Tuesday, February 14, 2012

கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் காதலின் இரு வேறு மாறுபட்ட கோணங்கள்!

பேரானந்தம்!

கண்களை மறைத்த என் காதலே
கூசச்செய்யும் அடர்ந்த ஒளி வெள்ளத்தினால்
சோற்வுற்றிருக்கும் என் கண்கள்
கானம் பாடி சோர்வுற்றிருக்கும்
என் அதரங்களை உன் முத்தத்தினால் அமைதியாக்கு.
ஓ என் காதலே!
என் ஆன்மாவின் தங்கலாகட்டும்.
மழையினால் தாக்கப்பட்ட ஒரு பரிதாபமான மென்மலரைப் போன்று
காதலின் சுமை தாளாமல் வேதனையால்
வளைந்த என் ஆன்மா
ஓ உம்முடைய முகத்தினுள் அடைக்கலமாகட்டும் அந்த ஆன்மா!




காதல் எனும் மாயை!

அனைவரும் சொல்வதுபோல் ,
நீ அன்புக்குரியவனாக இருக்கலாம்
ஒரு நிலையற்ற தீப்பொறியே இது
களிமண் வண்டலில் பொதிந்து மின்னும் சிறு கனல் --
இருண்ட என் மனமதை நித்தம் ஒளிரும்
அந்த பகலவனைக் கொண்டு
நீ ஒளிரச் செய்தாலும் - அக்கரையில்லை எனக்கு

அனைவரும் எண்ணுவது போல் ,
நீ காதலனாகவும் ஆகலாம்
கடலிலிருந்து - கடற்காற்று தூற்றிய
சாதாரண சிப்பியாகவும் இருக்க நேரிடலாம்,
ஆயினும் அழிவற்று நிலைத்து நிற்கும்
சூட்சுமமானதொரு முணுமுணுப்பு மட்டுமே.
மனிதனைப்போல அழியும் தன்மையதாக இருப்பினும் -
நீ மகிழ்ச்சியற்ற விடயம் மட்டுமே!
இறப்பை அழிக்கலாம் -
விதியையும் அழித்து விடலாம்
கடவுளின் இருப்பிடத்தையே
என் கண்முன் காட்சியாக்கினாலும்,
இருதயத்தினுள்ளே ஊடுறுவினாலும்கூட
சஞ்சலமேயில்லை எனக்கு!

Ecstasy
--
Cover mine eyes, O my Love!
Mine eyes that are weary of bliss
As of light that is poignant and strong
O silence my lips with a kiss,
My lips that are weary of song!
Shelter my soul, O my love!
My soul is bent low with the pain
And the burden of love, like the grace
Of a flower that is smitten with rain:
O shelter my soul from thy face!


The Illusion of Love

Beloved, you may be as all men say
Only a transient spark
Of flickering flame set in loam of clay –
I care not …since you kindle all my dark
With the immortal lustres of the day.

And as all men deem, dearest, you may be
Only a common shell
Chance-winnowed by the sea-winds from the sea –
The subtle murmurs of eternity.

And tho’ you are, like men or mortal race,
Only a hapless thing
That Death may mar and destiny efface –
I care not … since unto my heart you bring
The very vision of God’s dwelling-place.

Saturday, February 11, 2012

இந்தியத் திருநாட்டின்மறுமலர்ச்சியில் பெண்கள் - பகுதி - 13





இந்தியாவின் கோகிலம், வானம்பாடி!


கவிக்குயில் சரோஜினி அம்மையார் - (1879 - 1949)


சரோஜினி நாயுடு அம்மையார் 1879 ஆம் ஆண்டு, பிப்ரவரி 13 ஆம் நாள் , ஐதராபாத் நகரில் அவதரித்த கவியரசி. அவர்தம் இளம் வயதிலேயே விசேச குணங்கள் அமையப்பெற்ற அதிசயப் பிறவி. சுப்பிரமணிய பாரதிக்கு இணையாகத் தம் எழுச்சிமிகு கவிதைகள் மூலம் நாட்டு மக்களிடையே, சுதந்திர தாகத்தையும், விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தியதோடு தாமும் அப்போராட்டத்தில் பங்கு கொண்டவர்.இந்தியாவின் , முதல் பெண் மாநில ஆட்சித் தலைவர் மற்றும் இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவரும் ஆவார். அரசியல் சமுதாய சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியவர். கவிக்குயில், கவியரசி, இந்தியாவின் கோகிலம்,வானம்பாடி என்றெல்லாம் பல்வேறு பட்டங்களுடன் சிறப்பிக்கப்பட்டவர். சரோஜினி என்ற தம் பெயருக்கேற்றவாரு, குளத்தில் மலர்ந்த செந்தாமரை மலராக புகழ் மணம் வீச புவியை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார். உருது, ஆங்கிலம், வங்காளி மற்றும் பெர்சியன் மொழிகளில் வல்லவர்.


சரோஜினி நாயுடு ஒரு இந்து பிராமணக் குடும்பத்தில் , வேதமும், ஆகமமும் பயின்ற ,தத்துவ மேதை மற்றும் விஞ்ஞானியான அகோரநாத் சட்டோபாத்தியாயர் என்ற வங்காளிக்கும், வரத சுந்தரி என்ற வங்காள மொழிக் கவிஞருக்கும் , ஒரு பெரிய குடும்பத்தில் எட்டு குழந்தைகளின் மூத்தவராக, செல்ல மகளாகப் பிறந்தார். இவர் தந்தை ஐதராபாத் நகரத்தின் முதல் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர். நிஜாம் பேரரசில் ஒரு கல்லூரியை நிறுவி, அதில் தானே ஆசிரியராகவும் பணி புரிந்ததோடு, பொது நலச் சேவையிலும் அதிக ஈடுபாடு கொண்டவர் இவருடைய தந்தை.


சரோஜினி அம்மையார் ஆரம்பக்கல்வியை ஐதராபாத் நகரத்திலும், உயர்நிலைப் பள்ளிப் படிப்பை சென்னையிலும் பயின்றார். தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலேயே,மெட்ரிக்குலேசன் தேர்வை சென்னை மாநிலத்திலேயே முதலாவது மாணவியாக தேர்வு பெற்றார். இடையில் நான்கு ஆண்டுகால இடைவெளியில் பல்வேறு வகையான பிரிவுப் பாடங்களில் தம் கவனத்தைச் செலுத்தினார். 1895 ஆம் ஆண்டில் நிஜாம் கல்லூரி மூலமாக உபகாரச் சம்பளம் பெற்று, இங்கிலாந்து சென்று, அங்கு கிங்ஸ் கல்லூரியிலும், கேம்பிரிட்ஜ் கிர்டன் கல்லூரியிலும் தம் கல்வியைத் தொடர்ந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுத் தேறிய முதல் பெண்மணி என்ற பெருமையும் பெற்றவர் கவிக்குயில். ஆங்கில இலக்கியத்தில் பெரும் புலமை பெற்று விளங்கினார்.


