Sunday, July 25, 2010

யுக்தி

" என்னப்பா, பாலு எப்பப் பார்த்தாலும் இப்படி கடைசி நாள்தான் வந்து மின்சாரக் கட்டணம் கட்டுவியா? ஒரு நாலு நாள் முன்பாவது வந்து கட்டக் கூடாதா?"

மின்சாரக் கட்டண கவுண்டரில் பணம் வசூலிக்கும் கரிகாலன் என் பால்ய சிநேகிதன்.கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் பணத்தை அவனிடம் கொடுத்துவிட்டு வந்துவிட்டால், அவன் கட்டிவிட்டு ரசீதை என் வீட்டில் வந்து கொடுத்துவிடுவான்.என் வீடு தாண்டித்தான் அவன் வீட்டிற்கு செல்ல வேண்டும்.அந்த உரிமையில் தான் என்னை அப்படிக் கேட்டான்.

"என்னப்பா பண்றது, என்வேலை அப்படி. வியாபார விசயமா அலையறதே என் பொளப்பா போச்சு. அடிக்கடி வெளியூர் பயணம் வேற போறதனால சரியான நேரத்திற்கு வரமுடிவதில்லை".

'அதுவும் சரிதான்.சரி, சரி கொடு, நல்ல வேளை இன்னைக்கு கூட்டம் கொஞ்சம் கம்மியாத்தான் இருக்கு. அட, என்னப்பா உன்னோட மின்சாரக் கட்டிணம் இந்த முறை ரொம்ப கம்மியா இருக்கு? எப்பவும் 3000க்கும் மேலே வரும். இந்த முறை அதிசயமா 1000 ரூபாய் கனிசமா குறைஞ்சிருக்கு. குடும்பத்தோட வெளியூர் போயிடீங்களா', என்றான் ஆச்சரியமாக.

அட, இல்லப்பா, ஒரு சின்ன யோசனை தோணிச்சு. அத எடுத்து வுட்டேன் பாரு, கனிசமா பில் குறைஞ்சி போச்சு, என்றேன்.

'அட, அப்படி என்னப்பா யோசனை? சொல்லு, நானும் முயற்சி பன்றேன், என்றான்.'பெரிசா ஒண்ணுமில்லப்பா.எங்க வீட்டில தேவையில்லாத இடத்திலெல்லாம், லைட் எரிஞ்சிக்கிட்டே இருக்கும். லைட் போட்டா அணைக்கவே மாட்டாங்க. ஃபேன், ஏ.சி போட்டாலும் அப்படித்தான். அது பாட்டுக்கு ஆள் இல்லாத நேரத்துலக் கூட ஓடிக்கிட்டே இருக்கும். மோட்டார் போட்டா, தண்ணீர் நிரம்பி வழிந்து போன பிறகு தான் நிறுத்துவாங்க. தண்ணீர் வேறு வீணாகும்.

பிள்ளைங்ககிடேயும் என் மனைவிக்கிட்டேயும், பல முறை எடுத்துச் சொல்லியும், எந்த பயனும் இல்ல. இப்ப என்ன பண்ணினேன் தெரியுமா?

என் மனைவியைக் கூப்பிட்டு, போன மாச பில் தொகையான 3600 ரூபாயை, அவள் கையில் கொடுத்து, இந்த மாதம், நீ என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது. கரண்ட் பில்லை முடிந்த வரை சிக்கனம் பண்ணினா, இதில எவ்வளவு பணம் மீதி வருதோ அதை உன் சிறுவாட்டுல சேர்த்துக்கோ, ',என்று சொல்லி விட்டேன்.

அவ்வளவுதான், அவள் ரொம்ப சாமார்த்தியமா கரண்ட்ட பயன் படுத்த ஆரம்பிச்சுட்டா. ஏ.சி. யைக் கூட போட்ட 2 மணி நேரத்தில ஆஃப் பண்ணிட்டு, இந்த குளிர்ச்சியே ரொம்ப நேரத்துக்கு இருக்கும், ஃபேன் போட்டா போதும்ன்னு சொல்லறா. இதுதான் எங்க கரண்ட் பில் குறைந்த ரகசியம்', என்றேன்.

'ஆஹா, அருமையான யோசனைப்பா. நானும் இதையே முயற்சி பண்ணறேன்', என்றான் கரிகாலன்

1 comment: