Friday, September 6, 2019
Monday, September 2, 2019
தங்கமே .. தங்கம்
தங்கமே ...... தங்கம்!
பவள சங்கரி
இந்திய மக்கள்
சேமித்து வைத்திருக்கும் தங்கத்தின் மதிப்பு 95 ஆயிரம் கோடி டாலர்கள் அதாவது
சுமார் 50 லட்சம் கோடி ரூபாய்கள் என்று சர்வதேச ஆய்வு நிறுவனமான மக்குவேரி
தெரிவிக்கிறது. நம் மக்கள் நகைகளாகவும்,
தங்கக்காசுகளாகவும் சேமித்து வைத்திருக்கும் இந்த தங்கம், நாட்டின் மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 50 சதவீதமாக இருக்கலாம் என்பது இவர்கள் கணிப்பு! அதாவது இந்தியர்களின் இந்த தனிப்பட்ட சேமிப்பாக
இருக்கும் தங்கம் உலகின் மொத்த தங்கக் கையிருப்பில் சுமார் 11% இருக்கும் என்ற ஆச்சரியமான தகவல்களையும் இந்த அறிக்கை அளிக்கிறது. நம் மக்களைப் பொருத்தவரை தங்கம் என்பது ஒரு அலங்காரப் பொருள் என்பதல்லாது,
ஒரு பாதுகாப்பான சேமிப்புக் கருவி என்ற அளவில் தனித்து நிற்பதை உணர முடிகிறது.
ஒரு
குடும்பத்தின் செல்வ நிலையை மதிப்பிடும் முக்கியக் காரணிகளில் தங்கத்திற்கு
சிறப்பான ஒரு இடம் உள்ளது. இது ஒரு ஆடம்பரப் பொருள் என்ற நிலையைத் தாண்டி வாழ்க்கையின், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பிற்காக சேமிக்கப்பட்டு வரும் இன்றியமையாத
சொத்தாகக் கருதப்படுகிறது.
தங்க நகைகள்
என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அழகிற்கும் ஆடம்பரத்திற்காகவும் மட்டுமே நகைகள் என்பதல்லாமல், உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காகவும் இவைகள்
பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பல வகையான நம் பாரம்பரியச் சம்பிரதாயங்களைப்
போல நகை அணிவதிலும் மறைமுகமாக விஞ்ஞான கருத்துகளைக்
கொண்டிருக்கிறார்கள் நம் தமிழர்கள்.
நகைகள் அணிவதன்
மூலம் நம் உடலில் உள்ள பல முக்கியமான வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடலின் ஒவ்வொரு
உறுப்புகளும் பராமரிக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகின்றது. அதிலும் ஆபரணங்கள் தங்கத்தில்
அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற பூமத்தியரேகைக்கு அண்மையில் இருக்கும் நாடுகள்
வெப்பமான நாடுகள். தங்கம் அணிவதன் மூலம் இந்த வெப்பத்தை ஓரளவிற்குக் குறைத்துக் கொள்ள
ஏதுவாகும் என்று நம்பப்பட்டு வருகிறது. உடலோடு ஒட்டி உறவாடும் இந்த தங்க ஆபரணங்கள்
தங்கள் மேனி அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளவை என்ற நம்பிக்கையும் வலுவாக உள்ளது.
பலவிதமான நவநாகரீக, பல்வேறு உலோகங்களால் ஆன நகைகள் சந்தைக்கு வந்தாலும்
இன்றும் தங்க நகைகளின் மதிப்பு மட்டும் சற்றும் குறைந்துவிடவில்லை. குறிப்பாகப் பெண்கள்
எத்துணை ஏழ்மை நிலையில் இருந்தாலும்கூட ஒரு பொட்டுத் தங்கமாவது அணிந்திருக்க வேண்டும்
என்று விரும்புவார்கள்.
மக்கள் விரும்பி
விரல்களில் அணியும் மோதிரம் மன அழுத்தத்தைக் குறைக்கவும், இனிமையான பேச்சுத் திறன்,
அழகான குரல் வளம் போன்றவற்றை ஊக்குவிப்பதோடு. இதயக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் போன்றவை நீங்கவும் உதவுவதாக
நம்பப்படுகிறது. இதே போன்று வளையல்கள், வெள்ளி மெட்டி,
வெள்ளிக் கொலுசு போன்ற அனைத்து ஆபரணங்கள் அணிவதற்கும் ஒவ்வொரு வகைக்
காரணம் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
தமிழர்கள்
தங்கள் செல்வ மகளின் திருமணத்தின் போது தங்கள் சக்திக்கு ஏற்ப நகைகள் அணிவித்து
புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைப்பது வழக்கம். ஆதி காலத்திலேயே இந்தியாவின் செல்வ
நிலையை அறிந்த வேற்று நாட்டவர்கள், மிக ஆர்வமாக கடல்வழி வாணிபத் தொடர்பு
கொண்டிருந்தனர். சங்க காலத்தில் உரோம் நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையிலான
வணிகம் நடைபெற்றதற்குச் சான்றாக உரோமானியக் காசுகள் தமிழகத்தில் அகழாய்வுகளில்
கிடைத்துள்ளன. அவைகளில்
திண்ணன், எதிரான் சேந்தன் என்ற பெயர்கள் பிராமி எழுத்துக்களில்
பொறிக்கப்பட்டுள்ளன. சேந்தன் என்பவர் அகநானூற்றுப் பாடலில்
குறிப்பிடப்பட்டிருக்கிறார்.
தங்க நகை பயன்பாடு
எந்த காலத்தில், யாரால் முதன்முதலில்
முன்னெடுக்கப்பட்டது என்ற ஐயம் எழுவது இயல்பான ஒன்றுதான். சுமேரிய
நாகரிகம் உலகின் மிகப் பழமையான நாகரிகங்களுள் ஒன்று. உலகிலேயே
முதன் முதலில் மெசபதோமியாவில் (தற்போதைய ஈரான், ஈராக்) தங்கம் ஓர் புனிதமானப் பொருளாக
மட்டுமன்றி ஆடம்பரம், அலங்காரம் என அனைத்துக்குமானதாகப் பயன்படுத்தப்பட்டது.
அதன்பின் அதே காலகட்டத்தில், எகிப்தியர்களும் தங்கத்தை சுத்திகரிக்கும் கலையைக் கண்டுபிடித்தனர்.
தங்கத்தை ஆபரணமாகப் பயன்படுத்தினர். 4 -5ஆம் நூற்றாண்டுகளைச்
சேர்ந்த மன்னர்கள் சிலர் தங்க நாணயங்களை வெளியிட்டனர். பொ.ச.மு.
560 – பொ.ச.மு. 546இல் லிடியா என்ற தற்போதைய மேற்கு துருக்கி
மன்னர் கிரீசசு முதன் முதலில் மீப்பெரும் அளவில் சுத்தமான தங்க நாணயங்களை அறிமுகப்படுத்தினார்.