இங்கிலாந்தில் இருந்த சமயம் , இரண்டாயிரம் அடிகள் கொண்ட ஒரு நீண்ட கவிதை நாடகம் ஒன்றும், கற்பனைக் கதையையும், தம் கல்லூரி ஆசிரியர்களான எட்மண்ட் கோஸ்,ஆர்தர் சைமன்ஸ் ,இருவரிடமும் காட்டினார். அவருடைய இலக்கணச் சுத்தமான படைப்புகளைக் கண்டு ஆச்சரியம் கொண்ட அவர்கள், சரோஜினி அம்மையாரை கவிதை வடிக்கும் ஆர்வத்தை மேலும் ஊக்கப்படுத்தினர். இதுவே அவருடைய அழகிய கவிதைகளுக்கான அடிப்படையாக அமைந்தது எனலாம். இதன் தொடர்ச்சியாகவே இவருடைய மிகப் புதுமையான, பிரபலமான, காதல் பாடல், குருவிப்பாடல், பல்லக்கு சுமப்போர் பாடல், நடிகர் பாடல், தாலாட்டு மற்றும் காட்டுப்பூ பாடல் சேணியன் பாடல் போன்ற அநேகம் பாடல்கள் உருவாகின. அலங்கார வார்த்தைகளும், நகைச்சுவையும்,ஆனந்தச் சுவையும் பொங்கி வழிந்த அவருடைய கவிதைகளில் பெரும் நாட்டம் கொண்ட அவருடைய ஆசிரியர்கள் எட்மண்ட் கோஸ் மற்றும் ஆர்தர் சைமன்சும் இக்கவிதைகளை புத்தகமாகக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன் பலனாக, 1905 ஆம் ஆண்டில்,முதல் தொகுப்பான The Golden Thershold ( தங்க வாசல்) மற்றும் 1912ல் The Bird of Time (காலப்பறவை) மற்றும் "The broken wing (1912)" என்ற தொகுப்புகளும் மலர்ந்தன. இந்நூல்கள் ஆங்கில சமுதாயத்தினரையும் பெரிதும் கவர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மக்களின் உள்ளத்து உணர்வுகளுக்கு வடிவம் கொடுத்து மேலை நாட்டவர்களுக்கும் விளங்கச் செய்தவர் இவரே. மிகப்பிரபலமான வங்கக் கவி தோருதத் என்பவருக்கு ஈடாக சரோஜினி அம்மையாரின் கவிதைகள் உள்ளதாக கோகலே வியந்து பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.


மெல்லிய இதயமும், பளிச்சென்ற கருத்துகளும் கொண்ட , ஆங்கில கலாச்சாரமும், இந்தியக் கலாச்சாரமும் ஒருங்கே அமையப்பெற்ற கவிக்குயிலின் பாடல்களில், டெனிசன், ஷெல்லி மற்றும் எலிசபெத் பேரட் பிரௌனிங் ஆகிய ஆங்கிலக் கவிஞர்களின் தாக்கமும் இருந்தது. மிகுந்த கற்பனை வளமும், தாள லயமும், இசை வடிவமும் , காதல், பிரிவு, ஏக்கம், இறப்பு,வாழ்வின் அற்புதங்கள் என்று அனைத்து ஆழ்மன உணர்வுகளையும் அழகு கவிதைகளாக்கும் வல்லமை பெற்றவரானார்.இந்திய அரசும் கேசரி ஹிந்த்என்னும் சிறப்பு வாய்ந்த பதக்கத்தைக் கொடுத்து அம்மையாரைக் கௌரவித்தது.


1898 ஆம் ஆண்டு தம் படிப்பை முடித்துக் கொண்டு, தாய் நாடு திரும்பியவர்,கோவிந்தராஜுலு என்கிற கீழ் சாதி என்று கூரப்பட்ட சாதியைச் சார்ந்த ஒரு மருத்துவரை ,பிரம்மசமாஜ முறைப்படி ஐதராபாத்தில் மணமுடித்து, இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயானார்.


தம்முடைய கவித்திறன் மற்றும் பேச்சுத் திறன் மூலம் , இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சாராம்சத்தை வெகு எளிதாக இந்தியா மற்றும் வெளிநாட்டிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.1914 ஆம் ஆண்டு இலண்டனில் தேசதந்தை அண்ணல் காந்தியடிகளைச் சந்தித்தார். அக்கணம் முதல் அவருடைய நம்பிக்கைக்குரிய சீடர்களில் ஒருவரானார். அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பை தோற்றுவித்தவர்களில் இவரும் ஒருவர். அன்னி பெசண்ட் அம்மையார் மற்றும் மார்கரெட் இ. கசின்ஸ் ஆகியோருடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றினார்.


பெண் கல்வி வளர்ச்சிக்காக இவர் ஆற்றிய தொண்டும் அளப்பரியது. ஒரு முறை ஐதராபாத் நகரில், இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக பல்லோர் வீடு வாசல்களையும் இழந்து பரிதவித்து நின்ற போது, தம் இனிய பேச்சின் மூலம் அனைத்து இந்திய மக்களிடமும் உருக்கமான வேண்டுகோள் விடுத்ததன் மூலம் குவிந்த பொருள் கொண்டு துன்பமுற்றோரின் துயர் களையப்பட்டது. இதில் கிடைத்த வெற்றி அவரைத் தொடர்ந்து சேவையில் ஈடுபடுத்திக் கொள்ள ஊக்குவித்தது.


தன்னுடைய நாவன்மையாலும், கவித்திறத்தாலும், இளைஞர்களை நாட்டு நலப்பணியில் ஈடுபடுத்தினார். இந்து - முஸ்லீம் ஒற்றுமை, சுய அரசாங்கம், சாதி மதமற்ற ஒருமைப்பாடு போன்ற கொள்கைகளை வலியுறுத்தினார். பால கங்காதர திலகர், கோபாலகிருஷ்ண கோகலே,சர்பிரோஸ்ஷாமேத்தா போன்ற பெருந்தலைவர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டு,அவர்களுடன் இணைந்து பணியாற்றினார். 1918ல் காஞ்சிபுரத்தில் நடந்த தமிழ் மாநில அரசியல் மகாநாட்டிற்கு தலைமை வகித்தார். பெண்கள் கல்வி கற்று முன்னேற வேண்டும் என்பதிலும், அவர்கள் சமையலறையைவிட்டு வெளியே வர வேண்டும் என்றும்,கைம்பெண்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் முழக்கம் எழுப்பினார். இவருடைய நாவன்மையின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக காந்தியடிகள் ,தென் ஆப்பிரிக்க மக்களின் உரிமைக்குக் குரல் கொடுக்க இவரைத் தேர்வு செய்து அனுப்பினார்.


1924இல் தென் ஆப்பிரிக்கா சென்று அங்கு நடைபெற்ற காங்கிரசு கூட்டத்தில் உருக்கமாகப் பேசி மக்களை ஊக்குவித்ததோடு, நேட்டாலில் இந்தியர்களின் உரிமையைப் பறிக்கும் மசோதாவை சட்டமாக்க ஆங்கிலேயர்கள் முயற்சி எடுப்பதை அறிந்த அம்மையார், தம் பேச்சு மற்றும் செய்திகளின் மூலமாகவும், தம் எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளிப்படுத்தினார்.

