Sunday, May 13, 2012

உம் கருவறையே எம் கல்லறையாய்!




ஒரு கூட்டுக் கிளியாக
ஒரு சோலை மலராக

பழமுதிர்ச்சோலைதனில் குளுமையாய்
கூடிக்களித்திருந்த காலம்

ராகம் சரியானதுதான்
தாளம்தான் தப்பானது.

பிரியாத வரம் வேண்டி
பொய்யாக கவி பாடினேன்

சலியாத மனம் நாடி
சத்தியமாய் தவமிருந்தேன்

ப்ழியும் பாவமும் பரிவோடு
முழியும் நகையும் கனிவோடு

வெட்கமும் துக்கமும் துணையாக
வெறியோடு கதைபல படித்தேன்

பரிபாடலும் சங்கப்பாடலும் சங்கமிக்கும்
கலையும் கருத்தாய் நாடகமாடினேன்

சொற்சுவையும் பொருட்சுவையும் சேர்த்தே
சமைத்தேன் சத்தான இலக்கியத்தை

தீதும் நன்றும் பிறர்தர வாராது
மோதும் முடிவும் முனைந்தேன்

கல்லைக் கனியாக்கும் சொல்லை
பல்லைக் காட்டிப் பரிசளித்தேன்

பரிசும் பாராட்டும் தாராளமாய்
பகிர்ந்தளித்தேன் பசப்பு வார்த்தைகளினூடே

பட்டையும் பகட்டையும் பாந்தமாய்
பரப்பினேன் பாசமெனும் பகடையாய்

கருவும் உருவும் ஈந்தாய்
வேரும் விழுதும் விருட்சமாய்

தாலாட்டும் தனிப்பாட்டும் அளித்தேன்
தங்கமான என் செல்லச்சிட்டுக்கு

பாசமும் நேசமும் பன்மடங்காய்
பகிராமல் பெருகியது பதவிசாய்

சிறகுவிரித்து கூட்டைப் பிரிந்து
இடம்பெயர்வின் இனிய தருணம்

சுயமும் சுகமும் சுவையாய்
படர்ந்த விருட்சமே உறவாய்

பாசப்பங்கீட்டில் நேசவெளியீட்டில்
துரும்பாய் சுருங்கிய துரோகம்

சுருங்கிய சாபமும் வரமாய்
சுவைத்தே வாழ்த்திய உத்தமம்

எம் உயிருக்கு மூலமாய்
உம் உயிராய் எமைக்காத்த

ஓருயிராய் உள்ளொளி பெருக்கி
காரிருளையும் கனிவாய் ஏற்றாய்

தனிமரமாய் வாடி நின்றாலும்
கனிமரமாய் பாடி வாழ்த்துகிறாய்

கைம்மாறு கருதா கடப்பாடு
கட்டவிழ்ந்த கருணை வெளிப்பாடு

தாலாட்டும் சோறூட்டும் தொடர்ந்தே
மடியும் மனமும் ஏந்தியே

காத்து நிற்கும் வரமாய்
பூத்து நிற்கும் உயிரே

எமை மீண்டும் அனுமதிப்பாயா
உம் கருவறைக்குள்?




1 comment:

  1. அம்மா...சொல்லும்ப்போதே உருகும் அன்பு....சொல்லிக்கொண்டே இருக்கலாம் !

    ReplyDelete