Friday, April 17, 2020

அன்பு நண்பர் உயர்திரு சரவணன் மாணிக்கவாசகம் அவர்களின் என் நூலுக்கான விமர்சனம்!





சூதுபவள மணி- தமிழக கிழக்காசிய வணிகத் தொடர்பு - பவள சங்கரி.
ஆசிரியர் குறிப்பு:
ஈரோட்டை சொந்த ஊராகக் கொண்டவர். சென்னையில் கல்லூரி படிப்பு. இணைய இதழ் ஆசிரியர். யாதுமாகி நின்றாய், வாழ்வியல் வண்ணங்கள், விடியலின் வேர்கள், கனலில் பூத்த கவிதைகள், நயமிகு நங்கையர் உட்பட பலநூல்களை எழுதியவர். தொடர்ந்து நூல் விமர்சனம் செய்பவர். கெய்ஷா எனற பிரபலநூலை தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவர். கொரிய கவிக்குயிலின் கவிதைகளை மொழிபெயர்ப்பு செய்தவர். இந்தநூல் ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு.
திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது கொன்றை வேந்தன். சங்ககாலத்தில் இருந்தே தமிழர்கள் பல நாடுகளுடன் வணிகம் செய்ததும், மணவினைகள் செய்தும் இருந்திருக்கிறார்கள். தொன்மத்தில் இருந்து தமிழரின் உலகளாவிய கடல் வணிகத்தைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் இந்த நூலில்.
நுண்முகம் கட்டுரை, அக்காலத் தமிழரின் குறிப்பாக கொங்கு தமிழரின் பரந்த நோக்கு, வணிக உறவு, புலம் பெயர்தல் முதலிய பல விசயங்களை அலசுகிறது. முத்தம்மாள் பழனிச்சாமியின் நாடுவிட்டு நாடுவந்து என்னும் சுயசரிதை நூலிலும் கொங்கு வேளாளர் புலம்பெயர்ந்த குறிப்புகள் உள்ளன.
தமிழகத்தின் தொன்மை- காலம், சமயம், இலக்கியம், இலக்கணம் என்று பொது சகாப்தத்திற்கு முன் 600 ஆண்டுகளில் தொடங்கி இன்று வரை பகுதிகளாக பிரிக்கப்பட்டு சொல்லப்பட்டிருக்கின்றது. அகழாய்வுகள் அதன் கண்டுபிடிப்புகள் சங்கப்பாடல்களில் வரும் குறிப்புகள் வழி தமிழர் நாகரீகம் விளக்கப்படுகிறது.
தமிழகத்தின் இயற்கைவளம்- முன்பே சாதிகள் இருந்ததில்லை. இரும்பூழிக்காலம் பிற நாடுகளுக்கு முன் இந்தியாவில். நிலவளம் ஐந்து நிலத்திணைகளிலும். நாட்டுப்புறப் பாடல். ஏற்றம், கமலை இறைத்தல் என எத்தனை செய்திகள்!
தமிழர் தொழிலியல்- குவளையம் மூலம் இரும்புத் தயாரிப்பு, உப்பு தயாரிப்பு, தாவரங்கள் வளர்ப்பு, எறி உளி, எருதுப் பாதை, சக்கரம் கண்டுபிடிப்பு, கட்டுமரம் என்று தொழில்களும் சமூகப்பொருளாதார வளர்ச்சியும்.
தமிழர் கடல் வணிக மேலாண்மை- பருவக்காற்றை துணையாகக் கொண்ட கடல் வணிகம்.கடல் கொள்ளையரை சமாளித்தல். கிரேக்கர்களுக்கு கடல் வழிப் பாதையைக் காட்டுதல். (யவனராணி என்ற சரித்திரநாவலே அவர்கள் இங்கு வந்ததை வைத்து புனையப்பட்ட கதை. கடற்கரையில் பேரழகுடன் ஒதுங்கிய யவனராணி!)
ஆய்வேளிரும் கொங்கு வேளிரும்- கொங்கு வேளிர் சமயம், நாகரீகம், வாழ்க்கை முறைகள்,கொடை.
கொங்குநாட்டு வரலாறு- சங்கத்திலிருந்து கொங்குநாட்டை ஆண்ட குறுநில மன்னர்கள், அரசர்கள் பற்றிய குறிப்பு. பௌத்தமதம் சமணம் பரவல். சைவத்தின் வளர்ச்சி. வைணவம், ஆனந்தசயி, சாக்தம், சிறுதெய்வங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள்.
பழந்தமிழரின் உலகளாவிய கடல் வணிகம்-
வணிகம் செய்த பொருட்களும் நாடுகளும்.

