Tuesday, December 30, 2014

பனிப்புயல்


பவள சங்கரி



அடாது வீசிக்கொண்டிருக்கிறது பனிப்புயல்
குளிராடையின்றி அலையோரம் அலையுமனது
நடுங்கியபடி கடக்கிறது காலங்களை
தெருமுனை வழிகாட்டியின் அருகில்
நோட்டமிட்டவாறு கூரிய அம்புகள்
பனிப்புயலையும் குத்திக் கிழிக்கும்
வல்லமை கொண்டததன் முனைகள்
கதிரொளியால் உருகி வழியப்போகும்
அப்பனிப்புயல் ஏதோவொரு நேரம் 
நீராய்ப் பெருகி ஓடக்கூடியது


வீசியபடி வெருண்டெழுகிறது பனிமழை
பதறியபடி பறந்தெழுகிறது வல்லூறுகள்
கதறியபடி துடித்தெழுகிறது நீர்த்திவலைகள்
தடுத்து நிறுத்தும் குடையில்லை என்மனத்திடம்
நனைந்தபடி தொடரும் நடையின் வேகத்தில்
குளிர் விட்டுப் போயிருந்தது.
குடையிப்போது கரம்மாறி பனிப்புயலின்
சிரசில் காளிங்க நர்த்தனமிட்டபடி
அமைதியாக்கியிருந்தது அனைத்தையும்!
அன்பில் நனைந்த மலர்கள் அகம் குளிரும்!

1 comment:

  1. அன்பே அனைத்தும்...

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete