Thursday, November 11, 2021

மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் மீயடுப்பு மீதிலே

 

 


 

பல்வேறு நேரங்களில் சில வாய்ப்புகள் எழுப்பும் ஓசை நம் மனதின் ஓரங்களில் முடங்கிக் கிடக்கும் நாம் அறிந்திராத சில உணர்வுகளைத் தட்டி எழுப்பிவிடும். மீயடுப்பு மீதிலே எனும் மகாகவியின் அந்த வகையைச் சேர்ந்த இந்த படைப்பும் நம்மை ஒரு புது உலகிற்கு இட்டுச் செல்லக்கூடியது.

 

பொதுவாகவே படைப்பாளிகள், குறிப்பாக கவிஞர்கள் மிகை உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு தங்கள் இயல்பிலிருந்து விலகி இருப்பவர்கள் என்ற கருத்தே பரவலாக உள்ளது. பலருக்கு அத்தகைய  மிகை உணர்ச்சிகளே அவர்களை நல்ல படைப்பாளிகளாகவும் அடையாளம் காட்டி அவர்களைத் தொடர்ந்து இயங்கவும் செய்கின்றன. பலர் இந்த  மிகை உணர்ச்சிகளிலிருந்தே தாங்கள் படைப்பூக்க சக்தியைப் பெறுவதாகவும் நம்புகிறார்கள். ஆனால் இத்தகைய அடிப்படைக் கூறுகளின் கட்டுப்பாட்டிற்குள் சிக்காமல், தமக்கென ஒரு தனி பாணியை அமைத்துக்கொண்டு அரை நூற்றாண்டுகளையும் கடந்து 65 ஆண்டுகளுக்கும் மேலாக கவிதையுலகில் மகுடம் சூடி வலம் வருபவர் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள்.  மனித நேயமிக்க பொதுவுடமைக் கருத்துகளைத் தம் கவிதைகளில்  தாராளமாகக் கையாளும் தமிழன்பன் ஐயா அவர்கள், பாரதிதாசனையும் பாப்லோ நெருடாவையும் இரு கண்களாகப் போற்றுவர். நெருடாவின் மார்க்சியத்தையும், பாரதிதாசனின் தமிழியக்கத்தையும் ஒருசேர பின்பற்றி வருபவர் என்றாலும் இவர்தம் படைப்புகளின் எல்லைகள் இதற்குள் மட்டும் குறுகி விடக்கூடியது அல்ல என்பதும் தெளிவு. அதற்கு இம்மகாகவியின் படைப்புகளின் ஒவ்வொரு தலைப்புகளுமே ஆதாரம். அந்த வகையில் மீயடுப்பு மீதிலே எனும் இந்நூலின் தலைப்பே நம் கற்பனைச் சிறகை வெகு தொலைவிற்கு இட்டுச் செல்லக்கூடியது. போகிற போக்கில் எளிய வகையில் ஆழ்ந்த தத்துவங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள அற்புதமானதொரு தொகுப்பு இது என்றால் அது மிகையில்லை. நாகரிகம் வெகுதொலைவிற்கு முன்னேறி வந்துள்ள இந்த 21ம் நூற்றாண்டில்,

மீயடுப்பு எனும் பதத்தின் பொருள் இன்றைய இளைய தலைமுறையினரில் எவ்வளவு பேருக்குத் தெரியும் என்பதை ஒரு பட்டி மன்றமாகவே நடத்தலாம். இன்றும்  கிராமங்களில்  விறகு வைத்து எரிக்கும் மண் அடுப்பு புழக்கத்தில் உள்ளது என்றாலும் அதன் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது என்பதும் உண்மை. மண் அடுப்பில் ஒரே பாத்­தி­ரம் வைக்­கும் அடுப்பு, இரண்டு பாத்­தி­ரங்­கள் வைக்­கும் அடுப்பு உண்டு. இரு பாத்­தி­ரங்­கள் வைக்­கும் அடுப்­பில், ஒரு பகு­தி­யில் விறகு நுழைக்கும் பகுதி இருக்­கும். ஒரு புறத்­தில் இருந்து மற்­றொரு அடுப்­புக்கு தீச் சுடர் செல்ல வழி இருக்­கும். மேற்­ப­கு­தி­யில் பாத்­தி­ரம் நிலை­யாக நிற்க, மூன்று குமிழ்­கள் இருக்­கும். இரட்டை அடுப்­புக்கு சில பகு­தி­க­ளில் கொடியடுப்பு என்று பெயர் உண்டு. இந்தத் தொகுப்பின் தலைப்பு மீயடுப்பு என்று ஏன் வைத்திருப்பார் என்பது அதிலுள்ள கவிதைகள் குறித்து அறிந்தால்தான் உணர முடியும். இம்மாகவி முற்றும் துறந்த முனிவரோ அனைத்தும் உணர்ந்த சித்தரோ என்று எண்ணத் தோன்ற வைக்கும் படைப்பு இது.

 

இறைவன் இருக்கிறானா இருந்தால் அவன் எங்கே இருக்கிறான், இந்த வினா எல்லோருக்கும் ஏதோ ஒரு சூழலில் எழத்தான் செய்கின்றது என்றாலும் இறை மறுப்பு கொள்கை கொண்ட நம் மகாகவிக்கும் இந்த ஐயம் தோன்றியிருப்பது ஆச்சரியம்தான்..  இதோ …

1.   எத்தனை மறுத்தும்

ஏன்கடவுள் தடுக்க வில்லை?

எத்தனை தொழுதும் 

எதிரிலேன் தோன்றவில்லை?

புத்தன் மனத்திலும்

பூக்காக் கடவுள்தான்

நித்தம் பணிவதால்

நேர்ப்படல் சாத்தியமோ?

நினைத்துப் பார்மனமே!

 

இன்றைய, தீநுண்மி பெருந்தொற்று பேரிடர் காலத்தில் மனம் நொந்து தமது வேதனையை வெளிப்படுத்துபவரின் எண்ணத்தில் ஒருவேளை கடவுள் என்ற ஒருவன் இருந்து மக்கள் முன் தோன்றி அவர்தம் துன்பங்களைத் துடைத்து விடமாட்டாரோ என்ற ஏக்கமே கோபமாக மாறி புத்தன் மனத்திலும் பூக்காத கடவுள் நீ நித்தம் பூசை  செய்வதால் மட்டும் நேரில் வந்து விடுவாரா என்ன என்று ஒரு குழந்தை மன நிலையில் மருகி நிற்பதைக் காண முடிகின்றது.

 

2.   அடுத்து ஒரு கவிதையில்,

ஏது நிகழ்வில்லை

எனினும் விளைவுகள் ஏற்படுமோ

தீது நலமெனப் பேதம் புரிந்திடுமோ?

யாதும் சமமென ஞானம்பிறந்திடுமோ?

மோதும் தர்க்க

முரண்கள் முடிந்திடுமோ?

மோனப் பரவெளிச்

சிறகு முளைத்திடுமோ?

வானம் அளப்பேனோ? என்கிறார்.

 

இங்கு நன்றும் தீதும் சமமாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் வாய்க்கப் பெற்ற  கவிச்சித்தரைக் காண்கிறோம். வாத விவாதங்களின் மோதல்கள் விலகி வானம் அளக்கும் மோனப் பரவெளிச் சிறகு முளைக்கும் இச்சை வாய்க்கப்பெற்ற இக்கவிஞர் பெருமானின் வரம் நமக்கும் வாய்க்கும் நாள் எந்நாளோ எனும் ஏக்கம் இதை வாசிக்கும் நமக்கும் தோன்றத்தானே செய்கிறது?

 

ஏனோ இந்த இடத்தில் Walt Witman இன் – song of myself எனும் கவிதையின் ஒரு துளியை நினைவுகூர்ந்து நேசிக்கவும் செய்தது.

 

I am the poet of the Body and I am the poet of the Soul,

The pleasures of heaven are with me and the pains of hell are with me,

The first I graft and increase upon myself, the latter I translate into a new tongue. என்பார்.

 

அடுத்து வரும் இந்த கவிதையில் எத்துணை தத்துவார்த்தமான சிந்தைகள் வெளிப்படுகிறது பாருங்கள் ..

 

3.   தெருக்கள் இருக்கும்

தெருக்களில் மனிதர் இருப்பர்

இருண்ட மனிதரால்

தெருக்கள் மருண்டிருக்கும்

எரியும் விளக்குகள்

இதயமும் அணைந்திருக்கும்

புரியா மனத்துடன்

பகலும் இணைந்திருக்கும்

வெளிச்சம் மறைந்திருக்கும்

விளங்கா மனத்துடனே

தெருக்கள் இருக்க வேண்டிய இடத்தில் தெருக்களும், மனிதர்கள் இருக்க வேண்டிய மனிதர்களும் இருக்கிறார்கள்தான். விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும் சாலையிலும் விளங்காத இருண்ட மனத்துடன் அலையும் மனிதர்களால் தெருக்களே மருண்டிருக்கும் அவலத்தை அழகுற காட்சிப்படுத்தும் அற்புதம்தான் இந்தக் கவிதை.

 

அடுத்து மெய்மையின் தேடலில் தவிக்கும் உள்ளம் கொண்ட  இக்கவிஞரை அதே தெரு எங்ஙனம் வருத்துகிறது பாருங்கள் ..

 

4.   மெய்ம்மை மேவியே

வாழுந் தெருவில் வாழ்வேனா?

பொய்களின் ஊர்வலம்

பொழுதெலாம் நடந்ததால்

நைந்த பாதைகளில்

நான்கிடந்து தவிப்பேனா?

