Thursday, November 10, 2016

சுட்டும் விழிச்சுடர்! - கொடிது .. கொடிது...

பவள சங்கரி


நேற்று காலை செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருக்கும்போது பக்கத்தில் ஏதோ படபடவென மெல்லிய சிறகசைக்கும் ஓசை கேட்டது. சற்றே திரும்பிப்பார்த்தபோது, அழகிய அந்த அடர்நீல வண்ண பட்டாம்பூச்சி என்னருகில் சன்னல் விளிம்பில் தம் சிறகை மெல்ல ஆட்டியபடி அழகு காட்டிக்கொண்டிருந்தது. புதிய 2000 உரூபாய் நோட்டின் சுவையான செய்தியைக்கூடத் தொடரத் தோன்றாமல் அதன் அழகிலேயே இலயித்திருந்த அந்த சுகமான தருணத்தில்தான் திடீரென ஒரு இராட்சசன் பல்லி உருவத்தில் வந்து கப்பென அதன் மென்சிறகைக் கவ்வியே விட்டது. என்ன செய்வது என்று அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அது அந்த சிற்றுயிரை மேலும் தன் வயமாக்கிக்கொள்ள யத்தனித்தது. சட்டென்று சுயநினைவு வந்தவளாக அந்த இராட்சசனை விரட்டிவிட்டாலும் அடுத்த சில மணித்துளிகள் அது துடிதுடித்ததைக் காணச்சகிக்கவில்லை. எப்படியும் பிழைத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையில், செய்வதேதும் அறியாமலே உயிர் நீர் ஊற்றுவதாக எண்ணிக்கொண்டு என் விருப்ப தெய்வங்கள் அத்தனையையும் வேண்டிக்கொண்டு துளித்துளியாக நீர் தெளித்தும் பார்த்தும் ஒன்றும் பலனில்லை. இன்னும் மறக்க முடியாமல் மனபாரம் ஏற்படுத்தும் காட்சியது.. மனிதர்களின் வாழ்க்கைகூட இப்படித்தானே. எந்த நேரத்தில் வாழ்க்கை எப்படி மாறும் என்று தெரியாமலேதானே நம் விருப்பம்போல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..

Saturday, November 5, 2016

நெருஞ்சி முள்


கணிப்பொறியில் சிக்குண்ட 
கனிசமான பொழுதுகளில் 
அம்மாவிடமும் இயந்திரத்தனமான 
உரையாடல்கள்.

இடப்புற ஊக்கு வலப்புறமும்
வலப்புற வளையம் இடப்புறமும்
இடமாறியிருந்த அம்மாவின் 
இரவிக்கையை முதலுங்கடைசியுமாய்
கண்டது இறுதிக் குளிப்பாட்டலில்தான்.
பிடிமானம் அற்றுப்போன இயந்திரத்தனம்
காலமெலாம் நெஞ்சின் நெருஞ்சியாய் .....

Thursday, November 3, 2016

நீளும் பயணம்!



உம் இதய இச்சையின் உச்சம்
நோக்கிய உயர்வில் இன்னொருவர்
நீ கொள்ளையடித்த பணப்பையைக்
களவாடி அதன்மீது மெழுகுக்
கொழுப்பையும் பூசி அப்பொதியையும்
இன்னொருவரை சுமக்கச்செய்பவரிடம்
இரக்கம் காட்டுங்கள்! பாவம்
அச்சதைப் பிண்டத்திற்கு ஏறுதலும்
கடினம், பாதையும் நீண்டதாகிவிடும்!

கலீல் கிப்ரான் / மொழிபெயர்ப்பு

Friday, October 28, 2016

இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்!!




தீபவொளியின் திருமுகம் இதமாய் சுடர்க
தீந்தமிழின் நலம் யாவும் சூழ்க
வான்நிலவின் ஒளிர் முகம் மலர்க
தேன்கனியின் நறுமுகை நலம் பகிர்க
தானெனும் மாயை விலகி ஒளிர்க
வீணெனும் விகல்பம் நீங்கி நிமிர்க
வாழ்வெனும் வசந்தம் பரவி மகிழ்க
தாழ்வெனும் எண்ணம் நிலையா தொழிக

வரமும் நலமும் நித்தம் தொடரும்
இகமும் பரமும் நன்மை நிலைக்கும்
தேவியவள் நேசம் கனிந்து பெருகும்
கருணை பொழில் வாணியின் அருளும்
எங்கும் நிறைந்து அறிவொளி படரும்
பொங்கும் செல்வம் தங்கும் என்றும்
ஒளிரும் மங்கலம் விலகும் இருளும்
மலரும் இன்பம் வையகம் முழுதும்!!

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...