Wednesday, August 25, 2010

துன்பமே.............தூரப் போ................

இன்பம் மட்டுமே என் வாழ்க்கையில் நிரந்தரம். துன்பத்திற்கு அங்கே இடமில்லை என்று உறுதியாக எண்ணுபவர்கள், இந்தக் கட்டுரையைப் படிக்க வேண்டியத் தேவையில்லை.

கோடைக் காலமும், குளிர் காலமும், மாறி, மாறி வருவது போல, வாழ்க்கையிலும் இன்பமும், துன்பமும் மாறி மாறி வருவதும் இயற்கையே! இன்பம் வரும் போது குதூகலிக்கிற மனது, துன்பம் வரும் போது துவண்டு விடுகிறது.

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இருண்ட பகுதி என்பது ஒன்று உண்டு, என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த இருண்ட பகுதி ஒவ்வொரு நாளும் கடந்து போய்க் கொண்டேதான் இருக்கிறது. அந்தச் சூழலை ஏற்றுக் கொள்வது எளிதான காரியம் அல்ல என்றாலும், அதனை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் படிப்படியாக, அந்த ரணம், மறதி என்ற மருந்தினால் ஆற்றப் படுகிறது என்பதே நிதர்சனம்.

இந்த உலகத்தில் ஏதும் நிலைத்து நிற்பதில்லை. அது துன்பங்களுக்கும், துக்கங்களுக்கும் கூடப் பொருந்தும். பல துன்பங்கள் நாமாக அதை புதுப்பிக்காத பட்சத்தில், வெகு குறைந்த நேரமே நிலைக்கக் கூடியதாகிறது. தம்மைத் துரத்தி வரும் துன்பத்தை, திரும்பி நின்று ஏறிட்டால் போதும், கண்டிப்பாக அது கடந்து ஓடியே போய்விடும்.

பயணம் செய்யும் படகில் அடைக்க இயலாத ஓட்டை விழுந்தால் அதை தேவையில்லாமல் சரி செய்ய முயற்சிப்பதை விட்டு, வெளியில் வர வேறு உபாயம் தேடுவதே அந்த நேரத் தேவையாகும்.

வாழ்க்கையில் நிலையான ஒன்றே ஒன்று மாற்றங்கள்தான். மாற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் அந்த மாற்றங்களை தமக்கு சாதகமாக்கிக் கொள்ள முடியும். அதன் மூலம் இருண்ட பாதையை முழுக்க அடைத்து விட்டு, அதிலிருந்து மீண்டு ஒளிமயமான மறு பாதையை நோக்கி நம்பிக்கையோடு நடைப் போட முடியும்.

சில மாதங்களோ, சில நாட்களோ, சில நிமிடங்களோக் கூட நினைவில் நிலைத்து நிற்க முடியாத அந்த நிகழ்வுகளை, ஏன் உணர்வுப் பூர்வமாகக் கட்டுண்டு வேதனைப் பட வேண்டும்? காலம் அனைத்து துக்கங்களையும் மறக்கச் செய்யும் மருந்துதான். ஆயினும் அந்தக் காலத்திற்காகக் காத்திருக்க வேண்டியதில்லை, "உடனே மறந்து விடு".

இந்தப் பகுதி எழுதுவதற்கும், படிப்பதற்கும் சங்கடமான ஒன்றாக இருந்தாலும், என்றாவது ஒரு நாள் இதயம் பிளக்கும் துன்பத்தை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. காரணம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும், ஏதோ ஒரு வகையில், சொந்த இழப்பு நிகழ்வதைத் தவிர்க்க முடியாது. வாழ்க்கையின் அந்த துக்கம் ஒரு பகுதியாகும். இந்த இடத்தில் வியாக்கியானத்திற்கு வேலை இல்லை. மீண்டு வரக் கூடிய உபாயம் தான் அவசியம்.

என்ன செய்யப் போகிறோம்?
என்ன செய்ய முடியும் ?

என்ன செய்ய வேண்டும் ?

முழு நம்பிக்கை வைத்து ஒரு காரியம் செய்ய முற்பட்டால், அதற்குரிய சக்தி தானாகக் கிடைக்கும் என்பதே இயற்கை விதி!

மனம் தளராத நம்பிக்கை வேண்டும். தன்னம்பிக்கை உடைய ஒருவர் வாழ்க்கையில் எந்த ஒரு துக்கமான சூழ்நிலையிலும், " என்னால் கண்டிப்பாக இந்தச் சூழலையும் கையாள முடியும், அதை நான் செய்யப் போகிறேன் ", என்றே முதலில் எண்ணுவர்.

என் தோழி ஒருவரின் அனுபவமே இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. சசிகலா, தன் கணவர், இரண்டு குழந்தைகளுடன் சொகுசாக வாழ்ந்து கொண்டிருந்தாள். கணவர் ஒரு தொழிலதிபர். ஒரு நாள் இரவில் தூங்கி, காலையில் எழும் போது கணவருக்கு பக்க வாதம், கடுமையாக தாக்கியிருந்தது. திடீரென்று எந்த எச்சரிக்கையும் இல்லாமல் அவரை படுத்தப் படுக்கையாக்கி விட்டது. அவர் பார்த்துக் கொண்டிருந்த வியாபாரமும் ஸ்தம்பித்து நின்றது. சசிகலா பள்ளியிறுதி வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாள். என்ன செய்வதென்று புரியாமல், நிலைகுலைந்து போனதென்னமோ உண்மைதான். மூன்றாம் மனிதரை நம்பி தொழிலையும் விட முடியாத நிலை. குழந்தைகளின் படிப்பு, குடும்ப பராமரிப்பு, கணவரின் வைத்தியம் இப்படி அனைத்தும் ஒன்று சேர்ந்து அவளை அலைக்கழித்தது.

அவள் மனதில் தோன்றிய முதல் கேள்வி, தான் எப்படி அதை ஈடுசெய்யப் போகிறோம் என்பதுதான். அடுத்து, அந்தச் சூழ்நிலையிலிருந்து மீண்டு வந்தே ஆக வேண்டும் என்ற உறுதியான தீர்மானம் கொண்டாள்.

அவர்களுடைய குடும்ப நண்பரின் ஆலோசனையுடன், தந்தையை உடன் வைத்துக் கொண்டு, தானே வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்துவது என்று முடிவெடுத்தாள். கணவரிடம் முக்கியமான ஆலோசனைகள் பெற்று, வங்கியில் காசோலை மாற்றுவது முதல், ஒவ்வொன்றாகக் கற்றுக் கொண்டாள். இன்று குடும்பம், தொழில் என்று பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறாள்.