உய்வகை இழந்தென்னை

உதறியே எறிவேனா?

செய்வகை தேடுகிறேன்

 

பொய் கெட்டு மெய் ஆனார் என்கிறது திருவாசகம்.

மெய் என்ற சொல்லுக்கு உடம்பு, உண்மை என்ற இரு பொருள்கள் உள்ளன. ஐம்புலன்களாலும் இன்ப துன்பங்களை அனுபவிக்கும் இந்த உடல் மாயத் தோற்றமல்ல, மெய் என்ற உடம்பு உண்மை தான். ஆனால் அந்த உடலின் வாழ்வு நிரந்தரமல்லவே. இன்றிருப்பவர் நாளை இருப்பார் என்ற உறுதி இல்லையே. நிலையற்ற அந்த உடல் வாழும் உலகில்தான் அழிவற்ற நம் ஆன்மா வாழ்கிறது. மகாகவி பாரதியோ,

 

தேடிச் சோறு நிதம் தின்று கொடுங்கூற்றுக்கு இரையென மாயும் வேடிக்கை மனிதரைப்போல் நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று கூச்சலிடுவான். மெய்யல்லாத இந்த  உடலை மெய்யெனக் கருதி இதைப் பேணுவதேயே வாழ்வின் முக்கிய இலக்காகக் கொள்கிறோம். உடம்பினுக்குள்ளே உறுபொருள் ஒன்று உண்டு என்பதை அறிந்தவர் வெகு சிலரே. பொய்மையே பேசிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையன் என்று தம்மையே சாடிக்கொள்வார் மாணிக்கவாசகப் பெருமான். நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன். யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய் என்பார். மெய்யே, உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் என்று மகிழ்வதைப் போன்று உய்வகை இழக்காமல் செய்வகை தேடுகின்றேன் என்கிறார் நம் மகாகவி இங்கு. இதோ ..

 

5.   மெய்யொடு பழகினேன்

பொய்யொடும் பழகினேன் அவ்விதமே

பொய்யெனக்குப் பிடித்துப்

போனதால் மெய்மேலே

நெய்த பிழைகளை

நிறுவினேன் சரியென்றே

மெய்மனம் திரியவில்லை

மெலிந்து மெய் சாகவில்லை

உய்வகை பொய்க்கிலையோ?

 

மனம், மொழி, மெய் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து செயற்பட்டாலொழிய வரப்போகும் ஆபத்திலிருந்து ஒருவர் தம்மைக் காத்துக்கொள்ள முடியாது என்பதே திருவாசக நெறி நமக்குக் காட்டும் பாதை.

நெய்த பிழைகளை

நிறுவினேன் சரியென்றே

மெய்மனம் திரியவில்லை

மெலிந்து மெய் சாகவில்லை, பொய்யான இந்த மெய்க்கு அதாவது நிரந்தரமில்லாத இந்த மெய்யான மேனிக்கு ஏது நிரந்தரமாக வாழும் வழி என்பவரின் மனவோட்டம் ஒரு சித்த நிலையில் நிலை பெறுகிறது.

 

6.   என்னைத் திறந்திட

எந்தப் பொழுது வருமோ?

ஐந்துநுண்சாவிகள்

உண்டென அறிந்ததுண்டு

இன்பம் திறப்பதை

எவரொளித்து வைத்தார்?

துன்பம் திறப்பதைத்

தொடர்ந்து ஆள்வதார்?

சாவிகளால் உடைவேனா? என்கிறார்.

 

மனம் திறக்கும் பொழுதுகளுக்கு ஏங்கித் தவிக்கும் மகாகவியின் மனவோட்டம் ஞானம் தேடும் உன்னதம். ஐம்புலன்களை கட்டுக்குள் அடைத்து வைத்து பேரின்ப நிலையை எய்துவதற்கு எந்தத் தடையும் வந்து விடக்கூடாது, எச்சாவியும் எந்தவொரு புலனின் கட்டுப்பாட்டையும் உடைத்தெறிந்து விடக்கூடாது என்ற மன உறுதி பேணுகிறார்.

 

An Autumn Day by Lee Si-young – இந்த கொரிய கவிதைதான் உடனே என் நினைவிற்கு வந்தது.

 

A dragonfly sat on the end of a persimmon branch
and dozed off all day.
Even with wind, it did not shake;
even with a cold rain smacking the branch,
it did not move over.
When I quietly approached it,
I was startled to see,
right there, it had arrived in Nirvana.

 

ஆனால் அடுத்தொரு பாடலிலும் இதன் தாக்கம் இருக்கக் காண முடிகிறது,

7.   எந்த விளக்கெரியும்

என்மனம் இருண்டு கிடக்கையில்?

மந்தை நினைவுகளை

மனத்தின் மதில்களுள்

எந்த விளக்கொளி

இங்குவா என்றழைக்கும்?

சந்தையில் தொலைந்தவன்நான்

சபைவிளக் காவேனா? என்ற வினா எழுப்பி நம்மையும் பரிதவிக்கச் செய்கிறார்.

 

அடுத்தொரு கவிதையில் வார்த்தைகளின் வண்ணங்கள் களிநடம் புரிவதை இயல்பாகக் காட்சிப்படுத்துகிறார்.

8.   கட்டுரை செய்தவன் அதாவது கட்டுப்பாடான உரை செய்தவன்

கண்களை மூடி விட்டான்.

கட்டுக் குலைந்ததால் – அந்தக் கட்டுப்பாடு குலைந்த காரணத்தால்,

சிதறிய வார்த்தைகள்

பட்டுப் படாரெனப்

பாதையில் வெடித்ததனால்

தொட்ட துயரொடு

தோழர்கள் துடித்தனர்

வீதியிலே!

என்று ஒரு சிறிய போராட்டக் காட்சியையே அரங்கேற்றுகிறார்.

 

அடுத்தொரு கவிதையில்,

9.   ஏதென்சு ஞானிக்கு

நானே இளையவன்என்றிருந்தேன்

வாத வல்லமை 

பெற்றிருந்தேன்

மோதிய பேர்களை 

முட்டியே சாய்த்திருந்தேன்

ஓதியே உணராத

சாவென்னைத் தூசியாய்

ஊதித் தள்ளியதே!

ஏதென்சு ஞானி சாக்ரடிசுக்கு இளையவன் என்று தம்மை வெளிப்படுத்திக் கொள்பவரின் ஞானம் முற்றும் சாவில் தூசியாய் பறந்து போனதாகச் சொல்கிறார் .. ஒரு வரலாற்று சம்பவமும் நினைவூட்டுகிறது இந்த வரிகள் ..

 சாக்ரடிசுக்கு அகவை முதிர்ந்த போது, “என்னை அறிவாளி என்று அழைக்காதீர்கள்” என்று ஏதென்சு நகர மக்களை கேட்டு கொண்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் இதுதான்; நான் இளைஞனாக இருந்த போது எனக்கு எல்லாம் தெரிந்ததாக எண்ணிக் கொண்டிருந்தேன் ஆனால் விவரங்கள் பல தெரியத் தெரிய எனக்கு தெரிந்தது கொஞ்சமே என்றும் இன்னும் தெரிந்து கொள்ளவேண்டியவை பல உள்ளன என்பதை முதுமையில் தான் புரிந்து கொண்டேன், என்றார்.

ஆம், அதன்பின் ஏதென்சு நகர மக்கள் அவரை ஞானி என்று அழைக்கத் தொடங்கினார்கள். எல்லாம் தெரிந்ததாக சாக்ரடிசு சொன்ன போது அவரை ஏசியவர்கள் அவர் தனக்கு ஒன்றும் தெரியவில்லை என்று சொன்ன பிறகு ஞானி என்று அழைத்தார்களாம்.. அதையும் இங்கு நினைவு கூரச்செய்கிறது.

 

அடுத்து,

 

10.                வெற்றியின் சாவிகள்

விலைக்குக் கிடைப்பதில்லை

நெற்றி வியர்வைகள்

நேரிய உழைப்புகள்

முற்றும் வினைத்திட்பம்

மூளும் துவளாமை

பற்றி எரிகையில்

வெற்றி பறித்திடலாம்

வேண்டாமே தாயத்து!

 

தாயத்தும், மந்திர தந்திரமும் நமக்கு வெற்றியைத் தருவதில்லை. நெற்றி வியர்வை நிலத்தில் விழ, வினைத்திட்பத்துடன் உறுதியாகப் பாடுபட்டால் மட்டுமே வெற்றிக் கனியைப் பறித்திட முடியும் என்று மூட நம்பிக்கைகளுக்கு சாட்டையடி கொடுக்கிறார்.

 

நீரின் குடும்பத்தில்

நீக்கப் பட்டு விட்டேன்

விக்கலா காப்பாற்றும் என்னை?

தாகமா மீட்டெடுக்கும் என்னை?

தக்கவர் சூழ்ந்திடத்

தீவாய்த் தழைப்பேனா?

அக்கம் பக்கத்துநீர்

அன்பில் மிதப்பேனா?

யாரிதைச் சொல்வீர்கள்!

 

மனித நேயப் பண்புகளின் ஏதோ தடைகள், உயிர் நீர் இன்றி விக்கல் வாட்டும் பொழுதுகளின் அறச்சீற்றமாக, கவிஞரின் உள்ளார்ந்த ஆதங்கமாக வெளிப்படுவதாகத் தோன்றுகிறது. உலக உயிர்களிடத்தில் பாரபட்சமற்ற அன்பு காட்டும் ஆன்ம நேய வள்ளலுக்கு அக்கம் பக்கத்து அன்பிற்கு பஞ்சமா வந்து விடப்போகிறது. விக்கல் தீர்க்கும் உயிர் நீரும் பள்ளம் நோக்கி ஓடி வரத்தானேச் செய்யும்.