1928இல் காந்தியடிகளின் அறிவுரைப்படி அமெரிக்கா சென்று அங்கு வாழும் இந்தியர்களின் நாட்டுப்பற்றும், அவர்கள் கொண்டுள்ள சுதந்திர வேட்கையும் , அவர்களின் தியாகச் சிந்தையையும், அமெரிக்க மக்களுக்கு உணர்த்தும் விதமாக ஆழ்ந்த பேச்சை வழங்கினார். அமெரிக்க மக்களின் அனுதாபத்தையும் பெற்றார். காந்தியடிகள், மாளவியா ஆகியோருடன் சரோஜினி தேவியாரும், இந்தியப் பெண்களின் பிரதிநிதியாக சென்றார். மாண்டேகு சீர்திருத்தத்தை விமர்சித்ததோடு, ஆங்கிலேயர்களின் கொடுமைகளையும் அவர்கள் உள்ளம் நெகிழுமாறு தெளிவுபடுத்தினார்.


காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு, 1930 ஆம் ஆண்டு சிறை சென்ற பிறகு ,சரோஜினி தேவியாரே அக்கூட்டத்தை தலைமை தாங்கி வழிநடத்தினார்.அப்போது அண்ணலுடன் இவரும் ஏர்வாடா சிறையில் அடைக்கப்பட்டார். சிறைச்சாலையில் அவருக்குச் சகோதரியாகவும், பணிப்பெண்ணாகவும் உடனிருந்து நல்ல முறையில் கவனித்துக் கொண்டார். தம் கவித்திறன் மற்றும் நகைச்சுவைப் பேச்சுத்திறன் ஆகியவற்றின் மூலமாக சிறைச்சாலை வாழ்க்கையைக் கூட இனிமையாக்க முடிந்தது அவரால். இந்த சமயத்தில் அவருக்கு இருதய நோய் ஏற்பட்டு, இங்கிலாந்து சென்று சிகிச்சைப் பெற்றுத் திரும்பினார்.


1940 ஆம் ஆண்டு, தம் உடல்நலம் குன்றிய சமயத்திலும், காங்கிரசு தலைவர்களின் பேச்சுரிமைக்காக நடத்திய அறப்போரில் தானும் கலந்து கொண்டு சிறை சென்றார். இவருடைய அழகு பேச்சுக்கலையையும், நகைச்சுவையையும் கண்டு மகிழ்ந்த காந்தியடிகள் அவருக்கு இந்தியாவின் வானம்பாடி என்ற சிறப்புப் பெயரையும் வழங்கி கௌரவித்தார். கோபாலகிருஷ்ண கோகலே நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்த போது சரோஜினி தேவியார் அவரைச் சென்று சந்தித்து, நெடு நேரம் அளவளாவி வந்தபோது, கோகலே,சுதந்திரப் போராட்டத்தில் திரும்பவும் முழு முனைப்புடன் பணி செய்யத் தனக்கு சக்தி கிடைத்து விட்டதாகச் சொன்னார். அன்று இரவு நிம்மதியான உறக்கமும் வரும் என்றார்.1942 இல் சரோஜினி நாயுடு திரும்பவும், “வெள்ளையனே வெளியேறுஇயக்கத்திற்காக முழக்கமிட்டு சிறை பிடிக்கப்பட்டார். 21 மாதங்கள் காந்தியடிகளாருடன் சிறைவாசம். அண்ணலுடன் அவருடைய பாசப்பிணைப்பு அதிகமானது. அவரை மிக்கி மவுஸ்என்று செல்லமாக அழைப்பாராம், சரோஜினி அம்மையார்.


சிறையிலிருந்து விடுதலை ஆன பின்பு, 1944 ஆம் ஆண்டு, பிப்ரவரி 22ம் நாள் தன் இன்னுயிர் ஈந்த அன்னை கஸ்தூரிபாய் காந்தி அவர்களுக்கு நினைவு மண்டபம் எழுப்புவதற்கு அகில இந்திய மக்களிடம் வசூல் செய்த ரூபாய் 1 கோடி 31 இலட்சம்,தொகையை சௌபாத்தியில் அக்டோபர் 2,1944ல் நடந்த பொதுக்கூட்டத்தில் , அண்ணலின் 75வது பிறந்தநாள் விழாவில் வழங்கினார். இதுவே காந்தியடிகள் , அன்னை கஸ்தூரிபாய் காந்தி நினைவாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் கிராம சேவை மையம் ஆரம்பிப்பதற்கு அடித்தளமானது. இம்மையம், கிராம மகளிருக்கு சுகாதாரம், கல்வி, பல்வேறு நலத்திட்டங்கள்,தொழிற்கல்வி பயிற்சி மையங்கள், அவர்தம் உரிமைகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் , சுயமரியாதையை விளங்கச்செய்தல் போன்ற பல்வேறு பணிகளை பொறுப்பேற்றது இம்மையம். சுதந்திர இந்தியாவின் பெண்கள் முன்னேற்றத்திற்கு மற்றொரு மைல்கல் இச்சேவை மையம்.

மாபெரும் தியாகங்கள், போராட்டங்கள் என அனைத்தின் பரிசாக 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் நம் இந்திய நாடு சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்தது. நம் மூவர்ணக் கொடி பட்டொளி வீசி பறக்க ஆரம்பித்தது. சுதந்திரக் கொடியின் வண்ணமைப்புக் குழுவில் சரோஜினி அம்மையாரும் இணைந்திருந்தார். இந்நிகழ்ச்சியில் அவருடைய சுவையான எழுச்சிமிகு சொற்பொழிவு அனைவர் உள்ளத்திலும் வீர உணர்ச்சியையும்,உரிமைக்குரலையும் நிலைநாட்டிச் சென்றது. பண்டிட் ஜவஹர்லால் நேரு நாட்டின் பிரதமர் பொறுப்பேற்க, இந்திய மாகாணங்கள் அனைத்திற்கும் இந்தியர்களே கவர்னர் பொறுப்பேற்றனர். ஐக்கிய மாகாணமான உத்திரப்பிரதேசத்திற்கு கவிக்குயில் கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு தம் பணியை செவ்வனே செயலாற்றியதோடு, பல சிக்கல்களைத் தீர்க்கும் முகமாக மற்ற மந்திரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருந்தார்.


1948 ஆம் ஆண்டு அண்ணல் காந்தியடிகள் இன்னுயிர் நீத்தபோது உலகமே பேரதிர்ச்சிக்குள்ளான சமயம் சரோஜினி தேவியாரும் தாங்கவொண்ணா துயரத்துடன்,காந்தியடிகளின் அஸ்தியை திரிவேணி சங்கமத்தில் கரைத்தார். அண்ணலின் மறைவிற்குப் பின்னர் அம்மையாரின் உடல் நலத்திலும் நலிவு ஏற்பட ஆரம்பித்தது. அதிக இரத்த அழுத்தமும், சுவாசக் கோளாறும் அவர் உடல்நிலையைப் பெரிதும் பாதித்துள்ளது. மார்ச் மாதம் 2 ஆம் நாள் 1949 ஆம் ஆண்டு, லக்நோவில் அவர்தம் ஆழ்ந்த உறக்கம் துவங்கியது. ஜவஹர்லால் நேருஜி அவருடைய மறைவிற்கு மனம் வருந்தி உருக்கமாக ஆற்றிய உரையில், “ அரசியலில் அறத்தைப் புகுத்தினார் அண்ணல். கவியரசி சரோஜினியோ, அதற்கு கலையழகை ஊட்டினார். கவியாகத் துவங்கிய அவர்தம் வாழ்க்கையே ஒரு கவிதையாக மலர்ந்து விட்டதுஎன்று பாராட்டினார். தேசத்தலைவர்களுடன், லேடி மவுண்ட்பேட்டனும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு பெருமை சேர்த்தார்.

