63 நாயன்மார்கள் வரலாறு – 34 சிறப்புலி நாயனார்
“சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்” என்று
திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனாரால் போற்றப்படுகின்ற
சிறப்புலி நாயனார் காவிரியாறு பாய்ந்தோடும் சோழ நாட்டின் பழமையான
திருவாக்கூர் திருத்தலத்தில் வேதம் போற்றும் அந்தணர் மரபில்
அவதரித்தவர். சேக்கிழார் பெருமானால் வள்ளலார் என்று போற்றிப்
புகழப்படும் மிகச் சிறந்த வள்ளன்மையுடன் விளங்கிய சிறப்புலியார்
தன்னிடம் உள்ளதனைத்தும் சிவபெருமான் அளித்தது என்று எண்ணி
அடியவர்கள் கேட்கும் முன்னமே அவர்களை எதிர்கொண்டு வணங்கி
இன்சொல் கூறித் திருவமுது அளித்து மகிழ்பவர்.
பொன்னி நீர் நாட்டின் நீடும்
பொற்பதி புவனத்து உள்ளோர்
இன்மையால் இரந்து சென்றோர்க்கு
இல்லை என்னாதே ஈயும்
தன்மையார் என்று நன்மை
சார்ந்த வேதியரைச் சண்பை
மன்னனார் அருளிச்செய்த மறைத்
திருவாக்கூர் ஆக்கூர்
சிவனடியார்களை உபசரிப்பதைத் தவிர வேறு சிந்தனையும் பற்றும்
அற்றவராக இருந்தார். இளவயதிலிருந்தே சிவபெருமான் மீது அதீத பக்தியும்
அன்பும் கொண்டிருந்தவர், அன்றாடம் ஐந்தெழுத்து மந்திரத்தை முக்காலமும்
நியமமாக ஓதி வேள்விகளைச் சிவாகம முறைப்படி நடத்தியும் மகிழ்வுற்றார்.
திருவாக்கூர் திருத்தலத்தில் கோயில் கொண்டிருக்கும் வாள் நெடுங்கண்ணி
சமேத தான்தோன்றீசுவரை அனுதினமும் வழிபட்டு வருவதைக்
கடமையாகக் கொண்டிருந்தார். இடியின் ஓசையையும் மூழ்கடிக்கும்
வேதங்களின் ஒலியால் நிறைந்திருந்த திருவாக்கூர் நகரம்,
மாயவரத்திலிருந்து தரங்கம்பாடி செல்லும் வழியில் அமைந்துள்ளது.
சிவனடியார்களின் மீது பேரன்பு கொண்ட சிறப்புலி நாயனார் நீறணிந்த
அடியார்களைக் கண்டதும் அன்புடன் அவர்களை வணங்கி திருவமுது
படைத்து மகிழ்வார். ஈடு இணையற்ற அன்பினாலும் விருந்தோம்பலினாலும்
மக்களால் பெரிதும் போற்றப்படார்.
இறையருளால் ஒரு சமயம், சிறப்புலி நாயனார் ஆயிரம் அடியார்களுக்கு
திருவமுது படைக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது அடியார்கள் வந்துவிட்ட
நிலையில், இன்னும் ஒரு அடியார் வரவேண்டுமே என மன வேதனை
அடைந்தார். திருவாக்கூரில் கோவில் கொண்டிருக்கும் தான்தோன்றிநாதரை
மனமுருக வேண்டியபோது, சிவபெருமான் தாமே சிவனடியார் வேடம்
பூண்டு சிறப்புலி நாயனாரின் இல்லத்தில் நடக்கும் திருவமுதை ஏற்க வந்தார்.
அவரை பேரன்புடன் வரவேற்று திருவமுது செய்வித்த சிறப்புலியாருக்கு
மட்டுமின்றி சிவபெருமான் அங்கிருந்தோர் அனைவருக்கும் திருக்காட்சி
அருளினார். இதனால் திருவாக்கூர் தான்தோன்றீசுவரருக்கு “ஆயிரத்தில்
ஒருவர்” என்ற திருப்பெயரும் உண்டு. சிவனடியார் திருத்தொண்டில் சிறந்து
விளங்கிய சிறப்புலி நாயனார் இறுதியில் பேரின்பமான வீடுபேற்றினை
அடைந்தார்.
