Sunday, March 8, 2015

தாயிற் சிறந்த கோயில் இல்லை!


பவள சங்கரி


பட்டினத்தடிகளின் உள்ளம் உருக்கும் பாடல்!

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்
அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு
முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்
வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்


தாயிற் சிறந்த கோயில் இல்லையாம்... தாயை இழந்த சோகம் சாதாரணமும் இல்லை.... நரக வேதனை.. சமீபத்தில் என் அம்மா இறைவனடி சேர்ந்துவிட்டார். 56 ஆண்டுகால நிறைவான திருமண வாழ்க்கையுடன், தீர்க்க சுமங்கலியாக இயற்கை எய்தியுள்ளார். சேர்மேன் ராமலிங்கம் என்ற தேச பக்தரான என் தாத்தாவின் மூன்றாவது மகளாக அவதரித்தவர். சேலம் மாநகரில் மிட்டாதாரராக இருந்தவர் தாத்தா. நேருஜியுடன் தொடர்பில் இருந்தவர். தாத்தா வீட்டில் நேருஜி வந்து உணவருந்தியிருக்கிறார் என்பதை அறிந்து பெருமைப்பட்டிருக்கிறோம். தாத்தாவின் பெரும்பகுதி சொத்துகள் நாட்டிற்காக அளிக்கப்பட்டுள்ளது. இன்று பள்ளிக்கூடமாகவும், சேலத்தின் மிகப்பெரிய மார்க்கெட் , என்று இன்றும் ராமலிங்கம் மார்க்கெட், ராமலிங்கம் நெடுஞ்சாலை, அவர் தம்பியின் பெயரில் ராமசுந்தரம் தெரு என்று ஆதாரமாக நிற்கிறது. தம் வாழ்க்கையின் இறுதி நொடி வரை நாட்டின் நலன் மட்டுமே கருத்தில் கொண்டு வாழ்ந்த உத்தமரின் தவப்புதல்வி என் தாய்! அத்தாயின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல எம் இறையை பிரார்த்திக்கிறோம். தொலைபேசியிலும், நேரிலும் வந்து எங்கள் துக்கத்தில் பங்குகொண்டு ஆறுதல் அளித்துள்ள அனைத்து அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி. அவர் பிரிவை எண்ணி வாடும் எம் தந்தையார் மற்றும் குடும்பத்தாருக்கும் மனம் சாந்தி பெற பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன் நண்பர்களே.


1 comment:

  1. தங்கள் தாயாரின் பெருமைகளை அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    தாயிற் சிறந்த கோயில் இல்லை! என்பது மறுக்கவே முடியாத உண்மை.

    ReplyDelete