உலகிலேயே முதன் முறையாக வர்த்தகப் பயன்பாட்டுக்கும் கொண்டுவரப்பட்ட சிங்கம் மற்றும் காளையின் முகங்களைக் கொண்ட அரச
முத்திரை பதிக்கப்பட்டிருந்த நாணயம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை
சங்ககாலந்தொட்டு, பல்வேறு அரச மரபினர்களால் அக்கம், மாடை, கழஞ்சு,
அன்றாடு நற்காசு, கருங்காசு, ஈழக்காசு என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு
புழக்கத்தில் இருந்த நாணயங்கள் பொன்னாலும், வெள்ளியாலும், செம்பாலும்
செய்யப்பட்டிருந்தன. மீப்பெரும் கொள்முதல், இராணுவம், அரச
நடவடிக்கைகள் போன்றவைகளுக்கான கட்டணங்களுக்காகத்
தங்க நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன. புலவர்களும், பாணர்களும் அரசனை
வாழ்த்திப்பாடி பரிசுப்பொருள்களுடன்
பொற்காசுகளும் பெற்றுச் சென்றுள்ளதை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.
சோழர் காலக் கல்வெட்டுகள் குறிக்கும் காசு, பழங்காசு, மாடை முதலிய
தங்க நாணயங்களில் 127 நாணயங்கள் தவளேச்சுரத்தில் அகழாய்வில் கிடைத்துள்ளதும்
குறிப்பிடத்தக்கது.
சேரநாட்டின்
மிளகு, பாண்டிய நாட்டின் முத்து, சோழநாட்டின் துணிவகைகள் போன்றவைகள் உரோமானிய
மக்களை மிகவும் கவர்ந்ததால் பொன், வெள்ளி ஆகியவற்றால் செய்த காசுகளை பண்டமாற்றாகக்
கொடுத்து அவைகளை வாங்கியுள்ளனர். இதற்குச் சான்றாக அகழாய்வில் பல உரோமானியக்
காசுகள் தமிழகத்தில் கிடைத்துள்ளதைக் குறிப்பிடலாம்.
தங்கம் மற்றும்
வெள்ளியின் விலை எவ்வாறு நம் நாட்டில் நிர்ணயிக்கப்படுகிறது? அன்றாடம் இதன் விலையில் மாற்றம் ஏற்படுவது ஏன்?
தங்கமும் வெள்ளியும்
உலகின் பொதுச் சொத்தாகக் கருதப்படுவதால் அவற்றின் விலையும் உலகம் முழுவதும் ஒரே சீராக
இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. அந்தந்த நாட்டின் பண மதிப்பின் அடிப்படையிலேயே தங்கம், வெள்ளியின் விலை மாறுபடுகிறது.
நம்மூர் பங்குச்
சந்தைகள் போன்று பிரித்தானியத் தலைநகர் இலண்டனில், புல்லியன் எக்சேஞ்ச் என்று ஒன்று
உள்ளது. தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் சந்தை
இது தான். உற்பத்தி மற்றும் தேவையை ஒட்டுமொத்தமாகக் கட்டுப்படுத்தும் இந்த புல்லியன்
எக்சேஞ்சில் 14 வங்கிகள் பங்குதாரர்களாக உள்ளன. இவற்றில் 11 வங்கிகள் ஸ்காட்லாந்தைச்
சேர்ந்தவை. இவை தங்கச் சுரங்கங்களுடன் ஒப்பந்தம் செய்து, உற்பத்தி அளவுக்கேற்ப சந்தை
விலையை நிர்ணயிக்கின்றன. உற்பத்தி மற்றும் தேவையை ஒட்டுமொத்தமாகக் கட்டுப்படுத்துவது
இந்த புல்லியன் எக்சேஞ்ச் தான். அங்கத்தினர்களான வங்கிகள் ஒன்றுகூடி, அறிவிக்கும் விலையே,
உலகம் முழுவதும் அன்றைய விலையாக, தீர்மானிக்கப்படுகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு
வீழ்ச்சியடைந்தாலோ, தங்கச் சுரங்கங்களில் உற்பத்தி குறைந்தாலோ, கச்சா எண்ணெயின் விலை
குறைந்தாலோ, தங்கத்தில் முதலீடு செய்வதும், அதன் தேவையும் அதிகரித்துவிடுகிறது. TROY-OUNCE என்பது தங்கத்தின் எடையினை அளக்கப்
பயன்படும் அடிப்படை அலகு.
பொதுவாக இணைய வழி
வர்த்தகம் தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதன் முக்கிய காரணியாகச் செயல்படுகின்றது. இந்த
இணைய வழி வர்த்தகத்தின் முக்கியமான அம்சம் என்றால் அது, நேரடியாகப்
பணம் எதுவும் செலுத்தாமலே, வெறும் வாய் வார்த்தைகள் அல்லது இணைய
மடல் மூலம் கூட தங்களுக்குத் தேவையான அளவில், இத்தனை கிலோ தங்கம்
ஒதுக்கிவைக்க வேண்டி பதிவு செய்துவிட்டால், அவர்கள் கணக்கில் அந்தத் தங்கம் சேர்க்கப்படும்.
அதாவது ஒட்டுமொத்தமாக ஓரிருவரே இந்தியாவிற்குத் தேவையான தங்கத்தை, அயல் நாட்டிலிருந்தும்
பதிவு செய்துவிடலாம். இந்த வகையில் தங்கத்தின்
தேவை செயற்கையாக அதிகரிக்கப்படும் அபாயம் நேர்ந்துவிடுகிறது. ஆக, தங்கம் விலையை பெரும்பாலும் இணைய வர்த்தகமும், மிகச் சொற்பமான அளவில் மட்டுமே
தனிமனிதத் தேவையும் நிர்ணயிக்கின்றது.
2014 ஆம்
ஆண்டில் தங்கம் அதிகம் உற்பத்தி செய்த நாடுகளில், முதன்மையாக சீனாவும் அதனைத்
தொடர்ந்து ஆசுத்திரேலியா, உருசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, பெரு ஆகிய நாடுகளும்
விளங்கின.
2014 ஆம் ஆண்டில்
உலக அளவிலான தங்க உற்பத்தி 2860 டன். நம்
இந்தியா இதே ஆண்டில் 1.56 டன் தங்கத்தை மட்டுமே உற்பத்தி செய்துள்ளதோடு
843 டன் தங்கத்தை நுகர்வு செய்து உலகளவில் இரண்டாம் இடத்தில்
இருந்துள்ளது. கடந்த 2015 -16 ஆம் நிதியாண்டில்
ரூ.1.80 இலட்சம் கோடி மதிப்புள்ள தங்கத்தை நம் இந்தியா இறக்குமதி
செய்துள்ளது.
