Thursday, February 28, 2013

தடையைத் தகர்த்தெரிந்த தன்னம்பிக்கை


பவள சங்கரி



உழைக்கும் கரங்கள்!


சென்னை அண்ணாநகர் பக்கம் செல்பவர்கள் காலை எட்டு மணி தொடங்கி மாலை ஆறு மணி வரை ஒரு 58 வயது பெண்மணி, முகம் நிறைய மஞ்சளுடன், புன்னகையும், நெற்றி நிறைய குங்குமமும் கண்கள் நிறைய கனிவும், உள்ளம் நிறைய அமைதியும் அணிந்து கொண்டு தலையில் பெரும் சலவைத் துணி சுமையுடன் நடமாடிக் கொண்டிருப்பதைக காணலாம். இவர் பெயர் நாகம்மா. தன்னம்பிக்கை என்ற ஒரு ஆயுதம் கையில் இருந்தால் எத்தகைய தடையையும் முறியடித்து வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதற்கு ஒரு சிறந்த முன்னுதாரணம்தான் இந்த நாகம்மா.. ஆம். தன்னுடைய 14 வயதில் அடிக்கடி உடல் நலிவுற்று அரசு மருத்துவமனையில் பலமுறை தங்கி மருத்துவம் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. படிப்பும் பாதியிலேயே நிறுத்த வேண்டியிருந்திருக்கிறது. பல பரிசோதனைகளுக்குப் பிறகு, நாகம்மாவிற்கு இருதயத்தில் ஓட்டை இருப்பதாகவும், அவர் கடுமையான பணிகளோ, அல்லது திருமண வாழ்க்கையையோ மேற்கொண்டால் உயிருக்கே ஆபத்து நேரலாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். ஆனாலும் முடங்கிப்போய் விடவில்லை நாகம்மா. தன்னால் முடிந்த வேலைகளை செய்து கொண்டுதான் இருந்திருக்கிறார். இவர்  சலவைத் தொழிலாளி குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால் அதற்குரிய தன்னால் ஆன சின்னச் சின்ன உதவிகளைச் செய்து கொண்டிருந்திருக்கிறார். விதியின்  விளையாட்டு அதோடு நிற்காமல்  தன்னுடைய 17 வது வயதில் பெற்றோரையும் ஒருவர் பின் ஒருவராக இழக்கச் செய்துவிட்டது.. உடன் பிறந்த ஒரே சகோதரியும் திருமணம் செய்து கணவன் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இளம் வயதில் தனித்து விடப்பட்ட இந்தப் பெண்ணின் பாதுகாப்பற்ற சூழலை மனதிற்கொண்டு வேறு வழியின்றி, மருத்துவரின் ஆலோசனையையும் மீறி, தம் அன்புத் தங்கையை தம் கணவருக்கே மறுமணம் செய்து வைத்துள்ளார், இவருடைய அன்புச் சகோதரி. அந்த பாச தீபத்தின் தியாகத்தினால் நாகம்மா அன்று முதல் தன் சகோதரியுடனேயே, அவருடைய வாழ்க்கையையும் பங்கு போட்டுக்கொண்டு வாழ்ந்து வருகிறார்.

