Friday, November 16, 2012

துர்காபாய் தேஷ்முக்


துர்காபாய் ஒரு பெண்ணல்ல்
அவர் ஒரு மனித டைனமோ (மின்னோட்டம் உண்டாக்கும் பொறி)

(சரோஜினி நாயுடு)


”இரும்புப் பெண்” என்று அனைவராலும் பாராட்டப்பெற்ற துர்காபாய் தேஷ்முக், மிக வித்தியாசமான, துணிச்சலான சுதந்திரப் போராட்ட வீராங்கனை மட்டுமல்லாது, தன்னலமற்ற ஒரு சிறந்த சமூகசேவகி, மிக வித்தியாசமான பெண்ணியவாதி.
அரசியலமைப்பு மன்றம் மற்றும் தற்காலிக பாராளுமன்றத்தில், 750 திருத்தங்களுக்கு குறைவிலாமல் கொண்டுவந்தவர். கோடிக்கணக்கான நிதியை மூலதனமாகக் கொண்டு ஆறு பெரிய கல்வி நிறுவனங்களை உருவாக்கி நடத்தி வந்தவர். பயிற்சி பெற்ற சரியாக நிர்வகிக்கப்படும் ஊழியர்கள் மூலமாக பல சமுதாய மாற்றங்கள் கொண்டுவர முடியும் என்ற கனவும் உடையவர். தம்முடைய சுதந்திர தாகத்தின் விளைவாக இளம் வயதிலேயே சிறைக்கம்பிகளைக் கண்டவர். ஒடுக்கப்பட்ட மற்றும், ஒதுக்கித்தள்ளப்பட்ட பெரும்பான்மையான மகளிருக்காகப் போராடியவர். அவருடைய வாழ்க்கை  இலக்குகள் நிறைந்ததாகவும், சாதனைக்ளை ஊக்குவிக்கின்ற சம்பவங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது.

ஜூலைத்திங்கள் 15ம் நாள், 1909ம் ஆண்டு, ஆந்திரப் பிரதேசம், இராஜமுந்திரியில், காக்கிநாடாவின் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். தம்முடைய எட்டாவது வயதிலேயே, ஒரு வசதியான ஜமீந்தார் குடும்ப தத்துப் புத்திரனுக்கு பால்ய விவாகம் செய்து வைக்கப்பட்டார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு , அவர் பருவமடைந்த போதுதான் திருமணம் என்பதற்கான அர்த்தம் புரிந்தது. அதில் விருப்பமில்லாதலால் அந்த திருமண பந்தத்தை முறித்துக் கொண்டு பொது வாழ்க்கையில் ஈடுபட முடிவெடுத்தார். சுப்பாராவ் என்ற தன்னுடைய இளம் கணவரிடமும் தன் மனநிலையைச் சொல்லி புரியவைக்க முடிந்தது அவரால். சுப்பாராவும் அதனை ஏற்றுக் கொண்டு கொஞ்ச காலம் கழித்து ஒரு வழக்கறிஞரின் மகளை திருமணம் செய்து கொண்டார். 30 ஆண்டுகள் அவரோடு வாழ்ந்த பின்பு தம்முடைய மனைவியின் எதிர்காலம்  பற்றிய நம்பிக்கையாக துர்காபாயை நினைத்தார் என்பது ஆச்சரியமான விசயம்.

Thursday, November 15, 2012

’தங்க மங்கை’ தீபாவளி சிறப்பிதழில் என் சிறுகதை!


அன்பு நண்பர்களே,

’தங்க மங்கை’ தீபாவளி மலரில் ‘கருணையினால் அல்ல’ என்ற என்னுடைய சிறுகதை பிரசுரமாகியுள்ளது. வாசித்து தங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன். கருணையினால் அல்ல’ கதையின் சுட்டி இதோ:




நன்றி,
அன்புடன்
பவள சங்கரி


Wednesday, November 14, 2012

sand and foam (3) - Khalil Gibran மணலும் நுரையும்! (3)




sand and foam (3) - Khalil Gibran

மணலும் நுரையும்! (3)

ஏழு முறைகள் எம் ஞாதிருவை வெறுத்திருக்கிறோம் யாம்,
முதல் முறையாக அவளை, சாதுவான மங்கையாகக் கண்டாலும்   அவள உச்சத்தை எட்டக்கூடும்
இரண்டாம் முறை அந்த முடமாகிப் போனவனுக்கு முன்னால் துள்ளிக் கொண்டிருக்குமவளைக் கண்டேன்.
மூன்றாம் முறையாக கடினமானது மற்றும் எளிதானதிற்கும் இடையிலான தேர்ந்தெடுத்தலில் அவள் அந்த எளிதானதையேத் தேர்ந்தெடுக்கக் கண்டேன்.