உலக தங்க கவுன்சில்
வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி இந்தியாவுக்கான தங்கம் பயன்பாடு , சென்ற ஆண்டில்
771 டன்னாக இருந்ததாகவும், இந்த ஆண்டில் சற்றுக் குறைந்து 700 டன்னாக மட்டுமே இருக்கும்
என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாகத் தங்கத்துக்கான தேவை 700 டன் முதல் 800 டன் வரையில்
இருக்கும் என்று உலக தங்க கவுன்சிலின் நிர்வாக இயக்குநரான சோமசுந்தரம் கூறியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை மட்டுமே, 480 டன் தங்கத்தை பல்வேறு அரசாங்கங்களின் ரிசர்வ் வங்கிகள் வாங்கியுள்ளன என்ற தகவலையும்
அறிய முடிகின்றது. நம் நாட்டின் ரிசர்வ் வங்கி 40 டன் தங்கத்தை வாங்கியதன் மூலம் மொத்த இருப்பு 592 டன்னாக
அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே தங்கம் விலை ஏறிக்கொண்டிருக்கிறது
என்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக இறக்குமதி செய்யப்படும்
பொருட்களுக்கு அமெரிக்க டாலரிலேயே பணம் கொடுக்க வேண்டும். அந்த
வகையில் இந்திய உரூபாய்க்கு எதிராக அமெரிக்க டாலர் மதிப்பு கூடும்போதும் நம் நாட்டில்
தங்கம் விலை அதிகரிப்பதைத் தவிர்க்க இயலாது. இதோடு முக்கிய நாடுகளில்
அரசியல் மாற்றங்கள், நிலையற்ற தன்மை, போர்
மூளும் அபாயம், போன்ற பல்வேறு சர்வதேச காரணங்களும் தங்கம் விலை
ஏற்றத்தை நிர்ணயித்துவிடுகின்றன.
பொதுவாக, தங்கத்தின்
மதிப்பு காரட் அடிப்படையில் அளவிடப்படுகிறது. சொக்கத் தங்கம் என்றழைக்கப்படும் சுத்தமான
தங்கம், 24 காரட் மதிப்புடையது. 100 சதவீதம் தூய்மையானதாக இருந்தாலும் நகை செய்ய உகந்ததாக
இருப்பதில்லை. நகைக்கு பயன்படுத்தப்படும் 91.67 சதவீதம் சுத்தமான தங்கம் 22 காரட் கொண்டது
என்று கூறப்படுகிறது. இருப்பினும் 75 சதவீதம் சுத்தத் தங்கமான 18 காரட்டையே நகை செய்வதற்குப்
பயன்படுத்தினாலே அது அரிதான விசயம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
உலகமயமாக்கத்தின்
பின்னர், உள்நாட்டுப் பொருளாதார அம்சங்களோடு, சர்வதேச அம்சங்களும் சேர்ந்து தங்கத்தின்
விலையைப் பாதிக்கின்றன. சமீபத்தில் நம் இந்திய மைய அரசால் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை
அறிக்கையில் தங்கத்திற்கான இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தங்கத்தை அன்னியச்
செலாவணிகளுக்கு ஈடாக சேமித்து வைக்கும் நாடுகளில் முன்னணியில் இருப்பது, உலகின் பொருளாதார வளமிக்க நாடான அமெரிக்கா ஆகும்.
சமீபத்திய புள்ளிவிவரப்படி அமெரிக்க நாட்டு அரசிடம் 8,132 டன், அதாவது 8,13,2000 கிலோ தங்கம்
சேமிப்பில் உள்ளது. அந்நாட்டின் மொத்த செலாவணி கையிருப்பில் 73%
என்பதும் குறிப்பிடத்தக்கது. நம் இந்திய நாடு 10-வது இடத்தில் 557.70 டன் தங்கம் இருப்பு கொண்டுள்ளது.
நிலத்தடியில் தனி
நிலையில், சுரங்கத்தில் புதைந்திருக்கும் தங்கம் பாறைகளின்
மீது ரேகை போன்று படர்ந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்தப் பாறைகளில் வெடி வைத்துத் தகர்த்த பின்பு இரசாயன (வேதியியல்) முறையில் தங்கத்தைப்
பிரித்தெடுக்கிறார்கள். அதனை மின்பகுப்பு முறையில் சுத்தம் செய்து பின் பயன்படுத்துகிறார்கள்.
உலகில் மொத்தமாகக்
கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதி அளவிற்கு தென் ஆப்பிரிக்காவில் கிடைக்கின்றது.
கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆசுத்திரேலியா, கொரியா , தென் அமெரிக்கா , இந்தியா
ஆகிய நாடுகளில் தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது. கர்நாடகா மாநிலத்தில் கோலார்
தங்க வயல் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. ஆனாலும் தற்போது இந்த
கோலார் தங்கச் சுரங்கம் மூடப்பட்டதால் தங்கத்தின் உற்பத்தி வெகுவாகக்
குறைந்துள்ளது. அண்மைக் காலமாக இலங்கையிலும் மிகச் சொற்ப அளவில்
தங்கம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
நாணயம் (Currency) என்பது பொருட்களையும் சேவைகளையும்
பரிமாறிக் கொள்வதற்கான ஒரு "பரிமாற்ற அலகு" என்பார்கள். ஒரு நாட்டின் நாணய மதிப்பு கணக்கிடப்படுவதில் தங்கம் பெரும் பங்கு வகிக்கிறது.
அதாவது ஒரு நாடு எந்த அளவிற்கு அவர்களின் நாணயம் அல்லது பணத்தை அச்சடிப்பது என்பதை
நிர்ணயிக்கும் சக்தி இந்த தங்கம் மட்டுமே. ஒவ்வொரு நாடும் தங்கள்
மத்திய வங்கி ( ரிசர்வ் வங்கி) யில் தங்கத்தை கையிருப்பில் வைத்திருப்பார்கள். அவரவர்கள்
இருப்பு வைத்துள்ள தங்கத்தினுடைய மதிப்பிற்கு ஏற்றவாறு மட்டுமே அந்த நாட்டு
அரசாங்கம் செலாவணி அல்லது நாணயம் அல்லது ரூபாய் நோட்டுகளை வெளியிட்டுவருகிறது.
அந்தந்த நாட்டின் செலாவணியை குறிப்பிட்ட எடையளவு தங்கத்திற்கு மதிப்பிடுவார்கள்.
தங்கம் மென்மையான உலோகம் என்பதால் தூய்மையான தங்கத்தில் மட்டும்
செய்யப்படும் நகைகள், நாணயம், உறுதியாக இருக்காது என்பதால் தங்கத்துடன் ஒரு
குறிப்பிட்ட அளவு செம்பு அல்லது வெள்ளி போன்ற உறுதியான உலோகங்களைக் கலந்து
அணிகலனும் பண்டம், பாத்திரங்களும் செய்கின்றனர். பேனா முள், கைக்கடிகார உறுப்புகள் ஆகியவையும் தங்கத்தால்
செய்யப்படுகின்றன. தங்கத்தை மிக மெல்லிய தகடாகவோ அல்லது கம்பியாகவோ அடிக்கலாம் என்பதால்
வேண்டிய வடிவில் ஆபரணங்கள் செய்யலாம்.
மது அல்லது சாராயத்தில் தங்கத் துகள்களை
சிறிதளவு அரைத்து பொடியாக்கிப் பருகுவர் . இதனை தங்கபஸ்பம் என்று கூறுவர் .
தங்கபஸ்பம் பருகினால் மேனி பொன் போன்று பொலிவடையும் என்று பலரும் நம்புகிறார்கள்.
வரலாற்று காலந்தொட்டு
நச்சுத்தன்மையற்ற தூய தங்கம் அரிய உலோகமாகவே கருதப்பட்டு வந்தது. 24 காரட் சுத்தத் தங்கம் என்றாலும் இதில் ஆபரணங்கள்
செய்ய முடியாது. 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன.