கல்வித்திட்டத்தில் கட்டாய இராணுவப்பயிற்சி சேர்க்க வேண்டும் என்ற இவரது கொள்கை சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.மாணவர்கள் மத்தியில் சொற்பொழிவாற்றும் போது இராணுவப்பயிற்சியில் இளைஞர்கள் உற்சாகமாக பங்குபெற முன்வர வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வந்தார். அவருடைய காலப்பறவை’, “தங்க இறகு’, விழித்தெழு’, ‘தங்க வாசல்போன்ற கவிதைத் தொகுப்புகள் இன்றளவும் அவர்தம் புகழ் பாடிக்கொண்டிருக்கின்றன. கல்வி முறையில், சாலைப் போக்குவரத்தில், கிராம ஆட்சியில் அவர் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என முழங்கியதும் சிந்திக்கப்பட வேண்டியது. பெண்குலப் பெருமையை அகில உலகிலும் நிலைநாட்டிய பெருமையும் அவரைச் சாரும். பெண் குலத்திற்கு நல்லதொரு வழிகாட்டியாகவும், நல்லதொரு குடும்பத் தலைவியாகவும்,தியாகச் சிந்தை கொண்டவராகவும், பெண்குலப் பெருமையை நிலைநாட்டுபவராகவும் உலக சரித்திரத்தில் நீங்காத இடம் பிடித்தவர் அம்மையார்.


ஒரு கவிஞர் என்பவர், கற்பனைச் சோலையுள், மலர்ப்பூஞ்சோலைகளின் நறுமணத்தினூடேயும், இயற்கையின் இன்பத் தேனைப் பருகிக் கொண்டு அம்மயக்கத்தில் இனிய கானங்கள் மட்டும் இசைத்துக் கொண்டு, மக்களைப் பரவசப்படுத்தும் ஒரு இசைக்கருவியாக மட்டும் இராது, சக மனிதர்களின் துயரங்களிலும் பங்கு கொண்டு அவர்தம் துயர் தீர்க்கும் முகமாக, போர்க்களத்தினிடையேயும் பரணி பாடும் வல்லமை கொண்டவனாக இருப்பவனே சிறந்த கவியாக இருக்க முடியும் என்பதற்கான முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் கவியரசி சரோஜினி அம்மையார். ஓய்ந்து போன உழைப்பாளிகளுக்கும், துவண்டு போன மக்களுக்கும், தம் உரிமையைக் கூட உணராத பேதைப்பெண்டிருக்கும்,சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் விழிப்புணர்வையும், எழுச்சியையும் ஊட்டும் உன்னத கவிஞர் கவிக்குயில் சரோஜினி தேவியார் என்றால் அது மிகையாகாது. தலைசிறந்த பேச்சாளர்,பெருங்கவி, மிக வித்தியாசமான அழகு, ஆழ்ந்த , அதே சமயம் நகைச்சுவையும் கலந்த பேச்சு, நிர்வாகத் திறன்கள் மற்றும் சிறந்த தலைமைப் பண்பு” - அவருடைய இறுதி அஞ்சலியாக உத்திரப்பிரதேச அரசாங்கம் செலுத்திய பாராட்டு மொழிகள் மூலமாகவே இவர்தம் பெருமையை முழுமையாக உணர முடிகிறதன்றோ!

Wednesday, February 8, 2012

பெண்ணாலம்

பட்டொளிவீசும் பதின்மத்தின் தலைவாசலில்
பட்டுத்தெளியும் திருமணபந்தமெனும்
சிறைவாசம்.

கடமையே கண்ணாக கணவனின்
சுகசீவனமே
மாசற்ற கற்புநெறியாக

இனிய பதினாறில் இளம்தாயாகி
மறுபிறவியாய்
மகத்தான தலைப்பிரசவம்.

கனியும் காதலால் உறவுகளையும் சுமக்கும்
அச்சாணியாய்
குதூகலமான குடும்பபாரம்.

தளிர்நடை பயிலும் முன்பே மூத்தாளாக
உயரச்செய்த
வல்லமையான மறுபிரசவம்.

தொலைக்காட்சி திரைக்காட்சி அபூர்வமான
காலகட்டத்தில்
கட்டில்காட்சியே பொழுதுபோக்காய்!

தொன்விருட்சமாய் விழுதுகள்
இரத்த பந்தங்கள்
சூப்பிய பனங்கொட்டையாய் சுண்டியவதனம்.

பொருளாதாரமும் வாழ்வாதாரமும்
உரையும்கோட்டின்
உளைச்சலின் உச்சம்.

குருதியும்கொதித்து இருதயமும்துடித்து
பரிதவிக்கும்வேளை
கிடுகிடுக்குமோசை படபடக்குமுயிர்.

சரசரக்கும் பாசக்கயிறை வீசி
துடிதுடிக்கும் உயிரை
சிகரமேற்றும் சிலிர்ப்பு .

பட்டதெல்லாம் போதுமினித்துயர் படமுடியாதென்றே
பந்தபாசம் விலக்கி
பக்திநெறிப் பயணத்தின் ஆயத்தமாக

விழுதுகள் வேரூன்ற உற்றதுணை நாடி
கூப்பித்தொழும் முதிதையில்
மாலவனின் மாயலீலையால் காலனின்கயிறும் பொடிப்பொடியாக

பாசமும்வெல்ல நேசமும்சிறகடிக்க
படபட இதயமும்
மெதுமெதுவாய் துடிக்க

லப்..டப்….லப்…..டப் ஓசையுடன்
இதயக்கண் விழிக்க
பட்டதுயரே இதமாய் இனிக்க

கனிந்துநின்று கசிந்து உருகி
மாடாயுழைத்து ஓடாய்த்தேய்ந்து
தண்ணளி வீசும் பெண்ணாலம்!!!!

படத்திற்கு நன்றி :

http://upload.wikimedia.org/wikipedia/commons/9/9b/Banyan_tree_on_the_banks_of_Khadakwasla_Dam.jpg

நன்றி : வல்லமை பிரசுரம்

Saturday, February 4, 2012

முகத்தின் அழகே அகத்தின் அழகு!

இன்று உலக புற்று நோய் தினம்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். உடல் ஆரோக்கியமே உள்ள ஆரோக்கியம். முகத்தில் நோயின் உபாதைகள் இல்லாத உற்சாகமே அகத்திற்கும் அழகைக் கொடுக்கும். எத்துனை கோடி செல்வங்கள் இருந்தாலும் நோயிற் கிடவாமல், நொந்து மனம் வாடாமல், பாயிற் கிடவாமல் பாசக்கயிறு வந்து விடுமோ என்ற பயங் கொள்ளாமல் வாழ்கின்ற அந்த சலனமற்ற வாழ்க்கையே சுவர்கம். நம் வாழ்க்கையை சுவர்கம் ஆக்குவதும் , நரகமாக்குவதும் நம் கைகளில்தான் உள்ளது. சில நேரங்களில் தெளிந்த நீரோடையாக ஓடிக் கொண்டிருக்கும் அமைதியான வாழ்க்கையில், புயலாக வந்து தாக்கும் சில நோய்களுக்கான காரணமும் புரியாது….. அதையும் எதிர் கொண்டு தாக்குதலை சமாளிக்கும் பக்குவத்தையும் பெற முயல வேண்டும். நமக்கு மிக நெருங்கியவர்கள் நம் கண் முன்னே சிரமப்படும் வேளையில் அதனைச் சமாளிப்பது சாமான்ய காரியமல்ல.

