Friday, September 23, 2011

எஸ்.எம்.எஸ்.எம்டன் 22-09-1914


பவள சங்கரி

திவாகரின் வரலாற்றுப் புதினம் – ஒரு பார்வை
எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான திரு.திவாகர் ‘வம்சதாரா, திருமலைத் திருடன், விசித்திர சித்தன் மற்றும் எஸ்.எம்.எஸ். எம்டன்’, ஆகிய வரலாற்றுப் புதினங்களின் ஆசிரியர். இவருடைய அனைத்து வரலாற்றுப் புதினங்களும், மிகுந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன. மேடை நாடகங்கள் பல எழுதி மேடையேற்றியவர். பல்வேறு பிரபல இதழ்களில் இவர் எழுதிய கட்டுரைகள், கதைகள், வெளிவந்துள்ளன. கப்பல் போக்குவரத்து, மற்றும் வெளிநாட்டு வணிகத்துறை பற்றி இவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகள் தொடராக வெளிவருகின்றன. தற்சமயம் விசாகப்பட்டிணத்தில் வசித்து வருகிறார்.
97 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வு ஒன்று நடந்தது நினைவிருக்கும் அனைவருக்கும். ஆம். மறக்கக் கூடிய நிகழ்வா அது?
22-09-1914 ஆம் நாள் இரவு 9.20 இலிருந்து 9.30 வரை நடந்தேறிய அந்த குண்டு வீச்சை யார்தான் மறக்க இயலும்? சென்னை கடற்கரையில் எல்லாரும் நின்று பார்க்கும் தொலைவில் மிகத்துணிச்சலாக தன்னந்தனியே நங்கூரமிட்டு சென்னை மாநகரின் மீது படபடவென குண்டு மழை பொழிந்த , ஜெர்மனி போர்க்கொடி தாங்கிய அந்த பொல்லாத ’எம்டன்’ எனும் போர்க்கப்பலை அறியாதோர் இருக்க வாய்ப்பில்லை. எம்டன் என்ற பெயர் நம் அன்றாட வழக்கில் சர்வ சாதாரணமாக கலந்துவிட்ட ஒன்றே அதற்கான சான்று அல்லவோ? இந்த சுவாரசியமான நிகழ்வுகளின் பின்னனியில், வெகு திறமையாக சித்தர்களின் வேறுபட்ட வாழ்க்கை முறை, சாமான்ய மனிதரும் சித்தராக மாறிய வல்லமை மற்றும் சாம்பவ விரதம் பற்றிய ஆச்சரியத்தின் எல்லைக்கே கொண்டுச்செல்லும் நிகழ்வுகளையும் பின்னிப் பிணைத்து அழகான புதினமாக்கியிருக்கிறார் ஆசிரியர் திவாகர். கையில் எடுத்த புத்தகத்தை முழுவதும் தொடர்ந்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் கொண்டு நிறுத்துகின்றன மாறுபட்ட அந்த நிகழ்வுகள். முதலாம் உலகப் போர் நடந்து முடிந்த அந்த காலகட்டங்களை நம் கண்முன் நிறுத்துகின்றன.

“ ஏதோ மனிதராக இந்த புவனியில் பிறப்பு எடுத்தோம்…. இது ஒரு அற்புத பிறவி. அதனால் வாழும் வரை நல்லதைச் சிறப்பாகச் செய்துவிட்டு இறந்து போனால் சொர்க்கம் கிடைக்கும்…” கதையின் நாயகன் சிதம்பரம் இதே எண்ணத்தில் புதினம் முழுவதும் வலம் வந்து அரிய சாதனைகள் பல புரியும் வல்லமை பெற்றவனாகவும் , சிதம்பர ரகசியம் காப்பவனாகவுமே இறுதி வரை சித்தரிக்கப்பட்டுள்ளது கதையின் போக்கிற்கு மேலும் சுவை கூட்டுவதாகவே உள்ளது.
ஆங்கிலேயப் பிரபுக்கள், தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்த கோவில்களையும் விரும்பி தரிசித்ததோடு, சிவ வழிபாட்டு முறைகளையும் அறிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டியுள்ளனர் போன்ற தகவல்களையும், நம் நாட்டுத் திருமணக்கலாச்சாரங்களில் அவர்கள் கொண்டிருந்த மதிப்பும், ஆர்வமும், இப்படி பல செய்திகள் கந்தன் போன்ற உப கதாபாத்திரங்களின் மூலம் தெளிவாக்கியதும் குறிப்பிடத்தக்கதாகும்.
ருத்திராகமங்களில் 18 ஆகமத்தில் ஒன்றான மகுடாகமம் குறித்த தகவல்கள் லகுளீச பண்டிதர் மூலமாக ராஜேந்திர சோழன் அறிந்து கொள்வதும், பெருவுடையார் கோவிலைக்கட்டிய சோழ மன்னனும், ராஜ ராஜ சோழச் சக்கரவர்த்தியாய் முடிசூடி பின்னர் அந்த முடியையும் துறந்து பற்றற்ற நிலையில் சிவபெருமானைச் சரணடைந்து சிவபாதசேகரனாய் மாற்றிக் கொண்டவரின் உயிர் பிரிக்கப்பட்ட கதை ஆச்சரியத்தின் உச்சம் எனலாம். சாம்பவ விரதம் பற்றிய அரிய தகவல்களும் சுவாரசியமாகவும், யதார்த்தமாகவும் வழங்குவதில் ஆசிரியர் வெற்றி கண்டிருப்பதாகவே தோன்றுகிறது.
காலம் , அது நாகரீகம் வளராத புராண காலமானாலும் சரி, அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற சென்ற நூற்றாண்டுக் காலமானாலும் சரி, சூழ்நிலைக் கைதிகளாய் வாழும் அப்பெண்களை அதே சூழ்நிலை அவர்களை உறுதியான எண்ணம் கொண்டவளாகவும், பிரச்சனைகளை வெகு நேர்த்தியாக சமாளிக்கக் கூடியவளாகவும் மாற்றுகிறது என்பதை ராதை என்ற கதாபாத்திரம் மூலம் விளக்கிய பாங்கு பாராட்டுதலுக்குரியதாகும். அதே போன்று உல்லாச பொழுது போக்கு மற்றும் மோதல் என்று எதுவானாலும் உச்சத்தில் நிற்பதே ஐரோப்பியர்களின் வாழ்க்கை முறையாக இருக்கிறது என்பதையும் பல இடங்களில் தெளிவாகவே விளக்கியுள்ளார். நவநாகரீக ஐரோப்பிய கலாச்சாரத்தையும்,  புராதன சித்தர் கால சாம்பவ விரதம் போன்ற , சம்பந்தமில்லாத இரண்டு முனைகளையும் மிக அழகாக சமன்படுத்தியுள்ள பாங்கு ஆசிரியரின் கைதேர்ந்த எழுத்தாற்றல் திறனை பறை சாற்றுவதோடு, சிறந்த வரலாற்று ஆய்வாளர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவே அமைந்துள்ளதும் நிதர்சனம்!
மனித வாழ்வில் இறப்பு என்பது இயற்கையானதொன்றாகும். தவிர்க்க இயலாததும் கூட என்பதை பல் வேறு ஞானிகள், சித்தர்கள் , தேவ தூதர்கள் முதல் சாமான்ய மனிதர்கள் வரை பலரின் சரிதம் மூலம் அறிய முடிந்தாலும், நம் சித்தர்கள் அந்த இறப்பை எதிர் கொண்ட விதமும், அது குறித்த நம்பிக்கையும் நம் நாட்டவர் மட்டுமன்றி பிற நாட்டினருக்கும் பேராச்சர்யத்தை விளைவிக்கக் கூடியதாகும்….
” இறந்திறந்தே இளைத்ததெல்லாம் போதும் அந்த
உடம்பை இயற்கை உடம்பாக அருள் இன்னமுதமும்
அளித்து என் புறத்தழுவி அகம் புணர்ந்தே
கலந்து கொண்டு எந்நாளும் பூரணமாம் சிவபோகம்
பொங்கிட விழைத்தேன் !”
என்று, பிறப்பெய்தாத பரிபூரண நிலை எய்திட வேண்டி , “சர்வேசா என்னை உன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டு மரணமில்லா பெருவாழ்வைத் தந்தருள்வாயே ஈசனே…….” என்று இறைஞ்சுகிறார் , வள்ளல் பெருமான் தன் அருட்பாவின் மூலம்!
எஸ்.எம்.எஸ். எம்டன் என்ற புதினத்தின் நாயகன் சிதம்பரத்தின் தந்தையின் இறுதிக் காலங்களின் வேள்விகள் மட்டுமன்றி மிக வித்தியாசமான ஒரு முக்தி நிலையை, பண்டிதர்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மிகத்தெளிவாக வழங்கியுள்ளார் என்றாலும் அது மிகையாகாது.
அந்த வகையில் ஒரு வரலாற்றுப் புதினத்தில் “ சாம்பவ விரதம்” என்கிற அற்புதமான ஒரு விடயம் குறித்து ஆழ்ந்த பார்வையும், சுவையான தகவல்களும் அளிப்பதில் பெரும் வெற்றி கண்டிருக்கிறார் ஆசிரியர்.
மாயவரம் அருகிலுள்ள வயக்காட்டில், முள்ளுக்காட்டினுள் நடந்த சம்பவமாக சிதம்பரத்தின் தாயார் கூறுவது, இப்படியும் நடக்கக் கூடுமா என்ற சந்தேகத்தையும், பல வினாக்களையும் எழுப்புவதும் தவிர்க்க முடியாததாகிறது.
தற்கொலைக்கும், சமாதி நிலைக்கும் உள்ள வேறுபாட்டை ஆசிரியர் விளக்கியிருக்கும் விதமும், அதற்கான சூழலும் ஏற்றுக் கொள்ளும்படியாகவே உள்ளது.
புதினத்தின் ஆரம்பத்தில் போட்ட முடிச்சை இறுதி வரை மிக நேர்த்தியாக மற்ற நிகழ்வுகளின் ஊடே பயணிக்கச் செய்து இறுதியில் ஒரு நல்ல, எதிர்பார்க்க இயலாததொரு திருப்பமாக அம்முடிச்சை தளர்த்தி, வாசகரின் சிந்தனைக்கும் அதனை விருந்தாக்கி, இலை மறைவு காய் மறைவாகவும் பல விடயங்களை விளக்கி, இப்படி பல சாகசங்களை இப்புதினத்தில் நிகழ்த்தி வெற்றி கண்டிருக்கிறார் இந்நூல் ஆசிரியர் என்றால் அது மிகையாகாது!
சாம்பவ விரதம், யோகப்பயிற்சி மூலம் மிக உயரத்திலிருந்து குதிக்கும் சக்தி, யாகம், முக்தி நிலை என்று ஆசிரியர் சொல்லும் பல கருத்துகள் நம்புவோருக்கு நாராயணன் என்ற போக்கில் இருந்தாலும், சில பழைய வரலாறுகளைப் புரட்டும் பொழுது, இவையெல்லாம் சாத்தியமாகியும் இருக்கக்கூடுமோ என்று எண்ணவும் தோன்றுகிறது.
வெள்ளையரை எதிர்த்துப் போர் புரிந்த தீரன் சின்னமலையின் (பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வாழ்ந்தவர்) வரலாற்றைக் கூறும் போது, முனைவர், புலவர் கல்வெட்டு ராசு அவர்கள் ஒரு சம்பவம் கூறுவார்கள். சின்னமலை சிவன்மலை முருகன் மீது எல்லையில்லாப் பக்தியுடையவன்.
ஒரு முறை காங்கய நாட்டினர் சிவன்மலைக்குப் பால் குடங்கள் எடுத்து வரும் சமயம் ஒரு ஏழைக் குடியானவன் பால்குடம் சுமந்து வந்து மலையேற முடியாமல் மலை அடிவாரத்திலேயே நின்றுவிட்டானாம். அதைக் கண்ணுற்ற சிவன்மலை ஆண்டவர் சின்னமலையிடம் அசரீரி வாக்கால், ‘பக்தா, என் உடம்பு பற்றி எரிகிறது. அந்த எரிச்சல் தணிய அதோ மலையடிவாரத்தில் என்மீது கொண்ட பக்தியால் பால்குடம் கொண்டுவந்த குடியானவன் மலையேற முடியாமல் அடிவாரத்தில் நிற்கின்றான். அவனிடமுள்ள பால்குடத்தை வாங்கி மலையடிவாரத்திலிருந்து உச்சிவரை நடந்து வந்து என்மீது அபிடேகம் செய்தால் என் உடம்பு குளிரும் என்றாராம். அவ்வாறே சின்னமலை பால்குடம் ஏந்தி வந்தார் என்ற செய்தி இன்றும் அப்பகுதி மக்களால் கூறப்படுகிறதாம்… ஆக, நம் பாரதநாட்டின் பெரும் பலமான, ஆன்மீகச் சக்தியே நம் நாட்டை பல இன்னல்களிலிருந்தும் காத்து வந்து கொண்டிருப்பதும் புரிகிறது.
திரு திவாகர் அவர்களின், எஸ்.எம்.எஸ். எம்டன் என்ற இப்புதினத்தில் அதற்கான சான்றுகள் பல உள்ளன. வரலாற்றுத் தகவல்களுக்குரிய சான்றுகளும், குறிப்புதவிகளையும் தெளிவாக இறுதிப் பகுதியில் அளித்துள்ளதும் வாசகருக்குப் பல வகையிலும் பயன் தரக்கூடியதாகும். ’சுக்கா, மிளகா….சும்மாவா வந்ததிந்த சுதந்திரம்’? என்று சத்தமாகப் பாட வேண்டும் போல் உள்ளது, எம்டன் குண்டுமழை பொழிந்த இந்நாளில்!
இப்புதினத்திற்கு மகுடம் சூட்டியுள்ள மற்றுமொரு இன்றியமையா அம்சம் எழுத்தாளர் திரு நரசய்யா அவர்களின் அழகான, அணிந்துரை.