22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற
மற்ற உலோகமும் கலந்ததாகும். 18 காரட் என்பது 75 சதவீதம் தங்கமும், 14 காரட் என்பது
58.5 சதவிகிதம் தங்கமும், 9 காரட் என்பது 37.5 சதவீதம் தங்கமும் கலந்ததாகும்.
சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தங்கத்தின் மதிப்பு கிடைக்கின்றது.
பழங்காலந்தொட்டு
நம் நாட்டின் ஆலயங்கள், ஆன்மீக மடங்கள் போன்றவைகள் தங்கக் கருவூலங்களாகவும் செயல்பட்டுள்ளதை அறிய
முடிகின்றது. ஒரிசாவின் ஒரு சைவ மடத்தில் கோவில் கருவறை
முழுவதும் தங்கத்திலான செங்கல்லால் கட்டியுள்ளனர். அந்தக்
கோவிலின் பரம்பரைப் பூசாரி ஒருவர் ஒவ்வொரு கல்லாக எடுத்து விற்கும்போது மாட்டிக்
கொண்டதால் இந்த விசயம் வெளியே தெரிய வந்தது. அதுபோல
திருவனந்தபுரம் பத்மநாபர் கோவிலில் பாதாள அறையில் தங்க ஆபரணங்கள் குவிந்து கிடந்த
செய்தியும் நாம் அறிவோம்.
கொள்முதல்
செய்யப்படும் தங்கத்தில் 37% மட்டும் அணிகலன்கள் செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. 30% எலக்ட்ரானிக்ஸ் தொழில்துறையிலும், 30% மருத்துவம்,
மின்துறையிலும், 3% இதர செயல்பாடுகளுக்கும்
பயன்படுத்தப்படுகின்றன. தங்கம் எளிதில் மின்கடத்தி என்பதும்
குறிப்பிடத்தக்கது. அணிகலன் செய்வதற்காக மட்டும் ஒவ்வொரு
ஆண்டும் 3 முதல் 4 டன்கள் தங்கம்
இறக்குமதி செய்யப்படுகிறது என்றால் மீதக்கணக்கைப் போட்டுக்கொள்ளலாம்.
தங்கத்தின்
விலையைப் பொருத்து, சட்டப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட விலைகள் வேறு, வணிகர்கள்
அவரவர்கள் திறமைக்கேற்றவாரு வாங்கும் விலை நிர்ணயிக்கப்படுவதாகவும்
சொல்லப்படுகிறது.
நாம் நகையை
வாங்கும்போதும் அதில் கலந்திருக்கும் செம்பிற்கும் சேர்த்தே பணம் கொடுக்கிறோம். தங்கத்திலாவது
செம்பு இவ்வளவு சதவிகிதம் என்பது உறுதியாகத் தெரிகிறது. ஆனால்
வெள்ளியில் சேர்க்கப்படும் 20% அலுமினியத்திற்கும் சேர்த்துதான் வெள்ளியின் விலை தருகிறோம்.
சில
மாதங்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கை செய்தியில் படித்த ஆச்சரியமான நிகழ்வு ஒன்று
நினைவிற்கு வருகிறது. வெளிநாட்டுக்காரர் ஒருவர் தாம் வாங்கிய நகைகளுக்கு தங்கத்திற்கு உரிய விலை
மட்டுமே கொடுக்க முடியும், அதில் கலந்திருக்கும் செம்பிற்கு
அதற்குரிய விலையும், பௌதீக விதிப்படி எந்தவொரு பொருளும்
மறைந்து விடாது என்ற வகையில் சேதாரம் என்பதையும் தன்னிடமே திருப்பிக் கொடுக்க
வேண்டும் என்றும் விவாதம் செய்து பெற்றிருக்கிறார் .. இப்படித்தான் நகைக்கடைகள்
செழிப்படைகின்றன என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். மக்களின்
ஏமாற்றம் நகைக்கடைக்காரர்களின் ஏற்றம் (இலாபம்) என்பதே நிதர்சனம்!
சேதாரக் கதை!
ஒரு அரசருக்கு
வெகு நாட்களாக (தங்கபஸ்பம்
சாப்பிடுபவர் போல) ஒரு சந்தேகம். சேதாரக்
கணக்கில் இவ்வளவு தங்கம் வீணாகிறதே, அதெல்லாம் என்ன ஆகும்,
எங்கே போகும் என்பதுதான் அது. அதனைப்
போக்கிக்கொள்வதற்காக ஒரு முறை ஒரு பொற்கொல்லரை அழைத்து அவருக்குத் தமது அரண்மனையிலேயே ஒரு தொழிற்கூடம் அமைத்து,
தகுந்த பாதுகாப்புடன் 2 கிலோ தங்கத்தில்
ஆபரணம் செய்யப் பணித்தார். இறுதியில் நகை செய்து
முடித்தபின்பு ஒன்றரை கிலோ தங்கத்திற்குரிய ஆபரணங்கள் மட்டுமே கணக்குக்
கொடுத்திருக்கிறார் அந்தப் பொற்கொல்லர். மீதமெல்லாம்
சிந்திச் சிதறிய சேதாரக் கணக்காக்கிவிட்டு கிளம்பிவிட்டார். அரசருக்கோ
பெரும் ஆச்சரியம். இத்தனை பாதுகாப்பையும் மீறி அந்த சேதாரம்
எப்படி காணாமல் போனது என்பதுதான். அரசர் அந்த பொற்கொல்லரைத்
தனியே அழைத்து மிரட்டி, உண்மையைச் சொன்னால்
சிரைச்சேதத்திலிருந்து தப்பிக்கலாம் என்று கூறியவுடன் அந்த பொற்கொல்லரும் உண்மையை
எடுத்துரைத்தார். அதாவது அன்றாடம் வேலை முடிந்தவுடன் கை,
கால்கள் அலம்பும் இடத்திலிருந்து தண்ணீர் செல்லும் சாக்கடையின் நேரே
அவருடைய மகன் ஒரு சல்லடையுடன் நிற்பாராம். அங்கு அடித்து
வரும் தங்கத்தை அந்த சல்லடை மூலம் அரித்து எடுத்துச் சென்று விடுவாராம் ... இப்படியே அரை கிலோ தங்கம்
அடித்துச் சென்றிருக்கிறது சேதாரமாக என்பதை அறிந்து ஆச்சரியத்தில் உறைந்து
போனாராம் அரசர்!
வெப்பத்
தடுப்பு உடைகள், சூரியக் கண்ணாடிகள், விண்வெளி உடைகள் போன்றவற்றிலும் தங்கம்
பயன்படுத்தப்படுகின்றது. வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்கு கடத்தும் இந்த உலோகம் காற்றில் தன்
நிறம் மங்குவதோ அன்றி துரு பிடிப்பதோ கிடையாது என்பதால், எப்போதும் பளபளப்பாகவே
இருக்கும். 100 ° செல்சியசு வெப்பநிலை வரை ஓசோன்
தாக்குதலையும் எதிர்க்கும் சக்தி வாயந்தது. அந்த வகையில் உலகில்
தங்கம் கொள்முதல் செய்யாத நாடுகள் என்பது ஏதுமில்லை என்பதும் முக்கிய செய்தி!