பட்டினத்தடிகளின் இந்தப் பாடல் நினைவிற்கு வந்தது.

 

ஊட்டுவிப் பானும் உறங்குவிப்பானும் இங்கு ஒன்றோடொன்றை
மூட்டுவிப் பானும் முயங்குவிப் பானும் முயன்றவினை
காட்டுவிப் பானும் இருவினைப் பாசக் கயிற்றின் வழி
ஆட்டுவிப் பானும் ஒருவன்உண்டே தில்லை அம்பலத்தே!


பாப்லோ நெருடாவைப் போல் எளிமையான பாடு பொருள்களை எளிய சொற்களால்  கவியாக வடிக்கும் வல்லமை பெற்றுள்ளவர் இக்கவிஞர் என்றாலும், மீயடுப்பு மீதிலே எனும் இக்கவிதைத் தொகுப்பு, தத்துபித்துவம் போன்று சற்றே வேறுபட்டு இருப்பதாகவேத் தோன்றுகிறது. பெரும்பாலான  கவிஞர்கள் ஏதோ ஒரு கட்டத்தில் தொய்வு ஏற்பட்டு எழுத்தை குறைத்துக் கொள்வதைக் காண்கிறோம். வாசிப்பின்மையாலும், மூப்பின் காரணமாகவோ ஒரு சலிப்பும் தேக்கமும் ஏற்படும் நிலை ஏற்படுவது இயல்புதான். ஆனால் நம் மகாகவி அவர்கள் இவையனைத்தும் கடந்ததொரு அதிசயப் பிறவி என்பதே ஆச்சர்யமான உண்மை. அன்றாட உலக நடப்புகளை தொடர்ந்து வாசிப்பதையும், மனிதர்களையும், சமூகத்தையும் உள்ளார்ந்து நேசிப்பதையும்ம்முடைய கொள்கையாகவே வைத்திருக்கும் இவர் அன்றாடப் பிரச்சனைகளை அவ்வப்போது எடுத்தாளும் வல்லமை பெற்றவர். அந்த வகையில் சொந்த நலனை விட்டொழித்து, மகாகவி ஈரோடு தமிழன்பன் ஐயா போன்று ஊருக்கு உழைக்கும் அந்த ஒரு சிலரே வரலாறுகளையும் உருவாக்குகிறார்கள். பெரும்பாலான ஆளுமைகள் தங்களை உருவாக்க உதவியவர்களை, தன்னலமின்றி ஊருக்கு உழைத்தவர்களை  உண்மையாகக் குறித்து வைப்பதில்லை எனும் பரவலானக் கருத்தை உடைத்தெறிந்து சமூக நலனிற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் அத்துணை ஆளுமைகளையும் தேடிப்பிடித்து கவி மழையால் பாராட்டி மகிழ்பவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

நம் மகாகவியின், சமீபத்திய, என் மனம் கவர்ந்த இந்த மீயடுப்புக் கவிதையுடன் முடித்துக்கொள்ளலாம் .

தாயடுப்பு

விறகிடத்

தணல் சுரக்கும்

வேளையில்

வீயடுப்பும் பற்றுமே!

 

வெப்பமங்கும்

தொற்றுமே!

 

சேயடுப்புத்தூங்குமோ

சீவனுள்ள நெருப்பினால்

போயெடுத்துப்பாரடா

பொங்குமந்தச் சோற்றினைப்

போற்றியிசை பாடடா!

எத்துணை அற்புதமான அறிவியல் சார்ந்த புனைவு இது பாருங்கள்.

தொப்புள் கொடி உறவு என்பதை இங்கு சற்று பொருத்திப் பாருங்கள் .. குழந்தை வயிற்றில் இருக்கும் வரை தாயின் மூலமாக உயிரைக் காப்பதற்கும், உடலை வளர்ப்பதற்கும் உணவு கிடைக்கிறது. ஆனால் குழந்தை வெளியில் வந்த பின்பு தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு என்பதாகத்தானே வாழ்க்கை இருக்கிறது.

அடுப்பு நெருப்பால் சூடு வருகிறது, இந்தச் சூட்டில் சமையல் எப்படி நடக்கிறது?

சமையல் என்பதும் வேதியியல்தானே. வெவ்வேறு பொருள்களைப் பாத்திரத்தில் போட்டு, கலந்து வெப்பமேற்றும்போது அவை பலவிதமான ரசாயன மாற்றங்களுக்கு உட்பட்டு அதன் உருவம், நிறம், மணம், சுவை என்று அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடுகின்றன. இதைத் தான் சமையல் என்று சொல்கிறோம். இப்படித்தான் தத்துவம் நிறைந்த இது போன்ற கவிதைகளின் வாசிப்பும். ஆம், போகிற போக்கில் ஒரு நாளில் வாசித்து விட்டு அதன் ஆழ்பொருளைத் தேடிக் கண்டடையும் வாய்ப்பு குறைவே.. வாசித்து வாசித்து உள்ளத்தில் தேக்கி வைத்து, அதை அசை போட்டு அசைபோட்டு அதன் ஆழம் கண்டுணர வேண்டிய படைப்புகள் அத்தனையும் ..

ஆக, நம் மகாகவி ஈரோடு தமிழன்பன் ஐயாவும் ஒரு சித்தரோ அன்றி புத்தரோ என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா … இன்னும் இன்னும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய படைப்புகள் இவை என்றாலும், என் சிற்றறிவிற்கு எட்டிய வகையில் நான் புரிந்து கொண்டது இம்மட்டே ..  நீங்கள் இன்னும் ஆழ்ந்து சிந்திக்கக் கூடுமானால் உங்களுக்கு இன்னும் பல விளக்கங்கள் வெளிச்சமிடலாம்.

 

 

 

 

வெளிச்ச தேவதை

 

 


கவிஞர் திரு பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் இரண்டு கவிதைத் தொகுப்புகளை ஏற்கனவே வாசித்துள்ளேன். ‘அரிநெல்’ எனும் கவிதைத் தொகுப்பு, நறுக்கென்று ஒரு சில வார்த்தைகளில் ஆழ்ந்த கருத்துகளைச் சொல்லி சுருக்கென்று உரைக்கச் செய்யும் கவிநயம் படைத்த நவீன கவிதைகளின் தொகுப்பு. அடுத்து மனித நேயச் சிந்தையின் உயிர்ப்பாகத் தீட்டப்பெற்ற ‘அந்த நான் இல்லை நான்’ எனும் கவிதைத் தொகுப்பு.

 

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் இரட்டைக்காப்பியம் என்று தலைப்பில் குறிப்பிட்டிருப்பது ஒரு எதிர்பார்ப்புடன் வாசிக்கத் தோன்றுகிறது. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்களாகப் போற்றப் பெறுகின்றன.

 

‘‘உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்

உரைசாலடிகள் அருள மதுரைக்

கூலவாணிகள் சாத்தன் கேட்டான்”

(சிலப்பதிகாரம், பதிகம். 87-88)

இளங்கோ பாட சாத்தனார் கேட்டார்’ என்ற பதிகச் செய்தி இதற்குக் காரணமாகலாம் என்பதோடு சிலப்பதிகாரம் முன்கதை; அதன் தொடர்ச்சியான பின்கதையாக அமைவது மணிமேகலை. துறவு பூண்ட மணிமேகலைக் காதையும் குறிப்பிடப்பட்டுள்ளது ஈண்டு நோக்கத்தக்கது.

 

 ‘விளக்கு எரிகிறது’ எனும் கிராமத்து வாய்மொழியை அழகாகக் காட்சிப்படுத்தும் ஆரம்ப வரிகள். விளக்கின்றி இருண்டு கிடக்கும் வறுமைக் காட்சியை வெப்பமாக வீசும் சுவாசத்தை, ஏக்கப் பெருமூச்சை வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்க சொற்கள்.

 வறுமையின் கோரத்தாண்டவம் ஏற்படுத்தும் அலங்கோலங்களை, நரக வாழ்க்கையின் அச்சுறுத்தல்களைக் காட்சிப்படுத்தும் சொல்லாடல்கள். எளிமையும், வலிமையுமான முத்துக்களை அழகு மாலையாகக் கோர்க்கும் வல்லமையை இயல்பாகப் பெற்றவர் இக்கவிஞர் என்பதை இவருடைய பல்வேறு படைப்புகள் ஏற்கனவே கட்டியங்கூறி நிற்பதை வாசித்து அறிந்த வகையில் இந்தப் படைப்பும் அந்த வரிசையில் முன்னணி இடத்தில் பொருந்தியிருப்பதைக் காண முடிகின்றது.

 

அடுத்த பத்தியில் அங்கமெல்லாம் பசுமைச்சேலை உடுத்தி வசீகரமாய் காட்சியளிக்கும் வயல்களை வர்ணிக்கும் அற்புதக் காட்சியமைப்புகள். பசையோடு குதூகலமாக வாழ்ந்த கூட்டுக் குடும்பத்தின் கடந்தகால நினைவோடைகள். கூட்டுக் குடும்பம் பிரிந்ததால் ஏற்பட்ட பின்விளைவுகள், நன்செயும், புன்செயும் புன்னகைத்து விடைபெற்றதும் திக்குத்தெரியாத பயணமாய் தொடரும் வாழ்க்கை என இயல்பான காட்சிகள்.

