Saturday, January 29, 2011

பட்ட மரம்.

பட்ட மரம்.

அடர்ந்த வனம். எங்கு நோக்கிலும் கபடமற்று தன்னிச்சையாக வளர்ந்த பசுமையான, வகைவகையான மரம் செடி கொடிகள். வண்ண மலர்கள். சுகந்த மணம் நாசியை நிறைத்து, மதியை மயங்கச் செய்தது........... பளீரென ஒரு மின்னல். அசைந்து, அசைந்து தன்னருகே வருகிறதே.......ஓ ...இது மின்னல் இல்லை. ஏதோ பறவை போலல்லவா இருக்கிறது.......அட ஆமாம் அன்னப்பறவை. பாலையும், தண்ணீரையும் தனித்தனியே பிரித்து விடுமாமே, அந்த அன்னப் பறவை.....தலையை ஆட்டி கிட்டே வந்து உரசி நின்று.........உற்றுப் பார்க்கிறதே, எதனால் என்று தெரியவில்லையே. திடீரென, ஒய்யாரமாக தோகையை ஆட்டியபடி அப்படியே ஒரு வட்டமடித்து, திரும்பி நடக்க ஆரம்பித்தது அது.

நேர்ந்து விட்டது போல பின்னாலேயே போக முயற்சித்து, அது ஓட ஆரம்பித்த போது தானும் ஓடி துரத்திப் பிடிக்கும் நோக்கில், நெருங்கி, நெருங்கி.....ஆகா பிடிக்கப் போகிறோம் என்று கையை நீட்டும் நேரம் அங்கே ஒரு அழகான ராஜ குமாரி. ஆம் ராஜகுமாரியாய் மாறிப்போன அன்னம்.

டொக்.....டொக்......டொக்........என்ன சத்தம். ராஜகுமாரி, நீ எனக்கே, எனக்கா.........

அட பாவி மனுசா......மணி 7 ஆவுது, கனவு கண்டுகினு கீது பாரு.........பொழுதன்னைக்கும் சுட்டி டிவி குழந்தைங்களோட உக்கார்ந்துகினு பாக்குறது. அப்பறம் இப்படிகனவு கண்டு உளர்றது. இதே பொயப்பா பூடிச்சி உனக்கு.

ஏய் இன்னாம்மே ரொம்பத்தான் அலுத்துக்கினுகிற.............

சரி, இன்னா சத்தம் வெளிய?

அதுவா, நீதானே அந்த பட்டுப் போன, காய்க்காம கடந்த கொய்யா மரத்த வெட்ட சொன்ன? அதைத்தான் ஆள் வந்து வெட்டறான்.

எம்புட்டு நாளா சொல்லறேன். கண்டுக்காம இருந்துட்டு இன்னைக்கு என்னா ஞானோதயம்?

அதுவா, இன்னைக்குத் தானே, உங்க அக்கா ஊரில இல்ல, குல சாமி கோயிலுக்கு போயிருக்கா. அதான் இன்னைக்கு வெட்டச் சொன்னேன்.

அவ ஊருக்குப் போறதுக்கும், நீ மரத்தை வெட்டறதுக்கும் இன்னாம்மே சம்பந்தம்? அவகிட்ட எப்பவும் மல்லுகட்டிகினு நிக்கிறது போதாதுனுட்டு, அவ இல்லாத நேரத்திலயும் இப்புடி கரிச்சி கொட்டறியே ஞாயமா?

அடப் போய்யா, உனக்கு என்னைக்குத்தான் இதெல்லாம் புரியப் போகுது. அவளே பாவம், புருசனும் இல்லாம, புள்ளை குட்டியும் இல்லாம, நொந்து போய் பட்ட மரமா வந்து நிக்குறா......இந்த மரத்த வெட்டற போது நீயோ இல்ல அந்த மரவெட்டியோ ஏழு தடவை பட்ட மரம், பட்டமரம்னு சொல்லுவீங்க......அந்த நேரத்துல அந்த புள்ள மனசு என்ன பாடு படும் கொஞ்ச ரோசனை பண்ணிப் பாத்தியா நீ? அதான் அவ வரதுக்குள்ள இந்த மரத்தை வெட்டிப்புடலாம்னு...............

அடி, என் ராசாத்தி, இத்தனை நல்ல மனசா உனக்கு........இத்தனை நாள் இது தெரியாமப் போச்சே..........

Thursday, January 27, 2011

அறிவும் நம்பிக்கையும் பிரியும் இடத்தில் நிற்கும் மனிதன் .


அறிவும் நம்பிக்கையும் பிரியும் இடத்தில் நிற்கும் மனிதன் - ஆசிரியர் திரு ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் அவர்கள்.


திரு இராஜகோபாலாச்சாரி அவர்கள் கூறிய, இந்து மதத்தையும், இந்தியாவையும் காப்பாற்றியவரே சுவாமி விவேகானந்தர்தான் என்பதையும், சுவாமிஜியின், சிகாகோ பயணச் சொற்பொழிவுகளின் மாபெரும் வெற்றியையும், உலகெங்கும் சுற்றியலைந்து, தாய்த்திரு நாட்டிற்குத் திரும்பியபோது, இந்தியாவின் ஆன்மாவே திரும்பி வந்துவிட்டதாக புளங்காகிதமடைந்த இந்திய மக்களின் மன நிலையையும், நடு நிசி நேரம் தன்னுயிர் பிரியும் வேளையில்,[ ஆகஸ்ட் 16, 1886] தன் ஆன்ம சக்திகள் அனைத்தையும் தன்னுடைய மிக நெருக்கமான சீடரான நரேந்திரருக்குத் தாரை வார்த்துக் கொடுத்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வள்ளல் வரை பல விசயங்கள் நமக்குப் பரிச்சயமானதாக இருப்பினும், ஆசிரியரின் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அனைத்தையும் பார்க்கும் போது, பல்வேறு சிந்தனைகள் நம் மனதிலும் விரிவதையும் தடுக்க இயலவில்லை. ஒரு நல்ல நூலின் இலக்கணம் ஒரு வாசகனை கண்மூடித்தனமாக நம்பச் செய்வதைவிட, சுயமாக சிந்திக்கத் தூண்டச் செய்வதாக இருக்க வேண்டும். அந்த வகையில் இந்நூல் வெற்றி பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது.


சுந்தரத் தமிழ் துள்ளி விளையாடும் படைப்பு!

“இரவும், பகலும் முடைந்து நெய்யப்பட்ட ஆடையாய்ச் செல்கின்றன நாட்கள்.............. அறிவும், அறியாமையுமாய்ச் செல்கிறது மனிதனின் முன்னேற்றப்பாதை”................. இப்படி முன்னுரையின் முதல் வரியிலேயே வார்த்தை ஜாலங்கள் கொண்டு, வாசகர்களை சுண்டியிழுக்கும் நுண்கலை கற்றவர் என்று நிரூபிக்கிறார் ஆசிரியர்.

பறக்க எத்தனிக்கும் தன் குஞ்சுகளைக் காக்கும் பொருட்டு, பெற்ற காக்கைகளின் பரிதவிப்பை, ஒரு கவிதையாக மாற்றியமைத்த பாங்கு, கையில் எடுத்த நூலை கீழே வைக்க முடியாமல் ஒரே மூச்சில் படிக்கத் தூண்டுகிறது.

பதஞ்சலி யோக ஸூத்திரம் தொடங்கி, ஆதாம் ஏவாள் வரை மனம் படுத்திய பாட்டினால், சபிக்கப்பட்ட மனிதனின் நிலையை அழகு கவிதையாக வடித்திருக்கிறார் ஆசிரியர். ‘தான்’ என்ற அகங்காரம் தொலைந்தால்தான் மெய்ஞ்ஞானம் சித்திக்கும் என்பதனை விவரித்திருக்கும் விதம் தெளிந்த நீரோடை..

“ அந்த அனுபவங்களின் விஷத்தையெல்லாம் குடித்துக் கழுத்தில் தேக்கியபடி இந்து சமுதாயத்தின் உன்னதத்தையும், இந்து மதத்தின் ஆக்கப்பூர்வமான உயிர்வடிவத்தையும் தம் உணர்வுக் கண்னால் கண்டு, உள்ளம் கசிந்து காதலாகி வந்துற்ற தீங்கிற்கு நெஞ்சம் விதிர்த்துக் கண்ணீர் மல்கி, உயர்வையே எடுத்துரைத்த நரேந்திரனின் பக்குவம் வியத்தற்குரியது”, என்று [ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்] ஆசிரியர் உள்ளம் உருக, அத்துணை உணர்வுகளையும் சொல்லால் வடித்து, வாசகரை மெய்சிலிர்க்கச் செய்திருப்பதும் நிதர்சனம்.

ஆலகாலத்தை கண்டத்தில் தாங்கிய சிவபெருமானை முன்னிறுத்தியிருக்கும் பாங்கு அவர்தம் ஆன்மீக உணர்வையும் பிரதிபலிக்கிறது.

ஒரு சில இடங்களில் ‘ பரிவ்ராஜக வாழ்க்கை’ போன்று வடமொழிப் பயன்பாடு இருந்தாலும், அதற்கான தமிழாக்கமும் வாசகருக்குப் புரியும் வண்ணம் எளிய நடையில் வழங்கியிருப்பதும் சிறப்பு.

படிப்பறிவற்ற வாழ்க்கையை ‘ஊருண்கேணி’ என்று உவமைப்படுத்திய விதம் அற்புதம்.

” அறிவு என்பது முதலில் நம்பிக்கைகளின் தளைகளை அவிழ்க்கும், சிறைப்படுத்தும் வழக்க நெறிகளினின்றும் மனிதனை புறத்தனாக்கும் “ - என்ற ஆசிரியரின் கூற்று, Bertrand Russellன் "Useless Knowledge ", என்ற கட்டுரையை நினைவு கூறும் விதமாக அமைந்துள்ளது.

நரேந்திரர், விவேகாநந்தராக மாறிய சந்தர்ப்பத்தை நயம்பட எடுத்துரைத்திருக்கின்றார்.

