“ ஏதோ மனிதராக இந்த புவனியில் பிறப்பு எடுத்தோம்…. இது ஒரு அற்புத பிறவி. அதனால் வாழும் வரை நல்லதைச் சிறப்பாகச் செய்துவிட்டு இறந்து போனால் சொர்க்கம் கிடைக்கும்…” கதையின் நாயகன் சிதம்பரம் இதே எண்ணத்தில் புதினம் முழுவதும் வலம் வந்து அரிய சாதனைகள் பல புரியும் வல்லமை பெற்றவனாகவும் , சிதம்பர ரகசியம் காப்பவனாகவுமே இறுதி வரை சித்தரிக்கப்பட்டுள்ளது கதையின் போக்கிற்கு மேலும் சுவை கூட்டுவதாகவே உள்ளது.
Friday, September 23, 2011
எஸ்.எம்.எஸ்.எம்டன் 22-09-1914
“ ஏதோ மனிதராக இந்த புவனியில் பிறப்பு எடுத்தோம்…. இது ஒரு அற்புத பிறவி. அதனால் வாழும் வரை நல்லதைச் சிறப்பாகச் செய்துவிட்டு இறந்து போனால் சொர்க்கம் கிடைக்கும்…” கதையின் நாயகன் சிதம்பரம் இதே எண்ணத்தில் புதினம் முழுவதும் வலம் வந்து அரிய சாதனைகள் பல புரியும் வல்லமை பெற்றவனாகவும் , சிதம்பர ரகசியம் காப்பவனாகவுமே இறுதி வரை சித்தரிக்கப்பட்டுள்ளது கதையின் போக்கிற்கு மேலும் சுவை கூட்டுவதாகவே உள்ளது.
Monday, September 19, 2011
வெண்ணிலவில் ஒரு கருமுகில்! (21)
அன்பு நண்பர்களே,
தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்தத் தொடரில் சில வாரங்களாக சிறு தடை ஏற்பட்டதற்கு வருந்துகிறேன். இனி தொடர்ந்து வரும். நன்றி.
கதை தொடர்கிறது…
தோட்டம் முழுவதும் வண்ண வண்ண மலர்கள்! ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு வித்தியாசமான மணம். குணமும் தான். சில மலர்கள் மூன்று நாட்கள் வரை வாடாமல் அப்படியே பசுமையாக இருக்கும். ஆனால் சில மலர்களோ மலர்ந்த சில மணித்துளிகளே பசுமை காக்கும். இது படைத்தவனின் பாகுபாடே அன்றி, தானே விரும்பி ஏற்றுக் கொண்ட வாழ்க்கை அல்லவே.
ரிஷி களைத்துப் போன தோற்றமும் சவரம் செய்யாத முகமும், அக்கறை இல்லாத உடையுமாக இப்படி ஆளே உருமாறி இருந்தான். மனைவி வந்தனாவின் உடல் நலிவு தன்னை ரொம்பவும் பாதித்திருப்பதை உணர்ந்தும் தன்னால் அதை வெளிக்காட்டக்கூட முடியாமல் போனது சங்கடமாக இருந்தது. காரணம் அந்த வருத்தம் தன் அன்பு மனைவியின் ரணத்தை அதிகப்படுத்துமே என்பதால் தான். ஒரு பொய் முகத்தை மாட்டிக் கொள்ளும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. வந்தனா மிகவும் இளகிய மனம் படைத்தவள் ஆயிற்றே……….சின்னச் சின்ன விசயங்களுக்கெல்லாம் சீரியசாக முகத்தை வைத்துக் கொண்ட காலங்கள் போய் இன்று சீரியசான விசயத்திற்கு புன்சிரிப்பாக பொய் முகமூடி அணியும் பக்குவம் வந்ததை நினைத்து ஆச்சரியமாகவும் இருந்தது அவனுக்கு!
பல முகங்கள் கொண்ட மனிதர்களிடையே இது போன்ற புன் சிரிப்பாய் சிரிக்கும் முகமூடி எவ்வளவோ தேவலை அல்லவா? குழந்தைத்தனமும், குறும்புத்தனமும் இருந்த பழைய ரிஷிக்கும், பொறுமையும், பொறுப்பும் நிறைந்த இன்றைய ரிஷிக்கும் எவ்வளவு மாற்றங்கள் என்று நினைத்துக் கொண்டான். தள்ளி நின்று தன்னைப் பார்க்கக் கற்றுக் கொண்ட இந்த நிலையே தன்னை அமைதியுடன் செயல்களைச் செய்யத் தூண்டுவதோடு, மனிதர்களையும், சூழ்நிலைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்ளவும் செய்கிறது. நேரம் போனது தெரியாமல் சிந்தையில் ஆழ்ந்து கிடந்தவனுக்கு, அன்பு மனைவி வந்தனாவின் நினைவு வந்தவுடன் அடுத்த நொடி,பரபரவென கிளம்பி மருத்துவமனைக்கு விரைந்தான்.
மருத்துவமனைச் சூழல் ஒரு மனிதனை எந்த அளவிற்கு புரட்டிப் போடுகிறது என்பதன் உச்சம்தான் புற்று நோய் மருத்துவமனைச் சூழல். நோயால் பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்திற்கு எள்ளளவும் குறைந்ததாக இருக்காது அவர்களின் நெருங்கிய உறவினரின் துன்பம். இந்த மருத்துவமனைக்கு வந்து தங்கியிருக்கும் இந்த சொற்ப நாட்களிலேயே பல சிந்தனைகளும், தெளிவும் ஏற்பட்டதும் மறுக்க இயலாத உண்மை. ‘ஒரு மனிதன் உண்மையான மனத்தெளிவு பெறக்கூடியதும் இது போன்ற சூழல்களில்தானோ’ என்ற எண்ணமும் தோன்றியது.
அன்று மருத்துவமனைக்கு நுழைந்தவுடன் ஏதோ ஒரு பரபரப்பு தெரிந்தது! அன்று ஞாயிற்றுக் கிழமையல்லவா? அன்னபூரணி அம்மாள் வருகின்ற நாள் அல்லவா, அதுதான் காரணமாக இருக்கலாம். அவர் வந்தாலே அமைதியான ஒரு சிறு பரபரப்பு தெரியும். அன்பான அந்த வார்த்தைகளும், கனிவான , ஆதரவான அந்த பார்வையும் பாதிக்கப்பட்ட இதயங்களுக்கு வெண்சாமரம் வீசி குளிரச்செய்யும். நல்ல மனிதர்களின் நல்லெண்ண அலைகள் பரவும் போது தீயவைகளின் சக்தி அடங்கிப் போகும் என்று எங்கோ ஏதோ காலட்சேபத்தில் கேட்டது திடீரென நினைவிற்கு வந்தது ரிஷிக்கு……
பல நாட்களாக அன்னபூரணியம்மாள் பற்றிய பேராச்சரியம் அவனுக்கு. ஞாயிற்றுக்கிழமை என்பதை அவர் வருவதை வைத்தே நினைவில் கொள்ள முடியும் என்பார் அங்கு பல ஆண்டுகளாக பணிபுரியும் வாட்சுமேன் சாந்தநாதன். அன்னபூரணியம்மாளின் சரிதம் கேட்டு மலைத்துப் போயிருந்தான் ரிஷி. செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த ஒரே செல்லப் பெண். அம்பிகையைப்போல் அழகாக, அமைதியான முகத்துடனே பிறந்த, தவமிருந்து பெற்ற குழந்தைக்கு அன்னபூரணி என்ற பெயரே பொருத்தம் என்று எண்ணி வைத்திருப்பார்களோ என்னவோ….
இந்த அழகு தேவதைக்கு மாப்பிள்ளை பார்க்கும் சிரமமே சற்றும் இல்லாமல், தூரத்து உறவினனான, தங்கள் மகளின் அழகிற்கும், அந்தஸ்திற்கும் சற்றும் குறைவில்லாத மிதிலன் ஏழு செருப்புகள் தேய நடையாய் நடந்து பெண் கேட்டு , எல்லாரும் முழு மனதுடன் சம்மதிக்க, ஊரே கலகலக்க நடந்த திருமணம். அதற்குப் பிறகு அது போன்றதொரு ஆடம்பர திருமணம் இன்றுவரை நடக்கவில்லை என்று சொல்லுமளவிற்கு யானை ஊர்வலத்துடன் ஊரே திரண்டு நடத்திய திருமணம். திருமணம் முடிந்து மகளை மகாலட்சுமியாக அனுப்பி வைத்த பெற்றோர், அடுத்த மூன்றாவது மாதம் தன் மகள் மூளியாக அப்படி வந்து நிற்பாள் என்று கனவிலும் நினைத்தவர்கள் இல்லை!
திருமணம் முடிந்து மூன்று நாட்களில் பால் சொம்புடனும், பல நூறு கற்பனைகளுடனும் அழகு தேவதையாக முதல் இரவு அறை நோக்கிச் சென்றவள். கணவனின் அன்பு அணைப்பின் சுகம் நாடி அருகில் சென்றவள், அவனின் சோர்ந்த முகமும், சிவந்த கண்களும் கண்டு, லேசான அதிர்ச்சியுடனும், கேள்விக்குறியுடனும் பார்க்க, அன்புக் கணவனும் பேராவலுடனும், பெருமிதத்துடனும் அழகு தேவதையான அன்பு மனைவியை மென்மையாக கையைப் பிடித்து அருகில் அமரச் செய்ய, கையில் இருந்த அந்த சூடும், அருகில் வீசும் அனலும் அதிர்ச்சியைத்தர, அடுத்த நொடி சற்றும் தயங்காமல், அவன் நெற்றியில் கை வைத்துப் பார்த்தவள் அந்த சூட்டையும், கண்களின் சிவப்பையும் வைத்து நல்ல காய்ச்சல் இருப்பதை உணர்ந்து கொண்டவள் , அடுத்த நொடி துள்ளி எழுந்து, வெட்கமெல்லாம் மறைந்து போக,
“ காய்ச்சல் அதிகமாக இருக்கும் போல் உள்ளதே?” என்றாள்.
“ம்ம்…..ஒன்றுமில்லை. திருமண அலைச்சலாக இருக்கும். கொஞ்சம் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும், நீ ஒன்றும் கவலைப்படாதே” என்று சொன்னாலும் அவனால் அதற்கு மேல் ஏதும் பேச முடியவில்லை. காய்ச்சல் வேகம் அதிகரித்ததோடு, குளிரும் சேர்ந்து கொண்டது.
அவனை அப்படியே படுக்க வைத்து கம்பளி எடுத்துப் போர்த்தி விட்டு, தலையைப் பிடித்து விட்டாள். அனாவசியமாக எல்லாரையும் தொல்லை செய்ய வேண்டாமே, அனைவரும் திருமண வேலையில் களைத்துப் போயிருந்தனர். எல்லாம் நல்லபடியாக முடிந்த திருப்தியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்களே. அவர்களை எழுப்பி சிரமம் கொடுக்கவும் மனமின்றி, தானும் அமைதியாக கட்டிலின் ஒரு ஓரமாக சுருண்டு படுத்துக் கொண்டாள்……….
அடுத்த நாள் விடியலில் எழுந்து வெளியே சென்ற போது, சிவந்த கண்களும், கலையாத வதனமும் அவளின் நிலையை தெளிவாக உணர்த்த, மாமியார் கேள்விக்குறியுடன் மருமகளின் முகம் பார்க்க, புரிந்து கொண்ட அன்னபூரணியும், மிதிலனுக்கு காய்ச்சல் இருப்பதையும், எடுத்துக் கூறினாள். குளிர் சற்று விட்டிருக்க, காய்ச்சல் மட்டும் இருப்பதாக அந்த சூடு உணர்த்தியது. மாமியாரும், ‘அலைச்சல் காரணமாக இருக்கும் சற்று ஓய்வெடுத்தால் சரியாகிவிடும். ஏற்கனவே இதுபோல இரண்டு மூன்று முறை வந்திருக்கிறது’ என்று சர்வ சாதாரணமாக சொன்னது மனதிற்கு ஆறுதலிப்பதாக இருந்தாலும், உள்ளுணர்வு ஏதோ விபரீதத்தை உணர்த்தியது. அதற்குத் தகுந்த மதிப்புக் கொடுக்கவும் எண்ணினாள். காலைப் பொழுது மலர்ந்தவுடன் முதல் வேலையாக மருத்துவமனைக்குச் செல்ல முடிவெடுத்தாள்.
அடுத்து நடந்த நிகழ்வுகள், கேட்பவர் மனது கல்லாக இருந்தாலும் கரையச் செய்யக் கூடியதாகும். ஆம்! கலகல்ப்பாக சிரித்துக் கொண்டு இருந்தாலும் மிதிலனின் முகத்தில் நோயின் கடுமை நன்றாகவே தெரிந்தது. மருத்துவமனைக்குச் சென்று வந்த போதும், அவர்கள் கொடுத்த மருந்துகள் காய்ச்சலை பூரணமாக குணப்படுத்த முடியாமல், அவ்வப்போது விட்டுவிட்டு வர தொடர்ந்து மருத்துவமனைக்கு நடக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டது. காய்ச்சலும் நீடித்துக் கொண்டே இருந்ததால் மருத்துவர்களுக்கும் ஐயம் ஏற்பட பிறகு பல விசேச சோதனைகள் செய்யப்பட முடிவில் அன்னபூரணியின் வாழ்க்கையையே புரட்டிப் போடக்கூடிய ஒரு பெரிய குண்டைத் தூக்கி வீசினர் மருத்துவர்கள்………..