கால மாற்றங்களில், பருவ மாற்றங்களில் எந்த மாற்றமுமில்லாமல் இயற்கை ஓடிக்கொண்டிருந்தாலும், நெருப்பு பூக்காத அடுப்புகளும், நச்சுப் பாம்பாகத் தீண்டிப் போகும் இரவும், பகலும் என சாபமான, இருந்தும் இல்லாமையில் உழலும் இந்த வாழ்க்கை ஒரு சாபமாகிப் போனதை உணர்வுப் பெருக்கால் உயர்த்திப் பிடிக்கிறார் கவிஞர்.

கொஞ்சம் கொஞ்சமாய் மாறும் நிலையால் பஞ்சமும் விரைந்தோடி மனையிலும் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை விதையும் தூவப்படுகிறது.

ஆடை அணிகலனும் சேர்ந்து பொன்னும் மணியும் ஒளிவீசும் ஆசையில் நாணயம் புரளத் தவிக்கும் மனம் முன்னேற முனைப்பு காட்டுவதும் இயற்கைதானே..

அடுத்த பத்தியில், வரும்வரை உழைத்து எதிர்காலத்தை புதிதாய் சமைப்பதற்கான வழியையும் அலசுகிறார். முனைப்பும், துடிப்பும் துணையாய் நின்றால் வீட்டு வேலையும் செய்யலாம், தாய், சேய், நாய் என அனைவரையும் பேணவும் மனமும் உண்டு, நல்ல உழைப்பும் உண்டு என்பவர் மேலும் மேலும் ஆர்வத்தைத் தூண்டிக்கொண்டிருக்கிறார். அச்சத்தை துச்சமென மதித்து முன்னேற முயன்றாலும் மனிதர்கள் தெய்வங்களாகவும், மனிதர்களாகவும், விலங்குகளாகவும் மெய்ப்பித்ததை விதியின் வழி என்கிறார். உழைப்பு எனும் வல்லமையில்லாத நல்லவரான அப்பாவினால் நிறைமாத கர்ப்பிணியாய் கடன் சுமை பற்றிய விழிப்புணர்வு இல்லாத கணவனே கண்கண்ட தெய்வமெனும் வெகுளியான அம்மா. அக்காவும், தங்கையும் படிக்கவேண்டி ஆர்வமிருந்தும் இடையில் இருப்பவள் வேலைக்குச் செல்ல நேர்ந்த அவலம். குடும்பத்திற்காக தியாகியான பாவப்பட்ட பிறவி. தாய் மீது பாசம் கொண்ட தாய்மாமன்களின் பரிவும் பெறமுடியாத தடையாக கௌரவம். இத்தகையச் சூழலில் இடர் களைய வீசும் மெல்லிய பூங்காற்றாக தோழமை காட்டி தங்களுக்காக கரைந்த அக்காவின் தோழி அன்புடன் அளித்த நகை அடகுக் கடையில் பணமாக மாறி, முகவருக்கு கொடுத்து பெருமூச்சு விட இன்னல் தீர்க்க கைகொடுத்தது. இரண்டு நாட்களில் சிங்கப்பூர் பயணம். உறவினர் வீட்டில் தங்கல், அங்கே சென்னை உறவுகள் வருகை என விரைவாக அடுத்தக் கட்டம் நோக்கி நகரும் வாழ்க்கை. விமான நிலையப் பிரம்மாண்டம், முன்பின் அறியாதவருக்கான காத்திருப்பு, புதிராய்த் தெரியும் முகங்கள் என தெளிவான காட்சிகள்.

 

முகவரின் பாராமுகமும், பார்த்தும் அசட்டையான போக்கும், அவன் பின்னால் ஓடும் துர்பாக்கியமும், துணைக்கு வந்த தம்பியையும் காணமுடியாமல் விலகி ஓடிவந்த இறுதி நிலை. அடுத்து நுழைவுச் சீட்டு, குடிநுழைவுச் சீட்டு என ஓடி ஓடி உடன் வந்த உடன்பிறப்பைப் பார்த்துக் கையாட்டவும் முடியாமல் இதயத்தில் கனத்தை சுமந்தவாரு பயணம். விமானப் பயணத்தின் வாடிக்கையான செயல்பாடுகளை ஆச்சரியமாகப் பார்க்கும் சீவனின் எண்ணவோட்டங்கள், மனித நேயம் செத்துவிடவில்லை என உதாரணமாக நிற்கும் பெரியவர், புதிய காட்சிகள், புதிய முகங்கள், புதிய வாழ்க்கைமுறை என விரியும் காட்சியில் அரண்டு நிற்கும் பேதை எனக் காட்சி விரிகிறது.

 

தன்னை அழைத்துச் செல்ல வரும் பெண்ணிடம் முதல் முறையாக தன் பெயர் சொல்லி அறிமுகம் செய்து கொள்ளத் துடிக்கும் மதியரசி. ஆகா, ‘இரவின் நரை’ கவிதைத் தொகுப்பின் சிங்கப்பூர் அழகியல் வர்ணனைகள் காட்சியாக விரிய மகிழுந்தில் அமர்ந்தவாறு இரசித்துக் கொண்டு வந்துகொண்டிருக்கிறாள். தமிழர்களைக் கண்ட பூரிப்பில் மிதக்கும் பூவிழியாள். உடன் நம்மையும் சிங்கப்பூர் அழகுக் காட்சியைப் படம் பிடித்துக் காட்டி மகிழச் செய்கிறார்.

 

மருத்துவப் பரிசோதனையில் தன் உடல்நிலை குறித்து, குறையைக் குறித்து இடித்துப் பேசவும், அச்சப்படுத்தவும் செய்தவைகளில் ஆரம்பித்து அன்பை விதைத்து அன்பை அறுவடை செய்தவளின் அற்றைய நிலையையும் நன்றாகவே காட்சிப்படுத்துகிறார். அவர்கள் ஏன் அப்படி நடந்தார்கள் என்றும், அப்படி நடந்தவர்கள் யார் என்றும், அவளுடைய குறைதான் என்ன என்ற பலப்பல வினாவை சேர்த்துக்கொண்டே போகிறார்.

 

வீட்டு வேலையில் குறை சொல்லியே குதறி எடுக்கும் எசமானனின் நீச எண்ணமும் விளக்கம் பெற்றுள்ளது. புயலாய் வீசிய பெற்றோர்களுக்குத் தென்றலாய் வீசும் பிள்ளைகள்!  பாவம் ஊருக்குத் திரும்பிச் செல் என்ற முகவரின் ஆணைக்கு அடிபணிய மனமின்றி கடன் தீர்க்கத் தொடர்ந்து வேலை வேண்டும் என்று கெஞ்சிக் கூத்தாடும் மதியரசி நரகத்தைக் கண்டுவிட்ட மோசமான நிலையில்... அடித்து முகத்தை வீங்க வைத்த கொடுமையின் இறுதியில் முகவருக்குச் செய்தி போக திரும்பிப்போக எத்தனித்துவிட்டாள்.

ஆனால் அடுத்து வட இந்தியர் வீட்டுக்கு பணிக்குச் சென்றவளின் வாழ்க்கையில் சற்றே நிம்மதி கிடைத்திட 13 ஆண்டுகளாக காலம் கடந்து கொண்டிருக்கிறது.

மூன்றாவதாக சென்ற வீட்டில் ஒரு பாட்டியை கவனித்துக்கொள்ளும் பணியில் நிறைவு பெறுகிறாள். கடன் சுமையும் குறைய ஆரம்பிக்கும் கருணைக் காலம். இந்தப் பெண்ணின் தியாகம் பெற்றவர்களின் கடமையில் ஏற்றம், வீட்டில் தீப ஓளி மின்ன குடும்பமே குதூகலமாய் இருக்கும் நிலை ஏற்பட்டது. நரகத்தைப் பார்த்தவளுக்கு நந்தவனமாக மாறி 8 ஆண்டுகள் வாழவைத்தது. தன்னைப் பெற்றெடுக்காமலே தாயாக மாறிப்போனவளின் அன்பில் கரைந்து உருகி பிறந்த பயனை அடைகிறாள். அந்தத்தாய், ‘செத்துங்கொடுத்தான் சீதக்காதி’ என்பது போல இறந்த பின்னும் 5000 வெள்ளி பங்கீடு அளித்து தெய்வ நிலைக்கு உயர்ந்தவளின் பேரை விளக்கிச் சொன்ன விதம் இனிமை. நரகம் கண்ட மதியரசி சொர்கத்தில் வாழ்ந்து நிம்மதி அடைகிறாள். தம் குடும்பத்தின்மீது அவள் வைத்திருந்த அகக்கறை இல்லாத அக்கறை அவளை வெளிச்ச தேவதையாக்கியுள்ளதை அழகான சொற்களால் கவிமாலை தொடுத்துள்ளார் கவிஞர். பல்வேறு விதமான சூழலில், பல்வேறு வாழ்வியல் பின்னணியில் பிழைப்பிடம் நாடி வந்திருக்கும் பல்வேறு பணிப்பெண்களின் இலக்கணங்களும், முதலாளி வர்கமான பணக்காரர்களின் சில்லறைத்தனமான புத்திகளும், சுடத்தான் செய்கின்றன. கரையாத மனசுக்காரர்களோடுதான் கரைகாண வேண்டிய, முள் வேலியில் விழுந்த சேலையைப் போன்ற, பணிப்பெண்ணின் வாழ்க்கையை அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ள வசனக் கவிதை. ஒவ்வொருவர் வாழ்வும் அதிசயம் நிறைந்த இரகசியப்பேழை என்று சிந்திக்க வைக்கிறார். அந்த பேதைப் பெண்ணின் உடற்குறையால் தனிமரமாகி நிற்பதையும் நாசூக்காகச் சொல்லிச் செல்கிறார்.

