Thursday, June 30, 2016

மனிதாபிமானம்




ஒரு பிரபலமான வங்கியில் முதியோர் ஓய்வூதியம் வாங்க வந்திருந்த ஒரு தம்பதியரின் மிக மோசமான நிலையை அறிந்தபோது இதயம் துடித்தது. வங்கி மேலாளரிடம் ஓய்வூதிய மனு நிரப்பும்போதே அடுத்த மாதத்திலிருந்து பணம் கைக்கு கிடைத்துவிடுமா என்று கேட்க அவர் சிரித்துவிட்டு ஒரு ஆண்டு ஆகும், இன்னும் எத்தனை வேலை இருக்கிறதே என்கிறார். கிராம நிர்வாக அதிகாரி, தாசில்தார் போன்றோரிடம் கையெழுத்து வாங்க வேண்டும் போன்ற சட்ட திட்டங்கள்… நொந்துபோய் வந்தவரிடம் ஒருவர் தலைக்கு 2000 செலவு செய்தால் ஒரு மாதத்தில் பென்சன் கிடைத்துவிடும் என்று ஆறுதல் சொல்கிறார். இந்த தம்பதியரின் நிலையில் இந்த 4000 மிகப்பெரியத் தொகையாகத் தெரிய மலைத்துப்போய் நிற்கிறார்கள். ஆண் ஒன்று பெண் ஒன்று என இரு குழந்தைகள் பெற்ற மகராசர்கள். மகள் வீட்டில் பெரியவர்கள் ஒரு பகுதியிலும் மகன் ஒரு பகுதியிலும் தனித்தனியாக குடித்தனம் செய்கிறார்கள். மகனும் தன் வசதிக்கு பெற்றவர்களுக்கு சாப்பாட்டிற்கு தன்னால் முடிந்ததைத் தருகிறாராம். இந்த நிலையில் ஓரளவிற்கு வசதியாக இருக்கும் மகள் தன் வீட்டிற்கு பெற்றோர் சரியாக வாடகை தருவதில்லை என்பதற்காக வெளியே முடுக்கிவிடச் சொல்லிவிட்டாராம்… இந்தக்கொடுமையான சூழ்நிலையில் முதியோர் ஓய்வூதியம் பற்றி அறிந்து, அம்மா புண்ணியத்தில் 500 ரூபாய் அதிகம் உயர்ந்து 1500 கிடைக்கிறது என்று மகிழ்ச்சியோடு வந்தால் இங்கு இந்த நிலை..


முதியோர் ஓய்வூதியம் என்பது அழிவு நிலையில் இருக்கும் பயிருக்கு உயிர்நீர் ஊற்றுவது போலத்தானே.. இதற்கு எத்தனை கையெழுத்துகள், சட்டதிட்டங்கள், கையூட்டுகள்…! சரி அப்படியே இருந்தாலும், இந்த முதியவர்கள் அங்கங்கு அலைந்து திரிந்து கையெழுத்து வாங்கும் சிரமத்தைக் குறைக்கும்விதமாக குறிப்பிட்ட வங்கிகளில் குறிப்பிட்ட ஒரு சில மணி நேரங்கள் கிராம நிர்வாக அதிகாரியோ அல்லது சம்பந்தப்பட்ட வேறு அதிகாரிகளோ அங்கேயே வந்திருந்து அந்த கையெழுத்தை போட்டுத் தருவதற்கு ஏதாவது ஏற்பாடு செய்யலாமே? அவர்கள் கையூட்டு தரும் அவலமும் தீரலாமே? இது மனிதாபிமான அடிப்படையில் தீர்க்கவேண்டிய பிரச்சனை அல்லவா?

No comments:

Post a Comment