Friday, May 30, 2025

காகத்தின் நுண்ணறிவு!

 






காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் காலையில் காக்கை, குருவிகளுக்கும் அணிலுக்கும் உணவளிப்பது வழக்கம். காகங்கள் மிக புத்திக் கூர்மையுள்ள பறவைகள் என்று படித்திருந்தாலும் அதை இன்று நேரில் அறியும் வாய்ப்பு அமைந்தது. தமது இரையை, உணவைப் பெறுவதற்காகக் கருவிகளைப் பயன்படுத்தும் திறன் வாய்ந்தவை. நம் வாழ்வோடும் பண்பாட்டோடும் பின்னிப்பிணைந்த ஒரு பறவையினம் இது. இன்று காலை இட்லிதான் வைத்தேன். அதுவும் நேற்று இரவு உணவு விடுதியில் வாங்கி வந்த இட்லி என்பதால் காலையில் அது சற்று கெட்டிப்பட்டுவிட்டது. சிறிய துண்டுகளாக கிள்ளிப்போட்டுதான் வைத்தேன். ஆனாலும் வெகு நேரம் தலையை ஆட்டி ஆட்டி பார்த்துக்கொண்டே இருந்ததே தவிர ஒரு துண்டுகூட எடுக்கவில்லை. என்ன நினைத்ததோ, சற்று நேரத்தில் ஒரு இட்லித் துண்டை எடுத்து அதை அருகில் இருக்கும் தண்ணீரில் போட்டது. ஒரு நொடியில் மீண்டும் அதை எடுத்து உண்டது. இப்படியே இரண்டு மூன்று முறை செய்துவிட்டு ஒரு துண்டு இட்லியை அதேபோல் தண்ணீரில் நனைத்து எடுத்துக்கொண்டு பறந்துவிட்டது. குட்டிக்கு எடுத்துச் சென்று ஊட்டும் போல. உண்மையில் எனக்கு அப்படியொரு ஆச்சரியமாக இருந்தது. காக்கைதானே என்று சாதாரணமாக நினைத்துவிட முடியாது, மனிதர்களைவிட புத்திசாலியாக இருக்கிறேன் என்று உணத்ர்த்திவிட்டுச் சென்றுவிட்டது. இன்று முழுவதும் காக்கை பற்றிய நினைவே சுற்றி சுற்றிச் வருகிறது.
நம் வீட்டு வாசலில் காகம் கரைந்தால் விருந்தினர்கள் வருவார்கள் என்பது நமது நம்பிக்கை.
பழங்காலத்தில் கடற்பயணம் மேற்கொள்பவர்கள் காக்கைகளை கூண்டில் அடைத்து உடன் எடுத்துச் செல்வர். கரைக்குச் செல்லும் வழி அறியாத நேரத்தில் அந்தக் காகத்தை எடுத்து பறக்க விடுவார்கள். அந்தக் காகம் செல்லும் திசையைப் பின்பற்றிச் சென்று கரையை அடைந்துவிடுவார்களாம். அப்போது அந்தக் காகம் கரைந்து கொண்டே கரையையும் அடையும். கரையோரத்தில் வாழும் மக்கள் வழிமாறிய கப்பலில் பயணிகள் பசியுடன் வருவார்கள் என்பதறிந்து அவர்களுக்கு விருந்து சமைத்து வைத்துக்கொண்டு உபசரிக்கக் காத்திருப்பார்களாம்.... அதனாலேயே இன்றும் காகம் கரைந்தால் உறவினர் வருவார்கள் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. உலகின் பழமையான நாகரிகங்களின் ஒன்றான மெசப்பத்தோமியா நாகரிகத்தின் நாணயங்களிலும், ஓவியங்களிலும் ஒரு மாலுமி காக்கையை பறக்கவிடுவது போன்று பொறிக்கப்பட்டுள்ளதும் இதன் பழமைக்கு ஆதாரமாக உள்ளது. ஆகா எத்தனை நூற்றாண்டுகளாக இன்னும் நம்மோடு தொடர்ந்து வருகிறது இந்தப் பாரம்பரியம்!
" விருந்து வரக் கரைந்த காக்கை" எனும் குறுந்தொகைப் பாடல் மூலம் இதை அறியலாம். சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்களில் ஒருவரான காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் என்பவர் காகத்தைப் பற்றிப் பாடியே இப்பெயரைப் பெற்றுள்ளார். அவர்தான் காக்கைக் கரைந்தால் விருந்தாளி வருவர் என்ற பொருளில் ஓர் அகப்பாடல் புனைந்துள்ளார். முல்லைத் திணைக்குரிய பாடலிது. தோழி கூறுவதாக அமைந்துள்ள அப்பாடல் ..
திண்டேர் நள்ளி கானத்து அண்டர்
பல்லா பயந்த நெய்யின் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
எழுகலத்து ஏந்தினும் சிறிதென் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே (குறுந். 210)
ஐங்குறுநூற்றிலும் காக்கை குறித்த நம்பிக்கை கொண்ட இன்னொரு பாடல் வந்துள்ளது.
மறுவில் தூவிச் சிறு கருங் காக்கை
அன்புடை மரபினின் கிளையோ டாரப்
பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ
வெஞ்சின விறல்வேற் காளை யோடு
அஞ்சில் ஓதியை வரக்கரைந் தீமே
(ஐங். 391)
காகம் கரைதலைக் கண்ட தலைவி அதனை விரட்டித் துரத்துகிறாள். ஏனென்றால் காகம் கரைதல் தன் தலைவனுடைய வருகைக்கு நன்னிமித்தம் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் அந்நேரத்தில் ஊடலில் இருப்பவள் போலும் அவள் அதை நம்பவில்லை. கோபமாக காகத்தைத் துரத்திக் கொண்டே இருக்கையில் தலைவனைக் காணாது வருத்தத்தில் இருந்த தனது மெலிந்த கைகளிலிருந்த வளையல்கள் பாதி கழன்று தரையில் விழுந்தன. ஆனால் உண்மையில் திடீரென்று தன் தலைவன் வருவதைக் கண்ணுற்ற அந்தத் தலைவியின் உடலும் கைகளும் மகிழ்ச்சியில் பருத்துவிடுகின்றன. அதன் விளைவாக அவள் கையிலிருந்த மீதி பாதி வளையல்கள் உடைந்து சிதறிவிட்டனவாம். முதலில் காகம் தனக்குப் பொய்யான நம்பிக்கையூட்டுகிறதே என்ற கோபத்தில் தலைவி காகத்தை விரட்டுகிறாள்.
இப்படி தலைவனைப் பிரிந்த தலைவியின் உடல் மெலிவதும் அதனால் கைவளைகள் நெகிழ்ந்து மண்ணில் விழுவதும் அகப்பாடல்களில் அடிக்கடி காணமுடிகிறது. மெலிந்தபோது கழன்று விழும் வளையல்கள் தலைவனைக் கண்டவுடனே கைகள் பருத்ததால் வெடித்துச் சிதறின என்பதும் செறிந்தன என்று சொல்வதும் மிகைபடக் கூறல் என்றாலும் இலக்கியச் சுவைக்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாக அல்லவா இருக்கிறது!
அன்றாடம் காகங்களை அழைத்து உணவிட்டு, பின் உணவருந்தும் பழக்கம் நம்மூரில் பலருக்கும் உண்டு. புனைவுகளிலும் இலக்கியங்களிலும் அண்டங்காக்கை பற்றிய பல குறிப்புகள் உள்ளன. இதன் கருப்பு நிறம், பற்கள், கரகரவெனும் குரல், உணவுப்பழக்கம் ஆகியவற்றின் காரணமாக, காகம் தொன்மங்கள், புனைவுகளின் படைப்பாளர்களால் தீய சக்தியின் குறியீடாகக் கருதப்பட்டு வருகின்றது. அண்டங்காக்கை துர்மரணத்திற்கும், இறப்புக்கும் இடையே ஒரு இடைத்தரகராக இருந்தது என்று பிரெஞ்சு மனிதவியல் அறிஞர் கிளாட் லெவி-ஸ்ட்ராஸ் ஒரு கட்டமைப்புவாதக் கோட்பாட்டை முன்வைத்தார். காகம் இறந்தவர்களுடனும் இழந்த ஆத்மாக்களுடனும் தொடர்புடையது என்று சுவீடன் நாட்டுப்புறத்திலும்,
நம்பப்படுகின்றது. இந்து மதத்தில் காக்கைகள் உருவில் மூதாதையர்கள் அமாவாசை, திதி சமயங்களில் அவர்களுக்காகப் படைக்கும் உணவு அல்லது தின்பண்டங்களை எடுக்க வருகின்றன என்ற நம்பிக்கை இன்றளவிலும் நடைமுறையில் உள்ளது. தென் கொரிய நாட்டிலும் மூதாதையர்களுக்குப் படையல் இட்டு நீர் விளவி வழிபாடு செய்யும் வழமை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
· மிகுந்த சக்தி வாய்ந்த இந்துத் தெய்வம் சனி பகவானின் வாகனம் காகம் என்றும் குறிப்பிடப்படுகின்றது. மகாவித்தைகள் என்ற பத்து தாந்தரீகக் கடவுள்களின் குழுவில் ஒன்றான தூமாவதி, இந்துத் தாய் தெய்வத்தின் அச்சமூட்டும் அம்சத்தைப் பிரதிபலிக்கின்றது. அவலட்சணமான விதவையாகச் சித்தரிக்கப்படும் இத்தெய்வம் பொதுவாகக் கல்லறைகள் நிறைந்த, பிணங்களைத் தகனம் செய்யும் பூமியில் காகத்தின்மீது சவாரி செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது.

Wednesday, March 19, 2025

சூழ்நிலைக் கைதி


வார்த்தைகளை கொஞ்சம் பக்குவமாகப் பயன்படுத்தியிருந்தால்
இவ்வளவு பெரிய துன்பச் சூழலில் சிக்கியிருக்க மாட்டேன்
சற்றே பொறுத்திரு எனும் மந்திர வார்த்தையால்
சூழ்நிலையைப் புரிய வைத்திருந்தால் ஆதீத கற்பனையால்
இவ்வளவு அதிர்ச்சியடைந்திருக்க மாட்டேன்
ஒரு சிறிய விளக்கம் கொடுத்திருந்தால் தூக்கம் கெட்டு
குருதி கொதித்து மருத்துவமனை வரை வந்திருக்க மாட்டேன்
எப்படியும் எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருப்பது
தெரிந்தும் இத்தனை கடினமான வார்த்தைப் பிரயோகத்தைத்
தவிர்த்திருந்தால் சுயபச்சாதாபத்திற்கு ஆளாகாமல் இருந்திருப்பேன்
மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லும்போது தற்காப்பிற்கு
ஒரு மரத்துண்டாவது சிக்காமலா போகும்
சமாதானத்திற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாமல்
அதீத அமைதி காப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
- பவளா