அந்த வகையில், உலக புற்று நோய் தினமான இன்று புற்று நோய் பற்றிய ஒரு சிறிய விழிப்புணர்வாவது கொள்ள வேண்டியது அவசியமாகிறது. காரணம் மனித வாழ்க்கைக்கு சவாலாக இருந்து வரும் நோய்களில் இரண்டாவது இடத்தில் இருப்பது புற்று நோய். நம் இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றிற்கு சுமாராக ஏழு இலட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதில் போதுமான சிகிச்சையின்றியும், முறையற்ற சிகிச்சையினாலும் , 3,50,000 பேர் இறந்து போகிறார்கள் என்று சமீபத்திய ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்தியப் பெண்களில், ஒரு இலட்சம் பேர்களில் முப்பது பெண்களுக்கு மார்பகப் புற்று நோயும், பத்தொன்பது பேருக்கு கருப்பைவாய் புற்று நோயும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கருப்பைவாய் புற்றுநோய் எளிய வழியில் தடுக்கக் கூடியதாகும், மார்பகப் புற்று நோயும் ஆரம்ப நிலையில் கண்டறியப்படுமானால் முற்றிலுமாக குணப்படுத்திவிட முடியும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். நம் இந்தியாவின் மொத்த மக்கட் தொகையில் கிட்டத்தட்ட 95% மக்கள் புற்று நோய் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாதவர்களாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். படித்த பெண்கள் கூட ஒரு மெத்த்னப் போக்கால் சரியான விழிப்புணர்வு கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். பொதுவாகவே கூச்ச சுபாவம் உள்ளவர்கள் பெண்கள். அதன் காரணமாகவே பெண் மருத்துவர்களிடம் கூட பல நேரங்களில் மார்பகப் புற்று நோய் பற்றிக் கூறவோ, தனக்கிருக்கும் அறிகுறிகளை மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவோ தயங்கிக் கொண்டு, நோயை முற்ற விட்டு விடுகிறார்கள். ஒரு சிலர் அதிக செலவாகுமே என்ற தயக்கத்திலேயே இயன்றவரை வெளியே சொல்லாமல் தள்ளிப் போட்டு விடுகிறார்கள். ஆனால் கால்ங்கடந்து தானாக வெளியே தெரியவரும் போது, நோயின் உபாதைகளும் அதிகமாகி, பணச்செலவும் இரட்டிப்பாகி, தம்மைச் சார்ந்தவர்களுக்கும் அதிக வேதனையைக் கொடுக்க வேண்டியதாகி விடும்.

கான்சர் என்கிற இந்தப் புற்று நோய் வருவதற்கான முழுமையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதற்காக இந்தியாவிலும், மற்றைய உலக நாடுகளிலும், ஆயுர்வேதம் மற்றும் அனைத்து முறைகளிலும், ஆய்வுகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தில்லியில் ஆண்களுக்கு அதிகமாக நுரையீரல் புற்று நோய் இருக்கிறது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது, கடலூர் மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 40 சதவீதம் வரை அதிகமாக இருக்கிறது. கடலூர் ரசாயனத் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகளால், சுற்றுச்சூழல் பெரிதும் மாசுபடுவதே இதற்கு முக்கியக் காரணம் என்று, இந்திய மருத்துவச் சங்கம் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டு உள்ளது.

பொதுவாக பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத்தான் புற்றுநோய் பாதிப்பு வரும் என்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் சிறு வயதினரிடையே கூட அதிகம் புற்றுநோய் காணப்படுகிறது. அறுவைச் சிகிச்சைக்காக, புற்று நோயாளிகள், நாளொன்றுக்கு ஒருவர் வீதம், வருகிறார்கள். புற்றுநோயால் நான்கு கட்டமாக பாதிப்புகள் ஏற்படுகிறது. அதில் பெரும்பாலான நோயாளிகள் 4-வது கட்டத்தில், தான் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அதாவது மக்களிடையே சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் குணமாக்க முடியாத நிலையில் தான் மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். என்கிறார்கள் வல்லுநர்கள். வருடம் ஒரு முறையாவது பொது மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது அனைத்துப் பருவத்தினக்கும் நல்லது. நோய் இருப்பதற்கான ஒரு சிறு சந்தேகம் ஏற்பட்டாலோ, நம் உடல் நலத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டாலோ, தயக்கமின்றி மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

மருத்துவச் செலவிற்கு அஞ்ச வேண்டிய கட்டாயம் இல்லாமல் ஒருவரும் இருக்கவே முடியாது. ஆனாலும் பல நேரங்களில் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் இது தவிர்க்க முடியாததாகிப் போவதும் உண்டு. இருப்பினும், தகுந்த காப்பீட்டுத் திட்டங்கள் முன் கூட்டியே தயார் செய்து வைத்துக் கொள்வது நலம். ஆரோக்கியமாக இருக்கும் காலத்திலேயே, நோய் வந்தால் என்ன செய்யப் போகிறோம், என்பதை யோசித்து வைத்துக் கொள்ள வேண்டும். நெருப்பு என்று சொல்வதாலேயே வாய் வெந்து விடப் போவதில்லை. எதிர்பார்த்து பணம் சேமித்து வைத்த பிறகு, நோய் வராவிட்டால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அதை வேறு நல்ல காரியங்களுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லவா? சேமித்து வைத்திருக்கும் அந்தப் பணமே மனதிற்கு தெம்பையும் கொடுத்து, நோயிலிருந்து காக்கவும் செய்யும். ஆக நோய் வராம்ல் காப்பதும், நோய் வந்த பின்பு சரியான மருத்துவரை அணுகி, முறையான மருத்துவம் மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.

மார்பகப் புற்று நோய் பற்றி அறிந்து கொள்ள:

http://www.breastcancer.org/symptoms/understand_bc/index.jsp?gclid=COmHhr2hhK4CFQUb6wodNxKR3w

படத்திற்கு நன்றி : http://www.medicinenet.com/breast_cancer/article.htm

Friday, February 3, 2012

இந்தியத் திருநாட்டின் சமுதாய மறுமலர்ச்சியில் பெண்கள் - பகுதி - 11


"If I die a violent death as some fear and a few are plotting, I know the violence will be in the thought and the action of the assassin, not in my dying......!" Indira Gandhi.

”பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்!” - மகாகவி பாரதி.