எஸ்.எம்.எஸ். எம்டன்
நூலாசிரியர் – திரு .திவாகர்
வெளியிட்டோர் – பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம்
பக்கம் – 371
விலை – ரூ. 200.00
வாசகர்களின் பல்வேறு ஐயங்கள் குறித்த வினாக்களுக்கு ஆசிரியர் விடை பகறும் வலைப்பூவின் சுட்டி கீழே: http://vamsadhara.blogspot.com/2009_02_01_archive.html

Monday, September 19, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில்! (21)

அன்பு நண்பர்களே,

தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்தத் தொடரில் சில வாரங்களாக சிறு தடை ஏற்பட்டதற்கு வருந்துகிறேன். இனி தொடர்ந்து வரும். நன்றி.

கதை தொடர்கிறது…

தோட்டம் முழுவதும் வண்ண வண்ண மலர்கள்! ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு வித்தியாசமான மணம். குணமும் தான். சில மலர்கள் மூன்று நாட்கள் வரை வாடாமல் அப்படியே பசுமையாக இருக்கும். ஆனால் சில மலர்களோ மலர்ந்த சில மணித்துளிகளே பசுமை காக்கும். இது படைத்தவனின் பாகுபாடே அன்றி, தானே விரும்பி ஏற்றுக் கொண்ட வாழ்க்கை அல்லவே.

ரிஷி களைத்துப் போன தோற்றமும் சவரம் செய்யாத முகமும், அக்கறை இல்லாத உடையுமாக இப்படி ஆளே உருமாறி இருந்தான். மனைவி வந்தனாவின் உடல் நலிவு தன்னை ரொம்பவும் பாதித்திருப்பதை உணர்ந்தும் தன்னால் அதை வெளிக்காட்டக்கூட முடியாமல் போனது சங்கடமாக இருந்தது. காரணம் அந்த வருத்தம் தன் அன்பு மனைவியின் ரணத்தை அதிகப்படுத்துமே என்பதால் தான். ஒரு பொய் முகத்தை மாட்டிக் கொள்ளும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. வந்தனா மிகவும் இளகிய மனம் படைத்தவள் ஆயிற்றே……….சின்னச் சின்ன விசயங்களுக்கெல்லாம் சீரியசாக முகத்தை வைத்துக் கொண்ட காலங்கள் போய் இன்று சீரியசான விசயத்திற்கு புன்சிரிப்பாக பொய் முகமூடி அணியும் பக்குவம் வந்ததை நினைத்து ஆச்சரியமாகவும் இருந்தது அவனுக்கு!

பல முகங்கள் கொண்ட மனிதர்களிடையே இது போன்ற புன் சிரிப்பாய் சிரிக்கும் முகமூடி எவ்வளவோ தேவலை அல்லவா? குழந்தைத்தனமும், குறும்புத்தனமும் இருந்த பழைய ரிஷிக்கும், பொறுமையும், பொறுப்பும் நிறைந்த இன்றைய ரிஷிக்கும் எவ்வளவு மாற்றங்கள் என்று நினைத்துக் கொண்டான். தள்ளி நின்று தன்னைப் பார்க்கக் கற்றுக் கொண்ட இந்த நிலையே தன்னை அமைதியுடன் செயல்களைச் செய்யத் தூண்டுவதோடு, மனிதர்களையும், சூழ்நிலைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்ளவும் செய்கிறது. நேரம் போனது தெரியாமல் சிந்தையில் ஆழ்ந்து கிடந்தவனுக்கு, அன்பு மனைவி வந்தனாவின் நினைவு வந்தவுடன் அடுத்த நொடி,பரபரவென கிளம்பி மருத்துவமனைக்கு விரைந்தான்.

மருத்துவமனைச் சூழல் ஒரு மனிதனை எந்த அளவிற்கு புரட்டிப் போடுகிறது என்பதன் உச்சம்தான் புற்று நோய் மருத்துவமனைச் சூழல். நோயால் பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்திற்கு எள்ளளவும் குறைந்ததாக இருக்காது அவர்களின் நெருங்கிய உறவினரின் துன்பம். இந்த மருத்துவமனைக்கு வந்து தங்கியிருக்கும் இந்த சொற்ப நாட்களிலேயே பல சிந்தனைகளும், தெளிவும் ஏற்பட்டதும் மறுக்க இயலாத உண்மை. ‘ஒரு மனிதன் உண்மையான மனத்தெளிவு பெறக்கூடியதும் இது போன்ற சூழல்களில்தானோ’ என்ற எண்ணமும் தோன்றியது.

அன்று மருத்துவமனைக்கு நுழைந்தவுடன் ஏதோ ஒரு பரபரப்பு தெரிந்தது! அன்று ஞாயிற்றுக் கிழமையல்லவா? அன்னபூரணி அம்மாள் வருகின்ற நாள் அல்லவா, அதுதான் காரணமாக இருக்கலாம். அவர் வந்தாலே அமைதியான ஒரு சிறு பரபரப்பு தெரியும். அன்பான அந்த வார்த்தைகளும், கனிவான , ஆதரவான அந்த பார்வையும் பாதிக்கப்பட்ட இதயங்களுக்கு வெண்சாமரம் வீசி குளிரச்செய்யும். நல்ல மனிதர்களின் நல்லெண்ண அலைகள் பரவும் போது தீயவைகளின் சக்தி அடங்கிப் போகும் என்று எங்கோ ஏதோ காலட்சேபத்தில் கேட்டது திடீரென நினைவிற்கு வந்தது ரிஷிக்கு……

பல நாட்களாக அன்னபூரணியம்மாள் பற்றிய பேராச்சரியம் அவனுக்கு. ஞாயிற்றுக்கிழமை என்பதை அவர் வருவதை வைத்தே நினைவில் கொள்ள முடியும் என்பார் அங்கு பல ஆண்டுகளாக பணிபுரியும் வாட்சுமேன் சாந்தநாதன். அன்னபூரணியம்மாளின் சரிதம் கேட்டு மலைத்துப் போயிருந்தான் ரிஷி. செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த ஒரே செல்லப் பெண். அம்பிகையைப்போல் அழகாக, அமைதியான முகத்துடனே பிறந்த, தவமிருந்து பெற்ற குழந்தைக்கு அன்னபூரணி என்ற பெயரே பொருத்தம் என்று எண்ணி வைத்திருப்பார்களோ என்னவோ….