ஆக்கப்பூர்வமான சிந்தனை [optimist] உடையவர்கள் என்றும், எல்லாம் எளிதாகச் சரியாகிவிடும் என்ற எண்ணத்துடனே இருப்பார்கள். அதனால் அதற்கேற்றார்போல் செயல்படவும் ஆரம்பித்து விடுவார்கள். இப்படிப்பட்டவர்கள், அது எத்தகையச் சூழ்நிலையாக இருந்தாலும், அதைத் தன்னுடைய முன்னேற்றத்துக்கு ஏற்றவாறு பயன் படுத்திக் கொள்வார்கள். இப்படித்தான் சசியும், ஒரே வருடத்தில், தேர்ந்த வியாபாரியாகி விட்டாள். தன் கணவரும் ஓரளவிற்கு உடல் தேறி, இன்று, உடன் இருந்து உதவி செய்யும் வகையில் உள்ளதால் இன்னும் நன்றாகத் தொழிலைத் தொடர முடிகிறது அவளால்.

உண்மையிலேயே சில சூழ்நிலைகள் மிகுந்த கொடூரமானவையாகிற போது ஆக்கப் பூர்வமான சிந்தனையோடு எதிர் கொள்ள முடியுமா என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. விஜியின் கணவர், ஊர்க்காவலராக பணியாற்றிக் கொண்டிருந்தவர், தன்னுடைய 35வது வயதில் திடீரென மாரடைப்பால் இறந்து போனார். நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் ஆறுதல் கூறிவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக அவரவர் பணிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுதுதான் அவள் மனதில் ஒரு பீதி கிளம்பியது. இரண்டும் பெண் குழந்தைகள். குழந்தைகளின் எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக்குறியானது. அப்பொழுதுதான் அவள் தன் சக்தி முழுதும் துக்கத்திலேயே கரைந்துப் போனதை உணரத் தொடங்கினாள்.

வாழ்க்கையின் யதார்த்தம் புரிந்தது. தன் புதிய வாழ்க்கையை குழந்தைகளுக்காக வாழ முடிவு செய்தாள். அடுத்த நாளைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல், பெரிய எதிர் காலத் திட்டம் எல்லாம் தீட்டாமல் அன்றைய பொழுது கழிந்தால் போதும் என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

எதிர்காலத்தைப் பற்றி தீவிரமாக யோசிக்கும் போதுதான் வாழ்க்கை மலைப்பாகத் தோன்றும். எந்தக் காரியமாக இருந்தாலும் அதைச் சிறு பாகங்களாகப் பிரித்துப் பார்க்கும் போது அதனை கையாள்வது எளிதாகும். வாழ்க்கை முழுவதும் எப்படி ஓட்டப் போகிறோம் என்று எண்ணுவதைவிட அடுத்த 15 நிமிடத்தை எப்படி கடக்கப் போகிறோம் என்று யோசிக்க ஆரம்பித்தாலே போதும், அன்றாடப் பணிகளைக் கவனிக்கக் கூடியத் தெளிவு பிறந்து விடும். இன்று விஜி தன் கணவர் விட்டுச் சென்ற அதே ஊர்க்காவல் அலுவலகத்தில் எழுத்தராகத் தன் பணியைத் தொடர்ந்து கொண்டு இரண்டு குழந்தைகளையும் நல்ல முறையில் வளர்த்தும் விட்டாள்.

தவிர்க்க முடியாத அது போன்ற, சூழலை வெற்றி கொள்ள முதலில் வேண்டியது, அந்த சூழலைப் பற்றிய உண்மையான விழிப்புணர்வு. அதாவது ஏற்றுக் கொள்ளச் சிரமமான உண்மைகளை புறக்கணிக்காமல் இருக்க வேண்டியது, மிக அவசியம். ஏதோ ஒரு ஆழ்ந்த திடமான நம்பிக்கையை ஆதாரமாக்கிக் கொள்ள வேண்டும். அக்கரை கொண்ட உறவினர்கள், நல்ல நண்பர்கள் இவர்களின் ஆதரவை ஏற்றுக் கொள்ளத் தயங்கக் கூடாது. காரணம் அது பெரும் பலமாகும்.

திடீரென்று ஏற்படுகிற, உயிர் கொல்லும் வியாதி, ஊனம் இப்படி வாழ்க்கையில் எதிர்பாராமல் எது நடந்தாலும் அதனை எதிர் கொண்டு சமாளித்துப் போராடி வெற்றி கண்டவர் பலர். வாழ்க்கை என்பது மேடு பள்ளங்கள் நிறைந்தது, என்பது அனைவரும் அறிந்ததே. எப்படிப்பட்ட துன்பம் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடி வாழ்ந்தேத் தீருவது என்ற வைராய்க்கியம் இருந்தால் போதும். இப்படி ஒரு முறை சமாளித்தவர்கள் எப்பேர்ப்பட்ட சவால்களையும் கண்டு அஞ்சாமல், எந்தச் சூழலையும் எளிதாக வெற்றி கொண்டு விடுவார்கள்!!

Monday, August 23, 2010

சுக்கா? மிளகா?.....சும்மாவா வந்ததிந்த சுதந்திரம்



”அடுப்பு ஊதும் பெண்ணிற்கு படிப்பு எதற்கு?” என்ற பழமொழியைச் சொல்லி பெண்ணை ஒரு நுகர்வுப் பொருளாக மட்டுமே பார்த்த சமூகம், அவளை மதித்து, ஒரு உயிர்ப் பொருளாக, மனித நேயத்தோடு பார்க்கத்தொடங்கியுள்ளது. இன்று பெண் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்திருப்பதை பார்க்க முடிகிறது.இந்த நூற்றாண்டுகளாக இந்தியப் பெண்களின் நிலையில் பெரும் மாற்றங்கள் உருவாகியுள்ளன. ஆதி காலத்தில் ஆண்களுடன் சம நிலையும், மத்தியக் காலங்களில் சில உரிமைகள், பின் உரிமை மறுப்பு, இப்படி , பல்வேறு பரிமாணங்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் எட்டியிருக்கின்றன.

இன்றைய நவீன இந்தியாவில், பெண்கள் , குடியரசுத் தலைவர், பிரதமர் பாராளுமன்ற உறுப்பினர், விமான ஓட்டிகள், அணு விஞ்ஞானிகள், இப்படி அனைத்து உயர் பதவிகளையும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அத்தகைய நிலையை அடைவதற்கு எத்துணைப் போராட்டங்கள், வலிகள், அவமதிப்புகள், பகடிகளைத் தாண்டி, இந்தச சாதனைகளை பெண்கள் புரிந்துள்ளார்கள் என்பதை இளம் சமுதாயத்தினர் உணர வேண்டும். இந்தியாவின் பல்வேறு பாகங்களிலும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சமூகக் கொடுமைகளிலிருந்து, அவர்களை மீட்டெடுக்கவும், பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், கல்வியறிவூட்டுவதிலும், மற்றும் சமுதாயத்தில் அவர்களுக்குரிய, அங்கீகாரத்தையும், பாதுகாத்துத் தருவதில், அசாத்தியமான திறன் கொண்ட முன்னோடிகளான பல பெண்கள் தங்கள் வாழ்க்கையையே அர்பணித்துள்ளார்கள்.

அவர்களுடைய உழைப்பும், முயற்சியும், இன்றைய மற்றும் எதிர்காலச் சந்ததியினருக்கு நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள உதவும் ஒரு பொக்கிசமாகும். தங்களுடைய தியாகச் சிந்தையினாலும், கடமையுணர்வினாலும், பெருமுயற்சி கொண்டு, மற்றைய பலரின் வாழ்க்கையில் விளக்கேற்றி, சமுதாயத்தில் தன் சுவடுகளை பதியச் செய்த, பல வீர மங்கைகளின், வாரலாற்றுச் செய்திகளின் தொகுப்பே இத் தொடராகும். நம் நாட்டின் அரசியல் மற்றும் சமூகச் சீர்திருத்தப் போராட்டத்தில் பெண்களின் பங்கு ஒரு வீர காவியக் கதையாகும்.


லேடி அபேலா போஸ்
[ LADY ABALA BOSE ]
{ 1865 - 1951 }

1865 ம் ஆண்டு பிறந்த லேடி அபேலா போஸ் ஒரு அசாதாரணமான வாழ்க்கை வாழ்ந்த ஒரு சாதனைப் பெண்மணியாவார். இவர், ஒவ்வொரு இந்தியரும் பெருமைப் படக்கூடிய, உலகப் புகழ் விஞ்ஞானியான சர். ஜெகதீசு சந்திர போஸ் அவர்களின் மனைவி. பார் போற்றும் விஞ்ஞானிக்கு ஒரு நல்ல தகுதிவாய்ந்த மனைவியாகவே வாழ்ந்தவர். சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினரின் நலனுக்காகப் பாடுபடுவதையே தன்னுடைய வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.

நாம் சுதந்திரமடைந்து, அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆனபிறகு இன்று அரசு சார்ந்த மற்றும் தனியார் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போன்ற, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய நிறுவனங்கள் நாடு முழுவதும் பரவியுள்ளதைக் காண முடிகிறது. ஆனால் சென்ற நூற்றாண்டுகளின் காட்சிகளே வேறு.

பால்ய விவாகம், பலதார விவாகம், பெண்கள் கல்வியறிவு பெறுவதைத் தடைச் செய்து, பொருளாதார ரீதியாக ஆண்களையே முழுதும் சார்ந்திருப்பது போன்ற மூடப் பழக்கங்கள், சமுதாயத்தின் முக்கிய மையங்களையே தின்று கொண்டிருந்தன.

திறமை வாய்ந்த , சமுதாய சீர்திருத்தவாதிகளால் தீவிரமான முயற்சிகளின் மூலமாக சட்டப் பூர்வமாகச் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. பொருளாதாரத்தில் முடமாகிப் போன பரிதாபத்திற்குரிய கைம்பெண்கள் அல்லது ஆதரவற்றோர் ஆகியோரின் கல்வியறிவின்மையை எதிர்த்துப் போராடக் கூடிய போதிய மேடைகள் இல்லாதிருந்தது.

ஐஸ்வர்சந்த்ர வித்யாசாகர் மற்றும் ராஜா ராம் மோகன் ராய் போன்ற சில கட்டுறுதி மிக்கத் தலைவர்கள், சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கான அயராத உழைத்தனர். தேச மறுமலர்ச்சி அந்தச் சிந்தையில் புதிய பரிமானத்தைக் கொண்டு வந்தது. அதன் விளைவாக பெண்கள் சம்பந்தமான மூட நம்பிக்கைகள் பெரும் மாற்றத்திற்குள்ளானது.

“ கல்வியில்லாப் பெண்கள் களர்நிலம் போல-அங்கே
புற்கள் விழைவதுண்டு நல்ல புதல்வர்கள் விளைவதில்லை”

போன்ற வார்த்தைகள் உரக்க எழுப்பப்பட்டன.

இந்தச் சூழலில் வளர்ந்த இளைஞர்கள் மற்றும் இளைஞிகளில் அச் சமூகப் பிணியைத் தீர்ப்பதில் பெரும் தொண்டாற்றியவர்களுள் லேடி அபேலாவும் ஒருவராவார்.

இவர் சமூகச் சேவையில் நாட்டம் கொண்ட ஒரு நேர்மையான ஆத்மாவாக இருந்தார். பெண்களின் அடிமைத் தளையைத் தகர்க்க வேண்டுமெனில், முதலில் அவர்களிடம் சுய மரியாதையை மீட்டுக் கொண்டு வருவது மூலமாகத்தான் சாத்தியப் படும் என்று நம்பினார்.

தன் மதிப்பு உயர வேண்டுமானால், அதனைத் தாங்கிப் பிடிக்கக் கூடியத் தூண்களான, கல்வியறிவு, தன்னம்பிக்கை மற்றும் பொருளாதாரச் சுதந்திரம் ஆகியவைகளின் அவசியத்தையும் உணர்ந்திருந்தார். இவருடைய இந்த நம்பிக்கைகளின் ஒட்டு மொத்த வெளிப்பாடாக வங்கப் பெண்களின் கல்வி குறித்தக் கலந்தாய்வில், அவர் முன்வைத்த, " வங்கத்துப் பெண்களின் ஆரம்பக் கல்வியின் இன்றைய நிலை" , என்ற தலைப்பிட்ட அறிக்கையின் மூலம் வெளிப்பட்டது.