துரத்தி வந்த நோயைக்கூட இவருடைய தன்னம்பிக்கை என்ற உறுதியான மனம் விரட்டியடித்திருக்கிறது என்பதை அறிய ஆச்சரியமாகத்தான் இருந்தது. இருதய நோய் காரணமாக அடிக்கடி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். ஆனாலும் தன்னுடைய கடமைகளை மட்டும் எந்த காரணம் கொண்டும் தவிர்க்க நினைக்கவில்லை இவர். ஹோமியோபதி மருத்துவமும் பார்த்துக் கொள்ள ஆரம்பித்த வேளையில்தான், திருமணம் ஆன ஒரு சில ஆண்டுகளிலேயே குழந்தைப்பேறும் பெற்றிருக்கிறார். இருதயத்தில் இருந்த பிரச்சனையுடன், மருத்துவர்கள் குழந்தை வேண்டாம் என்று கூறியும், தன்னால் முடியும் என்ற நம்பிக்கையை மட்டும் உறுதியாக வைத்துக் கொண்டு பலப்பல சிரமங்களுக்கிடையே, மருத்துவ மனையிலேயே முழுவதும் தங்கி, நல்லபடியாக அழகான ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தும் வந்துவிட்டார். சகோதரியின் ஆண் ஒன்று, பெண் ஒன்று என்ற இரு குழந்தைகளுடன் நாகம்மாவின் பெண் குழந்தையும் ஆரோக்கியமும், நல்ல அறிவுமாக வளர்ந்து கொண்டு வந்திருக்கிறது.
மகன் பட்டயப் படிப்பு படித்துவிட்டு குடும்பத் தொழிலான சலவைத் தொழிலையே செய்ய விரும்ப, மகள்கள் இருவரையும், பொறியியல் கல்லூரியில் படிக்க வைத்துள்ளனர். மிகச் சிரம்ப்பட்டே தம் மகள்களை படிக்க வைத்ததாகக் கூறும் நாகம்மா,. தன் மூத்த சகோதரியின் குழந்தைகளுக்கும், தன் குழந்தைக்கும் எந்தவிதமான வேறுபாடும் இன்றுவரை பார்த்திராதது மட்டுமே இவருடைய அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு காரணமில்லை. தங்கள் மகள்களை நன்கு படிக்க வைத்து, இன்று அவர்கள் நல்ல நிலையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்தும் அவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல் இன்றுவரை உழைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்களே அது மட்டுமே நிம்மதியை தேடிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் சத்தியம். அக்காவிற்கு முதுமையினால் இயலாமை ஏற்பட்டுள்ள நிலையில் அவரை நல்ல ஓய்வான சூழலில் கவனித்துக் கொண்டும், 70 அகவையைத் தொடும் தம் கணவருடன் இன்றும் சலிக்காமல் உழைத்துக் கொண்டுமிருக்கிறார், இந்த மங்கை. மகள்களுக்கு திருப்தியாக சீர் செய்து திருமணம் செய்து கொடுத்துள்ளதையும் பெருமை பொங்கக் கூறுகிறார். தம் மகள் பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது , வாடிக்கையாளர் ஒருவரின் மூலமாக திரைப்பட நடிகை ரேவதி இது போன்று சிரமத்தில் படிப்பவர்களுக்கு உதவி செய்வதாக கேள்விப்பட்டு, அவரை அணுகியபோது ரூபாய் 5000 உதவித் தொகை கொடுத்தது தன் மகளின் கல்விக்கு பயனுள்ள வகையில் அமைந்தது என்பதையும் நினைவுகூர்கிறார். அக்காவின் மகனுக்கும் திருமணம் செய்து வைத்து அவரும் மனைவி குழந்தையுடன், தனி வீட்டில் குடித்தனம் நடத்த, இன்று தாங்கள் மூவரும் அமைதியாக, முதுமை பயமோ, இறுதி நாட்களின் தேவைகளோ என்ற எந்த அச்சமுமின்றி நிம்மதியாக பொழுது போய்க் கொண்டிருக்கிறது என்கிறார் புன்னகையுடன்.
 

நான்கு மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் ஓயாமல் சுமையுடன் படி ஏறிச் செல்லும்போது சிரமம் இல்லையா என்றால், அதற்கும் அழகாக சிரித்துக் கொண்டே, “சிரமம் இருக்கத்தான் செய்யும். அதைப்பார்த்தால் பொழப்பு நடக்குமா… முடிந்தவரை அப்படியே ஓடிக்கினேதான் இருக்கணும்” என்கிறார்.
இருதயத்தில் இருந்த கோளாறு என்ன ஆனது? என்று வினவியபோது, “யாருக்குத் தெரியும், ரொம்ப நாளா ஆஸ்பத்திரிக்கே போவலை.. இப்ப ஹோமியோபதிதான் பார்த்துக்கிணு இருக்கேன். கடவுள் புண்ணியத்துல எந்தப் பிரச்சனையும் இல்ல..அப்பப்ப முடியாமப் போனா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தாக்கா சரியாப்பூடுது.. என்னாங்க எல்லா கடமையும் முடிச்சாச்சு, இனிமே வாழற ஒவ்வொரு நாளும் போனசுதானே.. அதான் எதைப்பத்தியும் கவலைப் படறதே  இல்லைங்க…” என்கிறார் பூரிப்புடன்.
வயதாகிவிட்டபடியால் பொட்டி தூக்கி தேய்க்க சிரமமாக இருப்பதால், இன்று கூலிக்கு ஆள் போட்டுக்கொண்டு தொழிலை கவனித்துக் கொள்வதாகச் சொல்லும் இவர்களின் வருமானம் நாளொன்றுக்கு சராசரியாக 1000 ரூபாயாம். அந்தப் பகுதியில் இருக்கும் பெரும்பாலானவர்களுடன், பாசமும், நேசமும் கொண்டு குடும்பத்தினர் போலவே பழகிவரும் நாகம்மாவைப் பார்க்கும் வேளையில், இவருடைய தன்னம்பிக்கை, இருதய நோயின் தீவிரத்தைக்க்கூட கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.




இனிமேலாவது சற்று ஓய்வெடுக்கலாமே என்று கேட்டபோது, “இப்ப இன்னா  58 தானே ஆவுது, ஓய்வெடுக்குற வயசா இது..? இன்னும் காலம் அதுக்கு நிறைய இருக்கே..” என்கிறார் சர்வ சாதாரணமாக. 70 வயது கணவர் இன்றும் அதே குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் பணிக்கு வந்து இயன்றவரை உழைப்பதைக் காணும் மனைவிக்கும் இது போன்ற எண்ணம் தோன்றுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே!

நன்றி : வல்லமை 


No comments:

Post a Comment