Thursday, November 11, 2021

ஆய் வேளிர் அரச குடும்பத்து 3 பெண்களின் தென் கொரிய கடல் பயணம்.

 

 

 

ஆய் வேளிர் அரச குடும்பத்து 3 பெண்களின் தென் கொரிய கடல் பயணம்.

 

கயா நாட்டின் முதல் அரசி கயாவின் மேற்குப் பகுதியிலிருந்து கடல் கடந்து வந்த பெண் என்றும், அவர் மலாயாவிலிருந்தோ அல்லது இந்தியாவின் தென்பகுதியிலிருந்தோ கடல் பயணம் மேற்கொள்ளப்பட்டதாக கொரியாவின் தொன்மங்கள் குறிப்பிடுகின்றன. பொ.ச. 3ஆம் நூற்றாண்டில் உருவான சில்லா அரசு கயா நாட்டின் மீது போர் தொடுத்து அந்நாட்டின் அத்தனை வரலாற்று எச்சங்களையும் அழித்து அதன் பின்னரே சில்லா அரசு எழுச்சி பெற்றது. சில்லா அரசாட்சிக் காலத்தில் மூன்று நாடுகளின் வரலாறு என்ற ஒரு தொன்மக் கதை புனையப்பட்டது. அவை மேலை நாட்டவரின் கவனத்தை ஈர்க்காமல் அது ஒரு மறைக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட நிலப்பகுதியாகவே மாறி சீன - சப்பானிய நாடுகளின் நிழலில் ஒரு புறக்கடையாகவே விளங்கி வந்தது. கொரியாவுக்கென ஒரு தனி வரலாறோ, மொழியோ, வாழ்வியல் மரபோ வெளி உலகிற்குத் தெரியாமல் மறைக்கப்பட்டிருந்தது. முதன் முதலில் மார்கோபோலோ எழுதிய கொரியா பற்றிய குறிப்பே மேலை நாடுகளுக்கு கொரியா என்ற நிலப்பகுதி இருப்பதை உணர்த்தியது. 14ஆம் நூற்றாண்டில் புத்த மதத் துறவியான இல்யோன் எழுதிய சாம்குக்யுசா என்ற தொன்மத்தில் கொரியாவின் முதல் அரசி பற்றிய சில செய்திகள் காணக் கிடைக்கின்றன. 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக கிம் என்ற தொல்லியல் ஆய்வாளர் கயா நாட்டின் முதல் அரசி எங்கிருந்து வந்தார் என்ற தேடலைத் தொடங்கினார். தென் கொரியாவின் கயா பேரரசு முற்றிலும் அழிந்த பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தென்கொரிய அரசு அந்த அரசிக்காக ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்கியது. அந்த நினைவுச் சின்னத்தில் இருந்த இரட்டை மீன் சின்னத்தை அடையாளமாகக் கொண்டு கிம், தாய்லாந்தின் ஆயுக்தா, பாக்கிசுத்தான், ஆஃப்கானிச்சுத்தான் என பல பகுதிகளுக்குச் சென்றுவிட்டு இறுதியாக அயோத்தியா நகருக்கு வருகிறார். அயோத்தியா நகரின் ஒவ்வொரு இல்லத்தின் முகப்பிலும் இரட்டை மீன் சின்னம் இருப்பதைக் கண்டார். எந்ந்தத் தரவுகளும் இன்றி எந்தவித ஆழமான ஆய்வுகளும் மேற்கொள்ளாமல் கொரியாவின் முதல் அரசி அயோத்தியாவின் இளவரசி என்ற அனுமானத்தை வெளியிட்டார். அதுவே தென் கொரிய இந்தியா  இரு நாட்டின் வாழ்வியல் மரபு தொடர்பான இருநாட்டு வெளியுறவுக் கொள்கை உருவானது. தென் கொரிய மக்கள் தாங்கள் அயோத்திய இளவரசியின் வழி வந்தவர்கள் என்று நம்பத் தொடங்கினர். அதன் அடிப்படையில் அயோத்தியாவில் பல கோடி செலவில் கயாவின் முதல் அரசிக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பியுள்ளார்கள். அயோத்தி இளவரசியே கயாவின் முதல் அரசி என்ற நம்பிக்கை வலுப்பெற்று அயோத்தி இளவரசி என்ற கருத்துரு ஆழமாக கொரியர்கள் மனதில் வேரூன்றியது. இந்தியாவின் கொரிய தூதரான திரு. பார்த்தசாரதி என்பவர் அந்த இளவரசிக்கு சூரிரத்னா என்று பெயரிட்டு ஒரு புதினத்தை எழுதினார். இப்படியாக எந்த ஆதாரமும் இல்லாமல் நம்பிக்கை