காலம் கடந்த ஞானம்

 அறுபதில் பெற்ற இந்த ஞானம் இருபதில் பெற்றிருந்திருக்கலாம் …

1.உங்களை நீங்கள் எந்த அளவிற்கு கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்துகிறீர்களோ அதே அளவு மரியாதையைத்தான் உங்கள் உறவுகளிடமிருந்து நீங்கள் பெற முடியும். மரியாதை சம்பாதிக்கப்படுகிறது!
2. தோல்விக்கான காரணம் சரியான முயற்சி இன்மைதான்.
3. நிராகரிப்பிற்கான காரணம் சரியான வேண்டுகோளின்மைதான்.
4. வெற்றியும் தோல்வியும்நீங்கள் முயற்சிசெய்வதற்கு முன்பு உங்கள் மனதில் இருக்கும் தெளிவற்ற கருத்துகள் மட்டுமே. எதுவும் செய்யாமல் இருப்பதுதான் உண்மையான தோல்வி.
5. உங்களைக் காப்பாற்ற உங்கள் இலக்கு, சாதனை, உறவு என எதுவும் உடன் வருவதில்லை.
6. எப்போதும் வாழ்க்கையில் ஏதோபற்றாக்குறையோ, அதிருப்தியாகவோ உணருவதிலிருந்து யாரும் உங்களை காப்பாற்ற இயலாது.
7. பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை என்று எதுவும் இல்லை. இன்றைய பிரச்சினைக்கான தீர்வு நாளைய பிரச்சினைக்கான வித்தாகக்கூட இருக்கலாம்.
8. உங்கள் நடவடிக்கைகளின் பிரதிபலிப்பாகத்தான் உங்கள் வாழ்க்கைத் துணையின் நடவடிக்கைகள் இருக்கும்.
9. வாழ்க்கையின் மிகவும் மதிப்புமிக்கவைகளான ஆரோக்கியம், செல்வம், அறிவு, நம்பிக்கை, உறவுகள் போன்றவைகளின் முக்கியத்துவத்தை இளமையாக இருக்கும்போதே கவனம் கொள்ளத் தொடங்கினால் பிற்காலத்திற்கு நல்லது.
10. இளமையில் மிகவும் கவர்ச்சிகரமாகத் தோன்றும் சில விசயங்கள் பிற்காலங்களில் எதிர்மாறாகிவிடுகின்றன.
11. உங்கள் பிரச்சனைகளுக்கான பொறுப்பை நீங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் வகையில் அதனால் ஏற்படும் வலியிலிருந்து மீள்வதற்கான வழியையும் எளிதாகக் கண்டடைகிறீர்கள்.
12. உங்கள் பிரச்சினைகளுக்கு வேறொருவரைகாரணமாக்கி குறை கூறும்போது, உங்கள் மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் வரையறுக்கவும் ஆணையிடவும் அவர்களை அனுமதிக்கிறீர்கள். அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கும் முட்டாள்தனத்தை செய்து மரியாதையை இழக்காதீர்கள்.
13. நீங்கள் புத்திசாலி என்றோ, தன்னம்பிக்கை உள்ளவர் என்றோ, வசதியானவர் என்றோ எவரிடமும் நிரூபிக்கும் முயற்சி தேவையற்றது.
14. ஏதாவது ஒன்றைச் சிறப்பாகச் செய்யக் கற்றுக்கொண்டு, மேலும் திறமையையும், தன்னம்பிக்கையையும் வளர்க்கும் செயல்முறையே அதன் மீது அதிகமான ஆர்வத்தை ஏற்படுத்துகிறதே தவிர பேரார்வம் எல்லாம் காரணமில்லை.
15. வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் அனைத்தும் நம் உள்ளார்ந்த உழைப்பினாலும், தியாகத்தினாலுமே கிடைக்கிறது. ஆனாலும் எது நம்மை நன்றாக உணர வைக்கிறதோ அதுவே ஒருநாள் நம்மை மோசமாக உணர வைப்பதையும் தவிர்க்க இயலாது.
16. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை அல்ல. அர்த்தமுள்ள மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை என்பதைக் காலமே உணரவைக்கும்.
17. உடற்பயிற்சியை எதற்கும் ஈடாகப் பார்க்காமல், ஒரு முதலீடாகக் காணும்போதுதான் நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு துளி ஆற்றலையும், பன்மடங்காகத் திரும்பப் பெறுவீர்கள்.