நன்றி - கோகுலம் கதிர்
Thursday, August 15, 2019
சூட்டி மகிழ்வோம் தமிழ் பெயர்கள் - நூல் வெளியீடு
மிகச்சிறப்பாக, தமிழியக்கத் தலைவர் வி.ஐ.டி.வேந்தர் உயர்திரு. கோ.விசுவநாதன், பாண்டிச்சேரி முதல்வர் மாண்புமிகு நாராயணசாமி, மாநிலங்கள் அவை உறுப்பினர் உயர்திரு வை.கோ. மற்றும் பல்வேறு ஆளுமைகளின் முன்னிலையில் நடைபெற்ற தமிழியக்கம் சார்பில், ‘சூட்டி மகிழ்வோம் தமிழ் பெயர்கள்’ என்ற நூல் வெளியீட்டின்போது வேந்தர் அவர்களின் உணர்வுப்பூர்வமான பேச்சு அனைவரையும் கவர்ந்தது. தமிழ் மொழிக்காக மட்டுமன்றி ஒட்டு மொத்த தமிழினத்திற்காகாக தமது வாழ்நாளைச் செலவிட முடிவெடுத்திருப்பதை தெரிவித்தபோது மக்களின் பலத்த கரவொலி அரங்கை அதிரச் செய்தது. திரு வைகோ அவர்கள் இதனை ஆதரிக்கும் விதமாக, தமது வாழ்நாளின் பெரும் பகுதியை இளைஞர்களின் கல்விக் கண்களைத் திறப்பதற்காகச் செலவிட்டுள்ளவர் மீதமுள்ள வாழ்நாட்கள் முழுவதையும் தமிழ் மொழிக்காகவும், தமிழர்களுக்காகவும் பயனுறச் செய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேதகு பாண்டி முதல்வர் அவர்களின் மிக இயல்பான பேச்சு அனைவரையும் கவர்ந்தது. திரு வை.கோ. அவர்களுடன் தாம் கொண்டுள்ள நட்பு குறித்து தெரிவித்தார். தலைவர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் நிகழ்வில் கலந்துகொண்டு நிகழ்வை குறித்த நேரத்தில் நிறைவு செய்து ஆச்சரியப்படுத்தினர். நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் அருமையான விருந்தோம்பலுடன் மனம் நிறைவடையச் செய்தார், சகோ. சின்னராசு (திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர்) அவர்கள். அனைவருக்கும் உளம் நிறைந்த பாராட்டுகள்.
Saturday, July 27, 2019
Thursday, July 18, 2019
சங்க கால உணவு முறைகள்!
சங்க கால உணவு முறைகள்
பவள சங்கரி
தென்னிந்தியாவின்
கற்கால மனிதர்களின் காலம் கி.மு. 10000. அக்காலங்களில் வேட்டைக்காரர்கள், மூங்கில் வேலை செய்பவர்கள், ஆடை தயாரித்தவர்கள்,
மீன் பிடிப்பவர்கள், உப்பளங்கள் அமைத்து உப்பு
சேகரித்தவர்கள், மாலுமிகள் போன்றவர்கள் மட்டுமே அடங்கிய சமூகம்
அது. அவரவர்கள் வாழும் பகுதிகளின் வளங்களுக்கேற்ப அமைந்த தொழிலின்
அடிப்படையில் கூடிய சமூகம் அது.
மக்களின் உணவு
முறை என்பது அந்தந்த காலகட்டங்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், நிதிநிலை, வாழ்க்கைத் தரம் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது. நவீன
கால கண்டுபிடிப்புகளின் பாதிப்பு ஏதுமின்றி, உடல் உழைப்பை
மட்டுமே மூலதனமாகக் கொண்டு தங்கள் வாழ்வியலை அமைத்துக் கொண்டவர்கள் ஆரோக்கியமான
உடலும், மனமும் பெற்றிருந்திருக்கிறார்கள் என்பதையும் உணர
முடிகின்றது. கற்காலத்திற்குப் பிறகான சங்க காலத்திலும்
பெரும்பாலும் இந்த நிலை குறிப்பாக உணவுப் பழக்கத்தில் மிகச் சில மாற்றங்களுடன்
தொடர்ந்திருப்பதையும் அறிய முடிகின்றது. இதற்கான ஆதாரங்கள்
சங்க காலப் பாடல்களில் அதிகமாகவே கிடைக்கின்றன.
சங்ககால
மக்கள் இயற்கையாகக் கிடைக்கும் தாமரையிலை, தேக்கிலை, ஆம்பலிலை, வாழையிலை, பனையோலை,
மூங்கில் போன்றவற்றை உணவு உண்பதற்குத் தகுந்த
கலன்களாக வடிவமைத்துப் பயன்படுத்தி உள்ளனர் என்பதற்கு ஆதாரங்களாக,
“சேக்குவள்
கொல்லோ தானே தேக்கின்
அகலிலை
குவிந்த புதல்போல் குரம்பை
ஊன் புமுக்
கயரு முன்றில்” (அகம். 315: 15-17)
“வாழை
ஈர்ந்தடி வல்லிதின் வகைஇப்
புகையுண்டு
அமர்த்த கண்கள்” (நள். 120: 5-6)
“செமுங்கோள்
வாழையகலிலைப் பகுக்கும்”(புறம். 168, 13)
“ஆம்பல் இலைய
வமலை வெஞ்சோறு
தீம்புளிப்
பிரம்பின் திரள்கனி பெய்து
விடியல் வைகறை
யிடு உமுர” (அகம். 196: 5-7)
போன்ற
பாடலடிகள் தெளிவாக உணர்த்துகின்றன.
அடுத்து
சமைப்பதற்கும், சமைத்த
உணவை பாதுகாப்பதற்கும் பழந்தமிழ் மக்கள் எத்தகைய பாத்திரங்களை
பயன்படுத்தியிருப்பார்கள் என்ற ஐயங்களுக்கும் சங்கப் பாடல்களே விடையளிக்கின்றன. குழிசி, சாடி, கலன், கன்னல், தசும்பு, குப்பி, தடவு போன்ற பல வகையான,
பல அளவுகளிலான பானைகளைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதை அறிய
முடிகின்றது.
தசும்பு என்ற பானை, பால், தயிர், கள் போன்ற பொருட்களை நிறைத்து
வைப்பதற்கு பயன்படுத்தப்பட்டதை,
“இஞ்சிவி
விராய பைந்தார் பூட்டிச்
சாந்துபுறத்
தெறிந்த தசும்பு துளங் கிருக்கை
தீஞ்சேறு
விளைந்த மணி நிற மட்டம்” (பதிற்று,
42: 10-12)
என்ற
பாடலடிகள் மூலமும்,
குழிசி என்பது
உணவு சமைக்கப் பயன்படுத்தும் மண்ணால் செய்யப்பட்ட பானை என்பதனை,
“மான்றடி
பழுக்கிய புலவுநாறு குழிசி” (புறம்,
165:6)
“கயறு
பிணிக் குழிசி” (அகம், 77:7)
“முரவுவாய்க்
குழிசி முரியடுப் பேற்றி” (பெரும், 99)
என்ற
பாடலடிகள் மூலமும் அறிய முடிகிறது.