நரேந்திரர் மதக்கல்வியை கையாண்ட விதம் பற்றிய ஆசிரியரின் பார்வை வாசகரையும் சிந்திக்க வைக்கக் கூடியதாகவே உள்ளது.

வேதாந்தம் அமைப்பியல் குறித்த ஆசிரியரின் ஆழ்ந்த ஞானம் வியப்பில் ஆழ்த்துகிறது.

‘ வேதத்திலேயே வந்திருந்தாலும் அறிவுக்குப் பொருத்தமாக இருந்தால் மட்டுமே ஏற்கத் தகுந்தது’, என்ற ஆசிரியரின் தீர்ப்பு பாரபட்சமற்றது.

19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலக் கல்வியின் விடியலில் மகிழ்ந்து அறிவியக்கக் கதிர்களில் குளித்த நெஞ்சங்களின் சூழலை, மனோத்தத்துவ முறையில் ஆய்ந்தறிந்து விளக்கமளித்துள்ளது வரவேற்கத்தகுந்தது.

ஆண்டவன் மீது பக்தர்கள் கொள்ளும் பக்தியை காதலன், காதலி மீது கொள்ளும் தீராக் காதலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நவீன வேதாந்தப் போக்கும் காணப்பெறுகிறது.கடவுளின் அருகில் எளிதாகச் சென்றடையும் மார்கத்தை மேலும் எளிதாக்க முயற்சிதிருக்கிறார் ஆசிரியர்.

பிரம்மம் சத்யம், உலகம் மாயை, ஜீவன் பிரம்மமே என்ற அத்வைதத்திற்கு ஆசிரியரின் வியாக்கியானம் தேர்ந்த ஞானமுள்ளதாகவும் பல இடங்களில் ஓஷோவின் தத்துவங்களோடு ஒத்துப் போவதாகவுமே உள்ளது.

விசிஷ்டாத்வைத்தத்தையும் விட்டுவைக்கவில்லை இந்த வித்தகர். ஸ்ரீநாத முனிகள் அருளிய மறைந்து போன ‘யோக ரகஸ்யம்’, நூல் குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சங்கப் புலவர்களின் பார்வையில் காதல் மற்றும் காமத்தின் விளைவுகள், அன்பின் ஐந்திணை என்ற குறியீட்டால் அடி முதல் நுனி வரை அலசி ஆய்ந்திருக்கிறார்.

விவேகாநந்தரின் உபதேசங்களை ஊடுறுவி அதனைத் தெளிவுற தம் பாணியில் விளக்கியுள்ளார்.

ஒரு வேறுபட்ட கோணத்தில், ஹெர்மன் ஹெஸ்லேயின் ‘சித்தார்த்தாவில்’, சித்தார்த்தனின் தனிமையை வெகு நேர்த்தியாக விவேகாநந்தரின் தனிமையுடன் ஒப்பிட்டு , அதன் ரணம் குறித்தும் விவரித்திருக்கிறார்.

உணர்ச்சிச் சூழல்களும், அறிவுச் சுடர்களும் மாறி மாறி வரும் ஒரு பின்னிப் பிணைந்த ஆளுமையாக நம்மில் பதிவு பெறுகிறவர் விவேகாநந்தர் என்ற ஆசிரியரின் கூற்று ஏற்புடையதாகவே உள்ளது.


விவேகாநந்தரையும், நரேந்திரரையும் இரு வேறு உயிர்களாக உருவகப்படுத்தி, இருவரையும் ஒப்புமைப்படுத்தி, இரண்டிற்குமான பிணக்கத்தையும் துல்லியமாக எடுத்துக் காட்டியிருப்பதிலும் வெற்றி கண்டுள்ளார் என்றே கூறலாம்.

மேலை நாட்டு மத நம்பிக்கைகள், அராபிய தத்துவ அறிஞர் அவர்ரோஸ், கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில், அக்லினாஸ் இப்படி அனைவரின் தத்துவங்களையும் அலசி ஆயத் தவறவில்லை இந்த தத்துவ ஞானி.

சுருங்கச் சொன்னால், விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீராமானுஜர், ஆழ்வார்கள் மட்டுமன்றி உலகின் பெரும்பாலான மதங்களையும், தத்துவ ஞானிகளையும் கலந்தாய்ந்து தம் கருத்துக்களையும் உள்ளிருத்தி ஒரு அரிய படைப்பாக்கியிருக்கிறார் ஆசிரியர்.

‘பிற்றை நிலையில் சிந்திக்கும் பொழுது’, என்ற அழகிய தலைப்புடைய இறுதி அத்தியாயம், இம்முழு நூலின் முத்தாய்ப்பாக அமைந்திருக்கிறதென்றால் அது மிகையாகாது.மஜீம்தாரின் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றிய கட்டுரையை , அதன் உணர்வலைகளில் ஏதும் மாற்றம் வந்துவிடக்கூடாது என்ற உந்துதலினாலோ என்னவோ அதனை அப்படியே ஆங்கிலத்திலேயே அளித்துள்ளார்.

குறிப்புதவி நூல்கள் என்று 67 பெயர்கள் கொண்ட ஒரு பெரும் பட்டியலையே குறிப்பிட்டும், மனம் நிறைவடையாத ஆசிரியர், “இப்படியா அப்படியா என்று தீர்ந்து விடாத இத்தகைய தொல்லை இன்பமான அவஸ்தையில் இருந்து கொண்டு தான் இந்த நூலாக்கம் வெளிவருகிறது”, என்று முடித்திருப்பது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதோடு, திரும்பவும் முதல் பக்கம் நோக்கி பார்வையைத் திருப்பவும் வைக்கிறது....................

இந்த நூல் உண்மையிலேயே மனித குலத்தின் மிகப் பெரிய சமன்பாடுகளில் ஒன்றின் தீர்வு என்பதிலும் மிகையில்லை !!

88 பக்கங்கள் கொண்ட, தமிழினி வெளியிட்டுள்ள இந்நூலின் விலை ரூ.55.

பவள சங்கரி.







Monday, January 24, 2011

கதையே கவிதையாய்...............


கதையே கவிதையாய் !

THE PROPHET - KAHLIL GIBRAN.

அல்முஸ்தபா, அனைவராலும் நேசிக்கப்பட்ட ஜீவன், நிகழ்காலத்தின் விடிவெள்ளியானவன், ஆர்பலீஸ் நகரத்தில் பன்னிரண்டு ஆண்டுகளாக காத்துக் கிடக்கிறான் தான் பிறந்த மண்ணிற்கே தன்னைச் சுமந்து செல்லப் போகும் கப்பலுக்காகக் காத்துக் கிடக்கிறார்.

பன்னிரண்டாம் வருடம், ஏழாவது நாள் அறுவடை சமயம், நகர எல்லையை விட்டு குன்றின் மீதேறி கடற்பரப்பை நோக்கும் போது மூடுபனியினூடே கப்பல் வருவது மங்கலாகத் தெரிந்தது.

இதயக் கதவுகள் விரிந்து திறந்து, அவருடைய இன்ப எல்லை கடல் கடந்து விரிந்தது. அவர் கண்களை மூடி ஆன்மாவின் அமைதியில் பிரார்த்தனை செய்தார்.

ஆனால் குன்றிலிருந்து கீழே இறங்கும் போது ஏதோ ஒரு சோகம் மேலே படர்ந்தது......அவர் இதயம் நினைத்தது :

நான் துன்பம் இன்றி அமைதியாக எப்படி புறப்படப் போகிறேன் ? அல்லது ஆன்மாவின் ரணமின்றி இந்நகரத்தை விட்டு எவ்வாறு வெளியேறப் போகிறேன்?

வேதனையோடு நீண்ட நாட்கள் இந்த சுவற்றுக்குள் கழித்திருக்கிறேன், நீண்ட தனிமையான இரவுகள் : சோகமின்றி அவர் தனிமையையும் வேதனையையும் யாரால் போக்க முடியும் ?

குழந்தையைத் தன் தோளின் மீது ஏந்திக் கொண்டிருந்த ஒரு பெண், குழந்தைகள் பற்றிப் பேசும்படி வேண்டினாள்.

அதற்கு அவர் கூறியதாவது :

உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகளே அல்ல.........

அவர்கள், வாழ்க்கை அது தன் சொந்த ஏக்கங்களின், மகனும், மகளும் ஆவார்கள்.

அவர்கள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்களே ஒழிய உங்களிலிருந்து வரவில்லை.

அவர்கள் உங்களோடு இருந்தாலும் உங்கள் உடமைகள் அல்ல.

நீங்கள் உங்கள் அன்பை அவர்களுக்குக் கொடுக்கலாம். ஆனால் உங்கள் எண்ணங்களை அவர்கள் மீது திணிக்க முடியாது.

காரணம் அவர்கள் தங்களுடைய சொந்த எண்ணங்கள் கொண்டவர்கள்

நீங்கள் அவர்களின் உடலை மட்டும்தான் உடமையாக்கிக் கொள்ள இயலுமே ஒழிய அவர்களின் ஆன்மாவையல்ல.

காரணம், அவர்களின் ஆன்மா எதிர்காலம் எனும் இல்லத்தில் குடியிருக்கிறது. உங்கள் கனவிலும் அதனை நீங்கள் நெருங்க முடியாது.

நீங்கள் அவர்களைப் போலவே இருக்க முயற்சிக்கலாம். ஆனால் உங்களைப்போலவே அசலாக அவர்களை உருவாக்க முடியாது.

காரணம் வாழ்க்கை பின்னோக்கிச் செல்லுவதும் இல்லை, இறந்த காலத்தில் நிலைத்து நிற்பதும் இல்லை.

உங்கள் குழந்தைகள் விர்ரென்று விடுகின்ற அம்பிற்குரிய நாணாகத்தான் நீங்கள் இருக்கிறீர்கள்.

அந்த வில்லாளி தொலை நோக்குப் பாதையின் மீதல்லவோ குறிவைத்திருக்கிறான்.

அவன் தன் பலம் கொண்டு, தான் விடும் அம்பு வெகு தூரம் வேகமாக பாய்வதற்கு ஏற்றபடி உங்களை வளைத்துக் கொள்கிறார்கள்.