இந்த அழகு தேவதைக்கு மாப்பிள்ளை பார்க்கும் சிரமமே சற்றும் இல்லாமல், தூரத்து உறவினனான, தங்கள் மகளின் அழகிற்கும், அந்தஸ்திற்கும் சற்றும் குறைவில்லாத மிதிலன் ஏழு செருப்புகள் தேய நடையாய் நடந்து பெண் கேட்டு , எல்லாரும் முழு மனதுடன் சம்மதிக்க, ஊரே கலகலக்க நடந்த திருமணம். அதற்குப் பிறகு அது போன்றதொரு ஆடம்பர திருமணம் இன்றுவரை நடக்கவில்லை என்று சொல்லுமளவிற்கு யானை ஊர்வலத்துடன் ஊரே திரண்டு நடத்திய திருமணம். திருமணம் முடிந்து மகளை மகாலட்சுமியாக அனுப்பி வைத்த பெற்றோர், அடுத்த மூன்றாவது மாதம் தன் மகள் மூளியாக அப்படி வந்து நிற்பாள் என்று கனவிலும் நினைத்தவர்கள் இல்லை!

திருமணம் முடிந்து மூன்று நாட்களில் பால் சொம்புடனும், பல நூறு கற்பனைகளுடனும் அழகு தேவதையாக முதல் இரவு அறை நோக்கிச் சென்றவள். கணவனின் அன்பு அணைப்பின் சுகம் நாடி அருகில் சென்றவள், அவனின் சோர்ந்த முகமும், சிவந்த கண்களும் கண்டு, லேசான அதிர்ச்சியுடனும், கேள்விக்குறியுடனும் பார்க்க, அன்புக் கணவனும் பேராவலுடனும், பெருமிதத்துடனும் அழகு தேவதையான அன்பு மனைவியை மென்மையாக கையைப் பிடித்து அருகில் அமரச் செய்ய, கையில் இருந்த அந்த சூடும், அருகில் வீசும் அனலும் அதிர்ச்சியைத்தர, அடுத்த நொடி சற்றும் தயங்காமல், அவன் நெற்றியில் கை வைத்துப் பார்த்தவள் அந்த சூட்டையும், கண்களின் சிவப்பையும் வைத்து நல்ல காய்ச்சல் இருப்பதை உணர்ந்து கொண்டவள் , அடுத்த நொடி துள்ளி எழுந்து, வெட்கமெல்லாம் மறைந்து போக,

“ காய்ச்சல் அதிகமாக இருக்கும் போல் உள்ளதே?” என்றாள்.

“ம்ம்…..ஒன்றுமில்லை. திருமண அலைச்சலாக இருக்கும். கொஞ்சம் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும், நீ ஒன்றும் கவலைப்படாதே” என்று சொன்னாலும் அவனால் அதற்கு மேல் ஏதும் பேச முடியவில்லை. காய்ச்சல் வேகம் அதிகரித்ததோடு, குளிரும் சேர்ந்து கொண்டது.
அவனை அப்படியே படுக்க வைத்து கம்பளி எடுத்துப் போர்த்தி விட்டு, தலையைப் பிடித்து விட்டாள். அனாவசியமாக எல்லாரையும் தொல்லை செய்ய வேண்டாமே, அனைவரும் திருமண வேலையில் களைத்துப் போயிருந்தனர். எல்லாம் நல்லபடியாக முடிந்த திருப்தியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்களே. அவர்களை எழுப்பி சிரமம் கொடுக்கவும் மனமின்றி, தானும் அமைதியாக கட்டிலின் ஒரு ஓரமாக சுருண்டு படுத்துக் கொண்டாள்……….

அடுத்த நாள் விடியலில் எழுந்து வெளியே சென்ற போது, சிவந்த கண்களும், கலையாத வதனமும் அவளின் நிலையை தெளிவாக உணர்த்த, மாமியார் கேள்விக்குறியுடன் மருமகளின் முகம் பார்க்க, புரிந்து கொண்ட அன்னபூரணியும், மிதிலனுக்கு காய்ச்சல் இருப்பதையும், எடுத்துக் கூறினாள். குளிர் சற்று விட்டிருக்க, காய்ச்சல் மட்டும் இருப்பதாக அந்த சூடு உணர்த்தியது. மாமியாரும், ‘அலைச்சல் காரணமாக இருக்கும் சற்று ஓய்வெடுத்தால் சரியாகிவிடும். ஏற்கனவே இதுபோல இரண்டு மூன்று முறை வந்திருக்கிறது’ என்று சர்வ சாதாரணமாக சொன்னது மனதிற்கு ஆறுதலிப்பதாக இருந்தாலும், உள்ளுணர்வு ஏதோ விபரீதத்தை உணர்த்தியது. அதற்குத் தகுந்த மதிப்புக் கொடுக்கவும் எண்ணினாள். காலைப் பொழுது மலர்ந்தவுடன் முதல் வேலையாக மருத்துவமனைக்குச் செல்ல முடிவெடுத்தாள்.

அடுத்து நடந்த நிகழ்வுகள், கேட்பவர் மனது கல்லாக இருந்தாலும் கரையச் செய்யக் கூடியதாகும். ஆம்! கலகல்ப்பாக சிரித்துக் கொண்டு இருந்தாலும் மிதிலனின் முகத்தில் நோயின் கடுமை நன்றாகவே தெரிந்தது. மருத்துவமனைக்குச் சென்று வந்த போதும், அவர்கள் கொடுத்த மருந்துகள் காய்ச்சலை பூரணமாக குணப்படுத்த முடியாமல், அவ்வப்போது விட்டுவிட்டு வர தொடர்ந்து மருத்துவமனைக்கு நடக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டது. காய்ச்சலும் நீடித்துக் கொண்டே இருந்ததால் மருத்துவர்களுக்கும் ஐயம் ஏற்பட பிறகு பல விசேச சோதனைகள் செய்யப்பட முடிவில் அன்னபூரணியின் வாழ்க்கையையே புரட்டிப் போடக்கூடிய ஒரு பெரிய குண்டைத் தூக்கி வீசினர் மருத்துவர்கள்………..

படத்திற்கு நன்றி

படத்திற்கு நன்றி

Sunday, September 11, 2011

பாட்டுக்கொரு புலவன்!

பவள சங்கரி

பாட்டுக்கொரு புலவனவன் , புலமையின் முன் செல்லியும், சேக்ஸ்பியரும் எம்மாத்திரம் என எக்காலமும் வியக்க வைக்கும் நம் முண்டாசுக்கவி இன்று உடலால் மட்டுமே தமிழ் கூறும் நல்லுலகை விட்டு மறைந்த நாள்.  தம் தமிழ்க் கவிதையால் தேசபக்திக் கனலைச் சுடர்விட்டுப் பிரகாசிக்கச் செய்ததோடு, அரசியல், தத்துவம், ஆன்மீகம், சமூகம், காவியம் என அக்கவி நுழையாத துறையே இல்லை எனலாம். முற்போக்குச் சிந்தனைகளை ஊக்குவிக்கக் கூடிய படைப்புகளின் தலைவனவன்!  ஆங்கிலம், வடமொழி, பிரெஞ்சு போன்ற பல மொழிகளின் ஞானம் கொண்டு தமிழ் மொழியின் கவிதைகளுக்கு வல்லமை கூட்டினான் என்றால் அது மிகையாகாது.
1908 ஆம் ஆண்டு, இந்தியா இதழ் மூலம் ஆங்கிலேய ஆதிக்கத்தின் நடவடிக்கைகள் குறித்து எதிர்ப்புக் குரல் எழுப்பி, அது காரணம் கொண்டே, ஆங்கிலேய அரசு இவரை கைது செய்ய முனைய, பிரெஞ்சு அரசின் பொறுப்பில் இருந்த பாண்டிச்சேரிக்குத் தப்பிச் சென்ற கதாநாயகன் இவன்…..
தேசீய கீதங்கள் – பாரத நாடு – வெறிகொண்ட தாய்
ராகம் – ஆபோகி , தாளம் – ரூபகம்
1.     பேயவள் காண்எங்கள் அன்னை-
பெரும் பித்துடை யாள்எங்கள் அன்னை
காயழல் ஏந்தியபித்தன்-தனைக்
காதலிப் பாள்எங்கள் அன்னை.     (பேயவள்)
2.     இன்னிசை யாம்இன்பக் கடலில்-எழுந்து
எற்றும் அலைத்திரள் வெள்ளம்
தன்னிடம் மூழ்கித் திளைப்பாள்-அங்குத்
தாவிக் குதிப்பாள்எம் அன்னை.     (பேயவள்)
3.     தீஞ்சொற் கவிதையஞ் சோலை-தனில்
தெய்விக நன்மணம் வீசும்
தேஞ்சொரி மாமலர் சூடி-மதுத்
தேக்கி நடிப்பாள்எம் அன்னை.     (பேயவள்)
4.     வேதங்கள் பாடுவள் காணீர்-உண்மை
வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்
ஓதருஞ் சாத்திரம் கோடி-உணர்ந்
தோதி யுலகெங்கும் விதைப்பாள்.     (பேயவள்)
5.     பாரதப் போரெனில் எளிதோ?-விறற்
பார்த்தன்கை வில்லிடை ஒளிர்வாள்
மாரதர் கோடிவந் தாலும்-கணம்
மாய்த்துக் குருதியில் திளைப்பாள்.     (பேயவள்)