திருவாக்கூர் கோயில் மகாமண்டபத்தில் சிறப்புலி நாயனாருக்குத் தனி
சந்நிதி உள்ளது. சந்நிதிக்கு நேர் எதிரே தெற்கு நோக்கிய நிலையில் சிறப்புலி
நாயனாருக்கு திருக்காட்சி அளித்த மூர்த்தியாகிய ஆயிரத்தில் ஒருவர்
சன்னிதியும் உள்ளது.
சிறப்புலி நாயனார் புராணம் சொல்லும் கருத்து:
உலகிலேயே சிறந்தது ஈதல் எனும் அறம் என்பார் ஔவை. கொடுப்பவர்கள்
உயர்ந்தவர்கள் என்றும், கொடுக்க மனம் இல்லாதவர்கள் தாழ்ந்தவர்கள்
என்றும் ஔவையார் விளக்குகிறார். அடியவர்கள் எப்போதும் தன்னால்
இயன்றவரை அனைவருக்கும் உதவுபவர்கள். தங்கள் உடைமைகளையும்,
தங்களையுமே பிறருக்காக அளித்து மகிழும் வள்ளன்மை கொண்டவர்கள்.
சிறப்புலி நாயனாரும் அடியவரிடத்திலும் ஆண்டவனிடத்திலும் அளவிட
முடியாத பக்தியுடன் பலத் திருத்தொண்டுகள் புரிந்தார். பக்தியில் முதற்படி
தம்மிடம் உள்ளதை பிறருக்கு மனமுவந்து கொடுப்பது என்பதற்கு ஆதாரமாக
சிறப்புலியார் தம்மை நாடி வந்தவர்களுக்கெல்லாம் மாரி போல வாரி
வழங்கும் தன்மையுடையவராக இருந்தார்.
ஆளும் அங்கணருக்கு அன்பர் அணைந்த
போது அடியில் தாழ்ந்து
மூளும் ஆதரவு பொங்க
முன்பு நின்று இனிய கூறி
நாளும் நல் அமுதம் ஊட்டி
நயந்தன எல்லாம் நல்கி
நீளும் இன்பத்துள் தங்கி
நிதிமழை மாரி போன்றார்.
திருஞான சம்பந்தர் பெருமான் தமது தேவாரப் பதிகத்தில், “இன்மையால்
வந்து இரந்தவர்கட்கு இல்லையென்று கூறாது ஈந்து மகிழும் தன்மையார்
வாழும் ஆக்கூரில் வாழும் மக்கள்” என்கிறார்.
அக்கிருந்த ஆரமும்
ஆடரவும் ஆமையும்
தொக்கிருந்த மார்பினான்
தோலுடையான் வெண்ணீற்றான்
புக்கிருந்த தொல்கோயில்
பொய்யிலா மெய்ந்நெறிக்கே
தக்கிருந்தார் ஆக்கூரில்
தான்தோன்றி மாடமே.
நன்மையான் நாரணனும், நான்முகனும் காண்புஅரிய
தொன்மையான், தோற்றம்கேடு இல்லாதான் தொல்கோயில்,
இன்மையால் சென்றுஇரந்தார்க்கு
இல்லைஎன்னாது ஈந்துஉவக்கும்
தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
சிறப்புலி நாயனார் அன்றாடம் எம்பெருமானின் அடியார்களுக்கு
வேண்டுவனவற்றையெல்லாம் அளித்து தொண்டாற்றி வந்ததால், சிறப்புலி
நாயனாரின் அறத்தினால் உளம் மகிழ்ந்து, ஆயிரமாவது அடியாராக
சிவபெருமானே நேரில் வந்து அவர் அளித்த திருவமுதை ஏற்றுக்கொண்டார்.
திருவாக்கூர் கோயில் இந்த நிகழ்வுக்குச் சான்றாக விளங்குகின்றது. இங்கு
இறைவன், 'ஆயிரத்தில் ஒருவர்' என்று போற்றப்படுகிறார்.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment