கொண்டிருக்கும் இன்றைய அவலங்களின் தம் ஆழ்ந்த வேதனையைப் பதிவிட்டிருக்கிறார், தம் சுந்தர நடையில்…..

அது மரியாதைக்குரியதாக இருப்பினும் அதன்மீது எனக்கு மரியாதை இல்லை…. எதைச் சொல்கிறார்…? ஏன் சொல்கிறார்…? ஆரம்பத்தில் ஆச்சரியமாக இருந்தாலும் முடிவில் சொல்வதன் காரணத்தைத் நியாயப்படுத்துவதன் மூலமாக நம்மையும் ஒப்புக் கொள்ளச் செய்கிறார். ஆம் கடைச்சரக்காகிப் போகும் உன்னதங்களைக் காணும் போது ஏற்படும் இயல்பான தாக்கம்! (கதை கதையாம் காரணமாம்)

சிறைகளின் பெருமைகளெல்லாம், மிருகங்களின் அடக்கத்தில் அடங்கியிருக்கிறது, என்பதும் ஆழமாக சிந்திக்க வைக்கக் கூடிய பதிவு! எந்தெந்த சிறை? (சிறை விலங்கு)

வாழ்க்கைப் பயணம் இன்பமும், துன்பமும் நிறைந்த வழிப்பாதை என்ற பல்வேறு மகான்கள் ஏற்றுக் கொள்ளும் சத்தியமான தத்துவத்தை, அடைக்கப்படாத ஓட்டைகளோடும், அகற்றப்படாத அழுக்குகளோடும், சுகமும், மகிழ்வும் சேர்ந்தேதான் இந்தப்பயணம் என்ற எளிமையான சொற்கள் மூலம் ஆழப்பதியச் செய்கிறார். விழா நெருக்கடிகள் ஏற்படுத்தும் அழுத்தங்கள் யதார்த்தம்.

நான் யார்? என்று உணரும் போதுதான், வானம் எனக்கு வணக்கம் சொல்லும் என்கிற உன்னதமான எண்ணப்பதிவு, உறுதியான கொள்கைப்பிடிப்பு! வாழ்த்துக்களிலிருந்து கூட விலகி நிற்க வேண்டி, ஏக்கம் நிறைந்த வார்த்தைகளின் பிரதிபலிப்பு! (வழி விடுங்கள்)

உள்ளம் நெகிழச் செய்யும் புதிய பரிமாணத்தில் ஞானப்பசியும், இலக்கிய தாகமும்!

சமூகத்தால் தோற்கடிக்கப்பட்ட மரியாதைக்குரிய தோல்வி! வாசித்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.

அன்றாடம் விரும்பி மனம் நாடும், தான் பாதி அது பாதியாக, மேனியில் ஆபரணமாய், அலங்காரமாய், கம்பீரமாய்த் தன்னைத் தோற்றமளிக்கச்செய்த அதன் இறுதி நிலை கண்டு கவிஞரின் மனம் போல வாசகரின் மனமும் வாடித்தான் போகிறது. காரணம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடக்கக்கூடிய யதார்த்தம்தானே அது! (அது அப்படித்தான் வரும்)

அரசியல்….. அரசியல்….. எங்கும் எதிலும்!

அந்தக் கணமும் தானும் ஒன்றிப் புணர்ந்த பொழுதின் உன்னதமாய் சிந்திய சிந்தனை முத்துக்களைப் போன்று, (அந்த நான் இல்லை நான்)மழை விரும்பிய பூமியும், பூமி விரும்பிய மழையும் ஒரே புள்ளியில் என்றோ எப்போதோ தாகத்திற்காய் இணைவது போல , (மழைவனம்) இசைஞானியின் வைகறையின் அமைதி, ஓர் அருவியின் பேச்சு, தனிமையைத் தேடும் தவிப்பு , அதில் கரையும் இன்பம், இவை யாவும் இணைந்த புள்ளியில் தான் ஓர் இளையராஜா, இசைராஜா ஆனார் என்கிறார் சுவாரசியமாக!

உங்களால்தான்…… என்னுள் புதைந்த நான் எச்சரிக்கையாய் இருக்கிறேன் என்றாலும், போராடுவதைக் காட்டிலும், தப்பித்தலே பெருமையாகிறது என்று சொல்லுவதன் காரணம் வாசகர்களுக்கு இன்னுமொரு மாய உலகிற்கு வழிகாட்டுவதாக அமைந்துள்ளது சிறப்பு.

நாற்றமிகு பண்பாடு என்ற கவிதையில், ”இழிவை எதிர்க்கவும் நியாயத்தை, உரிமையை, யாரையும் புண்படுத்தாமல் கேட்கவும் தெரிய வேண்டும் நமக்கு” என்ற உயர்ந்த கொள்கையையும் முன் வைப்பதோடு, சதி என்ற உடன்கட்டை ஏறும் கொடிய வழக்கத்தின் மற்றொரு பரிமாணத்தைக் காட்டுகிறார்……. சிந்திக்க வைக்கிறார்.

ஒரு படைப்பாளியின் முழுமையான மன நிறைவு என்பது தன் படைப்பிற்கான நேர்மையான அங்கீகாரம் மட்டுமே என்பதை வெகு அழகாகத் தம்முடைய பரிசு எனும் கவிதையில் உணர்த்த ஆரம்பித்தவர், தமக்கு ஏற்பட்ட ஏதோ கசப்பான அனுபவத்தினால் (?) மனம் வெதும்பியிருப்பினும், வேதனையோடு வீரியம் பெறுகிறேனே அன்றி வீழ்ந்துவிடுவதில்லை என்ற தம்முடைய ஆக்கப்பூர்வமான சிந்தையையும் வெளிப்படுத்துகிறார்.ஒருவரால் பெறும் மகிழ்ச்சியைக் காட்டிலும், விழிப்புணர்வே சாலச் சிறந்தது என்பதையும் விளங்கச் செய்கிறார்.

துயரத்தைத் துடைத்தெறியும் வள்ளலாக கவிதையைக் காணும் கவிஞர், கண்ணீரை எழுதுவதே கவிதையாகிவிடும் இரகசியத்தைய்ம் போட்டுடைக்கிறார், எழுதுவது கவிதையாகிவிடுகிறது என்ற படைப்பில்!

தெய்வப்ப்ரியராக இருந்தாலும் விதியை வெல்ல முடியாது அல்லது யதார்த்தத்தை எதிர்நோக்கியிருக்க வேண்டும் என்பதாகவும் உணர்த்துகிறார், முடிவில்!

இதுவரை எட்டு கவிதை நூல்கள் ஒரு கவிதை நாடகம், மூன்று கட்டுரைத் தொகுப்பு இவர்தம் படைப்புகளாக வெளிவந்துள்ளன. கற்பனை வானில் சிறகடித்துப் பறந்து, அழகையும், இனிமையையும், அற்புதங்களையும் மட்டுமே கவியாக வடித்து மயக்கத்தில் ஆழ்த்தும் கவிஞராக அன்றி அன்றாட வாழ்க்கையின் இன்பங்கள், துன்பங்கள், யதார்த்தங்களைப் படம் பிடித்துக் காட்டும் மனிதம் நிறைந்த எழுத்துகளுக்குச் சொந்தக்காரர் இந்த கவிஞர் என்றால் அது மிகையாகாது. பாடுபொருளின் பல்வேறு பரிமாணங்கள வாசகரின் கற்பனைத் தூண்டலுக்கு வழி வகுத்து, பொய்யான மனமூடிகளைக் களைந்து மெய்யான தேடலை ஊக்குவிக்கும் உன்னத போக்கிற்கான மேடை அமைத்திருப்பது பாராட்டிற்குரியது.

நூலின் பெயர் : அந்தநான் இல்லை நான்
நூலாசிரியர் : பிச்சினிக்காடு இளங்கோ
பக்கம் – 112
விலை – ரூ.70.00


நன்றி : வல்லமை வெளியீடு.