உலகக்கடல் வணிகம்- அகழ்வில் கிடைத்த பண்டைகாலத்திய உரோமானிய நாணயங்கள், மூலக்கண்ணாடி, பானை ஓடுகள், உரோமானியக்கலம்.
உலக வணிகத்தின் மேற்கு கிழக்கு மையப்புள்ளி- இறக்குமதி செய்யப்பட்ட ஏராளமான பொருட்கள் பட்டியலின் நடுவே சத்தமின்றி இருக்கிறது, ரோமில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மது! தமிழன் எப்போதுமே ரசிகன் போலிருக்கிறதே!
தமிழ்வணிகம் தோற்றுவித்த அகண்ட தமிழகம்- எல்லைகள் விரிதல் நாடுகள் பற்றிய குறிப்புகளுடன்.
சீனாவுடன் வணிகத் தொடர்புகள்- நான்காம் நூற்றாண்டில் இருந்தே தொடங்குகிறது.
தமிழகத்தின் இரோம வணிகமுறைகள்- தடைகளும் வணிகப்பாதைகளும்.
கடல்சார் வணிகத்தில் ஐரேசிய கப்பல்களின் பங்கு- மரங்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி.
கடல்சார் உலகப்பொருளாதார வணிக இணைப்புகள்- இந்தியப்பெருங்கடல்- உலகவணிகத்தில் இந்தியப்பெருங்கடலின் பங்கு.
சூதுபவள வரலாறு- அரியமணிக்கல். சங்ககாலப்பாடல்களில் குறிப்புகள்
சூது பவளப்பாதை- தமிழகத்தில் அபரிதமாய் கிடைத்த மணிகள்.
ஆய்வேளிர் காலத்திய கொங்கின் வணிக அமைப்பு- கண்ணால் சோதித்துக்கூட பொருட்களை அளந்திருக்கிறார்கள்.
கொரியாவின் கயா அரசி கொங்கின் இளவரசி- ஹேமமாலினி, வகீதா ரஹ்மான், ஸ்ரீதேவி வடநாடு போனால் வாயைப் பிளக்கிறோம். இங்கிருந்து அப்போது எத்தனை பெண்கள் எங்கெல்லாமோ சென்று அரசியாகக்கூட ஆகியிருக்கிறார்கள். பெண்டிர்க்கு சென்றஇடம் எல்லாம் சிறப்பு.
தென் கொரியா கொங்கு ஒப்பாய்வு-
வெற்றிலையின் பிறந்தகம். நம் கலாச்சாரத்துடன் இணைந்த வெற்றிலை. (பாட்டி ஏன் சிறுவயதில் மாடுமுட்டும் என்று சொன்னார்?)

தமிழகம் கிழக்காசியா வணிகம்சார் கடல்பாதை& கிழக்காசியாவின் முன்னேற்றம்- வணிகத்தோடு வளர்ந்த வாழ்வியலும், நுண்கலைகளும்.
உலகக்கடல்வழி வணிகத்தில் கொங்கின் பங்கு- கம்போடிய நாட்டில் கொங்கு வணிகத் தொடர்புகள்.
சங்க இலக்கியமும் திணைசார்ந்த அகழாய்வும்- அகத்திணை புறத்திணை கலாச்சாரம் வாழ்வு விதிமுறைகள்.
கோட்பாடுகளும் ஆய்வு அனுமானங்களும்-
சமூகம், வழிபாடு, வாழ்வியல் தொடர்புகள்
முதலியன கருதுகோள் மற்றும் கோட்பாட்டின் வழியான ஆய்வுகள்.

