Wednesday, January 25, 2012

தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா…?

பவள சங்கரி

அன்பு நண்பர்களே,

இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!

நம் இந்தியத் திரு நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரையும் ஈந்து, தம் சந்ததியினர் சுதந்திரக் காற்றைச் சுகமாக சுவாசித்து நல் வாழ்வு வாழ அரும் பெரும் தியாகங்கள் செய்த நல் உள்ளங்கள் எத்தனையோ! அவர்களை இந்நன்னாளில் நினைவு கூர்ந்து, நன்றி பாராட்டுவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். அந்த வகையில் ஓடியாடி விளையாடி, உல்லாசமாக இருக்கக் கூடிய பதின்மப் பருவத்தில் , தாய்த்திரு நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாக , சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு , ஆங்கிலேயர்களால், நரக வேதனையை அனுபவித்ததோடு, அவ்வினிய பதின்மப் பருவத்திலேயே தம் இன்னுயிரையும் ஈந்த உத்தமப் பிறவியாம் தில்லையாடி வள்ளியம்மையைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதில் ஆறுதல் அடையலாம் அல்லவா?

தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம்! .. (சுதந்திரப் பயிர்)
பஞ்சமும் நோயும் நின் மெய்யடி யார்க்கோ ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ ?
சுதந்திர தாகம்)
விண்ணில் இரவிதனை விட்டுவிட்டு எவரும்போய்
மின்மினி கொள்வாரோ ? ….
மண்ணில் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை இழப்பாரோ ?
(சுதந்திரப் பெருமை)

மகாகவி பாரதியார்

தில்லையாடி வள்ளியம்மை – (1898 – 1914)

ஒருவர் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்பது சாதனை அல்ல, வாழ்ந்த காலத்தில் என்ன சாதித்தார் என்பதே சரித்திரம் ஆகிறது. அந்த வகையில் தான் வாழ்ந்த மிகக் குறைந்த 16 ஆண்டுகால வாழ்க்கையில் , நம் நாட்டை அடிமைத்தளையிட்டு வைத்திருந்த ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடி, தம் இன்னுயிர் நீத்த முதல் விடுதலைப் போராளி, வீரச்சுடர் வள்ளியம்மை என்கிற வனிதாமணி ஒரு தமிழ்ப்பெண்.

நஞ்சை புகழ் தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி என்ற கிராமத்தில் முனுசாமி முதலியார் மற்றும் மங்களத்தம்மாள் தம்பதியருக்கு 1898ஆம் ஆண்டில் பிறந்தவர் இவ்வீராங்கனை வள்ளியம்மை.

தில்லையாடியில் நெசவுத் தொழில் செய்து வாழ்ந்து வந்த முனுசாமி, ஆங்கிலேய பிரிட்டிஷ் ஆட்சியில் ஆலைத்துணி இறக்குமதியால், நெசவுத்தொழில் நலிவடைந்த நிலையில், ஆங்கிலேயர்களின் கைக்கூலிகளாக கங்காணியர் தமிழ் நாட்டுத் தொழிலாளர்களை தென் ஆப்ரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தனர். அப்படி ஒரு கூலித் தொழிலாளியாக அனுப்பப்பட்டவர்தான் முனுசாமி. அங்கு ஜோகன்ஸ்பர்க் என்னும் ஊரில் ஒரு சிறிய வியாபாரத்தைத் தொடங்கியவர். அங்குதான் வள்ளியம்மை பிறந்தார்.

பல இன்பக்கனவுகளுடன் நாடு விட்டு நாடு சென்ற இந்தியத் தொழிலாளர்கள் , ஆங்கிலேயர்களால் அடிமைகளாக நடத்தப்பட்டனர். ஒவ்வொரு இந்தியரும் மூன்று பவுன் தலைவரி கட்ட வேண்டும். அவர்கள் அங்கு பல தடைகளுடன் வாழ வேண்டியிருந்தது. அனுமதியின்றி குறிப்பிட்ட பகுதிகளுக்குள் நுழைய முடியாது. வாக்குரிமை கொடுக்கப்படவில்லை. வெள்ளையர்களுடன் சமமாக அமர முடியாது, அவர்களுடன் பள்ளியில் கூட நம் குழந்தைகள் படிக்க முடியாது. இந்தியர்கள் வாழும் இடங்கள் சுகாதாரமற்ற சேரிகளாகவே காட்சியளித்தன.

