Tuesday, April 5, 2011

காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - 6


”மனிதர்கள் தங்களுடைய மனதின் உள்ளார்ந்த தன்மைகளை மாற்றிக் கொள்வதன் மூலமாக, அவர்களுடைய வாழ்க்கையின் புறத்தன்மைகளை மாற்றிக் கொள்ள முடியும்” - வில்லியம் ஜேம்ஸ்.

அதாவது புற உலகம் என்பது நம்முடைய உள்மனத்தின் எதிர்வினையான பிரதிபலிப்பாகவே என்றென்றும் இருக்கிறது.

இதை உணர்ந்து கொள்ளும் போது சக மனிதர்களுடன் நம் பழக்கம் அன்புடையதாகவே இருக்கிறது.


சரி விசயத்திற்கு வருவோம். ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் குறிப்பிட்ட நேரமே செலவிட முடிந்தது. காரணம் அடுத்து நாங்கள் செல்ல வேண்டிய உத்தர கோசமங்கை கோவிலில் திருவாசகம் முற்றோதல் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. திருநெல்வேலியிலிருந்து 100 பெண்களும், ஆண்களும் வந்து திருவாசகம் முற்றிலும் ஓதுகிறார்கள். அவர்களுடன் நாங்களும் சேர்ந்து கொள்வதாக ஏற்பாடு. அதனால் விரைவாக வர வேண்டியதாகி விட்டது.



ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காலை 7 மணியளவில் கிளம்பி உத்தர கோச மங்கை 8.40 ம்ணியளவில் வந்து சேர்ந்துவிட்டோம்.



திரு உத்திரகோசமங்கை அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோவில், சேது வள நாட்டின் தலைநகரான இராமநாதபுரம் நகருக்கு தென்மேற்கே 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மங்களநாயகி அம்மன் சமேதராய் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோவில் மிகவும் பழமையும் , தொன்மையும் வாய்ந்தது. பாண்டி நாட்டு தலங்கள் 14 தோன்றும் முன்பே ஓர் இலந்தைத் தருவின் அடியில் சுயம்புவாக முளைத்த தூய மூர்த்தியாகிய திருக்கோவிலாகும்.



உத்தரம் என்றால் உபதேசம். கோசம் என்றால் ரகசியம். அதாவது உயர்ந்த தரமான வேதாகம ரக்சியத்தை தன்னில் பாதியாய் அமைந்துள்ள உமாதேவிக்கு உபதேசம் செய்த புண்ணிய தலமாகும்.

தாதாடு பூஞ்சோலை தத்தாய் நமையாளும்
மாதாடு பாகத்தன் வாழ் பதி என
கோதாட்டி பார்மேல் எல்லோரும் சிவபுரம் போற்
கொண்டாடும் உத்தரகோச மங்கை ஊர்


சிவபெருமானுக்கு சொந்த ஊரும் தங்கும் இடமும் பார்மேல் சிவபுரம் திரு உத்திரகோச மங்கையே என்று பாடுகிறார். காகபுஜண்ட மகரிஷிக்கு கௌதம முனிவரால் ஏற்பட்ட சாபம் விலகிட வழிபட்ட திருக்கோவிலாகும்

.சிவபுரம், தெட்சிண கைலாயம், ஆதி சிதம்பரம் என்னும் பல சிறப்பு பெயர்களும் கொண்ட இக்கோவில் மிகப் பிரம்மாண்டதாகவும், பழமை வாய்ந்ததாகவும் உள்ளது. விநாயகர் சந்நிதியும், சுப்பிரமணியர் சந்நிதியும் இடம் மாறி அமைக்கப்பட்டுள்ளது கோவில் வாசலில் ப்ரும்ம தீர்த்தம் அமைத்து பிரம்மா வழிபட்டதும் சேதகை என்று சொல்லக்கூடிய தாழம்பூவிற்கு சாப விமோசனம் செய்தமையால் இத்திருக் கோவிலில் மட்டும் சுவாமிக்கு தாழம்பூ சாத்துப்படி செய்யப்படுகிறது.

காலை நேர வழிபாடு மனதிற்கு மிக இதமாக இருந்தது. மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், மயன், மண்டோதரி, பானாசுரன், வேத வியாசர், மிருகிண்டு மகரிசி, பானாசுரன், போன்றவர்கள் வழிபட்ட சுயம்புலிங்கத்தைக் காண கண் கோடி வேண்டும்.

உலகத்திலேயே மிகச் சிறப்பு வாய்ந்த பச்சை மரகதத்தால் ஆன ஸ்ரீநடராஜர் திருக்கோவில் இங்கு உள்ளது. பொதுவாக பெரும்பாலான ஆலயங்களில் நடராஜர் சன்னதி, ஆலயத்திற்குள்ளேயே தனிச்சந்நிதியாகவே இருக்கும். ஆனால் திரு உத்திரகோசமங்கை ஆலயத்திலோ, ஒரு ஆலயத்திற்குள்ளேயே, மற்றொரு திருக்கோவிலாக கருவரை,அர்த்த மண்டபம், மஹா மண்டபம், பிரகாரம் விமானங்கள் உள்பட தனிக் கோவிலாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கு அருள்பாலிக்கும் 6 அடி உயரமுள்ள ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு சந்தனக் காப்பிட்டு, மார்கழி மாத திருவாதிரை தினத்திற்கு முந்தைய நாள் சந்தனக் காப்பு களையப் பெற்று அபிசேக வேளையில், பச்சை வண்ண மேனியாய் தரிசிக்கும் வாய்ப்பு காணக் கிடைக்காத பெரும் பேராகும்.

இவ்வாலய ஸ்ரீநடராஜப் பெருமான் நவரத்தினங்களில் ஒன்றான மரகதத்தால் ஆனதால் இத்தலத்திற்கு ரத்தின சபை எனவும் சிறப்புப் பெயருண்டு.சிவாலயங்கள் அனைத்திலும் பள்ளியறை பூசை சமயம் தனந்தோறும் பாடப்பட்டுவரும் ‘திருப்பொன்னூசல்’, மாணிக்கவாசாகப் பெருமானால், இந்த இடத்தில் தான் இயற்றி பாடப் பெற்ற சிறப்பையும் பெற்றது. ம்ணிவாசக்ப் பெருமானால் பாடல் பெற்ற இத்தலம், அவர்தம் திருவாசகத்தில் 38 இடங்களில் சிறப்புற புகழப்பட்டுள்ளது.

இத்தகைய பல்வேறு சிறப்புக்களையுடைய இக்கோவிலை சுற்றி வலம் வரும் போதே மனதில் ஒரு ஆழ்ந்த அமைதி இருந்தது அனைவரின் முகத்திலும் அது பிரதிபலிக்கவும் செய்தது!

காலை சிற்றுண்டி எங்களுக்கும், மூற்றோதல் செய்ய வந்த குழுவினருக்கும் ஏற்பாடாகி இருந்தது. காலை சிற்றுண்டியை இனிதே முடித்து அனைவரும் முற்றோதல் நிகழ்ச்சிக்குத் தயாரானோம். இது மிக அருமையான ஒரு அனுபவமாகவும் அமைந்து போனது எங்களுக்கு........



400 பக்கங்கள் கொண்ட , மிக எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட திருவாசக உரையின் ஆசிரியரான, ‘பெரிய புராணப் பேரொளி’ எனும் பட்டம் பெற்ற ஐயா தங்க விசுவநாதன் அவர்களின் தலைமையில் திருவாசக முற்றோதல் நிகழ்ந்தது சாலப் பொருத்தமாகவே இருந்தது.



சராசரியாக ஒரு 150 பெண்களும், 50 முதல் 60 ஆண்களும் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை போன்று ஒன்று கூடி திருவாசகம், ஐயன் மனிவாசகப் பெருமான் பாடிய அதே தலத்தில் பாடியது ஒரு ஆன்ந்த எல்லைக்கே கொண்டு சென்றது எனலாம். ஆங்கிலத்தில் ‘Ecstasy', என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம் உணர்வுப்பூர்வமாக அறிந்தேன் என்றால் அது மிகையாகாது.



ஆரம்பிக்கும் முன் சிவதீக்கை வைத்திருந்த அன்பர்கள் அனைவரும் அங்கேயே ஆண்டவன் திரு முன் சிவபூசை செய்து முடித்து பின்பு முற்றோதல் ஆரம்பித்தனர். இன்று கல்லூரி செல்லும் இளைஞர்கள் பெரும்பாலும், நாகரீகமாக உடை உடுத்தி அலங்காரம் செய்து கொண்டு சினிமா, பொழுது போக்கு அமசங்கள் என்று அலைவதைத்தான் அதிகமாகக் காணமுடிகிறது. இதற்கு மாறாக, பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனுக்கு இந்த அளவிற்கு பக்தி வருவது சாத்தியமா என்று ஆச்சரியப் படும் வகையில் ஒரு இளைஞன், பெயர் மணிகண்டன் என்று
நினைவு, சிவ பூசை செய்வதோடல்லாமல், கையில் சிவலிங்கத்தை பெரிதாக பச்சை குத்திக் கொண்டு, அனைவருக்கும் ஓடி ஓடி உதவி செய்து கொண்டு........கண் கொள்ளா காட்சிதான்.