Tuesday, November 13, 2012

தீபாவளிப் பரிசு!



 
அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே!
அன்புடன்
பவள சங்கரி


சிறுகதை

தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கிறது. புது துணி எடுக்கவோ, பலகாரம் செய்யவோ ஏதும் விருப்பம் இல்லை. ஒரு வாரமாக கடைவீதிக்குப் போகலாம் என்று கணவர் சுந்தரம் கூப்பிட்டு சலித்துப்போனதுதான் மிச்சம்.

எல்லாம் தீபாவளி கழித்து வாங்கினால் என்ன நட்டம். இந்தக் கூட்டத்தில் போய் அலைமோதி வாங்கி வந்து புதுசு உடுத்தனுமாக்கும். மெதுவா அப்பறமா வாங்கலாம்என்று தட்டிக் கழித்த சாவித்திரியைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. ஒரு காலத்தில் ஒரு மாதம் முன்பே எப்போது குழந்தைகளுக்கு துணி எடுப்பீர்கள் என்று சண்டை போட்ட மகராசியா இவள் என்று ஆச்சரியமாக இருந்தது. பள்ளிபாளையம் பேப்பர் மில்லில் வேலையில் இருந்த காலம் அது. போனஸ் வருவதற்குள் எப்போது வரும் என்று கேட்டு தொணப்பி எடுத்துவிடுவாள். 

Monday, November 12, 2012

நம்பிக்கை ஒளி! (6)




                               

பவள சங்கரி
காலம் ஏதோ ஒரு கணக்கு போட்டுக் கொண்டு காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. எந்த் கணினி கொண்டு இந்த அளவீடூகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்று தெரிந்தால் கூட ஏதேனும் தப்பிக்கும் வழியைக் காணலாம். நல்லது நடக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அதற்குத் தகுந்தாற்போல் தாம் சந்திக்ககூடிய அத்துனை பேரும் நல்லிதயம் கொண்டவர்களாக ய்தார்த்தமாக அமைந்து விடுகிறார்கள். அதுவே தம் கோரத் தாண்டவத்தை ஆடிப்பார்க்க முடிவு செய்துவிட்டால் திரும்பிய புறமெல்லாம் அடிமேல் அடி விழத்தான் செய்கிறது. தப்பிக்கும் வழியே இல்லாமல் கிடுக்கிப்பிடி போட்டு பிடித்துவிடுகிறது. நம்பிக்கை என்ற ஒரு பிடிமானம் மட்டும் கண்டெடுத்துக் கொண்டால் அதிலிருந்து எப்படியும் மீண்டு தப்பித்து வந்துவிடலாம். சுழட்டியடித்த சுனாமியும் ஒரு நேரம் அடங்கித்தானே ஆகவேண்டும்....

ஆசிரியர்களுக்கான ஓய்வறையினுள் நீண்ட மேசையின் முன் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர், முன் நெற்றி வழுக்கையாக, நெற்றி நிறைய திருநீறு பட்டையாகப் போட்டுக் கொண்டு இடையில் அழகாக குங்குமப் பொட்டும் வைத்துக் கொண்டு நடு நாயகமாக அமர்ந்து கொண்டிருந்தார். அவர்தான் மயில்வாகனனாக இருக்கும் என்பதும் சொல்லாமலே புரிந்தது. அவரும் மாலுவைப் பார்த்தவுடன் தெரிந்து கொண்டார். தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு அவளுடைய பயணம், குடும்பம் எல்லாம் பற்றிய சம்பிரதாயமான விசாரிப்புகளை முடித்துவிட்டு பின்பு அவளுடைய எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் பொறுமையாக்க் கேட்டு அறிந்து கொண்டார். நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருப்பதைப் பார்த்து மகிழ்ந்தவர், பின்பு அவளையும்  அழைத்துக் கொண்டு பள்ளியின் ஒரு மூன்று சக்கர வாகனத்தில் (ஆட்டோ)  கிளம்பினார். தில்லைராஜன் ஐயாவின் வார்த்தைகளுக்கு உள்ள மரியாதையைப் பற்றி நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. அவர் பேச்சிலிருந்து தாங்கள் சந்திக்கப்போவது ஐஏஎஸ் கோச்சிங் செண்ட்டரில் பணி புரியும் ஒரு நபரைத்தான் என்பதும் புரிந்தது.