Sunday, September 11, 2011
பாட்டுக்கொரு புலவன்!
பாட்டுக்கொரு புலவனவன் , புலமையின் முன் செல்லியும், சேக்ஸ்பியரும் எம்மாத்திரம் என எக்காலமும் வியக்க வைக்கும் நம் முண்டாசுக்கவி இன்று உடலால் மட்டுமே தமிழ் கூறும் நல்லுலகை விட்டு மறைந்த நாள். தம் தமிழ்க் கவிதையால் தேசபக்திக் கனலைச் சுடர்விட்டுப் பிரகாசிக்கச் செய்ததோடு, அரசியல், தத்துவம், ஆன்மீகம், சமூகம், காவியம் என அக்கவி நுழையாத துறையே இல்லை எனலாம். முற்போக்குச் சிந்தனைகளை ஊக்குவிக்கக் கூடிய படைப்புகளின் தலைவனவன்! ஆங்கிலம், வடமொழி, பிரெஞ்சு போன்ற பல மொழிகளின் ஞானம் கொண்டு தமிழ் மொழியின் கவிதைகளுக்கு வல்லமை கூட்டினான் என்றால் அது மிகையாகாது.
1. பேயவள் காண்எங்கள் அன்னை-
காயழல் ஏந்தியபித்தன்-தனைக்
காதலிப் பாள்எங்கள் அன்னை. (பேயவள்)
3. தீஞ்சொற் கவிதையஞ் சோலை-தனில்
4. வேதங்கள் பாடுவள் காணீர்-உண்மை
5. பாரதப் போரெனில் எளிதோ?-விறற்
27.சுதந்திரப் பயிர்
ஞானப் பாடல்கள்
96. அன்பு செய்தல்
வேறு
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
78. அச்சமில்லை
பண்டாரப் பாட்டு
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
1905 ஆம் ஆண்டு வ.உ.சியுடன் தொடர்பு கொண்டு அரசியலில் தீவிரமாக நுழைந்து, காசியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பும் போது கல்கத்தா சகோதரி என்றழைக்கப்பெறும் விவேகானந்தரின் பெண் சீடரான நிவேதிதாவைச் சந்தித்து, அவர் கொள்கைகள்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அவரைத் தம் ஞான குருவாக ஏற்றுக் கொண்டார்.
28. நிவேதிதா
முப்பெரும் பாடல்கள்
கண்ணன் பாட்டு
15. கண்ணன்-என் காந்தன்
வராளி-திஸ்ர ஏக தாளம்
சிருங்கார ரசம்
கனிகள் கொண்டுதரும்-கண்ணன்
16. கண்ணம்மா-என் காதலி
காட்சி வியப்பு
செஞ்சுருட்டி-ஏகதாளம்
ரசங்கள்:சிருங்காரம்,அற்புதம்
சுட்டும் விழிச்சுடர் தான்,-கண்ணம்மா!
சாத்திரம் பேசு கிறாய்,-கண்ணம்மா!
2. பாஞ்சாலி சபதம்
சபதச் சருக்கம்
65. திரௌபதி சொல்வது
‘சாலநன்கு கூறினீர்! ஐயா!
அம்புபட்ட மான்போல் அழுது துடி துடித்தாள்.
ஆடை குலைவுற்று நிற்கிறாள்;-அவள்
பீடையை நோக்கினன் வீமனும்-கரைமீறி
எவ்வம் - கலீல் ஜிப்ரான்
பகன்றாரே பலவும் சிந்தையதுவும் விழித்தெழ:
உம் புரிதல்கள் அனைத்தும் உள்ளடக்கிய கூட்டை உடைத்தெறியும் உசாத்துணை உம் எவ்வமே அம்மணி!
கனிந்து நிற்கும் கனியாயினும் ஞாயிறொளியில் இதயத் தாமரை மலர ஓட்டை உடைத்தெறியும் எவ்வம் பொறுக்க வேண்டுமே!
வாழ்வின் அன்றாட அற்புதங்களை வியப்புடனுறைந்து உம் இதயக்கூட்டில் அணைக்குங்கால், உம் இன்பத்திற்கு இம்மியளவும் குறைவிலா அதிசயத்தையும் தோற்றுவிக்க வல்லதந்த எவ்வமன்றோ?
உம் வயல் வெளியில் கடந்து போகும் கால மாற்றங்களை ஏற்றுக் கொள்வது போன்றே உம் இதய வெளியின் மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ள இயலும் உம்மால்!
உம் துயரங்களின் நடுக்கங்களின் (குளிர்) ஊடே பொறுமையாக கவனம் கொண்டு நோக்கினால் உம்முடைய பெரும்பான்மையான துயரங்களுக்கான காரணமே உன் சுய - தேர்வு மட்டுமேயன்றோ?
உம்முள் இருக்கும் வைத்தியன் அளிக்கும் மருந்து கசப்பானதாக இருப்பினும் அதுதானே உம் பிணியைப் போக்கும் உபாயம்?
ஆம், அந்த வைத்தியன் மீது நம்பிக்கை வை முழுமையாக! அத்தோடு அவனளிக்கும் கசப்பான தீர்வையும் சகித்துக் கொண்டு பொறுமையுடன் பருகி விடு!
அவன் கையில் பலமும், உறுதியும் ஓங்கி இருப்பினும், மற்றொரு மாயக் கை ஒன்று மென்மையாக ஒரு மலர்பாதை விரிக்கும் உனக்கு!
அவன் அளித்த அக்கோப்பை உன் மென்மையான இதழைப் பதம் பார்த்தாலும்,
குயவனால் தம் புனிதமான கண்ணீரால் வார்க்கப்பட்டு அழகாக வடிவமைக்கப்பட்டதன்றோ அக்கோப்பை?
http://www.youtube.com/watch?
Friday, September 9, 2011
எழுத்தறிவித்தவன்......................
Friday, September 2, 2011
பசித்திரு! தனித்திரு! விழித்திரு!
இசை என்பது மனித வாழ்வில் உடன் பிறந்த ஒரு சங்கதியாகும். குழந்தை பிறந்தவுடன் முதன் முதல் கேட்கும் தாலாட்டுப் பாடலின் ஓசையே முதல் இசையாகும் அந்த ஆழ்ந்த இசை நம்மை இறை இன்பத்தை நோக்கிச் செலுத்தும் அன்றோ? அதற்கு நல்லதோர் சான்றாக நம் முன்னே நிற்கும் பெரியார்கள் தியாகராயரும், அருணகிரிநாதரும் மற்றும் வள்ளல் பெருமான் போன்றோரும் ஆவர்.