அந்த அறிக்கையில், " இன்றைய பரந்த உலக முன்னேற்றத்தில், ஒரு நாட்டின் முன்னேற்றம் ஆரம்பக் கல்வியின் அடிப்படையிலேயே உள்ளது என்று கருதப் படுகிறது. இந்தியாவில் பலதரப்பட்ட சமுகக் கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவைகளின் பிடியில் சிக்கியிருந்தப் பெண்களுக்கு ஆரம்பக் கல்வி எண்ணிலடங்கா நன்மைகளைப் புரிந்துள்ளது. பால்ய விவாகம் என்கிற கொடிய வழக்கம் கட்டுப் பாட்டிற்குள் வந்துள்ளது. ஒரு பெண் தன்னுடைய கல்வியை 12 வயது ஆரம்பத்திலேயே முடிவிற்கு கொண்டு வந்து அடுத்து ஒன்றிரண்டு ஆண்டுகளில் அவருடைய திருமண வாழ்க்கையும் ஆரம்பித்து விடுகிறது.," என்று கூறியிருந்தார்.

வங்க தேசப் பெண்களுக்காக அவர்களின் ஏழ்மையைப் போக்கி, தன்னம்பிக்கையை ஊட்டும் விதமாக, 1919ம் ஆண்டு, லேடி அபேலா போஸ், " பெண்கள் கல்விக் குழு", [ Nari siksha samithi ] ஒன்றை தன் கணவரின் உதவியுடன் நிறுவினார். இந்த உயர்ந்த இலட்சியத்திற்கு கல்கத்தாவின் அன்றைய மேயரான,தேச பந்து சித்தரஞ்சன் தாஸ், நகராட்சிக்குச் சொந்தமான ஒரு துண்டு நிலத்தைக் கொடுத்து உதவினார்.இவர் அன்றைய சமுதாயப் புரட்சியாளர்களான வித்யாசாகர், குருதேவ் ரபீந்திரநாத் தாகூர் மற்றும் சகோதரி நிவேதிதா ஆகியோரின் உதவியையும் பெற்றார். ஜர்கிராம் நகரத்தின், வீரேந்திர மல்ல தேவ்வின் உதவியுடன், குல மரபு சார்ந்த பெண்களின் முன்னேற்றத்திற்காக ஒரு மையத்தை நிறுவினார். இதுபோன்று, பெண்களின் முன்னேற்றத்திற்கானத் தன்னுடைய உறுதிப் பாட்டை அமைதியாகவும், சுயநலமில்லாமலும் செயல்படுத்தினார்.

இந்தியப் பெண்களின் புதிய நம்பிக்கை விடிவெள்ளியுடன், ஒரு சில படித்தப் பெண்களே, பெண்களின் சமூகச் சீர்கேடுகளை, சீர்திருத்த முன் வந்தனர்.பெரிய நகரங்களில் ஆர்வமிக்க பெரும் முயற்சிகளும் மேற் கொள்ளப் பட்டது. நாட்டுப் புறம் சார்ந்த நகரங்களில் உள்ள பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தன் உதவிக் கரம் நீட்டி ஒரு முன்னோடியாகவும் திகழ்ந்தார், லேடி அபேலா போஸ்.

1919ம் ஆண்டில், மூன்று பெண்கள் கல்விக் கூடங்கள் கல்கத்தாவில் நிறுவப்பட்டதோடு, 1921லிருந்து, அவருடைய, நாரி சிக்ஷா சமிதியின், செயல்பாடுகள், கிராமங்களை நோக்கி நீண்டது.. கூட்டுக் குடும்பங்களின் பிளவு காரணமாக வங்க தேசத்தின், விதவைப் பெண்களின், மோசமான நிலையை அனுமானித்த, அபேலா போஸ், அவர்களை ஆரம்பப் பள்ளிகளின் ஆசிரியைகளாக நியமனம் செய்தார்.இதற்கான பயிற்சி, வித்யாசாகர் பால பவனில் அளிக்கப் பட்டது. பால்ய விவாக வழக்கம், வீழ்ச்சியடைய ஆரம்பித்தவுடன், அவருடைய பார்வை, பொருளாதாரத்தில் நலிவடைந்த இளம் பெண்கள் மற்றும் தாய்மார்களின் புணரமைப்பு மற்றும் அவர்களுடைய கல்வி நிலையை மேம்படுத்துவது போன்றவற்றில் திரும்பியது. நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே இதற்கான பல மையங்கள் நிறுவப்பட்டு, செயல்படுத்தவும்பட்டது.

தன் கணவர் இறந்த பிறகு 1920ஆம் ஆண்டு வாக்கில்,தன் கையிருப்பிலிருந்து சுமார் ஒரு லட்சத்தை சகோதரி நிவேதிதா நடத்திவந்த மகளீர் மேம்பாட்டு நிதிக்கு நன்கொடையாக அளித்த கொடை வள்ளல் அபேலா போஸ்.

நம் நாடு சுதந்திரம் அடைந்து, 50 ஆண்டுகளுக்குப் பிறகு கூட, லேடி அபேலா போஸ் நிறுவிய கல்விக் கூடங்கள், மற்றும் பெண்களுக்கு வருமானம் ஏற்படுத்தக் கூடிய பயிற்சி மையங்கள் இவையனைத்தும், பல் வேறு சமூகச் சேவை நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப் பட்டு, அரசாங்க செயல்திட்டத்தின் முக்கியப் பகுதியாக விளங்கினாலும், லேடி அபேலா போஸ் என்றுமே, பெண்களின் நலத்திற்காகவும், குறிப்பாக இளம் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த கைம்பெண்களின் தேவைகளுக்கான வழிகாட்டிகளின் முன்னோடியாகவே கருதப் படுகிறார்.----தொடரும்.


Thursday, August 19, 2010

பாசக் கிறுக்கு...........




சொட்......சொட்ட்......... விடிய விடிய அடித்து ஓய்ந்த மழையின் சொச்சம். மழை விட்டிருந்தாலும், தூவானம் விடவில்லை.

ஆனால் அவள் மனதில் மட்டும் புயல் ஓய்ந்த பாடில்லை. இன்று கணவன் ஊரிலிருந்து வந்து விடுவான். எப்பொழுதும், கணவன் ஊரிலிருந்து வரும் போது, மிகவும் மகிழ்ச்சியாகவும், பரபரப்பாகவும் இருக்கக் கூடியவள் இன்று அதற்கு மாறாக,

ஐயோ, கணவன் வந்தால் என்ன சொல்வது, இல்லை ஒரு வேளை தானே தெரிந்து கொண்டால் என்ன செய்வது? அது சரி மறைக்கக் கூடிய விசயமா இது? ஒன்றும் புரியவில்லை தாரணிக்கு.

இதற்கெல்லாம் காரணம், மணிதான். இந்த ஒரு வாரத்தில் எப்படி ஒட்டிக் கொண்டான். மெல்ல சமயலரை வரை ஆரம்பித்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக படுக்கையறை வரை வந்துவிட்டது. கணவனுக்கு கண்டிப்பாகப் பிடிக்காது என்று தெரிந்திருந்தும் அவளால் அதனைத் தவிர்க்க முடியவில்லை.