நெஞ்சுரமும், நேர்மைத்திறமும், நேர் கொண்ட பார்வையும் அஞ்சா நெஞ்சமும் கொண்ட மாதர் குல திலகம் , 'இரும்பு பெண்மணி’, இந்திரா பிரியதர்சினி, அவதரித்தது, ஜவஹர்லால் நேரு மற்றும் கமலா நேரு என்ற புகழ்பெற்ற பெற்றோரின் கருவில். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய முப்பெரும் நதிகள் ஒன்று கூடும் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் அலகாபாத் நகரில். மற்ற குழந்தைகளைப் போன்று பெற்றோரின் முழுமையான அரவணைப்பில் கடந்ததல்ல அவருடைய இளம் பிராயம். ஆம், நவம்பர் 19, 1917இல் பிறந்தார் இவர். பிறந்த இரண்டாண்டுகளில், 1919 ஆம் ஆண்டு நம் தேசத் தந்தை மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பியவுடன், நேரு குடும்பத்தின் அடிக்கடி தொடர் சந்திப்பின் மூலமாக இந்திய சுதந்திர தாகத்தை எழுச்சியூட்டி, அவர்களை முழுமையாக ஈடுபடச் செய்தார். அவருடைய நான்காம் வயதில், தந்தை ஜவஹர்லால் நேருவும், தாத்தா மோத்திலால் நேருவும் முதல் முறையாக சிறை சென்ற போது. பின்பு தாயும் இணைந்து கொள்ள, போகப்போக அதுவே வாடிக்கையாகிவிட்டிருக்கிறது. பிற்காலங்களில் தம் இளம் பிராயத்தை நினைவு கூர்கையில் இளம் வயதில் ஒரு பாதுகாப்பற்ற உணர்வு தனக்கு இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். தாயின் மெல்லிய உடல் வாகையையும், தந்தையின் கூரிய நாசியும், துணிவும் கொண்டவர்.

அவர் பிறந்த நேரம் முதல் உலகப் போர் முடிந்த நேரம். தந்தையும், தாத்தாவும் சிறையில் அடைபட,, குடும்பத்தின் மற்ற பெண்களுடன் குழந்தை இந்திராவும் காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் தங்க வேண்டிய கட்டாயம். ஆசிரம வாழ்க்கை புதிய அனுபவத்தையும், சுதந்திரப் போராட்ட வித்தையும் விதைத்தது. அதன் காரணமாக பால்யகால விளையாட்டே மேடைப்பேச்சு, கைது, கூட்டம் ஆங்கிலப் போர் வீரர்களை போரிட்டு முறியடிப்பது என்பது போல் அமைந்தது, அவருடைய பிற்கால வாழ்க்கை முறைமைகளுக்கு அடித்தளமாக அமைந்தது. இதுவே அவர் ஒரு சுதந்திர உணர்வுள்ள , உறுதியான இதயம் கொண்ட ஒரு பெண்ணாக வளர வழி வகுத்தது.

அவருடைய குழந்தைப்பள்ளி தில்லியிலும், பள்ளிப்படிப்பு முதலில் அலகாபாத் நகரில் ஒரு கான்வெண்ட் பள்ளியிலும் பின்பு ஒரு தங்கும் பள்ளியிலும் தொடர்ந்தது. புத்தகம் படிப்பதில் ஆழ்ந்த விருப்பம் கொண்டவராக வளர்ந்தார். தந்தை வாங்கி வைத்திருந்த பெரும்பாலான புத்தகங்களை வாசித்திருக்கிறார். கவிஞர், எழுத்தாளர், ஓவியர் என பல்வேறு முகங்கள் கொண்ட ரவீந்திரநாத் தாகூரின், சாந்தி நிகேதன் பள்ளியில் , சேர்க்கப்பட்டார். இதைப்பற்றிக் கூறும் போது அவர், “ தந்தையின் முயற்சியால் ஏற்கனவே எனக்கு இலக்கியத் தொடர்பு இருப்பினும், சாந்தி நிகேதனுக்குச் சென்றவுடன் தாகூர் மூலமாக கலையுலகின் கதவு தானாகத் திறந்தது” என்றார். தன்னுடைய 11வது வயதில் இராமாயணக் காப்பியத்தில் வருவது போன்று, வானரப் படையை நிறுவ முயன்றார். தன் வயதொத்த சிறுவர் சிறுமியரை இணைத்து, வானரசேனை என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்து வைத்தார்.


வானரசேனை என்ற இந்த அமைப்பு பல அரும் பணிகளைச் செய்தன. அதாவது, சுதந்திரப் போராட்ட வீரார்களுக்கு உணவு, குடிநீர் விநியோகம் செய்வது, கொடிகள் தைத்துக் கொடுப்பது, கல்வியறிவற்றவர்களுக்கு தேவையான மடல்கள் எழுதிக் கொடுப்பது, விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டு தலைமறைவாக வாழ்பவர்களுக்கு மடல் கொண்டு சேர்க்கும் சேவையைச் செய்தல், சமையல் செய்து கொடுத்தல் போன்ற எண்ணற்றப் பணிகள் செய்து வந்தனர். இவையனைத்தும் அண்ணல் காந்தியடிகளின் கொள்கைகளின் தாக்கம்தான் என்பதை அவரே, 1930 இல் பூனாவில் ஒரு பள்ளியில் படிக்கும் போது, ” காந்தியடிகள் என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருந்தார். என் ஒவ்வொரு செயல்களிலும் முன்னேற்றங்களிலும் அவருக்கு பெரும் பங்கு உண்டு” என்ற சொற்கள் மூலம் அதை உறுதிபடுத்தினார்.

”பாலசர்க்கா சங்கம்” என்ற நிறுவனத்தை , காந்தியடிகளின் அறிவுரைப்படி நிறுவி, சிறுவர், சிறுமியுடன், நூற்பு வேள்வியை மேற்கொண்டார். ஆனந்த பவனம் என்ற தம்முடைய மாளிகையின் மூத்த பணியாளர் ஒருவருக்கு தம் இளம் வயதிலேயே கல்வி கற்பிக்கும் பணியும் மேற்கொண்டார். தம் இல்லத்திற்கு சற்று அருகாமையில் இருந்த ஒரு தொழுநோய் இல்லத்திற்கு அடிக்கடி சென்று தன்னால் ஆன சேவைகளைச் செய்ய முற்பட்டிருக்கிறார்.

இந்திரா தம்முடைய 17 வது வயதில் தன் தாய் கமலா நேருவிற்கு காசநோயினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட காரணத்தினால், அவருடைய மருத்துவத்திற்காக அவருடன் சுவிட்சர்லாந்து செல்லவேண்டி வந்தது. அந்த நேரத்தில் தந்தையும் சிறைச்சாலையில், ஆனால் 1936 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், 28ஆம் நாள் தாய் கமலா நேரு இறந்தபோது தந்தை விடுதலை செய்யப்பட்டு, உடனிருந்தார். இந்தியாவிற்கு திரும்பியபோது, மிக அழுத்தமான ஒரு சூழலில் சிக்குண்டு இருந்தார். வேதனை, கவலை, அனைத்திற்கும் மேலாக தனிமை! இந்த நேரத்தில் தம் பால்ய கால நண்பரான பிரோஸ்காந்திதான் இவருக்கு உடனிருந்து ஆறுதலளித்து வந்தார். நேரு குடும்பத்தின் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர் இவர். இரண்டாம் உலகப் போர் தொடங்கப் போகும் சில காலம் முன்னர்தான் அவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் சேர்ந்தார்.