குடும்பத்திற்காக மெழுகுவர்த்தியாகத் தம்மைத்தாமே உருக்கிக்கொண்டாலும், நிறைநிலவாக வாழும் மௌன விளக்கான, வெளிச்ச தேவதையான ஒரு பேதைப்பெண்ணின் பரிதாபமான சுயசரிதையே இந்த நவீன வசனக் கவிதை.

 

நம்பிக்கை நார் மட்டும்

நம் கையில் இருந்தால்

உதிர்ந்த பூக்களும்

ஒவ்வொன்றாய் ஒட்டிக்கொள்ளும்

கழுத்து மாலையாய்

தன்னைத்தானே கட்டிக்கொள்ளும்!

என்ற மு.மேத்தாவின் நம்பிக்கை விதைக்கும் கவிதை வரிகளையும், கண்ணீர்ப் பூக்களையும் நினைவூட்டத் தவறவில்லை கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் இந்த படைப்பு.

 

21ம் நூற்றாண்டின் திறன் மேம்பாட்டிற்கான கல்வி

 


முன்னுரை

 

ஆதி மனிதம் உருவானது பல இலட்சங்கள் ஆண்டுகளுக்கு முன்பு என்றாலும் குரங்கிலிருந்து முதன் முதலில் தோன்றியது மூதாய் என்று நம் அறிவியல் அருதியிட்டுக்கூறும் பெண் தான் அவள். மனிதரின் பிறப்பு குறித்து திருவாசகம் கூறும் கருத்துகள்,

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

என்கிறது சிவபுராணம்.

ஆதியில் பெண்ணே தலைமை வகிப்பவளாகவும், வேட்டையாடி உணவைக் கொண்டுவருபவளாகவும், சமுதாயத்தை வழிநடாத்துபவளாகவும் இருந்தாள் என்கிறது வரலாறு. மனிதகுல வரலாற்றில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்படுவதே வாழ்வியல் மரபுகள் போன்றவை. இவைகள் ஏற்படுத்தும் தாக்கங்கள், சிதைவுகள் அனைத்தும் வரலாறாக பதிவு செய்யப்படுகின்றன. அந்த வகையில் அவைகள் வாழ்வியலின் புறச்சின்னங்களாக மாறிவிடுகின்றன, இந்த புறச்சின்னங்களின் நீண்ட நெடிய வரலாறு மனித குலத்தின் உடல் வளர்ச்சி, உளவியல் வளர்ச்சி, அறிவு வளர்ச்சி ஆகியனவற்றை பல பிரிவுகளைத் தொகுத்து ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு ஒரு தொடர் சங்கிலியாகக் கடத்திச் செல்கிறது.

உலகின் பழமையான சமுதாயங்களில் ஒவ்வொரு தலைமுறையாக தொடரப்பட்டு புதிய தலைமுறைகள் பழமையான கருத்துகளை பாதுகாத்து பயன்படுத்தி வருகிறது. தமிழ் சமுதாயம் போன்ற ஆதி சமூகங்கள் பெண்வழி சமூகங்களாக இருந்த காரணத்தால் பெண்களின் உடல் வளர்ச்சி, உளவியல் வளர்ச்சி, அறிவு வளர்ச்சி ஆகியவற்றை பல பிரிவுகளாக தொகுத்தும் பகுத்தும் வைத்துள்ளனர். மற்றைய ஆண்வழி சமுதாயங்கள், அது போலவே ஆண்களுக்கு முதன்மையளித்து அவர்களின் உடல் வளர்ச்சி, உளவியல் வளர்ச்சி, அறிவு வளர்ச்சி போன்று பகுத்து வைத்துள்ளனர்.

பெண்களுக்கான எழுவகைப் பருவப் பெயர்களான, பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிகை போன்றவற்றின் அடிப்படையிலேயே பெண்ணியம் வரையறைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு பெண் நெறிமுறைப்படுத்தப்பட்ட, அந்தந்த பருவத்திற்கு ஏற்ற வகையில் தன் வாழ்வியலை அமைத்துக்கொண்டு அதற்கேற்றவாறே செயல்படவேண்டும். உலகளாவிய பெண்ணியத்திற்கும், இந்திய – குறிப்பாக தமிழ் பெண்ணியத்திற்கும் வாழ்வியல்  நடைமுறைகளிலும் பெரும் வேறுபாடுகள் உள்ளன.

அச்சமும் நாணமும் மடனும் முந்தாறுதல்

நிச்சமும் பெண்பாற்குரிய என்ப - என்று தலைமகளுக்குரிய தனி

இலக்கணமாக தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் காலநிலை மாற்றம், உணவுத் தேடல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மனித குழுக்கள், போகிற போக்கில் ஆங்காங்கே  தங்கி விவசாயம், கருவிகளை உற்பத்தி செய்து தங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு ஆங்காங்கே நதிக்கரைகளில் தங்கிவிட்டனர். அவர்கள் வாழ்ந்த பிரதேசத்தின் காலநிலை, உணவு உள்ளிட்ட புறக்காரணிகள் அவர்களுக்குத் தனித்த அடையாளங்களை உருவாக்கியதோடு அவர்கள் உருவாக்கிய மொழியும் இணைந்த வகையில் தனித்த இனமாக உருவாகினர்.

 

2000 ஆண்டுகட்கு முன்னர் நம் பழந்தமிழ் இலக்கியமான புறநானூறு காட்டும், தமிழனின் வாழ்வியல் நெறிமுறைகள் இதோ ..

 

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே

ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் 

களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

 

இளமையில் கல் என்கிறது ஆத்திச்சூடி.

 

கற்கை நன்றே; கற்கை நன்றே;
பிச்சை புகினும் கற்கை நன்றே,

 

எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியில் கற்றோரை ‘மேல்வருக‘ என்பர்

என்கிறது வெற்றிவேற்கை.

இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கம் தொன்மையான இந்தியாவின் தென்புல, வடபுல சமுதாயங்களில் வழக்கில் இருந்த கல்வி அடிப்படையிலான திறன் மேம்பாட்டு வளங்கள், பயிற்சிக் களங்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டி அளிப்பதே.

மேலைநாட்டின் திறன் மேம்பாட்டு கல்வி

 

மேலைநாட்டில் கல்வி பல நூற்றாண்டுகளாக ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆதி காலங்களில், கற்பித்தல் முக்கியமாக விவிலிய நூலை வாசிப்பதற்காக மத குருமார்ள், தீர்க்கதரிசிகள் போன்றவர்களால் மேற்கொள்ளப்பட்டு, அதுவும் மேட்டுக்குடி மக்கள், செல்வந்தர்களின் குழந்தைகள் மட்டுமே கற்பிக்கப்பட்டனர். தலைவர்களாகவோ, தொழிலதிபர்களோ ஆவது எப்படி என்பதையும், தங்களின் முறை வரும்போது அதனை எப்படி எதிர்கொள்வது என்பதையும் கற்றுக் கொடுப்பார்கள். இறுதியில், ரோமன் கத்தோலிக்க திருச்சபை பிரபுக்களின் குழந்தைகளுக்கு கற்பிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது.த்தகைய கற்றல் மையங்களில் சில இன்றும் உள்ளன. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் தமது முதல் கல்லூரியான செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரியை 1284 இல் நிறுவியது.

 

இருப்பினும் சமய நிறுவனங்கள் சாதாரணமான குழந்தைகளுக்கான பள்ளிகளை அமைத்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே சேர்ந்து கொண்டனர். 1880 ஆம் ஆண்டு வரை 5 முதல் 10 வயது குழந்தைகளுக்கு கல்வி கட்டாயமாக்கப்பட்டது, பின்னர் படிப்படியாக இந்த நிலை உயர்ந்து 2015இல் 18 வயது வரை கல்வி கட்டாயமாக்கப்பட்டது.

 

பின்னர் இது சமயப் பரப்புரையாக மாற்றம் பெற்று விவிலியக் கருத்துகளை பரப்புவதற்காக ரோமன் கத்தோலிக்க திருச்சபை போன்ற அமைப்புகள் குருமார்களை உருவாக்கி உலகின் மற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

 

 கல்வியின் பரிணாமம் என்றால், அது 1836ஆம் ஆண்டில் முறையான பள்ளிக்கு அரசாங்கம் அனுமதி அளித்தது. இது மேலைநாட்டில் கல்வி வளர்ச்சியின் தொடக்கமாகும். 1856 வாக்கில், தொழில்நுட்பக் கல்வி சார்ந்த பள்ளிகளுக்கு மானிய உதவி வழங்குவதற்கான பொறுப்பை வர்த்தக வாரியத்தின் அறிவியல் மற்றும் கலைத்துறை பெற்றுள்ளது. கல்வியின் முன்னேற்றம் 19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை மெதுவாக தொடர்ந்தது. அந்த நேரத்தில்  பகல் பள்ளிகள், இரவு பள்ளிகள், பல்வேறு கல்வி நிறுவனங்கள், பாலிடெக்னிக், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் அமைந்தன. 1902களில் கல்விக்கான பொறுப்பு உள்ளூர் கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், வணிகக் கல்விப் பள்ளிகள் மேலைநாட்டின் கல்வி முறைமையில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட ஆரம்பித்.

இங்கிலாந்தில் விக்டோரியா பேரரசி வந்த பிறகு மறுமலர்ச்சி ஏற்பட்டது.  இவரது காலம் தொழிற்புரட்சியின் உயர்நிலையாகும். இது ஐக்கிய இராச்சியத்தில், சமூக, பொருளியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஏற்படுத்தியது. இவருடைய காலத்திலேயே பிரித்தானியப் பேரரசு பெரிதும் விரிவடைந்து அதன் உச்ச நிலையை எட்டியதுடன், அக்காலத்தின் முன்னணி உலக வல்லரசு ஆகவும் திகழ்ந்தது.

 

பிரித்தானிய காலனித்துவவாதிகள் பின்னர் பிரித்தானிய முறையை அடிப்படையாகக் கொண்ட ஒரு கல்வி முறையில் ஆங்கிலத்தை கற்பிக்கும் மொழியாக அறிமுகப்படுத்தினர். ஐரோப்பிய அறிவியல் மற்றும் இலக்கியங்களை பரப்பவும், விசுவாசமான ஆங்கிலம் பேசும் பணியாளர்களை வளர்க்கவும் முயன்றது. முக்கியமாக இந்தியாவின் உயர் வகுப்பினரிடமிருந்து அதன் காலனியை நிர்வகிக்க ஆட்சேர்ப்பும் செய்யப்பட்டது. பிரித்தானிய பாடத்திட்டங்களைக் கற்பிக்கும் ஆங்கில மொழிப் பள்ளிகளுக்கு ஆதரவாக பாரபட்சமின்றி நிதிகளை வழங்கி ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கல்வியின் வடிவத்தை மாற்றியிருந்தனர். ஆனாலும் சுதந்திரத்தின் போது 80 சதவிகிதம் முதல் 90 சதவிகித மக்கள் ஆங்கில கல்வியறிவற்றவர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சுதந்திரத்திற்குப் பிந்தைய காலம் இந்தியா முழுவதும் கல்வி  நிறுவனங்கள் விரைவாகப் பெருகியது. 1950ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தியாவின் முதல் அரசியலமைப்பு, 14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக கட்டாயக் கல்வியை வழங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. இதனைத் தொடர்ந்து இன்றுவரை கல்விக்கான மகத்தான முன்னேற்றம் நடந்து வருகிறது.

இந்தியாவில் வடபுலத்தில் திறன்சார் மேம்பாட்டுக் கல்வி

 

ஆரம்ப காலங்கள் பற்றி நாம் அறிந்து கொள்ள பாறை ஓவியங்கள், போன்றவைகள் உள்ளன. கற்றல் வரலாறு தோற்றத்தின் சான்றுகளாக தொன்றுதொட்டு வரும் நம் பாரம்பரியமான வாய்வழி கதைகளும், பதிவுகளும் உள்ளன.  இன்றைய கல்வி முறை பாடத்திட்டங்களில் மதிப்பீடு நடைமுறைகளும் உள்ளன. ஆனால் ஆதி காலத்தில் எப்படி இருந்திருக்கும்?

 

ஆரம்ப காலத்திலிருந்து வடபுலத்தில், தென்புலத்தில் உள்ளவை போன்று வெவ்வேறு தட்பவெப்பநிலைகள், மலைகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகொண்ட  பகுதிகள் அல்லாமல், பெரும்பாலும் சமவெளிப் பகுதிகளாகவே உள்ளன. பல்வேறு  பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் இந்தியாவின் சில பகுதிகளுக்கு வரத் தொடங்கினர். இந்தியா அவர்களுக்கு ஒரு அதிசய நிலமாக இருந்தது!  இந்தியாவின் புகழ், அதன், செல்வம், மதங்கள், தத்துவங்கள், கலை, கட்டிடக்கலை போன்றவற்றால் உலகளவில் பரவியிருந்தது. அது மட்டுமன்றி இந்தியாவின் தனிப்பட்ட கல்வி நடைமுறைகளும் தொலைதூரம் வரை பரவியிருந்தன. புத்தம் கடல் தாண்டி பரவி அனைத்து மக்களையும் ஒன்றிணையச் செய்தது. சமசுகிருதம் தேவமொழியாக பரப்புரை செய்யப்பட்டது.

 

ஆதிகால கல்வி முறை அறிவு, மரபுகள், நடைமுறைகள் போன்றவைகள் மனித நேயத்தை  வழிகாட்டவும், ஊக்குவிக்கவும் ஆதாரமாகக் கருதப்பட்டன. இந்த முறையின் சிறப்பு அம்சங்கள் என்று எடுத்துக் கொண்டால், ரிக்வேத காலத்திலிருந்து, வடபுல  கல்வி முறை உருவாகி, து தனி நபரின்  அகம், புறம் சார்ந்த முழுமையான  வளர்ச்சியில் கவனம் செலுத்தியது. இந்த அமைப்பு தார்மீக, உடல், ஆன்மீகம்,  அறிவு ஆகிய வாழ்க்கையின் அம்சங்களில் கவனம் செலுத்தியது. இது பணிவு, உண்மைத்தன்மை, ஒழுக்கம், தன்னம்பிக்கை, அனைத்து படைப்புகளுக்கும் மரியாதை போன்றவற்றின் மதிப்புகளை வலியுறுத்தியது. மனிதர்களுக்கும், இயற்கைக்கும் இடையிலான சமநிலையைப் பாராட்ட மாணவர்கள் கற்பிக்கப்பட்டனர். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய இந்த கல்வி முறை கற்றல், உடல் வளர்ச்சி ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தியது. அதாவது ஆரோக்கியமான மனதிற்கும், ஆரோக்கியமான உடலுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அந்த வகையில் இந்தியாவின் கல்வி நடைமுறைக்கு ஒரு பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

 

“இங்குக் கூறிய வித்தைகள் கலைகள் என்ற பாகுபாட்டின்படித் தென்னாட்டு மொழிகள் ஆகிய தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்ற திராவிட மொழிகளில் பழங்காலத்து ஏட்டுச்சுவடிகள் காணப்படவில்லை. இம்மொழிகளிற் காணும் பழஞ்சுவடிகள் பெரும்பாலும் இலக்கணம், இலக்கியம், மருத்துவம், சோதிடம், சமய சாஸ்திரம், காவியப் பிரபந்தங்கள் என்ற பகுப்பு உடையனவாகவே உள்ளன. இப்பாகுபாட்டுடன் நம் தமிழ் மொழிக்குரிய பழைய ஏட்டுச் சுவடிகள் நம்நாட்டுப் பழஞ்சுவடி நூல் நிலையங்களில் ஏறத்தாழ ஆறாயிரமே உள்ளன. தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இத்தொகை இதனினும் சற்று குறைவேயாகும். நம் தமிழ் மொழியில் ஒரே வழி சிற்ப நூல், மனை நூல், கிணற்று நூல், கணிதம் என்பன கேட்கப்படினும் பொதுக் கலை நூல் ஆகிய ‘தோணி செய்தல்’ என்பது வடமொழியுட்போல இதுவரை தமிழின்கண் இருந்த செய்தி கேள்வியில் எய்தியது இல்லை.” – கப்பல் சாஸ்திரம் எனும் பழஞ்சுவடிச் செய்தி கூறுவதும் கவனம் கொள்ளத்தக்கது.

 

வர்ணாசர தர்மம்:

வேதாந்தக் காலத்திற்குப்பின் மனிதனின் வாழ்க்கை நிலை நான்காகப் பிரிக்கப்பட்டது.

7 - 25 வயது - பிரம்மச்சர்யம்,

25 - 50 வயது - கிரகஸ்தம்,

50 முதல் வயது முதல் ஒய்வு காலம்- வனப் பிரஸ்தம் (காடுறை வாழ்வு),

அதன் பின் வாழ்பவர்கள் துறவறம் எனும் சந்நியாச வாழ்க்கை மேற்கொள்ளலாம். துறவறம் கட்டாயமில்லை.

கைவினைஞர் குழுக்கள் கைவினைத் திறன்களைப் பரப்பியதோடு உழைப்பாளர்கள், மேல் சாதியினர் இருவரும் தங்கள் வாய்வழி மரபுகளை தங்கள் தலைமுறையினருக்குப் பரவச் செய்தர். இருப்பினும், கடைநிலை  சாதியினர் என்று கருதப்பட்டவர்களுக்கு கல்வி கற்றல் தடை செய்யப்பட்டது. அதே நேரத்தில் பெண்களின் கல்வி பெரும்பாலும் முறைசாரா கல்வியாக மாறியது.

 

32 வித்தைகள்

 

உலக மாந்தர் வாழ்வில் அறிய வேண்டியவைகள் அளவில்லாதன எனினும் முக்கியமாகக் கற்க வேண்டியது முப்பத்திரண்டு வித்தைகளும், அறுபத்து நான்கு கலைகளும் என்கிறது சுக்கிர நீதி எனும் பழமையான நூல். எந்தக் காரியம் சொல்லளவிலும் முற்றிலும் நன்கு நிறைவேற்றத்தக்கதோ அது வித்தை என்றும், எக்காரியம் பேசும் ஆற்றல் இல்லாத ஊமையென்றாலும் நிறைவேற்றத் தக்கதாக உள்ளதோ அது கலை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வித்தைகளை விரித்துக் கூற வேண்டுமென்றால், அவை இருக்கு முதலிய நான்கு வேதங்கள், ஆயுர்வேதம், தநுர்வேதம், காந்தருவவேதம், தந்திரங்கள் ஆகிய உப வேதங்கள் நான்கு, சிக்கை, வியாகரணம், கற்பம், நிருக்தம், சோதிடம், சந்தசு ஆகிய வேதாங்கங்கள் ஆறு, மீமாஞ்சை, தருக்கம், சாங்கியம், வேதாந்தம், யோகம், இதிகாசம், புராணம், தருமசாத்திரம், நாத்திகம், அர்த்தசாத்திரம், காமசாத்திரம், சிற்பம், அலங்காரம், காவியம், தேசபாசை, அவசரோக்தி (அமயச்சொல்), யவனமதம், ஒப்புறவறங்கள் ஆகிய பதினெட்டுடன் சேர முப்பத்திரண்டு வித்தைகள் என்கிறது.

 

64 கலைகள்

 

ஆயகலைக ளறுபத்து நாங்கினையும்

வேய அறிவித்த யென்னம்மை

தூய உருப்பளிங்கு வாராமல் உள்ளத்தினுள்ளே

இருப்பளிங்கு வாரா திடர்.

என்கிறது சரசுவதி அந்தாதி

 

ஆயகலைகள் அறுபத்தி நான்கு என்பதில், கீதம், வாத்தியம், நிருத்தம் முதலிய காந்தருவக் கலைகள் ஏழும், ஆயுர்வேதக் கலைகள் பத்தும், தநுர்வேதக் கலைகள் ஐந்தும், தந்திரக் கலை ஒன்றும் ஆக, இருபத்துமூன்று கலைகளின் தன்மை என்பதோடு அனைத்து மக்களும் கைக்கொள்வதற்கு தோதான கலைகளாக நாற்பத்தியொரு கலைகளைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இவற்றுள் தேர்செலுத்துதல், யானை, குதிரை நடை கற்பித்தல், மண், மரம், கல், பொன், வெள்ளிப்பாண்டம் செய்தல், ஓவியம் வரைதல், ஊருணி, வாவிமாளிகை சமைத்தல், நாழிகை வட்டில் கருவி செயல், மிகை, குறை, சமன்விகற்ப வண்ணம் ஆடைக்கு ஏற்றல், நீர் நெருப்புக் காற்றுச் சேர்க்கை, தடைப்படுத்தல், கருவித்தொழில் இவைகளை விவரித்து முப்பத்துநான்காவது கலை வகையாகத் தோணி தேர் முதலிய செய்தல் ஒரு கலை என்றும் கூறப்பட்டுள்ளது.

 

தென்புலக் கல்வி

 

வரலாற்று ஆசிரியர்களால் வரையறுத்துக் கூறமுடியாத தொல் பழங்காலம் முதல் தென்னாட்டில் வாழ்ந்து வரும் இனத்தவர் தமிழர்கள். மனித நாகரிகத்தின் முதல்படியென வரலாற்று ஆய்வாளர்களால் கணக்கிடப்படும் கற்காலத்திலேயே தென்னகம் தமிழர் தாயகமாக இருந்ததை வரலாற்று வல்லுநர்கள் பல்வேறு சான்றுகளால் நிலைநாட்டி உள்ளனர். இனக்குழுச் சமுதாயமாக வளர்ந்து வீரயுகக் காலத்தையும் தன்பால் கொண்டு பின்னர் அரசுகளையும் தென்னக மண்ணில் உருவாக்கிவர்கள் தமிழர்கள். நாட்டமைப்பு, உழவு, வாணிபம், தொழில், கல்வி என இன்ன பிறவற்றிலும் முன்னேற்றப் பாதையில் தமிழினம் நடைபெற்றதை இலக்கியம் உள்ளிட்டச் சான்றுகள் நிறுவுகின்றன. தொழில் அடிப்படையிலும் நில அமைப்பின் அடிப்படையில் வேட்டுவர், ஆயர், உழவர், வணிகர், பரணர், கொல்லர் போன்ற குலங்கள் நிலவியிருந்தன.

 

மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதவர் கீழ்ப்பிறந்து

கற்றார் அனைத்தியர் பாடு”

ன்பது வள்ளுவர் வாக்கு.

 

அந்த வகையில் நூல் நூற்றல், கயிறு முறுக்கல், நெசவு, சாணை, உலோகம், மணி சோதனம், உலோகக் கலப்பு, போலி மணியாக்கம் (சூதுபவள மணி), அணிகலன் செய்தல், முலாம் பூச்சு, தோல் பதனீடு, பால் கறத்தல், தையல் செய்தல் முதலிய தொழில் வகைகளை போன்று மக்கள் இயல்பாக கைக்கொள்ளுதற்கு உரிய பொதுவான கலைகளும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலமாக பல நூற்றாண்டுகளாக நம் நாட்டில் இத்தொழில்கள் நடைபெற்று வந்துள்ளதையும் அறிய முடிகின்றது.

 

காவியங்கள் அதாவது கற்பனை, படைப்பு இலக்கியம் கற்றல் ஆதாரங்கள், இதிகாசம் போன்ற துறைகள், தர்க்கம், விளக்கம், கட்டிடக்கலை, அரசியல், விவசாயம், வர்த்தகம், கால்நடை வளர்ப்பு, வில்வித்தை ஆகியவற்றோடு உடற்கல்வியும் ஒரு முக்கியமான பாடத்திட்டமாக இருந்தது. மாணவர்கள் விளையாட்டுகள், பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் பங்கெடுத்தனர். வில்வித்தை பெறுவதற்கு பயிற்சிகள், தற்காப்பு திறன்கள்,  யோகாசனம் கற்பதில் குருக்களும் அவர்களுடைய மாணவர்களும் கற்றலின் அனைத்து அம்சங்களிலும் புலமை பெற ஒன்றாக மனசாட்சியுடன் பணியாற்றினார்கள். சித்தர் வழிக்கல்வி திறம்பட மேற்கொள்ளப்பட்டது.

  .

மாணவர்களின் கற்றலை மதிப்பிடுவதற்காக, கற்றல் குறித்த விவாதங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இளைஞர்களுக்கு மேம்பட்ட கற்றல் திறன் வழிகாட்டப்பட்டது. சக மாணவர்களுடன் சேர்ந்து கற்றல் முறையும், குழுவாக இணைந்து செயல்படும் முறையும் இருந்தன. கோயில்களும் கற்றல் மையங்களாக இருந்தன. ஆரம்பகால முறையில் அறிவை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டினர். வடபுலத்தில் மாணவர்கள் நாலந்தா பல்கலைக்கழகம் சென்றதுபோன்று தென்புல மாணவர்கள் விகாரைகள், காஞ்சி பல்கலைக்கழகங்களுக்குச் சென்றனர். கற்பித்தல் பெரும்பாலும் வாய்வழியாகவும், மாணவர்கள் நினைவில் கொள்ள தியானமும் வகுப்பில் கற்பிக்கப்பட்ட.

 

21ஆம் நூற்றாண்டின் மாணவனை கட்டமைப்பது எங்ஙனம்?

 

நம் மாணவர்கள் இந்த 21ஆம் நூற்றாண்டை எதிர்கொள்ளும் ஆற்றல் உடைய குடிமக்களாக இருப்பது அவசியம். சிக்கலான இந்த உலகில் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள ஒவ்வொருவரும் அதிக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இன்று வேகமாக முன்னேறி வரும் உலகப் பொருளாதாரத்தில் ஒவ்வொரு மாணவரும் போட்டிக்குத் தயாராக இருக்க வேண்டியதும் அவசியம். வேலைகளின் தன்மையும், போட்டியின் அளவுகளும்கூட மென்மேலும் மாறிக்கொண்டே இருக்கின்றன. மென்மேலும் பரந்து விரிந்து வரும் வணிக அமைப்புகளால், இயல்பிற்கு மாறான அதிக அறிவாற்றலின் தேவைகளும் அதிகரித்து வருகின்றன. நிரந்தரப் பணிகளின் வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது. இணைய வழி எழுத்துலகம் வளர்ந்து வருகிறது. அந்த வகையில் தொழில் முனைவோரின் மொழியியல் திறன்களின் தேவைகளும் அதிகரித்து வருகின்றன.

 

காலச்சூழலால் மேம்பட்ட தொழிலாளர்களின் தேவைகள் அதிகரித்துள்ள நிலையில் முதலாளிகள் பல்வேறு விதமான பயிற்சிகளில் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களையே பணியமர்த்த விரும்புகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் நல்ல பணியில் அமர்வதற்கான முக்கியமான திறன்கள் எவை என்பதன் விழிப்புணர்வு அவசியம். பணி நெறிமுறைகளை முழுமையாக உணர்ந்திருப்பவர்களுக்கு  80% வாய்ப்பும்,  இணைந்து பணியாற்றும் வல்லமை பெற்றவர்களுக்கு 75% வாய்ப்பும், சக மனிதர்களுடன் நல்ல தொடர்பு நிலையில் இருப்பவர்களுக்கு 70% வாய்ப்பும், சமுதாய பொறுப்பில் சிறந்திருப்பவர்களுக்கு 63% வாய்ப்பும், விமர்சன சிந்தையும், சிக்கல் தீர்க்கும் திறனும் உள்ளவர்களுக்கு 58% வாய்ப்பும் சாத்தியமாவதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. தகவல் தொழில்நுட்பத்தில் பணியாற்றுபவர்களுக்கு குழுப்பணி, பன்முகத்தன்மை, குறைகளைக் கண்டறியும் திறன், தகவல் தொடர்புகள் போன்ற திறன்களில் நல்ல பயிற்சியும் அவசியமாகிறது.

நிபுணத்துவம் பெற்றவர்களின் பணி நெறிமுறைகள் என்றால் அவை: விமர்சன சிந்தை, சிக்கல் தீர்க்கும் திறன், வாய்வழித் தொடர்புகள், சமூக பொறுப்புகள், வாசித்துப் புரிந்துகொள்ளும் ஆற்றல் போன்றவை.

 

21ஆம் நூற்றாண்டின் சிறப்பான திறன் மேம்பாட்டிற்கான கட்டமைப்புகள் எவை?