அந்த வில்லாளியின் கையில், உங்கள் வளையும் தன்மை மகிழ்ச்சிக்குரியதாக இருக்கட்டும்.

அவன் பறக்கக்கூடிய அம்பையே விரும்புவதால், அதற்காக உறுதியாக நிற்கக் கூடிய அந்த நாணையும் அவன் விரும்புகிறான்.

“ அண்ணன் என்னடா.......தம்பி என்னடா அவசரமான உலகத்திலே.............”

”தாய் என்றாலும், பிள்ளை என்றாலும் வாயும் வயிறும் வேறல்லவோ....?”


--------------------------------------------------------------------

கண்ணீரும் சிரிப்பும் !

நைல் நதிக்கரையில், சலனமில்லாத நீரோட்டத்தில், ஒரு கழுதைப்புலியும், முதலையும் சந்தித்துக் கொண்டது. இரண்டும் ஒன்றை ஒன்று நலம் விசாரித்தது.

கழுதைப்புலி முதலையைப் பார்த்து, “ தங்களின் நேரம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது ஐயா ?” என்றது.

பதிலாக அந்த முதலையும், “ மோசமாக போய்க் கொண்டிருக்கிறது. சில நேரங்களில் நான் வேதனையாலும், வலியாலும் துடிக்கிறேன். ஆனால் மற்ற உயிரினங்களோ எப்பொழுதும், அதற்கென்ன நல்லாத்தான் முதலைக் கண்ணீர் வடிக்கிறது, என்கின்றன. இது மேலும் என்னை வேதனைப்படுத்துகிறது “, என்றது.

கழுதைப் புலியோ, “ நீ, உன் வலியும், வேதனையும் பற்றிப் பேசுகிறாய். ஆனால் என் நிலையைப் பற்றி எண்ணிப்பார். இந்தப் பிரபஞ்ச அழகையும், அதிசயங்களையும், அற்புதங்களையும் கண்டு வியந்து போகிறேன். மகிழ்ச்சியின் எல்லையில் பளபளப்பான பகல் பொழுதைப் போல நானும் சிரிக்கிறேன். அதற்கும் இந்த காட்டுவாசிகள், இது கழுதைப் புலியின் சிரிப்பு என்றுதானே எகத்தாளமாகக் கூறுகிறார்கள்?”, என்றது.

சிரித்தாலும், அழுதாலும் சரியான புரிதல் இல்லையென்றால் வாழ்க்கையே நரகம்தானே..........


Friday, January 7, 2011

காதல் சின்னம்.


காதல் சின்னம்

அற்றைத் திங்களின்
அற்புத நிலவொளியில்
அரசனின் அந்தப்புரத்தின்
அரசனையில் அழகுப் பதுமையாய்
அன்பு மனம் கலந்திருந்த
அரிதான தருணமதில்
அட்சர சுத்தமாய்
அன்புக் கட்டளையிட்டாள்
அரியணைப் பதுமையாம் மும்தாசு.

இற்றைத் திங்களில்
இந் நிலவொளியில்
இம்மையில் இனியும்
இச்சை கொண்டொரு
இல்லாளை வேண்டாமல்
இவ்விரண்டு மக்களையும்
இன்பமுற வாழ வழி செய்து
இந்நிலையை காலம் முற்றும்
இப்புவியுலக காதலர் அனைவரும்
இறுமாப்புடன் நிமிந்து நோக்கும் வண்ணம்
இசைபட பளிங்கு மாளிகையது அமைத்து
இச்சகத்து மாந்தரும் இன்பம் பெற
இணையிலாதொரு காதல் சின்னம் அமைக்கவே

ஓம்காரமாய் ஓங்கி ஒலிக்குதொரு
ஒய்யார மண்டபம் ஒயிலாய்
ஒத்த மனமுடைய மனிதரையும்
ஒண்ணாய் உயிர் சேர்க்கச் செய்கிறது
ஒருமையாய் ஓய்ந்து போன உள்ளமும்
ஒத்தாரை உறவோடு ஏற்றுக் கொள்ளும்
ஒப்புயர்வில்லா உன்னத நிலையையும்
ஒருகாலும் மாறாத அன்பையும்
ஓங்கி உலகளந்த உத்தமன்
ஓம்கார நாதனின் தண்ணளி வீசி
ஓங்கி உயர்ந்து நிற்கும் மாமலையாமே!!

Sunday, January 2, 2011

சுடர் ஒளி.

சுடர் ஒளி

ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறுகதை.


காலை நேர பரபரப்பு. மருத்துவர் குழு ரவுண்ட்ஸ் வரும் நேரம். ஒரு புறம் அறையை சுத்தப்படுத்தும் பணியாளர்கள். மறுபுறம் நோயாளிகளுக்குத் தேவையான பணிவிடைகள் செய்யும் செவிலியர்கள் என்று மருத்துவமனை அல்லோகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. 106 ஆம் எண் அறைக்கு தனலட்சுமி புதிதாக வந்து சேர்ந்திருக்கும் நோயாளி. கணவர் ராதாகிருஷ்ணன் ஒரு மத்திய அரசு நிறுவனத்தின் உயர் பதவியில் இருப்பவர். தனலட்சுமி நல்ல தெய்வீகக் களையான முகம். பார்த்தவுடன் கையெடுத்துக் கும்பிடத் தோன்றும் கம்பீரமானதோற்றம்.

உடல் நிலை மோசமான அந்நிலையிலும் காலையில் டவல் பாத் எடுத்து, அழகாக நெற்றியில் குங்குமப் பொட்டிட்டு , இளம் பச்சை வண்ணத்தில் சுங்கடி பட்டுச் சேலையும் அதற்கு ஏற்றாற் போல அதேவண்ண இரவிக்கையும் அணிந்து, இலட்சுமி அம்சமாகவே காட்சியளித்தார். அந்த வார்ட் பக்கம் செல்பவர்கள் அவரைப் பார்த்த மாத்திரத்தில் இந்த அம்மாவிற்கு என்ன வியாதியாக இருக்கும், வயதும் நடுத்தர வயதுதான் என்று சந்தேகத்தோடு மறுபடியும் திரும்பிப் பார்க்காமல் செல்ல மனம் வராது.

அன்று காலை நர்ஸ் நம்ருதா டியூட்டிக்கு நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு வந்தாள். தனலட்சுமியை முதன் முதலில் பார்த்தவுடன் ஒரு மரியாதை தோன்றினாலும் அவருடைய கேஸ் ஷீட்டை பார்க்கும் ஆவல்தான் அதிகமானது. அதற்கான முயற்சியில் இருந்த போது, தனலட்சுமி நம்ருதாவை ஏற இறங்க பார்த்து விட்டு,

“ என்னம்மா, இது எத்தனாவது மாதம்? வயிறு பெரிதாக உள்ளதே?”, என்றாள்.

நம்ருதாவும், “ எட்டு மாதம்”, என்றாள், சற்றே நாணத்தால் தலை குனிந்தபடி.

“ ஏம்மா, மாதம் நெருங்கிவிட்டது போல் உள்ளதே. வயிறு நன்றாக இறங்கியுள்ளதே. மெட்டர்னிட்டி லீவ் எடுக்கவில்லையா?,” என்றாள்.

பதில் சொல்ல சற்று தயங்கினாலும், தனலட்சுமியின் அக்கரையான பேச்சும், அன்பான பார்வையும், அவள் கேள்விக்கு பதில் சொல்வதில் எந்த தயக்கமும் காட்ட முடியவில்லை நம்ருதாவால்.

தன் கணவன் ரயில்வே காவல் துறை அதிகாரியாக பணிபுரிந்ததால் அதிக அழுத்தம் காரணமாக மதுப் பழக்கத்திற்கு அடிமையானதன் விளைவாக இன்று பக்கவாதத்தினால் அவதிப் படுவதாகவும், பணிக்குச் செல்ல முடியாத வேதனையுடன் மருத்துவச் செலவின் பாரமும் சேர்ந்து தன்னால் விடுமுறை எடுக்க முடியாத சூழலை உருவாக்கியதன் பின்னணியை தயக்கமின்றி அவளால் கூற முடிந்தது. எட்டு ஆண்டுகளாக குழந்தைப்பேறு இல்லாமல் தவித்த தங்களுக்கு ஆண்டவர் கருணையால் தற்போது கிடைத்த வரத்தை பொக்கிஷமாக காக்க வேண்டிய கட்டாயத்தையும் மனம் விட்டு ஒரு தாயிடம் கொட்டித் தீர்ப்பது போல கொட்டித் தீர்த்தாள் நம்ருதா. காதல் மணம் புரிந்த காரணத்தினால் , இரு குடும்பத்தாரின் உறவும் இல்லாமல் போன சோகக் கதையும் இணைந்து இன்று தன்னை பாடாய்ப் படுத்துவதைத் தவிர்க்க முடியாமல் ஏங்கும் ஏக்கத்தை அவள் வார்த்தைகள் தெளிவாக படம்பிடித்துக் காட்டின.

பேசிக் கொண்டே தனலட்சுமி அம்மாவின் கேஸ் ஷீட்டை எடுக்கப் போனவள், அட்டெண்டர் வந்து, ஒரு அவசர கேஸ் வந்துள்ளதால் மருத்துவர் அழைப்பதாகக் கூறவும் அப்படியே விட்டு விட்டு பிற்பாடு வருவதாகக் கூறிச் சென்று விட்டாள். ஒரு பிரசவ கேஸ், குழந்தை கொடி சுற்றி இருந்ததால் மிகச் சிரமமான நிலையில் நல்லபடியாக தாயிடமிருந்து சேய் பிரிந்து வருவதற்குள் நேரம் போனதே தெரியவில்லை. இரவு வரை பெரும் போராட்டமாகி விட்டது. கணவனின் நினைவு வந்த மாத்திரத்தில், வேறு நினைவெதுவும் அற்றவளாக வீடு திரும்பினாள், நம்ருதா.

மறுநாள் காலை பணிக்கு வந்தவுடன், ஏனோ தனலட்சுமி அம்மாவின் நினைவாகவே இருந்தது நம்ருதாவிற்கு. உடனடியாகச் சென்று அவருடைய கேஸ் ஷீட்டைப் பார்க்க மனம் துடித்தாலும், மற்ற அவசரப் பணிகள் அவளைத் தடுத்து நிறுத்தி வைத்திருந்தது.