ஆய்வு முடிவுகள்- வணிகம், சமூக, சமயத் தொடர்புகள் பலநாடுகளுடன் இருந்ததற்கான ஆராய்ச்சி திரட்டுகள்.
கமலஹாசனுக்கு இருக்கும் தொடர்புகளுக்கு உலகப் படங்கள் குறித்து பேசுவது பெரிய காரியமில்லை. அதே போல் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எந்த தகவல்களையும் சேகரித்தல் எளிது. அதனாலேயே நன்கு சமைக்கத் தெரிந்தவர்கள் மீந்த இட்டிலியை பலவித சுவைமிகுந்த பதார்த்தமாக்குவது போல்,
சங்கீதம், சமத்துவம், வானசாஸ்திரம் பற்றி எல்லாம் படைப்புகள் படைக்க முடிகிறது. ராஜம் கிருஷ்ணன் களப்பணியோடு மிகுந்த ஆராய்ச்சி செய்து ஒவ்வொரு படைப்புகளையும் படைத்தவர். அதன் பின் இருக்கும் உழைப்பு எல்லோராலும் செய்யக்கூடியதல்ல.

பவளசங்கரியின் இந்த நூல் அது போல் முழு உழைப்பையும் அர்ப்பணிப்பையும் ஏந்தி வருவது. சூதுபவள மணியை குறியீடாகக் கொண்டு தமிழர் கடல்கடந்தவணிகம், வாழ்வியல், சமயம், நாகரீகம் என்று எத்தனையோ தகவல்கள் தமிழரின் வாழ்க்கையை சொல்லி வருகின்றன. வாழ்வியல் முறை நூல்களே நம்மிடம் அரிது. சங்கப்பாடல்களின் குறிப்புகள் இடையிடையே படிக்கும் ஆர்வத்தைக் கூட்டுகின்றன. கம்போடியாவில் இருக்கும் ஆவணங்கள் கிடைத்தால் முழுமையான சித்திரம் கிடைக்கும் என்று சொல்லும் அளவிற்கு இந்த நூலில் இவரது முனைப்பு. வரலாறு, சமூகம், சமயம் என பல கோணத்திலும் இந்த நூல் சிறப்பு வாய்ந்தது. பூ பூத்தல் அதன் இஷ்டம் போய்பார்த்தல் உன் இஷ்டம் என்ற கல்யாண்ஜி கவிதை சில சமயங்களில் சிலபுத்தகங்களுக்கும் வெகு பொருத்தமாக அமைந்து விடுகிறது. பணிவான வணக்கங்களும் வாழ்த்துகளும் பவளசங்கரி.
பிரதிக்கு:
பழனியப்பா பிரதர்ஸ் 044- 28132863 & amazon kindle
முதல்பதிப்பு 2019
விலை ரூ 310.

வெண் பட்டுப்பாதை





கள்ளமும் கசடும்

காழ்ப்பும் அகந்தையும்

நிறைந்த உள்ளம்

வெண்பட்டுப்பாதையையும்

முள் பாதையாக்கும்!

#பவளா




Thursday, April 9, 2020

கொரோணா ஒழிக!






ஏய் கொக்கரிக்கும் கொடுங்கோலன் கொரோணாவே
போதும் நிறுத்து உன் ஆட்டத்தை
பல்லாயிரம் உயிர்களைக் கபளீகரம் செய்தும்
இலட்சக்கணக்கான மனிதர்களை சீண்டிப் பார்த்தும்
கோடிக்கணக்கானவர்களை அச்சத்தின் உச்சத்தில் நிறுத்தியும்
அடங்கவில்லையா உன் அகோரப் பசி?
மனிதர்களின் உயிர்களைக் குடித்தது போதும்
வேண்டுமானால் அவர்தம் பாபம் கோபம்
குரோதம் ஆணவம் அகங்காரம் வன்மம்
என்றனைத்தையும் உண்டு ஆற்றிக்கொள் உன்பசியை!
எம் சந்ததியினரின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும்
இனியும் அசைத்துப் பார்க்கவும் எண்ணிவிடாதே!
எச்சரிக்கிறேன் உன்னை! அடங்கி விடு!
அடங்க மறுத்தால் அழித்து விடுவாள்
பராசக்தி! பரிதவித்து நிற்கும் சாமான்யர்களின்
துயரம் நிறைந்த வேளையில் மிகுந்திருக்கும்
சோகத்தைத்தானே பலி கொடுக்க இயலும்?
அதையேற்று அடி ஆழத்தில் புதைந்துவிடு
அன்னையின் பொற்பாதங்களில் ஆதரவாய் பணிந்துவிடு
அவளருளால் நற்பிறவி வாய்க்கும் வரமேற்றுவிடு
செய்த பாவத்திற்கு மன்னிப்பும் பெற்றுவிடு!
சரணாகதியால் பிழைத்துப்போ! சேதாரமின்றி தப்பிப்போ!!
சங்கடமேற்படுத்தி சங்காரம் செய்யத் தூண்டிவிடாதே!!

Monday, April 6, 2020

கொரோனா ..... 3



கரோனா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களுடன் நம் பிரதமர் மோடி அவர்கள் பேசியது வரவேற்கத்தக்கது. சோனியா காந்தி, பிரணாப், மன்மோகன் சிங், தேவகவுடாவுடன் பிரதமர் ஆலோசனை செய்துள்ளார்கள். விரைவில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பேசத் திட்டமிட்டுள்ளதும் பாராட்டிற்குரியது. இது மிகவும் ஆக்கபூர்வமான செயல்பாடு என்பதில் ஐயமில்லை.

கொரோனா கொடுமை - 2




அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,36,000 என்பதை தாண்டிவிட்டது. தற்போது நிலவரப்படி கிட்டத்தட்ட 9,620 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. வெகு விரைவில் இது 1 இலட்சத்தைத் தொடும் வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் அபாய எச்சரிக்கை மணி அடித்து விட்டார்கள். இந்த நிலையிலும் மக்கள் கொஞ்சமும் விவரம் இல்லாமல் வீடு அடங்கிக் கிடக்காமல் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதால் நிலைமை மேலும் மோசமாவதில் ஐயமில்லை. குழந்தைகள் கூட தெருவில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருப்பதாகவும், வால்மார்ட் போன்ற மால்களில் பழையபடியே மக்கள் எந்தவிதமான அச்சமும் இல்லாமல் சாவகாசமாக பொருட்கள் வாங்கிச் செல்வதாகவும் நண்பர் ஒருவர் கூறியது கவலை அளிப்பதாக இருந்தது. அதைவிட முக்கியமாக அவர் கூறிய இன்னொரு செய்தி, நம் இந்திய நாட்டின் அருமை இப்போதுதான் தெரிகிறது, நம் பிரதமரும், தமிழக முதல்வரும் எவ்வளவோ பரவாயில்லை. முன்னெச்சரிக்கையுடன் சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்து விரைவாகச் செயல்படுவதால் தொற்றின் வீரியம் விரைவில் கட்டுக்குள் வந்துவிடும் என்று நம்பிக்கை அளிப்பதாகவும் கூறினார். கட்சி சார்பற்ற என்.ஆர்.ஐ. என்பதால் நம்பிக்கைக்கு உரிய கருத்து என்றே பார்க்கிறேன். 144 தடை உத்திரவும் போட முடியாமல் மக்களைக் கட்டுப்படுத்தவும் முடியாமல் திணறுகிறார்கள். நம் நாட்டில் காவல்துறையினரின் சிறப்பான செயல்பாடு மக்களின் அடிப்படைக் கலாச்சாரம் சார்ந்த சுய கட்டுப்பாடு நிலைமையை பெருமளவில் கட்டுக்குள் வைத்திருந்தாலும், மக்கள் சந்தைகளில் கூடுவதைத் தவிர்க்க முடியாமல் அலைமோதுகிறார்கள். இதையும் உணர்ந்து செயல்படும்   நம்  தமிழக அரசு ஒவ்வொரு ஊராக 100 உரூபாய் விலையில், முக்கியமான காய்கறிகளை ஒரு பையில் போட்டு தெருவில் கொண்டு வந்து விநியோகம் செய்வது சிறப்பான செயல்திட்டம்.