என்ன செய்வது? தனிமையின் ரணம். கணவன் மாதத்தில் பெரும் பகுதி நாட்கள் பயணத்திலேயேக் கழிப்பவன். அவன் தொழில் அப்படி. மார்க்கெட்டிங் மேனேசராகப் பணி புரிபவன்.

மாதத்தில் பத்து நாட்கள்தான் தன்னுடன் இருப்பான்.

" சே, என்ன வாழ்க்கை ", என்று அலுத்துக் கொண்ட வேளையில் தான் மணி வந்து சேர்ந்தான். ஆரம்பத்தில் ஏனோ தானோ என்று ஆரம்பித்தப் பழக்கம் தான் இன்று படுக்கையறை வரை வந்து நிற்கிறது.

இன்று கணவன் ஊரிலிருந்து வந்தால் என்ன நடக்கப் போகிறது என்றே தெரியவில்லை. ஏற்கனவே பல முறை இது போன்று வாக்குவாதம் வந்திருக்கிறது. இறுதியில் தான் மட்டுமே விட்டுக் கொடுக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப் படுவாள். ஆனால் இந்த முறை ஒரு முடிவாகத்தான் இருந்தாள்.

காரணம் தனிமையின் கொடுமையை அனுபவித்தால் தான் தெரியும். பொழுது போய் பொழுது வந்தால் சூனியமாக இருந்த வாழ்க்கையில், மணி வந்த பிறகுதான், ஒரு உற்சாகமே பிறந்தது.

இதை கணவனுக்கு எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது? புரிந்தாலும், தனக்குப் பிடிக்காத ஒரு விசயத்தை அனுமதிக்க மறுக்கலாமே.

ஒருவர் மீது பாசம் வைத்து விட்டால் அதை எளிதில் மாற்றிக் கொள்ள முடியாதே. அதுதானே இயற்கை.

பெண் என்றால் எப்பொழுதும் தனக்குக் கீழ் தான் இருக்க வேண்டும், தன்னை மிஞ்சி எதுவும் செய்யக் கூடாது. தனக்குப் பிடிக்காத எந்தக் காரியத்தையும், அவளுக்கு எவ்வளவுதான் விருப்பம் இருந்தாலும், செய்யக் கூடாது. இப்படித்தானெ இன்றும் இந்த ஆண்கள் இருக்கிறார்கள்? என்னதான் சம உரிமை என்று வாயளவில் பேசினாலும், அவையனைத்தும், குடும்ப பாரம் சுமப்பதில் மட்டும் தானே? தனக்கென்று வரும் போது பெண் உரிமைப் பற்றி வாய் கிழிய பேசியவர்கள் கூட அவள் பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடக்க வேண்டும் என்று தானெ எதிர்பார்க்கிறார்கள்?

" கணவனுடன் தான் ஏன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது ", என்ற எண்ணம் தலை தூக்கினாலும்,

தன் கணவன் பற்றிய கணிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில், கண்டிப்பாக எந்த ஒப்பந்தமும் எடுபடாது, என்பதே அப்பட்டமான உண்மை.

இப்படியே யோசித்து, யோசித்து இரவு முழுவதும் தூக்கம் கெட்டதுதான் மிச்சம்.ஆயிற்று, நேரமும் கடந்து விட்டது. இன்னும் சற்று நேரத்தில் அவர் வந்து விடக் கூடும்.

ஆனது ஆகட்டும் என்று துணிந்து நிற்பதா அல்லது வழக்கம் போல கணவன் சொல் கேட்டு அடி பணிந்து, ஆசை ஆசையாக வைத்திருக்கும் மணியை விட்டு விலகுவதா? ஒன்றுமே புரியவில்லை. மணி அழகாக தலையைச் சாய்த்து பாசமாக ஒரே ஒரு பார்வை பார்த்தால் போதும், பிறகு தன்னால் தன் கணவன் சொல்லைக் காதில் கூட வாங்க முடியாது.


வந்தவுடன் பிரச்சனையை கிளப்பவேண்டாம் என முடிவு செய்தவளாக, மணியை விருப்பமின்றியே அவசரமாக, பழைய சாமான்கள் போடும் பின் அறைக்கு கூட்டிச் சென்று விட்டு வரும் போது மனது வலிக்கத்தான் செய்தது. ஆனாலும் வேறு வழி இல்லை அவளுக்கு.

எப்படியாவது கணவரை சரிக்கட்டி விட முடியும் என்ற நம்பிக்கையில் ஒரு தெளிவான முடிவுடன் காத்திருந்தாள்.

அழைப்பு மணியும் அடித்தது. கதவைத் திறந்தவள், கணவனின் துவண்ட நிலைக் கண்டு ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து விட்டாலும், உடனே, அவன் பெட்டியைத் தூக்க முடியாமல் துக்கிக் கொண்டு தடுமாறிக் கொண்டு நிற்பதைப் பார்த்தவுடன், அவசரமாக ஓடிச் சென்று, அவன் கையில் இருந்த பெட்டியை வாங்கி வைத்து விட்டு, கைத்தாங்கலாக அவனை அணைத்த வண்ணம் உள்ளே கூட்டி வந்தாள். நல்ல காய்ச்சல் இருக்கும் போல. உடம்பு அனல் வீசியது.

"என்னங்க, என்ன ஆச்சு, நேத்து போன் பண்ணினப்பக் கூட ஒன்னுமே சொல்லல", என்று பதறிப் போனாள்.

" இல்லம்மா, லேசான காய்ச்சல் தானே ஒரு மாத்திரை போட்டால் சரியாகிவிடும் என்று விட்டு விட்டேன். ஆனால் திடீரென்று வீசிங் வந்து விட்டது. அதற்குப் பிறகு தான் ஒன்றுமே முடியவில்லை. அதான் உடனே கிளம்பி வந்து விட்டேன்", என்றான்.

உடனே ஆட்டோ பிடித்து, கணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.

மருத்துவரும், அவனை பரிசோதித்துவிட்டு, " ஒன்றுமில்லை அலர்ஜிதான். ஏற்கனவே ஆஸ்துமா இருப்பதால், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று எத்தனை முறை குறியிருக்கிறேன். வெளியில் செல்லும் போது, தூசியோ மற்ற அன்னியப் பொருட்களோ சுவாசத்தில் கலக்கும் போதுதான், இப்படி அலர்ஜி உண்டாகிறது. இதற்குத்தான் உங்களை அதற்கான மாஸ்க் போடும் படி சொல்கிறேன், கேட்டால் தானே ", என்று சலித்துக் கொண்டார்.