 

உலகின் இரண்டாவது பழமையான கல்வித் தொழில் இன்று தவிர்க்க முடியாத பெரும் சவாலகளைச் சந்திக்கும் நிலையில் உள்ளது. 2000 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி, உயர் கல்வியின் செயல்முறை என்பது கற்பித ஆய்வுக்கு உட்பட்ட மூலோபாயப் பங்கைப் புரிந்துகொள்வதற்கா விமர்சனத் தேர்வுக்கு உட்பட்டது. வருங்கால குடிமக்களை சரியான முறையில் வடிவமைப்பதே உயர்கல்வி நிறுவனங்களின் தலையாயக் கடமை என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பல்கலைக்கழகங்கள் பண்பாட்டின் பாதுகாவலராகவும் அறிவின் பாதுகாவலராகவும் கருதப்படுகின்றன. புதிய நூற்றாண்டிற்குத் தேவையான வாழ்க்கைத் திறன்களுக்கும், படைப்புகளுக்கும் உள்ள பெரிய இடைவெளியின் காரணமாக இந்த நிறுவனங்களிலிருந்து வெளிவரும் எதிர்கால குடிமக்களான இளைஞர்கள் வாழ்க்கையிலும் பணியிடத்திலும் சரியாகப் பொருந்துவதில்லை என்று வல்லுநர்களிடமும் பொது மக்களிடமும் விமர்சனங்கள் எழுகின்றன. எனவே, திறன் அடிப்படையிலான அறிவுறுத்தல் செயல்முறைகளும், பொருத்தமான கற்பித்தல் உத்திகளும் உயர் கல்வியில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது அவசியம்.

 

உயர்கல்வியில் கற்பிப்பவர்களின் கற்றல் சூழலின் அடிப்படையில் ஏற்பட்ட இந்த திறன் இடைவெளிக்கு விடை காணாமல் உயர் கல்வியில் கற்பிக்கும் செயல்முறை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அசைவற்றும், தேக்கமாகவும் இருப்பதும் கண்கூடு. தொழில் மற்றும் தொழிற்சாலையில் பயிற்சியாளர்களின் கவனத்துடன் ஒப்பிடும்போது, ​​கற்றல் சூழலைப் புரிந்து கொள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களின் கவனம் போதுமானதாக இல்லை என்றும் கருதப்படுகிறது. நமக்குத் தெரியாததை நாம் அறியவில்லை என்பது நமக்குத் தெரியவில்லை என்பதே உண்மை.

சமூக ஒத்துழைப்பு, பணிக்கான ஒத்துழைப்பு, நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கு தேவையான வாழ்க்கைத் திறன்கள், மென்மையான திறன்களும், கல்வித் திறன்களும் ஒரு இடைவெளியைக் கொண்டுள்ளன. அந்த இடைவெளியை இட்டு நிரப்ப ஒரு பாலம் தேவை. பல்கலைக்கழகத்திற்கும், பணி நிறுவனங்களுக்கும் இடையிலான இடைவெளியும், தொழில் மற்றும் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க உயர்கல்வி நிறுவனங்களிலிருந்து ஒரு செறிவான முயற்சி இருக்க வேண்டியது அவசியம்.

 

பள்ளியில் சிறு குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறையிலேயே கலை மற்றும் அறிவியல் பாடங்கள் உயர் கல்வி நிறுவனங்களில் இளைஞர்களுக்கும் கற்பிக்கப்படுகின் என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.

முதலிடத்தில், சிந்தனையும், கற்றல் திறனும் மேம்படுவது அவசியம். விமர்சன சிந்தையும், சிக்கல் தீர்க்கும் திறனும், படைப்பாற்றல் திறனும், புதுமையை அரவணைக்கும் திறன், தகவல் தொடர்புத் திறன், எளிமையான ஒத்துழைப்புத் திறன், தகவல் மற்றும் ஊடக எழுத்தறிவுத் திறன் போன்ற அனைத்தும் கவனம் பெற வேண்டும்..

 

மேற்கண்ட அனைத்துத் திறன்களும் சாத்தியப்படும் வகையில் இன்றைய மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது என்பதனால் நம் நாட்டின் கல்வி முறைகளில் காலத்திற்கேற்ற  மாற்றம் அவசியமாகிறது. அதாவது கல்வியறிவு என்பது சிந்தனையை நிறைவேற்ற தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தும் திறனை மேம்படுத்தும் வகையில் அந்தக் கல்வி அமைய வேண்டும். குறிப்பாக, விமர்சன சிந்தனையும், சிக்கல் தீர்க்கும் திறனும், படைப்பாற்றல் திறனும், புதுமைகளை அரவணைக்கும் திறனும், தொடர்புத் திறனும், ஒத்துழைப்புத் திறன்களும், வாழ்க்கை சார்ந்த திறன்கள், தலைமைத்துவப் பண்பு போன்றவைகள் ஊக்குவிக்கப்பட்ட கல்வியாக இருப்பது அவசியம்.

 

நெறிமுறைகள்:

 

பொறுப்புக்கூறல், தகவமைப்பு, தனிப்பட்ட உற்பத்தித்திறன், தனிப்பட்ட பொறுப்பு, சுய இயக்கம், சமுதாய பொறுப்பு போன்றவைகள் நெறிப்படுத்தப்பட வேண்டியது அவசியம். நிதி, பொருளாதார, வணிகம் மற்றும் தொழில் முனைவோர் எழுத்தறிவு, குடிமை எழுத்தறிவு, உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வு போன்றவைகள் உலகளாவிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். தற்போதைய சூழல் கருதி, அடுத்து வரும் ஐந்து ஆண்டுகள் உலகளாவி மிகவும் முக்கியம் வாய்ந்த ஒரு காலகட்டமாக இருக்கப்போகும் நிலையில், திறன்கள் மற்றும் பயிற்சி பெறும் பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம்.

 

இந்த நிலையில் கல்வி முறைமைகள் உலகளாவிய பணி வாய்ப்புகளுக்குத் தக்கவாறு சீரமைக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. வளர்ச்சி உத்தி, செயல்படுத்துவதற்கான உத்திகள் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம். கல்வியாளர்கள், வணிகம் மற்றும் கொள்கை தலைவர்கள் இடையில் குறிப்பிடத்தக்க ஒருமித்த கருத்து உள்ளதை உணர்ந்து அதற்கேற்ப கல்வித் திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம். கற்பித்தல் முறைமைகளில் விழிப்புணர்வு மிகவும் அவசியமாகிறது.

 

முடிவுரை:

 

உலகமயமாக்கலின் விளைவாக உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்ட நிலையில் இன்றைய சவால்களை எதிர்கொள்ள மாணவர்களைத் தயாராக்க வேண்டியது அவசியம்.  அந்த வகையில் ஒவ்வொரு மாணவரும், ஒரு விமர்சன சிந்தனையாளராக, சிக்கல் தீர்க்கும் திறன் உடையவராக, புதுமை விரும்பியாக, சிறந்த மக்கள் தொடர்பாளராக, சிறந்த கூட்டுப்பணியாளராக, சுய இயக்கவாதியாக, தகவல் மற்றும் ஊடகப் பயிற்சி பெற்றவராக, உலகளவிலான நாகரிகம், நிதி மற்றும் பொருளாதாரம் போன்ற அனைத்தும் விழிப்புணர்வு பெற்றவராக மாறும் வகையில் இன்றைய கல்வி அமைதல் வேண்டும்.

 

உசாத்துணை:

 

A., N. S. (1939). Foreign Notices of South India from Megasthenes to Ma Huan.

Collected and edited by K.A. Nilakanta Sastri. Madras BAIERLEIN, E. R. (2016). LAND OF THE TAMULIANS AND ITS MISSIONS. Place of

publication not identified: HANSEBOOKS.

 

Murugavel. (n.d.). பழந்தமிழர்களின் தொழில் மேன்மை. Retrieved from

http://arch.kumarinadu.com/index.php?option=com_content&view=article&id=9074:201

5-03-24-19-34-59&catid=57:2010-01-31-18-23-42&Itemid=78

N., S. P. (1984). The chronology of the early Tamils: Based on the synchronistic tables of

their kings, chieftains, and poets appearing in the Sangam literature. New Delhi:.

பெண் கல்வி – அன்றும் இன்றும் – பவள சங்கரி, 2021

Aiyangar, S. (1995). Pre-Aryan Tamil culture. New Delhi: Asian Educational Services.

BAIERLEIN, E. R., & GRIBBLE, J. D. (1875). The Land of the Tamulians and its

Missions ... Translated ... by J.D.B. Gribble. Higginbotham & Co.: Madras.

Economy 200 BC AD 500. Comparing Globalizations World-Systems Evolution

and Global Futures, 91-117. doi:10.1007/978-3-319-68219-8_5

Karashima, N. (2014). A concise history of South India: Issues and interpretations. New

Delhi, India: Oxford University Press.

Krishnamurthy, G. R. (1972). Megalithic culture in South India. Mysore: Prasaranga,

University of Mysore.

Sivathamby, K. (1974). Early South Indian Society and Economy: The Tinai Concept.

Social Scientist, 3(5), 20. doi:10.2307/3516448

31 BC - AD 305. London ; New York: Routledge Taylor et Francis Group.

தமிழகத்தின் இரும்புக் காலம்: 1 சங்க இலக்கியத்தில் இரும்பு

எஃகு தொழில் நுட்ப அறிவு. (2018, November 23). Retrieved from

https://agharam.wordpress.com/2018/11/23/தமிழகத்தின்-இரும்புக்-கா/

 

American Psychological Association 6th edition formatting by BibMe.org.

சூதுபவளமணி – பவள சங்கரி, பேரா. வடிவேல் நாகராஜன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...