ஸ்ரீ தியாகராயரின் இசைக் கீர்த்தனைகளின் சக்தி நாம் அறிந்ததே. அவர்தம் கீர்த்தனைகளால் ஸ்ரீராமபிரானையே நம் கண் முன் நிறுத்துபவர். அடுத்து தம் இசையின் மூலம் இறைவனையே தாலாட்டும் வல்லமை பெற்ற அருணகிரியார்! அவர் பாடலை மனமுறுக பாட ஆரம்பித்தாலே அந்த முருகப் பெருமான் கண் முன்னே தோன்றியது போன்ற உணர்வையே ஏற்படுத்தக் கூடியதாகும்!
தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் …… தனதான
அற்றைக் கற்றைக் கொப்பித் தொப்பித் தத்தத் தத்தத் …… தருவோர்தாள்
அர்ச்சித் திச்சித் தக்கத் தக்கத் தொக்குத் திக்குக் …… குடில்பேணிச்
செற்றைப் புற்சொற் கற்றுக் கற்றுச் செத்துச் செத்துப் …… பிறவாதே
செப்பச் செப்பப் பச்சைப் பச்சைச் செச்சைச் செச்சைக் …… கழல்தாராய்
துற்றுப் பிற்புக் குற்றக் கொக்கைத் துட்கத் திட்கப் …… பொரும்வேலா
சுத்தப் பத்திச் சித்ரச் சொர்க்கச் சொர்க்கத் தத்தைக் …… கினியோனே
கற்றைப் பொற்றைப் பற்றக் குத்திக் கத்தக் கத்தக் …… களைவோனே
கற்புச் சத்திப் பொற்புச் சத்திக் கச்சிச் சொக்கப் …… பெருமாளே.
அன்புக் கடல் வள்ளல் பெருமானோ, இசையுடன், மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அன்பு நெறியையும் வகுத்தளித்தப் பாங்கு ஏழிசையினையும் உள்ளடக்கிய பக்திப்பரவச நிலையாகும்!
“ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்றஉத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மைபேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்பிடியா திருக்க வேண்டும்
மருவுபெண் ணாசையை மறக்கவேண்டும் உனைமறவா திருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும்நோயற்றவாழ்வில் நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்தலமோங்கு கந்தவேளே!
தண்முகத் துய்யமணி உன்முகச் சைவமணிசண்முகத் தெய்வ மணியே!”
பிற உயிர்களையும் தம் உயிர் போல் எண்ணும் கருணை உள்ளம் கொண்டவர் வள்ளலார்.அது மட்டுமன்றி ஓருயிர் உள்ள பயிர்களின் மீது கூட அன்பு செலுத்தி ,வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் தானும் வாடியதாகக் குறிப்பிடுவார்.
எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்யாவர்அவர் உளந்தான்
சுத்தசித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்சிந்தைமிக விழைந்த தாலோ!
இறையுணர்வுடன், மனித நேயமும் கூடிய இத்தகைய தாக்கம் வள்ளலார் தவிர மற்றும் வேறு ஆன்மீக ஞானிகளுக்கு இருந்ததா என்பது ஐயமே. “கல்லார்ர்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே”.“அப்பனே, எனக்கு அமுதனே ஆனந்தனே, அகம்நெக அள்ளூறு தேன் ஒப்பனே” போன்ற பாடல்களின் மூலம் மிக எளிமையான இசையின் மூலம் இறை இன்பம் பெறவழி வகுத்துள்ளப் பாங்கு போற்றுதற்குரியதாகும்.
சுத்த சன்மார்க்க சங்கத்தின் வாயிலாக ஐயன் வள்ளலார் உபதேசித்த மூன்று இன்றியமையா மந்திரங்களே, பசித்திரு! தனித்திரு!விழித்தி
பசித்திரு என்பதற்கான பொருள், பசியுடன் இரு என்பது அல்ல. அளவிற்கு அதிகமான உணவை விடுத்து, தேவையான அளவு மட்டுமே உண்டு, அதாவது அரை வயிறு மட்டுமே உண்டால் போதுமானது என்கிறார். இதையேதான் தற்கால மருத்துவரும் சொல்கின்றனர். இதனை வள்ளல் பெருமானார்:
“நான் பசித்த போதெல்லாம் தான் பசித்ததாகி
நல்லுணவு கொடுத்தென்னைச் செல்வம் உறவளர்த்தே
ஊன் பசித்த இளைபொன்றும் தோன்றாத வகையை
ஒள்ளியதென் அமுதெனக்கிங் குவந்தளித்த ஒளியே!”
என்றருளுகிறார்.
தனித்திரு என்பது ‘சும்மா இரு’, என்ற பொருள் கொண்டதாகும். புற இன்பங்களில் மயங்கி பொழுதைக் கழிக்காமல் ‘தனித்திருப்பதன்’ மூலம் ஆன்ம பலம் பெறலாம் என்பதனை:
“இன்று வருமோ நாளை வருமோஅன்றி
மற்றொன்று வருமோஅறியேன் எம் கோவே
துன்றுமல வெம்மாயை அற்றுவெளிக்கு
வெளிமிடத்துசும்மா இருக்கும் சுகம்”.
சும்மா இருப்பது என்பது எளிமையான காரியம் அல்ல. எந்த உலக விசயத்திலும் மனம் செலுத்தாமல் இருப்பது என்பது மிக சிரமமான காரியம் என்றாலும், தனித்திரு என்பது, இறைவனுடன் இணைந்து, தியானத்தில் இருப்பது என்பதாகும். புறப்பற்றிலிருந்து கிடைக்கக் கூடிய இந்த தனிமையைத்தான், “தனித்திரு” என்னும் தாரக மந்திரமாகக் கூறுகிறார்.இதன் மூலம் ஒருவர் பெறுகின்ற பேராற்றல் அளப்பரியதாகும்.