காலை 9.30 மணியளவில் ஆரம்பித்த முற்றோதல் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இடையில் , 12.30 மணியளவில், ஸ்படிக லிங்காபிசேகம் நடை பெறப் போவதாக அறிந்து நாங்கள் அந்த திருக்காட்சியை நாடி எழுந்து விட்டோம். ஆனால் முற்றோதல் குழுவினர் மட்டும் கருமமே கண்ணாயினராக விடாமல் திருவாசகம் ஓதிக் கொண்டிருந்தார்கள்.

அபிசேகம் முடிந்து திரும்ப வந்து முற்றோதலில் கலந்து கொண்டோம். இருந்தாலும் முழுவதும் முடிவதற்கு நீண்ட நேரம் ஆன படியால் எங்கள் பயணம் தொடர நாங்கள் முற்றோதலை முழுவதும் முடிக்க இயல்வில்லையே என்ற குறை இருக்கத்தான் செய்தது..............

அடுத்து நாங்கள் செல்ல வேண்டியது மாணிக்கவாசகர் அவதரித்த தலமான திருவாதவூர். செல்லும் வழியில் திருப்பூவணநாதரை தரிசித்துவிட்டுச் செல்ல வேண்டும். மாலை நான்கு மணியளவில் திரு உத்தரகோசமங்கையிலிருந்து கிளம்பினோம்.



திருப்பூவணம், வைகை ஆற்றின் தென்கரையில் மதுரை - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.



திருப்பூவணநாதர் திருக்கோவில், வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள மிகப்பழமையான பாடல் பெற்ற தலமாகும்.திருஞானசம்பந்தப் பெருமான் திருப்பூவணநாதரை வழிபடும் பொருட்டு, அம்பாளின் தபசு செய்த இடமான ஆடித்தபசு மண்டபத்திலிருந்து வடகரையிலுள்ள திருப்பூவண நாதரை வணங்கி வழிபடும் போது ஆற்று மணல்களெல்லாம் சிவலிங்கமாகக் காட்சி கொடுக்க திருஞானசம்பந்தரோ செய்வதறியாது அங்கிருந்தே வழிபட சிவபெருமான் அருளால் நந்தியெம்பெருமான் தலை சாய்த்து ஐயனின் காட்சி கிடைக்க அருள் புரிகிறார்.

சிவலிங்கத்திற்கு வலப்புறம் அம்பாள் சந்நதியும் எதிர்புறம் தீர்த்தமும் உள்ளன. சுயம்புலிங்கமான பூவணநாதர் புட்பவணநாதர் என்றும் அம்மன் சௌந்தரநாயகி, அன்னபூரணி, மின்னம்மை என்ற திருப்பெயருடன் அருள்புரிகின்றனர். நேரம் மிகக் குறைவாக இருந்த காரணத்தினால் வெகு சீக்கிரமே அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.

திருப்பூவணநாதரின் திவ்ய தரிசனத்திற்குப் பிறகு மனநிறைவுடன் கிளம்பி, இரவு 8 மணியளவில் திருவாதவூர் வந்து சேர்ந்தோம். அங்கு எங்களுக்காக அவ்வூர் மக்கள் பல்ரும், தேவார ஓதுவார்களும் காத்துக் கொண்டிருந்தனர்.


மாணிக்கவாசகப் பெருமான் அவதரித்த திருத்தலம் என்ற உணர்வே மெய்சிலிர்க்கச் செய்தது. திருவாசகம் எனும் தேனை வழங்கிய மணிவாசகப் பெருமான் ஒரு மிகச் சிறந்த ஞானாசிரியர், தத்துவப் பேராசான், சிவஞானச் செல்வர் என்று இன்னும் பலவாறு போற்றிப் புகழப்படுபவர். சிந்தைக்கினிய, செவிக்கினிய பாடல்கள் மூலம் கல் மனமும் கரையச் செய்து கடவுளுக்கும் உயிர்க்கும் உறவுப்பாலம் அமைத்தவர்.

நமச்சிவாய வாழ்க ! நாதன் தாள் வாழ்க !
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க !
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க !
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க !


மணிவாசகப் பெருமானின் அவதரிப்புத்தலமான திருவாதவூர், செந்தமிழ்ப் பாண்டி நாட்டின் தலைநகரமாகிய மதுரையம்பதிக்குப் பதினைந்து கல் தொலைவில் அமைந்துள்ளது. இவருடைய தாய் சிவஞானவதி அம்மையார் மற்றும் தந்தையார் ஆதிசைவ மரபினரான சம்புபாதசிருதர் ஆவர்.

கல்வி, கேள்விகளில் மிகச் சிறந்து விளங்கிய மாணிக்கவாசகர் தம் பதினாறு வயதிற்குள் எல்லா நூல்களிலும் வல்லவராக சிறந்து விளங்கியதைக் கண்ட பாண்டிய மன்னன் அரிமர்த்தனன் அவரைத் தன் முதலமைச்சராக்கி, ‘தென்னவன் பிரம்மராயன்’ என்ற சிறப்புப் பட்டமும் வழங்கிச் சிறப்பித்தான். ஆனால் அவர்தம் மனமோ, மாதொரு பாகன்பால் மட்டில்லாப் பேரன்பு பூண்டொழுகியது.