இக்காலங்களில்
நாம் சுவையாக உணவைச் சுவைத்து உண்ண பக்கவாட்டில் சில துணைப் பதார்த்தங்களையும் பயன்படுத்துகிறோம். அதில் மிக முக்கியமானது உப்பில் ஊற விட்டு காரமும்,
புளிப்பும் சேர்ந்த சுவையான ஒரு பதார்த்தமாகப் பயன்படுத்தும் ஊறுகாய்!
ஊறுகாய் பயன்படுத்தும் வழமை நமக்கு நம் முன்னோர்களிடமிருந்து,
ஆதி காலந்தொட்டு இன்றுவரை விடாமல் தொடர்ந்து வருவதும் ஆச்சரியம்தான்.
இக்காலம்
போன்றே நெல்லிக்காய், எலுமிச்சம் பழம், புளியங்காய், மாங்காய் போன்றவற்றை, பதப்படுத்தி ஊறுகாய்களாகச் சமைத்து அவைகளை
மண்ணால் செய்யப்பட்ட காடிகளில் அடைத்து வைக்கின்றனர். ஊறுகாய்கள் கெடாமல்
இருப்பதற்கு காடிகள் பயன்படுகின்றன என்பதனை,
“காடி வைத்த
கலனுடை மூக்கின்
மகவுடை
மகடூஉப் பகடு புறந் துரப்பக்” (பெரும், 57-58)
என்ற பாடல் வரிகள்
மூலம் அறிய முடிகின்றது.
கன்னல் என்பது
நீர் நிறைத்து வைக்கப்படும் மண் பானை. ‘தொகுவாய்க் கன்னல்’, ‘குறுநீர்க்கன்னல்’
என்று இரண்டு விதமான கன்னல் பானைகள் உள்ளன. குவிந்த வாயையுடைய பானையான தொடுவாய்க்
கன்னல் என்பதனை,
“தொடுவாய்க்
கன்னற் றண்ணி ருண்ணார்
பகுவாய்த்
தடவிற் செந் நெருப்பார”
(நெடுநெல்வாடை, 65-66)
என்ற அடிகள்
மூலமும்,
மண்பானையில்
நீர் நிறைத்து அதன் அடியில் சிறிய துளையிட்டு அதன் வழியாக அந்நீரை சிறிது
சிறிதாகக் கசிய விட்டு அந்நீரினை அளப்பதற்கான கருவியாகலின் இது குறுநீர்க் கன்னல்
என்றழைக்கப்பட்டது. இதனை,
“ஏறி நீர் வையகம்
வெலீஇய செல்வோய் நின்
குறுநீர்க்
கன்ன லினைத்தென் றிசைப்ப” (முல்லை, 57-58)
என்ற
பாடலடிகள் மூலமும்,
குளிர் காலத்தில் குளிப்பதற்கு நீரைச் சூடாக்க
பெரிய மண்தாழிகளைப் பயன்படுத்தினர். தடவு எனப்படும் இதனை,
“பகுவாய்த்
தடவிற் செந் றெருப்பயர” (நெடுநெல்வாடை,
66)
என்ற
பாடலடிகள் மூலமும்,
மக்களின் தேவைக்கு ஏற்ப மண்பாண்டங்கள்
செந்நிறத்திலும், கருப்பு நிறத்திலும் செய்து கொடுத்துள்ளனர். இதனை,
“செந்தாழிக்
குவிபுறந் திருந்த” (புறம், 238:1)
“பெருங்கட்
குறுமுயல் கருங்கலன்” (புறம், 322:5)
என்ற
பாடலடிகள் மூலமும் அறியலாம்.
சங்க கால உணவு
சங்க
காலத்தில், சோற்றைக்
குறிக்க அடிசில், அயனி, அவிழ், கூழ், மிதவை, மூரல், சொன்றி,
நிமிரல், புழுக்கல், புன்கம், பொம்மல் போன்ற
சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
நெல், வரகு,
திணை முதலிய தானியங்களும், பால், தயிர், மோர், ஈசல்களையும், அவரைக்காய், வேளைக்கீரை,
வேளைக்கீரைப் பூ போன்ற தாவர வகைகளையும்,
செம்மறியாடு, முயல் இவற்றின் இறைச்சிகளையும் பல்வித கள் வகைகளையும் சங்க கால
மக்கள் உணவில் முக்கியமாகக் கொண்டிருந்தனர். வேளைக்கீரை, அதன் பூ, தயிர், மோர்,
ஈசல், வரகு இவற்றையெல்லொம் சேர்த்து தனிப்பட்ட முறைகளில், புளியங்கூழ், புளியங்கறி, புளியஞ்சோறு
போன்ற உணவு வகைகளைச் சமைத்துள்ளனர். நன்கு விளைந்து முற்றிய நெல்லை, அரிசியாக்கி
ஆம்பற்பூவோடு சேர்த்து, சுவையாகச் சமைத்து உண்டனர். களிமண்
பானைகளில் மூலம் இந்த உணவு வகைகளைச் சமைத்துள்ளனர் என்பதனை, அகம்.393:14
பாடல் மூலம் அறியலாம்.
பூளைப் பூ போன்ற வரகுச் சோற்றை வேங்கைப் பூவை
ஒத்த அவரைப் பருப்புடன் அவித்து வரகுச் சோற்றுடன் கலந்து உண்டதை,
குறுந்தாள்
வரகின் குறள்அவிழ்ச் சொன்றி
புகர்இணர்
வேங்கை வீ கண்டன்ன
அவரைவான்
புழுக்கு அட்டி, பயில்வுற்று
இன்சுவை மூரல்
பெறுகுவீர் (பெரும்.193-196)
என்ற
பெரும்பாணாற்றுப்படை அடிகள் குறிப்பிடுகின்றன.
பசு, எருமை,
ஆடு ஆகியவற்றின் பாலையும் அவற்றினின்று
கிடைக்கும், பால் மற்றும் பால்படுப்பொருட்களான, தயிர்,
மோர், வெண்ணெய், நெய் ஆகியவற்றையும் மிக விருப்பமான உணவாகக்
கொண்டவர்கள்
சங்க கால ஆயர்கள் என்பதை முல்லைத்திணைப் பாடல்களின் மூலம் அறிய முடிகின்றது . பாலை
உணவாகக் கொண்டதைப் பற்றி அகநானூறும் (393:17), மலைப்படுகடாம் (409-410) மற்றும்
பெரும்பாணாற்றுப்படை (168, 175) பாடல்களும் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.
மேலும், தானிய வகைகள், பூக்கள், பூச்சிகள், ஊன்
உணவுகள், கள் ஆகியவைகளும் அவர்களது விருப்பமான உணவுகளாக இடம் பெற்றிருந்தன.
பாலிலிருந்து
கடைந்தெடுத்த வெண்ணெயை உருக்கி எடுக்கப்பட்ட, மணமிக்க சுவையான நெய்யில், கடலையை
வறுத்து அதனை சோற்றுடன் சேர்த்து உண்டதையும் (புறம்.120:14),
புறநானூற்றுப் பாடல் மூலம் அறிய முடிகின்றது.
தீம்புளி என்ற
ஒரு உணவும் பல பாடல்களில் மிகச் சிறப்பான உணவாகக் காட்டப்பட்டுள்ளது.