அடுத்து வருவது “விழித்திரு” என்பதாகும். தூங்குவதை முற்றும் துறக்க வேண்டுமென்பது இதன் பொருளல்ல. அளவாகத் தூங்கி, வளமான விழிப்பு நிலையில் மனதையும் , அறிவையும் செம்மையாக வைத்துக் கொள்ளல் என்பதாகும்………ஆன்மீக ஞானிகள் தூக்கத்தை அறவே ஒழித்த மகான்களாயினும் அவர்கள் நூறாண்டுக் காலங்கள் உயிர் வாழ்ந்துள்ளனர். ஆண்டவனின் பூரண அருளைப் பெறும் பொருட்டு, ஊன், உறக்கம் அனைத்தும் துறந்தவர்களாகவே இருந்துள்ளனர். வள்ள்ல் பெருமான் இதையே:
“தூங்குகநீ என்கிறாய் தூங்குவனோ எனதுதுரைவரும் ஓர்தருணத்தில்
தூக்கமுந்தான் வருமோஈங்கினிநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்என்னுடைத்
தூக்கமெலாம் நின்னுடையதாக்கிஏங்கலறப் புறத்தேபோய்த் தூங்குகநீ தோழிஎன்னிரு
கண்மணி அணையாரெனை அணைந்த உடனேஓங்குறவே நான் அவரைக் கலந்தவரும்
நானும்ஒன்றானபின்னர் உனை எழுப்புகின்றேன் உவந்தே!” என்கிறார்.
ஆக பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்கிற தாரக மந்திரங்கள், ஆன்மீக ஞானிகளுக்காக மட்டுமல்லாது, சாமான்ய மனிதருக்கும் நன்மையளிப்பதாகும். வள்ளலார் தோற்றுவித்த சன்மார்க்க இயக்கங்கள் மூலம் இன்றும் அவருடைய சன்மார்க்கத் தத்துவங்கள் பரவலாக போற்றப்படுகின்றன. இன்றும் வடலூரில் அன்னதானங்கள் வள்ளலார் சோதியில் ஐக்கியமான தினத்தன்று பெரிய அளவில் நடை பெறுகின்றன.
வள்ளலார் அண்மைக் காலத்தில் தோன்றியவராயினும், அவ்ர்தம் ஞானக்குரு திருவாதவூரர்,மாணிக்கவாசகர் ஆவார். அவர் மூலமாகவே ஆன்மீக ஞானத்தைப் பெற்றவர்.மாணிக்கவாசகரின் பாடல்களில் இருக்கும் எளிமையும், இனிமையும், இறைமையும் இவர் பாடல்களிலும் நிறைந்திருப்பதைக் காண முடிகிறது. திரு அருட்பாவில், ‘ஆளுடைய அடிகள்’ என்னும் பாடல் மூலம் இதனை நன்கு உணர முடியும்.
”தேசகத்தி லினிக்கின்ற தெள்ளமுதே – மாணிக்க
வாசகனே யானந்த வடிவான மாதவனே
மாசற்ற நீ திருவாய் மலர்ந்த தமிழ் மாமறையின்
ஆசகன்ற வனுபவந் தனுபவிக்க வருளுநீயே!”
“ வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ்சுவைகலந்தென்
ஊன்கலந்து வுயிர் கலந்து வுவட்டாம லினிப்பதுவே
வருமொழிசெய் மாணிக்கவாசகநின் வாசகத்தில்
ஒருமொழியே யென்னையுமென் நுடையனையு மொன்றுவித்துத்
தருமொழியா மென்னிலினிச் சாதகமேன் சஞ்சலமேன்
குருமொழியை விரும்பியியல் கூடுவதேன் உறுதியே
வாட்டமிலா மாணிக்கவாசகத்தின் வாசகத்தைக்
கேட்டபொழு தங்கீருந்த கீழ்பறவைச் சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளு மெய்ஞ்ஞான
நாட்டமுறு மென்னிலிங்கு நானடைதல் வியப்பன்றே!”
ஐயன் மாணிக்கவாசகரின் வாக்கை சத்திய வாக்காகவும் அவரையே ஆன்மீகக் குருவாகவும் கொண்டு தம் பாடல்களை இயற்றி இம் மனித சமுதாயம் தழைத்தோங்கச் செய்த வள்ளல். தன் ஞானகுரு மாணிக்கவாசகர் பற்றிக் கூறும் போது, ஐந்தறிவு படைத்த வாயில்லா சீவன்கள் கூட மாணிக்கவாசகரின் தெயவ மொழி கேட்டால் மெய் மறந்து மெய்ஞ்ஞானத்தில் நாட்டமுறும் போது எனக்கு அந்த மெய்ஞ்ஞானம் சித்திப்பதில் என்ன வியப்பு இருக்கிறது என்பார். இதிலிருந்து அவர்தம் குருபக்தி நன்கு விளங்குகிறதன்றோ. மாணிக்கவாசகரின் திருவாசகமே தன் ஆத்ம ஞானப் பாதையின் வழிகாட்டி என்ற வள்ளலாரின் சத்திய நெறி நித்யமானதாகும்.
இததகைய ஆன்மீக ஞானம் பெற்ற வள்ளலாருக்கும் சோதனை ஏற்படாமல் இல்லை. ஆம் சோதனைகள் தானே மனிதரின் வாழ்க்கையை புடம் போட்ட தங்கமாக மின்னச் செய்கிறது.
வள்ளல் பெருமான் மனித வாழ்க்கையின் மேம்பாட்டிற்கு வழி வகுக்கும் வகையில் திரு அருட்பா, இயற்றி போதித்து வந்த வேளையில், பல சர்ச்சைகள் ஏற்பட்டது. ‘மருட்பா’ என்கிற அமைப்பில் ஓர் அணி திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். மருட்பா என்கிற போராட்டம் 1873 ஆம் ஆண்டு தொடங்கி 1907 ம் ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற்றது. இந்த எதிர்ப்பு வள்ளலாரின் இறுதிக் காலங்களில் கனன்று, தீம்பிழம்பாய் எரிந்து, ஐயன சோதி வடிவாக கரைந்த பின்பும் கங்காய் கனன்று கொண்டிருந்தது. பல அறிஞர்கள் இப்போராட்டத்தின் ஆரம்பத்தில் கலந்து கொண்டாலும், போகப் போக பகலவனைக் கண்ட பனித்துளியாய் உறுகிப் போயினர். அருட்பாவில் அமிழ்ந்து போயினர்.
தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் அந்நிகழ்வைப் பற்றிக் கூறுகிறார். இலக்கிய உலகில் முன்பின் காணாத ஓர் வித்தியாசமான வழக்கு என்பார். வழக்கைத் தொடுத்தவரோ ‘தமிழ் செம்மல் – சைவப் பெரியார்’ என்றழைக்கப்பட்ட, வையகமே போற்றும், வாழ்வாங்கு வாழ்ந்த பெரியார், ஆறுமுக நாவலர் ஆவார். வழக்குக்கான அடிப்படை ஆறுமுக நாவலரின் உள்ளம், வள்ளல் இராமலிங்க அடிகளாரின் சன்மார்க்க நெறியை ஏற்றுக் கொள்ள இயலாமையே காரணமாகும்.மஞ்சக் குப்பம் நீதி மன்றத்தில் நடந்த வழக்கைக் காண மக்கள் வெள்ளமாகத் திரண்டிருந்தனர்.