அவரும், இனிமேல் முதல் வேலையாக மாஸ்க் வாங்கி மாட்டுவது என்று முடிவுக்கு வந்தவனாக மருந்துச் சீட்டை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தார்கள்.

தாரணி நேராக வீட்டிற்கு வந்தவள், ஒரு முடிவுடன், ஒன்றுமே பேசாமல், பின்னறைக்குச் சென்று தன்னுடைய, செல்ல மணிக்குட்டியைத் தூக்கி வந்தவள், அதன் பிறந்த வீட்டிற்கே, அதாவது, தன்னுடைய தோழி வீட்டில் இருக்கும் தாயிடம் எடுத்துச் சென்று ஒப்படைத்தாள். தன் செல்ல மணிக்குட்டி, தாயைக் கண்டவுடன், மகிழ்ச்சியாக, ஓடிச் சென்று, தன் தாயின் மடியை துளாவ ஆரம்பித்தது. தாயும், அதனை நக்கிக் கொடுத்தது.மற்ற குட்டிகளுடன் புரண்டு விளையாடவும் ஆரம்பித்துவிட்டது.................

Monday, August 16, 2010

மலரும்.............மொட்டு.......



அன்று சமைந்த பெண்ணின்

நாணம் சுமந்து,

நிர்வாண வானத்திடையே மெல்லத்

தலை தூக்கி இளஞ் செங்கதிர் வீச,

மயில் தோகை கருங்குருவி

கொன்றை மரத்தில் சல சலக்க

எஞ்சிய மழைத் துளிகள்

கொன்றை மணத்துடன்

பன்னீராய்த் துளிர்க்க

அந்த லேசான சிலிர்ப்பும்,

முன்னோரை முன்னிறுத்தி கொக்கரித்த

நஞ்சில் நனைந்து,

பஞ்சாய்ப் பறக்க

செங்கதிரின் வீச்சு தீவிரமாக,

புலியையே முறத்தால் விரட்டியடித்த

தமிழச்சி, நரியின் சல சலப்பிற்கு

அஞ்சாத நெஞ்சுரம்

நஞ்சாகிப் போன எஞ்சிய வஞ்சமும்

பஞ்சாய்ப் பறக்க...........

சக தோழமை மொட்டு மெல்ல.......மலர்ந்தது.

Sunday, August 15, 2010

30 நொடிகளில் .............வெற்றி..........

















நாம் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ பேரைச் சந்திக்கிறோம். ஆனால் திட்டமிட்டு சில முக்கியமான நபரைச் சந்திக்க வேண்டியச் சூழலில், அதாவது, அலுவல் காரணமாகவோ, அல்லது, தொழில் சம்பந்தமான முக்கியமான நபரையோ யாராக இருந்தாலும், அந்த சந்திப்பு வெற்றிகரமாக அமைய வேண்டுமே என்ற தவிப்பு, ஏற்படுவது இயற்கையே. இதற்கு என்ன செய்ய வேண்டும்?

நம்முடைய முதல் எண்ணப்பதிவை [ First Impression ] , சிறந்ததாக உருவாக்கிக் கொண்டால், நம்முடைய முக்கியத்துவம் கண்டிப்பாக உயரும். " முதல் கோணல், முற்றும் கோணல் " , என்பார்கள். முதல் பார்வையிலேயே ஒருவரை எளிதாக எடை போடக் கூடுமாதலால், அதனை ஆக்கப் பூர்வமானதாக்குவதில்தானே நம்முடைய வெற்றி அடங்கியிருக்கிறது?


நாம் சந்திக்கும் நபரை முதலில்நேருக்கு நேர் கண்களைப் பார்த்துப் பேச வேண்டும். அதாவது, நம்முடைய உரையாடலுக்கான நேரத்தின், பாதி நேரத்திலாவது நேரடியாக கண்களைப் பார்த்துப் பேச வேண்டும். மிகவும் அதிகமாக உற்று நோக்குவதையும் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், அது நாம் மிகுந்த சக்தியுடையவராக காட்டிக் கொள்வதான தோற்றத்தை அளிக்கும்.


" புன்சிரிப்பு கோடி பெறும் ", நமக்கு அந்த நேரத்தில், சிரிக்கக் கூடிய மனநிலை இல்லாவிட்டாலும் கூட, சிறிதளவாக, பல்லைக் காட்டிச் சிரிப்பதால், உடன் உரையாடுபவர்களும், மறு புன்னகை வீசுவதோடு, அந்தச் சூழலின் மனநிலையின் இறுக்கம் தளர்வடையும்!


அதிகமாக பகிர்ந்துக் கொள்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.அதாவது, ஆரம்பத்திலேயே, அதிகமான ' சுய புராணம் ' பாடுவதைத் தவிர்க்க வேண்டும். அது அவசிய மற்றதும்கூட. காரணம், ஒருவரும், நம்முடைய அறுவைச் சிகிசையைப் பற்றியெல்லாம் அறிந்துக் கொள்வதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்!


சிறிது 'முகஸ்துதி' , செய்வதில் தவறில்லை. ஆனால் அது அதிகப்படியான போலிப் புகழ்ச்சியாக இல்லாத வண்ணம் பார்த்துக் கொள்ள வெண்டும்.

இப்படித்தான் உரையாடலை ஆரம்பிக்க வேண்டும் என்று தயார் படுத்திக் கொண்டுச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.காரணம், தாமே அந்தச் சூழலை முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டது போலவும், தன்னலத்துடன் பழகுவது போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கி விடும்!


உரையாடலின் இடையே ஓரிரு முறை அவரது பெயரை உச்சரிக்கலாம். அதற்காக, விற்பனையாளரைப் போல பல முறை உபயோகித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.!


மறு முனையில் இருப்பவர் பேசும் போது,மேசையின் மீது சாய்ந்து கொண்டோ, கைகளை கட்டிக் கொண்டோ, எந்த உணர்ச்சியும் காட்டாமல், உட்கார்ந்திருந்தால், நமக்கு, அந்த உரையாடலில் விருப்பம் இல்லையென்றோ, கோபமாக இருப்பதான தோற்றமோ கொடுத்து விடும்.


30 நொடியில் தம்மைப் பற்றிய எண்ணத்தை மற்றவரால் கணிக்க முடியும் என்பதால், ஒவ்வொரு நொடியையும் கணக்கில் கொள்ள வெண்டும்.