பரதர் தந்த
பல்வேறு கூலம்
இருங்கழிச்
செறுவிற் றீம்புளி வெள்ளுப்புப்
பரந்தோங்கு
வரைப்பின் வன்கைத் திமிலர்
கொழுமீன்
குறைஇய துடிக்கண் துணியல் . .
(மதுரை
காஞ்சி 318)
பண்டமாற்று
முறை வாணிபத்தில், நம் நாட்டிற்கு குதிரைகளை மரக்கலங்களில் ஏற்றிக் கொண்டுவந்த யவனர்கள் அதே
மரக்கலங்களில் பொன் அணிகலன்களையும், தீம்புளி, உப்பு, உணக்கிய மீன் ஆகியவற்றையும்
தத்தம் நாடுகட்கு ஏற்றிச் செல்லுவார்களாம்.
தீம்புளி
என்றால் என்ன?
சாப்பிட்டதுண்டா? சங்கப்பாடல் சொல்லும் சுவையான பண்டம் இது!
ஆம், புளியையும் கருப்பங்கட்டியையும் சேர்த்துப்
பிசைந்து அதைப் பொரிப்பார்கள். இப் பண்டத்துக்குத்தான் தீம்புளி என்று பெயர்.
நெற்சோற்றோடு
மோர் ஊற்றி, அதில் வெண்ணெய் கொண்டு கறிவேப்பிலையும், மாதுளங்காயும் பொறித்துக்
கொட்டி, அதில் மிளகுப்பொடி தூவி, அதனுடன் மாமரத்தின் பிஞ்சு இலைகளை மேலே போட்டு
வைத்த ஊறுகாயைத் தொட்டுக் கொண்டு, பார்ப்பணத்தி ஒருத்தி சாப்பிட்டாள் என்பதனை கீழ்கண்ட பெரும்பாணாற்றுப்படை
பாடல் மூலம் அறியலாம் ,
சேதா நறுமோர்
வெண்ணெயின் மாதுளத்
துருப்புறு
பசுங்காய்ப் போழொடு கறிகலந்து
கஞ்சக நறுமுறி
யளைஇப் பைந்துணர்
நெடுமரக்
கொக்கி னறுவடி விதிர்த்த
தகைமாண்
காடியின் வகைபடப் பெறுகுவிர் 310
வண்ட லாயமொ
டுண்டுறைத் தலைஇப்
புனலாடு மகளி
ரிட்ட பொலங்குழை
இரைதேர்
மணிச்சிர லிரைசெத் தெறிந்தெனப்
புள்ளார்
பெண்ணைப் புலம்புமடற் செல்லாது
சோறுடன் தயிர் சேர்த்து உண்ணும் போது, காரமும்
புளிப்பும், உப்பும்
அதிகமாகச் சேர்ந்த ஊறுகாயுடன் உண்ணும்
பழக்கம் சங்ககால மக்களிடையே இருந்துள்ளதை பட்டினப்பாலை பாடல் மூலம் அறிய முடிகிறது.
இன்றைய
காலகட்டத்தில் அசைவ உணவான பிரியாணி என்று
அழைக்கும் உணவு அக்காலத்தில் ஊன்சோறு என்று அழைக்கப்பட்டிருப்பதை,
ஊன் சோற்று
அமலை பாண் கடும்பு அருத்தும் - புறம் 33/14
அட்டு ஆன்று
ஆனா கொழும் துவை ஊன் சோறும் - புறம் 113/2
என்ற
பாடலடிகள் விளக்குகின்றன.
அசைவ உணவாக, வெள்ளாடு, செம்மறியாடு, மான், முயல், ஆமை,
மீன் வகைகள், நண்டு, ஈயல், கோழி, காட்டுக்கோழி, காடை, உடும்பு போன்றவற்றின்
இறைச்சியைத் தனியாகவோ, பாலும் அரிசியும் சேர்த்தோ சமைத்து உண்பார்கள்.
“முளிதயிர்
பிசைந்த காந்தள் மெல்விரல்
தான் துழந்து
அட்ட தீம்புளிப் பாகர்” (குறுந்.167:1-2)
குறுந்தொகைப்
பாடலின் தலைவி தன் கணவனுக்காக உணவு சமைப்பதை அழகாக விளக்கப்பட்டுள்ளது. நன்றாகக் காய்ச்சிய பாலில் முந்தைய நாளில்
உறை ஊற்றி, மறுநாள் காந்தள் மலரைப் போன்ற தன் மெல்லிய விரல்களால் புளிப்பேறிய
தயிரைப் பிசைந்து, அதனுடன் இனிய புளிப்புச் சுவையுடைய குழம்பினைச் சேர்த்துத் தன்
கணவனுக்கு அன்பாகப் பரிமாறுகிறாள். தலைவி குழம்பு வைக்கும் போது புளி, தயிரை
மட்டும் சேர்க்கவில்லை. அத்தோடு தன்னுடைய
உண்மையான காதலையும் சேர்த்துப் பறிமாறுகிறாள் என்று உணவுச் சுவையுடன், தலைவன், தலைவியின் வாழ்வியல் பண்பாட்டு நெறியையும் சேர்த்தே விளக்குகிறது இப்பாடல்.
நெய்யொடு
கூடிய தயிர்ச்சோற்றை உண்ணல் (அகம்:340),
புல்லரிசியை
உண்ணல் (பெரும்.89-94) போன்ற செய்திகள் சங்க காலப் பாடல்கள் காட்டுகின்றன.
அடிசில்
என்பது சங்க காலம் தொட்டு இன்றுவரை புழக்கத்தில் உள்ள ஒரு சொல். ஆம், அக்கார அடிசில்
என்பது இன்றும் குழைந்த சோறுடன், பால், வெல்லம், நெய் சேர்த்து படைக்கும் உணவு.
புதுக்கலத்தன்ன செவ்வாய்ச் சிற்றில்
புனையிரும் கதுப்பின் நின் மனையோள் அயரப்
பாலுடை அடிசில் தொடீஇய ஒருநாள்
மாவண் தோன்றல்! வந்தனை சென்மோ! – (அகம் 394/9-12)
மேற்கண்ட அகநானூற்றுப்
பாடல் தோழி தலைமகனைப் பார்த்துச் சொல்வதாக அமைந்த பாடல் இது.
மேலும்
வத்தம், வட்டம், வல்சி, வறை, வாட்டு, வாடூன், விசையம், வேவை போன்ற சொற்களும், பல்வேறு வகைத் தின்பண்டங்களுக்குப்
பயன்படுத்தப்பட்டுள்ளன.
பரல் வறை
கருனை காடியின் மிதப்ப - பொரு 115
உடும்பின்,
வறை கால்யாத்தது வயின்தொறும் பெறுகுவிர் - பெரும் 132,133
நெய் கனிந்து
வறை ஆர்ப்ப - மது 756
நெய் துள்ளிய
வறை முகக்கவும் - புறம் 386/3
மண்டைய கண்ட
மான் வறை கருனை - புறம் 398/24
என்ற அடிகள்
மூலம் பொரித்த இறைச்சித்துண்டுகள் வறை எனப்படுவதை அறிய முடிகின்றது.