வெள்ளையரின் அடக்குமுறையாலும், அதிகாரத்தாலும் இந்தியர்கள் மட்டுமன்றி அம்மண்ணின் மைந்தர்களான நீக்ரோ மக்களும் கடும் துன்பத்திற்கு ஆளாவதைக் கண்ட இளம் பெண்ணான வள்ளியம்மை உள்ளம் நொந்து போனார். இந்தச் சூழலில்தான் 1893 ஆம் ஆண்டு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவிற்கு வந்தவர், 22 ஆண்டுகள் (இடையில் 2 ஆண்டுகள் நீங்கலாக) அங்கேயே தங்கிவிட்டார். அங்கே இந்தியர்களுக்கும், நீக்ரோக்களுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு மனம் பதறி, அநீதியை எதிர்த்துப் போரிட்டு, அவர்களின் உரிமைகளை மீட்டுத் தரவும் துணிந்தார்.

தென்னாப்பிரிக்காவின் கிறித்துவ மதச்சடங்குபடி திருமணப்பதிவு புத்தகத்தில் பதிவு செய்யப்படாத திருமணங்கள் செல்லுபடியாகாது என்று 1913ல் மார்ச் மாதம் 14ந் தேதி , கேப் உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு இந்து மக்களை மிகவும் பாதித்தது. அங்குள்ள இந்திய மக்கள் தங்கள் மத வழக்கப்படி செய்து கொண்ட திருமணங்கள் செல்லாது என்பதோடு, அவர்களின் குழந்தைகளுக்கும் சட்டப்படியான வாரிசு உரிமையும் இல்லை என்றாயிற்று. இதனால் இந்திய வம்சாவளியினர் கிளர்ச்சியில் இறங்க வேண்டியதாயிற்று. அச்சமயத்தில் காந்தியடிகள், ஜோகன்ஸ்பர்கில், 3000 மக்கள் திரண்டிருந்த பெருங்கூட்டத்தில் அகிம்சை முறையிலான போராட்டத்தை நடத்தினார்.

இந்தியர்கள் சார்பில் நடத்தப்பட்ட அனைத்துப் பொதுக்கூட்டங்களுக்கும் தன் தாயாருடன் சிறுமி வள்ளியம்மையும் சென்று வந்து கொண்டிருந்தார். காந்தியடிகளின் சொற்பொழிவுகள் அச்சிறுமியின் மனதில் மிக எளிதாக விடுதலைக் கனலை மூட்டி விட்டன. இந்தியர்கள் புதிதாக வந்து குடியேறுவதைத் தடுக்கும் பொருட்டு டிரான்ஸ்வாலுக்குள் குடியிருந்த ஒவ்வொரு இந்தியரின் விரல் ரேகையை பதிவு செய்ததைக் கண்ட வள்ளியம்மையின் தன்மான உணர்வு துடித்தது. அதுவே, அச்சிறுமியை காந்தியடிகளின் அறப்போரில் தன்னையும் இணைத்துக் கொள்ளத் தூண்டியது, அந்த 16 வயதேயான இளம் மங்கைக்கு!

இந்தப் போராட்டத்தில் முதன் முறையாக காந்தியடிகள் பெண்களையும் சேர்த்துக் கொண்டார். காரணம் இவ்வன்கொடுமைச் சட்டத்தினால் நேரடியாக, அதிகளவில் பாதிக்கக் கூடியவர்கள் பெண்களும், குழந்தைகளும்தான். பெற்றவர்களின் தடையையும் மீறி இப்போராட்டத்தில் வள்ளியம்மை கலந்து கொண்டார்.