தேசீய கீதங்கள்சுதந்திரம்
27.சுதந்திரப் பயிர்
கண்ணிகள்
தண்ணீர்விட் டோவளர்த்தோம்? சர்வேசா!இப்யிரைக்
கண்ணீராற் காத்தோம்;கருகத் திருவுளமோ?     1
எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த
வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ?     2
ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்தபினர்
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?     3
தர்மமே வெல்லுமெனும் சான்றோர் சொல் பொய்யாமோ?
கர்ம விளைவுகள்யாம் கண்டதெலாம் போதாதோ?     4
மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்நது கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?     5
எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு
கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ?     6
மாதரையும் மக்களையும் வன்கண்மை
யாற்பிரிந்துகாத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ?     7
எந்தாய்!நீ தந்த இயற்பொருளெ லாமிழந்து
நொந்தார்க்கு நீயன்றி நோவழிப்பார் யாருளரோ?     8
இன்பச் சுதந்திரம் நின் இன்னருளாற் பெற்றதன்றோ?
அன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் காவாயோ?     9
வானமழை யில்லையென்றால் வாழ்வுண்டோ?
எந்தை சுயாதீனமெமக் கில்லை யென்றால் தீனரெது செய்வோமே?     10
நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய்
வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ?     11
பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்?
பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே 12
நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமை யாம்கேட்டால்
என்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவே?     13
இன்று புதிதாய் இரக்கின்றோமோ? முன்னோர்
அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ?     14
நீயும் அறமும் நிலைத்திருத்தல் மெய்யானால்,
ஓயுமுனர் எங்களுக்கிவ் ஓர்வரம்நீ நல்குதியே 15
_தம் ஞானப் பாடல்கள் மூலம் மக்கள் மனதில் பெரும் எழுச்சியை ஏற்படுத்திய மாகவி பாரதி!
ஞானப் பாடல்கள்
96. அன்பு செய்தல்
இந்தப் புவிதனில் வாழு மரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஔடத மூலிகை பூண்டுபுல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ?
வேறு
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்புகட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்கு மன்றோ?
யானெ தற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
என்மதத்தைக் கைக்கொண்மின்,பாடுபடல் வேண்டா;
ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!
78. அச்சமில்லை
பண்டாரப் பாட்டு
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
.பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
1905 ஆம் ஆண்டு வ.உ.சியுடன் தொடர்பு கொண்டு அரசியலில் தீவிரமாக நுழைந்து, காசியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பும் போது கல்கத்தா சகோதரி என்றழைக்கப்பெறும் விவேகானந்தரின் பெண் சீடரான நிவேதிதாவைச் சந்தித்து, அவர் கொள்கைகள்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அவரைத் தம் ஞான குருவாக ஏற்றுக் கொண்டார்.
_4. சான்றோர்
28. நிவேதிதா
அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர்
கோயிலாய் அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நா
டாம்பயிர்க்கு மழையாய்,இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
பெரும்பொருளாய்ப் புன்மைத் தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்
நிவேதிதையைத் தொழுது நிற்பேன்.
பாரதியின் தீஞ்சுவைக்கனியின் சுவையென, கண்ணன் பாடல்கள் அமைந்தது குறிப்பிடத்தக்கதாகும். கண்ணனைத் தம் தோழனாகவும், தாயாகவும், தந்தையாகவும், அரசனாகவும், சேவகனாகவும், சற்குருவாகவும்,சீடனாகவும், குழந்தையாகவும், காதலனாகவும் – பல கோணங்களில் ரசித்து, அன்பு சொரிந்து கவி புனைந்திருப்பது எக்காலத்தும் சுவைத்து மகிழக்கூடியதாகும்.
முப்பெரும் பாடல்கள்
கண்ணன் பாட்டு
15. கண்ணன்-என் காந்தன்
வராளி-திஸ்ர ஏக தாளம்
சிருங்கார ரசம்
கனிகள் கொண்டுதரும்-கண்ணன்
கற்கண்டு போலினிதாய்;
பனிசெய் சந்தனமும்-பின்னும்
பல்வகை அத்தர்களும்,
குனியும் வாண்முகத்தான்-கண்ணன்
குலவி நெற்றியிலே
இனிய பொட்டிடவே-வண்ணம்
இயன்ற சவ்வாதும்.

கொண்டை முடிப்பதற்கே-மணங்
கூடு தயிலங்களும்,
வண்டு விழியினுக்கே-கண்ணன்
மையுங் கொண்டுதரும்;
தண்டைப் பதங்களுக்கே-செம்மை
சார்த்துசெம் பஞ்சுதரும்;
பெண்டிர் தமக்கெல்லாம்-கண்ணன்
பேசருந் தெய்வமடி!
குங்குமங் கொண்டுவரும்-கண்ணன்
குழைத்து மார்பெழுத;
சங்கையி லாதபணம்-தந்தே
தழுவி மையல் செய்யும்;
பங்கமொன் றில்லாமல்-முகம்
பார்த்திருந் தாற்போதும்;
மங்கள மாகுமடீ!-பின்னோர்
வருத்த மில்லையடீ!
1. கண்ணன் பாட்டு
16. கண்ணம்மா-என் காதலி 
காட்சி வியப்பு
செஞ்சுருட்டி-ஏகதாளம்
ரசங்கள்:சிருங்காரம்,அற்புதம்
சுட்டும் விழிச்சுடர் தான்,-கண்ணம்மா!
சூரிய சந்திர ரோ?
வட்டக் கரிய விழி,-கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப்-புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில்-தெரியும்
நக்ஷத் திரங்க ளடி!
சோலை மல ரொளியோ-உனது
சுந்தரப் புன்னகை தான்?
நீலக் கட லலையே-உனது
நெஞ்சி லலைக ளடி!கோலக் குயி லோசை-உனது
குரலி னிமை யடீ!வாலைக் குமரி யடீ,-
கண்ணம்மா!மருவக் காதல் கொண்டேன்.
சாத்திரம் பேசு கிறாய்,-கண்ணம்மா!
சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே,-கண்ணம்மா!
சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்ம தியில்-வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோ டீ?-
இது பார்.கன்னத்து முத்த மொன்று!

மகாபாரதத்தின் நாயகி, பாஞ்சாலியின் சபதம் குறித்த பாரதியின் கவிதைகள் இரண்டு பாகங்களாக சுவைத்து அனுபவிக்கும் வண்ணம் புனையப்பட்ட கவிதைகளாகும்.
2. பாஞ்சாலி சபதம்
சபதச் சருக்கம்
65. திரௌபதி சொல்வது
‘சாலநன்கு கூறினீர்! ஐயா!
தருமநெறிபண்டோர் இராவணனும்
சீதைதன்னைப் பாதகத்தால
கொண்டோர் வனத்திடையே
வைத்துப்பின்,கூட்டமுறமந்திரிகள்
சாத்திரிமார் தம்மை வரவழைத்தே,
செந்திருவைப் பற்றிவந்த செய்தி
யுரைத்திடுங்கால்“தக்கது நீர் செய்தீர்;
தருமத்துக் கிச்செய்கைஒக்கும்”என்று,
கூறி உகந்தனராம் சாத்திரிமார்!
பேயரசு செய்தால்,பிணந்தின்னும் சாத்திரங்கள்!
மாய முணராத மன்னவனைச் சூதாடவற்புறுத்திக்
கேட்டதுதான் வஞ்சனையோ? நேர்மையோ?
முற்படவே சூழ்ந்து முடீத்ததொரு செய்கையன்றோ?
மண்டபம்நீர் கட்டியது மாநிலத்தைக் கொள்ளவன்றோ?
பெண்டிர் தமையுடையீர் பெண்க ளுடன்பிறந்தீர்!
பெண்பாவ மன்றோ? பெரியவசை கொள்வீரோ?
கண்பார்க்க வேண்டும்!’என்று கையெடுத்துக் கும்பிட்டாள்
அம்புபட்ட மான்போல் அழுது துடி துடித்தாள்.
வம்புமலர்க் கூந்தல் மண்மேற் புரண்டுவிழத்
தேவிகரைந்திடுதல் கண்டே,சில மொழிகள்
பாவிதுச் சாதனனும் பாங்கிழந்து கூறினான்,
வேறு
ஆடை குலைவுற்று நிற்கிறாள்;-அவள்
ஆவென் றழுது துடிக்கிறாள்-வெறும்
மாயட நகர்த்த துச்சாதனன்-அவள்
மைக்குழல் பற்றி யிழுக்கிறான்-இந்தப்
பீடையை நோக்கினன் வீமனும்-கரைமீறி
எழுந்தது வெஞ்சினம்;-
துய்கூடித் ததருமனை நோக்கியே,-
அவன்கூறிய வார்த்தைகள் கேட்டிரோ?

மனைவியின் பிறந்த ஊராகிய கடையத்தில் 1918 – 20 களில் அமைதியாக வாழ்க்கை நடத்திய க்வி, 1920ல் மீண்டும் சென்னையில் உள்ள சுதேசமித்திரனில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். 1919ல் சென்னையில் உள்ள திரு.சி.இராசகோபாலாச்சாரியின் இல்லத்தில் மகாத்மா காந்தியடிகளைச் சந்தித்தார். 1921. ஆகஸ்ட் மாதத்தில் திருவல்லிக்கேணி கோவில் யானை தன் துதிக்கையால் தள்ளிவிட, மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டாலும்,அந்த மாதமே, 12 ஆம் நாள் விடியற்காலை 1.30 மணியளவில் தமது 39 ஆவது வயதில் இயற்கை எய்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

எவ்வம் - கலீல் ஜிப்ரான்

நொந்த மனம் கொண்ட பேதையொருத்தி எவ்வம்’ பற்றி பகல்வீர் ஐயனே என  வேண்டினாள் !

பகன்றாரே பலவும் சிந்தையதுவும் விழித்தெழ:

உம் புரிதல்கள் அனைத்தும் உள்ளடக்கிய கூட்டை உடைத்தெறியும் உசாத்துணை உம் எவ்வமே அம்மணி!

கனிந்து நிற்கும் கனியாயினும் ஞாயிறொளியில் இதயத் தாமரை மலர ஓட்டை உடைத்தெறியும் எவ்வம் பொறுக்க வேண்டுமே!

 வாழ்வின் அன்றாட அற்புதங்களை வியப்புடனுறைந்து  உம் இதயக்கூட்டில் அணைக்குங்கால், உம் இன்பத்திற்கு இம்மியளவும் குறைவிலா அதிசயத்தையும் தோற்றுவிக்க வல்லதந்த எவ்வமன்றோ?

உம் வயல் வெளியில் கடந்து போகும் கால மாற்றங்களை ஏற்றுக் கொள்வது போன்றே உம் இதய வெளியின் மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ள இயலும் உம்மால்!

உம் துயரங்களின் நடுக்கங்களின் (குளிர்) ஊடே பொறுமையாக கவனம் கொண்டு நோக்கினால் உம்முடைய பெரும்பான்மையான துயரங்களுக்கான காரணமே உன் சுய - தேர்வு  மட்டுமேயன்றோ?

உம்முள் இருக்கும் வைத்தியன் அளிக்கும் மருந்து கசப்பானதாக இருப்பினும் அதுதானே உம் பிணியைப் போக்கும் உபாயம்?

ஆம், அந்த வைத்தியன் மீது நம்பிக்கை வை முழுமையாக! அத்தோடு அவனளிக்கும் கசப்பான தீர்வையும் சகித்துக் கொண்டு பொறுமையுடன் பருகி விடு!

அவன் கையில்  பலமும், உறுதியும் ஓங்கி இருப்பினும்,  மற்றொரு மாயக் கை ஒன்று மென்மையாக ஒரு மலர்பாதை விரிக்கும் உனக்கு!

