Tuesday, June 28, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில்! (15)

இல்லறம் என்ற இனிய பந்தத்தின் அடித்தளமாக இருப்பது, சம்பந்தப்பட்ட அந்த இரு இதயங்களின் இடையே ஓடும் மெல்லிய நூலிழை போன்ற சுயநலமற்ற அன்பு மட்டுமே. தன்னுடைய சுக துக்கங்கள், வெற்றி தோல்விகள் என அனைத்தையும் ஒளிவு மறைவின்றி பகிர்ந்து கொள்ளும் அந்த நேசம் மிக அவசியம். ஒரு இதயம் வலியால் துடிக்கும் போது அதை உணர்ந்து அதற்கான மருந்தாக இருககக் கூடிய பாசமாக இருக்க வேண்டும் மற்றொரு இதயம். இதில் ஏதேனும் தடுமாற்றம் வரும் போதுதான் அந்த இனிய பந்தமே கேள்விக் குறியாகிவிடுகிறது.

அந்த வகையில் அனுவிற்குப் பல சந்தேகங்கள் மனதில் எழ ஆரம்பித்திருந்தது. இன்று வரை மாறனிடமிருந்து, ஒரு அன்பான விசாரிப்போ கனிவான ஒரு பார்வையோ, குறைந்த பட்சம் ஒரு நட்பின் வெளிப்பாடோ கூட இல்லை என்பது ஆச்சரியமான விசயமாக இருந்தது. அவளுக்கு உள் மனதில் லேசாக பொறி தட்ட ஆரம்பித்தது. மாறன் மனதில் தன்னைவிட உயர்ந்த இடத்தில் வேறு எவரோ இருப்பதை உணர முடிந்தது அவளால். எதையும் மிக எளிதாக புரிந்து கொள்ளக் கூடிய கற்பூர புத்தி உடையவள் அனு. அதனாலேயே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மனதைத் தெளிவாக வைத்துக் கொள்ள முடிந்தது அவளால். கண்டதும் காதல் என்ற தத்துவத்திலெல்லாம் பெரிதாக நம்பிக்கை இல்லை அவளுக்கு. அதனால் தன் மாமன், மாமிக்குச் செய்யக் கூடிய பணிவிடைகள் ஒரு பாரமாக ஆவதற்கும் வாய்ப்பில்லை. இயற்கையிலேயே இரக்க சுபாவம் கொண்ட அனுவிற்குத் தன் கண் முன்னால் அடுத்தவர் வேதனைப் படுவதை சகித்துக் கொள்ள முடியாது முடிந்த வரை உதவி செய்ய நினைப்பாள். அலுவலகப் பணியில் கூட இயலாதவர்களுக்காக இழுத்துப் போட்டுக் கொண்டு அவர்கள் வேலையையும் செய்து கொடுப்பதில் தயக்கம் காட்ட மாட்டாள்.

நல்ல காரியம் பேசுவதற்காக கிளம்பிய போது இது போல தடை ஏற்பட்டது சிறிது கவலை அளிப்பதாக இருந்தது மாறனின் பெற்றோருக்கு. திரும்பவும் ஒரு முறை குலதெய்வ வழிபாடு செய்தால் தேவலாம் போல் தோன்றியது. இருவரும் இது பற்றி கலந்து முடிவு செய்ய வேண்டும் என்று ஒருவருக்கொருவர் தன் மனதில் நினைத்துக் கொண்டிருந்தனர்.

ரம்யா………இதயம் இரத்தம் சிந்த உதடு மட்டும் புன்னகைக்கும் அரிய கலையைக் கற்ற அற்புதப் பிறவியவள். அலுவலகம் விட்டு வீடு சென்றாலே இப்போதெல்லாம் அச்சமாக இருக்கிறது அவளுக்கு. காரணம் அவள் தாயின் நியாயமான ஆசையையும் பூர்த்தி பண்ண வேண்டிய கட்டாயம் தான். ஆம் தன் குழந்தைக்கு காலாகாலத்தில் ஒரு கல்யாணம் செய்து வைத்துப் பார்ப்பதில்தானே ஒரு பெற்றோரின் உண்மையான கடமை இருக்கிறது. ரம்யாவிற்கு அவள் மனதிற்குப் பிடித்த வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லாத சூழலில் கூட விதி அவள் வாழ்க்கையில் கொடூரமாக அல்லவா விளையாடி விட்டது. இப்போது திருமணம் என்ற பேச்செடுத்தாலே, இதயத்தில் இடி விழுந்தது போல ஒரு அதிர்வல்லவா ஏற்படுத்துகிறது…….. இதைச் சொல்லி புரிய வைக்கும் பக்குவம் கூட அவளிடம் இல்லாது போய்விட்டது. அப்படியே சொன்னாலும் அதைச் சரியாக அவள் பெற்றோரால் புரிந்து கொள்ள இயலுமா என்பதே கேள்விக்குறிதான். காரணம் அவர்களுக்கு ஏற்கனவே தன் மகளின் சம்பாத்தியத்தினால் குடும்பம் நடத்த வேண்டிய கட்டாயம் வந்ததில் ஒரு குற்ற உணர்ச்சி.

