பவள சங்கரி
ஹாய் குட்டீஸ் நலமா?
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
எல்லோரும் பள்ளிக்குச் சென்று கொடியேற்றி கொண்டாடிவிட்டு வந்தீர்களா? பள்ளியில் இனிப்பு வழங்கி மகிழ்வித்திருப்பார்களே? இன்றைய நந்நாளில் ‘கொடி காத்த குமரன்’ என்ற திருப்பூர் குமரன் பற்றி தெரிந்து கொள்ளலாமா?
1932ம் ஆண்டு, காந்தியடிகள் கைது செய்யப்பட்டு, காங்கிரசு இயக்கமும் தடை செய்யப்பட்டது. அனைத்து காங்கிரசு அலுவலகமும் பூட்டி, சீல் வைக்கப்பட்டது.இதனை
எதிர்த்து தடையையும் மீறி பல இடங்களிலும் போராட்டமும், ஊர்வலமும் நடத்தப்பட்டது. அதே ஆண்டு, ஜனவரி 10ம் தேதி திருப்பூரில் ஊர்வலம் நடத்த முடிவானது. தேசபந்து வாலிபர் சங்கம் முன்னிலை வகித்து அந்த ஊர்வலத்தை நடத்த முடிவாகியது. தியாகி பி.எஸ்.சுந்தரம் அவர்களின் தலைமையில் பலர் கலந்து கொண்டு அந்த ஊர்வலத்தை நடத்தினர். தடையையும் மீறி கொடியேந்தி ஊர்வலம் நடத்தியவர்களை போலீசுக்காரர்கள் அரக்கத்தனமாக கண் மண் தெரியாமல் அடித்தனர். தாக்கப்பட்ட அனைவரும் மண்டை உடைந்து இரத்த வெள்ளத்தில் மிதந்தபோதும், ‘பாரத மாதாவிற்கு ஜே!, காந்தியடிகளுக்கு ஜே!’ என்ற முழக்கங்களுடன் முன்னேறிக் கொண்டிருந்தனர். குமாரசாமியின் மண்டையும் உடைந்து இரத்தம் பீரிட்டு எழுந்தது. நினைவிழந்து மயங்கிச் சரியும் நிலையிலும், கையில் பிடித்திருந்த நம் பாரத தேசக் கொடியை கீழே விடாமல் இறுக்கிப் பிடித்துக்கொண்டே இருந்தான். அப்போதும் போலீசார் அவனை பூட்சுக் கால்களால் ஆனமட்டும் எட்டி உதைத்தனர். அந்த நிலையிலும், தன் கையில் இருந்த பாரத தேசக்கொடி மண்ணில் விழாமல் தூக்கிப் பிடித்தபடியே இருந்தது. அனைவரும் குற்றுயிரும் குலை உயிருமாகத் தூக்கிச் செல்லப்பட்டனர். சுந்தரம், ராமன் நாயர், குமாரசாமி போன்றவர்களை சாமான்களைப் போல ஒரு வண்டியில் தூக்கி வீசி அள்ளிச் சென்றனர். மண்டை உடைந்து இரத்தம் பெருகிய நிலையில் நினைவு முழுவதும் தப்பியது குமாரசாமிக்கு. ஜனவரி 11ம் தேதி, 1932ம் ஆண்டின் அன்றைய இரவுப் பொழுதில் அவர் உயிர் பிரிந்தது. இந்த தியாகச் செம்மல், வீரத் திருமகனின் உடல் புதைத்த இடம்கூட தெரியாதவாறு போலீசார் இரகசியமாகவே, ஒரு துணியில் சுற்றி மூங்கில் குச்சி வைத்து தூக்கிச்சென்று புதைத்துவிட்டனர்.
இப்படி நம் பாரத அன்னையின் அடிமைத்தழையை நீக்க பாடுபட்டு தம் இன்னுயிர் ஈந்த தியாகச் செம்மல்கள் எண்ணற்றோர். அவர்களின் வரலாறுகள் அனைத்தும் நாம் அறிந்துகொள்ள வேண்டிய பொக்கிசங்கள் அல்லவா? படித்து, கேட்டு அறிந்து கொள்ளுங்கள் செல்வங்களே!
இறுகிக் கிடக்கும் நிலத்தை ஆழ உழுது, அதை மொதுமொதுவென மென்மையாக்கி, விதை தூவி, நீர் பாய்ச்சி, உரமிட்டு வளர்த்தாலே பயிர் நன்கு செழித்து வளர்ந்து நல்ல மகசூலும் கொடுக்கும். நம் மனமும் அப்படியே. குழந்தைப் பருவத்திலேயே அதை நன்கு உழுது, நல்ல எண்ணங்களை விதைத்து, நற்சிந்தைகள் என்ற உரமிட்டு, அன்றாடம் நீர் வார்த்து , விளையும் அந்தப் பயிர் நன்கு செழித்து வளர வகை செய்வதே நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கும் அரிய பணி. அந்த வகையில் குழந்தைகள் பள்ளிகள் பெரும் பணியாற்றுகின்றன. வெற்று நிலமான அந்த மழலைகளின் மனதை நன்கு உழுது நல்ல விதை தூவி அப்பயிர் செழித்து வளர , உரமுமிட்டு அவர்களை சமுதாயத்தின் ஓர் முக்கிய அங்கமாக வடித்தெடுப்பதில் குழந்தைகள் பள்ளிகளுக்கு பெரும் பங்குண்டு. அந்த வகையில் நேற்று (ஆகஸ்ட் 15, சுதந்திர தினம்) அந்த மழலையருக்கு, வருங்கால இந்தியத் தூண்களுக்கு, நல்லதொரு நாட்டுப்பற்றை விதைக்கும் விதமாக சுதந்திர தின விழா நடந்த ஒரு பள்ளிக்குச் சென்று குழந்தைகளுடன், குழந்தையாக மகிழ்ந்து கொண்டாடும் வாய்ப்பு அமைந்தது. ‘லவ்லி கிட்ஸ்’ என்ற குழந்தைகள் பள்ளியில் பால் மணம் மாறாத அந்தக் குழந்தைகள் தங்களை நேருவாகவும், காந்தியாகவும், கோகலேவாகவும், ஜான்சி ராணியாகவும் உருவகப்படுத்திக்கொண்டு வலம் வந்தபோது நாமும் அந்த மழலை உலகிலேயே மெய்மறந்து கலந்தது போன்ற ஒரு உணர்வுதான் ஏற்பட்டது. பட்டாம்பூச்சிகளாக வண்ண உடையில் சிறகடித்துச் செய்த சாகசங்களும் மனதைக் கவரும் விதமாக இருந்தது. பெற்றோரும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக சுதந்திர தினச் செய்திகளை பகிர்ந்து கொண்டார்கள். ஒரு குழந்தையின் தாய், இசுலாமிய சகோதரி, உணர்வுப்பூர்வமாக, நாட்டில் ஒற்றுமை நிலைத்திட வேண்டும். சாதி, மதச் சண்டைகள் அடியோடு ஒழிய வேண்டும், அழிவுகள் தடுக்கப்பட வேண்டும் என்று பேசினார். மற்றொருவர் அழகான பாரதியின் நாட்டுப்பற்று பாடலைப் பாடி அசத்தினார். இப்படி நிகழ்ச்சியை மிகச் சிறந்த முறையில் மழலையரை நல்வழிப்படுத்தும் வகையில் அமைத்ததற்கு மனம் மகிழ்ந்து, உளம் நெகிழ பாராட்டிவிட்டு வந்தோம். வாழ்க பாரதம்!
படங்களுக்கு நன்றி:
No comments:
Post a Comment