அவன் அளித்த அக்கோப்பை உன் மென்மையான இதழைப் பதம் பார்த்தாலும்,

குயவனால் தம் புனிதமான கண்ணீரால் வார்க்கப்பட்டு அழகாக வடிவமைக்கப்பட்டதன்றோ அக்கோப்பை?


http://www.youtube.com/watch?v=AVx6H68Siww&feature=related



Friday, September 9, 2011

எழுத்தறிவித்தவன்......................


பவள சங்கரி
அன்புச் செல்லங்களே!
நலமா? இன்று ஆசிரியர் தினம் அல்லவா? எழுத்தறிவித்தவன் இறைவன் அல்லவா? அந்த இறைவனுக்கு நன்றி செலுத்தினீர்களா?
ஆசிரியர் தினம் ஏன் கொண்டாடுகிறோம்?
சிறந்த கல்வியாளராகவும், தத்துவமேதையாகவும் திகழ்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1962, மே 13ம் தேதி இந்தியாவின் இரண்டாவது இந்திய குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார் அவர் பொறுப்பேற்ற தருணத்தில், அவருடைய மாணவர்கள் சிலர் அவரிடம் சென்று அவருடைய பிறந்த நாளைக் கொண்டாட விருப்பம் தெரிவிக்க, அவர், தம் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால், தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகக் கூறவும், அன்றிலிருந்து  ஒவ்வொரு செப்டம்பர் மாதமும் ஐந்தாம் நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆசிரியப் பணிக்கு அவர் எத்தகைய மதிப்பளித்திருந்தார் என்பது இதிலிருந்து விளங்குகிறதல்லவா?
ஆசிரியப் பணியின் உன்னதம் பற்றி அறிவீர்களா நீவிர்? வாழ்க்கையில் ஒரு நல்ல குரு அமைவதென்பது பூர்வ புண்ணிய பலன் ஆகும். அரிஸ்டாடில் பற்றிக் கேள்விப்பட்டிருகிறீர்களா? யார் அவர்?
2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தத்துவஞானி, அறிவுஜீவி, சிந்தனையாளர், விஞ்ஞானி. அரிஸ்டாடில் விட்டு வைக்காத துறையே இல்லை என்று சொல்லுமளவிற்கு  விலங்கியல், தாவரவியல், பெளதீகம், அரசியல் , பொருளியல், கவிதை, தத்துவம் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மேதை.  அந்தத்  துறைகள் அதுவரைக் கண்டிராத புதிய கருத்துக்களையும் சித்தாந்தங்களையும் அறிமுகப்படுத்திய ஆசிரியர்! ஆம் அவருடைய மேதைமையைப் பார்த்து உளம் மகிழ்ந்த  மாஸ்டோனியா மன்னன் பிலிப்ஸ் தனது மகனுக்கு ஆசிரியராக வரும்படி அரிஸ்டாடிலுக்கு அழைப்பு விடுத்தார். அந்த மகன் யார் என்று அறிவீர்களா?
அவர் வேறு யாருமல்ல. கைப்பற்ற வேறு தேசம் இல்லையே என்று கலங்கிய மாவீரன் அலெக்ஸாண்டர் தான். 20 ஆண்டுகள் கிரேக்க தத்துவ ஞானி, பிளேட்டோவிடம் பயின்ற மாணவன் அரிஸ்டாடிலிடம் பயின்ற அலெக்ஸாண்டர், ஒரு முறை தம் சக மாணவர்களுடன், அரிஸ்டாடிலுடன், ஒரு ஆற்றைக் கடக்க முயன்ற வேளையில், வெள்ளம் சீற்றம் கொண்டு இருந்த ஆற்றில் முதலில் தான் இறங்கி நீந்திக் கடந்து திரும்பி வந்து பிறகு தன் குருவான அரிஸ்டாடிலை இறங்கச் சொன்னாராம். அப்போது குரு தன் மாணவனின் பக்தியைக் கண்டு வியந்து, ‘உனக்கு ஏதும் ஆகியிருந்தால் என்ன ஆவது?’ என்று கேட்டபோது, அலெக்ஸாண்டர் சற்றும் தயங்காது, ‘என்னைப் போன்று பல அலெக்ஸாண்டர்களைத் தங்களால் உருவாக்க முடியும். ஆகவே தாங்கள் உயிர் வாழ்வது முக்கியம்’ என்றாராம்! ஆகா, என்னே, குருபக்தி!
சரி என்னோட ஒரு ஆசிரியர் பற்றி ஒரு சுவையான சம்பவம்…..நான் அடிக்கடி நினைத்துக் கொள்கிற ஒரு மலரும் நினைவு! நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது, ஜெனிஃபர் என்று என்னோட ஆங்கில ஆசிரியர். அவர் ஆங்கிலப் பேச்சு மொழி கற்றுத் தருவதில் மிக வல்லவர். அவருடைய ஆங்கிலப் பேச்சிற்கு மிகப் பெரிய ரசிகை நான். ஒவ்வொரு நாளும் ஒரு சொல்லாடல் கற்றுக் கொடுத்து, மறுநாள் வகுப்பில் அதனை ஒவ்வொருவரும் பயன்படுத்திக் காட்ட வேண்டும் என்று விரும்புவார். நான் எப்படியும் ஏதோ ஒரு முறையில் அதை பயன்படுத்தி விடுவேன்.
அன்று  மார்க் ஷீட்டில் பெற்றோரின் கையெழுத்து வாங்கி வர இறுதி நாள். அந்த முறை என் அத்தையின் திருமண் சமயம் என்பதால், வீட்டில் நிறைய விருந்தாளிகள் இருந்ததால் பரீட்சை ஒழுங்காக எழுதாமல், மிகக் குறைந்த மதிப்பெண் வாங்கியிருந்தேன். அப்பாவிடம் கையெழுத்து வாங்கும் போது கண்டபடி திட்டுவார் என்று தெரியும். வீட்டில் இருந்த விருந்தாளிகள் முன்பு திட்டு வாங்க விரும்பாத நான், கையெழுத்து வாங்காமலே பள்ளி வந்துவிட்டேன். என் ஆங்கில ஆசிரியர்தான் வகுப்பு ஆசிரியர். அவ்ர் முதல் நாளே சொல்லி அனுப்பியிருந்தார். கையெழுத்து வாங்காமல் வருபவர்கள் வகுப்பின் வெளியே நிற்க வேண்டுமென்று.
முதல் நாள் அவர் சொல்லிக் கொடுத்த புதிய ஆங்கில வாக்கியம், “WOULD YOU MIND GIVING ME……….”
நானும் அதை பயன்படுத்திக் கொண்டு, அந்த ஆசிரியர் வகுப்பினுள் நுழையும் முன்பே வெளியே சென்று நின்று கொண்டேன்.அவர் உள்ளே வரும் போதே நான்,
“MAAM……WOULD YOU MIND SENDING ME INSIDE THE CLASS ROOM…….. I DIDN’T GET SIGNATURE IN THE PROGRESS REPORT, FROM MY FATHER. HE IS OUT OF STATION”  என்று பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்கவும், அவருக்குச் சிரிப்பு வந்து விட்டது. உடனே, சிரிப்பை அடக்கிக் கொண்டு சரி, உள்ளே வா…… என்று சொல்லி விட்டார்கள். பிறகு அடுத்த நாள் அப்பாவிடம் மோசமாக திட்டு வாங்கியது வேறு கதை………
நீங்களும் உங்கள் பள்ளி நிகழ்ச்சிகளையும், ஆசிரியர்கள் பற்றியும் பகிர்ந்து கொள்ளலாமே குட்டீஸ்…………
பெற்றோராக இருந்தாலும் சரி உங்களின் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள வாருங்களேன்……….


Friday, September 2, 2011

பசித்திரு! தனித்திரு! விழித்திரு!

இசையில் இனிமையும், இறைமையையும் ஒருங்கேக் கண்ட வள்ளல் பெருமான்!

இசை என்பது மனித வாழ்வில் உடன் பிறந்த ஒரு சங்கதியாகும். குழந்தை பிறந்தவுடன் முதன் முதல் கேட்கும் தாலாட்டுப் பாடலின் ஓசையே முதல் இசையாகும் அந்த ஆழ்ந்த இசை நம்மை இறை இன்பத்தை நோக்கிச் செலுத்தும் அன்றோ? அதற்கு நல்லதோர் சான்றாக நம் முன்னே நிற்கும் பெரியார்கள் தியாகராயரும், அருணகிரிநாதரும் மற்றும் வள்ளல் பெருமான் போன்றோரும் ஆவர்.

ஸ்ரீ தியாகராயரின் இசைக் கீர்த்தனைகளின் சக்தி நாம் அறிந்ததே. அவர்தம் கீர்த்தனைகளால் ஸ்ரீராமபிரானையே நம் கண் முன் நிறுத்துபவர். அடுத்து தம் இசையின் மூலம் இறைவனையே தாலாட்டும் வல்லமை பெற்ற அருணகிரியார்! அவர் பாடலை மனமுறுக பாட ஆரம்பித்தாலே அந்த முருகப் பெருமான் கண் முன்னே தோன்றியது போன்ற உணர்வையே ஏற்படுத்தக் கூடியதாகும்!

தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் …… தனதான
அற்றைக் கற்றைக் கொப்பித் தொப்பித் தத்தத் தத்தத் …… தருவோர்தாள்
அர்ச்சித் திச்சித் தக்கத் தக்கத் தொக்குத் திக்குக் …… குடில்பேணிச்
செற்றைப் புற்சொற் கற்றுக் கற்றுச் செத்துச் செத்துப் …… பிறவாதே
செப்பச் செப்பப் பச்சைப் பச்சைச் செச்சைச் செச்சைக் …… கழல்தாராய்
துற்றுப் பிற்புக் குற்றக் கொக்கைத் துட்கத் திட்கப் …… பொரும்வேலா
சுத்தப் பத்திச் சித்ரச் சொர்க்கச் சொர்க்கத் தத்தைக் …… கினியோனே
கற்றைப் பொற்றைப் பற்றக் குத்திக் கத்தக் கத்தக் …… களைவோனே
கற்புச் சத்திப் பொற்புச் சத்திக் கச்சிச் சொக்கப் …… பெருமாளே.

அன்புக் கடல் வள்ளல் பெருமானோ, இசையுடன், மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அன்பு நெறியையும் வகுத்தளித்தப் பாங்கு ஏழிசையினையும் உள்ளடக்கிய பக்திப்பரவச நிலையாகும்!