ஆறுமுக நாவலர் வழக்கறிஞர் வைத்து வாதாட, இராமலிங்க அடிகளாரோ, அன்பே கடவுள் என்றுணர்ந்த தன்மையால், வழக்கறிஞர் மூலம் எவர் மனதையும் புண்படச் செய்ய விரும்பாமல் ஆன்ம ஞானமே துணையாகக் கொண்டு தானே வழக்காட எண்ணி நீதி மன்றம் வந்த வேளை, தெய்வீக ஒளி வீசும், வெண்ணிற ஆடை கொண்டு மெய்யுணர்வுடன் தேவனைப் போன்று வந்து நின்ற அடிகளாரைக் கண்ட மனிதர் அனைவரும் எழுந்து நின்று கைகூப்ப, நீதிபதியும் தன்னிலை மறந்து எழுந்து கைகூப்பி நிற்க, வழக்கு தொடுத்த ஆறுமுக நாவலரும் எழுந்து நின்று இரு கரம் கூப்பித் தொழுதாராம்!
வழக்கு ஆரம்பித்த பொழுது, நீதிபதி, ஆறுமுக நாவலர் எழுந்து நின்று இரு கரம் கூப்பி வணங்கியதன் காரணம் கேட்க, அதற்கு ஆறுமுகனாரும், ”தாங்களே எழுந்து நின்று கைகூப்பி வணங்கியது கண்டு நானும் அனிச்சையாக நின்று வணங்கி விட்டேன்” என்றாராம்.
“ உங்களுடைய அனிச்சை செயலே இராமலிங்கனாரின், அருட்செயலை எமக்குத் தெளிவாக உணர்த்துகிறதே” என்று நீதிபதி கூறியதும் மன்றமே மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய, வழக்கு நிறைவடைந்தது……….சைவப் பெரியாரான ஆறுமுக நாவலர் திருமறைக்குட்பட்டது அல்ல ‘திரு அருட்பா’ என்ற உணர்வு கொண்டவராக இருந்தது மட்டுமே இவ்வழக்கிற்கான காரணமாக இருந்தது.
ஆனால் இன்று மருட்பா என்ற பொய்மை மறைந்து, அருட்பா என்ற மெய்ம்மை ஒளிவிட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. வள்ளலார் காட்டிய வழி, அன்பும், கருணையும் இணைந்த ஆன்மீக நெறி என்பதை உணர்ந்து அம்மெய்வழி நடந்தவர் அனைவரும் வாழ்வில் சிறப்புற்று, அமைதியும், வெற்றியும் பெற்று வாழ்வதையும் காண முடிகிறது. நம்மிடமுள்ள அஞ்ஞானமாகிய ஆணவம், கன்மம், மாயைகளாகிய திரைகள் நீங்கப் பெற்றால் அருட்பெரும் சோதியை தரிசிக்கலாம்!
அருட்பெருஞ் சோதி, அருட் பெருஞ் சோதி
தனிப்பெருங் கருணை அருட் பெருஞ் சோதி
|
|
|
|
|
|
Friday, August 12, 2011
வெண்ணிலவில் ஒரு கருமுகில் (20)
பொதுவாக பெரும்பாலான பெண்கள், தங்கள் சூழ் நிலையைக் கருத்தில் கொண்டு உள்ளத்தில் எண்ணுவதையெல்லாம் குறிப்பாக தனக்கு ஏற்படும் பிரச்சனைகளைக் கூட வெளிப்படையாகச் சொல்லத் தயங்குவது இயற்கை.அதுவே பல நேரங்களில் அப் பிரச்சனையை உருவாக்குபவர்களுக்கு சாதகமாகிப் போவதும் உண்டு. அவர்களுடைய முகத்திரை கிழிக்கப் படாமல் காக்கப் பட்டும் விடுகிறது. 21ம் நூற்றாண்டில் எண்ணற்ற சாதனைகள் பல புரிந்து கொண்டிருந்தாலும், அடிப்படையில் உள்ள அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற அந்த நால்வகை குணமும் அவளுக்குள் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்பட்டு காட்டிக் கொடுத்து விடுவதும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. சக மனிதர்களின் பொய் முகங்களைக் கண்டு ஏமாற்றம் கொள்வதோடு அதனால் மனதளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொள்வதோடு தன்னைச் சார்ந்தவர்களுக்கும் சங்கடங்களை ஏற்படுத்துவதும் இயல்பாகிப் போகிறது. அறிவுப் பூர்வமாக எதிர்த்து நிற்கத் துணிந்த பேதைகள் கூட சில நேரங்களில் உணர்வுப் பூர்வமான தாக்குதலில் துவண்டு போய் எளிதாக தோற்றும் விடுகிறார்கள் என்பதும் நிதர்சனம். இந்தப் போக்கு மாறுவதற்கு இன்னுமொரு நூற்றாண்டு ஆகும் போலும்.!
அனுவின் அத்தை அகிலாவிற்கு இதே பிரச்சனைதான். பணி என்று வந்து விட்டால் நேரம் காலம் இல்லாமல் தன் எல்லையைத் தொடும் வரை தன்னிலை மறந்து உழைப்பவள். பாவம் அந்த உழைப்பே அகிலாவிற்கு பல எதிர்ப்புகளை சம்பாதித்து வைத்து விட்டது. பணியில் அவளை போட்டி போட்டு வெல்ல முடியாத கோழைகள் மறை முகமாக உணர்வுப் பூர்வமாக தாக்க முற்பட்டதன் விளைவே இன்று அகிலாவின் உயிர்ப் போராட்டத்தின் எல்லை வரை கொண்டு வந்து விட்டிருக்கிறது. கணவனும், மாமியாரும் உறவினர் வீட்டு விசேசத்திற்கு வெளியூர் சென்றிருக்கும் வேளையில் இப்படி ஒரு தற்கொலை முயற்சி எடுக்கும் அளவிற்கு செல்லத் தூண்டியிருக்கிறது.
அனு, அகிலா அத்தையை எப்போதும் ஒரு நல்ல தோழியாகவே எண்ணி அவளிடம் தன் கல்லூரி கலாட்டாவிலிருந்து, தனக்கு வரும் காதல் கடிதங்கள் வரை அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் வழக்கம் கொண்டிருந்தாள். ஞாயிற்றுக் கிழமை என்றாலே தன் அண்ணனின் வீட்டிற்கு செல்வதற்கும் அனுவைச் சந்திக்கப் போகும் உற்சாகத்திலும் பரபரப்பாகி விடுவாள் அகிலா. ஆனால் ஒரு சில வாரங்களாக சரியாக அண்ணன் வீட்டிற்குக் கூட வரவில்லை. பல காரணங்கள் சொல்லி மழுப்பி விட்டாள். அனுவும் மாமாவின் உடல் நிலை கருதி அங்கு அடிக்கடி செல்ல வேண்டிய தேவை ஏற்படவும் அகிலா அத்தையைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் விட்டிருக்கிறாள்.