1913 ல் ஜோகன்ஸ்பர்க் நகரில், அக்டோபர் முதல் வாரத்தில், வெள்ளையர்களின் அடக்கு முறைகளை எதிர்த்து அன்னை கஸ்தூரிபாய் தலைமையில் , பெண்களின் சத்தியாகிரகப் போர்ப்படை திரண்டது. இந்த அணியின் முதல் வரிசையில் கஸ்தூரிபாய்க்கு இணையாக வள்ளியம்மையும் அவருடைய தாயாரும் நின்றனர். “ வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்தின் தளைகளைத் தகர்த்தெறிவோம் வாருங்கள் “ என்ற அவருடைய முழக்கம் ஏனைய சத்யாகிரகிகளையும் எழுச்சியுறச் செய்தது.

“ எங்கள் தேசத்தின் கதிரவனுக்கு அஸ்தமனம் என்பது எப்போதுமில்லை” என்ற இறுமாப்புடன் மார்தட்டிக் கொண்டிருந்த காலனி ஆதிக்கம் ஆட்டம் காணத்தொடங்கியதும் அப்போதுதான். வள்ளியம்மையின் சங்கநாத முழக்கத்துடன், ஊர்வலம் ஜோகன்ஸ்பர்க் நகரிலிருந்து நியூகாசில் நகருக்கு முன்னேறியது. வழியில் சார்லஸ் டவுன், டண்டி,லேடிமிஸ்த், மாரிட்ஸ் பர்க், டர்பன் போன்ற முக்கியமான இடங்களில் தங்கிச் சென்ற அனைவருக்கும், சிறுமி வள்ளியம்மை அனைத்து சேவைகளும் ஓடியாடி செய்தார்.

காந்தியடிகளின் முழக்கத்தைக் கேட்ட நியூகாசில் நகர நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளிகள் அவர் சொல்படி வேலை நிறுத்தமும் செய்த தமிழர்களைக் கண்டு மேலும் உற்சாகமானார் வள்ளியம்மை. தடையை மீறி டிரான்ஸ்வால் நகருக்குள் நுழைந்த பெண்கள் அணியினர் கைது செய்யப்பட்டு, மாரிட்ஸ்பர்க் சிறையில் அடைக்கப்பட்டனர். மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சுகாதாரமற்ற சூழலும், உணவும் அவர்தம் உடல்நிலையை பெரிதும் பாதித்தது. வயிற்று வலி, காய்ச்சலில் அவதிப்பட்டார். அத்தோடு போலீசாரின் கடுமையான சித்ரவதைக்கும் ஆளானார். அபராதத்தொகை கட்டிவிட்டுச் செல்லும்படிச் சொன்ன அதிகாரிகளின் ஆணைக்குக் கட்டுப்படாமல், அது சத்தியாகிரகப் போராளிக்கு இழுக்கு என்ற காரணம் காட்டி, சிறையை விட்டு வெளியில் போகாமல், அங்கேயே இருந்ததால், அவர் உடல்நலம் மேலும் பாதிக்கப்பட , மருத்துவர்களின் எச்சரிக்கையினால், 1914 பிப்ரவரி 14ஆம் நாள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

மனித உரிமைக்காக, தென்னாப்பிரிக்காவில், காந்தியடிகளோடு இணைந்து பாடுபட்டவர், அண்ணலின் மனம் கவர்ந்த, தில்லையாடி வள்ளியம்மை. இந்தியருக்குத் தேசியமும் இல்லை…தேசியக் கொடியும் இல்லையென கொக்கரித்த ஒரு ஆங்கிலேயனின் ஆணவப் பேச்சைச் சகிக்காத வள்ளியம்மை, தான் உடுத்தியிருந்த சேலையின் முந்தானையை அக்கணமே கிழித்து, அவன் முகத்திற்கு நேரே, இது தான் எங்கள் தேசியக் கொடி என்று துணிந்து கூறினார் .கிழித்துக் காட்டிய அந்த முந்தானையில் இருந்த, காவி, வெள்ளை, பச்சை வர்ணங்கள் தான் மூவர்ணக் கொடியானது என்பது குறிப்பிடத்தக்கது.

16 வயதே நிரம்பிய, இறப்பின் தருவாயில், உயிர் பிரியும் முன்பு கூட, சிறைச்செல்ல சித்தமாயிருந்த உத்தமி வள்ளியம்மையைப் பற்றி அண்ணல் தன் சுய சரிதையில், மனம் நெகிழ்ந்து எழுதியுள்ளார். “ சிறை சென்றதற்கு வருந்துகிறாயா?” என்று கேட்ட அண்ணலின் கேள்விக்கு, தம் தளிர்க்கரங்களைக் கூப்பி வணங்கி, “ வருத்தமெல்லாம் இல்லை. இப்போது தாங்கள் கட்டளையிட்டாலும், போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை செல்லச் சித்தமாயிருக்கிறேன்” என்றாராம். அண்ணல், சிறை சென்றால் உயிர் பிரிந்து விடுமே?” என்றதற்கு, “ மரணத்தை நான் பொருட்படுத்தவில்லை. தாய்த்திருநாட்டிற்காக உயிரைக் கொடுக்க விரும்பாதவர்கள் யார்?” என்றார்.

கிழிந்த நாராக , ஒரு சமுக்காளத்தில் சுற்றப்பட்டு வீட்டில் கொண்டுவந்து கிடத்தப்பட்ட சிறுமி வள்ளியம்மையின் உடல் நிலை மேலும் மோசமடைந்து, 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் நாள், அவர் பிறந்த அதே நாளில், இறைவனடி சேர்ந்தார்.

1915-ம் வருடம், ஏப்ரல் மாதம், 30-ம் தேதி. தரங்கம்பாடியிலிருந்து புறப்பட்ட இரண்டு மாட்டு வண்டிகள், தஞ்சை மாவட்டத்தில் உள்ள தில்லையாடியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன. முதல் வண்டியில் மகாத்மா காந்தியும், அன்னை கஸ்தூரிபாயும் அமர்ந்திருக்கிறார்கள்.வண்டிகள் தில்லையாடி எல்லையை மிதித்த போது உணர்ச்சிவசப்பட்ட மகாத்மா கண் கலங்கி, வண்டியை விட்டு இறங்கி, கீழே குனிந்து இரு கரங்களையும் குவித்து மண்ணை அள்ளி எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டார்.

என்ன புண்ணியம் செய்து விட்டது அந்த மண்? அது சாதாரண மண் அல்ல; காந்திஜி தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய சத்தியாக்கிரகப் போராட்டத்தில் உயிர் நீத்த வள்ளியம்மை, நாகப்பன், நாராயணசாமி ஆகிய தியாகச் செம்மல்களைத் தந்த வீர மண் அது. தென்னாப்பிரிக்க அரசாங்கம் சத்தியாக்கிரகிகளுக்குக் கொடுத்த தொல்லைகள் மிக மோசமானவை. அந்தத் தொல்லைகளைக் கண்டு கொஞ்சமும் அஞ்சாமல் லட்சியம் ஒன்றையே உயிராகக் கொண்டு சிறை சென்ற வீரப் பெண்மணி, தில்லையாடி வள்ளியம்மை.

இந்திய விடுதலைக்கு ஆணி வேரான உரிமைப் போர் தென்னாப்பிரிக்கப்போராட்டம்…. இதில் தன் இன்னுயிரையே அர்ப்பணித்த தில்லையாடி
வள்ளியம்மையின் நினைவுச் சின்னத்தை தென்னாப்பிரிக்காவில், 1914ம் ஆண்டு ஜூலைத் திங்கள் 15ம் நாள் காந்தியடிகள் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசு தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தைப் போற்றும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடி கிராமத்தில் தில்லையாடி வள்ளியம்மையின் நினைவு மண்டபம் அமைத்துள்ளது. அண்ணல் காந்தியடிகள் தில்லையாடிக்கு 1915 ஆம் ஆண்டு, சனவரித் திங்கள் 5 ஆம் நாளன்று வருகை தந்து அமர்ந்த இடத்தில் நினைவுத் தூண் கட்டப்பட்டுள்ளது. அதன் எதிரில்தான் தில்லையாடி வள்ளியம்மை நினைவுமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு தில்லையாடி வள்ளியம்மை அவர்களின் மார்பளவு சிலை ஒன்று முன் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பொது நூலகத்துறை மூலம் ஒரு நூலகமும் செயல்பட்டு வருகின்றது.கைத்தறி நெசவாளர் சங்கம் சென்னையில் அமைத்த விற்பனை நிலையத்திற்கு, ‘தில்லையாடி வள்ளியம்மை மாளிகை’ என்று அவர் பெயரைச் சூட்டி கௌரவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் வெள்ளையனின் துப்பாக்கி முன்பாக துணிச்சலுடன் எதிர்நின்று அண்ணல் காந்தியடிகளைக் காப்பாற்றிய வள்ளியம்மை _ இருந்திருந்தால் ஒரு வேளை கோட்ஸே சுட்டுக் கொல்லும்போது _ குறுக்கே பாய்ந்து காப்பாற்றியிருப்பாரோ என்னவோ.. அதற்குள் அவ்வளவு சிறிய வயதில் அந்த தியாகச் சுடரை இயற்கை அழைத்துக் கொண்டதுதான் கொடுமை.

இப்படி எத்தனை வள்ளியம்மைகள், நம் சுதந்திரப் போராட்டத்தில் தங்கள், இன்னுயிரையும் ஈந்தார்கள் என்பதை நம் வரலாறு கூறும்.

படங்களுக்கு நன்றி :

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88

8 comments:

  1. பகிர்வுக்கு நன்றி.
    தாங்களுக்கும் எனதினிய குடியரசு தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ரொம்ப அருமையான கட்டுரைங்க. படிக்கும்போதே மனதில், நமக்குக் கிடைத்த சுதந்திரம் எத்தனை இன்னல்களை தாண்டி நமக்குக் கிடைத்தது என்பதை உணர்த்தியது. கொடி தோன்றிய கதை அற்புதம். தில்லையாடி வள்ளியம்மைபற்றி இவ்வளவு தெளிவாக சொன்னமைக்கு மிக்கநன்றி
    நித்திலம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்....!!!

    ReplyDelete
  4. ஆகா! நெகிழ்ச்சியூட்டும் பதிவு. காரைக்கால் துவக்கப் பள்ளி நாட்களில் இவரைப் பற்றி லேசாகப் படித்ததோடு சரி. எந்த விவரமும் தெரியாமல் இருந்தேன். பதிவுக்கு மிக்க நன்றிங்க. குடியரசு என்பதற்கே பொருளழிந்து போய்க்கொண்டிருக்கும் இந்த நாளில் இவர் போன்றவர்களின் தியாகங்களை மனதில் ஒரு சில கணங்களாவது ஏற்ற முடிகிறது உங்கள் தயவால்.

    ReplyDelete
  5. நன்றி திரு அப்பாதுரை ஐயா. தங்களுடைய ஊக்கம் என் பக்கியம். மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  6. நன்றி திரு நாஞ்சில் மனோ.

    ReplyDelete
  7. நன்றாகச் சொன்னீர்கள் புவனேஸ்வரி இராமநாதன். இது போன்று வரலாறுகளைப் படிக்குந்தோறும் நாம் பெற்ற சுதந்திரத்தின் அருமை புரிந்து, அதைக் காப்பாற்றிக் கொள்ள நம்மால் ஆன அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற வேகமும் ஏற்படுகிறது. எத்தனை, எத்தனை உயிர்த்தியாகங்கள்!

    நன்றி.

    ReplyDelete
  8. அன்பின் திரு நண்டு@நொரண்டு,

    தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே. மன்னிக்கவும், காலந்தாழ்ந்த நன்றி மடலுக்கு, அனைவருக்கும். வெளியூர் பயணம் சென்ற்தால்.....

    ReplyDelete