எது எப்படியாயினும் ரிஷி தன் உண்மையான அன்பை அலட்சியப்படுத்தியதன் வலி இன்றளவும் தாங்கவொண்ணாததாகவே இருக்கிறது ரம்யாவிற்கு. காரணம் எவ்வளவு உயர்ந்ததாகவும், உன்னதமாகவும் இருந்தாலும், ஒரு உண்மையான காதலுக்குச் செய்யும் துரோகத்திற்கு ஒரு முன்னறிவிப்பாவது கொடுத்திருக்கலாமே என்ற ஆதங்கம் இன்றளவும் அவள் மனதை அரித்துக் கொண்டிருக்கும் விசயம். இதையெல்லாம் கடந்து அடுத்த ஒரு பந்தத்திற்குள் நுழைவது அவ்வளவு எளிதான காரியம் அல்லவே.



வந்தனா, எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் ரம்யாவின் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தின் காட்சியை மறக்க இயலாமல் 



தவித்தாள். தானே அதற்கு முழுமையான காரணமாகிப் போனதின் வலி பாடாய்ப் படுத்துவதையும் தவிர்க்க இயலாமல் தவித்துக் கொண்டிருந்தாள். ரிஷியின் நிலையோ இதை விடக் கொடுமையானது. வெளியில் சொல்லவும் முடியாமல் மறைக்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்துக் கொண்டிருந்தான். ரம்யாவிற்கு ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்று மனதார வாழ்த்திக் கொண்டிருப்பதைத் தவிர வேறு ஏதும் செய்ய இயலாத சூழல் அவனைக் கட்டிப் போட்டு வைத்திருந்தது. இதற்கிடையில் வந்தனாவின் உடல் நிலை வேறு முழுமையாக குணமடையவில்லையோ என்று சந்தேகப் படும் வகையில் அடிக்கடி அவளுக்கு சுகவீனம் ஏற்படுவதும், மருத்துவ மனை செல்ல வேண்டிய தேவை ஏற்படுவதும் சேர்ந்து அவன் நிம்மதியை குலைத்துக் கொண்டிருந்தது. வாழ்க்கை பல நேரங்களில் இப்படித்தான் தன் போக்கில் இழுத்துக் கொண்டு சென்று கொண்டிருக்கும். பகுத்தறிவோ, பட்டறிவோ எதுவும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது. இதற்குப் பெயர்தான் விதி என்பதோ?


படைப்பாளிகள் அதிகமாக உணர்ச்சிவயப் படுகிறவர்களாக இருப்பினும் அதனையே தன் படைப்பில் புகுத்தி சாதனைப் படைக்கும் வல்லமையும் பெற்றவர்களாவதால் அதுவும் ஆக்கப்பூரவமானதாகவே அமைந்து விடுவதும் கூடுதல் நன்மையாகி விடுகிறது! அந்த வகையில் அவந்திகாவின் மென்மையான குணம், நித்சலமான மனது, யதார்த்த்மான போக்கு, பரோபகாரச் சிந்தை இப்படி அனைத்தையும் அவளுடைய சித்திரங்கள் வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டும். உயிரோட்டமுள்ள அவளுடைய சித்திரங்கள் ஒவ்வொன்றும் பல கதைகள் பேசி, காண்போரின் பார்வையைக் களவாடிக் கொண்டு போகும் சக்தி வாய்ந்ததாகும். புதிய இடம், புதிய சூழல் அவள் மனதில் பல மாற்றங்களை ஏற்படுத்தத்தான் செய்தது. ரம்யா கலகலப்பாக பழகும் சுபாவமாக இருந்தாலும், அவளிடம் ஏதோ பெரிய சோகம் ஒளிந்து கொண்டிருப்பது தெரிந்தது. இருந்தாலும் அதை வெளிப்படையாகக் கேட்கும் அளவிற்கு இன்னும் நெருக்கமான பழக்கமில்லையே. அதனால் அமைதியாக இருக்க வேண்டியதாகத்தான் இருந்தது. மாறன ஒரு நல்ல நண்பனாகவும், பண்பாடு அறிந்த மனிதனாகவும் இருப்பது அவளுக்கு அவன் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தியிருந்தது. தினமும் ரம்யா அவந்திகாவை அவளுடைய அலுவலகத்தில் இறக்கி விட்டு விட்டு தன் அலுவலகம் செல்வதை வழமையாக்கிக் கொண்டாள்.

அமைதியாக பிரச்சனை இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிற அவந்திகாவின் வாழ்க்கையில் குழப்பம் ஏதும் வராமல் இருக்க வேண்டும் என்று அவளின் பெற்றோர் அன்று கோவிலில் அர்ச்சனை செய்து வேண்டிக் கொண்டிருந்தனர். எந்த வரனும் அவளுக்குச் சரியாக அமையவில்லையே, வயது ஏறிக் கொண்டே போகிறதே என்ற கவலை அவர்களுக்கு.அவள் அழகிற்கும், கல்வித் தகுதிக்கும் ஏற்ற வரன் அமைய வேண்டுமே என்று ரொம்பவும் கவலைப் பட்டுக் கொண்டிருந்தனர் அவள் பெற்றோர். ஆனால் அவந்திகாவோ அதைப் பற்றியெல்லாம் ஏதும் சிந்திக்கக் கூட பொழுதில்லாமல், உத்தியோகம், சித்திரம் என்று காலத்தை விரட்டிக் கொண்டிருந்தாள். ஆனால் அவளுக்குப் புரியவில்லை, அந்த காலம் வெகு விரைவில் அவளைத் திருப்பி விரட்டப் போவது!

தொடரும்.

No comments:

Post a Comment