அடிப்படையில் அயோத்தி இளவரசியே கொரிய அரசி என்ற கருத்துரு உருவாகி அதுவே ஒரு வரலாறாக மாறிப்போனது. தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இளவரசியே தமிழ் புத்தத்தைப்  பரப்பவும் கடல் வணிகத்தை மேம்படுத்தவும் தென்கொரிய தமிழக இரு நாட்டின் நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டின் ஒரு கடற்கரை துறைமுகத்திலிருந்து கடல் வணிகப் பாதையில் சென்று தென் கொரியாவின் பூசன் நகரின் அருகில் உள்ள மான்செங்டோ தீவை அடைந்திருக்கலாம் என்ற அனுமானத்தை மேற்கொண்டு தரவுகளின் அடிப்படையில் நிறுவுவதற்காக தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளை முழுமையான முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதுவரை சென்னை பலக்லைக்கழகத்தைச் சார்ந்த சிவராஜப் பிள்ளை என்ற இணைப்பேராசிரியர் தமிழக மன்னர்களின் காலத்தையும் நீண்ட நெடிய சங்கிலித் தொடர் போன்ற 1932 ம் ஆண்டு அளவிலே முயற்சி மேற்கொண்டார். கிரேக்க நாட்டின் வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையாகக் கொண்டு ஆய் குறுநில மன்னர்களின் கொங்கு நிலப்பரப்பை ஆண்ட ஆய் அண்டிரனின் காலம் பொ.ச. 48 என்று நிறுவியுள்ளது இதற்கான ஆதாரமாகக் கொள்ளலாம். கொரியாவின் தொன்மங்களில் கூட இளவரசி பொ.ச. 42இல் தமிழ் நாட்டுத் துறைமுகத்தில் தொடங்கி 2 மாதங்கள் கடல் பயணம் செய்து ஜூலை மாதம் 4 ஆம் தேதி மான்செங்டோ தீவில் இறங்கினார் என்று குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரத்தில் குமரி முதல் வட இமயத்து ஒரு மொழி வைத்து என்று தொடங்கக்கூடிய ஒருவழி உரைநடையில் விற்புலி கயல் என்ற மூவேந்தர் மன்னர்கள் பற்றிய குறிப்பு உள்ளது. கிரேக்க வரலாற்றின் அடிப்படையில் மூவேந்தர்கள் தோன்றிய காலம் பொ.ச.மு.  3ஆம் நூற்றாண்டு என்று குறிப்பிடுகிறது. அதற்கு முன்னர் பல குறுமன்னர்கள் கிராமங்கள் அடங்கிய சிறு சிறு நாடுகளில் ஆட்சி புரிந்தார்கள். மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒட்டிய நிலப்பகுதியில் செங்கோட்டை கணவாய் தொடங்கி பாலக்காட்டுக் கணவாய் பகுதி வரை பல நாடுகள் இருந்தன. (படத்தில் காணலாம்) பொது சகாப்தத்திற்கு முற்பட்ட காலத்தில் தென்நாட்டின் தென் பகுதியில் தென் முனையில் ஆய் நாடு என்ற ஒரு நாடு இருந்ததை கிரேக்க வரைபடங்கள் சுட்டுகின்றன. ஆய்நாடு அழிந்த பின்பு ஆய் வேளிர்கள் புலம் பெயர்ந்து பாலக்காட்டுக் கணவாய் வழியாக கொங்கு நிலப்பரப்புக்குள் நுழைந்து சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்த கொங்கு நிலப்பரப்பை கையகப்படுத்தி பொ.ச. 100இல் கொங்கு நாடு என்ற பகுதியில் ஆட்சி செய்ய ஆரம்பித்தார்கள். அதே வரை படத்தில் கொரியாவில் கயா நாடு உருவானதாக வரைபடத் தரவுகள் சுட்டுகின்றன. தனித்தனியாகக் கிடைக்கக்கூடிய தகவல்களைத் தொகுத்து ஆய் கொங்கு வேளிர் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் கொரியாவின் கயா நாட்டிற்கு சென்றனர் என்ற அனுமானம் வலுப்பெறுகிறது. இதற்கு அடிப்படை கிரேக்க சங்க கால வரலாற்றுத் தகவல்கள் ஆகும். கயா நாடு உருவாகுவர்தற்கு முன்னரே கொங்கு நாட்டு மணி வணிகர்கள் கல்மணிகளையும், சூது