கீழ்காணும் பாடலின் மூலம் கந்தப்பெருமானை வள்ளலார், தனி மனித ஒழுக்க நெறியை வேண்டி இசைக்கும் பாங்கு இனிமை கூட்டுவதாகும்! இப்பாடலை இசைக்கும் போது மனித நேயமும் இறை பக்தியும் இயைந்து இன்பம் சேர்க்க வல்லதாகும்.

“ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்றஉத்தமர் தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்உறவு கலவாமை வேண்டும்

பெருமைபெறும் நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மைபேசாதிருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்பிடியா திருக்க வேண்டும்

மருவுபெண் ணாசையை மறக்கவேண்டும் உனைமறவா திருக்க வேண்டும்

மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும்நோயற்றவாழ்வில் நான் வாழவேண்டும்

தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்தலமோங்கு கந்தவேளே!

தண்முகத் துய்யமணி உன்முகச் சைவமணிசண்முகத் தெய்வ மணியே!”


பிற உயிர்களையும் தம் உயிர் போல் எண்ணும் கருணை உள்ளம் கொண்டவர் வள்ளலார்.அது மட்டுமன்றி ஓருயிர் உள்ள பயிர்களின் மீது கூட அன்பு செலுத்தி ,வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் தானும் வாடியதாகக் குறிப்பிடுவார்.

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்தம்உயிர்போல் எண்ணி உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்யாவர்அவர் உளந்தான்

சுத்தசித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்இடம்எனநான் தெரிந்தேன் அந்த

வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்சிந்தைமிக விழைந்த தாலோ!

இறையுணர்வுடன், மனித நேயமும் கூடிய இத்தகைய தாக்கம் வள்ளலார் தவிர மற்றும் வேறு ஆன்மீக ஞானிகளுக்கு இருந்ததா என்பது ஐயமே. “கல்லார்ர்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே”.“அப்பனே, எனக்கு அமுதனே ஆனந்தனே, அகம்நெக அள்ளூறு தேன் ஒப்பனே” போன்ற பாடல்களின் மூலம் மிக எளிமையான இசையின் மூலம் இறை இன்பம் பெறவழி வகுத்துள்ளப் பாங்கு போற்றுதற்குரியதாகும்.

சுத்த சன்மார்க்க சங்கத்தின் வாயிலாக ஐயன் வள்ளலார் உபதேசித்த மூன்று இன்றியமையா மந்திரங்களே, பசித்திரு! தனித்திரு!விழித்திரு! என்பதாகும்.
பசித்திரு என்பதற்கான பொருள், பசியுடன் இரு என்பது அல்ல. அளவிற்கு அதிகமான உணவை விடுத்து, தேவையான அளவு மட்டுமே உண்டு, அதாவது அரை வயிறு மட்டுமே உண்டால் போதுமானது என்கிறார். இதையேதான் தற்கால மருத்துவரும் சொல்கின்றனர். இதனை வள்ளல் பெருமானார்:
“நான் பசித்த போதெல்லாம் தான் பசித்ததாகி

நல்லுணவு கொடுத்தென்னைச் செல்வம் உறவளர்த்தே

ஊன் பசித்த இளைபொன்றும் தோன்றாத வகையை

ஒள்ளியதென் அமுதெனக்கிங் குவந்தளித்த ஒளியே!”

என்றருளுகிறார்.
தனித்திரு என்பது ‘சும்மா இரு’, என்ற பொருள் கொண்டதாகும். புற இன்பங்களில் மயங்கி பொழுதைக் கழிக்காமல் ‘தனித்திருப்பதன்’ மூலம் ஆன்ம பலம் பெறலாம் என்பதனை:
இன்று வருமோ நாளை வருமோஅன்றி

மற்றொன்று வருமோஅறியேன் எம் கோவே

துன்றுமல வெம்மாயை அற்றுவெளிக்கு

வெளிமிடத்துசும்மா இருக்கும் சுகம்”.

சும்மா இருப்பது என்பது எளிமையான காரியம் அல்ல. எந்த உலக விசயத்திலும் மனம் செலுத்தாமல் இருப்பது என்பது மிக சிரமமான காரியம் என்றாலும், தனித்திரு என்பது, இறைவனுடன் இணைந்து, தியானத்தில் இருப்பது என்பதாகும். புறப்பற்றிலிருந்து கிடைக்கக் கூடிய இந்த தனிமையைத்தான், “தனித்திரு” என்னும் தாரக மந்திரமாகக் கூறுகிறார்.இதன் மூலம் ஒருவர் பெறுகின்ற பேராற்றல் அளப்பரியதாகும்.

அடுத்து வருவது “விழித்திரு” என்பதாகும். தூங்குவதை முற்றும் துறக்க வேண்டுமென்பது இதன் பொருளல்ல. அளவாகத் தூங்கி, வளமான விழிப்பு நிலையில் மனதையும் , அறிவையும் செம்மையாக வைத்துக் கொள்ளல் என்பதாகும்………ஆன்மீக ஞானிகள் தூக்கத்தை அறவே ஒழித்த மகான்களாயினும் அவர்கள் நூறாண்டுக் காலங்கள் உயிர் வாழ்ந்துள்ளனர். ஆண்டவனின் பூரண அருளைப் பெறும் பொருட்டு, ஊன், உறக்கம் அனைத்தும் துறந்தவர்களாகவே இருந்துள்ளனர். வள்ள்ல் பெருமான் இதையே:

“தூங்குகநீ என்கிறாய் தூங்குவனோ எனதுதுரைவரும் ஓர்தருணத்தில்

தூக்கமுந்தான் வருமோஈங்கினிநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்என்னுடைத்

தூக்கமெலாம் நின்னுடையதாக்கிஏங்கலறப் புறத்தேபோய்த் தூங்குகநீ தோழிஎன்னிரு

கண்மணி அணையாரெனை அணைந்த உடனேஓங்குறவே நான் அவரைக் கலந்தவரும்

நானும்ஒன்றானபின்னர் உனை எழுப்புகின்றேன் உவந்தே!” என்கிறார்.

ஆக பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்கிற தாரக மந்திரங்கள், ஆன்மீக ஞானிகளுக்காக மட்டுமல்லாது, சாமான்ய மனிதருக்கும் நன்மையளிப்பதாகும். வள்ளலார் தோற்றுவித்த சன்மார்க்க இயக்கங்கள் மூலம் இன்றும் அவருடைய சன்மார்க்கத் தத்துவங்கள் பரவலாக போற்றப்படுகின்றன. இன்றும் வடலூரில் அன்னதானங்கள் வள்ளலார் சோதியில் ஐக்கியமான தினத்தன்று பெரிய அளவில் நடை பெறுகின்றன.
வள்ளலார் அண்மைக் காலத்தில் தோன்றியவராயினும், அவ்ர்தம் ஞானக்குரு திருவாதவூரர்,மாணிக்கவாசகர் ஆவார். அவர் மூலமாகவே ஆன்மீக ஞானத்தைப் பெற்றவர்.மாணிக்கவாசகரின் பாடல்களில் இருக்கும் எளிமையும், இனிமையும், இறைமையும் இவர் பாடல்களிலும் நிறைந்திருப்பதைக் காண முடிகிறது. திரு அருட்பாவில், ‘ஆளுடைய அடிகள்’ என்னும் பாடல் மூலம் இதனை நன்கு உணர முடியும்.

”தேசகத்தி லினிக்கின்ற தெள்ளமுதே – மாணிக்க

வாசகனே யானந்த வடிவான மாதவனே

மாசற்ற நீ திருவாய் மலர்ந்த தமிழ் மாமறையின்

ஆசகன்ற வனுபவந் தனுபவிக்க வருளுநீயே!”

“ வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை

நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே

தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ்சுவைகலந்தென்

ஊன்கலந்து வுயிர் கலந்து வுவட்டாம லினிப்பதுவே

வருமொழிசெய் மாணிக்கவாசகநின் வாசகத்தில்

ஒருமொழியே யென்னையுமென் நுடையனையு மொன்றுவித்துத்

தருமொழியா மென்னிலினிச் சாதகமேன் சஞ்சலமேன்

குருமொழியை விரும்பியியல் கூடுவதேன் உறுதியே

வாட்டமிலா மாணிக்கவாசகத்தின் வாசகத்தைக்

கேட்டபொழு தங்கீருந்த கீழ்பறவைச் சாதிகளும்

வேட்டமுறும் பொல்லா விலங்குகளு மெய்ஞ்ஞான

நாட்டமுறு மென்னிலிங்கு நானடைதல் வியப்பன்றே!”


ஐயன் மாணிக்கவாசகரின் வாக்கை சத்திய வாக்காகவும் அவரையே ஆன்மீகக் குருவாகவும் கொண்டு தம் பாடல்களை இயற்றி இம் மனித சமுதாயம் தழைத்தோங்கச் செய்த வள்ளல். தன் ஞானகுரு மாணிக்கவாசகர் பற்றிக் கூறும் போது, ஐந்தறிவு படைத்த வாயில்லா சீவன்கள் கூட மாணிக்கவாசகரின் தெயவ மொழி கேட்டால் மெய் மறந்து மெய்ஞ்ஞானத்தில் நாட்டமுறும் போது எனக்கு அந்த மெய்ஞ்ஞானம் சித்திப்பதில் என்ன வியப்பு இருக்கிறது என்பார். இதிலிருந்து அவர்தம் குருபக்தி நன்கு விளங்குகிறதன்றோ. மாணிக்கவாசகரின் திருவாசகமே தன் ஆத்ம ஞானப் பாதையின் வழிகாட்டி என்ற வள்ளலாரின் சத்திய நெறி நித்யமானதாகும்.

இததகைய ஆன்மீக ஞானம் பெற்ற வள்ளலாருக்கும் சோதனை ஏற்படாமல் இல்லை. ஆம் சோதனைகள் தானே மனிதரின் வாழ்க்கையை புடம் போட்ட தங்கமாக மின்னச் செய்கிறது.