மோதிலால் நேரு தம் பெருஞ்செல்வத்தை தேசத்திற்காக அளித்துவிட்டார். நேரு தாம் எழுதிய புத்தகத்தின் மூலமாகக் கிடைத்த வருமானத்தைக் கொண்டுதான் தம் மகளைப் படிக்க வைத்தார்.
ஒரு ஆண்டிற்குள்ளாக அங்கு அவருடைய உடல் நிலை பாதிக்கப்பட்டு, சுவிட்சர்லாந்து சென்று மருத்துவம் பார்க்க வேண்டி வந்தது. நோயின் கொடுமையும், தனிமையும் ஒரு சேர வாட்ட, அந்த நேரத்தில் பிரோஸ்காந்தி அவருக்குத் துணையாகவும், ஆதரவாகவும் இருந்துள்ளார். 1939 இல் இரண்டாம் உலகப்போர் ஆரம்பமானவுடன், இந்திரா, கப்பல் மூலமாக, பிரோஸ்காந்தியுடன் இந்தியா வந்து சேர்ந்தார். தன் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக பிரோஸ்காந்தியை 1941 ஆம் ஆண்டு,மார்ச் மாதம் அலகாபாத்தில் அவரை மணந்து கொண்டு, லக்னோவில் தம் திருமண வாழ்க்கையைத் துவங்கினார். நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கையில் மேலாளராக பணி புரிந்தார் பிரோஸ்காந்தி. அப்பத்திரிக்கையின் பெண்கள் பகுதியை கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் இந்திராவிற்குக் கிடைத்தது. 1944 ஆகஸ்ட் 20 ஆம் தேதி மும்பையில் ராஜீவ் காந்தியைப் பெற்றெடுத்தார் இந்திரா.

பிரோகம் மும்பையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரசு கமிட்டி கூட்டத்திற்கு இந்திராவும் சென்றார். ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற இயக்கமும் இங்குதான் துவக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில், நேருஜி, இந்திரா காந்தி மற்றும் பிரோஸ்காந்தி மூவரும் கைது செய்யப்பட்டு , சிறை வைக்கப்பட்டனர்.

நம் இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திருநாளும், ஆகஸ்ட் 15 ஆம் நாள் 1947 ஆம் ஆண்டு வந்தது. ஆனாலும் இந்திய - பாகிஸ்தான் பிரிவினையும் உடன் வந்தது, மகாத்மாவை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. மத வெறியும், வகுப்புக் கலவரங்களும் நாட்டில் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தின. மக்கள் பாகிஸ்தானிலிருந்து கூட்டம் கூட்டமாக அகதிகளாக வந்தனர். இந்த அகதிகள் முகாமிற்கு அன்னை இந்திரா நேரிடையாகச் சென்று, அவர்களுக்கு உணவு, உடை என எந்த குறைவும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். இஸ்லாமியர்கள் வாழ்ந்த பகுதிக்கும் எந்த அச்சமுமின்றி சென்று வந்தார்.

சுதந்திர இந்தியாவின் பிரதம மந்திரியாக பதவியேற்ற ஜவஹர்லால் நேரு, தம் இறுதிக் காலமான 1967 வரை பதவியில் இருந்தார். அந்த காலகட்டத்தில், தாய் உயிருடன் இல்லாத காரணத்தினால் , குடும்பப் பராமரிப்பிற்காக இந்திராவும் , தம் கணவர், குழந்தைகளுடன் மும்மூர்த்தி இல்லத்தில் (Teen Murthi House) தங்க வேண்டி வந்தது. உலக நாடுகளின் அழைப்பை ஏற்ற தந்தையுடன் பல நாடுகளுக்குப் பயணம் செய்வதற்கும், பல அரசியல் பிரபலங்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது அவருக்கு. 18 ஆண்டு காலம் தந்தையுடன் கற்ற அரசியல் நெளிவு சுளிவுகள், இந்திராவை ஒரு பெரும் ராஜதந்திரியாகவும், சிறந்த அரசியல்வாதியாகவும் பண்படுத்தியது. பாரிசில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபை கூட்டத்திற்கும், காமன்வெல்த் மாநாட்டிற்கும், மற்றும் அமெரிக்காவிற்கும் தன் தந்தையுடன் சென்று வந்தது பல அனுபவங்களைக் கொடுத்தது. எலிசபெத் மகாராணியின் மகுடாபிஷேகதிற்கான அழைப்பை ஏற்று அங்கு சென்றபோது, வின்ஸ்டன் சர்ச்சிலையும் சந்தித்தார். 1952 இல் தீன் மூர்த்தி பவனுக்கு வந்த அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி திருமதி ரூஸ்வெல்ட்டைச் சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

1959 இல், பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரி இந்திராகாந்தி அம்மையாரை செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராக நியமித்தார். குறைந்த விலையில் வானொலி தயாரிப்பதையும், குடும்ப நலத்திட்டத்தையும் துவக்கி வைத்தார். பிரோஸ்காந்தி பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1956 முதல் 1960 வரை அகில இந்திய காங்கிரசின் இளைஞர் அணித்தலைவராக இருந்தார் இந்திரா காந்தி. 1960 ஆம் ஆண்டு பிரோஸ்காந்தியின் திடீர் மறைவு இந்திராவை மிகவும் பாதித்தது. 1964 ஆம் ஆண்டு, புவனேசுவரம் காங்கிரசு மாநாட்டில் மயக்கமுற்று விழுந்த தந்தை நேருஜியை கண்ணும் கருத்துமாக மகள் கவனித்துக் கொண்டாலும், காலன் அவரையும் விட்டு வைக்காமல் மே மாதம் 27ஆம் நாள் அதே வருடத்தில் அழைத்துக் கொண்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் , வலுவடைந்திருந்த நேரம், தமிழ் நாட்டிற்கு வந்திருந்த அன்னை இந்திரா மக்களின் நல்லாதரவையும் பெற்றிருந்தார். தேசிய ஒருமைப்பாட்டை மிகவும் நேசித்த அன்னையின் சேவையைப் பாராட்டும் விதமாக அவர்தம் பிறந்த நாளை தேசிய ஒருமைப்பாட்டு தினமாகக் கொண்டாடுவதும் சிறப்பு

பாகிஸ்தான் படை வீரர்களின் காஷ்மீர் ஊடுறுவல் கலவரத்தை ஏற்படுத்தியது. இந்திராகாந்தி ஸ்ரீநகர் சென்று பல பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார். போர் உருவாகி, நிறுத்தமும் ஏற்பட்டது. சிப்பாய்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஊக்கமளித்தார். பாகிஸ்தானுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வதற்காக லால் பகதூர் சாஸ்திரி ரஷ்யாவிலுள்ள தாஷ்கண்டிற்கு சென்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்பு அங்கேயே லால் பகதூர் சாஸ்திரி மாரடைப்பால் காலமானார். அவர் மறைவிற்குப் பிறகு 1966 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 25ம் நாள் இந்தியாவின் பிரதமர் ஆனார். காமராசரின் உறுதுணை பெரும் பலமானது இவருக்கு. பிரதமராக இவர் ஆற்றிய தொண்டு பாரே புகழும் வண்ணம் இருந்தது!