பணியில் மூழ்கியிருந்த சமயம் வார்ட் பாய் வந்து ஒரு எமர்ஜென்ஸி கேஸை, ஸ்கேன் அறைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று கூறவும், அந்தப் பையன் பின்னாலேயே சென்றவள், அவன் 106 ஆம் எண் அறை இருந்த பகுதிக்குச் செல்லவும், அவள் மனம், ‘ கடவுளே தனலட்சுமி அம்மாவின் அறையாக இருக்கக் கூடாதே’, என்று தன்னையறியாமல் வேண்டிக் கொள்ள ஆரம்பித்தது.

ஆனால், விதி யார் வேண்டுதலையும் பொருட்படுத்தாமல், தன் தர்ம நியாயப் படித்தானே காரியங்கள் செய்து கொண்டிருக்கிறது? அப்படியானால் வேண்டுதல் என்பதன் அர்த்தமே பொய்யாகிப் போய்விடுகிறதே?

அந்தப் பையன் சரியாக தனலட்சுமி அம்மாவின் அறையின் வாசலில் சென்று நின்று கொண்டிருந்தான். மனம் படபடக்க ஆரம்பித்தாலும், ஒரு கணத்தில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தவள், பரபரவென செயலாற்றத் துவங்கினாள் நம்ருதா.

உள்ளே தனலட்சுமி அம்மாவிற்கு வெண்டிலேட்டர் பொருத்தியிருந்தார்கள். லேசான மயக்கத்தில் இருந்தார் அவர். அவரை பையனின் உதவியுடன் ஸ்ட்ரெச்சரில் மாற்றி, சலைன் பாட்டிலை ஒரு கையில் பிடித்துக் கொண்டு அந்தப் பையன் ஸ்ட்ரெச்சரை தள்ளிக் கொண்டுப் போக, மூன்றாம் மாடியில் இருந்த ஸ்கேன் அறைக்கு லிப்டில் அழைத்துச் சென்றனர். தனலட்சுமி அம்மாவின் கணவரின் முகத்தில் இருந்த சோகம் நம்ருதாவின் மனதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களின் ஒரே மகன், 15 வயது இருக்கலாம், என்பது உறவினர்கள் பேச்சிலிருந்து தெரிய வந்தது. தேம்பித் தேம்பி அழுது கொண்டிருப்பதும், தந்தை ஆறுதல் சொல்ல இயலாத நிலையில் நின்று கொண்டிருப்பதையும் பார்த்து உறவினர்களும் விக்கித்து நின்று கொண்டிருந்தனர்.

இவையனைத்தையும் கவனித்தாலும், நம்ருதா, உடனே தனலட்சுமி அம்மாவை தாமதிக்காமல் ஸ்கேன் அறைக்கு அழைத்துச் சென்று பார்த்து, விரைவில் சிகிச்சையை ஆரம்பிக்க வழி செய்ய வேண்டுமென்ற உந்துதலில் தன் நிறைமாத பாரச் சுமையையும் பொருட்படுத்தாது பரபரப்பாக இயங்கத் தொடங்கினாள்.

லிப்டில் தனலட்சுமி அம்மாவின் நெருக்கமாக நின்று கொண்டு, அவர் தலையை ஆதரவுடன் தடவிக் கொடுத்து, “ எல்லாம் சரியாகிவிடும் அம்மா, கர்த்தர் ஒருகாலும் தங்களைக் கைவிட மாட்டார். தைரியமாக இருங்கள்”, என்றாள் நம்ருதா ஆதரவுடன்.

அரை மயக்கத்தில் இருந்த தனலட்சுமி அம்மாவோ நம்ருதாவின் கையை இருகப் பற்றிக் கொண்டு ஏதோ பேச வேண்டும் என்பது போலவும் வெண்டிலேட்டரை எடுக்க முயற்சிப்பது போலவும் சைகை செய்தார். ஏதோ தன் சிரமம் குறித்து சொல்லப் போகிறார் என்ற எண்ணத்தில் குனிந்து வாயருகே காதை வைத்துக் கொண்டு கேட்க முயற்சித்தாள் நம்ருதா. பேச முடியாத அந்த நிலையிலும், மிகச் சிரமப்பட்டு, தனலட்சுமி அம்மாள் சொன்ன அந்த விசயம் நம்ருதாவை கண் கலங்கச் செய்தது. ‘இதெல்லாம் பின்பு பார்த்துக் கொள்ளலாம் அம்மா, நீங்கள் ஓய்வெடுங்கள்’, என்றாள் நம்ருதா.

ஸ்கேன் அறைக்குச் சென்று, தனலட்சுமி அம்மாவை மெதுவாக தூக்கி படுக்க வைத்தாள். மனதில் ஏனோ பெரும் பாரம் நிறையத் தொடங்கியது. அந்த மின் இயந்திரம் உள்ளே இருக்கும் விபரீதங்கள் அனைத்தையும் தெள்ளத் தெளிவாக படம் பிடித்துக் காட்டத் தொடங்கியது. நம்ருதாவின் இதயமும் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

நல்ல இதயத்தைக் கொடுத்த அந்த ஆண்டவன், எத்துணை இரக்கமற்ற அரக்கன் என்பதை தெளிவாக படம் பிடித்துக் காட்டியது அந்த மின் சாதனம். ஆம், தனலட்சுமி அம்மாவின் மார்பகப் புற்று நோய், அவருடைய மொத்த உள்ளுருப்புகளையும், பாரபட்சமின்றி பாதித்திருந்தது. உள்ளிருந்தே கொல்லும் வியாதியாக இறுதி எல்லையைத் தொட்டிருந்தது. தன் கண்களையே நம்ப முடியாதவளாக திரும்பவும், மருத்துவர் அறிக்கையையும் படித்து உறுதிப் படுத்திக் கொண்ட நிலையில், செய்வதறியாது, நேரே பிரார்த்தனை அறைக்குச் சென்று மனதார பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழி அறியாதவளானாள்.

பணி நேரம் முடிந்தும், வீடு திரும்ப எண்ணமில்லாதிருந்தும் உடல் அசதியும், கணவனின் நினைவும் சேர்ந்து அவளை வீடு நோக்கி நடக்கச் செய்தது. அடுத்து வந்த சில நாட்கள் தனலட்சுமி அம்மாவின் உடல் படும் வேதனையால், நல்லுள்ளம் கொண்டோர் அனைவரும் மன வேதனை கொள்வது தவிர்க்க முடியாததாகிப் போனது.


அன்று வெள்ளிக்கிழமை. உடல் அசதியால் பரபரப்பாக இயங்க முடியாது சற்றே
மெத்தனம் காட்டியதன் விளைவு மருத்துவ மனைக்கு காலம் தாழ்ந்து வர வேண்டியதாகிவிட்டது. தலைமை மருத்துவரிடம் வழக்கம்போல் பாட்டு கேட்க வேண்டிவருமே என்ற அச்சத்துடனே மருத்துவமனையினுள் அடியெடுத்து வைத்தவள், தலைமை மருத்துவர் தன் இருக்கையில் இல்லாதது கண்டு சற்றே பெருமூச்சு விட்டாள், நம்ருதா.

ஆனால் அது வெகு நேரம் நீடிக்கவில்லை. மருத்துவமனை மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. தனலட்சுமி அம்மாவின் அறையின் புறம்தான் அந்த பரபரப்பு என்பதை அறிந்த மாத்திரத்தில் அவள் அதிர்ச்சியடைந்ததோடு ஏதோ விபரீதம் நடக்கப் போவதாகவும் உணர்ந்தாள். தன் உடற்சுமையையும் பொருட்படுத்தாது வேகமாக ஓட்டமும் நடையுமாக தனலட்சுமி அம்மாவின் அறையை நெருங்கினாள். தலைமை மருத்துவர் அங்குதான் பரிசோதனை நடத்திக் கொண்டிருந்தார். இவளைக் கண்டவுடன் இன்றும் தாமதமா என்பது போல பார்வையிலேயே கோபத்தின் எல்லையை வெளிப்படுத்தினார்.

தனலட்சுமி அம்மாவோ மூச்சுத் திணறலால் துடித்துக் கொண்டிருந்தார். வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. மருத்துவர் சலைன் பாட்டிலில் வேறு ஏதோ மருந்தை ஏற்றிக் கொண்டிருந்தார். அந்த அம்மாவோ மிகவும் துவண்ட நிலையில் நினைவுகளும் தப்பிக் கொண்டிருந்தது புரிந்த போது பேரதிர்ச்சியாக இருந்தது நம்ருதாவிற்கு. இரவு சென்று காலை வருவதற்குள் இத்தனை கொடுமையான ஒரு நிலைமையை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவள். 37 வயதேயான தனலட்சுமி அம்மாவிற்கு இப்படி ஒரு அவசர முடிவு மிகக் கொடியதாகும். அடுத்த சில மணித்துளிகள் கல் நெஞ்சையும் கரையச் செய்யும், விளக்க முடியாத சம்பவங்கள். அவர் உடல் படும் மரணவேதனையுடன் ஒரு படி அதிகமாக அவரின் கணவர் மற்றும் ஒரே மகனும் தாங்கொணாத்துயரில் இருந்தனர். உறவினர்களும் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல முயன்று தோற்றுக் கொண்டிருந்தனர்.

இந்த நேரத்தில்தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் தனலட்சுமி அம்மாள், அணையப் போகும் தீபம் சுடர்விட்டு பிரகாசிப்பது போல, வெண்டிலேட்டரை தானே எடுத்துவிட்டு நம்ருதாவை அருகே அழைத்து, மெல்லிய குரலில் அவளிடம், இனிமேல் கொஞ்ச நாட்களுக்கு குழந்தை பெரிதாகும் வரை தான் பணிக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளவும், கணவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் பெறுவதற்கும் தங்கள் லயன்ஸ் கிளப் டிரஸ்ட் மூலம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அதற்கான கடிதம் தன் தலையணை அடியில் இருப்பதாகவும் சைகை மூலமும் வார்த்தைகள் மூலமும் புரிய வைத்தார், அந்த தெய்வப் பெண்மணி. இதனைக் கண்ட அத்துணைக் கண்களிலும் இரத்தக் கண்ணீர் வடிந்ததென்றால் அது மிகையாகாது. ‘மனிதம்’ என்பதன் முழுப் பொருளாக விளங்கிய ஒரு மாமனிதம்!