வாடூன் என்பது
வாடிய ஊன் என்றறிய முடிகிறது.
வாடூன் கொழும்
குறை
கொய்குரல்
அரிசியொடு நெய்பெய்து அட்டு
துடுப்பொடு
சிவணிய களிக்கொள் வெண்சோறு - புறம் 328/9-11
இதனை மேற்கண்ட
புறநானூற்று அடிகள் விரிவாகச் செய்முறையுடன் விளக்குகின்றன. அதாவது இன்றளவிலும் மீந்து
போன ஆட்டுக் கறி துண்டங்களை உப்பு, மஞ்சள் தூள் போட்டு நன்கு காய வைத்து அதனைத் தேவையான
நேரத்தில் பயன்படுத்திக் கொள்வார்கள். இதற்கு உப்புக்கண்டம்
என்று கூறுவார்கள். அந்த ஊன் துண்டங்களை இரும்புக்
கம்பிகளில் கோத்து நெருப்பில் வாட்டியுண்பார்கள்
அதேபோன்று கருப்பஞ்சாறிலிருந்து
எடுக்கப்படும் நாட்டுச் சக்கரை, வெல்லம் போன்ற பொருட்களை விசையம் என்று கூறினர். அதனை
விசையம்
கொழித்த பூழி அன்ன (மலைபடுகாம் - 444)
என்று பாடலால்
அறிய முடிகிறது. அதே போன்று வேக வைத்த உணவை வேவை என்றனர். பலாப்பழம், இளநீர், வாழைப்பழம், நுங்கு,
சேம்பிலைக்கறி, வள்ளிக்கிழங்கு, சுட்ட பனங்கிழங்கு ஆகியவற்றையும் பண்டைத் தமிழர்
உண்டனர். மாங்கனியைப் பிழிந்து சாறு எடுத்து, அதைப் புளிக்க வைத்து புளிக்குப்
பதிலாக அதைப் பயன்படுத்தும் வழக்கமும் உண்டு. இன்றும்
மாங்காயை உலற வைத்து பொடியாக்கி பயன்படுத்தும் அந்த வழமை இருக்கிறது.
சங்க கால
மக்கள் அசைவ உணவையே பெரிதும் விரும்பி உண்டனர். பண்டைத் தமிழகம் குறிஞ்சி, முல்லை,
மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களாகப் பகுக்கப் பெற்றிருறந்தது. அதன்
அடிப்படையிலேயே மக்களின் வாழ்வும், உணவுப் பழக்கங்களும் இருந்துள்ளன.
குறிஞ்சி
நிலம் வாழும் மக்கள் மலையில் விளைந்த திணையைச் சோறாக்கியும், நெய்யில்
பொறிக்கப்பட்ட இறைச்சியையும் உண்டனர்.
மருத நிலம்
வாழும் மக்கள் வெண்சோற்றையும், நண்டும் பீர்க்கங்காயும் கலந்த கூட்டையும், பழைய
சோறு, அவல் போன்றவற்றை விரும்பி உண்டனர்.
நெய்தல் நிலம்
வாழும் மக்கள், இறால்
மீன், வயல் ஆமை ஆகியவற்றைப் பக்குவம் செய்து உணவாக உட்கொண்டனர்.
பாலை நிலம்
வாழும் மக்கள் இனிய புளிக்கறி சேர்க்கப்பட்ட சோற்றையும். காய்கறியையும், இறைச்சியையும், உண்டனர்.
உணவினைக்
கலங்களிலும் தேக்கிலையிலும் பரிமாறினர். உண்ணும் முன் கலங்களைக் கழுவி அதில்
சோறுண்டனர் (புறம்.120).
புல்லி
நாட்டில் ஆயர்கள் மாடு மேய்க்கப் புறப்படும்போது புளிச்சோறு உணவினை மூங்கில்
குழாயில் இட்டு, அதனை மாட்டின் கழுத்தில் கட்டி விடுவார்களாம். காட்டு வழியே பயணிக்கும் சமயம், அங்கு பசியோடு வருபவர்களுக்கு
தமது உணவினை அவர்களுக்கும் பகுத்துக் கொடுத்து உண்பார்களாம்.
பயம்தலை
பெயர்ந்து மாதிர வெம்ப
வருவழி
வம்பலர்ப் பேணி காவலர்
மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளி
செவியடை தீரத்
தேக்கிலைப் பகுக்கும்
புல்லிநன்னாடு
'(அகம் 311,9-12)
மூங்கில்
குழாயினுள் புளிச்சோற்றினை அடைத்து வைத்து வேற்றிடம் செல்பவர்கள் அதனை இலையில்
இட்டு உண்ணல் (அகம்:309) என்ற செய்தி கூறப்பட்டுள்ளது..
முடிவுரை:
அடிமனை, கணிச்சி, நீர் முகக்கும் கருவி, மத்து, உரல், உலக்கை போன்ற மரக்
கருவிகளையும் வடிவமைத்து அவைகளை சமையலறையில் பயன்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் பல்வகையான
நெல் விளைந்தது. சோற்றோடு காய்கறி வகைகளையும் அதிகளவில் உண்டிருக்கின்றனர். மிளகும்
புளியும் உப்பும் உணவில் சேர்ந்திருக்கும். மாங்கனியைப் பிழிந்து சாறு எடுத்து, அதைப்
புளிக்க வைத்து அதைப் புளியாகப் பயன்படுத்துவது போன்று களாப்பழப் புளி, நாவற்பழப்புளி, துடரிப்பழம் (ஒருவகை
இலந்தைக் கனி – (Zizy Phus Rugosa), முதலிய பழங்களையும் பயன்படுத்தியுள்ளனர். கொம்மட்டி
மாதுளங்காயை அரிந்து, அதனுடன் மிளகின் பொடியைக் கலந்து கறிவேப்பிலை கூட்டிப் பசு வெண்ணெயில்
அதைப் பொரித்து விரும்பி உண்பார்கள். வடுமாங்காய் ஊறுகாய் கூட அக்காலத்தில் இருந்திருக்கிறது.
பலாப்பழம், இளநீர், வாழைப்பழம், நுங்கு, சேம்பிலைக்கறி, வள்ளிக்கிழங்கு, சுட்ட பனங்கிழங்கு
ஆகியவற்றையும் பண்டைத் தமிழர் விரும்பி உண்டனர்.
துணை நூற்பட்டியல்:
தமிழக வரலாறு
மக்களும் பண்பாடும், கே.கே. பிள்ளை, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை -
1974.
அகநானூறு,
ந.மு. வேங்கடசாமி, சை.சி.நூ. கழகம், சென்னை - 18, 1957.
பண்டைய தமிழ்
நாகரீகமும் பண்பாடும், தேவநேயபாவாணர், தமிழ்மண் பதிப்பகம், இராயப்பேட்டை, சென்னை -
1996.
அ.
தட்சிணாமூர்த்தி, (1994). தமிழர் நாகரிகமும் பண்பாடும், சென்னை: ஐந்திணைப்
பதிப்பகம்.
.
Subscribe to:
Posts (Atom)
காகத்தின் நுண்ணறிவு!
காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...

-
தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சித்தா வேதா மையம், நியூ ஜெர்சி, அமெரிக்கா, சாந்தம் உலக...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...