வள்ளல் பெருமான் மனித வாழ்க்கையின் மேம்பாட்டிற்கு வழி வகுக்கும் வகையில் திரு அருட்பா, இயற்றி போதித்து வந்த வேளையில், பல சர்ச்சைகள் ஏற்பட்டது. ‘மருட்பா’ என்கிற அமைப்பில் ஓர் அணி திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். மருட்பா என்கிற போராட்டம் 1873 ஆம் ஆண்டு தொடங்கி 1907 ம் ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற்றது. இந்த எதிர்ப்பு வள்ளலாரின் இறுதிக் காலங்களில் கனன்று, தீம்பிழம்பாய் எரிந்து, ஐயன சோதி வடிவாக கரைந்த பின்பும் கங்காய் கனன்று கொண்டிருந்தது. பல அறிஞர்கள் இப்போராட்டத்தின் ஆரம்பத்தில் கலந்து கொண்டாலும், போகப் போக பகலவனைக் கண்ட பனித்துளியாய் உறுகிப் போயினர். அருட்பாவில் அமிழ்ந்து போயினர்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் அந்நிகழ்வைப் பற்றிக் கூறுகிறார். இலக்கிய உலகில் முன்பின் காணாத ஓர் வித்தியாசமான வழக்கு என்பார். வழக்கைத் தொடுத்தவரோ ‘தமிழ் செம்மல் – சைவப் பெரியார்’ என்றழைக்கப்பட்ட, வையகமே போற்றும், வாழ்வாங்கு வாழ்ந்த பெரியார், ஆறுமுக நாவலர் ஆவார். வழக்குக்கான அடிப்படை ஆறுமுக நாவலரின் உள்ளம், வள்ளல் இராமலிங்க அடிகளாரின் சன்மார்க்க நெறியை ஏற்றுக் கொள்ள இயலாமையே காரணமாகும்.மஞ்சக் குப்பம் நீதி மன்றத்தில் நடந்த வழக்கைக் காண மக்கள் வெள்ளமாகத் திரண்டிருந்தனர்.

ஆறுமுக நாவலர் வழக்கறிஞர் வைத்து வாதாட, இராமலிங்க அடிகளாரோ, அன்பே கடவுள் என்றுணர்ந்த தன்மையால், வழக்கறிஞர் மூலம் எவர் மனதையும் புண்படச் செய்ய விரும்பாமல் ஆன்ம ஞானமே துணையாகக் கொண்டு தானே வழக்காட எண்ணி நீதி மன்றம் வந்த வேளை, தெய்வீக ஒளி வீசும், வெண்ணிற ஆடை கொண்டு மெய்யுணர்வுடன் தேவனைப் போன்று வந்து நின்ற அடிகளாரைக் கண்ட மனிதர் அனைவரும் எழுந்து நின்று கைகூப்ப, நீதிபதியும் தன்னிலை மறந்து எழுந்து கைகூப்பி நிற்க, வழக்கு தொடுத்த ஆறுமுக நாவலரும் எழுந்து நின்று இரு கரம் கூப்பித் தொழுதாராம்!
வழக்கு ஆரம்பித்த பொழுது, நீதிபதி, ஆறுமுக நாவலர் எழுந்து நின்று இரு கரம் கூப்பி வணங்கியதன் காரணம் கேட்க, அதற்கு ஆறுமுகனாரும், ”தாங்களே எழுந்து நின்று கைகூப்பி வணங்கியது கண்டு நானும் அனிச்சையாக நின்று வணங்கி விட்டேன்” என்றாராம்.

“ உங்களுடைய அனிச்சை செயலே இராமலிங்கனாரின், அருட்செயலை எமக்குத் தெளிவாக உணர்த்துகிறதே” என்று நீதிபதி கூறியதும் மன்றமே மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய, வழக்கு நிறைவடைந்தது……….சைவப் பெரியாரான ஆறுமுக நாவலர் திருமறைக்குட்பட்டது அல்ல ‘திரு அருட்பா’ என்ற உணர்வு கொண்டவராக இருந்தது மட்டுமே இவ்வழக்கிற்கான காரணமாக இருந்தது.

ஆனால் இன்று மருட்பா என்ற பொய்மை மறைந்து, அருட்பா என்ற மெய்ம்மை ஒளிவிட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. வள்ளலார் காட்டிய வழி, அன்பும், கருணையும் இணைந்த ஆன்மீக நெறி என்பதை உணர்ந்து அம்மெய்வழி நடந்தவர் அனைவரும் வாழ்வில் சிறப்புற்று, அமைதியும், வெற்றியும் பெற்று வாழ்வதையும் காண முடிகிறது. நம்மிடமுள்ள அஞ்ஞானமாகிய ஆணவம், கன்மம், மாயைகளாகிய திரைகள் நீங்கப் பெற்றால் அருட்பெரும் சோதியை தரிசிக்கலாம்!

அருட்பெருஞ் சோதி, அருட் பெருஞ் சோதி

தனிப்பெருங் கருணை அருட் பெருஞ் சோதி







Friday, August 12, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில் (20)




பவள சங்கரி

பொதுவாக பெரும்பாலான பெண்கள், தங்கள் சூழ் நிலையைக் கருத்தில் கொண்டு உள்ளத்தில் எண்ணுவதையெல்லாம் குறிப்பாக தனக்கு ஏற்படும் பிரச்சனைகளைக் கூட வெளிப்படையாகச் சொல்லத் தயங்குவது இயற்கை.அதுவே பல நேரங்களில் அப் பிரச்சனையை உருவாக்குபவர்களுக்கு சாதகமாகிப் போவதும் உண்டு. அவர்களுடைய முகத்திரை கிழிக்கப் படாமல் காக்கப் பட்டும் விடுகிறது. 21ம் நூற்றாண்டில் எண்ணற்ற சாதனைகள் பல புரிந்து கொண்டிருந்தாலும், அடிப்படையில் உள்ள அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற அந்த நால்வகை குணமும் அவளுக்குள் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்பட்டு காட்டிக் கொடுத்து விடுவதும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. சக மனிதர்களின் பொய் முகங்களைக் கண்டு ஏமாற்றம் கொள்வதோடு அதனால் மனதளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொள்வதோடு தன்னைச் சார்ந்தவர்களுக்கும் சங்கடங்களை ஏற்படுத்துவதும் இயல்பாகிப் போகிறது. அறிவுப் பூர்வமாக எதிர்த்து நிற்கத் துணிந்த பேதைகள் கூட சில நேரங்களில் உணர்வுப் பூர்வமான தாக்குதலில் துவண்டு போய் எளிதாக தோற்றும் விடுகிறார்கள் என்பதும் நிதர்சனம். இந்தப் போக்கு மாறுவதற்கு இன்னுமொரு நூற்றாண்டு ஆகும் போலும்.!

அனுவின் அத்தை அகிலாவிற்கு இதே பிரச்சனைதான். பணி என்று வந்து விட்டால் நேரம் காலம் இல்லாமல் தன் எல்லையைத் தொடும் வரை தன்னிலை மறந்து உழைப்பவள். பாவம் அந்த உழைப்பே அகிலாவிற்கு பல எதிர்ப்புகளை சம்பாதித்து வைத்து விட்டது. பணியில் அவளை போட்டி போட்டு வெல்ல முடியாத கோழைகள் மறை முகமாக உணர்வுப் பூர்வமாக தாக்க முற்பட்டதன் விளைவே இன்று அகிலாவின் உயிர்ப் போராட்டத்தின் எல்லை வரை கொண்டு வந்து விட்டிருக்கிறது. கணவனும், மாமியாரும் உறவினர் வீட்டு விசேசத்திற்கு வெளியூர் சென்றிருக்கும் வேளையில் இப்படி ஒரு தற்கொலை முயற்சி எடுக்கும் அளவிற்கு செல்லத் தூண்டியிருக்கிறது.

அனு, அகிலா அத்தையை எப்போதும் ஒரு நல்ல தோழியாகவே எண்ணி அவளிடம் தன் கல்லூரி கலாட்டாவிலிருந்து, தனக்கு வரும் காதல் கடிதங்கள் வரை அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் வழக்கம் கொண்டிருந்தாள். ஞாயிற்றுக் கிழமை என்றாலே தன் அண்ணனின் வீட்டிற்கு செல்வதற்கும் அனுவைச் சந்திக்கப் போகும் உற்சாகத்திலும் பரபரப்பாகி விடுவாள் அகிலா. ஆனால் ஒரு சில வாரங்களாக சரியாக அண்ணன் வீட்டிற்குக் கூட வரவில்லை. பல காரணங்கள் சொல்லி மழுப்பி விட்டாள். அனுவும் மாமாவின் உடல் நிலை கருதி அங்கு அடிக்கடி செல்ல வேண்டிய தேவை ஏற்படவும் அகிலா அத்தையைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் விட்டிருக்கிறாள்.

பழமை மற்றும் நாகரீகத்திற்கும் இடையே இருக்கும் அந்த மெல்லிய கோடு படுத்தும் பாடுதான் இது போன்ற சம்பவங்கள். இரண்டையும் கட்டிக் கொண்டு அழும், முன்னேறத் துடிக்கும் ஒவ்வொரு பெண்ணின் இன்றைய நிலையாகவே இது இருக்கிறது. மனம் விட்டு வெளியில் பேசக் கூடத் தயங்கும் சூழ்நிலை ஏற்படுத்தி விடுகிறது. . இந்த போக்கு மாறிக் கொண்டிருக்கிற கால கட்டம் என்றாலும், பணிக்குச் சென்று, தன் நேர்மையான உழைப்பின் மூலம் முன்னேறத் துடிக்கும் பல பெண்களின் வாழ்வில் கூட இப்படி சில சம்பவங்கள் நடந்து கொண்டுதானிருக்கிறது. சட்டம் மூலம் எத்தனை தான் பாதுகாப்பு கொடுத்தாலும் பெண்களாகப் பார்த்து துணிச்சலையும், அத்தகைய புல்லுறுவிகளை எதிர்த்துப் போராடும் தைரியத்தையும் வளர்த்துக் கொள்வது மட்டுமே இதற்கான சரியான தீர்வாக இருக்க முடியும் என்று பல முறை அனுவும், அகிலாவும் வாதிட்டிருக்கிறார்கள். இருந்தும் அகிலாவால், பிரச்சனை என்று வந்திருக்கும் வேளையில் எதிர் கொள்ள முடியாமல் தவித்து கோழைத்தனமான முடிவு எடுக்கும்படி ஆனது வருத்தத்திற்குரிய விசயமகும்

அனு மெதுவாக தன் தந்தையின் அருகில் சென்று அமர்ந்து அவர் கைகளை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டு, ஆதரவாக அவர் முகத்தை உற்று நோக்கியவள், அவருடைய சோகமான முகத்தைப் பார்த்து மேலும் சங்கடம் அதிகமாக,

“ அப்பா, கவலைப் படாதீர்கள். அத்தை கட்டாயம் நல்லபடியாக குணம் அடைந்து வந்து விடுவார்” என்றாள்.

ஆனாலும் அகிலா ஏன் இப்படி செய்தாள், அவளுக்கு என்னதான் அப்படி ஒரு பிரச்சனை என்று அவர் பெரும் குழப்பத்தில் இருப்பது தெரிந்தாலும் மருத்துவரை எதிர்பார்த்து அவர் என்னதான் சொல்லப் போகிறார் என்று பரபரப்பாக உட்கார்ந்திருந்தார்..

சற்று நேரத்தில் மருத்துவர் வந்து அகிலா அபாயக் கட்டத்தை தாண்டி விட்டதாகக் கூறிய பின்பு தான் அண்ணனின் முகத்தில் ஒளியே வந்தது……மூச்சை பலமாக இழுத்து ஆழ்ந்த நீண்ட பெரு மூச்சாக வெளி விட்டு, ஓரளவிற்கு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவர், அன்புத் தங்கையைக் காண அருகில் சென்று ஒரு தாயாய் தலையை வருடிக் கொடுத்தார். ஏனோ முதன் முறையாக தன்னுடைய வளர்ப்பில் ஏதும் குறைபாடு இருக்குமோ என்ற வருத்தம் தோன்ற ஆரம்பித்தது. பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக , தைரியம், நம்பிக்கை அனைத்தையும் ஊட்டியே வளர்த்தார் தன் தங்கையையும், மகளையும் இரு கண்களாக.

ஒரு பெண் உயர் பதவிக்கோ, அல்லது இரவு பகலாக உழைத்து உத்தம நிலைக்கு வந்தாலும் ஊர் அதை ஒப்புக் கொள்வதில்லை. இது இன்று நேற்று அல்ல, பல்லாண்டுக் காலங்களாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. 1900 ங்களிலேயே, மேரி கியூரி அம்மையார் இரவு பகலாக உழைத்து, புற்று நோய் சிகிச்சைக்குப் பயன்படும் , ரேடியம் வெளிப்படுத்தும் காமா கதிர்கள் பற்றிய அரிய கண்டு பிடிப்புக்காக நோபல் பரிசு பெற்ற போது கூட ஊர் மக்கள், அவர் கணவர் சொல்லிக் கொடுத்து தான், இவர் நோபல் பரிசு வாங்கினார் என்று சொன்னார்களாம். இருந்தும் மறுபடியும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு பொலேனியம், ரேடியம் என்ற கதிர் இயக்கம் கொண்ட இரண்டு புதிய பொருட்களை க்ண்டுபிடித்து திரும்பவும் இரண்டாவது முறையாக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்று தன்னை நிரூபித்தார். இந்த சம்பவத்தை அண்ணன் பல முறை சொல்லக் கேட்டவள். இருப்பினும் தேவையான நேரத்தில் அது கை கொடுக்காமல் போனது வேதனைக்குரிய விசயமானாலும், ஆண்டவன் அருளால் மறு பிறவி எடுத்து வந்தது ஆறுதலாக இருந்தது. அனு போல யதார்த்தமாகவும், தெளிவான முடிவெடுக்கக் கூடிய துணிச்சலான குணமும் சற்று குறைவு தான் அகிலாவிடம்.அதனாலேயே, இப்படி ஒரு கோழைத்தனமான முடிவு எடுக்கச் செய்தது அவளை.

கல்லும், முள்ளும் நிறைந்த கரடு முடனான வாழ்க்கைப் பாதையில் பாதம் நோகாமல், மெல்லடி வைத்து கடக்கத் தெரிந்தாலே பரந்த வான் வெளியில் வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்க முடியும். அதைத் தக்க வைத்துக் கொள்ளும் திறனும் கை வந்த கலையானால், பின் எந்தவொரு தடைக் கல்லையும் எளிதாக நெட்டித் தள்ளும் பக்குவமும் தானே வந்து விடுமே…… இதை பால பாடமாகவே ஊட்டி வளர்த்தும் தங்கை இப்படி ஒரு காரியம் செய்து விட்டாளே என்ற அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாமல் தான் இருந்தார் அந்த அன்பு அண்ணன். அனு மட்டும் அத்தை நலமானால் போதும், எப்படியும் அவர் மனதை தன்னால் தேற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் தெளிவாக இருந்தாள். மடியில் கனம் இல்லாத வரையில் வழியில் பயம் இலையே!

ரம்யா ஊருக்குக் கிளம்ப தயாராக வேண்டிய தருணம் வந்ததால், அவள் தன்னுடைய பணிகளுக்கிடையேயும் அவந்திகாவின் ஓவியக் கண்காட்சி பங்கேற்பு குறித்த வேலைகளில் தன்னால் முடிந்த வரை உதவிக் கொண்டிருந்தாள். அவ்வப்போது மாறன் உடன் வந்து கலந்து கொண்டாலும், ஏனோ அவன் முகத்தில் இருந்த இருக்கம் அவந்திகாவிற்கு லேசான உறுத்தலை ஏற்படுத்தியது.இது பற்றி ரம்யாவிடம் பேச எண்ணினாலும் ஏதோ தயக்கம் தன்னை தடுப்பதையும் உணர முடிந்தது அவளால். ஓவியக் கண்காட்சி பங்கேற்பின் பணிகள் அழுத்தத்தினால் மேற் கொண்டு சிந்திக்க நேரமின்றி தள்ளிப் போட்டு வைத்தாள்.

அவந்திகாவின் ஓவியங்களின் ஒவ்வொரு அங்கமும், சிந்திக்கக் கூடிய வகையில் அமைந்திருந்தது ரம்யாவிற்கும், மாறனுக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தியது. எத்துனை திறமைகள் என்று மலைப்பாக இருந்தது. சங்க கால கோவலன் நாயகி கண்ணகியின் பாண்டிய மன்னனின் சபையின் வீராவேசக் கோலத்தின் வண்ண ஓவியம் முதல் தற்கால அமைதியின் மறு உருவான அன்னை தெரசா வரை உயிருள்ள ஓவியங்கள் அவள் கை வண்ணத்தை பிரதிபலித்தது. அது மட்டுமன்றி நற் சிந்தைகளை ஊக்கு விக்கக் கூடியதும், குழந்தை தொழிலாளர்கள் போன்ற ஒழிக்கப்பட வேண்டிய அவலங்கள் குறித்த ஓவியங்கள் மற்றும் நம் இந்திய மக்களின் வாழ்க்கையின் அடித் தளமான கூட்டுக் குடும்பப் பிணைப்பு இப்படி பல கோணங்களிலான ஓவியங்கள் பல்லோரைக் கவர்ந்தது. அவந்திகாவிற்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டு மழை குவியத் துவங்கிய போதும், மாறனிடமிருந்து பெரிதாக பாராட்டு ஏதுமில்லா விட்டாலும், குறைந்த பட்சம் ஒரு சிறிய புன்னகையாவது இருந்திருக்கலாமோ என்று தோன்றியது அவந்திகாவிற்கு. ஒரு வேளை பெண்களை மதிக்கத் தெரியாத அகம்பாவம் பிடித்தவனாக இருப்பவனோ அல்லது தான் என்ற அகந்தை கொண்டவனாக இருப்பவனோ என்று சிந்திக்க ஆரம்பித்தாள்.

ஓவியக் கண்காட்சி நிறைவுற்று , வீடு நோக்கிய சிற்றுந்து பயணம் போதும் மாறனின் இறுகிய முகம் ரம்யாவிற்கும் சற்று உறுத்தலாக இருந்தாலும் , எங்கே தான் அவந்திகாவிடம் நெருக்கமாக பேச வேண்டி வந்துவிடுமோ என்ற அச்சம் அவனுடைய போக்கில் தெரிந்ததால் அதைக் கலைக்க மனமற்றவளாக அமைதி காத்தாள். சென்னைக்குச் சென்று கொஞ்சம் கொஞ்சமாக மாறனின் தந்தையுடன் பேச்சுக் கொடுத்து புரிய வைக்க முயற்சி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்திருந்ததால் மேற் கொண்டு ஏதும் அது பற்றி பேசாமல் விட்டு விட்டாள். ஆனால் அவந்திகா மட்டும் யோசிக்க ஆரம்பித்திருந்தாள்………

ரிஷி அன்பு மனைவியின் உடல் நலக் கோளாறு காரணமாக , கண்ணைத் திறக்க முடியாத அளவிற்கு கடுமையான காய்ச்சலில் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவளை கவனிக்கும் பொருட்டு விடிய விடிய உறங்க முடியாமல் கண் விழித்திருந்தவன், அசதியால் கண் அயர்ந்து விட, சுள்ளென்று சூரிய ஒளி முகத்தில் பட, வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து, மனைவியின் அருகே செல்லும் போதே, அவள் காய்ச்சல் சற்றும் குறையாமல் அனத்திக் கொண்டிருப்பது தெரிந்தது. உள்ளுக்குள் இருந்த மருந்தின் வேகம் குறைய ஆரம்பித்தவுடன் காய்ச்சலின் வேகம் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. இனியும் பொறுத்து பலனில்லை என்பதால் அவளை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லத் தயாரானான்.

வீட்டின் அருகில் இருக்கும் ஒரு பல் துறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவன், அங்கு எடுக்கப்பட்ட பல் வேறு சோதனைகளைக் கண்டு மிரண்டு போனான். மருத்துவர் ஏதோ பெரிய பெயராகச் சொல்லப் போகிறார் என்பது மட்டும் தெரிந்தது. அவன் எதிர்பார்த்தபடியே, ரிஷியின் மனைவிக்கு ஏற்கனவே இருந்து, சரியாகி விட்டது என்று பாசாங்கு காட்டி ஒளிந்து கொண்டிருந்த புற்று நோய்க் கிருமிகள் மீண்டும் தலை காட்ட ஆரம்பித்ததன் விளைவுதான் இந்த கடுமையான காய்ச்சல் என்று மருத்துவர் கூறிய செய்தி அவன் மார்பில் ஈட்டியாகப் பாய்ந்தது. உடனடியாக புற்று நோய் மருத்துவ மனையில் சேர்க்க வேண்டும் என்றும் மருத்துவரின் ஆலோசனைப்படி அரண்டு போய் ஆக வேண்டியதைப் பார்க்கக் கிளம்பினான் ரிஷி……………

தொடரும்.



படங்களுக்கு நன்றி

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...