அமெரிக்காவைப் பொருத்தவரை இது போன்ற திட்டங்களுக்கெல்லாம் சாத்தியமே இல்லை. இவர்களுடைய அடிப்படைக் கலாச்சாரமே ஆட்டம் கண்டுவிட்ட நிலையில் செய்வதறியாது திகைத்துப்போய் மனக்குழப்பத்தில் இருக்கிறார்கள் போலும். குளிர் காலம் முடிவடையும் தருணத்தில் வசந்த காலத்தைக் கொண்டாடும் நிலையில் குழந்தைகள் வீட்டிற்குள் அடைந்து கிடக்க விரும்பவில்லை.

அந்த வகையில் அமெரிக்காவை கொரோனா என்னும் சுனாமி சீரழித்துக்கொண்டிருக்கிறது. டாக்டர் ஆந்தோனி பவுஸி என்கிற நியூ யார்க் நோய்த்தொற்று நிபுணர் கூறுகையில் புளோரிடா, மிச்சிகன் லுயூசியான உள்ளிட்ட இதுவரை கொரோனா பரவாத இடங்களில் கூட தற்போது புதிதாகப் பரவத் துவங்கி உள்ளது என்றுள்ளார். ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாகி உள்ளது என்கிறார். இதைவிட ஆச்சரியம் ஜியார்ஜியா மாநில கவர்னர் பிரைன் கெம்ப் என்பவர், இது தொற்றுக் கிருமி என்பதே தெரியாமல் இருக்கிறார். மேலும் இது மக்களை பாதிக்காமல் இருக்க சமூக இடைவெளி முக்கியம் என்பதை வெகு சமீபத்தில்தான் தெரிந்துகொண்டேன். இனிமேல் மக்களை சரியாக வழி நடத்திவிடுவேன் என்றதுதான் .. காலங்கடந்த தெளிவு ..  கடவுளே என்றுதான் இந்த மனித சமூகம் இந்த கொரோனா கொடுமையிலிருந்து விடுபட்டு இயல்பு நிலைக்குத் திரும்பப் போகிறதோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!



Saturday, April 4, 2020

கொரோனா கொடுமை - 1



படித்த அரசு அதிகாரிகளும் இப்படி இருந்தால் என்ன செய்வது?
சமீபத்தில் கொல்கத்தா, இங்கிலாந்திலிருந்து திரும்பிய, தனது முதல் கொரோனா தொற்று நோயாளியை உறுதிப்படுத்தியது. அவர் ஒரு உயர் அதிகாரியின் மகன்.
18 வயதான இந்த ஆக்சுபோர்டு பல்கலைக்கழக மாணவர் மார்ச் 15 அன்று இலண்டனில் இருந்து கொல்கத்தாவில் இருக்கும் தன் வீட்டிற்குத் திரும்பினார். சொந்த ஊருக்கு வருவதற்கு முந்தைய நாள் இரவு, தீன் என்ற இந்த இளைஞர், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தனது இலண்டன் தோழர்களுடன் பார்ட்டியில் இருந்துள்ளார். இதனை உறுதி செய்துகொண்ட விமான நிலைய அதிகாரிகள் அவரை மருத்துவமனையில் சென்று சோதனை செய்யச் சொன்னார்கள். ஆனால் கவலை ஏதுமின்றி அவன் விதிமுறைகளையும் மீறியதோடு மேற்கு வங்காளத்தின் உயர்மட்ட அதிகாரியான அவரது தாயார் அருணிமா தேவிடம் சென்று சேர்ந்திருக்கிறார்.
இப்படியெல்லாம் அவர் சமூகத்துடன் கலந்து வாழ்க்கையைத் தொடர்ந்தார். அவர் 7 க்கும் மேற்பட்ட கேளிக்கை விருந்துகளில் பங்கேற்றார் என்றும் சிலர் கூறுகிறார்கள். அவர் தனது தாயை மேற்கு வங்க முதல்வர் அலுவலகத்திலும் சென்று சந்தித்திருக்கிறார்.
ஆனால் இதன்பின் கொரோனா தொற்றின் அறிகுறிகள் மோசமாகி, மார்ச் 16 அன்று தனது மகனை எம்.ஆர்.பங்கூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார் அம்மா.
ஆனால் மீண்டும் மகனை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்து, அவரது தாயார் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அதை விட்டு வெளியேறினார்.
இறுதியாக, மாநில சுகாதார நலத் துறை தலையிட்டு அவரை பெலகாட்டா ஐ டி மருத்துவமனையில் அனுமதிக்கும்படி கட்டாயப்படுத்தியது, அங்கு அவர் மார்ச் 17 அன்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்ததை உறுதி செய்யப்படுகிறார்.
இரண்டு நாட்களுக்குள் அவர் எத்தனை பேருக்கு தொற்றை பரவச் செய்திருக்கலாம் என்று கற்பனை செய்து பாருங்கள். இப்போது அவரது குடும்பம் அவர்களின் ஆடம்பரமான தெற்கு கொல்கத்தா வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவரது ஏழை வாகன ஓட்டுனர்களும் அடக்கம் என்பது வேதனையான செய்தி. அதிகாரியான அருணிமா இந்த இடைப்பட்ட நேரத்தில் பல அரசாங்க கூட்டங்களிலும் கலந்துகொண்டுள்ளார்.
இந்த செய்தி வெளிச்சத்திற்கு வந்த பின்னர் மேற்கு வங்க செயலகத்தையே கிருமி நாசினியால் தூய்மை செய்ய வேண்டியிருந்துள்ளது.