அந்த நொடி நம்ருதாவின் இதயம் துடித்து, மனதோ, தனலட்சுமி அம்மாவின் உயிர் தன் கருவில் இணைய வேண்டுமென ஏங்க ஆரம்பித்தது. கண்களை மூடி மனமார பிரார்த்திக்க ஆரம்பித்தாள் அந்த அபலைப் பெண். கர்பிணிகளின் வேண்டுதல்கள் பெரும்பாலும் செவிசாய்க்கப்படுவதாக நம்பிக்கையும் உண்டு.

தனலட்சுமி அம்மாவின் உயிர் அமைதியாக அடங்க ஆரம்பித்தது.......... திடீரென நம்ருதாவிற்கும் பிரசவ வேதனை ஆரம்பித்தது. அவள் மயக்கம் தெளிந்து கண் விழித்து பார்த்தபோது தன் அருகில் அழகானதொரு பெண் குழந்தை நிச்சலமாக உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட மாத்திரத்தில் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டாள்...........

Monday, December 20, 2010

கனவு தேசம்.

அன்று சனிக்கிழமை. மாலை நேரம். பக்கத்து வீட்டில் குடியிருக்கும் என் அன்புத் தோழி மித்ராவை வீட்டின் வெளியே தோட்டத்தில் காண முடிந்தது. வார இறுதி நாட்களில் மட்டும்தான் அவளைக் காண இயலும்.

“ மித்ரா, இந்த கோடை விடுமுறைக்கு எங்கே போகப் போகிறீர்கள்?”, என்று கேட்டபோது, என் குரலில் சற்றே பொறாமை தலை தூக்கியதை மறைக்க முடியவில்லை.

“ ஓ, அதைக் கேட்கிறாயா. இன்னும் இதுவரை முடிவு செய்யவில்லை. எனக்கும், சந்துருவிற்கும் [ கணவனை பெயர் சொல்லி அழைக்கும் உயர்ந்த நாகரீகம் !] எத்தனை நாட்கள் ஆபிஸில் லீவ் கிடைக்கப் போகிறது என்பதைப் பொறுத்துத்தான் முடிவு பண்ண வேண்டும் !”

“ ரித்திக்காவிற்கு அடுத்த வாரத்திலிருந்து லீவ் ஆரம்பித்துவிடும் இல்லையா ?” என்றேன்.

”ஆமாம், ஆனால் அவள் பள்ளியில் இந்த முறை அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்குக் கூட்டிச் செல்கிறார்கள். அவளும் செல்கிறாள்”.

“ சரி, சரி, இந்த முறை நீங்க இரண்டு பேரும் தனியா இரண்டாம் முறையா ஹனிமூன் போகப்போறீங்க”, என்றேன் பெருமூச்சுடன்.

அவள் ஒரு குறும்புப் பார்வையுடன், “அதற்கெல்லாம் வயசு தாண்டிவிட்டது. அதுமட்டுமில்லை, நாங்கள் இருவரும் ஓடி ஓடி அலுத்துப் போய்விட்டோம். ஒரு நாளாவது வீட்டில் அமைதியாக ஓய்வெடுத்தால் போதும் என்றிருக்கிறது”, என்று அலுத்துக் கொண்டாள்.

“என்னைப் போலவா? அந்த விஷப் பரீட்சையெல்லாம் வேண்டாம் மித்ரா, அது ரொம்ப சிரமமான காரியம்.நாள் முழுவதும் வீட்டிலேயே அடைந்துக் கிடப்பது சாமான்ய காரியமில்லை “, என்றேன்.

“சும்மா, விளையாட்டிற்குச் சொன்னேன். நாங்கள் இருவரும் வேலையை விடுவது பற்றி கனவிலும் நினைக்க முடியாது. எங்களுடைய செலவு அப்படி.குழந்தையையும் அப்படியே கேட்பதெல்லாம் கொடுத்து வளர்த்து விட்டோம். அதனால் இருவரும் சம்பாதிக்காவிட்டால் கட்டுபடியாகாது “, என்றாள்.

“சரி, அதைவிடு, இந்த முறை எங்கே போகப் போகிறீர்கள். நீங்கள் இன்னும் ஜெர்மனி போகவில்லை என்று நினைக்கிறேன். !’, விடாப்பிடியாக.

“இல்லையே, 2007 லேயே, ஜெர்மனி சென்று வந்துவிட்டோமே “.

“அப்போ ஸ்டேட்ஸ் போகப் போகிறீர்களோ?”,

‘இல்லம்மா’ என்ற போது அவளுடைய சலிப்பு அப்பட்டமாகத் தெரிந்தது.

“ வெளிப்படையா சொல்லனும்னா, நாங்க எங்க புரோகிராமை பற்றி வெளியே சொல்வதே இல்லை.காரணம், அத வாங்கிகிட்டு வா, இதை வாங்கிட்டு வா, என்று சொந்தக்காரர்களின் தொல்லைதான்”,

என் முக வாட்டத்தைக் கவனித்தவளாக, ‘நான் உன்னைப் பத்தி சொல்லவில்லை மாலா, தவறாக எடுத்துக் கொள்ளாதே’, என்றாள் ஆதரவாக என் கையைப் பற்றியபடியே.

‘ஒண்ணு மட்டும் என்னால இப்ப சொல்ல முடியும் மாலா, இந்து முறை சந்திரு என் சாய்ஸ்ஸீக்கே விட்டு விட்டார். நான் தான் முடிவு பண்ணப் போகிறேன் எங்கு செல்வதென்று ‘, என்றாள் பெருமை பொங்க.

‘ஆஹா, வெரி குட், எப்பவும் அவர்தான் முடிவு பண்ணுவார், இந்த முறை உன் சாய்ஸ், ஜமாய், மித்ரா. உன் கனவுத் தேசம் எதுன்னு எனக்கு மட்டும் சொல்லுவியா?”, என்றேன் ஆர்வத்துடன்.

‘கனவுத் தேசம்’ என்று திரும்பக் கூறிய மித்ரா, ஒரு கணம் கண்ணில் ஆர்வம் பொங்க, ஏக்கத்துடன், ‘கனவுத் தேசம்’ என்று திரும்பக் கூறினாள்.

அவள் கற்பனையை கலைக்கும் விதமாக, ‘உன் சான்ஸை முழுமையாக பயன்படுத்திக் கொள் மித்ரா. அவர் விருப்பத்தை உன் மேல் திணிப்பதை அனுமதிக்காதே’ என்று அறிவுறுத்தினேன்.

‘கட்டாயமாக, எப்படி இருந்தாலும் நான் முடிவு பண்ணியவுடன் முதலில் உன்னிடம் கூறுகிறேன்’ என்றாள் நம்பிக்கையாக.

நானும், ‘ஓகே, ஓகே, எப்பவும் போல இந்த முறையும் நாங்கள் எங்கேயும் போகவில்லை. நீ விரும்பினால், வழக்கம்போல சாவியை எங்களிடம் கொடுத்துச் செல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’, என்றேன் அக்கரையாக.

ஏக்கமான என்னுடைய இந்தப் பேச்சிற்கு காரணம் இல்லாமல் இல்லை. என் கணவர் பக்கத்திலிருக்கும் பழனி மலைக்கு கூட்டிச் செல்வதற்குக் கூட கணக்குப் பார்ப்பவர். அம்மா வீட்டைத் தவிர எந்த ஊருக்கும் போவது என்பது எனக்கு கனவில் மட்டும்தான். பாவம் அவர்தான் என்ன செய்வார், வியாபாரத்தில் முட்டி மோதி எவ்வளவுதான் உழைத்தாலும் சாண் ஏறினால், முழம் சறுக்குகிறது.நாம் பிறந்த நேரம் அப்படி! குழந்தைகள் படிப்புச் செலவு, கரண்ட் பில், போன் பில் என்று பட்ஜெட் போட்டு, போட்டு செலவு செய்ததால்தான், இந்த சிறிய வீடாவது கட்ட முடிந்தது. அதற்கே அந்த கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்..........

மித்ரா வீடு என்பதைவிட பங்களா என்றுதான் சொல்ல வேண்டும். 8000 சதுர அடியில், சுற்றி தோட்டம் மற்றும் போர்டிகோ என்று சகல வசதியும் கொண்ட அந்த பங்களாவின் பக்கத்தில் எங்களின் சாதாரண வீடு மட்டும்தான். 1 கிமீ தூரத்திற்கு வேறு காலனியோ, வீடோ எதுவும் கிடையாது. முள் காடும், காட்டுப் பூச்செடிகளும் நிறைந்த அந்த இடத்தில் எங்கள் இரண்டு வீடு மட்டும்தான்.

நான் எப்பொழுதுமே மித்ராவின் வாழ்க்கை முறையைப் பார்த்து பொறாமைப் படுவேன். மித்ராவின் கணவர் சந்திரு ஒரு பெரிய அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரி. ஒரு கணிணி வல்லுநர். மித்ராவும் அவருக்குச் சளைத்தவள் அல்ல. எலக்ட்ரானிக் பொறியியல் துறையில், ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் இருப்பவள். வீடு முழுக்க பல நாட்டுப் பொருட்கள் அலங்காரமாக வீற்றிருக்கும். தினந்தோறும் வீட்டில் மாலை நேரத்தில் நண்பர்கள், தொழில் முறை நபர்கள், உறவினர்கள் என்று இரவு வெகு நேரம் வரை வீட்டில் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது. இரவு வேகு நேரத்திற்குப் பிறகு தான் கார் கிளம்பும் ஓசையும் மகிழ்ச்சியான பிரிவு உபசார மொழிகளும் கேட்கும். வீடு அமைதியாக இருக்கிறதென்றால் அவர்கள் ஏதோ பார்ட்டிக்குச் சென்று விட்டார்கள் என்று அர்த்தம். அவர்கள் வீட்டில் இல்லாத நேரமெல்லாம் என் மனம் கிடந்து அடித்துக் கொள்ளும். ஐயோ, எத்தனை அழகான வீடும், தோட்டமும் அனுபவிப்பாரற்றுக் கிடக்கிறதே....என்று. அதுசரி வீட்டை தலையில் தூக்கிக் கொண்டா போக முடியும்?