ஐயா தங்கவிசுவநாதன் அவர்களின், திருப்பெருந்துறை சொற்பொழிவு நினைவில் வந்தது. அடியார் துன்பம் பொறாத ஆலவாய் அண்ணல், நரிகளைப் பரியாக்கித், தேவர்களைப் பாகர்களாக்கித் தாம் குதிரை வணிகரைப் போலப் பாய் பரிமேல் அமர்ந்து குதிரைப் படைகளுடன் மதுரை வந்து பாண்டியனிடம் ஒப்படைத்த வரலாற்றை அழகுற விளக்கினார்.


ஆண்டவனை அடையும் ஒரே வழி அவன் மீது மாறாத ஆழ்ந்த அன்பு ஒன்றேதான், என அவர் எளிமையாக விளக்கிய பாங்கு அனைவரையும் ஈர்த்தது. ஆம் பக்தி என்பதற்கு எத்தனையோ தத்துவங்களும், விளக்கங்களும், வியாக்கியானங்களும் கூறினாலும், அவையெல்லாம் ஆன்றோர்களும், சான்றோர்களும் மட்டுமே கடைப்பிடிக்கக் கூடியதாகவே உள்ளது. ஆனால் சாமான்யர்கள் ஆண்டவன் மீது பக்தி செலுத்த வேண்டுமானால், எங்கனம் அது சாத்தியம் ? அதைத்தான் ஐயா அவர்கள் எளிதாக புரியும் வண்ணம், மாணிக்கவாசகப் பெருமான் ஆண்டவன் மீது கொண்ட மாறாத பக்தி அவரை ஆண்டவனை நோக்கி அடி எடுத்து வைக்க வைத்தது. அவர் ஆழ்ந்த பக்தி என்ற அன்புடன் ஒரு அடி எடுத்து வைத்தால் ஆண்டவன் எட்டு அடி எடுத்து வைப்பானாம். அப்படித்தான் கைலாயத்திலிருந்து வந்த சிவனாரும், மதுரையிலிருந்து வந்த மனிவாசகரும் ஒன்றாகச் சந்தித்தனர். அந்த ஆழ்ந்த பக்தி ஒன்று சேர்த்தது.

கண்ணுக்குத் தெரிவது பருப்பொருள். நுண்மையும் பருப்பொருளும் சேராது. நுண் உடம்பு, ஒளி உடம்பு கண்ணுக்குத் தெரியும், ஆனால் கையால் ஸ்பரிசிக்க முடியாது. மணிவாசக்ப் பெருமானுக்கு மானுடமாக வந்து ஒளி செய்தார் தன்னையே ஒளிப்பொருளாக ஆக்கினார்.மணிவாசகப் பெருமானின் அன்பை நுகரும் பொருட்டேதான், இமய மலையிலிருந்து ஓடோடி வந்தாராம் அந்த சிவ பெருமான் !
இதே அன்புதான், காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனி வழங்கச் செய்தது. அதன் மூலம் அவரை ஆட்கொண்டது...ஆக அன்பில்லாமல் இன்பம் வராது...அது ஆண்டவனே ஆனாலும். அன்பு இல்லாது வந்த இன்பமும் நிலைக்காது !அதாவது அன்பு எனும் அந்த மொழி ஒரு மௌன மொழியாம். தந்தியில்லாத கம்பியைப் போன்றது, உள்ளத்து உணர்வுகள் !
மானுட ஆக்கை என்பது இறைவன் கொடுத்தது. அதைத் தன்னைப் போல ஒளி வடிவாக, பேரருள் வடிவாக மாற்றுவதற்காகவே படைக்கப்பட்டது. ஆண்டவனின் திருவருளை எண்ணி வியந்து 561,பாடல்கள் பாடி தம் அன்பை வெளிப்படுத்தினார் மாணிக்க வாசகர்.

அவருடைய பிறந்த ஊரில் அவருக்கு கோவில் சமீப காலங்களில் எழுப்பப்பட்டுள்ளது.இந்த அருமையான தலத்தில் மனமும், உணர்வும் ஒன்றுபட, அனைவரும் மாணிக்கவாசகரையும் வணங்கி வழிபட்டு, அங்கேயே எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு உணவை உண்டு சுவைத்து, அவர்களுக்கு நன்றி பாராட்டிவிட்டு, காவிரிக்கரை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தோம். இரவு 9 மணியளவில்தான் அங்கிருந்து கிளம்பினோம்.வழியில் ஆண்டவனின் அருள் வடிவத்தை தியானித்தவாறு ஊர் வந்து சேர்ந்தோம்!.

தொடரும்.

No comments:

Post a Comment