Saturday, October 18, 2014

ஒன்பதாம் தந்திரம் 17. மறைபொருட் கூற்று - பத்தாம் திருமுறை திருமூலர் இயற்றிய திருமந்திரம்





1 காயம் பல கை கவறு ஐந்து கண் மூன்றா
ஆயம் பொருவது ஓர் ஐம்பத்து ஓர் அக்கரம்
ஏய பெருமான் இருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப்பு அறியேனே.

 
2 தூறு படர்ந்து கிடந்தது தூ நெறி
மாறிக் கிடக்கும் வகை அறிவார் இல்லை
மாறிக் கிடக்கும் வகை அறிவாளர்க்கு
ஊறிக் கிடந்தது என் உள் அன்பு தானே.


 
3 ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்
சாறு படுவன நான்கு பனை உள
ஏறற்கு அரியது ஓர் ஏணி இட்டு அப்பனை
ஏறல் உற்றேன் கடல் ஏழும் கண்டேனே.

 
4 வழுதலை வித்து இடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுது கொண்டு ஓடினார் தோட்டக் குடி கள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே.

 
5 ஐ என்னும் வித்தினில் ஆனை விளைப்பது ஓர்
செய் உண்டு செய்யின் தெளிவு அறிவார் இல்லை
மை அணி கண்டனன் மனம் பெறின் அந் நிலம்
பொய் ஒன்றும் இன்றிப் புக எளிது ஆமே.

 
6 பள்ளச் செய் ஒன்று உண்டு பாழச் செய் இரண்டு உள
கள்ளச் செய் அங்கே கலந்து கிடந்தது
உள்ளச் செய் அங்கே உழவு செய்வார் கட்கு
வெள்ளச் செய் ஆகி விளைந்தது தானே.
 



2826. காயம் பலகை கவறைந்து கண்மூன்றாய்
ஆயம் பொருவதோர் ஐம்பத்தோ ரக்கரம்
ஏய பெருமா னிருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப்பறி 1யேனன்றே.
(ப. இ.) உடம்புடன் கூடிய ஆருயிர்களின் வாழ்க்கை ஒரு கவறாட்டம் போன்றது. கவறு - சூது. உடம்பு பலகையாகவும், ஐம்புலன்களும் கவறாடு கருவியாகவும், வலம் இடம் புருவநடு என்னும் மூன்றும் இடமாகவும், ஐம்பத்தோ ரெழுத்தும் சூதாடும் காய்கள் நிரப்பும் அறையாகவும் கொண்டு என்றும் ஆருயிருடன் பிரிப்பின்றி நின்று பொருந்தி அருள் செய்யும் சிவபெருமான் ஆருயிர்களைக் கையாளாக வைத்து கவறாடாநிற்கின்றான். இத்தகைய மாயக் கவற்றின்வழிச் செய்யும் அவன்றன் மறைப்பாற்றலின் பண்பை அறியேன் என்க. கண் மூன்றாய் என்பதற்கு நெஞ்சம் கண்டம் புருவமத்தி என்றலும் ஒன்று.
(அ. சி.) காயம் பலகை - உடம்பானது சூதாடு பலகை போன்றது. கவறு ஐந்து - ஐம்பொறிகளும் சூதாடு கருவிபோன்றது. கண்மூன்றா - வலம், இடம், புருவமத்தி ஆகிய மூன்றும் மூன்றிடங்களாக. ஆயம் - சூதாடு கருவியிலுள்ள அறை. மாயம் - வஞ்சகம்.
(1)
1. எண்ணரு. காஞ்சிப். அனந்த, 2.
" சூதினில். 12. மூர்க்கநாயனார், 10.
" நிலமிசை. புறநானூறு, 43.
" கவறும். திருக்குறள், 935.


நன்றி  http://www.tamilvu.org/slet/l41A0/l4130son.jsp?subid=2573

No comments:

Post a Comment