மித்ரா சரியான புத்தகப் பிரியை. அவள் அறை முழுவதும் புத்தம் புதிய புத்தகங்கள் பல கேட்பாரற்றுக் கிடக்கும். சந்திருவோ பாட்டுப் பிரியர். சிடிக்கள், டிவிடிக்கள் என்று பிரிக்காமல் கூட இறைந்துக் கிடக்கும். இருவரும் என்றாவது ஒரு நாள் தங்களுக்கு இத்யெல்லாம் அனுபவிக்க நேரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் வீட்டில் போட்டிருக்கும் விலையுயர்ந்த சோபாக்கள் , கார்பெட்டுகள், ஓவியங்கள் போன்றவற்றை வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் அனுபவிக்கும் அளவிற்குக் கூட இவர்கள் அனுபவித்திருக்க வாய்ப்பில்லை. தோட்டத்திலிருக்கும் அந்த விளையாட்டு மைதானத்தையாவது, ரித்திகா தன் நண்பர்களுடன் விளையாட பயன்படுத்துவாள்.

ஆனால், தோட்டக்காரனால், ஒழுங்காகப் பராமரிக்கப்பட்டு அங்கு மணம் பரப்பிக் கொண்டிருக்கும் மனோரஞ்சித மரம், அழகழகான ரோஜா மற்றும் குரோடன்ஸ் செடிகள், மெத்தென்ற பச்சைக் கம்பளம் விரித்தது போன்ற அந்த புல்வெளிகள் இவையெல்லாம் கேட்பாரற்றுக் கிடப்பதைப் பார்க்க மனது சங்கடப்படத்தான் செய்கிறது.

மித்ரா குடும்பத்தின் பிசியான வாழ்க்கையில் ஓய்வு என்பது, இவர்கள் வெளிநாட்டிற்கு கோடை விடுமுறைக்குச் செல்வது மட்டும்தான். ஊரைச் சுற்றிவிட்டு அலுத்துப் போய் ஏகப்பட்ட புகைப்படங்கள் மற்றும் நினைவுப் பொருட்களுடன் திரும்பி வருவார்கள். நான் பலமுறை மித்ராவிடம் அவளுடைய இந்த அதிர்ஷ்டமான வாழ்க்கைப் பற்றி பெருமாயாகப் பேசும்போது அவளும், சந்திரு ஒரு சுற்றுலாப் பிரியர் என்று கூறுவாள்.

அன்று மாலை நான் என் கணவரிடம் புலம்பிக் கொண்டிருந்தேன். மித்ரா எங்கு போகப் போகிறாள் என்பதை இரகசியமாகவே வைத்திருக்கிறாள் என்று.

‘நீ ரொம்பவும் அவர்கள் விசயத்தில் மூக்கை நுழைக்கிறாய். இது நல்லதில்லை,’ என்றார் கோபமாக.

இந்த ஏரியாவில் என்னைத்தவிர அவளுக்கு வேறு நட்பும் கிடையாது, உதவுபவரும் கிடையாது என்று சொல்லும் போதே, இதைத் தொடருவதற்கு விரும்பாத என்னவர் ஒரு முறை என்னை ஏறிட்டுப் பார்த்துவிட்டு தினசரியில் தலையை நுழைத்துக் கொண்டார்.

பல வருடங்களாக கோபால்தான் அவர்கள் வீட்டையும், குழந்தையையும் கவனித்துக் கொள்கிறான்.

நான்கு நாட்கள் கழித்து மித்ராவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது மறக்காமல் திரும்பவும் அவளிடம் இது பற்றிக் கேட்டேன்.

அவளும், ஒரு வழியாக நாளை கிளம்புவதாக முடிவெடுத்து விட்டோம் , ஆனால் 15 நாள் ட்ரிப் தான் என்றாள்.

எந்த இடம் என்று கேட்க ஆரம்பிப்பதற்குள், மித்ரா ஆதரவாக என் தோளைப் பற்றி அதை மட்டும் கேட்க வேண்டாம் என்றும் தன் கணவரிடம் இந்த ரகசியத்தைக் காப்பற்றப் போவதாக சவால் விட்டிருப்பதையும் கூறினாள். 10,000 ரூபாய் பந்தயம் என்றாள் அவள்.

நானும் அவளிடம் மேற்கொண்டு அதைப் பற்றிக் கேட்காமல், அவளே பந்தயத்தில் செயிக்க வேண்டுமென வாழ்த்தினேன்.

மித்ராவும், “ரித்தி இன்று அந்தமான், கிளம்பி விட்டாள். அவள் வருவதற்கு 20நாட்கள் ஆகும். அதற்குள் நாங்கள் திரும்பி விடுவேம். கோபால் தன் கிராமத்திற்குப் போய்வர விரும்புகிறான். அவனும் நாளைக்குச் சென்றுவிட்டு நாங்கள் வருவதற்குள் திரும்பிவிடுவான் . உங்களிடம்தான் சாவியை கொடுத்துச் செல்லப் போகிறோம் என்றாள்.

நானும் ‘ஓ, யெஸ், கட்டாயம் பார்த்துக் கொள்கிறேன். கவலைப்படாமல் போய் வாருங்கள்’ என்றேன்.

அவளும் ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும் போதும் உங்களுக்குத்தான் தொந்திரவு கொடுக்கிறோம் என்று பார்மலாக சொன்னாள்.

நானும் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சமாதானம் சொல்லிவிட்டேன். அவளும் பந்தயத்தில் ஜெயித்த பணத்தில் நான் உனக்கு ஏதாவது நல்ல பரிசாக வாங்கி வருகிறேன் , என்றாள் சிரித்துக் கொண்டே.

அடுத்த நாள் சந்திரு கேட் மற்றும் வீட்டுக் கதவு ஆகிய 2 சாவிகளையும் கொண்டு வந்து கொடுத்துவிட்டுச் சென்றார்.நானும் அதை வாங்கி பத்திரமாக டிராயரில் போட்டு வைத்தேன்.

அடுத்த சில நாட்கள் அமைதியாகக் கழிந்தது. ஒரு நாள், மாலை என் கணவர் தன் அலுவலகத்திலிருந்து வரும் பொழுது, மித்ரா வீட்டு மாடி சன்னல் வழியாக பளிச்சென்ற ஒளி வீசியதாகக் கூறினார்.

இதைக் கேட்டவுடன், ஐயோ, ஒரு வேளை திருடனாக இருக்குமோ என்று மனது படப்படப்பானது. சென்ற முறை அவர்கள் மலேசியா சென்றிருந்தபோது கூட மாடியில் ஒரு பல்ப் எறிய விட்டுத்தான் சென்றார்கள். அது போல இந்த முறையும் செய்திருக்கலாம் என்றேன். அவரும் அப்படித்தான் இருக்கும் என்று சொல்லி விட்டுவிட்டார்.

அடுத்த ஆபிஸில் இருந்து வரும போதே மிகவும் பரபரப்பாக வந்தார். இன்று அவர்கள் வீட்டு மாடியில் லைட் எரியவில்லை என்றார் ஆச்சரியமாக. நேற்று எரிந்து கொண்டிருந்த லைட் இன்று எப்படி எரியாமல் இருக்கும் என்ற சந்தேகத்தையும் கிளப்பினார்.

உடனே என் மகன் அரவிந்த் ஒரு வேளை பல்ப் பியூஸ் போய் இருக்கலாம் என்றான்.

என் மகள் கீர்த்தியோ, ‘ அப்பா, நீங்க தெரு விளக்கு வெளிச்சம் அவர்கள் வீட்டு கண்ணாடியில் பட்ட பிரதிபிம்பத்தைத்தான் பார்த்திருப்பீர்கள். சரியாக கவனிக்காமல் சொல்லிவிட்டீர்கள்’, என்றாள்.

ஒரு வேளை தெருவில் கடந்து போகும் காரின் ஹெட்லைட் வெளிச்சம் கூட அதில் பட்டிருக்கலாம் என்று எண்ணிப் பார்த்தபோது அது சரியாக இருப்பது போல் தோன்றியது. எதற்கும் இருக்கட்டும் என்று அவர்கள் வீட்டு கேட் பூட்டு ஒழுங்காக பூட்டப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்த்து விட்டார் என்னவர். அடுத்த 2 நாட்கள் அமைதியாகக் கழிந்தது.

இருந்தாலும் என் கணவருக்கு மட்டும் மனதில் ஏதோ உறுத்தல் இருந்து கொண்டேயிருந்தது. எதற்கும் உள்ளே போய் ஒரு முறை சோதித்துப் பார்த்து விட்டு வந்து விடலாம் என்று கேட்க ஆரம்பித்தார். அவர்கள் வீடு முழுவதும் மிக உயர்ந்த பொருட்கள் நிறைய வைத்திருப்பதால், திருடன் வருவதற்கும் வாய்ப்புள்ளதே என்று சந்தேகம் வேறு கிளப்பி விட்டு விட்டார்.

ஐயோ திருடன் இருப்பது போல் இருந்தால் நாம் தனியாக செல்வது ஆபத்தாகுமே என்றேன் பதட்டத்துடன்.

அவரும், ‘ வேறென்ன செய்வது, நீதானே, நாங்கள் வீட்டைப் பார்த்துக் கொள்கிறோம் ‘ என்று ஒத்துக் கொண்டாய்”, என்றார்.