ஆக, ஆரம்பத்திலேயே, தம்மைப் பற்றி உயர்ந்த கணிப்பு ஏற்படுத்த;
முதலில் எளிதாக நெருங்கக் கூடியவராக இருத்தல்
வேண்டும். கொஞ்சமாக சுயபுராணம் தேவை.

முதல் சந்திப்பில் எது போன்ற தலைப்பில் அளவளாவல் வேண்டும் என்கிற விழிப்புணர்வு, மற்றும் நாம் வாழும் உலகம், நம் வாழ்க்கை மற்றும் நம்மைப் பற்றி ஆக்கப்பூர்வ உணர்வு கொண்டிருக்க வேண்டும்.


ஆக்கப்பூர்வமான எண்ண அலைகள் ஒன்று கூடும் போதுதான், அந்தச் சந்திப்பின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் என்பதே நிதர்சனம்!


போட்டிகள் நிறைந்த இன்றைய கால கட்டத்தில், ஒவ்வொரு சிறிய விசயத்திலும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்!!

Wednesday, August 11, 2010

அனைத்து ஆன்மாக்களின் தினம் .....[..ஹேலோவீன் தினம்]




மூட நம்பிக்கைகள் என்பது, நினைவிற்கு எட்டாத காலந்தொட்டே, மனிதர்களின் வாழ்வில் ஒரு பகுதியாகவே இருந்து வந்துக் கொண்டிருக்கிறது. இது மனிதனின் சக்திக்குக் கட்டுப் படாத, புரிந்து கொள்ள இயலாத ஒரு வகை இனம் புரியாத அச்சத்தின் பிரதிபலிப்பே ஆகும்.இதற்கு நவ நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கக் கூடிய அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலை நாடுகளும் விதி விலக்கல்ல.

அந்த அச்சத்தின் உச்சம் தான் இவர்கள் கொண்டாடும் 'ஹேலோவீன்' தினமாகும். ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் மாதம் முதல் தேதி கோடைக்காலம் முடிந்து, பனிக்காலம் தொடங்கும் சமயம் இந்த ஹேலோவீன் தினம் கொண்டாடுவார்கள். அன்று ஒவ்வோரு வீட்டின் முன்பும் பூசனிக்காயை அலங்காரம் செய்து வெளியே வைக்கிறார்கள்.ஹேலோவீன், மூட நம்பிக்கைகள், மக்கள் மரபு வழி நம்பிக்கைகள், புராணங்கள் மற்றும் சகுனங்கள் குறித்த நம்பிக்கைகள் இவைகளை நம்புபவர்களுக்கு, மேலும் பலம் சேர்க்கிறது.
. இதன் பின்னனியில், பல வேடிக்கையான நம்பிக்கைகளும் வழக்கத்தில் உள்ள்து .
ஹேலோவீன் தினத்தன்று,
பாரந்தூக்கியால் மேலே ஏற்றப்பட்ட, எரியும் மெழுகுவர்த்தி, துர் ஆவிகள் மற்றும் பேய்களின் ஊளையிடல்களைத் தவிர்க்கச் செய்கிறதாம்.

இந்த தினத்தில் ஒரு மெழுகுவர்த்தி திடீரென, காற்றினாலோ, அல்லது மூச்சுக் காற்றினாலோ அணைந்து விட்டால் இறந்து போனவரின் ஆவி, தங்களை அழைப்பதாக நம்பப் படுகிறது.

இந்த தினத்தில் எப்பொழுதும் புதிய மெழுகுவர்த்திதான் ஏற்றுவார்கள். அந்த குறிப்பிட்ட மெழுகுவர்த்தியை அந்த நாளைத் தவிற மற்ற வேறு எந்த நாட்களிலும் ஏற்றக் கூடாதாம்.அப்படிச் செய்தால் கெட்ட சகுனங்களும், கட்டுப் படுத்த முடியாத வேறு ஏதாவது ஆச்சரியமான விசயங்களும் நிகழக் கூடுமாம்.

ஹேலோவீன் இரவில் விளக்கை கைகளில் ஏந்திக் கொண்டு நீரூற்று இருக்கும் இடத்திற்குச் செல்லும் பெண்கள் தங்களுடைய எதிர்காலக் கணவனை நிழலுறுவில் காண முடியுமாம்.

இந்த தினத்தின் நடு இரவில் ஒரு புதிய செந்நிற மெழுகுவர்த்தி ஏற்றி சூரிய உதயம் வரை, அது அணையாமல் இருந்தால், மிக யோகமாகுமாம்.

அந்த ஹேலோவீன் தினத்தில் தன்னைத் தொடரும் காலடிச் சத்தங்களைக் கேட்டு திரும்பியோ, சுற்றியோ பார்க்கக் கூடாதாம். காரணம் இறப்புக் கூட தொடந்து வரக்கூடுமாம்.

தலையற்ற நிழல் உருவத்தையோ [?] நிழலே இல்லாத உருவத்தையோ பார்க்க நேர்ந்தால் அது கண்டிப்பாக அடுத்த ஆண்டிற்குள் இறப்பதற்கான கெட்ட சகுனம் என்று நம்பப் படுகிறது.

தொன்று தொட்டு வரும் வழக்கமாக, ஹேலோவீன் தினத்தன்று, சொக்கப்பணை போன்ற பெருந்தீ வளர்த்து, அதைச் சுற்றி வெவ்வேறு குடும்பத்தைச் சார்ந்த பலர், நின்று கொண்டு, அந்தத் தீ அணைந்து, சாம்பலானவுடன், அவரவர் நிற்கும் அந்த இடத்தின் அருகில் கூழாங்கல்லை அந்த சாம்பலுக்குள் புதைத்து வைப்பார்கள். அடுத்த நாள், ஏதாவது கல் இடம் மாறியோ அல்லது ஊறுபாடு உண்டாகியிருந்தாலோ, அந்தக் கல்லுக்குச் சொந்தக்காரர்கள் 12 மாதத்திற்குள் இறந்து விடுவார்கள் என்பதற்கான அறிகுறியாகக் கருதுகிறார்கள்.

வௌவால் வீட்டை மூன்று முறை வலம் வந்தால் அதுவும் இறப்பிற்கான தீய சகுனமாம்.

இந்த தினத்தில் பிறக்கும் நபர், ஆவிகளைப் பார்க்கவும், அதனுடன் பேசக்கூடியவர்களாகவும் இருப்பார்களாம்.

அன்று சிலந்திப் பூச்சியைப் பார்த்தால், அது இறந்து போன, தங்களை அதிகமாக நேசித்துக் கொண்டிருந்த, ஒருவரின் ஆவி, தன்னை கவனித்துக் கொண்டிருப்பதாக அர்த்தமாம். இப்படி நம்ப முடியாத ஆதாரமற்ற பல தகவல்களைச் சொல்கின்றனர்.