18. சில சமயங்களில் காயப்படுத்தி, சில சமயங்களில் சங்கடப்படுத்தினாலும் பெரும்பாலானவர்கள் நல்லவர்கள்தான்.
19. உங்கள் வளர்ச்சி என்பது உங்களை அரிதாகவே மகிழ்ச்சிப்படுத்துகிறது. அதற்கு உங்கள் பழைய மதிப்புகள், உங்கள் பழைய நடத்தைகள், உங்கள் பழைய அன்புகள், உங்கள் பழைய அடையாளம் போன்றவற்றின் இழப்பு தேவைப்படுகிறது. அந்த மாற்றம் ஏதோவொரு வகையில் வருத்தம் ஏற்படுத்தப்போவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
20. நீங்கள் யார் என்பதை நீங்கள் தீர்மானிக்கவில்லை என்றால், மற்றவர்கள் உங்களுக்காகத் தீர்மானிப்பார்கள். நாம் எதை விட்டுக்கொடுக்கிறோம், எதை தியாகம் செய்கிறோம், எதை நிராகரிக்கிறோம் என்பதன் மூலம் மட்டுமே நாம் வரையறுக்கப்படுகிறோம். எதையும் தியாகம் செய்து எதையும் நிராகரிக்கவில்லை என்றால், நமக்கு எந்த அடையாளமும் இல்லை. நம்மைச் சுற்றியுள்ளவர்களின் விருப்பத்தேர்வுகளாகவும், கோரிக்கைகளின் பிரதிபலிப்பாக மட்டுமே இருப்போம். ஆனாலும் உங்கள் அடையாளம் என்பது சுயமாக கட்டமைக்கப்பட்ட ஒரு மனச் சிறை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
21. மற்றவர்களைப் பற்றிய அனுமானங்களைச் செய்யாதீர்கள். அவர்களுடைய அனுபவங்களை நீங்கள் உணரும் வாய்ப்பு குறைவு. உங்களைப் பற்றிய அனுமானமே பல நேரங்களில் தவறாகலாம்.
22. நீங்கள் நினைப்பதை விட மிகக் குறைவாகவே நீங்கள் மதிப்பிடப்படுகிறீர்கள். காரணம் அவரவர்களுக்கு தங்களைப் பற்றி சிந்திக்கவே பொழுது சரியாக இருக்கிறது.
23. உங்கள் குறைகளை ஏற்றுக்கொண்டு, தோல்வியைத் தழுவுங்கள். காரணம் வெற்றியை எதிர்பார்த்து தன்னம்பிக்கை வருவதில்லை. அது தோல்வியில் இருந்து வரும் ஆறுதலிலிருந்துதான் வருகிறது.
24. எல்லோருக்கும் பிடித்தவராக இருக்க வேண்டும் என்று போராடுவதைவிட, அவர்களுக்குப் பிடிக்காதவர்களாக இருக்கும் விருப்பத்தை வளர்த்துக் கொள்வதால், அது செய்ய வேண்டியதைச் செய்ய உங்களுக்கு சுதந்திரம் அளிக்கும்.
25. ஒவ்வொரு நல்ல உறவும் பல வருட நம்பிக்கையின் பின்னணியில் கட்டமைக்கப்படுகிறது. நேர்மையும், நம்பிக்கையுமே ஆரோக்கியமான உறவுக்கும், மகிழ்ச்சிக்கும் முதுகெலும்பாகிறது.
26. உங்கள் எல்லா உறவுகளுக்கும் உங்களால் ஒரே பிரச்சனை என்றால் அதற்குக் காரணம் நீங்கள்தான்.
27. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மிகவும் பயனுள்ள விசயங்களில் ஒன்று, உங்கள் எதிர்மறை உணர்ச்சிகளை எவ்வாறு ஆக்கபூர்வமாக வழிநடத்துவது என்பதைக் கண்டுபிடிப்பதாகும்.
28. வாழ்க்கையில் எளிதானது எதுவும் அர்த்தமுள்ளதாக இருக்கும் வாய்ப்பு குறைவு. நமக்கு எளிதாகக் கிடைத்த எதையும் பாராட்டவோ அனுபவிக்கவோ மாட்டோம். எனவே உங்கள் வாழ்க்கையில் கடினமான விசயங்களைத் தவிர்ப்பதை நிறுத்திவிடுங்கள்.
29. விரைவாக படுக்கைக்குச் செல்லவும், அதிகாலையில் எழுந்திருக்கவும் பழக வேண்டியது அவசியம்.
30. இறுதியாக, எதையும் புதிதாகக் கற்றுக்கொள்ள வயது ஒரு தடையில்லை. எந்த வயதிலும் புதிதாக எதையாவது கற்றுக் கொண்டே இருக்கலாம். அது மட்டுமே மன நிம்மதிக்கு வழி.