இருந்தாலும் அந்த இரவு வேளையில் போய் வீட்டை திறந்து பார்க்கும் அளவிற்கு தைரியம் வரவில்லை. திருடனாக இருந்தாலும் இந்நேரம் வேண்டுவதெல்லாம் எடுத்துக் கொண்டு கம்பி நீட்டியிருப்பான். எதுவாக இருந்தாலும், அடுத்த வீட்டுக்காரர் என்பதற்காக நம் உயிரை பணயம் வைத்து, இந்த இரவு நேரத்தில் போக வேண்டாம், காலையில் போய் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம்.

ஆனால் பிள்ளைகளோ, போலீசில் தகவல் கொடுத்துவிடலாம் என்று கட்டாயப் படுத்தினர்.

என் கணவரோ இது போல சின்ன சந்தேகங்களுக்கெல்லாம் போலீசை வரவழைக்க முடியாது. அவர்கள் தொந்தரவு பெரிதாகிவிடும் என்றார் யோசனையுடன்.

சரி, எது எப்படியோ நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து படுக்கச் சென்றோம். நிம்மதியான உறக்கம் இல்லைதான், ஆனாலும் வேறு வழி தெரியவில்லை.

அடுத்த நாள் அவர் அவசரமாக வெளியே கிளம்பியவுடன், நான் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு மித்ரா வீட்டிற்குச் சென்றேன். இரும்பு கேட் கிரீச் என்ற சத்தத்துடன் திறந்ததைத் தவிர வேறெந்த மாற்றமும் இல்லாமல் இயல்பாகவே இருந்தது.

அரவிந்த் காலிங் பெல்லை விடாமல் அடித்தான். உள்ளே பெல் அடிக்கும் சத்தம் வெளியே கேட்டது. கீர்த்தியோ, ஏண்டா திருடன் வந்து கதவைத் திறப்பானோ என்று கிண்டல் பண்ணிக் கொண்டிருந்தாள்.

அவனும், சீ, போடி, என்று அவள் சடையைப் பிடித்து இழுக்க இரண்டு பேரும் சண்டை போட ஆரம்பித்துவிட்டார்கள்.இருவரையும் மிரட்டி அடக்கி விட்டு, கதவை திறந்து உள்ளே போய் பார்ப்பதா வேண்டாமா என்று ஒரே குழப்பமாக இருந்தது. ஆனால் குழந்தைகள் ஏகமனதாக திறந்து பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தனர். பட்டபகலில் என்னதான் நடந்து விடப் போகிறது என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வீட்டைத் திறக்க முடிவெடுத்து விட்டோம்.

2, 3 நாட்களாக மழை பெய்து கொண்டிருந்ததனால், புல் வெளியில் நடக்கும் போதே சிலீரென குளிராக இருந்தது. நனைந்த மனோரஞ்சிதம் கபடமில்லாமல் மணம் பரப்பிக் கொண்டிருந்தது.

‘அட ஆண்ட்டி சேரை உள்ளே எடுத்து வைக்க மறந்துவிட்டார்கள் என்றாள் கீர்த்தி., அங்கிருந்த இரு பிரம்பு நாற்காலிகளைக் காட்டி. அவள் காட்டிய திசையில் நான் கண்ட காட்சி மேலும் அதிர்ச்சியைக் கூட்டியது. அங்கிருந்த டேபிளில் இரு காக்கைகள் எதையோ கொத்தித் தின்று கொண்டிருந்தது. யாரோ சமீபத்தில் அந்த டேபிளில் அமர்ந்து எதையோ சாப்பிட்டிருக்கிறார்கள் என்பதையே அது உறுதி செய்தது. மித்ரா குடும்பம் ஊருக்குச் சென்று வாரம் ஒன்றாகிறது. ஒரு வேளை திருடனின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் அச்சமூட்டியது. இனிமேல் அங்கிருப்பதோ, உள்ளே செல்வதோ சரியாக இருக்காது என்று திரும்பி போய் விடலாம், முதலில் போலீசுக்கு தகவல் சொல்லலாம் என்று கூறினேன்.

அரவிந்தோ வந்ததே வந்துவிட்டோம், கொஞ்ச நேரமாவது ஊஞ்சல் ஆடிவிட்டுத்தான் வருவேன் என்று அடம் பிடித்தான். அவனை வேண்டாம் போகலாம் என இழுத்து வருவதற்குள், கீர்த்தி ஓடிவந்து, வீட்டிற்குள் இருந்து அப்பம் வாசனை கமகமவென வருவதாகக் கூறினாள்.

‘ என்னடி சொல்கிறாய். பூட்டிய வீட்டிற்குள் இருந்து எப்படி அப்பம் வாசம் வரும், பக்கத்திலும் வீடு ஏதும் இல்லை ‘, என்றேன்.

அரவிந்தோ, திருடந்தான் உள்ளே அப்பம் சுட்டு சாப்பிடுகிறான் என்றான் கிண்டலாக.நானும், அப்பா கூட இல்லாமல் தனியாக இங்கே இருப்பது சரியல்ல என்று அவர்களை கிளம்பலாம் என்று கூப்பிட்டேன்.

அப்பம் வாசனை காற்றிலே மிதந்து வந்து என் மூக்கையும் நிறைத்தது. கீர்த்தி, அம்மா சன்னல் ஒன்று லேசாக திறந்திருக்கிறது நான் போய் அதன் வழியாக பார்க்கிறேன் என்று ஓடினாள், அம்மா வேண்டாம் என்று கத்துவதையும் பொருட்படுத்தாது, காம்பவுண்டு மேல் ஏற முயற்சித்தாள்.

எனக்கு பயத்தில் கை,கால் எல்லாம் வெடவெடத்தது. கொடியில் உலர்த்தப்பட்டிருந்த கருப்பு உள்பாவாடை மற்றும் தோட்டத்தில் இருந்த காலடித் தடங்கள் இவையனைத்தும் மேலும் அச்சத்தை உண்டாக்கியது.

கீர்த்தி, வந்துவிடு போயிடலாம், என்றேன் ஈனஸ்வரத்தில்.

சுவர் மிகவும் உயரமாக இருந்ததால் எனக்கு ஏறுவது சிரமம் என்று முன்னால் சென்று கதவைத் திறக்கலாம் என்று ஓடினேன். கீர்த்தியை தனியாக உள்ளே செல்லவிடுவதைவிட எது நடந்தாலும் பரவாயில்லை என வீட்டைத் திறந்துவிடுவது என்ற முடிவிற்கே வந்துவிட்டேன்.

அரவிந்த் அம்மா என்று ஓடி வரவும், இரு பார்க்கலாம் என, கதவின் துவாரத்தில் சாவியை நுழைப்பதற்காக முயன்ற போது, அடுத்த அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. ஆம் கதவு உட்புறமாக தாள் திறக்கப்பட்டு படாரென திறந்தது...........

ஒரு குரல், ‘ஹலோ மாலா, இன்ப அதிர்ச்சியாக இருக்கிறதே, வா உள்ளே ‘ என்றது.

அங்கே, மித்ரா, ஒரு வெளுத்துப் போன நைட்டியுடன், மேக் அப் இல்லாத எளிய தோற்றத்துடன் நின்று கொண்டிருந்தாள். அவள் பின்னே, பர்மூடாசுடன், ஷேவிங் செய்யாத முகத்துடன், அவள் கணவன் சந்திரு. அவர்கள் இருவரையும் ஆச்சரியமாக கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறாள் கீர்த்தி.

ஒரு வினாடி என் கண்களையே நம்ப முடியாதவளாக பின்னால் நகர யத்தனித்த போது, மித்ரா ஆதரவுடன் என் கைகளைப் பற்றி உள்ளே அழைத்துச் சென்றாள்.

சந்திரு, ’மேடம் உங்களுக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும் என்பது புரிகிறது. உள்ளே வந்து உட்காருங்கள் முதலில்’ , என்றான்.

மித்ரா, என்னை அணைத்தபடி ‘ சாரி மாலா, இதுதான் என்னுடைய விருப்பமான கனவு தேசம் , அமைதியான விடுமுறை’ என்றாள்.

‘அட, என்ன சொல்கிறாய், நீங்கள் எங்கேயுமே போகவே இல்லையா?’ என்றேன் மேலும் ஆச்சரியமாக.

‘ஆமாம், 10 நாட்களாக இதே வீட்டிற்குள், நிம்மதியாக அமைதியாக விடுமுறையை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நினைத்ததை உடுத்திக் கொண்டு, விரும்பிய பாட்டை கேட்டுக் கொண்டு, ஆசைப்பட்டதெல்லாம் சமைத்து சாப்பிட்டுக் கொண்டு, நிறைய புத்தகம் படித்துக் கொண்டு, வாவ்........ரியலி ஃபெண்டாஸ்டிக் ஹாலிடே ‘! என்றாள் சிலிர்த்துக் கொண்டே.

ஓ, இன்றைய ஸ்பெசல் அப்பமா என்றேன் சிரித்துக் கொண்டே....

‘ஆம், 15 நாட்களுக்குத் தேவையான பழங்கள், காய்கறிகள், இன்ஸ்டண்ட் ஐட்டம்ஸ் எல்லாம் வாங்கி வைத்துக் கொண்டோம். எங்கள் வீட்டின் மொத்த சந்தோசமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.’ என்றான் சந்திரு.

மித்ரா முகத்தில் முன்னெப்போதும் இல்லாத வெட்கம் கலந்த அந்த மகிழ்ச்சி மிகவும் புதுமையாக இருந்தது.

‘ எங்களுடைய தேனீ போன்ற வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் பலவகையில் தொலைத்திருக்கிறோம்’, என்றாள் நீண்ட பெருமூச்சுடன்.

‘ ஆனால் எங்களுடைய உண்மையான சந்தோசத்தையும், புரிதலையும் எங்களுடைய இந்த வீட்டுச் சொர்கத்திலேயே கண்டுபிடித்து விட்டோம்’ என்று சந்திரு ஏக்கம் கலந்த பெருமூச்சுடன் கூறினான்...........

அதிக நேரம் அங்கிருந்து அவர்களின் நிம்மதியை கெடுக்க விரும்பாமல் குழந்தைகளை கூட்டிக் கொண்டு கிளம்பப் போனேன். மித்ரா அதற்குள் சுடச்சுட அப்பத்துடன் வந்தாள். அதையும் சாப்பிட்டுவிட்டு, மகிழ்ச்சியாகக் கிளம்பினோம், இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற முடிவுடன்.......