நம்மூர் பூனை சகுனம் கூட அவர்களும் நம்புகிறார்கள் கருப்பு பூனை, சூனியக்காரியுடன் சம்பந்தப்பட்டதால், அந்த சூனியக்காரியேக் கூட பூனை வடிவில் வரக்கூடுமாம். இறந்தவர்களின் ஆவிகூட பூனையிடம் தங்கியிருக்குமாம். பூனை குறுக்கே போனால் திரும்பிப் போய்விட வேண்டுமாம், இல்லாவிட்டால் தீயவை நடக்குமாம்.

வில்லியம் ஷேக்ஸ்பியரின், "சூனியக்காரியின் கொப்பரை" [The witche's caldron] என்ற கவிதையில் சூனியக்காரியின் அங்க வர்ணனை மிக வேடிக்கையாக இருக்கும்.

" பல்லியின் வகைக் கண்கள்,மற்றும் தவளையின் பாதம்
வௌவாலின் உரோமம், மற்றும் நாயின் நாக்கு"
விரியன் பாம்பின் முட்கள், மற்றும் குருட்டுப் புழுக்களின் கொடுக்கு
பல்லியின் கால், மற்றும் ஆந்தைக் குஞ்சின் இறகுகள்
இப்படிப் போகிறது கவிதை.

ஹேலோவீன் தினத்தில் குழந்தைகள் மாறு வேடங்கள் அணிந்து கொண்டு, குறிப்பாக சூனியக்காரி, பேய், கார்ட்டூன் கேரக்டர்கள் இப்படி ஏதாவது உடை அணிந்து கொண்டு, வீடு வீடாகச் சென்று , 'trick or treat ' என்று கேட்பார்கள்.

வீட்டில் உள்ளவர்கள் வித விதமான சாக்லேட்கள், அந்தக் குழந்தைகளுக்குக் கொடுத்தனுப்புவார்கள். சென்ற வருடம் அது போலத்தான், ஒரு கருப்பு அண்ணாச்சியின் வீட்டை ஒரு 6 வயது குழந்தை அழைப்பு மணியை இரண்டு , மூன்று முறை அடித்து விட்டது. அந்தக் குழந்தையின் பெற்றோரும் நடை மேடையைத் தாண்டி தெருவில் நின்று பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

குழந்தை அழைப்பு மணியை அடித்ததினால், உள்ளே தூங்கிக் கொண்டிருந்தவரின் தூக்கம் தடைப்பட்ட கோபத்தில், வேகமாகத் துப்பாக்கியுடன் வெளியே வந்தவன் யார் என்று கூடப் பார்க்காமல், குழந்தையை , படபடவென இரு முறை சுட்டு விட்டான். குழந்தை அதே இடத்தில் துடிதுடித்து இறந்து விட்டது.பெற்றோரின் கண் முன்னாலேயே நடந்த இந்த அநியாயத்தினால், அந்தத் தாய் மயங்கி விழுந்து, அவரையும், குழந்தையையும், ஆம்புலன்ஸ் வந்து எடுத்துச் சென்றது. அடுத்தத் தெருவில் நடந்த இந்த சம்பவம் கேட்டு, எங்கள் ஈரக் கு லையே நடுங்கி விட்டது.

Monday, August 9, 2010

யானைக்கும் அடி சறுக்கும்.............



  • சில நேரங்களில் பெரிய திறமைசாலிகள் கூட ஒரு சின்ன விசயத்தில் கோட்டை விட்டு விடுவார்கள். தான் பெரிய புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு எளிதாக ஏமாந்து விடுவார்கள். அப்படித்தாங்க ஒரு சம்பவம் சமீபத்தில் நான் கேள்விப்பட்டேன்.

.ஒரு பெரிய பஞ்சாலை அதிபர், தன்னுடைய தொழிற்சாலையில் உற்பத்தியைப் பெருக்கி, அதனை முதல் நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற பேராவலினால், பழைய அதிகாரிகளையெல்லாம் நீக்கி விட்டு புதியவர்களை வேலையில் அமர்த்தினார். புதிய நிர்வாக அதிகாரி அன்று பதவி ஏற்றுக் கொண்டு , தொழிற்சாலையைச் சுற்றிப் பார்த்து தவறுகளுக்கான காரணங்களைக் கண்டுபிடித்து, அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற முடிவோடு உள்ளே நுழைந்தார்.

தன்னுடைய முதல் நாள் பதவி ஏற்பின் போது, உதவியாளர்கள் புடைசூழ, சுற்றிப் பார்ப்பதற்காக தொழிற்சாலையின் உள்ளே நுழைந்தார். அந்தப் பகுதியில் அனைவரும் ஒழுங்காக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.ஆனால் ஒருவன் மட்டும் ஓரமாக, இடுப்பில் கைவைத்துக் கொண்டு ஒய்யாரமாக நின்று கொண்டிருப்பதைக் கண்ட அதிகாரி,

ஆகா, தன்னுடைய கண்டிப்பையும், தொழில் தத்துவத்தையும், மற்றவர்களுக்கு உணர்த்த அதுதான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்துக் கொண்டு, வேலை செய்யாமல் நின்று கொண்டிருக்கும் அந்த இளைஞனை அருகில் அழைத்து,
நீ ஒரு மாதத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கிறாய்?", என்று கேட்டார்.
. "10000 ரூபாய்", என்று பதி்லளித்தான் அவன், கேள்விக்கான காரணம் புரியாமலே!

பையிலிருந்து 10000 ரூபாய் எடுத்து அந்த இளைஞனிடம் கொடுத்து,
இந்தா, உன்னுடைய 10000 ரூபாய் எடுத்துக் கொண்டு இங்கிருந்து போய்விடு, திரும்பவும் வராதே ", என்று கூறினார்.
அந்த இளைஞன், ஆகாகா, தான் இன்று முழித்த முகம் மிக நல்ல முகம் போல என்று எண்ணி வியந்து, அந்த பணத்தை எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு உடனே சென்று விட்டான்.
அந்த உயர் அதிகாரி நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு, மற்ற பணியாட்களைப் பார்த்து,.
" என்ன வேலை அவன் இங்கு செய்கிறான்", என்று கோபமாகக் கேட்டார்.
அவன் வடை கொடுக்க வந்தான் சார்", என்று சிரிப்பை அடக்கிக் கொண்டே கூறினான் அதில் ஒருவன்.

இதைக் கேட்ட அந்த அதிகாரியின் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே!

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...