Annu Kaushik
Journalist at WION (World Is One News) -

Monday, March 30, 2020

பிறந்தநாள் வாழ்த்துகள்!




அன்பு மகன் செந்தில் குமாரின் இனிய பிறந்தநாள் இன்று. குழந்தைகள் எல்லாம் அக்கரையில் இருக்க, இக்கரையில் நாங்கள் நினைவுகளைச் சுமந்துகொண்டு இறையருளால் அனைத்து துன்பங்களும் தீர்ந்து அனைவரும் புத்துயிர் பெற்று இணைவோம் என்ற நம்பிக்கையுடன் அன்பு மகனை வாழ்த்துகிறோம். தங்களின் உளமார்ந்த வாழ்த்துகளும் அவர்களை நலமாக வாழவைக்கும் என்று நம்புகிறேன். வாழ்த்துங்கள் நண்பர்களே!  நன்றி.






வெற்றிவாகை சூடிவா  மகனே!
நம்பிக்கையோடு எதிர்கொள் சவால்களை
உலகின்  உன்னதங்கள் யாவையும் அதனூடே
மறையாய் மகோன்னதமாய் மலர்ந்திருக்கும்
சாகசங்களை மகிழ்வாய் கொண்டாடிவிடு சகோதரத்துடன்
பம்பரமாகச் சுழன்று வென்றுவிடு நல்மனங்களை

புன்னகை சூடியே புவியை ஆளலாம் 
இன்னல் விலக்கலாம் இதமான சொல்லால்
வள்ளல் ஆகலாம் வளமான செய்கையால்
இதயம் மலரலாம் மதியூகச் சிந்தையால்

கள்ளம் இல்லா உள்ளத்தோடு வலம்வரும்
கருணை பொங்கும் இதயத்தோடு நலம்நாடும்
என்றும் மானம் பெரிதெனும் தவத்தோடும்
உண்மை நெறியோடு வாழும் உறுதியுடனும்

நேயமெனும் சுடரேற்றி தூய்மையெனும் சுவாசமுடன்
நட்பெனும் கவசமுடன் பாசமெனும் பரவசத்துடன்
நித்தமும் நினைவோடு கனவிலும் நித்தியனை
பணிந்தேற்றி கடந்திடு இன்றைய சோதனையை.

நன்றே செய்கினும் நமச்சிவாயனின் பதம்பற்றி
தீதே விளையாதெனும் நம்பிக்கை ஒளியுடன்
பாரே போற்றும் நற்காரியங்களை நாளும்
நயந்து சிரமேற்கொளும் பண்புடனே வாழ்க!

உனதன்பெனும் தீராக்கடனை சுமப்பவள் நானடா!
துன்பம் யாவும் கதிரோனைக்கண்ட பனிபோல் விலக
வளமும் நலமும் பெற்று வாழ்க வாழ்க
தரணி போற்றும் தமிழும் அமிழ்தும் போல 
மங்கலமாய் மனைவி மக்களுடன் மங்காப்
புகழுடன் மாமனிதமாய் வாழ்க நீ பல்லாண்டு!!


காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...