பழமை மற்றும் நாகரீகத்திற்கும் இடையே இருக்கும் அந்த மெல்லிய கோடு படுத்தும் பாடுதான் இது போன்ற சம்பவங்கள். இரண்டையும் கட்டிக் கொண்டு அழும், முன்னேறத் துடிக்கும் ஒவ்வொரு பெண்ணின் இன்றைய நிலையாகவே இது இருக்கிறது. மனம் விட்டு வெளியில் பேசக் கூடத் தயங்கும் சூழ்நிலை ஏற்படுத்தி விடுகிறது. . இந்த போக்கு மாறிக் கொண்டிருக்கிற கால கட்டம் என்றாலும், பணிக்குச் சென்று, தன் நேர்மையான உழைப்பின் மூலம் முன்னேறத் துடிக்கும் பல பெண்களின் வாழ்வில் கூட இப்படி சில சம்பவங்கள் நடந்து கொண்டுதானிருக்கிறது. சட்டம் மூலம் எத்தனை தான் பாதுகாப்பு கொடுத்தாலும் பெண்களாகப் பார்த்து துணிச்சலையும், அத்தகைய புல்லுறுவிகளை எதிர்த்துப் போராடும் தைரியத்தையும் வளர்த்துக் கொள்வது மட்டுமே இதற்கான சரியான தீர்வாக இருக்க முடியும் என்று பல முறை அனுவும், அகிலாவும் வாதிட்டிருக்கிறார்கள். இருந்தும் அகிலாவால், பிரச்சனை என்று வந்திருக்கும் வேளையில் எதிர் கொள்ள முடியாமல் தவித்து கோழைத்தனமான முடிவு எடுக்கும்படி ஆனது வருத்தத்திற்குரிய விசயமகும்
அனு மெதுவாக தன் தந்தையின் அருகில் சென்று அமர்ந்து அவர் கைகளை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டு, ஆதரவாக அவர் முகத்தை உற்று நோக்கியவள், அவருடைய சோகமான முகத்தைப் பார்த்து மேலும் சங்கடம் அதிகமாக,
“ அப்பா, கவலைப் படாதீர்கள். அத்தை கட்டாயம் நல்லபடியாக குணம் அடைந்து வந்து விடுவார்” என்றாள்.
ஆனாலும் அகிலா ஏன் இப்படி செய்தாள், அவளுக்கு என்னதான் அப்படி ஒரு பிரச்சனை என்று அவர் பெரும் குழப்பத்தில் இருப்பது தெரிந்தாலும் மருத்துவரை எதிர்பார்த்து அவர் என்னதான் சொல்லப் போகிறார் என்று பரபரப்பாக உட்கார்ந்திருந்தார்..
சற்று நேரத்தில் மருத்துவர் வந்து அகிலா அபாயக் கட்டத்தை தாண்டி விட்டதாகக் கூறிய பின்பு தான் அண்ணனின் முகத்தில் ஒளியே வந்தது……மூச்சை பலமாக இழுத்து ஆழ்ந்த நீண்ட பெரு மூச்சாக வெளி விட்டு, ஓரளவிற்கு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவர், அன்புத் தங்கையைக் காண அருகில் சென்று ஒரு தாயாய் தலையை வருடிக் கொடுத்தார். ஏனோ முதன் முறையாக தன்னுடைய வளர்ப்பில் ஏதும் குறைபாடு இருக்குமோ என்ற வருத்தம் தோன்ற ஆரம்பித்தது. பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக , தைரியம், நம்பிக்கை அனைத்தையும் ஊட்டியே வளர்த்தார் தன் தங்கையையும், மகளையும் இரு கண்களாக.
ஒரு பெண் உயர் பதவிக்கோ, அல்லது இரவு பகலாக உழைத்து உத்தம நிலைக்கு வந்தாலும் ஊர் அதை ஒப்புக் கொள்வதில்லை. இது இன்று நேற்று அல்ல, பல்லாண்டுக் காலங்களாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. 1900 ங்களிலேயே, மேரி கியூரி அம்மையார் இரவு பகலாக உழைத்து, புற்று நோய் சிகிச்சைக்குப் பயன்படும் , ரேடியம் வெளிப்படுத்தும் காமா கதிர்கள் பற்றிய அரிய கண்டு பிடிப்புக்காக நோபல் பரிசு பெற்ற போது கூட ஊர் மக்கள், அவர் கணவர் சொல்லிக் கொடுத்து தான், இவர் நோபல் பரிசு வாங்கினார் என்று சொன்னார்களாம். இருந்தும் மறுபடியும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு பொலேனியம், ரேடியம் என்ற கதிர் இயக்கம் கொண்ட இரண்டு புதிய பொருட்களை க்ண்டுபிடித்து திரும்பவும் இரண்டாவது முறையாக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்று தன்னை நிரூபித்தார். இந்த சம்பவத்தை அண்ணன் பல முறை சொல்லக் கேட்டவள். இருப்பினும் தேவையான நேரத்தில் அது கை கொடுக்காமல் போனது வேதனைக்குரிய விசயமானாலும், ஆண்டவன் அருளால் மறு பிறவி எடுத்து வந்தது ஆறுதலாக இருந்தது. அனு போல யதார்த்தமாகவும், தெளிவான முடிவெடுக்கக் கூடிய துணிச்சலான குணமும் சற்று குறைவு தான் அகிலாவிடம்.அதனாலேயே, இப்படி ஒரு கோழைத்தனமான முடிவு எடுக்கச் செய்தது அவளை.
கல்லும், முள்ளும் நிறைந்த கரடு முடனான வாழ்க்கைப் பாதையில் பாதம் நோகாமல், மெல்லடி வைத்து கடக்கத் தெரிந்தாலே பரந்த வான் வெளியில் வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்க முடியும். அதைத் தக்க வைத்துக் கொள்ளும் திறனும் கை வந்த கலையானால், பின் எந்தவொரு தடைக் கல்லையும் எளிதாக நெட்டித் தள்ளும் பக்குவமும் தானே வந்து விடுமே…… இதை பால பாடமாகவே ஊட்டி வளர்த்தும் தங்கை இப்படி ஒரு காரியம் செய்து விட்டாளே என்ற அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாமல் தான் இருந்தார் அந்த அன்பு அண்ணன். அனு மட்டும் அத்தை நலமானால் போதும், எப்படியும் அவர் மனதை தன்னால் தேற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் தெளிவாக இருந்தாள். மடியில் கனம் இல்லாத வரையில் வழியில் பயம் இலையே!