பவளத்தையும் தென் கொரியாவில் சந்தைப்படுத்தினார்கள். தமிழர்களே முதன்முதலாக இரும்புக் கனிமத்தை உருக்கி இரும்புக் கருவிகளையும் எஃகுக் கருவிகளையும் உருவாக்கினார்கள் என்றும், எகிப்து நாட்டின் பிரமிடுகளைக் கட்டுவதற்காக கருங்கற்களை நெம்பி எடுத்து பெரும் சதுரக் கற்களாக மாற்ற தமிழகத்தின் இரும்பு நெம்புகோல் (கடப்பாரை) பயன்படுத்தப்பட்டது என்ற ஒரு வரலாற்றுத் தகவல் உள்ளது. கொங்கு நாட்டில் குறிப்பாக கொடுமணல் பகுதியில் கலமணிகளிலும், சுதுபவள மணிகளிலும் சிறு துளையிட்டு அவற்றை மாலையாகக் கோர்க்கும் தொழில்நுட்பம் உருவானது. தமிழகத்திலும் தென் கிழக்கு ஆசியாவிலும் எங்கெல்லாம் இரும்புக் கனிமம் கிடைக்கின்றதோ அங்கெல்லாம் சூதுபவள கல்மணி மாலைகளில் துளையிட்டு மாலை கோர்க்கும் தொழிற்சாலைகள் உருவாகின்றன. ஹூபர்ட் என்ற வரலாற்று ஆசிரியர் அவருடைய கொரிய வரலாற்று நூலில் தென்கொரியாவின் வரலாற்றைக் குறிப்பிடும்போது இரும்பு தொழில்நுட்பம் தெரிந்த உன்னதமான வாழ்வியல் வரலாறாகக் கொண்ட ஒரு குழு கடல் பயணம் செய்து அங்கே அவருடைய மேற்பார்வையில் கயா பேரரசை உருவாக்கியிருக்கக்கூடும் என்ற அனுமானத்தை குறிப்பிடுகிறார். கயா நாட்டின் முதல் அரசனான சுரோ என்ற பெயருக்கு இரும்பு மனிதன் என்ற பொருளும் உண்டு. இந்த கரோஷிமா என்ற வரலாற்று ஆய்வாளர் தமிழக படைப்புகளில் சங்க கால படைப்புகளில் மட்டுமே தரவுகள் அதிகம் உள்ளன என்றும் சங்கம் மருவிய காலத்தில் வடபுலத் தாக்கத்தால் வெறும் புனைவுகளே தோன்றின என்று குறிப்பிடுகிறார். முடிவாக ஆய் வேளிர் குல இளவரசிகள் மூவர் அவர்களுடைய மூத்த சகோதரர்களின் அறிவுரைப்படி கடல் பயணம் மேற்கொண்டு கயாவின் மூன்று நிலப்பகுதிகளை அரசாண்டவர்களை மணந்து கொண்டனர் என்றும் அனுமானிக்கலாம். கொரிய அரசிக்குப் பிறந்த 10 குழந்தைகளில் பெரும்பான்மையானவர்கள் அவருடைய சகோதரரின் அறிவுரைப்படி புத்த மதத்தைத் தழுவினார்கள். அரசியின் வேண்டுகோளின்படி 2 குழந்தைகளுக்கு தாய்வழி சமுதாயத்தின் பெயரிட்டு அழைக்கப்பட்டனர். அந்த இரு பிரிவினரே இன்றைய கொரியாவின் செல்வச் செழிப்பு மிக்க குழுவினராக மாறி இரும்பு அடிப்படையிலான கப்பல் கட்டும் தொழில் வாகனங்கள் தயாரிப்புத் தொழில்களில் உலகப் புகழ் பெற்று விளங்குகிறார்கள். அவர்களில் கிம் என்ற பிரிவைச் சார்ந்த ஒருவரே தமிழ் நாட்டில் சிறீபெரம்புதூரில் ஹூண்டா என்ற கார் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த வாகனங்களை ஏற்றுமதி செய்வதற்காகவே எண்ணூரில் ஒரு துறைமுகம் செயல்படுகிறது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் கொரியாவின் துணைத் தூதர் தமிழகத்தில் மாமல்லபுரத்திற்கோ மற்ற பகுதிகளுக்கோ சென்றால் எங்களுக்கும் தமிழகத்திற்கும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு தொப்புள் கொடி தொடர்பு உணர்வு இருப்பதாகவே குறிப்ப்ட்டார். இந்தத் தகவல்களின் தொகுப்பின் அடிப்படையில் கொங்கு நிலப்பகுதியின் ஆய் வேளிர் அரச குடும்பத்திற்கும் தென் கொரியாவின் கயா நாட்டின் அரச குடும்பத்திற்கும் தொடர்பு உள்ளது என்ற கோட்பாடு உருவாகியுள்ளது.

No comments:

Post a Comment