--

Friday, December 17, 2010

ஆலகாலமும் அமுதாகும் ! - பகுதி - 4



சண்டீஸ்வரர் வழிபாடு

பொன்னக் கடுக்கை முடிவேய்ந்த
புனிதற்கு அமைக்கும் பொருள் அன்றி
மின்னும் கலன்ஆடைகள் பிறவும்
வேறுதமக்கு என்று அமையாமே
மன்னாந் தலைவன் பூசனையின்
மல்கும் பயனை அடியார்கள்
துன்னும்படி பூசனை கொள்ளும்
தூயோன் அடித்தா மரைதொழுவாம்.


நலம் தரும் நந்தி

கந்தனின் தந்தையைத்தான் கவணமாய் சுமந்துசெல்வாய்
நந்தனார் வணங்குதற்கு நடையினில் விலகி நின்றாய்
அந்தமாய் ஆதியாகி அகிலத்தை காக்க வந்தாய்
நந்தியே உனைத் துதித்தேன் நாடி வந்து எம்மைக் காப்பாய்
ஒன்பது கோள்:களுக்கும் உயரிய பலன் கொடுப்பாய்
பொன் பொருள் குவிய வைப்பாய் புகழையும் வளர்த்து வைப்பாய்
சிந்தனை வளங்கொடுப்பாய் சிகரத்தில் தூக்கி வைப்பாய்
நந்தியே உனைத்துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்
மாலைகள் ஏற்க வைப்பாய் மழலைகள் பிறக்க வைப்பாய்
வேலைகள் கிடைக்க வைப்பாய் விதியையும் மாற்றி வைப்பாய்
சோலையின் வண்ணப் பூவை சூடிடும் நந்தி தேவா
நந்தியே உனைத்துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்
தஞ்சையில் பெரியநந்தி தளிருடன் வெண்ணெய் சாத்தி
அஞ்சாத வேந்தன் நந்தி அழகிய நெகமம் நந்தி
குஞ்சர முகத்தான் தந்தை குந்திடும் ரிஷப நந்தி
தஞ்சடனாய் உனையடைந்தேன் தயங்காது எம்மைக் காப்பாய்.


பஞ்ச புராணம்

இடரினுந் தளிரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனி லமுதொடு கலந்த நஞ்சை
மிடறினி லடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளுமா
றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவாஉன தின்னருளாவடுதுறை அரனே --- தேவாரம்


சிவபுராணம்



நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம்குவிவார் உன்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க
ஈசன்னடிபோற்றி எந்தை அடி போற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணந்தன்னை
முந்தை வினைமுழுவதும் ஓய உரைப்பன்யான்
கண்னுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறைந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகிமுனிவராய்த் தேவராய்ச்
செல்லா அநின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
வெய்யாய் தணியாய் இயமான நாம் விமலா
பொய்யாயின எல்லாம் போயகல வந்தருளி
மெஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பருக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் என்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்
புறந்தோல் போர்த்தெங்கும் புழுஅழுக்குமூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
வலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்து அன்பாகிக் கசிந்துள் உருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள்காட்டி
நாயிற் கடையாய் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவானதத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தே ஆர் அமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியன்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கும் அன்பனே யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணிக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியெ
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்
ஊற்றானே உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப
ஆற்றேன் என் ஐயா அரனேஓ என்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுற் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.


திருச்சிற்றம்பலம்

வாழ்த்து

வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி
விளங்குக உலகம் எல்லாம்.


ஆலய தரிசன விதி முறைகள் :


1. குளித்து தூய ஆடை அணிந்து ஆலய தரிசனத்திற்குச் செல்ல வேண்டும்.

2. ஆலயத்திற்குள் செல்லும் முன் கோவிலின் கோபுரத்தைப் பார்த்து வணங்க வேண்டும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பர் பெரியோர்.

3. மகாசிவநாமமாகிய, “ஓம் சிவாய நம “ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை மனதினுள் செபித்துக் கொண்டே கொடிமரத்தைப் பார்த்து வணங்க வேண்டும்.

4. பின்பு விநாயகப் பெருமானை தோப்புக்கரணம் இட்டு வணங்க வேண்டும். இதுவும் ஒரு வகை யோகப் பயிற்சியுமாகும்.

5. ஈச்சுவரரை தரிசிக்கும் முன்னர் நந்திதேவரை வணங்கி ஆசி பெற்று உள்ளே செல்ல வேண்டும்.

6. பின்பு ஈச்சுவரரின் காவல் தெய்வங்களாகிய துவாரபாலகர்களிடம் அனுமதி பெற்று ஈச்சுவரனை வணங்க வேண்டும்.

7. எம்பெருமானை வணங்கி மும்முறை வலம் வர வேண்டும்.

8. வலம் வரும் போது குருவாகிய தட்சிணாமூர்த்தி சுவாமிமுன் நின்று கண்களை திறந்து அவரைப் பார்த்து வணங்க வேண்டும்.

9. அடுத்து வள்ளி தெய்வானை சமேதரராயக் காட்சியளிக்கும் முருகப் பெருமானை தரிசிக்க வேண்டும்.

10 . சண்டிகேசுவரர் சன்னதிக்குச் சென்று, அவரிடம் ஆசி பெற வேண்டும்.
எக்காரணம் கொண்டும், தியானத்தில் ஈடுபட்டிருக்கும் சண்டிகேசுவரர் சந்நிதியில் கைதட்டியோ, ஒலி எழுப்பியோ இடையூறு செய்தல் ஆகாது.


தீபம் ஏற்றும் முறை :


வேப்பெண்ணெய், நெய், இலுப்பெண்ணெய் மூன்றும் கலந்து தீபமிடுவதால் செல்வம் உண்டாகும். இது மேலும் தெய்வத்திற்கு மிகவும் உகந்ததாகும்.
மருத்துவ குணம் நிறைந்த இம்மூன்று எண்னெய் கொண்டு தீபம் ஏற்றுதல் சுற்றுச் சூழல் மற்றும் உடல் நலம், மன நலம் இவையனைத்திற்கும் சுகம் விளைவிக்கக் கூடியதாகும்.

நெய், விளக்கெண்னெய், இலுப்பெண்ணெய், வேப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய இந்த ஐந்து எண்ணெய்களையும் எவர் ஒருவர் கலந்து ஊற்றி ஒரு மண்டலம் பூசை செய்கின்றனரோ அவருக்கு தேவியின் அருள் மந்திரசக்தி உண்டாகும்.


தீபம் ஏற்றும் திசைகளின் பயன்கள் :


கிழக்கு : இத்திசையில் தீபம் ஏற்றி வழிபட துன்பம் ஒழியும். கிரகக் கோளாறுகள் நீங்கும்.

மேற்கு : இந்நிலையில் தீபமேற்றி வழிபட கடன் தொல்லை, சனிப்பீடை, கிரகதோசங்கள், சல்லியதோசம், பங்காளிப் பகை இவை நீங்கும்.

வடக்கு : இத்திசையில் தீபம் ஏற்றி வழிபட திரண்ட செல்வம், மங்களம், திருமணத்தடை, கல்வித்தடை இவையனைத்தும் நீங்கி, சர்வ மங்களம் உண்டாகும்.

தெற்கு : இத்திசையில் தீபம் ஏற்றக் கூடாது. இது பெரும்பாலும் அபசகுனமாகும்.

திரி ஏற்றும் முகப்பக்கம் :

ஒரு முகம் ஏற்றுவது - மத்திமம்.

இரண்டு முகம் ஏற்றுவது - குடும்ப ஒற்றுமையைப் பெருக்கும்.

மூன்று முகம் ஏற்றுவது - புத்திரசுகம்.

நான்கு முகம் ஏற்றுவது - பசு பரி இனத்தைத் தரும்

ஐந்து முகம் ஏற்றுவது - செல்வத்தைப் பெருக்கும்.



திரி தரும் பலன்கள் :

பஞ்சுதிரி : குடும்பத்தில் மங்களம் நிலைக்கும்.

தாமரைத் தண்டு திரி : முன் வினைப்பாவம் நீங்கி, செல்வம் நிலைக்கும்.

வாழைத்தண்டு திரி : மக்கட் செல்வம் உண்டாகும். தெய்வக் குற்றம் நீங்கி மன அமைதி ஏற்படும்.

வெள்ளை எருக்கன் பட்டைத் திரி : பெருத்த செல்வம் சேரும்

புது மஞ்சள் துணித் திரி : திருமணத்தடை நீங்கும், மலட்டுத் தன்மை நீங்கும்.

புது வெள்ளைத் துணித் திரி : தரித்திரம் நிவாரணமாகி, குடும்பத்தில் சுபிட்சம் நிலவும்.


இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே.


அம்மை துதி :

எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும்
உண்மையாவது பூசனை என உரைத்தருள
அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்
பெண்ணின் நல்லவளாயின பெருந்தவக் கொழுந்து.

முருகப் பெருமான் துதி:

கொன்றை வேணியார் தாமும் பாகங் கொண்ட குலக்கொடியும்
வென்றி நெடுவேல் மைந்தரும் தம் விரைப்பூங்கமலச் சேவடிக்கீழ்
நின்ற தொண்டர் மனைவியார் நீடு மகனார் தாதியார்
என்றும் பிரியாதே இறைஞ்சி இருக்க உடன்கொண்டு ஏகினார்.



அம்பலவாணன் துதி :

உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்து என் உளம்மன்னிக்
கருத்து இருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட
திருத்துருத்தி மேயானைத் தித்திக்கும் சிவபதத்தை
அருத்ததியினால் நாயடியேன் அணிகொள் தில்லை கண்டேனே.


குறிப்பு :

வழிபாட்டின் தொடக்கத்திலும் நிறைவிலும் “திருச்சிற்றம்பலம்” என்று சொல்லி மகுடம் சொல்வது நலமாம்.


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண்ணுருவானாய் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி! போற்றி !!

திருச்சிற்றம்பலம்.


நிறைவடைந்தது.





பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...