Thursday, January 9, 2025

கழுகும் – சிறுமியும்

 


கழுகும் – சிறுமியும்

 

அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாறலாம். அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்று உணரும் நாட்களும் வரலாம்.

  ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம், இசையமைப்பு போன்ற துறைகளுக்காக ஐக்கிய அமெரிக்காவில் வழங்கப்படும் மிக உயரிய விருதுதான் புலிட்சர் பரிசு. இவ்விருது நியூ யார்க் நகரத்தில், கொலம்பியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

1994-ம் ஆண்டில் தன்னுடைய சிறப்பான புகைப்படத்திற்காக, கெவின் கார்ட்டர் என்பவர் புலிட்சர் பரிசைப் பெற்றார். தி வல்ச்சர் அண்ட் தி லிட்டில் கேர்ள் (The Vulture and the little girl – கழுகும் சிறுமியும்) என்ற அந்த புகைப்படம் அனைத்துப் படங்களிலும் மிகச்சிறப்பான ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

சூடான் நாட்டின் அப்போதைய சூழ்நிலையை மையப்படுத்தி எடுத்த இந்த புகைப்படம் மார்ச் 26, 1993 அன்று தி நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளிவந்தது. பட்டினியால் மிகவும் பலவீனமாகி இருந்த எலும்பும், தோலுமாக மெலிந்து நடக்க முடியாமல் சுருண்டு கிடந்த ஒரு பெண் குழந்தை ஐக்கிய நாடுகள் சபையின் உணவு வழங்கும் மையத்தை அடைவதற்கு போராடிக் கொண்டிருந்த அந்த குழந்தையின் பின்னால் ஒரு கழுகு, அந்தக் குழந்தை இறந்து விழுந்தால் உணவாக்கிக் கொள்ளலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறது. இந்த சிறப்புப் படத்திற்கான புலிட்சர் பரிசை 1994இல் பெற்றார். ஆனால் அந்த மகிழ்ச்சி வெகு நாட்களுக்கு நிலைக்கவில்லை.

கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான அந்தப் படத்தினால் பலர் அவரை கண்டிக்க ஆரம்பித்தனர். அந்தக் குழந்தைக்கு உதவுவதற்குப் பதிலாக இப்படி படம் எடுத்து புகழ் சேர்த்ததை மிக மோசமாக விமர்சித்தனர். மனம் நொந்து போன கார்டர், அதிகமான மன உளைச்சலுக்கு ஆளானவர் அதிர்ச்சியும், குற்ற உணர்ச்சியின் காரணமாகவும் நான்கு மாதங்களில் தற்கொலை செய்து இறந்து போனார்.

இன்றும் விபத்து நடக்கும் இடங்களில் உயிருக்குப் போராடும் ஒருவரை காப்பாற்றுவதைக் காட்டிலும் அதை படம் பிடித்து வெளியிடுவதில் அதிகக் குறியாக இருப்பவர்களைத்தான் அதிகமாகக் காண முடிகிறது.

 

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...