1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து இலட்சக்கணக்கான அகதிகள் சாரிசாரியாக இந்தியா நோக்கி வர ஆரம்பித்தார்கள். இது பெரும் பிரச்சனையாக உருவெடுக்க ஆரம்பித்த நேரம், இந்திராவின் நண்பர் ஒருவர், தான் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாட்டிற்கும், அந்தக் கோடை விடுமுறையில் செல்லப் போவதாக சொன்னபோது, அன்னை சற்றும் தயங்காது, “ பலர் உங்களிடம் வந்து இந்தியாவில் என்ன நடக்கிறது என்று கேட்பார்கள். அப்போது நீங்கள், இன்னும் ஓர் ஆண்டு காலத்தில் மேற்கு வங்காளத்திலிருந்து இந்திய மண்ணிற்கு வரும் அகதிகளே இருக்க மாட்டார்கள் என்று இந்தியப் பிரதமர் ,அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாகச் சொல்லுங்கள்”என்றார். மேற்கு வங்க இடதுசாரிகளின் கிளர்ச்சியைத் துணிவுடன் எதிர்கொண்டு ஜனநாயக முறையில் சமாளித்தார். கேரளாவில் உணவுப் பிரச்சனை போன்ற பல பிரச்சனைகள் தலை தூக்கிய நேரம் அது. வாஷ்ங்டன் சென்று ஜனாதிபதியுடன் பேசிக் கொண்டிருந்த போது, “ என் நாட்டு மக்களுக்காக விடம் அருந்தச் சொன்னாலும், தயங்காமல் அருந்துவேன்” என்று சொன்னது அவர் நாட்டின் மீது கொண்டிருந்த அபரிமிதமான பற்றைக் காட்டியது. அவருடைய துணிச்சலான போக்கு பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டது.

“ இந்து மதத்தின் வேதாந்தத் தத்துவங்களில் எனக்கு நல்ல நம்பிக்கை இருந்தாலும், மனித குலத்தைப் பிரிக்கும் அந்த மதவெறியைத் தீவிரமாக எதிர்க்கிறேன்” என்ற தெளிவான சிந்தனை கொண்டிருந்தார். உலகளவில், பொதுவுடைமை அல்லாத 70 நாடுகள் பங்கு கொண்ட, வாக்கெடுப்பில், உலகப்புகழ் பெற்ற தலைவராக இந்திரா காந்தி அம்மையாரே தேர்ந்தெடுக்கப்படது குறிப்பிடத்தக்கது. இவர் செய்த பல அரிய சாதனைகளே இதற்குக் காரணம்.தன் ஆட்சிக் காலத்தில் நாணயத்தின் மதிப்பைக் குறைத்தார். உச்சநீதி மன்ற தலைமைப் பதவி நியமனத்தை மூப்புரிமை அடிப்படையில் செய்யும் மரபை மாற்றியமைத்தார்.

பஞ்சாப் கலவரம் தீவிரமான வேளையில் அவர்களை ஒடுக்க பொற்கோவிலுக்குள் இராணுவத்தை அனுப்பினார். 1984 ஆம் ஆண்டில், ‘ஆபரேஷன் புளூ ஸ்டார்” தீவிரவாதிகளை ஒடுக்க வைத்ததோடு பிந்த்ரன்வாலே கொல்லப்பட்டார். இந்த நேரத்தில்தான் சீக்கிய மக்களின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டி வந்தது அவருக்கு. ஜனநாயகத்தைப் பாதுகாக்க நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த வேண்டி வந்தது. 1969 இல் பதினான்கு மிகப்பெரிய வங்கிகள் தேசிய உடமையாக்கப்பட்டது. பத்திரிக்கை தணிக்கை முறை ஒழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மன்னர்களுக்கு அளிக்கப்பட்ட மானியங்கள் நிறுத்தப்பட்டது. பஞ்சாப் மட்டுமன்றி, காஷ்மீர், மணிப்பூர், அஸ்ஸாம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய இடங்களில் ஏற்பட்ட பிரிவினை வாதமும் முடக்கப்பட்டது. இப்படி பல்வேறு சோதனைகளைக் களைந்து சாதனைகளாக மாற்றிய பெருமை அம்மையாரையேச் சேரும்.

அவருடைய பல்வேறு நாட்டு நலப்பணித்திட்டங்கள் ,மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதில் முக்கியமானது இருபது அம்சத் திட்டம். இத்திட்டத்தின் மூலம், மலை சாதி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், கிராமப்புற, வறுமைக் கோட்டின் கீழே உள்ள மகளிர், ஆகியோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட இத்திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அறிவியல் துறையும், வான் ஆய்வு மையங்களும் பெரும் வளர்ச்சி கண்டது அம்மையாரின் ஆட்சிக்காலத்தில். பொருளாதாரமும் நல்ல வளர்ச்சியடைந்தது. நம் இந்திய நாட்டு விஞ்ஞானிகளின் தனிப்பட்ட முயற்சியால் அணு ஆய்வு சோதனையிலும் வெற்றி கண்டதும் குறிப்பிடத்தக்கது. பல ஏவுகணைகள் விண்ணில் செலுத்தப்பட்டன. தொலைத்தொடர்பிற்கென பல கோள்கள் செலுத்தப்பட்டன. இன்சாட் A, B விண் வெளிக்கலங்கள், அணுமின் நிலையங்கள், பெரிய தொழிற்சாலைகள் என அனைத்தும் வெற்றிகரமாக செயல்பட்டன.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளை சீரிய முறையில் நடத்தியமைக்காக 1982 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் கழகத்தின் விருது இவருக்கு வழங்கப்பட்டது. தொள்ளாயிரத்தைம்பது நாடுகள் இணைந்த கூட்டுச் சேரா இயக்கத்தின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தன்னுடைய அன்பான போக்கினாலும், சாமர்த்தியமான செயல்களினாலும், நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களைத் தீர்த்து வைத்தார். ஓயாத உழைப்பும், உன்னத முயற்சியும், நாட்டை உயர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கும் அவரை உச்சாணியில் ஏற்றி வைத்த வேளையில், துரதிருஷ்டவசமாக, அக்டோபர் 31ந்தேதி, 1984 ஆம் ஆண்டு, அவருடைய இரண்டு சீக்கிய மெய்க்காப்பாளர்களான பியாந்த்சிங் மற்றும் சத்வந்த்சிங் என்பவர்களால் ஈவு இரக்கமின்றி, சுட்டுக் கொல்லப்பட்டார். தன்னிகரில்லா அந்தத் தியாகச்சுடரின் அஸ்தி நாற்பது கலசங்களில் சேகரிக்கப்பட்டு, மக்களின் அஞ்சலிக்காக நாட்டின் பல முக்கிய தலைநகரங்களில் வைக்கப்பட்டிருந்தது. யமுனை ஆற்றங்கரையில் அவர்தம் நல்லுடல் தகனம் செய்யப்பட்டது.

நல்ல பல குறிக்கோள்களை , பல்வேறு சோதனைகளுக்கிடையேயும் நிறைவேற்றிக் காட்டிய சாதனைப் பெண்மணி அன்னை இந்திரா. மனிதாபிமானம், சகோதரத்துவம், அநியாயத்தைத் தட்டிக்கேட்கும் துணிச்சல், சகமனிதர்களிடம் அன்பு, நாட்டுப்பற்று, விடாமுயற்சி இப்படி ஆக்கப்பூர்வமான நல்லெண்ணங்கள் மூலமாகவே நாட்டில் பல அரிய நற்பணிகள் செய்து தம் இன்னுயிரையும் ஈந்தார். அவருடைய சாதனை வாழ்க்கை பல்லோருக்கும் முன்னுதாரணமாக இருப்பதில் அதிசயமில்லை. பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வாழ்ந்து காட்டியவர் அன்னை இந்திரா காந்தி!

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...