ரம்யா ஊருக்குக் கிளம்ப தயாராக வேண்டிய தருணம் வந்ததால், அவள் தன்னுடைய பணிகளுக்கிடையேயும் அவந்திகாவின் ஓவியக் கண்காட்சி பங்கேற்பு குறித்த வேலைகளில் தன்னால் முடிந்த வரை உதவிக் கொண்டிருந்தாள். அவ்வப்போது மாறன் உடன் வந்து கலந்து கொண்டாலும், ஏனோ அவன் முகத்தில் இருந்த இருக்கம் அவந்திகாவிற்கு லேசான உறுத்தலை ஏற்படுத்தியது.இது பற்றி ரம்யாவிடம் பேச எண்ணினாலும் ஏதோ தயக்கம் தன்னை தடுப்பதையும் உணர முடிந்தது அவளால். ஓவியக் கண்காட்சி பங்கேற்பின் பணிகள் அழுத்தத்தினால் மேற் கொண்டு சிந்திக்க நேரமின்றி தள்ளிப் போட்டு வைத்தாள்.
அவந்திகாவின் ஓவியங்களின் ஒவ்வொரு அங்கமும், சிந்திக்கக் கூடிய வகையில் அமைந்திருந்தது ரம்யாவிற்கும், மாறனுக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தியது. எத்துனை திறமைகள் என்று மலைப்பாக இருந்தது. சங்க கால கோவலன் நாயகி கண்ணகியின் பாண்டிய மன்னனின் சபையின் வீராவேசக் கோலத்தின் வண்ண ஓவியம் முதல் தற்கால அமைதியின் மறு உருவான அன்னை தெரசா வரை உயிருள்ள ஓவியங்கள் அவள் கை வண்ணத்தை பிரதிபலித்தது. அது மட்டுமன்றி நற் சிந்தைகளை ஊக்கு விக்கக் கூடியதும், குழந்தை தொழிலாளர்கள் போன்ற ஒழிக்கப்பட வேண்டிய அவலங்கள் குறித்த ஓவியங்கள் மற்றும் நம் இந்திய மக்களின் வாழ்க்கையின் அடித் தளமான கூட்டுக் குடும்பப் பிணைப்பு இப்படி பல கோணங்களிலான ஓவியங்கள் பல்லோரைக் கவர்ந்தது. அவந்திகாவிற்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டு மழை குவியத் துவங்கிய போதும், மாறனிடமிருந்து பெரிதாக பாராட்டு ஏதுமில்லா விட்டாலும், குறைந்த பட்சம் ஒரு சிறிய புன்னகையாவது இருந்திருக்கலாமோ என்று தோன்றியது அவந்திகாவிற்கு. ஒரு வேளை பெண்களை மதிக்கத் தெரியாத அகம்பாவம் பிடித்தவனாக இருப்பவனோ அல்லது தான் என்ற அகந்தை கொண்டவனாக இருப்பவனோ என்று சிந்திக்க ஆரம்பித்தாள்.
ஓவியக் கண்காட்சி நிறைவுற்று , வீடு நோக்கிய சிற்றுந்து பயணம் போதும் மாறனின் இறுகிய முகம் ரம்யாவிற்கும் சற்று உறுத்தலாக இருந்தாலும் , எங்கே தான் அவந்திகாவிடம் நெருக்கமாக பேச வேண்டி வந்துவிடுமோ என்ற அச்சம் அவனுடைய போக்கில் தெரிந்ததால் அதைக் கலைக்க மனமற்றவளாக அமைதி காத்தாள். சென்னைக்குச் சென்று கொஞ்சம் கொஞ்சமாக மாறனின் தந்தையுடன் பேச்சுக் கொடுத்து புரிய வைக்க முயற்சி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்திருந்ததால் மேற் கொண்டு ஏதும் அது பற்றி பேசாமல் விட்டு விட்டாள். ஆனால் அவந்திகா மட்டும் யோசிக்க ஆரம்பித்திருந்தாள்………
ரிஷி அன்பு மனைவியின் உடல் நலக் கோளாறு காரணமாக , கண்ணைத் திறக்க முடியாத அளவிற்கு கடுமையான காய்ச்சலில் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவளை கவனிக்கும் பொருட்டு விடிய விடிய உறங்க முடியாமல் கண் விழித்திருந்தவன், அசதியால் கண் அயர்ந்து விட, சுள்ளென்று சூரிய ஒளி முகத்தில் பட, வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து, மனைவியின் அருகே செல்லும் போதே, அவள் காய்ச்சல் சற்றும் குறையாமல் அனத்திக் கொண்டிருப்பது தெரிந்தது. உள்ளுக்குள் இருந்த மருந்தின் வேகம் குறைய ஆரம்பித்தவுடன் காய்ச்சலின் வேகம் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. இனியும் பொறுத்து பலனில்லை என்பதால் அவளை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லத் தயாரானான்.
வீட்டின் அருகில் இருக்கும் ஒரு பல் துறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவன், அங்கு எடுக்கப்பட்ட பல் வேறு சோதனைகளைக் கண்டு மிரண்டு போனான். மருத்துவர் ஏதோ பெரிய பெயராகச் சொல்லப் போகிறார் என்பது மட்டும் தெரிந்தது. அவன் எதிர்பார்த்தபடியே, ரிஷியின் மனைவிக்கு ஏற்கனவே இருந்து, சரியாகி விட்டது என்று பாசாங்கு காட்டி ஒளிந்து கொண்டிருந்த புற்று நோய்க் கிருமிகள் மீண்டும் தலை காட்ட ஆரம்பித்ததன் விளைவுதான் இந்த கடுமையான காய்ச்சல் என்று மருத்துவர் கூறிய செய்தி அவன் மார்பில் ஈட்டியாகப் பாய்ந்தது. உடனடியாக புற்று நோய் மருத்துவ மனையில் சேர்க்க வேண்டும் என்றும் மருத்துவரின் ஆலோசனைப்படி அரண்டு போய் ஆக வேண்டியதைப் பார்க்கக் கிளம்பினான் ரிஷி……………
தொடரும்.
படங்களுக்கு நன்றி
பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43
63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர் கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...
-
தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சித்தா வேதா மையம், நியூ ஜெர்சி, அமெரிக்கா, சாந்தம் உலக...
-
பவள சங்கரி h ttps://www.youtube.com/watch?v=AXVK2I37qbs சமுதாயத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்திய, சிவவாக்கியர், ‘புரட்சிச் சி...